Sunday, August 21, 2022

ராஜாதி ராஜ மார்த்தாண்ட ....ராஜ கம்பீர.....

 முள்ளங்கி கோதுமை பரோட்டா..

இந்த முள்ளங்கி காய் நீர்சக்தி நிறைந்தது. இதில் நிறைய விட்டமின்களாக.  ஏ. பி. சி. இ. கே போன்ற விட்டமின்ககள் உள்ளது. மேலும், உடலுக்கு தேவையான நல்ல பயனுள்ள  பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், கால்சியம், இரும்பு சக்தி, போன்ற பலவகையான சக்தி தருபவைகளுமான தன்மையை கொண்டது இந்த வெள்ளை முள்ளங்கி காய். 

அனீமியாவை தடுக்கும். அதே போல் சீறுநீரக தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனைகளையும் குறைக்கும். கல்லீரலை சுத்தப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதிக இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை இவைகளை கட்டுப்படுத்தும் குணமுடையவை. இதை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், செரிமான பிரச்சனைகளும் வராமல் இருக்கும். 

இத்தனை மருத்துவ குணங்களை உடைய இந்த முள்ளங்கி, து.பருப்புடன் சேர்ந்து சாம்பாராகவும் பரிமளிக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பொரியலாகவும் மாறி ஒத்துழைக்கும். சாதத்தில் கலந்து சாப்பிட காரத் துவையலாவும், மற்றும் ஜுஸாக செய்து அருந்தவும் சம்மதிக்கும். எப்படி செய்தாலும் உடலுக்கு நன்மைகளைத் தரும் காய் இது. இதனுடன் கிடைக்கும் முள்ளங்கி கீரையையும் பல விதங்களில் சமையல் செய்து சாப்பிடலாம். அதை வைத்து பொரித்த கீரைகூட்டாக செய்து சாதத்துடன் கலந்து உண்டால் அதன் ருசியும்  மணமும் வெகுவாகவே நம்மை கவரும். முள்ளங்கி கீரையை வைத்து  பொரியலும் செய்யலாம். இந்த முள்ளங்கியை வைத்து நான் கோதுமை பரோட்டாவாக செய்துள்ளேன். 

இத்துடன் என நான் மேலும் ஆரம்பிக்கும் முன்  "ப்ளீஸ், ப்ளீஸ்.. உன்னைப் போல் நானும்/ நாங்களும் கொஞ்சம் வாசகர்களுடன் கதைக்கிறோமே. .. எனக்கும் ஆசையாக உள்ளது... " என அந்த முள்ளங்கி கெஞ்சி கேட்டு கொண்டதினால், அவைகளுக்கு முடிந்த வரை வாய்ப்பு தர நான் சரியென சம்மதித்து ஒதுங்கி கொண்டேன். 


"சரி. .ரொம்ப சந்தோஷம்... முள்ளங்கி பரோட்டோவிற்காக கலந்து வைத்த கோதுமை மாவாகிய நான். ." என முதலில் நான் கலந்து வைத்த கோ. மா,அது வரை எங்கள் பேச்சுக்களை கவனித்தபடி அமைதியாக இருந்த நிலை மாறி அவசரமாக ஆரம்பித்ததும், அதனை சற்றே கோபமாக முறைத்தது முதலில்் ஆரம்பித்த முள்ளங்கி. "நானே அவர்களிடம் கெஞ்சி கொஞ்சம் நேரம் பேச முதலில் வந்துள்ளேன். அதற்குள் உனக்கு என்ன அவசரம்.. ?" என முள்ளங்கி "முள்" போன்ற தன் வார்த்தைகளை கொண்டு  தாக்குதல் நடத்த ஆரம்பித்ததும், எதிர்ப்பை தாங்க முடியாத கோ. மா மெளனமாக மறுபடி தன்  "கோமா" நிலைக்கே போய் விட்டது. 


" முள்ளங்கியாகிய என்னை நன்றாக அலம்பிய பின் லேசாக சற்று நிறம் மாறியுள்ள பகுதிகளை மட்டும் நீக்கியதும் சிறு துண்டுகளாக இப்படி அரிந்து வைத்திருக்கிறார்கள். ." 


"இதே போல்  வெங்காயத்தையும் நன்கு அலம்பி பின் தோல் நீக்கிய பின்  ஒரளவு பொடிதாக நறுக்கி வைத்துக் கொண்ட படம் இது. "நல்ல வேளை.....வெங்காயம் தன்னால் பிறரை என்றும் அழ வைத்த வருத்தத்தில் இருந்ததினால், நானும் உங்களோடு பேசுவேன்.. என்று கோ. மாவைப் போல் போட்டிக்கு வரவில்லை." மகிழ்வோடு முள்ளங்கி சத்தமாகவே முணுமுணுத்து கொண்ட அந்த சிறிய இடைவெளியில்,... 


"நறுக்கிய முள்ளங்கியுடன் அவரவர் காரத்திற்கு தகுந்தாற் போல் ஒன்றிரண்டு பச்சை மிளகாயும் எடுத்துக் கொள்ளவும். நான் அதிக காரம் வேண்டாம் என்பதற்காக ஒன்றை மட்டும் எடுத்துள்ளேன்." என நான் மறதியில் இயல்பாக ரெசிபியை பற்றி ஆரம்பிக்கவும், முள்ளங்கிக்கு வந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல.... சரி.. சரி.. ஸாரி,..   ஸாரி. . என நான் பல தடவை கேட்ட பின்தான் அது மிக்ஸி எனும் ராட்டினத்தில்  ஜாலியாக ஏற சம்மதித்தது. 



