Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, November 28, 2025

கவிதைகளின் தொகுப்பு

சித்திரை திருநாள் சிறப்பான திருநாள். 


பள்ளி விடுமுறை 
நாட்களோடு, 
பகலவன் வெருட்டிய 
வெப்பங்களோடு, 
சைக்கிள் வட்டங்களை 
உருட்டியோட்டி கை கால்கள் 
சலித்துப் போனோம்.

அந்த வெப்பமதின் 
தாக்கத்தை தணிக்க, 
ஆண்டவனை தாங்கி நிற்க 
சின்ன மரச்சட்டங்களை 
ஒருங்கிணைந்து
சத்தமில்லாது அழகுத் தேராக்கி,
சடுதியில் இழுத்து வந்து
கோவில் வாசலோடு 
நிலை சேர்த்து, 
இறையருளை வேண்டிடவே, 
அவனருளால் இந்த 
அவனியெங்கும்
அருள் சிறந்து 
நன்மழை பொழிந்து
அமர்த்திடுமே அந்த 
அனலையெல்லாம்.

ஆதலால் சித்திரை மாதத்து 
விழாக்கள் என்றும் 
ஆண்டுகள்தோறும் 
சிறப்பாகிப் போனதிங்கே....! 

சித்திரைத் திருநாளில் 
தேரோடும் வீதியிலே 
விழி மூடும் நேரத்திலே
வாடாமல் வடம் பிடித்து 
இழுத்து வந்து  நிலை சேர்த்த 
அந்நாளைய பெருமைதனை அங்கலாய்த்து தினம்  பேசி
நீங்கள் தளர்ந்திருக்கும் 
இந்நிலை  இன்று  நாங்களறிவோம்..! . 

வயதாகியதில் வரும் 
இயலாமையால், 
இப்போது வாட்டமுடன் 
நீங்கள் அமர்ந்து விட, 
தேரின் பெரும் வடம் பிடித்து 
எங்கள் தேயாத 
இளமைதனை பறைசாற்றி வாலிபராகும் வரங்கள் வேண்டியே நாங்களின்று 
இவ்வடம் பிடித்தோம். 

இளையவர்களின் பலங்கள் இனி புரிந்திடவே, 
இதுவும் ஒரு முயற்சியன்றோ..! 
வயதில் மூத்தோர்  
விட்டு தந்திட்டால், 
வரும் எங்கள் வாழ்வில் 
ஒரு சுழற்சியன்றோ..! 




மகிழ்வின் மூல(தன)ம். 

சின்னஞ்சிறு  வயதெனினும்,
உயரமெனும் சிகரத்தை 
எட்டி விட்ட களிப்பில்,
உன் சிந்தையிலே 
தெரியுது பார் உவகை ...! 

முத்துப்பல் தெரிய நகை புரியும்   
உன் முகத்தினிடை மகிழ்வில்,
உன் மூச்சு காற்றினிலே 
படருது பார் மலர்ச்சி .. ! 

கைத்தூக்கி காட்டிடும்  
வெற்றிச்சின்னம்..! 
கண்களிலே  தெரியுமந்த 
மகிழ்வலைகள்..! 

அத்தனை வடிவத்திற்கும் 
அற்புத காரணம்... !
உன் கள்ளங்கபடமற்ற உள்ளமதினிலே..!
நீ  இட்டு வளர்த்த 
உன்னதமான மூலதனம்..!
உன் சிரிப்பென்ற ஒன்றுதான்...! 

மேற்கண்ட இரு படத்திற்கும் யாரேனும் ஏதேனும் கவிதை எழுதுங்கள் என அவர் பதிவில் அழைத்தவர் நம் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள். இது கடந்த நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். (சரியாக தெரியவில்லை.) இந்த மாதிரி  அழைப்புக்கள் எனக்கு ஒரு வரப்பிரசாதம். உடனே சில நாட்களில் யோசித்து எழுதி விட்டேன். (உடனே கண் இமைக்கும் நேரத்தில் எழுத நான் என்ன ஸ்ரீராம் சகோதரரா..?இல்லையே..! ) ஏனெனில் இது போல் கவிதைகள் புனைய எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். (அதை படிக்கும் எங்களுக்கும் அது (அதுதான் அந்த ஆர்வம்) உண்டாக வேண்டாமா என தயவு செய்து கேட்காதீர்கள்:))   ) ஆனால் அனுப்ப மனம் வரவில்லை. 

