Showing posts with label நாகரீகம். Show all posts
Showing posts with label நாகரீகம். Show all posts

Monday, May 7, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 4

                       //''டொக்'' , ''டொக்''//
      கதவை யாரோ தட்டும் ஒசை கேட்டு கதவை திறந்தான் பிரகாஷ்...
      //// வாசலில் ரேணுகா /////

             அடேடே!!!!  ''வா ரேணுகா''  மகிழ்ச்சியுடன்  வரவேற்றான் அவன்..

        அவள் புன்னகையுடன் உள்ளே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

       ''என்ன விஷயம்?? அதிசயமாய் வீடு தேடி வரும் அளவுக்கு'' அவன் சற்று படபடப்புடன் கேட்டான்.

       ''ஏன் வரக்௬டாதா?'' பொய் கோபத்துடன் சிணுங்கினாள் அவள்..

   ''அதற்காக சொல்லவில்லை, நாம் எப்போதும் வெளியில்தானே சந்திப்பது வழக்கம்... அதனால்தான் கேட்டேன்.." அவன் அவசரமாக மன்னிப்பு கோறும் பாவனையில் கூறினான்....

     ''வீடு தேடி வரவேண்டிய அவசியம் வந்திருக்கிறது. வந்தேன்..." அவள் அமர்த்தலாக சொல்லிவிட்டு சிரித்தாள்...

     ''தாராளமாக... இந்த வீட்டின் வாசல் கதவு மட்டுமின்றி என் இதயகதவும் உனக்காக.. உன் வரவுக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது... என் வீட்டில் நம்மை பற்றி கூறி அவர்கள் சம்மதத்துடனும், உன் பெற்றோர்களின் ஆசியுடனும், உன்னை இந்த வீட்டின் ராணியாக்கும் என் விருப்பத்தை உன்னிடம் எத்தனையோ முறை சொல்ல நினைத்தும், உன்னளவு எனக்கு தைரியம் இல்லாததால், சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன்...

என் தாய் என்னிடம் மனம் விட்டு பேசி என்னை தட்டிக் கொடுப்பது போல் நீயும் என்னிடம் சில சமயங்களில் அன்பாக பேசி, என் மனதில் உதிக்கும் எண்ணங்களை வரவேற்றிருக்கிறாய்... அதனால் அந்த தாயன்பு  உன்னிடம் கிடைக்குமென்று ஆசையில்,  என் தாயைப் போல் நீயும் என்னை நேசித்து அன்பு காட்டுவாய் என்ற நம்பிக்கையுடனும்,  எத்தனையோ நாள் "என்னை உனக்கு பிடித்துள்ளதா?  என்னை உன் துணையாக ஏற்றுக் கொள்வாயா?" "
என்றெல்லாம் வாய் விட்டு சொல்ல நினைத்தான் பிரகாஷ். ஆனால் இதையெல்லாம் இப்போதும் சொல்ல நினைத்தும்  வார்த்தைகள் மேலெழும்பால் எப்போதும் போல் அவன் தொண்டையிலேயே வழுக்கி விழுந்தன...

      "பிரகாஷ்! என்ன எப்போதும் ஏதோ சிந்தனை செய்த வண்ணமே இருக்கிறீர்கள்?" என்ற வண்ணம் அவன் தோளை தொட்டு உலுப்பியவள், தன் கைப்பையை திறந்து ஒரு அழைப்பிதழை எடுத்து அவனிடம் ''இந்தாருங்கள்'' என்ற வண்ணம் நீட்டினாள்...

       பிரகாஷ் தன்நினைவு பெற்றவனாய் ஏதோ ஒரு பதற்றத்துடன் அதை வாங்கி பிரித்து படித்தான்...

      திருமண அழைப்பிதழ் அது... ரேணுகாவிற்கும், முன்பின் அறிமுகமில்லாத யாரோவிற்கும்..

படிப்பும் அந்தஸ்த்தும் அந்த பையனுக்கு தன்னை விட இருமடங்குகள் உயர்வாக இருப்பதை வண்ண எழுத்துக்கள் கட்டத்திற்குள் காண்பித்தன ...

      அவன் விழிகள் குத்திட்டு நின்றன அழைப்பிதழிலில்......

      தொண்டையில்  ஏதோ  ''கப்'' பென்று அடைத்துகொண்டது போன்ற உணர்வில் தடுமாறினான்....

    ''என்ன இது?'' வார்த்தைகள் தட்டு தடுமாறி வந்தன அவன் வாயிலிருந்து.....