" என்னுடன் துணையாக பச்சை நிற மிளகாயையும் சேர்த்து  மிக்ஸி ராட்டினத்தில்  பல சுற்றுகள் சுற்றி வர இவர்கள் செய்த ஏற்பாட்டினால் என் கோபம் சற்று சாந்தமாகியது. ஆனாலும், எப்படியும் அடுத்து பேச வரவிருக்கும் கடுகார் என்னை சற்றேனும் பேசவே விட மாட்டார் என்பதும் நான் அறிந்ததே....என்ன செய்வது? அவர் என்னை விட சற்று அதிக கோபக்காரர் எனப்பெயர் வாங்கியவர்." 


"ஒரு கடாயில் சிறிது சமையல் எண்ணெய்யுடன் ஒன்று சேர்த்த கடுகாகிய நான். ...இங்கு ஒன்றை குறிப்பிடுகிறேன். நான் இல்லாவிட்டால், எந்த ஒரு சமையல் வகையும் வாசனை மிகுந்ததாகவே மாறாது என்ற பெருமை எனக்குண்டு... ஆனால், அதைப் பற்றி  இவர்கள் கொஞ்சமும் புரிந்து கொள்ளாது நான்" படபடக்கும் , கோபக்காரன். .." என்ற பட்டத்தை மட்டும் சுலபமாக தந்து விட்டனர். இது நியாயமா என வாசகர்களாகிய நீங்களே சற்று யோசிக்கவும். "


" இங்கேயும் நான்தான்.... இன்னமும்  நான் பெருமையோடு படபடவென்ற என் குண இயல்பை காண்பிப்பதற்காக பொறுமையோடு நான் காத்திருக்கும் போது என்னை கேட்காமலே இவர்கள் எடுத்த மற்றொரு கிளிக்." 


" என் கோபம் சற்று தணிந்த பின்  உ. பாவையும்  என்னுடன் சேர்த்தால்தான், சற்று வெட்கப்படும் அளவுக்கு மட்டும் அது முகம் சிவக்குமாம்.. ( ஏனென்றால் அது  உ. பாவை இல்லையா?:))))  ) இல்லையென்றால் என் கோபத்தை சமாளிக்க இயலாமல் அது அப்படியே முகம் வாடி கருகிப் போய் விடுமாம்.:))" 


 " மற்றவர்களை  அழ வைத்து விட்டோமே என முகஞ்சுணுங்கியபடி மகா வருத்தத்துடன் அமர்ந்திருந்த என்னையும், "அந்த இருவரையும் கொஞ்சம் சமரசம் செய்து வை. " என இவர்கள் கேட்டுக் கொண்டதால், காத்திருந்த அந்த இருவருடன் நானும் அந்த அறுசுவை களத்தில் இறங்கினேன்." 


" எப்போதும் தற்பெருமை பேசும் இந்த கடுகாரை விட நான் நிஜமாகிலும் வாசமானவர் என்பதை அந்த கடுகாரே ஒத்துக் கொள்ளும் நிலை வந்த போது, இத்தனை நேரம் மெளனமாக இருந்த முள்ளங்கியார்  "என்ன நான் இருப்பதை சற்றும் மறந்து விட்டீர்களா? என என் அருகில் வந்து விட, நான் விட்டுத் தருவதில் உள்ள மென்மையை உணர்ந்தபடி, மெளனமாகி விட வேண்டிய கட்டாயத்திலும், நான் உங்களை வேண்டுமென்றே அழ வைக்கவில்லை......பெருமைக்காக சொல்லவில்லை.. என் இயல்பே அப்படித்தான்.. புரிந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளையும் உங்கள் முன் வைத்தபடி ஒதுங்குகிறேன். வேறு வழி....?" 

 
இப்போது "முள்ளங்கியாகிய நான்  ராட்டினத்தில் ஆசை தீர சுற்றிய மகிழ்வோடு இவர்களுடன் சரி சமமாக கலந்து விட்டேன். எப்படியிருந்தாலும் என் பெயர்தான் இறுதி வரை நிலைத்து நிற்கப் போகிறது எனத்தெரியாமல் இவர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். சரி. . சரி ஏதோ அறியா பிள்ளைகள். .பேசி விட்டு போகட்டும்.பொறுத்துக் கொண்டு இனி நான் சொல்வதை மட்டும் கேளுங்கள். ... என விண்ணப்பிக்கிறேன். என்ன சரிதானே. ...?"  


" அதன் பின் நான் இப்படியே என்றும் வெளுத்த கலராக இருப்பதை விரும்பாத இவர்கள் மஞ்சள் , மற்றும் மிளகாய் பொடியின் சிகப்பு , தனியாவின் தனித்துவமான கலர், போன்ற கலர்களோடு, மற்றும் என் கலரை ஒத்த உப்பின் கலர் இவைகளினால் என்னை அலங்கரித்து அழகு பார்த்தனர். உண்மையிலேயே இவர்கள் என்னுடன்  இணைத்த கலர்களில் என்னைக் கண்டு நானே மயங்கித்தான் போய் விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்". 


" இதோ.   நீங்களே சந்தேகமற ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து ரசியுங்கள்." 


"என்ன.   நான் சொல்வது சரிதானே. ... ஒவ்வொரு கலரும் சேரச் சேர நான் அழகில் எப்படி ஜொலிக்கக் போகிறேன் என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?" 


இதோ... முத்தாய்ப்பாக ஒரு டச்சப். அலங்காரம் முடிந்தவுடன் வாசமான நறுமணம் பூசுவது போல ஒரு இளஞ்சிவப்பு கலருடன் மீண்டும் ஒரு இணைப்பு. இதைக்கூட இவர்கள் ஏதோ நான் அறியாத மொழியில் எழுதியிருக்கிறார்கள். பாருங்கள்..."


"இப்போது நான் அமர அந்த கோ. மாவை "கோமா" தூக்கத்திலிருந்து எப்படியோ சுறுசுறுப்பாக எழுப்பி சிம்மாசனமாக இருந்து உதவ ஆணைப் பிறப்பித்தார்கள்." 