நம் கவிதையெல்லாம் ஒரு சிறந்த கவிதையா என்ற யோசனைகள் வளர்ந்து பலமானதில்,என் எழுத்தோடு, அந்தப் படங்களும் டிராப்டில் பல வருடங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டன. அதன்பின் யார் முன்வந்து அவர் தந்த
அப்படங்களுக்கு சிறப்பாக கவிதை எழுதினார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை.(அவர்தான் சொல்ல வேண்டும்.) 

என்னை உங்கள் அப்போதைய பகிர்வான படங்களுக்கு கவிதைகள் எழுத வைத்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் சகோதரரே. 🙏. 


இன்று எ.பியில் ஒரு மரம், பல பறவைகள் படத்திற்கு ஏற்ற கவிதைகளை நம் எ. பி குடும்ப நட்புகள் அனைவரும் சிறப்பாக புனைய, என் மனமும் உடனே எழுத இயலாத ஆதங்கத்தில் ஒரு புழுவாக நெளிந்தது .எப்படியும் ஒரு நாலுவரியாவது எழுதிட வேண்டுமென அது பிடிவாதம் செய்ததில், பல வேலைகளுக்கு நடுவில் அதற்கும் எப்படியோ  மதியத்தில் யோசித்து ஒரு கவிதை எழுதி  விட்டேன்.

இன்றைய மரம் பறவைகளுக்கான என் கவிதை. 

தன்னம்பிக்கை கொள் மர(ன)மே

பிறந்தவுடனே சில காலத்திய

பிணைப்பென்றாலும்

எங்களைப் போன்ற சிறு 

ஜீவன்களாகிய

பறவைகளுக்குத்தான் புரியும்

பந்தமும் பாசமும்  வெறும்

பகட்டானதா, இல்லை
 
பரிகாசமானதாவென்று..! 


பற்றில்லா இலைகள் 

தன் வழக்கமான

பழக்கத்தில் பற்றறுத்து

பாதை மாறிப் போனதந்த 

வருத்தத்தைப் போக்க உன்

வேர்களுக்கு துணையாக

வேறெந்த உறவையும் நாடாது 

உன் வேதனையில் பங்கெடுக்க 

வேண்டி வந்து அமர்ந்துள்ளோம்


வருந்தாதே அன்பு மரமே.!  

உன் மனவலி(மை) கண்டும் 

இங்கு வந்திறங்கி உள்ளோம்.

இலைகள் இல்லாத போதினிலும்

இவைகளின் அன்புக்கு விலை

ஏதுமில்லையென உன்

உள்மனதுக்குள்

சற்று இறுமாப்புக் கொள்...!


கறுத்த மேகங்கள் மனமிறங்கி

மழையும், குளிருமாய் வந்து

விரட்டிடும் விரைசலில், 

விரைவில் துளிர்த்திடும்

பசுந்தளிர்கள். தங்களின் பரிசாக

உன் மேல் தன் பங்களிப்பாக 

பாசப் போர்வையை 

போர்த்தியதும்

பளபளவென மின்னும் உன்

அற்புத அழகை ஆராதனை 

செய்வதற்கு தினந்தினம் 

அப்போதும் நாங்கள்

தப்பாமல் வருவோம்.


அக்கணம் எங்கள் வாழ்வின்

ஆனந்த குடியிருப்பிற்கு

அங்கலாய்ப்புடன் கூடிய 

ஆட்சேபனைகள் ஏதும் 

கூற மாட்டாய்..! மாறாக

அமைதி கொண்டு வரவேற்பாய் 

என்ற ஆனந்தத்தில் இப்போது 

ஆழ்ந்து லயித்துள்ளோம்

நானோ ஒரு தருமி. இருப்பினும், சிறப்பாக அங்கு  கவிதையை செதுக்கியவர்கள் இதையும் படித்து பாண்டிய மன்னனாய் ஒரு நல்ல கருத்தை முன்வைத்தால் பெருமகிழ்ச்சியடைவேன்.

இப்போது பழையது, புதியது என அனைத்தையும் சேர்த்து தொகுத்து இங்கு என் பதிவிலேயே  வெளியிட்டுள்ளேன். 

