Showing posts with label சிறு கதை. Show all posts
Showing posts with label சிறு கதை. Show all posts

Tuesday, May 19, 2020

ஒரு கதை பிறந்த கதை.


சில கதைகள் எப்போதோ படித்தாலும் மனதை விட்டு அகலாமல் இருக்கும். ஆனால் யார் எழுதியது, எப்போது, எங்கே என்பது கூட சுத்தமாக மறந்து விடும்.

இந்த தோசை இருக்கிறதே. அதற்கு யார் ஆசையுடன் அந்த ஆசையையும் சேர்த்து பெயராக வைத்தார்களோ  தெரியவில்லை..?  "ஆசை வெட்கமறியாது" என்பது போல், "தோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட  வயிறு." என்றொரு பழமொழி உண்டு. எவ்வளவு ருசித்து தின்றாலும்  "இன்னும் ஒன்னே ஒன்னு சூடாக போட்டுக்கோ..."என்ற குரலுக்கு மறுபேச்சின்றி இணங்கி விடும். அதுதான் ஆசையின் பெயருடன் சற்று இணைந்தே இருக்கும் இந்த" தோசை" யின் சிறப்பு...

தோசைகள்  அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைய வகைகளில் உருப்பெறும்.  ஆனால்  வார்க்கும் வகைகளில் ஒருவரையொருவர் குற்றம் சொல்வது மட்டும் தவறாது இடம்பெறும்.

சிலருக்கு குண்டாக  தோசை வார்த்தால் பிடிக்காது. சிலருக்கு ஒல்லியாக இருந்தால், என்ன இப்படி காற்றில் பறக்கிற மாதிரி தோசை வார்த்திருக்கிறாய்.. எத்தனை தின்றாலும், வயிறே நிறைய மாட்டேன் என்கிறதே...! என்பார்கள்.

சிலருக்கு பட்சணங்கள் மாதிரி மொறு, மொறு என பல்லில் கடித்து சாப்பிடுகிற மாதிரி இருக்கனும். சிலருக்கு பஞ்சு மாதிரி மிருதுவாய், அதே சமயம் மிழுங்கும் போது தொண்டையை அடைக்காத மாதிரி வேண்டும்.

தோசைக்கே இப்படியென்றால், அதனுடன் கலந்து கூடும் துணைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவர் விதவிதமாக சட்னிகள்தான் அதற்கு பொருத்தமெனவும், மற்றொருவர், இட்லி மிளகாய்ப்பொடிதான் தோசைகளுக்கும் சாலச்சிறந்தது எனவும், இன்னுமொருவர் நல்ல சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் இல்லாத தோசை ஒரு தோசையா? எனவும், பிறிதொருவர்  காய்கறி, மசாலா கலந்து செய்யும் குருமாதான் இதற்கு உடன்பாடு எனவும், மீதமிருப்பவர் அதென்ன.. ஒன்றை விட்டு ஒன்றைச்சொல்வது? இவை எல்லாம் இருந்தால்தான் தோசைக்கே ஒரு அழகு. இல்லையெனில், எவ்வளவுதான் ருசியான தோசையாக அமைந்தாலும், அது வெறும் "சை"(த்) தான் எனவும் அவரவர்கள் வாதிட்டு அவர்களே வெல்வார்கள். இது அவரவர் தோ (தே) சா சுதந்திரம். ஹா.ஹா.

ஏதோ மனதில் அகலாத கதை என்று சொல்லிவிட்டு இவள் தன் இஷ்டத்திற்கு காது குத்தி கொண்(ன்று)டு இருக்கிறாளே என நீங்கள் நினைக்கும் முன் அகலாமல் அமர்ந்திருக்கும் கதைக்கு வருகிறேன்.

கதை..

ஒருவர் தன் சொந்த வேலை விஷயமாக ஒரு ஊருக்கு தன் நண்பரோடு பயணிக்கிறார். அந்த நண்பருக்கும் அவருடன் சென்று வந்தால் அவரின் வேலைக்கும்  சில ஆதாயம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. . அந்த ஊரில் அவர் சந்திக்க  நினைக்கும் வீட்டை அடைந்ததும் அவருக்கும். நண்பருக்கும் ஏகப்பட்ட மரியாதை. அந்த வீட்டிலிருப்பவர்கள் ஒரளவு வயதான கணவனும், மனைவியும் மட்டுந்தான்..!

