Showing posts with label குணுக்கு. Show all posts
Showing posts with label குணுக்கு. Show all posts

Tuesday, November 12, 2024

விருப்பங்களில் விரும்புவது.

 குணுக்கு.

நேற்று எபியில் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் தயாரிப்பான  தஞ்சாவூர் அடையை பார்த்தவுடன் எனக்கும் அடை சாப்பிடும் ஆவல் வந்து விட்டது.  அடையும் செய்து சாப்பிட்டு பல மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் (பேரன், பேத்திகள்) அடையென்றால், அலர்ஜியாகி வேண்டாமென சொல்லி விடுவார்கள். ஏனோ அவர்களுக்கு இந்த அடை தோசை  பிடிப்பதில்லை. அப்படி பிடிக்க வைக்கவும் (வறுப்புறுத்தி) கற்றுத் தரவில்லை. சாதா மாவினால் செய்யும்  தோசையைதான் விரும்பி பிடித்து  சாப்பிடுவார்கள். நேற்று வீட்டிலும் இட்லி மாவு இல்லை. பின் அவர்களுக்கு என கோதுமை மாவு, ரவை சேர்த்து  கரைத்து விட்ட தோசையாக  வேறு செய்ய வேண்டும். அது வேண்டாமென இந்த குணுக்கைத் தேர்ந்தெடுத்தோம்.

இதுவும் அடை மாவு மாதிரிதான் தயார் செய்து கொள்ள  வேண்டும்.இது அனைவரும் அறிந்ததே..! 


ஒரே அளவில் நான்கு பருப்புக்களையும் (து. ப, பா. ப, க. ப, உ. ப,) ஒவ்வொரு டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அலம்பி பின் பருப்புக்கள் மூழ்கும் வரை ஊற வைத்தேன். புழுங்கல் அரிசி ஒரு டம்ளர், அத்துடன் முக்கால் டம்ளர் பச்சரிசி இரண்டையும் எடுத்து அதையும் அலம்பி பின் மூழ்கும் அளவுக்கு நீரில் ஊற வைத்தேன். 

இரண்டும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஊறியதும், முதலில் அரிசி கலவையுடன், சி வத்தல்10 , பச்சை மிளகாய் 3, தேவையான கல் உப்பு, கறிவேப்பிலை நான்கைந்து ஆர்க்கு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம் பொடி என சேர்த்து மிக்ஸியில் சற்று, கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். பின்னர் பருப்பு கலவையை நன்றாக அதுவும் தோசைக்குப் போல தண்ணீர் நிறைய விட்டு நைசாக அரைப்பது போல இல்லாமல் சற்று கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொண்டேன். 


இத்துடன் தேங்காய் பூ துருவி சேர்க்கலாம். இல்லை பெரியதோ, சின்னதோ, வெங்காயம் பொடிதாக நறுக்கி சேர்க்கலாம். தேங்காய், வெங்காயம் இரண்டுமே இரு வேறு மாதிரியான சுவைகளை கண்டிப்பாகத் தரும். ஆனால், நான் இதை சேர்க்கவில்லை. பதிலாக கொத்தமல்லி தழைகள் வீட்டில் நிறைய இருந்தன. அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்து பொடிதாக நறுக்கிச் சேர்த்தேன். 


கடாயில் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றிய பின், பருப்புக்களின் நிஜமான சுவையுடன்  கூடிய அந்த கலவையை கொஞ்ச கொஞ்சமாக கிள்ளி சிறு சிறு உருண்டையாக எண்ணெயில் போட்டு எடுத்தேன். மாலை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர். இரவு மோர் சாதத்திற்கும் அவர்கள் விருப்பமாக அதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.( இரவில் எப்போதும் அவர்களுக்கு மோர் சாதந்தான் பிடிக்கும்.) 


அவர்களுக்கு பிடிக்காத அடையை செய்து "உடம்புக்கு நல்லது..! அத்தனையும் புரதம்..!  சாப்பிடு, சாப்பிடு..! " என கண்டிப்பதை விட, அவர்களுக்கு பிடித்ததை செய்து தரும் போது அவர்களும் அதே புரதத்தை விரும்பி சாப்பிடுவதை பார்க்கும் போது சந்தோஷம் வருகிறது. ஆனால் என்ன ஒன்று..! எண்ணெய்யில் பொரித்து தருவதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. சரி.. என்றோ ஒரு நாள்தானே இப்படி என சமாதானமடைய வேண்டியதுதான்...! இப்படியாக இந்த குணுக்கு நேற்று எங்கள் வீட்டில் எதிர்பாராமல் தோன்றியது. 


இன்று மீதமிருக்கும் மாவு அதன் துணையாக பல பொருட்களை சேர்த்துக் கொண்டபடி, நான் வேண்டாமென ஒதுக்கிய வெங்காயத்தின் மனம் நொந்து விட்டதால், அதையும் பேசி  சமாதானப்படுத்தி உடன் அழைத்துக் கொண்டு அடையாக மாறும் என நினைக்கறேன். மாற்றங்கள் நம்மை போல், இல்லை நம்மை விட அதற்கும் பிடிக்குமல்லவா? 

வேறு படங்கள் எதுவும் ஆரம்பிக்கும் போது எடுக்கத் தோன்றவில்லையாததால், எடுத்துள்ள படங்களுடன் சூட்டோடு சூடாக எழுதிய பதிவிது. நீங்களும் இந்த மாதிரி அனேக முறைகள் உங்கள் வீட்டில் செய்து ருசித்திருப்பினும், இந்த சூடான குணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். 

நன்றி என் நட்புலக சகோதர சகோதரிகளுக்கு.🙏.