      ''படித்து பார்த்துமா தெரியவில்லை? என் திருமண அழைப்பிதழ்..'' அவள் கேலியுடன் அலட்சியமாக மொழிந்தாள்.

       இரவின் ஆரம்பத்தில் ''ஏ.சி.'' தியேட்டர்களிலும்,  கடற்கரை மணலிலும், அவனுடன் நெருக்கமாக அமர்ந்தபடி தோளுடன் தோள் உராய அவன் செவிகளில் ''மை டியர் பிரகாஷ்.. ஐ லைக் யூ.. உங்களை கணவராக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்...'' என்று அவள் எத்தனையோ தடவைகள் முணுமுணுத்திருக்கிறாள்... அவளை போல் வெளிப்படையாக அவன் சொல்ல முடியாமல் அந்த முணுமுணுப்பை உண்மையென்று நம்பி எத்தனை இரவுகள் உறக்கத்திலும், விழிப்பிலுமாக, கற்பனையில் ஆகாய கோட்டைகள் எழுப்பியிருக்கிறான்.  அவையெல்லாம் கற்பனையாகவே போய்விட்டதே...

      அவன் தலையில் வானம் இடிந்து விழுந்து அவனை பூமியின் அடியில்...... அதளபாதாளத்தில் அழுத்திக்கொண்டு போவது போன்ற பிரமை ஏற்பட்டது...

       "ரேணுகா, நீ என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருக்கு கழுத்தை நீட்டுவதா? இது அநியாயம்... இதற்கு நீ எப்படி சம்மதித்தாய்???" பிரகாஷ் படபடப்புடன் கேட்டான்..

    "என்ன? நான்  காதலித்தேனா??  அதவும் உங்களையா?" ரேணுகா கலகலவென்று சிரித்தாள்...

    "சந்தேகமா? எத்தனையோ நாட்கள் கூறியிருக்கிறாயே??'' குரல் கணக்க கூறினான்...

  அவள் விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்....

     ''மிஸ்டர் பிரகாஷ்! ஒரு நல்ல நண்பர் என்று இத்தனை நாள் உங்களுடன் நான் களங்கமில்லாமல் பழகியதற்கு எனக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டீர்கள்.. நான் உங்களை காதலிக்கவும் இல்லை... கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் கூறவும் இல்லை... அவசரபட்டு நீங்களே முடிவு செய்து கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.. படித்தவர் பண்புள்ளவர் என்று நினைத்து  நான் நாகரீகமாக பழகியதற்கு எனக்கு இந்த வாழ்நாள் முழுவதும் வருந்தும் அளவிற்கு செய்து விட்டீர்கள்.. இத்துடன் நமது நட்பு  முறிந்து விட்டது. இனிமேல் நாம் சந்திப்பது அநாவசியம்... என் திருமணத்திற்கு கூட உங்களை நான் எதிர்பார்க்க மாட்டேன். நான் வருகிறேன்'' என்று பொரிந்தவள், அவன் கையில் இருந்த திருமண  அழைப்பிதழை உருவிக்கொண்டு புயல் வேகத்தில் வெளியேறினாள்...

         அவன் மூச்சு விடக்௯ட சக்தியின்றி அமர்ந்திருந்தான்...

  கணவனை தவிர வேறு எவரையும் மனதால் கூட தொட்டறியாத அந்த காலத்து பெண்களுக்கு பிறக்கும் இவர்கள், இன்று கண்டவனுடன் 'காதல்' என்ற பெயரில் களியாட்டம் போட்டுவிட்டு ''அந்த'' வார்த்தையின் புனிதத்தையே கெடுக்கிறார்கள்...

   "இதற்கு பெயர் நாகரீகமாம்!!!"

     நாகரீக போர்வையில் புகுந்து கொண்டு அன்று அவன் வேலையில்லாமல் இருந்தற்காக அப்பாவும் உடன் பிறந்தவர்களும் வீண்வாதம் பேசி அவன் மனதின் வேதனையை அதிகப் படுத்தினார்கள். .

இன்று அதை போர்வையை  போர்த்திக் கொண்டு இவள் இவனிடம் காதல் வார்த்தைகளை மொழிந்துவிட்டு.. அந்த காதல் புளித்து போன நிலையில், "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என்ற பழமொழி தவறாதபடி நடந்து கொள்ள நினைக்கிறாள்....