 வேலைக்காக சென்றவரும், அவ்வீட்டிலிருக்கும் பெரியவரும் ஏதோ ஒரு வகையில் உறவுதான். எனவே குசலபரிபாலனம் முடிந்த பின் இருவருக்கும் சாப்பாடு தயார் செய்ய தன் மனைவியிடம் சொல்லவும்,  அந்த மனைவி நல்ல முறையில் உணவு தயாரித்து இருவருக்கும் அன்போடு பரிமாறி அவர்கள் இருவரின் நன்றியையும் பெறுகிறார்.

இரவு வீட்டின் கூடத்தில் பிராயாணித்து  வந்த  அலுப்பு நீங்க  ஆனந்தமாக படுத்து உறங்கி காலை எழுந்தவுடன் அருமையான காஃபியை குடித்த பின் அவர்கள் இருவரும் அவர்கள் வந்த வேலையை சுமூகமாக அந்த வீட்டு  பெரியவர்  முடித்து தருவதாக சொன்ன செய்திக்கு மகிழ்வுடன் நன்றி தெரிவித்த பின் தங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும், "இருங்கள்.. என்ன அவசரம்? காலை டிபனை முடித்து விட்டு கிளம்பலாம்..! "என அந்த அன்பான கணவருடன் சேர்ந்து அவர் மனைவியும் மிகவும் வறுப்புறுத்தியதில் அவர்களும்  மனம் மாறி சம்மதித்து விடவே, இவர்களுக்கு குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து கொடுத்தார் அந்த வீட்டுப் பெரியவர். 

இவர்கள் குளித்து வந்தவுடன் தோசையின் மணம் நாசிக்குள் சென்று  வயிற்றில் பசியை உண்டாக்கியதையும் வாழை இலையில்.  தோசைகளுடன் தேங்காய் சட்னி பரிமாறி, வாசனையான எண்ணெயுடன் குழைத்த மிளகாய் பொடியை இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என அந்த பெரியவரின் மனைவி, ஒரு தாயின் பரிவுடன் கேட்டு, கேட்டு உபசரித்ததையும், அவர் வார்த்தெடுத்த தோசைகளின் அழகை இருவரும் ரசித்ததையும் இருவரும் அந்த கதையில் மனதுக்குள் விவரிக்கும் அழகே தனி... அதைப் படிக்கும் அந்த நேரத்தில் நமக்கே ஆழ்ந்த பசி வந்து கண்களை கட்டும். அதுவும் தோசைகளை அடுக்கி வைத்து பரிமாறிய அந்தம்மா மாதிரி நமக்கும் யாராவது சுவை மிகுந்த தோசைகளை தட்டில் போட்டு தர மாட்டார்களா என மனம் ஏங்கும். 

இருவரும் முந்தைய நாளின் கூச்சமின்றி வேண்டிய அளவு தோசைகளை சாப்பிட்ட பின் மீண்டும் ஆவி பறக்கும் காஃபி குடித்து.ஆசுவாச படுத்திக் கொண்டு  இருவருக்கும் நன்றி சொல்லி கிளம்பும் போது, "மதியம் இவர்கள் ஊர் சென்று சேர நாழியாகி விடும். தோசைகள் நிறைய வார்த்திருந்தால் ஆளுக்கு நாலு தோசை இலையில் கட்டி பார்சல் செய்து கொடேன். வழியில்  சாப்பிட்டு பசியாறட்டும்.." ! என்ற கணவரின் பேச்சுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த அந்த மனைவி சமையலறை உள்ளே சென்று வாழையிலையில், தோசைகளை  வைத்து கட்டித் தந்த அந்த பார்சலை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... 

அவர்களே " இந்த மாதிரி ருசியான தோசைகளை இனி வாழ்நாளில் எப்போது சாப்பிட போகிறோம்..? பேசாமல் ஊருக்கு கிளம்பும் போதும் நாலு தோசைகளை கேட்டு வாங்கியே செல்லலாமா? "என்ற மனரீதியில் யோசித்ததையும், ஊருக்கு திரும்பும் போது பிரயாணத்தில் இருவரின் மனநிலையும், யோசனையும் ஒன்றாக இருந்ததையும் அவர்கள் பேசிக் கொள்வதை கதாசிரியர் அவ்வளவு அழகாக விமர்சரித்திருப்பார். 

இந்தக் கதையில் நான்  சம்பவங்களை கோர்வையாக தந்துள்ளேனா இல்லை சற்று என் கற்பனைகளையும் கலந்து விட்டேனா என தெரியவில்லை. கதையில் கதை எழுதியவர்,  "பெரியவர் இவர்கள் வருகையை அவ்வளவாக விரும்பாத மாதிரியும், அவர் மனைவியை நல்ல மனதுடையவராகவும்  காட்டியிருப்பாரா" என்பது இப்போது விமர்சித்த பின்  குழப்பமாக உள்ளது. எப்படியிருந்தாலும்  படிக்கும் போது அதுவும் ஒரு வகையான சுவாரஷயமே ..!