" அதுவும்  மெளனமாக விரிந்து பரந்து குறிப்பிட்ட அதன் எல்லைக்குள் அழகிய ஒரு சிம்மாசனமாக ஆயிற்று. பின்னே.. .. அழகான என்னை தாங்கிக் கொள்ள  அது கொடுத்து வைத்திருக்க வேண்டுமே..." 


" இதோ... ராஜாதிராஜாவாக நான் அமர்ந்து விட்டேன். இந்த ராஜ்ஜியத்தில் விரிந்து பரந்து எத்திக்கும் என் கொடியை நாட்டப் போகிறேன். "


" இதோ.. படிப்படியாக இவர்களால் என் ஆட்சியில் சில நல்ல மாற்றங்களோடு... "


என் கொற்றக்கொடியின் நிழலில்,  ..


மாற்றங்கள் பல கண்டு. .. 


ராஜ்ஜியம் முழுவதும் நல்லாட்சி விரிந்து பரவி.. ..


இந்த செங்கோலின் உதவியுடன் சிறப்பான ஆட்சியில்... 


எப்படி முழு நிலவின் பூரணத்துவத்தோடு. . 
 

பொங்கிப்
பூரித்து. . .


பூரித்த.. .


மகிழ்வில். ... 


மேலும் அழகு சேர்க்க நெய் எனும் திரவயத்துடனான  முகப்பூச்சுடன் மினுக்காக அடுக்கடுக்காக வந்த... 


"பெருமைகளில் முகம் சிவக்கும்படியான ஆட்சியாக அமைந்து விட்டது பாருங்கள். .. இப்போதுதான் என் மனதுக்குள் ஒரு மகிழ்வான, நிறைவான புளகாங்கிதம் வருகிறது. .இது நியாந்தானே... "" 
 

இந்த நல்ல கூட்டணி ஆட்சியை நீங்களும்  மனதாற வாழ்த்தி மகிழுங்களேன்.  உங்களின் நல்ல அன்பிற்கு எந்நாளும் எங்கள் நன்றிகள். 🙏.

இனி நான் மேற்கொண்டு சொல்ல என்ன இருக்கிறது? இதற்கு மேலும் ஏதாவது கூறி  விவரித்தால், வீடு தேடி வந்து எனக்கு மட்டும் அடி விழும் வாய்ப்புள்ளது என்பதால் 😀😀 அதி பொறுமையாக இதுவரை எங்களுரையை கேட்டு புரிந்து கொண்டு வாழ்த்தியமைக்கு 👍👍நானும் நன்றி கூறி விலகுகிறேன்...:)🙏.

பி. கு. .(இன்னும் அதுவேறேயா? என இதையும் 😇😇😇 களுடன்  படிக்கும் அனைவரும் 🤔 யுடன் முணுமுணுப்பது கொஞ்சம் லேசாக காதிலும் விழுகிறது.:)))) ) 

இன்று எ. பியில் சகோதரி கீதாரெங்கன் ரோஜாகூட்டத்திற்கு நடுவே காத்திருந்த புறாவைப்பற்றிச் சொன்னதை படித்ததும், என் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் முள்ளங்கியைப் பற்றிய நினைவு வந்து விட்டது. 

தவிரவும் என் கைப்பேசி வேறு கொஞ்ச நாட்களாக என்னிடம் பிணக்கு காட்டி மகிழ்கிறது. அதன் மூடுக்கு தகுந்தாற் போல்  நான் அனைவரின் பதிவுக்கு சென்று படித்து கருத்துக்கள் தந்து, என் பதிவில் என் புராணங்களையும் வெளியிட்டு, அதற்கு வரும் (வந்தால்) கருத்துகளுக்கு பதிலளித்து மகிழும் வாய்ப்பையும் அவ்வப்போது முடக்கி இன்பம் காண்கிறது. எப்பவுமே எனக்கு நடக்க நடக்க நாராயணன் செயல்தான். வேறு என்ன செய்வது.? 

இது எ. பிக்கு அனுப்பலாமென்றால் இவ்வளவு பெரிதாக நீட்டி முழக்கியதை அனுப்ப கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இரண்டாவதாக, இந்த ரெசிபியை அன்றொருநாள் சகோதரி பானுமதி அவர்கள் எ. பியில் பகிர்ந்த நினைவு....அதனால் என் பதிவுகளை அன்புடன் படிக்கும் என் அபிமான சகோதர சகோதரிகளுக்காக இங்கேயே இதை பகிர்ந்து விட்டேன். நன்றி. 🙏. 

Sunday, August 14, 2022

பழைய நினைவுகள்.

வணக்கம் அனைவருக்கும். 

இன்றைய ஞாயிறு லால்பாக் பதிவை எ. பியில் பார்த்ததும்,  சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் அந்தப் பதிவொன்றுக்கு ஜூலை 31 ல் கருத்திட்ட அன்றே நான் எழுதி வைத்த இப்பதிவு  எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே இப்போது பகிர்ந்து விட்டேன். படித்து கருத்திடும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

துரை செல்வராஜூ31 ஜூலை, 2022 அன்று பிற்பகல் 5:14

ஹிந்துப் பெண்களுக்கு பூக்கள் ஒரு இடைஞ்சலா!?...

தாழை மடல் வைத்து வைத்து பின்னிக் கொண்ட ஜடைகளைப் பார்த்து ரசித்த நாட்கள் எல்லாம் இனிமேல் வரவே வராது..