அனைவரும் வந்து படித்தால் நலம். படித்த பின் கவிதைகளுக்கு ஒரு நல்ல கருத்துரை தந்தால், அது என் எழுத்துக்கும் ஒரு நல்ல பலம். 🙏. நன்றி சகோதர சகோதரிகளே..! 🙏. 

Wednesday, January 19, 2022

காலம் மாறிப் போச்சு.

 மறுபடியும் பிரவேசம். 

இது எப்போதோ எழுதப் பெற்று தனக்கு (கவிதை மாதிரி உள்ள அதற்கு... ) வர வேண்டிய ஆதரவு மதிப்பெண்களை இழந்த கவிதை. இப்போதும் பெரும்பான்மையாக இல்லாவிடினும், சிறிதளவாவது கிடைக்கும் (அதுதான் ஆதரவு....! ) என்ற நம்பிக்கையில், ஆசை மலர்களை மனதுக்குள் சூடியபடி கிளை பரப்பி மறுபடி துளிர்தெழுந்துள்ளது.  

சகோதரர் ஸ்ரீராம் ரெற்றோ கவிதை என எ.பியில் பகிர்ந்துள்ளதை பார்த்ததும், "நானும் பழையனவைதானே...!! என்னையும் மறு முறை ஒரு தடவை தூசு தட்டி வெளியிட்டால்தான் என்ன..? " என என்னிடம் அது முறையிட அதன் வார்த்தையை அரைமனதாக அங்கீகரித்து பதிவுக்குள்அனுப்பலாமா வேண்டாமா என தயங்கியபடி யோசித்தேன்.

 "இது அந்த மாதிரியா என்பதெல்லாம் எனக்கு தெரியாதே. .!!!! அது எங்கே...   நீ எங்கே.....!!!! நீயாக இப்படியொன்றை கற்பனை செய்து கொண்டால் எப்படி? மேலும், உன்னை நான்  அன்று உருவாக்கிய வரிகளில், வார்த்தைகளில் குற்றங்கள் குறைகள் இருக்கலாமே. .!!! " என முதலில் பிகு செய்தபடி  ரொம்பவே தயங்கினேன். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை....! என்பது யாரும் அறியாததல்லவே.. ." என்ற அதன் ஆழமான  மறு பதிலில் அதன் பின் எழுந்த என் மறுபேச்சுகள் பயனின்றி போகவும் தைரியமாக அதுவே பதிவுக்குள் வந்தமர்ந்து விட்டது.:)))) 

இதோ அந்தக் கவிதை.. .

காலம் மாறிப் போச்சு... 

கடல் போன்ற வீடு...! அதில்

கணக்கற்ற நிறைய மனிதர்கள்...!

சுற்றங்களும், சுகங்களுமாக,

சுமை தாங்கும், உறவுகள்..!


அன்பும் , அரவணைப்புமாக ,

அரண் போன்ற மனங்கள்...!

தவழும் பேரன்களோடு, சேர்ந்து ,

தளர்வின்றி,தவழ்ந்தாடும் தாத்தாக்கள்...!


பாட்டும், கதையுமாக, பேத்திகளை,

பாசத்துடன் பார்த்துப் பார்த்து 

பாரபட்சங்கள் ஏதுமின்றி, 

பக்குவமாக்கும் ,பாட்டிகள்...!


விடியலில் உதிக்கும் விறகடுப்பு,

வீதி அசந்து உறங்கும் வரை,

அனல் கக்கும் அதிசயம்,

அண்டை அசலெங்கும் தொடரும்..!!!! 


உணவுகளுக்கும், பஞ்சமில்லை...!!

உடைகளுக்கும். வஞ்சமில்லை....!!

உறவுகளின், உணர்வுகளும்,

உரிமைகளும் , என்றுமே, 

அங்கு உடைந்ததில்லை....!!


நான்.. நீ...என்ற பேதமில்லை….!அங்கு

நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை...!

மதிப்பும் , மரியாதையும் 

குறைந்ததில்லை...!!

மற்ற சண்டைகளும் என்றும் 

வந்ததில்லை..!!.

       

ஆனால் , இது அந்தக் காலம்....!

இன்று அந்த கடல்கள், கணிசமாக வற்றி,

கரையோரங்களும்,கவனிப்பின்றி,

கடுகளவாய் சிறுத்து விட்டது...!!