(என்னடா இது..! மனதில் அகலாத என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாது இவ்வளவு குழப்பங்களா? என நீங்கள் குழம்பலாம். எப்போதுமே ஒரு விஷயம் மனதை விட்டு அகலாமல் இருப்பதால்தான் ஒரு குழப்பமே உருவாகிறது.  ஹா. ஹா. ஹா.)

கதை எழுதியவர் வந்து படித்து அவர் எழுதிய  கதையைக் கூறி, இதில் சிலது மாறியுள்ளது.. நான் எழுதியதில் இப்படி இருக்கும்... என்று சொன்னால்தான் உண்டு. ஆனால் அதுவும் நடக்க வாய்ப்பில்லையோ எனவும் மனம் நினைக்கிறது.

நன்றாக நினைவில் நிற்கும் கதையிது என சொல்லி விட்டு மாற்றி விட்டேனோ என ஏன் பேதலிக்கிறார் என நீங்கள் எண்ணலாம். "கரு தோசையின் சிறப்பை வர்ணிப்பதும், அதை ஊருக்கு கிளம்பும் கடைசிவரை நின்று வாங்கிச் செல்லும் நிகழ்வுகள்தான்." இடையில் சில மாறுதல்களை நான் விமர்சித்தது கொண்டு வந்திருக்குமோ எனத் தெரியவில்லை. இந்த கதை என்றோ படித்தது. இதை வேறு யாரேனும் படித்து ரசித்திருக்கலாம். ரசித்தவர்கள் இந்தக் கதையின் தலைப்பையும், எழுதியவர் யாரென்ற பெயரையும் தெரிவித்தால் நன்றியுடையவளாக இருப்பேன்.

இன்று என் பதிவுக்கு உபகாரமாக அன்று  இந்தக் கதையை அருமையாக எழுதியவருக்கும், நான் என் பதிவில் எழுதியதை சலிப்பின்றி படித்த  என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏. 🙏.

பி. கு. இன்னமும் ஒரு கதை அகலாமல் மனதில் உள்ளது. வேறு வழியில்லை. பதிவுலக சட்டப்படி நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும். ஹா. ஹா. ஹா.  நன்றி.. 🙏. 😀😀

Friday, October 25, 2019

பேய் வகைகள்....

நான்..

" ஆவி என்றால் பேய்தானேப்பா?" என்றான் என் மகன் விவேக்.

ஆமாம்..! அதற்கென்ன இப்போது? அர்த்த ராத்திரியில் இப்படி பிதற்றாமல் படுத்து தூங்கு..! என்றேன் சிறிது கண்டிப்பாக.

இல்லேப்பா.. ! சூடான காஃபி, டீ, ஏன் சமைக்கும் பொருட்களிலிருந்து பிரிந்து வெளிப்படும் புகையை "ஆவி பறக்குது" என்கிறோம். அது போல் உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அதையும் "ஆவி" பிரிந்து விட்டது என்கிறோம். அதனால்தான் அப்படி பிரிந்த "ஆவிகள்" புகை மாதிரி வடிவில் வந்து உலாத்துகிறதோ?  அதைத்தான் பேய்கள் என நாம் பெயர் வைத்து அழைக்கிறோம்.. இல்லையா? தன் கண்டு பிடிப்பில் அப்பா அசந்து சிக்கி விடுவார் என்ற நம்பிக்கையுடன் அவன் பேசினான்.

எனக்கும் லேசாக கண்ணெதிரே புகைகள் வருவது மாதிரி ஒரு நிமிடம் தோன்றியது.

"வேண்டாம் இந்த ஆராய்ச்சி..!  எப்போதும் இதைப்பற்றிய பேச்சா? இப்போது இரவு நடுநிசியை எட்டிப் பார்க்கிறது. பேசாமல் தூங்கு...! என்னை தொந்தரவு செய்யாதே..! என்றபடி திரும்பி அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்துக் கொண்டேன்.

இவன் இப்படித்தான்.. !  சிறு வயதில் ஏதோவொரு பயங்கரமான பேய் கதையை நண்பனின் உறவு யாரோ அருமையாக சொன்னார்கள் என என்னிடம் அதைவிட பயங்கரமாக வந்து சொன்னதோடு நிறுத்தாமல். மேலும், மேலும் என்னையும் அந்த மாதிரி கதைகளை சொல்லச் சொல்லி வறுப்புறுத்தினான்.