      கன்னிப்பெண் ஒருத்தி மிக சாதரணமாக ஒருவனிடம்,  கை கோர்த்து சிரித்துப்பேசி பெற்றோருக்கு தெரியாமல், அவனுடன் தன் மனதிற்கு பிடித்த இடமெல்லாம் சுற்றிவிட்டு பழகிவிட்டு "நாகரீகம்'' என்ற பெயரில் ஒதுங்குகிறாள்.. ஒதுக்கி விடுகிறாள்..

              '''' சே.. என்ன  நாகரீகம் ''''

         ''''நாகரீகம் என்ற இந்த வெற்று சொல்லுக்கு அர்த்தமேயில்லை....''''  அவன் மனதில் மல்லிகை மொட்டுகளாய் சிதறிய இந்த எண்ணங்களின் விளைவு கையை ஓங்கி மேஜை மேல் குத்த வைத்தது....

          மனதின் வலியோடு கைவலியும் சேர்ந்ததுதான் மிச்சம்....

 அன்று அம்மா எத்தனை உறுதியோடு துல்லியமாய் நிறுத்திப்பார்த்தது போல், பளிச்சென்று மனதில் பட்டதை சொன்னாள்...

  அவன் மனதின் கொதிக்கும் வெப்பத்தை போக்குவது போல் வாசலில் ஜில்லென்ற காற்று வீச அவன் வீட்டின் படிகட்டில் வந்தமர்ந்து கொண்டான்..

         சுருள் சுருளாக மேககற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன...  மழை வரும் போலிருந்தது....

 அவன் எங்கோ வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.

முற்றும்.

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 123

Sunday, May 6, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 3

       "என்ன மிஸ்டர்... கண் மண் கூட தெரியாமல் என்ன ஞாபகம்??? அந்தப் பெண் தன் நெற்றியை அழுத்தமாக தேய்த்து கொண்டபடி கோபமாக கத்தினாள்....
      
        "ஐயோ" வெரி சாரி..." பதறியபடி கூறினான் பிரகாஷ்....

        "இப்படியெல்லாம், சாரி..  சொல்லிட்டா இடிச்சது சரியாயிடுமா???" அவள் கோபம் தணியாமல் ஆத்திரத்துடன்  சத்தமாக வினவினாள்.

         "மன்னித்து விடுங்கள்... ஏதோ நினைவுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். தெரியாமல் மோதி விட்டேன்.. சாரி..." அவன் தடுமாறினான்...

        "இனி ரோட்டில் நடந்து செல்லும் போதெல்லாம் இப்படி 'ஏதோ', நினைவுடன் செல்லாதீர்கள்.. அது ஆபத்து.. " அவள் கிண்டலாக கூறியதும் அவளுடன் வந்திருந்த அவள் தோழிகள், 'கிளுக்', என்று சிரித்தார்கள்...

    அவன் அவமானத்தால் சிவந்த தன் முகத்தை கைகுட்டையால் துடைத்து கொண்டு சுதாரித்து கொண்டு நிமிர்ந்து பார்பதற்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாரகள்.  அவர்கள், நாகரீகம்.. என்ற பெயரில் செய்து கொண்டிருந்த அலங்கோலம் அவன் மனதை கொதிப்படைய செய்தது...

    கடற்கரை காற்று ஜில்லென்று வீசி வேலை செய்த களைப்பையெல்லாம் போக்க, மாலை நேரத்து இனிமையை ரசித்தபடி மணலில் அமர்ந்திருந்தான்.

கடலலை குழந்தைகள் சோம்பலில்லாமல்  வந்து வந்து கரையிலிருக்கும் மனிதர்களின் நாகரீகத்தை விமர்சித்து பின்னாலேயே ஓடி வரும் தன் சகாக்களிடம் சொல்லி கிண்டலடித்தபடி  குதூகலிப்பும் கும்மாளமுமாக சத்தமிட்டபடி மறுபடியும் தன் அன்னையின் மடி தேடி ஓடின.

இந்த இயற்கை, அதன் வனப்புகள்,  அதன் இயல்பான தன்மைகள், இவற்றை ரசிக்கும் மனப்பான்மை, அதிர்ந்து யேசாமல் அமைதி காக்கும்  சுபாவங்கள்,  தனக்கு ஏற்படும் சஞ்சலங்கள் எதையும் வெளிக்காட்டாமல், யாருடனும் அதிகம் பேசி யார் மனதையும் புண்படுத்தாத பாங்கு,  போன்ற குணங்கள் தன் தாயிடமிருந்துதான் தனக்கும் வந்திருப்பதாக  அவனுக்கு தோன்றியது...