உண்மைதான்.. .இந்த கருத்தை எ. பியில்  அந்த ஞாயறன்று  நம் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள்  லால்பாக் பதிவில் தனது கருத்தாக பதிந்ததை பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்தன. எங்கள் அம்மா தாழம்பூ, மல்லிகை, செவ்வந்தி, மாதுளை பூக்கள் (என் இளைய பிராயத்தில் எங்கள் பிறந்த வீட்டில் மாதுளை பூக்கள் மட்டும் பூக்கும் பெரிய மரம் போன்ற செடி நீண்ட நாட்கள் இருந்தது. ஆனால் தப்பித்தவறி அதில் ஒரு காய் கூட வந்ததில்லை. இப்படியும் அதில் சில வகைகள் உண்டென விபரம் தெரிந்த அக்கம்பக்கம் உள்ள அனைவரும் கூறினார்கள். எங்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அது பூக்களை மட்டுமே வஞ்சனையின்றி தினமும் தந்து கொண்டிருந்தது. இறைவனுக்கும் மாலை தொடுத்து சார்த்துவோம். எனக்கும், அக்கம்பக்கம் உறவின் பெண்களுக்கும், எங்கள் அம்மா ஜடையில் வைத்து தைத்து விடுவார்கள். இரண்டு நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்படியே இருக்கும்.  சிகப்பான அதன் நிறம் கண்களை கவரும். நீளமான ஜடையில் அதை வைத்து தைத்து, மல்லிகை சரத்தை நெருக்கமாக தொடுத்து தலையில் அம்மா அழகாக வைத்து விடுவதை, பின்புறம் ஒரு கண்ணாடியில் அது தெரியுமாறு காட்டி, முன்னால் இருக்கும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வோம். அப்போது வீட்டில் காமிரா இல்லை. புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு  சென்று புகைப்படமாக எடுத்துக் கொள்ளும் திறனும் இல்லை. இப்படியே காலங்கள் என்றும் இருந்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் மனதில் இருந்தது போலும்... அதனால், மனமெனும் காமிராவில் மட்டும் அது அழுத்தமாக பதிந்து கொண்டு விட்டது. இப்போது அதைச் சொல்லிச்சொல்லி ரசிப்பதை தவிர வேறு வழியில்லை. ) வைத்து ஜடையில் தைத்து விடுவார்கள். அது ஒரு காலம். இப்போது பெண்கள் அனைவரும் தங்கள் கூந்தலை வெறும் ஜடை பின்னிக் கொள்வதே உலக அதிசயமாக உள்ளது. 

சகோதரரின் இந்த பதிலை பார்த்ததும் எத்தனை விஷயங்கள் நம் காலத்தில் பார்த்து கேட்டு ரசித்திருக்கிறோம் என நினைக்கையில்  எனக்கு எப்போதோ வாட்சப்பில் வந்த உறவு யாரோ அனுப்பி வைத்த இந்த வாசகங்களும் நினைவுக்கு வந்தது. சுற்றி வரும் இதை நீங்களும் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் படிக்காதவர்கள் இங்கும் படித்து ரசிக்கலாம் என பகிர்ந்துள்ளேன். 

இதோ அந்த வாட்சப் வாசகங்கள். . 
 
நாம்தான் கடைசி தலைமுறைகள்....

1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....

2.ஓனிடா டி வி பெட்டியை பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

3.செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!

5.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.

6.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .

9.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.

10.காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

11.நண்பர்களுக்கு, உறவுகளுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

12. 10th 12th ரிசல்ட் பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்

13.கதவு வச்ச டிவி யை பாத்த கடைசி தலைமுறை நாம தான்

14.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

15.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறைதான்.

16.போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

17.ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்

18.நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது நாம்தான். 

19.கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

20.நொண்டி, கிட்டிப்புள் (கிள்ளித் தாண்டு) பம்பரம், கண்ணாமூச்சி, கோலி என பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

21. 1,2,5,10,20,25,50 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

22.தியேட்டரில் மண் தரையில் உட்கார்ந்து படம் பார்த்த கடைசி தலைமுறை நாமதான்,

23.ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்ட கடைசி தலைமுறை நாமதான்,

24.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான்

25.இதையெல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகளோடு  நம் கண்ணில் சிறுதுளி கண்ணீர் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

இதை எழுதிப் பகிர்ந்தவருக்கு என் மனமார்ந்த நன்றி. அது போல் படித்து ரசித்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் . 🙏. 

Thursday, July 28, 2022

சம்(மின்)சாரம்

 காலையிலிருந்தே இனம் புரியாத ஏதோ ஒரு கவலையில் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி சற்று குறைந்துள்ளது போல் தோன்றியது பவானிக்கு.  இன்று  கணவரின் பிறந்த நாளுக்காக அவரது அலுவலக நட்புகள் மாலையில் விருந்தினர்களாக வருகை... . தடபுடலான உபசாரங்கள்.. முதல் நாள் இரவே  கணவனுடன் சேர்ந்தமர்ந்து வரும் விருந்தாளிகளுக்கென கலந்தாலோசித்த விதவிதமான உணவு பட்டியல்கள்...  சரியென்று அத்தனையும், அதற்கும் மேலாகவும் செய்ய உற்சாகமாக ஒப்புதல்  அளித்தப் பின்,.... இப்படி அதையெல்லாம் தவிர்த்து  பின்வாங்குவது சற்றேனும் முறையில்லையே என்று மனசாட்சியுடன் தர்ம போராட்டம்.... இப்படியாக காலை பத்து மணி முதற் கொண்டு மனதுக்குள்  இயலாமையால் எழுந்த கோப ஆறு வடிகால் ஏதுமின்றி பொங்கி, பொங்கி பெருகிக் கொண்டிருந்தது.

நேரம் தன் பாட்டுக்கு இறக்கையை விரித்த வானம்பாடியாக கொஞ்சமும் கவலையின்றி பறந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கதவை திறந்து வெளி வாசலில் சென்று நின்று "இதெல்லாம் மாலை கணவரின் அலுவல நண்பர்கள் விருந்துக்கு வரும் முன்பு முறையாக செய்து முடிக்க தன்னால் முடியுமா. .?" என சுற்றும் முற்றும் பார்த்தபடி யோசிக்கும் போதே மனதில் எழுந்த கவலை காரணமாக மறுபடி சீறிய கோப ஆறு தன் வெள்ள விபரீதத்தை பெருக்க செய்தது.