அடுப்பும், மரித்து விட்டது...!!மக்களின்,

உடுப்பும், மாறி விட்டது...!! மனிதரின்

சுயநலமெனும் போர்வைக்குள்,

சுற்றங்களின்  சுகங்களும்,

சுமைகளும், சிறிதளவும் சிரமமின்றி,

சுகமாக சுருண்டோடி கொண்டு விட்டன...!


௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,

௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,

நான்.... நீ... என நாலும் ௯றிக்கொண்டு,

நான்காய் பிரிந்ததில், நன்றாகவிருந்த

நாகரீகங்கள் , தடு(தடம்)மாறி விட்டதில்,

நலம் குலைந்த நகர(நரக)மாயிற்று...!!

        

"என் வாழ்விலேயே இப்படி மாறிப் போன

 இந்த காலத்தின் கோலங்கள்..!!

உன் காலத்தில் எப்படி மாறுமோ?.." என்று

புலம்பிக்கொண்டிருந்த என் பாட்டியின்,

புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,

காதருகே, கால் கடுக்க நின்றபடி

காதுகளில் ஓதியபடிதான்  உள்ளது..!!! 


"விபரறிந்து பாட்டி... நீ..! அன்று

விசனத்துடன் சொன்ன வாக்கு ... .! 

விந்தை நிறைந்த இவ்வுலகில்

விரைவாய் அவ்வாறே மாறிப் போனதில்

வியப்பொன்றும் இல்லையம்மா...!!!" 


கடல் கடந்து சென்று வாழ்வதுதான், 

தன் கருமம் எனக்௯றி, 

காரியத்தை சாதித்தான் ஒரு பிள்ளை....!!


காசிருந்தும், கார்கள் பலவிருந்தும், 

எங்கள் கால் பதிக்க அங்கு  இடமில்லை, 

என்றான் மற்றொருவன்....!!


இல்லத்தில் இணைந்திருந்து 

இன்பமாக வாழ பழகியிரு ....! என்

இல்லத்தில் பிறகு உங்களை 

இணைத்துக் கொள்கிறேன் 

என்றான் ஒரு பிள்ளை....!! 


சிறிய பிரச்சனை எனக்கு...!! 

அது தீர்ந்து முடிந்ததும்

சில காலத்துக்குள் நீங்கள் 

என்னுடன்தான் …!! என்றான் 

இன்னொருவன்....!! 


இயந்திரமயமான இக்காலத்தில்,

இளமை விரட்டிய, எங்களுக்கு , 

இந்த இல்லம் என்ற ஒன்றிடம்

இல்லாமலிருந்தால், இன்னும் பல

இன்னல்களுடன் இணைந்திருப்போம்....!            


நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும் ,

நான்கும் நாலுவிதமாய் போனதில் , 

இன்று முகமறியாத ,

உறவுகளுடன் வாழ்க்கையும்,

முதுமையுடன் அன்பாய்

முறியாமல் தொடர்கின்றது....!!


உன் சோகத்தை சுமக்க , பாட்டி...!அன்று

உன் பேத்தி நானிருந்தேன்....!!

என் வார்த்தை உரைக்க வகையாய், 

என் பேத்தி  இன்று

என் அருகிலேயே இல்லையே.....!!!! 


இந்த இல்லத்தின் உறவுகளுக்கும் 

இன்று இதே நிலமைகள்தான்...!!

இந்நிலை எந்நாளில் மாறுமோ? அந்த

இறைவனுக்கே வெளிச்சம்...!!! 


கடல் போன்ற வீடு....!!அதன்

காலங்கள் மாறிப் போச்சு...!!என, நீ. .

கடவுளிடம் புலம்புவது இப்போதும் என்

காதுகளில் ஒலிக்கிறது … பாட்டி!!!!  ஆம்!

காலம் மாறித்தான் போச்சு...! அது 

கணிசமாக மரித்தும் போச்சு....!!!!