இவனின் ஒதுங்கி இருக்கும் சுபாவத்தை, தானுண்டு தன் வேலையுண்டு என நினைத்து பழகும் மனப்பாங்கை ஏளனம் செய்து, இவன் நாகரீகமற்றவன், உலகம் தெரியாதவன் என்பது போல் இவனை எத்தனை நாட்கள் தந்தையும், கூடப் பிறந்தவர்களும், ஒதுக்கி வைத்து கேலி பேசி  உறவாடியிருக்கிறார்கள். படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காத சந்தர்ப்பங்கள் வேறு இவனை இன்னமும் அந்நியன் ஆக்கி இருக்கின்றன....

உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு உதட்டளவில் மற்றொன்றை பேசுவதுதான் நாகரீகமா? இல்லை..  நாளொன்றுக்கு பகட்டும், ஜொலிப்புமாக உடையணிந்து, கை குலுக்கி,  நுனி நாவில் ஆங்கிலம் பேசி மனதுக்குள் ஆயிரம் வன்மங்களுடன் அனைவரிடம் பழகுவதுதான் நாகரீகமா? தன் எதிர்பார்ப்புகளை மற்றவரிடம திணித்து, "இப்படி இல்லையேல் இந்த சமூகத்தில் உனக்கு மதிப்பில்லை... ஏன் நானே உன்னை  ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என மற்றவரை நிர்பந்தித்து அறிவுரை என்ற பெயரில் அசிங்கப் படுத்துவதுதான் நாகரீகமா? இதில் எது தன்னிடம் இல்லையென  இவர்கள் தன்னை அலட்சியபடுத்தினர். புரியவில்லை.. அவனுக்கு..

அந்த சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் துணையாக வரவில்லையென்றால், இவன் இன்று ஒரு முழுமனிதனாக உருவாகியே இருக்க இயலாது. கடலலை குழந்தைகள் கடலன்னை தேடி ஓடிய விதம் கண்டு இவனுக்கும் அம்மாவின் நினைவு வந்தது...

         "அண்ணனுக்கும் நம் உறவில் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைை மணம் முடித்ததும், உனக்கும் ஒரு நல்ல இடத்துலே பார்த்து மணமுடித்து விட்டால், எனக்கு கவலையில்லாமல் இருக்கும்.. எத்தனை நாட்கள் இப்படி வெளியில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்வாய்? சுதா படிப்பு முடிந்துதான் திருமண பேச்சை எடுக்க வேண்டும் என பிடிவாதம் செய்கிறாள். பார்க்கலாம்... எது நடக்கிறதென்று... என்று அவனுடன் இருந்த ஒரு வாரத்தின் ஒரு நாளில் சொல்லி வருந்திய அன்புத் தாயின் சொற்கள் நினைவுக்கு வந்தது. அம்மாதான் எத்தனை பாசமுடன் மூவரின் வாழ்வையும் பற்றி ஒரே மாதிரி  யோசிக்கிறாள் ...

ஒரிரு நாளாவது விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று வரவேண்டும். அம்மா கையால் சாப்பிட்டு அவளின் அன்பான பேச்சுகளை கேட்டு வர வேண்டும்... என்ற சிந்தனையில் மனம் மகிழ்ந்து கொண்டிருந்தவனின் காலை, மணலில் நடந்து சென்ற யாரோ... சரக்கென்று மிதிக்கவும், காலை சடாரென்று இழுத்தபடி... "யார்??" என்றபடி தலை உயர்த்தி பார்த்தவன் திகைத்துப் போனான்!!!

         "ஐயோ!!! தெரியாமல் மிதித்து விட்டேன் சாரி.." என்று பதறியது, அன்று அவனுடன் வாதடிய அந்த பெண்....

         "இனிமையான உங்கள் சிந்தனையை கலைத்து விட்டேன் போலிருக்கிறது.." அவள், மறுபடியும் ஆரம்பிக்க அவன் அன்று பட்ட அவமானத்தின் வலி நினைவுக்கு வர, "சிந்தனை கலைத்தது மட்டுமில்லை.... காலையும் நன்றாக மிதித்து விட்டீர்கள்" என்றான் சற்று எரிச்சலாக...

         "சாரி, சாரி... கவனிக்காமல்..." என்று அவள் இழுத்தாள்...."

         "இப்படியெல்லாம் சாரி, சொல்லிட்டா, மிதிச்ச வலி சரியாயிடுமா?? " என்று அவன் குத்தலாக திருப்பி கேட்டதும், அவள் வாய் விட்டு கலகலவெனறு சிரித்தாள்...