வாசல் கதவை சாத்தி விட்டு சமையலறை வந்தவள், ஒரு முடிவோடு சமயலறை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அந்த பொருட்களை நகர்த்த கொஞ்சம் சிரமபட்டாலும், கடினத்தைப் பாராமல் இழுத்து வைத்துக் கொண்டாள். வேறு வழியில்லை... இப்போதைக்கு தன் மனதின் கோபங்களை, இயலாமைகளை தணித்துக் கொள்ள இதுவும்  ஒரு சிறந்த செயல்தான் என அவள் மனம் மறுபடி, மறுபடி வலியுறுத்தியது. 

மாலை.... அவசரமான ஒரு இயந்திரமாக தன் உடம்பை வருத்திக் கொண்டதின் பலனாக முதல் நாளிரவு பட்டியல் போட்ட உணவு வகைகள் மலர்ச்சியுடன் ஒன்று கூடி சமயலறை மேடையில் புன்னகைத்து கொண்டிருந்தன. சப்பாத்தி, பூரிி அதற்கேற்ற தன் ஜோடிகளுடன், சில கலவன் சாதங்கள், வடை, பஜ்ஜி  போன்ற பலகாரங்களும், மற்றும் அவற்றின் இணையாகிய பல சட்னிகள் யாவும் இனிப்பான போளி, மற்றும் விதவிதமான கொழுக்கட்டைகளுடன் விருந்துக்கு தாங்கள் தயாராகிய கதைகளை இணக்கமாக பேசியபடியிருந்தன.  மாலையானதும், கணவருடனும், மற்றும் அதற்குப் பின்னரும், ஒவ்வொருவராக வந்த நட்பு விருந்தாளிகள் முன்னறைக்  கூடத்தை தங்கள் பேச்சினால் கலகலப்பாக்கி கொண்டிருந்தனர். 

"என்ன பவானி... எல்லாம் தயாரா?" என்றபடி தங்கள் அறைக்குள் முகம் கழுவி தன்னை கொஞ்சம் தெம்பாக்கி கொண்டிருந்த  மனைவியை நெருங்கிய அவள் கணவனுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் அவளின் அசாத்திய களைப்பு புரிந்தது. 

"என்னாச்சு.. முடியல்லையா?" ஆதரவாக கேட்டவனிடம், "ஒன்றுமில்லை.. வாருங்கள்.  எல்லோருக்கும் இலை போட்டு  பரிமாறுகிறேன்..." என்றபடி ஒரு மலர்ச்சிப் புன்னகை கூட தராது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவானி. 

"எப்போதும் விதவிதமாக சமைக்கும் எண்ணங்களில் ஆர்வமாக கலகலப்பாக இருக்கும் அவள் இன்று உற்சாகமில்லாமல் இருப்பதேன்? . நேற்று என்னை கேட்காமலே கூட விதவிதமாக பாரம்பரிய பட்டியல்களை சிலவற்றை அவளே தேர்ந்தெடுத்தாளே.... சிலவற்றிக்கு இது கடினமானது என நான் சொல்லியும், கேட்காமல், எனக்கு இது மிகவும் சுலபமென வாதிட்டு அதை செய்யவதற்கு ஒப்புக் கொண்டாளே ...  இன்று எதற்காக இந்த சோர்வு.. ஒரு வேளை என் வறுப்புறுத்தலில், யாருடைய துணையுமின்றி, எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட பொழுதுக்குள் செய்ய வேண்டியதாகி விட்டதே என்ற  சிறு கோபத்தில், எழுந்த இயல்பான வருத்தமாக இருக்குமோ...? " என்றெல்லாம்  மனதுக்குள் நினைத்தபடி நண்பர்களை உணவு உண்ணும் அறைக்கு அழைத்து வர தங்கள் அறையிலிருந்து அவனும் வெளியேறினான். 

அனைவரும் வானளாவ புகழ்ந்ததில், பவானிக்கு கொஞ்சம் சோர்வகன்று கூடுதலான முகக்களையும் வந்திருப்பதை புரிந்து கொண்டான் அவள் கணவன்." இதேப் போல் மற்றுமொரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ என அந்த நாட்களையும்  இப்போதே குறித்து வைத்தபடி.... " அவர்கள் அனைவரும் விடை பெற்றதும், திருப்தியான முகப்பாவத்துடன் கூடத்தில் அமர்ந்திருந்த பவானியின் அருகே  வந்தமர்ந்தான் அவள் கணவன். 

"பவானி... இன்று உன் கைப்பக்குவம்  போல் எங்கும் ருசித்ததில்லை என என் நண்பர்கள் அனைவரும் கூறியதை கேட்டாயல்லவா? நிஜமாகவே  நீ செய்யும் பக்குவங்களில் எப்போதையும் விட இன்று எல்லாமே மிக சரியாகவும், ருசியாகவும் அமைந்திருந்தது. அது எப்படியென கேட்க வேண்டுமென்று நானே நினைத்தேன்... அது சரி......  எல்லாமே நன்றாக, ருசியாக வந்திருக்க வேண்டுமேயென்ற கவலையில் உன் உடல்/ மனச்சோர்வு அகன்று, கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ச்சியெனும் போனஸை இப்போதாவது பெற்ற மாதிரி இருக்கிறதா? அவர்களது பாராட்டுக்கள் என்னையும் பெருமை கொள்ள வைக்கிறது. எனக்கும் இப்படியொரு சமையல் வித்தகியான சம்சாரம் என் வாழ்க்கைத் துணையாக கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். வா.. இப்போதும் மணியாகவில்லை. காலையில்தான் நமக்கு நேரமில்லை. எனக்கு அலுவலகத்தில் உள்ள கெடுபிடியால் விடுமுறையும் எடுக்க இயலவில்லை. நல்ல திருப்தியான மனதுடன் சந்தோஷமாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். வா.. புறப்படு "என்றான். 