***********************************************************************                       

கவிதை நன்றாக இருந்தால், (இல்லாவிட்டாலும்) இதற்கு ஆதரவு தர வேண்டுமாய் சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இனி வரும் காலங்களும் ஏதாவது ஒரு வகையில் மாறிப் போக வாய்ப்பு உள்ளதால், இது மூன்றாம் முறையாக இங்கு வருவதற்கு சற்று அதிகமாகவே வெட்கப்படுமாம்:))))  எனவே படித்துப் பார்ப்பவர்களுக்கும், ஆதரவாக விமர்சிப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Friday, December 10, 2021

சாலையும், ஞானமும்.

 


1.) குடியிருப்பு  வசதிகளாக

குடியேற இருப்பிடங்கள்

குறைவற இருப்பினும், 

மக்கள் எவரும் 

பாதையாகவேனும்

பாவித்து பயணிக்காத 

சாலையின் வெறுமை

மனதிலும் வெறுப்பேற்றி

மடியாமல் நடை போடுகிறது.. ... 

###################################

2.) சாலை  வெறுமை  என்ற 

இந்த கண்ணாடியில்

மனதில் கலந்து விட்ட

வேதனைகளின் கனத்த  

பிம்பங்கள் ஏனோ 

பிரதி தினமும் இங்கு

பிழையின்றி பிரதிபலிக்கின்றன.... 

###################################

3.) கெளதம புத்தருக்கு  

போதி மரத்தடியில்

ஞானம் கற்பித்து 

தனக்கு இணையாக்கிய 

இறைவன் மனமிறங்கி

இந்த சாலை சூன்யத்தில்

சற்றே அஞ்ஞானமகற்றி 

அந்த ஞானமென்ற

சூட்சுமத்தை  நமக்கும் 

பட்சமாக கற்பித்தால்,

புத்தரின் பாதத்தில் 

அவரை விரும்பியபடி 

வீற்றிருக்கும் ஒரிரு

தூசி துகள்களில், 

ஒரு துகளுக்கு கண்டிப்பாக

நாமும் இணையாகலாம்.....

###################################

4.) மரங்கள் அடர்ந்திருந்த போது 

மக்களுக்கு நிழலாக, 

மண்ணிற்கு அரவணைப்பாக, 

மலர்களுக்கு பிறப்பிடமாக, 

மகிழ்வின் கீதமிசைத்து கொண்டு  

தன் மனதின் இனிமையோடு 

அதன் அவசர மடிவையும் 

அதி விரைவிலேயே 

சந்திக்காது இருந்திருக்கும். 

ஆனால், தனித்துவமான

வீடுகளின்  உதயத்திற்காக, 

விதி செய்யும் சதிக்காக, 

மட்டற்ற மரங்களை பலி தந்தும், 

மக்களின் வேண்டுதல்கள்

பரிபூரணமாகாத அதிருப்தியிலும்

பிற பட்டுப்போன  மரங்களும் 

பார்த்துப் பதறாத 

பரவச பார்வையிலும். 

பூத்துக் குலுங்கும் ஏனைய

மற்ற மரங்களும் மண்ணோடு

மண்ணாக இங்கு மடிந்து 

மக்கிப் போயிருக்கின்றன..... 

###################################

இதற்கு முன் இங்கு வந்த போது கட்டுமானங்கள் இல்லாத இந்த வெறும்  இடங்களில், சாலைகளில்  பறவைகளும், கால்நடைகளுமாக பறந்து / நடந்து  மகிழ்ந்திருந்ததை  ரசித்திருக்கிறேன். ஒரு வருட இடைவெளிக்குப் பின் நிறைய கட்டிடங்கள் இங்கு முளைத்திருந்த போதும், இந்த வெறிச்சென்ற சாலையை கண்டதும் என் கைப் பேசியில் படமெடுத்து விட்டேன். படத்தை எடுத்துப் பார்த்ததும் நாலு வரி எழுத வேண்டுமென என்னுள் உதயமான வார்த்தைகள் அந்த கட்டிடங்களின் சிமிண்ட் கற்களைப் போல சேர்ந்தெழுந்து வரிசையாக நின்று கொண்டன.  படம் குறித்த கவிதையை போலான (இந்த இடத்தில் சிறப்பான வார்த்தைகளுடன் சரளமாக கவிதைகளை புனையும் சகோதரர்கள் ஸ்ரீ ராம் அவர்களும், துரைசெல்வராஜ் அவர்களும் என் ஒழுங்கற்ற வார்த்தை கோர்வைகளுக்கு  மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.) வரிகள் உங்களுக்கும் ஏதோ  பிடித்திருக்குமென நினைக்கிறேன். படித்து கருத்திடும் நட்புறவுகளுக்கு என் பணிவான நன்றிகள்.. 🙏.