நானும் குழந்தை ஆசைப்படுகிறானே என்று எனக்குத் தெரிந்த பேய்களை யெல்லாம் உதவிக்கு அருகில் அமர்த்திக் கொண்டு, கற்பனை சாற்றையும் கதையெனும் கலவையோடு கலந்து வைத்துக் கொண்டு ஓரிரு தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

ஆனால், என் கதையே சிலசமயம் நான் தனியே இருக்கும் போது வந்து பயமுறுத்தி, எக்காளமிட்டு, முகத்தோடு முகம் வைத்து உரசிச் செல்வது போல் பிரமை கொடுத்து தோள் தட்டி ஆரவாரப்படுத்தி, தனியே வீட்டிலிருக்கவும் விடாமல், வீட்டிலிருந்து வெளிப்பட்டு வெளியுலக ஜனசந்தடியில் கலந்த பின் வெறுப்புடன் அடங்கிப் போகும். அது வேறு கதை...!

வளர வளர அவனுடன் பேயும் வளர்ந்தது. (அதாவது பேயைப்பற்றிய சிந்தனைகள்) அதற்கு நம்மைப்போல் கால் உண்டா? கால் இருந்தால், அது நடந்து வராமல் ஏன் பறந்து வருகிறது? இல்லை.. அது பறக்கும் போது நமக்கு இல்லாத அந்த சிறகை விரிக்குமா ?  பேய் வருதற்கு முன்பு ஏன் காற்று பயங்கரமாக அடிக்கிறது? காற்று பேயின் தூதனா? இல்லை விசுவாசியா? இல்லை, காற்றுக்கும் பேயைக் கண்டால் பயமா? அதுதான் அதற்கும் முன்னாடியாகவே ஓடி வந்து அச்சுறுத்தி ஒளிகிறதா?

 ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு பேய்கள் வரும் முன் அந்த வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகள், திரைச்சீலைகள் என அனைத்தும் ஏன் படபடக்கிறது? அவற்றுக்கெல்லாம் பேயின் அறிகுறி கண்ணுக்கு புலப்படுமா ? அப்புறம் ஏன் அதையெல்லாம் உயிரற்ற பொருட்கள் எனச் சொல்கிறார்கள்?

இதெல்லாம் அவனிடமிருந்து என்னை தினசரி  துளைத்த கேள்விக் கணைகள்.  பொதுவாக பிறப்பிலேயே" புதன்"  உச்சத்திலிருந்தால் அறிவாளி என்ற ஜோதிடத்தின் கூற்றையும் என்மகன் மெய்படுத்தினான். படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்தி பள்ளியில் முதன்மையானவனாக விளங்கியதால், அவனை கண்டிக்காது,  அவனின்  "புதனருளால்" வந்த "கேள்விகளுக்கும்" தக்கபடி எனக்குத் தெரிந்த பதில்களைக் கூறி, சிலசமயம் தெரியாத கேள்விக்கு கோபத்தை அடக்கி வாசித்து அவனின் ஆராய்ச்சித் துறையை வளர்த்து வருவதில் நானும் ஒரு பங்காகியும் அங்கம் வகித்தேன்.

இப்போது பள்ளி முடிக்கும் தறுவாயிலும், தொணதொணவென்ற அவனின் கேள்விகள் பழக்கமாக விட்டதெனினும், "இவன் இன்னமும் நன்றாக வளர்ந்து நல்லதொரு நிலைமையை எட்டிப்பார்த்து பிடிக்க வேண்டுமேயென்ற உண்மையான தந்தை பாசம்... வாட்டிப்பார்க்க சற்று கடுமை காட்டி  அவனிடமிருந்து வரும் கேள்விகளுக்கு இப்படி முகம் திருப்பிப் போகச் செய்தன." என் புறக்கணிப்புகள்.

கொஞ்சம் போல மறுபடியும் அவனை திரும்பி பார்த்ததில், அவன் விழித்துக் கொண்டு ஏதோ சிந்தித்து கொண்டிருப்பது புரிந்தது. "விவேக்..! இப்போ தூங்கப் போறியா இல்லையா?  என  மறுபடியும் சிறிது கண்டிப்பு காட்டியதும் அவன் மறுபக்கம் திரும்பி படுத்து தூங்க ஆரம்பித்தான். அவனுடைய கேள்விகளின் தாக்கத்தில், கதவையும் ஜன்னல்களையும் பார்த்தபடி இயல்புடன் வந்த தூக்கமும் வராமல், பேய்களின் வரவை எதிர்பார்த்தபடி  கழித்த எத்தனையோ நாட்களில்,  அன்றும் ஒரு நாளாக  ஐக்கியமாகி சேர்ந்து கொள்ள அன்றைய தூக்கத்தையும் தொலைத்தேன்.