"உண்மைதான்.... காலையில் நீங்கள் அலுவலம் சென்ற பின், என் மனதில் ஏற்பட்ட கோப வெள்ளத்தில் கரையேற முடியாமல் திண்டாடினேன். இன்றைய தினத்தில் பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நம் ஏரியா முழுக்க கிடைக்காமலே போன அந்த  மின்சாரத்திற்காக நானும் அதற்கு நன்றி கூறி, இப்போது உங்களுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். என்னைக்குமே" பழையது என்றுமே தங்கந்தான்"என்ற பழமொழிப்படி, நான் சென்று எனக்கு உதவிய அவைகளையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி விட்டு, "உங்களை இனி தினமும் விடாமல் நான் அங்கிகரித்துக் கொள்ளப் போகிறேன் என சொல்லி, அவைகளையும்  மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டு வருகிறேன்...." என்றபடி பழைய சுறுசுறுப்புடன் சமையல் அறைக்குள் புகுந்தாள் பவானி. 

பாதி புரிந்த பாவனையிலும், மீதி பாதியை யோசித்தபடியும் அமர்ந்திருந்தான் அவள் கணவன். 

கதை முடிந்தது. 

பி. கு... .." என்னடா இது... உங்களை சுருக்கச் சொன்னால், இப்படி ஒரேடியாகவா...? என்று வியக்கும் (வியப்பாரா?:)))   ) சகோதரர் நெல்லைத் தமிழரின் கருத்துக்காகவா இப்படி... ." (ஹா.ஹா.ஹா) என எண்ணாமல் இந்த சிறு கதை உங்களுக்கும் பிடித்ததாவென்று நீங்கள் அனைவரும் கருத்துரையில் கூறினால், நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பேன். மகிழ்ச்சி வெள்ளமாவதும், சிறு ஓடையாகி வடிந்து போவதும் உங்கள் அனைவரின் அன்பான தட்டச்சில்தான் உள்ளது. கருத்துச் சொல்லப் போகும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏. 

Wednesday, July 20, 2022

டாக்டரும், நோயாளியும்.

வணக்கம் அனைவருக்கும். 

எவ்வளவு செலவு செய்து கொண்டு 

"காசிக்குப் போனாலும் கர்மம் தொலைவதில்லை என்பது போல்....

எவ்வளவு செலவு செய்து படித்து

"நல்ல டாக்டராக பரிமளித்தாலும், நகைச்சுவை பேச்சுக்களுக்கு குறைவில்லை போலும்..." என்றுதான் என்னை எண்ண வைத்தது. . 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அப்படியே சில சமயங்களில் நோய்கள் ஏதும் ஏற்பட்டாலும், 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இல்லையா? ஆக படுத்தும் உபாதைகளுக்கு  நிர்மலமான சிரிப்பே  சிறந்த ஒரு நிவாரண மருந்து. 

இது எனது கைப்பேசியில் வாட்சப்பில் பலவிடங்களிலிருந்து சுற்றி வந்த டாக்டர் ஜோக்குகள். இது ஏற்கனவே உங்களுடனும் சுற்றி வந்து நீங்கள் அனைவரும் படித்திருக்கலாம். இருப்பினும் ஒரு மாறுதலுக்காக இன்று இங்கு இதை பதிவிடுகிறேன்.  இங்கும் வந்து படிப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. 🙏. 


1.) நோயாளி.. டாக்டர்! எனக்கு பல் ஆடுது!

டாக்டர்... எந்த பாட்டுக்கு?


2.) இரண்டு இட்லியைக் கூட முழுசா என்னாலே சாப்பிட முடியல டாக்டர்..?

என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்


3.)நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."


4.)டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க..

விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!


5.) மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”


6.)டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...


7.)நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க


8.) டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?


9.) "டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"


10.) நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.

டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.


11.) அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!


12.) "டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."


13.) டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சுதான் கொல்லுவாங்க!


மீண்டும் அனைத்தையும் படித்து சிரித்த அனைவருக்கும், இதை அனுப்பி பகிர்ந்தவர்களுக்கும் என் நன்றிகள்.🙏. 

Friday, July 15, 2022

கீரை புராணம்.

கீரை வறுத்தரைத்த சாம்பார்.. 

மனிதர்களில் பல ரகங்கள் மாதிரி கீரையிலும்  பல ரகம்.  நான் திருமணமாகி சென்னை வந்த புதிதில், "அரைக்கிரை, முறைக்கிரை, சிரிக்கிரை" இந்த மாதிரி தெருவில்  ஒரு மாதிரி ராகத்தில் அழுத்தி கூவி கீரை விற்பார்கள். முதலில்  எதுவும் புரியவில்லை. பின் இந்த கீரை விற்கும் சொற்கள் குறித்த ஐயங்கள்  என் புகுந்த வீட்டு உறவுகள் மூலமாகத்தான் கொஞ்ச நாட்கள் கழித்து அது கீரை சம்பந்தப்பட்டது என புரிந்து கொண்டேன். 

காய் வாங்க வெளியில். செல்லும் போது, "என்னம்மா முளைக்கீரை எப்படிம்மா?" என்று கேட்கும் போது, தப்பி தவறி நாமும் "என்னம்மா முறைக்கீரை" என்று அவரை கிண்டலாக அழைப்பது போல், அவருக்கு தோன்றி விட்டால், அவர் "முறைப்பதை" முதலில் நாம்  சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

அந்த முறைப்பிலேயே அவர் சென்னை பாஷையில் ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற கலக்கத்தில், ஏதோ ஒரு கீரையை சிரிக்காமல் வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். 