         "நன்றாக  பேசுகிறீர்களே.. உங்களை பார்த்தவுடன் அன்று பேசியது நினைவுக்கு வர உங்கள் தனிமையை பேசிப்போக்கலாம் என்று வந்தேன் கால் தடுமாறி உங்கள் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன்.. வந்தது தப்பென்றால் வந்த வழியே திரும்பி போய் விடுகிறேன்.." அவள் பொய்யாக கோபப்பட்டாள்....

        "அதெல்லாம் ஒன்றுமில்லை; சும்மா விளையாட்டாக சொன்னேன்..." பிரகாஷ் தன் இயல்பின்படி அவசரமாக தடுத்ததும், அவள் சிரித்துக்கொண்டே அவனருகில் அமர்ந்துகொண்டாள்..

            "உங்கள் பெயர்?''

        "ரேணுகா.. பி.ஏ. பைனல் இயர் படிக்கிறேன்...."

        "அழகான பெயர்! நான் பிரகாஷ்.. நானும் பி.ஏ.தான்.. ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்..."

        "அப்படியா! உங்கள் பெயரும் அழகாகத்தான் இருக்கிறது... ஏன் நீங்களுந்தான்..." அவள் ஒயிலுடன் சிரித்தாள்....

        ''அன்று நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கள்.. இன்றிலிருந்து நாம் நண்பர்கள்.." என்றபடி அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவன் கைகளை பிடித்து குலுக்கினாள்....

          அவன் திகைத்துப் போனான்.. ''இதுதான் இக்கால நாகரீகமோ!"

 அவன் சாமளித்துக்கொண்டு... "உங்கள் வீடு எங்கேயிருக்கிறது? உங்களுடன் உங்கள் பெற்றோர்.." என்று தயக்கத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி இழுத்தான்..

        "ம்.. எங்கள் வீடு மாமபலத்தில் இருக்கிறது.. நான்வீட்டிற்கு ஒரே பெண். அதுவும் என்அப்பா அம்மாவுக்கு செல்ல பெண். என் விருப்பத்திற்கு மாறாக எதுவுமே சொல்ல மாட்டார்கள். சுருங்க கூறினால் எங்கள் வீட்டில் நான்தான் ராணி. நான் வைத்ததுதான் சட்டம்.." மடமடவென்ற அவள் பேச்சில் கொஞ்சம் ஆணவம் மிகையாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது...

         "அப்படியா! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாக ௬ட இருக்கிறது.." என்றான் பிரகாஷ்.

        "இனி நீங்கள் என்னை 'நீ' என்றே அழைக்கலாம். கூடவே 'கள்' போட வேண்டிய அவசியமில்ல, எனக்கு நோ அப்ஜக்ஸன்" சிரித்த அவள் தோளை குலுக்கியபடி கூறிவிட்டு, "நான் வரட்டுமா, நாம் மறுபடியும் இனி இந்த இடத்திலேயே சந்திக்கலாம்" என்றபடி எழுந்தாள்.

         "அவனும் ஒப்புக்கு சிரித்தபடி எழுந்து அவளுக்கு விடை தந்தான். அவர்கள் நட்பு கூடிய விரைவில் நாளொரு இடமும், பொழுதொரு பேச்சுமாக, நாட்கள், வாரங்கள் மாதங்களை, துணைக்கழைத்து கொண்டு வளர்ந்தது....

ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவளது பேச்சில் மிடுக்கும், ஆணவமும்  மிகையாக தெரிந்தாலும்,  அவனின் சிந்தனைகளை செவிமடுத்து, அடிக்கடி தட்டிககொடுப்பது போல் பாராட்டவும், அவள் கொஞ்சமேனும் சளைக்கவில்லை.
தொடரும்...

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 12

Saturday, May 5, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 2

ஆச்சு.... வேலையில் சேர்ந்து இரண்டு மாதம் முடிந்து அடுத்த மாதத்தின் இறுதியை தொட்டு விடும் ஆவலில் நாட்கள்  இறக்கையை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்தன . அவனுக்கு அம்மாவை பார்க்க வேண்டும் போல மனசு கிடந்து அடித்துக் கொண்டது....

அலுவலகத்திற்கு கொஞ்சம் அருகிலேயே தங்குமிடத்திற்கு சின்னதாக இரு அறைகளை கொண்ட ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டதால், ஒரளவு வசதியாக இருந்தது . அதனால், அம்மாவை  தன்னுடன் வந்து  ஒரு வாரமாவது தங்கிச் செல்லும்படி அழைத்தால் என்ன... என்ற யோசனை ஆசையாக அவனுள் வளர்ந்தது.