 இதை எழுதி வைத்து விட்டேனே தவிர  பல மாதங்களாக வெளியிடும் எண்ணமே வரவில்லை. ஆனால் எ. பியில் சென்ற வெள்ளியன்று  பகிர்ந்த  பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கர்ணன் படப்பாடல் என் மன நிலையை மாற்றி விட்டது.  

"என்னையே சரண் என்று நீ முழுமையாக நம்பி விட்டால், உன்னுடையது என இந்த உலகில் எதுவுமில்லை" என்ற கீதாசாரம் மிகுந்த அந்த பாடலில், மன்னரும் நானே மக்களும் நானே. . மரம் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...துணிந்து நில் தர்மம் வாழ... என்ற வரிகளினாலும்,  காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... என்று தன் கடமையைை செய்ய அர்ஜுனனுக்கு போதிக்கப்படும்  இறுதி வரிகளினாலும்  இந்தப் பதிவு  தைரியமாக இன்று அரங்கேறுகிறது. "இன்றிருப்பார் நாளையில்லை" என்ற ஞான விளக்கங்களும் பக்க வாத்தியங்களாக உடனிருந்து இதை அரங்கேற செய்துள்ளது. எல்லாம் அவன் செயல். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 🙏.

Sunday, December 29, 2019

இயற்கை சீற்றம்.

2004-ம் வருடத்திற்கு பிறகு எப்போதுமே ஒவ்வொரு வருட கடைசியான டிசம்பர் 26 ம் தேதி மறக்க முடியாத சுனாமி தினம். மக்கள் கண்மூடி அசந்திருந்த அந்த வேளையில், எத்தனை உயிர்களை  கடலரசன் அசுரத்தனமாக பெரும் பசி கொண்டு விழுங்கி ஏப்பம் விட்ட இந்த துக்க நாளை நாமெல்லோரும் அவ்வளவு சுலபத்தில் மறக்கவும் முடியாது.....!விதியை  மன்னிக்கவும் இயலாது.....! 

தற்சமயம் வந்த  கிரஹண செய்திகளை படித்து கேட்டுக் கொண்டிருக்கையில், "இந்த அதி அற்புத கிரஹணத்தால், வெள்ளம். மற்றும் இயற்கை சீற்றங்கள் வரும் என்ற பயம் உண்டாக்கும் வாட்சப் செய்திகளை நம்ப வேண்டாம்..!" என்பதாக ஒருவர் பேசினார். "மக்கள் ஏன் அத்தகைய பதட்டம் தரும் செய்திகளை பரப்ப வேண்டும்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்? இந்த மாதிரி எச்சரிக்கை செய்திகளை கேள்விப்பட்டதுமே பாதிக்கபட்ட மக்கள் மனதில் ஏற்கனவே பட்ட அவஸ்தைகளும்,வேதனைகளுந்தானே நினைவு வரும். என்றெல்லாம் சிந்தனை வந்தது. 

சுனாமி வந்த பின்பும் நிறைய முறை இதே பயமூட்டும் செய்திகள் உலா வந்தன. ஓரிரு சமயங்களில் "இன்று சுனாமி வந்தாலும் வரலாம்"  என்பதாக சொல்லி அரசு மக்களுக்கு பயனுள்ள வகையில் எச்சரிக்கை கொடுத்து கடலோரத்தில் இருக்கும் அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாத்தாலும், அந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரு கலக்கமாகத்தானே இருந்திருக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பழைய நினைவுகள், பிறருக்கு அதை புதிதாக சந்திக்கும் பயம், கவலை, இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு,மேலும்  அதை பார்க்க ஆர்வம் என ஏகப்பட்ட கலவைகளுடன் மக்களின் சூழ்நிலைகள்  இருக்க, சீறிப்பாய்ந்து ஆர்வத்துடன்  வர இருந்த சுனாமி அலைகளும் சற்று அவ்வப்போது எச்சரிக்கையுடன்  பதுங்கிக் கொண்டதும் மிகவும் நல்லதற்கே...! 

அப்போது என் மனஅலைகளுடன் கடல் அலைகளுமாக எழு(திய)ந்தது இது. 