அதன் பின் நாடோடி தென்றலாக அங்கே இங்கே என்று வாழ்க்கை நகர்ந்ததில். கீரைகளும் ஆங்காங்கே தலைகாட்டியபடி பின் தொடர்ந்தேதான் வந்தபடி இருந்தது. இதில் என் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் சாப்பிட பிடிக்காத விஷயங்களில் இந்த கீரையும் ஒன்று. 

கீரை பண்ணும் அன்றைய தினம் அவர்களுக்காக நிறைய காய்களை போட்டு சாம்பார், இல்லை, அவியல் மாதிரி  பண்ணி காய்களை உண்ணும்படி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஏதும் சாப்பிடாமல் இருப்பார்களே என அன்று வருத்தம் வரும். 

அதன் பின் அவர்கள் சற்று வளர்ந்த பிற்பாடு, அரைக் கீரையை உப்பிட்டு  வேக வைத்து மசித்து, கடுகு உ. ப, மி. வத்தல் தாளித்து, பெருங்காயத்துடன், பச்சை தேங்காய் எண்ணை ஒரு ஸ்பூன் விட்டு, அந்த கீரையுடன் கலந்த சாதம், 

 கீரை வெந்ததும் மசித்தவுடன் தேங்காய், சீரகம், மி. வத்தலுடன் அரைத்துச் சேர்த்து, செய்த கரைச்ச கூட்டு,

 கீரை வெந்து மசித்ததும்  புளி, கடுகு, வெந்தயம், பெ. காயம் தாளிப்பு சேர்த்த புளிக்கீரை,( புளிக்கீரையென்று ஒன்று  உண்டு. அதற்கு புளியே விட வேண்டாம். அது அவ்வளவாக எங்களுக்கே பிடித்ததில்லை. குழந்தைகளுக்கு எப்படி?)  

அரைக்கீரையோ முளைக்கீரையோ வேக வைத்துக் கொண்டு, மிளகு, தேங்காய், மி. வத்தல் சேர்த்து மிளகூட்டல், 

இல்லை கீரை வடை, கீரை அடை, 

கீரையைவெந்து மசித்ததும், வேக வைத்த பா. பருப்புடன் சேர்த்து, தேங்காய், சீரகம், நாலைந்து மிளகு, மி. வத்தலுடன் (இதை வறுத்து ஒரு முறை, வறுக்காமல் ஒரு முறையில் செய்யலாம். ) அரைத்து சேர்த்த பொரிச்ச கீரைக்குழம்பு, (இது பொதுவாக பொன்னாங்கண்ணிகீரை, இல்லை பீட்ரூட் கீரை, இல்லை,மணத்தக்காளி கீரையில் செய்தால் அமிர்தமாக ருசிக்கும்.)

 கீரையை து. பருப்புடன் கலந்து சாம்பார் பொடி போட்டு ஒரு குழம்பு, இல்லை வறுத்த சாமான்களுடன் சேர்த்து செய்த கீரை சாம்பார், 

இது போக "பருப்புகீரை" என்று ஒன்று உண்டு. அதை அலம்பி பொடிதாக அரிந்து வேக வைத்த பின், வெறும் வேக வைத்த  து. பருப்படன் கலந்து  கடுகு, மி. வ உ. ப தாளித்து இறக்கிய கீரை, 

இதைத்தவிர பசலைக் கீரை என்ற ஒன்றுமுண்டு. அதையும் வேக வைத்த பருப்புகளோடு கலந்து தேங்காய் சீரகம், மி. வத்தலிட்டு காரத்துடனோ ,  இல்லை.. சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தோ,  கூட்டாக செய்தும், 

கீரை தண்டுடன் தண்டு கீரையாக வாங்கும் போது, கீரைகளை ஆய்ந்து,( பொதுவாக இந்த எல்லா வித கீரைகளை ஆய்ந்து சுத்தப்படுத்த நிறைய நேரமும், நீண்ட பொறுமையும் தேவைபடும்.) மேற்கூறிய முறைகளில் செய்து விட்டு, மறுநாள் தண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து,  அத்துடன் ஊற வைத்த பாசிப்பயிறு, அல்லது பா. பருப்பு வேக வைத்து சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவலுடன் கலந்து சுண்டலாக, 

இது போக வெந்தய கீரையில், இல்லை முள்ளங்கி கீரையில், செய்த சாம்பார், புளிக்குழம்பு, என பலவகைகளில் செய்து எங்கள் வீட்டில் அனைவரும் (குழந்தைகள், முதல் பெரியவர்கள்) கீரையை ரசித்து உண்ணும்படி செய்து விட்டேன்.( அப்பாடா.! சொல்வதற்குள் நான் வாடிய கீரையாக ஆகி விட்டேன். ஹா. ஹா. ஹா. பொறுமையாக கேட்ட உங்களுக்கு எப்படி இருக்கும்? கேட்டதற்கு நன்றி.. நன்றி.. ) 

இன்னமும் எத்தனையோ கீரைகள் (சரியாக நினைவில்லை.) இப்படியாக செய்ததில் தற்சமயம் செய்த "வறுத்தரைத்த கீரை சாம்பாரை"  இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.  இதையும் அனைவரும் செய்து சுவைத்திருப்பீர்கள். இருந்தாலும் என் பாணியாக இருக்கட்டுமென (இல்லையென்றால், பண்ணும் போதே எடுத்த முளைக்கீரை புகைப்படங்கள் இன்னமும் என்னை "ரீலீஸ்" பண்ணவில்லையா என என்னை "முறைத்து"க்கொண்டே இருக்கின்றன.) இங்கு பகிர்கிறேன். 

கீரையை ஐந்து கட்டு அலம்பி அரிந்து வைத்த புகைப்படம். 