  "அன்புள்ள அம்மாவுக்கு, ஆயிரம் கோடி வணக்கங்களுடன் உன் மகன் பிரகாஷ் எழுதிக்கொள்வது... இங்கு நான் நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? எனக்கு இங்கு ஹோட்டல் சாப்பாட்டை சாப்பிட்டு, நீ பார்த்து பார்த்து வளர்த்து விட்ட நாக்கு செத்து போய் விட்டது.... உன் கையால் சமைத்த உணவை சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது.... என்ன இருந்தாலும் உன் கைபாகமே தனிதான்.... அது போகட்டும், அதைக்கூட எப்படியோ சமாளித்து கொள்கிறேன். எனக்கு உடனே உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.      நான் இந்த ஆபிஸில் சேர்ந்த புதிதாகையால் நிறைய நாட்கள் லீவு எடுக்க முடியாது... எனவே நீ எனக்காக இங்கு வந்து என்னுடன் ஒருவாரம் தங்கியிருந்து செல்வாயா??? உன் சிரமத்திற்கு என்னை மன்னித்து, எனக்காக நீ ஒருதடவை அவசியம் இங்கு தயவு செய்து வரவேண்டும். உன் வரவை என் மனம் ஒவ்வொரு கணமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது......"
                                                        
                                                                             இப்படிக்கு,
                                                                          உன்அன்புமகன்,
                                                                             பிரகாஷ்.


   இந்த கடிதம் போய் சேர்ந்த நான்கைந்து நாட்களில் அவனுடைய தாய் மீனாட்சி, எப்படியோ கணவரையும் பிள்ளைகளையும் சமாதானப்படுத்தி விட்டு அவர்கள் சம்மதத்துடன் புறப்பட்டு வந்து சேர்ந்து விட்டாள்.

 அவள் வரும் விபரம் அறிந்த அந்த நாள்  ரயில்வே ஸ்டேசனில் தாயை வரவேற்று அழைத்துவர அவன் சென்றான். தாய் பசுவை கண்ட கன்று போல் பொது இடம் என்று பாராது,  "அம்மா..." என்று சத்தமாக கூறியவாறு ஒடி வந்து அவள் கையை பற்றிக் கொண்ட போது பாசத்தின் மிகுதியில் அவன் கண்களில் நீர் வழிந்தது.... உண்மையான அன்பு பொது இடம் என்று பார்த்துக்கொண்டு வருமா என்ன!

   இவன் எவ்வளவு அன்பை மனதில் வைத்துக்  கொண்டு வெளிகாட்ட முடியாமல் தவிக்கிறான். இவனைப்போய் புரிந்து கொள்ளாமல் கண்டபடி தனக்குத்தான் பேசத்தெரியும் என்ற அகம்பாவத்தில் பேசுகிறார்களே.... என்று கணவரையும், பிள்ளைகளையும் மனதிற்குள் கடிந்து கொண்ட மீனாட்சியின் கண்களிலும் கண்ணீர் தழும்பி வழிந்தது....

              "அம்மா!" என்றபடி அவன் அவசரமாக உள்ளே நுழைந்தான்..

            "என்னடா?"

அலுவலகத்திலிருந்து  மதியத்திற்கும் முன்பாகவே திரும்பி விட்ட மகனைக் கண்டு அதன் காரணம் கேட்பதற்குள்..

          "இன்று உன்னை வெளியே அழைத்துக்கொண்டு போய் சுற்றி காண்பிக்க போகிறேன்... சீக்கிரம் புறப்படம்மா.....இன்று  உனக்காக அலுவலகத்தில் எப்படியோ ஒரு நாள் விடுமுறை கேட்டு எடுத்து வந்து விட்டேன்...

   அவன் குரலில் இருந்த ஆவலை கண்ட அந்த தாய் அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் ௯றாமல் அவனுடன் கிளம்பினாள்...

  முதலில் நகரின் முக்கியமான இடங்களை சுற்றி காண்பித்தான்.. அதன்பின் ஒரு ஏ.சி. தியேட்டரில் ஒரு புதிய படம்...  பிறகு ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பாடு.... அதற்கு பிறகு, நல்ல உயர்ரக துணிக் கடையொன்றில் அம்மாவுக்கு பிடித்த கலரில் வறுப்புறுத்தி ஒரு புடவை  எடுத்துக்கொடுத்தான்...

   எல்லாவிடங்களிலும் அவனுக்கு ஈடு கொடுத்தாள் அவன் அம்மா......  வீடு திருப்பிய பின் ஆர்வமாய் அம்மாவிடம்.... "அம்மா எப்படிம்மா ஊரெல்லாம்??? ஜாலியா பொழுது போச்சில்லே....." உனக்கு பிடித்திருந்ததா?  என்றான் பிராகாஷ்..