அலைகளின் ஏக்கம்.....



ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் வந்து கரையை
ஆராய்ந்து பார்த்து விட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாகி  கொண்டன. 

என்ன இது?

ஏன் இந்த மாற்றம்?

அன்றாடம் தன் அழகை ரசிக்கவரும்
ஆயிரம் பேர்களில் இன்று
ஒருவர் கூட இல்லாமல்,
ஓய்ந்து இருக்கின்ற கடற்கரை,

சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே,
சூனியமான புல்வெளிதரைகள்,
ஆர்ப்பரிக்கும் தன் சத்தத்தையே சிறிது 
அமிழ்த்தி விடும் ஆரவாரக்கூச்சல்கள்,

எதுவுமின்றி ஏகாந்தநிலையில்

ஏன் இந்த மாற்றம் ?


தனக்கு தானே கேள்விகளை தொடுத்தபடி,
தளர்வின்றி மறுபடியும், மறுபடியும்
மண்ணில் முதல் நாள் பதிந்த
மனிதர்களின் காலடிதடத்தை
அழித்து விட்டு சென்றபடி இருந்தன
அந்த கடலலைகள்.

அதற்கு தெரியவில்லை !
அதனுள்ளிருக்கும் அடிமட்டத்திலிருந்து
அதிர்ந்து எழும்பும்
ராட்சத பேரலைகள்
ராப்பகல் என்ற பேதமின்றி
கரையை தொட்டு விட்டு
கடந்து விடும் எண்ணமின்றி
"சுனாமி" என்ற பெயரில் அனைத்தையும்
சுருட்டிக்கொண்டு போய்விடும் 
அந்த அவலச்செயல்களும்,
அதன் கொடூர தாண்டவங்களும்,
அதனின் விளைவால் நிகழ்ந்த
அகோரமான சோகங்களும்,
விடியலில் ஆரம்பித்த விபரீதங்களும்,
விபரீதத்தின் விளைவால் எழுந்த
விரக்திகளின் வலியையும்,
விளையாட்டாய் தினமும் வந்து போகும்
அந்த அலைகள் அறியவில்லை.

இன்றும் அந்த அவல ஓசையையும் அதன்
இறுதி அர்த்தத்தையும் உணர்ந்த
காவலர்களின் கட்டளைக்கு பணிந்து
கண்காணாமல் ஒழிந்திருந்த மக்களின்
கலக்கமும், மனப்பதட்டமும்
கடற்கரையை காலியாக்கி விட்ட
சோகம் புரியாமல் மீண்டும் மீண்டும் வந்து
சோர்வில்லாமல் கரையில் மனிதர்களை, 
தேய்ந்த  நிலவொளி வெளிச்சத்திலும்
தேடிப்போனது அந்த கடலலைகள்....

இதைப் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.🙏 🌑😎🌙



Saturday, August 15, 2015

எங்களுக்கு எப்போது..?





சுதந்திரங்கள் என்றுமே உங்களுக்கு மட்டுந்தான்.!
சுற்றித் திரியும் சுகங்கள் எமக்கென்றும் இருந்ததில்லை!
எமது இனங்கள், வானிலே பறந்து வட்டமிடுவதையும்,
எட்டிப் பார்க்கும் எழுச்சியும் எமக்கிருந்ததில்லை.!
மனிதரின் பிரச்சனைக்கு தீர்வின் மருந்தாக மட்டும்
மண்ணில் வந்து சிறகின்றி அவதரித்தோமா.?
ஆயிரம் மாற்றங்கள் அனுதினமும் உருவாகியும்,
ஆண்டாண்டு காலமாய், அதற்குதானா இந்தச் சிறை.?
தெய்வங்களை நாங்கள் தினந்தோறும் ஸ்பரிசித்தும்,
தீர்வான பாதைகள் இன்னமும் திறக்வில்லை.!
சிறகுகள் இருந்தும், பறக்கப் பழகவில்லை.! உங்கள்
சிரிப்புக்கு பலியென அதை பரிசாகவே தந்து விட்டோம்.
உங்களின் காலத்தை கணிப்பது எங்கள் பணி, ஆயின்
எங்களின் காலங்ள் என்றும் கண்ணுக்கு தெரிந்ததில்லை.!
வருடங்கள் தினமும் சிறகோடு விரைவாக பறப்பதினால்,
வயோதிகங்கள் வளர்ந்தே எங்கள் வாழ்வும் முடிந்து விடும்
உங்களின் சுதந்திர தாகங்கள் தணிந்ததைப் போன்று,
எங்களின் தாகங்களும் என்றுதான் தணியுமோ?
மனமும் மார்க்கமும் உங்களுடன் அமைந்திருந்தால்,
மனதாற எங்களையும் மகிழ்வோடு மறுப்பின்றி,
சுற்றிப் பறக்க விட்டு சுதந்திரத்தின் காற்றுக்களை,
சுவாசித்து வாழ விட சற்று முயற்சித்து பாருங்களேன்.



வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.              .                
        படங்கள் : நன்றி ௬குள்                            

Thursday, July 16, 2015

வாழ்த்திசைக்க வாருங்கள் என்றே வரவேற்கிறேன்



எங்கள் வீடெனும் தனித் தடாகத்தில்
ஒரு தங்கத் தாமரை மலர் பூத்தது.
தங்கத்தை நிகர்த்த பெருமழகோடு, இத்
தரணியை வெல்ல மெல்ல உதயமானது.

ஆறுமுகத்தோனின் அருளும் பார்வைகள் என்
அகத்தினில் என்றும் அவனருளால் அசையாதிருக்க,
அண்ணலின் அன்பான பெருங்கருணை மழையினால்,
இன்னல்கள் அதிகமின்றி இனிதாகவே பூத்தது.

முருகா முருகாவென்றே, மனமது ஜபித்திருக்க
முப்பொழுதும், அவன் துணைக்காக தவித்திருக்க
தாமரை மலரில் அழகாக அவதரித்தவன் அந்த
தாமரையையே பரிசாக்கி தந்தருளி விட்டான்.

அழகின் சிரிப்போடு எல்லையற்ற ஆனந்தமும்
அருகருகே இணைய, என் அற்புத நேரங்களும்
அதி சுலபமாய், வாதிடும் சொற்களும் ஏதுமின்றி
அடி பணிந்து பணிவோடு விடைபெற்றுப் போனது.

கண்ணின் மணியாம் என்னவளின் அழகிய
கரு விழியதனில் என் முழுப் பொழுதும்
கட்டுண்டு போனதில் ஒருநாளின் மணிப்பொழுது
கரைந்து தினமும் சில நிமிடங்களே ஆனது..

இக்குயிலின் இனிய வரவால் என் இரவு
துயிலின் உறவும் துண்டித்துப் போனது.
தாமரை மலரின் மனங்கவர் வாசத்தில்
தமிழ்மண சுவாசமும் தடைப்பட்டு போனது.

பூந்தளிரின் வரவால் தமிழினின்று பிரிந்தாலும்,
பூவின் வாசத்தில் மதி மயங்கி கிடந்தாலும்,
மனமெனும் பறவை புதிய உறவின் வரவை
மகிழ்ந்து பறைச்சாற்ற கட்டளையும் பிறப்பித்தது.

தாமரை மலருக்கு தங்களின் அன்பான ஆசிகளை
தப்பாது வந்து மனம் நிறைந்து வாழ்த்திசைத்தால்,
இசைக்கும் இசையினில் மயங்கும் அந்த இளங்குயிலும்   
இனிதான வாழ்வை வளமாக வாழுமெனவும் நம்புகிறேன்.

 மனம் நிறைந்த நன்றிகளுடன் கமலா ஹரிஹரன்.



என் மகளுக்கு அழகான பெண் மகவு பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்த வலைத்தள உறவுகளை அன்போடு அழைக்கிறேன். அதன் காரணமாக இத்துனை நாள் வலைப்பக்கம் வாராது இருந்தமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அனைத்து சகோதர, சகோதரிகளின் பதிவுகளை படித்து வருகிறேன். இனி கிடைக்கும் நேரத்தில், அனைவரின் பதிவுகளுக்கும் கருத்திட முயலுகிறேன். என்னை மறவாதிருக்கும் அன்புள்ள நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.




நட்போடு வாழ்த்திசைக்க வந்தவருக்கும்வருபவர்க்கும் என் பணிவான மிகப் பணிவான நன்றிகள்.