வறுக்க தேவையான பொருட்கள். வெந்தயம், மி. வத்தல்கள், உ. பருப்பு, க. பருப்பு, து. பருப்பு, கொத்தமல்லி விரைகள், (தனியா) இது ஆறுபேருக்கு இரு வேளைக்கு, நான் எடுத்துக் கொண்டது. கொஞ்சமாக பண்ணும் போது எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொள்ளவும். இந்த சாம்பார் நன்கு கொதிக்க வைத்து வைத்துக் கொண்டால் மறுநாள் காலைக்கும் பயன்படும். அதுவும் இரவு வைத்த மீந்து போன சாதத்தில், கொஞ்சம் தயிரும். பாலும் கலந்து கெட்டியாக தயிர்சாதம் செய்து கொண்டு இந்த சாம்பாரை துணையாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால், இன்னமும் நிறைய மீந்த சாதம் இருக்க கூடாதா என்ற எண்ணத்தை உருவாக்கும். (அன்றைய தினம் காலை டிபனை கூட மனம் எதிர் பார்க்காது.)


ஒரு ஸ்பூன் சீரகம், கொஞ்சம் மிளகும் எடுத்துக்கொண்டேன்.(சீர்+அகம் "சீரகம்" நம்முள்ளிருக்கும் அகத்தை சீராக்க, "மிளகு" (வயிற்று உப்பசம்) வயிற்று உபாதையை சரியாக்க )  "மருந்தே உணவு, உணவே மருந்து" என ஆயுர்வேதத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. விருப்பமில்லாதவர்கள் இவ்விரண்டையும் வறுக்கும் சாமான்களுடன் கலக்க வேண்டாம்.


ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொண்டேன்.


அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நிறைய கடுகு வெடிக்கச்செய்து அதில் பாதியை வறுத்தரைக்கும் சாமான்களுடன் சேர்க்கவும்.


இல்லையென்றால், இப்படி மிக்ஸியில் நேரடியாக போட்டுக்கொண்டேன். நான் அந்த மசாலா சாமான்களில் போட்டு படமெடுக்கவில்ஙை. (அதனால் இப்படி)


உப்பிட்ட கீரை  வெந்ததும், கீரை மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். கீரையை இந்த மாதிரி கீரை மத்தால் கடையும் போது சுவை மாறாமல் இருக்கும். எனக்கு தெரிந்த சிலர் ஆட்டுரலில் போட்டு அரைப்பார்கள்.  தற்சமயத்தில் மிக்ஸியில் அரைக்கிறார்கள். அது மிகவும நைசாக உருத்தெரியாமல் ஆகி விடுவதால்  அதன் ருசியின் அளவும் குறைவதாக எனக்கு தோன்றுகிறது. (இரண்டாவதாக உப்பிட்ட பின் அந்த பொருளை எங்கள் வீட்டில் "பத்து" எனச் சொல்வது சிறு வயதிலிருந்தே அம்மாவிடம் கற்ற பாடம்.) (எச்சில், பத்து என சொல்வது மாதிரி) அதை மிக்ஸியில் போடக் கூடாது. "ஒயர் மூலம் வீடே  எச்சில், பத்து என்று கனெக்ஷன் ஆகி விடுமா?" என என்னை கேலி செய்தவர்கள் நிறைய பேர்.  என்ன செய்வது? பழக்கங்களை சுலபத்தில் மாற்ற முடியுமா? 


ஒரு எலுமிச்சை அளவு புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்தெடுத்த புளிக்கரைசலை, கடாயில் மீதமிருக்கும் கடுகுடன் விட்டு கொதிக்க விடவும்.


ஆரம்பத்திலேயே சாதம் வைக்கும் போது வேக வைத்திருக்கும் து. பருப்பையும் நன்கு கடைந்து வைக்கவும்.


புளிஜலம் நன்றாக கொதித்ததும், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு மசித்த கீரையை உடன் சேர்த்து கொதிக்க விடவும். 


வறுத்த மசாலா கலவையை நைசாக மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கும் கீரையுடன் சேர்க்கவும்.


அரைத்த பொடிகள் கரைத்து வைத்த கலவை.


கரைத்து வைத்ததை விட்டு நன்கு கொதி வந்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். 

 

கீரை சேர்ந்து கொதித்ததும் பெருங்காயத்தூள் கொஞ்சம் போடவும்.. நான் எப்போதுமே கடைசியில்தான் பெருங்காய பொடி சேர்த்து விடுவேன். வாசனை நிலைத்து இருக்கும்.


எல்லாம் கலந்த  நிலையில் கீரை சாம்பார் அசத்தலாக நான் ரெடி என்கிறது.


"சாதம் பரிமாறிய பின்தான் என்னை பரிமாறுவார்களாம். அதுவரை நான் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டுமாம்" என்று முறைப்பிலிருந்த  முளைக்கீரை சாம்பார்.


என்ன நட்புகளே.! கீரை சாம்பார் ருசியாக இருந்ததா? "ஆமாம்.. நாங்க எப்போதும் செய்வதுதானே.! இதில் என்ன மாறுபட்ட ருசி...! "என்ற ஒரு கேள்வி வரும் முன் நீங்கள் இதை எப்படியெல்லாம் வித்தியாசமாக செய்திருக்கிறீர்கள் என்ற அனுபவ கருத்துக்களை எதிர்பார்த்தபடி விடை பெறுகிறேன். நன்றி. 🙏.

இதுவும் எ. பியில் என் திங்கள் பதிவாக எப்போதோ வந்தது. இன்று என் பதிவில் இதை ஒரு மாற்றத்திற்காகவும், சேமிப்பாகவும் பதிவு செய்துள்ளேன். அதை விட நேற்று வீட்டில் மோர் கீரை செய்தேன்.(அதை மட்டும் எ. பியில் வந்த அந்தப் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்) உடனே இந்த பதிவு என் டிராப்டில் இருப்பது நினைவுக்கு வரவே இந்த கீரைப்பதிவு இங்கும் விடாமல் வந்து முளைத்து விட்டது.. அங்குமிங்குமாக வந்து கருத்துக்கள் தெரிவி(த்தவர்களுக்கும்)ப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.