 "நீ ஆசையாய் வாங்கி கொடுத்த புடவை மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்திச்சிப்பா... மத்தபடி நீ கூட்டிகிட்டு போன இடத்திலெல்லாம் பொழுது நல்லாதான் போச்சு... இருந்தாலும் எம்மனசுலே பட்டதைசொல்லேறேன்.. ஒரு கோவிலுக்குபோய் சுத்திட்டு ஐம்பது பைசாவுக்கு கற்பூரம் பொருத்தி வைச்சா ஏற்படற நிம்மதி, ஒரு சந்தோசம், இதுலே இல்லையேப்பா.... இதுக்குத்தான் சொல்றது இந்த கால நாகரீகத்திற்கு அர்த்தம் இல்லைனு......''

         அம்மா பேச, பேச, அவன் வியந்து போனான்..

        அம்மா எப்படி இந்த கால நாகரீகத்தை நாசூக்காய் சுட்டிக்காட்டி விட்டாள்... அம்மாவை நினைக்கும் போது அவனுக்கு மனம் முழுக்க பெருமிதமாக இருந்தது.....

தொடரும்...

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 1

Thursday, May 3, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை


 கதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி எழுதிய கதைகள் மற்றவர்களையும் ஈர்க்க வேண்டுமென்றுதான் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த கதைகள் நான் என் இளவயதில் எழுதியவை. இவை அந்தளவிற்கு படிப்பவரின் மனதை ஈர்க்குமா என்று தெரியாததால் வாளாவிருந்து விட்டேன்  அதன் பின் குடும்பம் என்ற சூழ் நிலையினால் எழுத்தார்வத்தில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை. தற்போது வலைத்தள உறவுகளின்   ஊக்குவிப்பால் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இன்னமும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை நல்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்..

இது எழுத துவங்கிய காலத்தில் 76 களில் எழுதியதால் அப்போதைய சூழலை மையமாக கொண்டு என் கற்பனையில் வடித்தவை.  குற்றம் குறை இருப்பின்  இப்போதைய எனக்காக அவைகள் சகிக்கப் படும் என நம்புகிறேன். 

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை

            சுருள்சுருளாக மேகக்கற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன. மழை வரும் போலிருந்தது. அவன் தன் வீட்டு வாசல்படியில் அமர்ந்தவாறு எங்கோ வெறித்து நோக்கி கொண்டிருந்தான். அவனை பார்த்தாலே அலட்சியமாய் தோள்களை குலுக்கிகொண்டு முகத்தை சுளித்துக்கொள்ளும் அண்ணன் சதீஷ்..... மூத்த அண்ணன் தனக்கு தேவையானதை கேட்டதும் வாங்கித்தருகிறான் என்ற திமிரில், கர்வத்தில், நீ எனக்கு இதுவரை எதுவுமே வாங்கி தந்ததில்லையே; பணமாக தர வேண்டாம், அட்லீஸ்ட்  அதை வைத்துக் கொள்ள ஒரு பர்ஸ் ௬ட வாங்கித் தரமாட்டேங்கிறியே பிரகாஷ் அண்ணா... என்று அவன் வேலையில்லாமல் வீட்டிலிருப்பதை நா௲க்காய் கேலியாக குத்திக் காட்டும் கல்லூரியில் படிக்கும் தங்கை சுதா...  வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் இவனை பி.ஏ.வரை படிக்க வச்சேன். தண்டம்... ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டிலே தண்டசோறு சாப்பிட்டு கிட்டு வேலைவெட்டியில்லாமே, உட்கார்ந்து கொண்டிருக்கிறான், என்று அவன் காது படவே கண்டபடி கேவலமாக பேசும் அப்பா நாகராஜன்... இவர்களை நினைத்தாலே, உலகத்தின் மீதே ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது அவனுக்கு.

இந்த வேலையில்லாத திண்டாடத்தில் சிக்கி திணறும் எத்தனையோ பேர்களுக்கு நடுவில் அவன் தானும் ஒருவனாய் இருப்பதை நினைத்து வருந்தாத  நாளில்லை... ஆனால் அதை புரிந்து கொண்டு அவனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தை  பேச யாருமில்லை.... யாருக்கும்
மனமில்லை என்பதை உணர்ந்து கொண்டவனாய், அவன் தினமும் தன் படிப்பு சான்றிதழ்களுடன் ஒவ்வொரு அலுவலகமாக ஏறி, இறங்கி கொண்டுதான் இருக்கிறான். ஆனால், இன்னமும் ஒருவேலைதான் கிடைத்தபாடில்லை....

            "ஏண்டா... இப்படி அடிக்கடி மோட்டுவளையத்தை பாத்துகிட்டு உட்காந்திருக்கே... படிச்சவனுக்கு வேலை கிடைக்காமலா போயிடும்.... அல்லது, கிடைக்கிறதும், கிடைக்காமலிருப்பதும் நம் கையிலா இருக்கு. நீ கவலைபட்டு ஒடம்பெ கெடுத்துகாதே... சாப்பிட வா.. உனக்கு பிடிச்ச வெண்டைக்காய் கறி பண்ணியிருக்கேன்" என்று அவனை அன்புடன் சமாதானம் செய்து பரிவுடன் பார்த்து பாரத்து பரிமாறிஅவனை சாப்பிடவைக்கும் அவனின் அன்புமிகுந்த தாய் மீனாட்சி... அவளை நினைத்தாலே அவன் மனம் பாகாய் உருகி கண்களில் கண்ணீரை கசிய வைத்தது.... அந்த அன்புச்சொற்களை கேட்கும் போதெல்லாம் அவன் உடலும் உள்ளமும் எத்தனையோ நாட்கள் சிலிர்த்திருக்கின்றன. அந்த அன்பில் அவன் தந்தை, உடன் பிறந்தவர்கள், பிற உற்றார் உறவினர்கள் அனைவரும் கொஞ்சம் ௬ட நாகரீகமில்லாது பேசும் கேலி பேச்சுக்ககைள மறந்திருக்கிறான். சொல்ல போனால் அம்மாவுகாக எப்படியாவது ஒரு வேலை தேடிக்கொண்டு இவர்கள் எதிரில் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறி அவன் மனதில் ஆழ பதிந்திருந்ததால்  அவன் சோர்ந்து விடாமல் வேலை தேடிக்கொண்டிருந்தான்......

              "கடவுளே... அந்த அன்பு தெய்வத்திற்காகத்தான் நான் இந்த உலகில் உயிரை வைத்திருக்கிறேன்... இல்லாவிட்டால் என்றோ உன்னை வந்தடைந்திருப்பேன்..." என்று கோவிலில் இறைவனின் முன்பு அவன் உருகிய நாட்கள் எத்தனையோ....
               கடவுளின் கருணையினாலோ என்னவோ அன்று அவனுக்கு வேலை கிடைத்திருப்பதாக, இருபது நாட்களுக்கு முன்பு  நேர்முக தேர்வுக்கு போன ஒரு அலுவலகத்திலிருந்து, தகவல் வந்திருந்தது... அவன் மிகுந்த சந்தோஷமடைந்தாலும் வீட்டில் அவன் எதிர்பார்த்த உற்சாகம் அமையவில்லை. அதுதான் அவனுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.... அப்பாவிடம் வேலை கிடைத்திருப்பதை அவன் சொன்ன போது.... "ம்... இவ்வளவு மட்டுக்காவது தண்ட சோறு சாப்பிடுகிறோம் என்ற உணர்வு வந்ததே உனக்கு.." என்று அலட்சியமாக ௬றிவிட்டு, "அறிவுரை" என்ற பெயரில் அவனை கொஞ்சம் புண்படுத்திவிட்டு, அவன் பதிலை எதிர்பாராது அப்பால் நகர்ந்தார். சதீஷிடமிருந்தும், சுதாவிடமிருந்தும் அவனுக்கு கிடைத்தது அந்த மாதிரி அலட்சியமான வார்த்தைகள்தான்.... அவன் இதை எதிர்பார்க்கவில்லை.... வேலை கிடைத்த பிறகாவது அவர்கள் தன்னை அன்புடன் பாரப்பார்கள்.. தன்னிடம் அன்புடன் பேசி மனம் மகிழும்படி நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவர்கள் அவனை புரிந்து கொள்ளாமல், அன்பை வெளிப்படுத்துவது அநாகரீகம் என்பது மாதிரி நடந்து கொண்டது அவன் மனதை காயபடுத்தியது..... வழக்கபடி தாய் மீனாட்சிதான் தன் அன்பால் அவனை திளைக்க செய்து அவன் வேலையை ஒத்துக்கொள்ள செல்லும் ஊருக்கு அனுப்ப மனமில்லாமல் ஆசி கூறி அனுப்பி வைத்தாள்....
தொடரும்....