விவேக்...

அம்மா இல்லாத என்னை அப்பா நல்லபடி அம்மாவுக்கும் அம்மாவாக இருந்து பார்த்துக் கொள்கிறார் என்பதை நானும் அறிவேன். நானும் ஏதேதோ அசட்டுத்தனமான கேள்விகள் கேட்டாலும் எல்லாவற்றும் பொறுமையாக பதில் சொன்னபடி என்னையும். என் தேவைகளையும் கவனித்தபடி, தானும் அலுவலகம் சென்று தன்னையும் பார்த்துக் கொண்டு அப்பா இஸ் கிரேட்.. என் படிப்பு பாதித்து விடக்கூடாதே என்பதுதான் அப்பாவின் மொத்தக் கவலை. ஆனால் எனக்கு படிப்பின் மீது அக்கறை எதுவும் குறைந்து விடவில்லை.

மதுரை அருகே ஒரு கிராமத்தில் என் சிறு வயது பிராயம் நடந்து கொண்டிருந்த போது அம்மாவுக்கு உடம்பு முடியாமல், இருந்தது. . ஏதேதோ சிகிச்சைக்கு பிறகு ஒருநாள் அம்மா என்னையும்  அப்பாவையும் விட்டுச் சென்று விட்டாள். அம்மாவின் உடலை அனைவரும் தூக்கிச் செல்வதை பார்த்து நான் "அம்மாவை எங்கேப்பா கூட்டிப் போகிறார்கள்? இன்னொரு டாக்டர் வீட்டுக்கா?" என அப்பாவிடம் கேட்ட போது, "அம்மா குணமாகி மறுபடியும்  ஒருநாள் வருவாடா..! அது வரைக்கும் உன்னையும், வீட்டையும் என்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு போயிருக்கா.." அவ வர்ற வரைக்கும், எனக்கு நீதான் அம்மா... உனக்கு நான்... " என்று வார்த்தைகள் அடைக்கும் குரலில் கூறிவிட்டு அவர் வாய் விட்டு தேம்பி அழுதது இன்று வரை என மனதில் நிழல் படமாக பதிந்த ஒன்று.

வயது ஏற ஏற அம்மா வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டாள் என்ற மட்டும்  புரிந்தது. பக்கத்து வீட்டிலிருக்கும் பாட்டி வேறு " உன் அம்மா எதையோ பார்த்து பயந்து விட்டாளாடா...! அதனால்தான் உடம்பு தேறாமல் அதுகூடவே அவளும் சென்று விட்டாள்." என்னும் போது "அது யார் பாட்டி? சொல்லு... சொல்லு..! " என்ற என் தொணதொணத்த  கேள்விக்கு" வேற யார்? பேய்தானாடா" என்று சொல்லிய பிறகே இந்த என் தேடல் தொடங்கியது.

மேலும் என் கேள்விகளுக்கு பயந்தோ என்னவோ அந்தப் பாட்டியும் சொல்லிக் கொள்ளாமல்,  "அம்மா மாதிரியே"  ஒரு நாள் சென்று விட்டாள். நானும் என் பள்ளி மாணவர்களுடன்  "அம்மாவை அழைத்துச் சென்றப் பேயைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை கண்ட உறவுகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டதால்,  அப்பாவும் நானும்  என் மனமாற்றத்திற்காக இங்கிருந்து போய் விடலாம்" என்ற அவர்களின் யோசனைகளின்  பேரில், அந்த இடத்தை விட்டு அப்பாவுக்கு வேலை மாற்றல் கேட்டுக் கொண்டு இந்த ஊருக்கு வந்து விட்டோம்.

இங்கு வந்த பின்னும் என் நண்பன் வீட்டில் கேட்ட பேய் கதைகள் அடி மனதில் ஆழமாக பதிந்தவை. எப்படியும் "நான் பயமின்றி அந்தப் பேய்களைப் பற்றி தெரிந்து கொண்டு என் அம்மாவை அதனிடமிருந்து எப்பாடுபட்டாவது, மீட்டு அழைத்து வர வேண்டுமென்ற எண்ணம் என் வாழ்க்கையின் லட்சியமாக  மனதில் பிடிவாதமாக அமர்ந்து விட்டது."

நாட்கள் செல்ல என் அம்மா  "மரணம்" என்ற இடத்திற்கு சென்று விட்டதையும், மரணித்தவர்கள் மீண்டும் வர இயலாது என்பதனையும் மெள்ள மெள்ள உணர்ந்து கொண்டேன். ஆனாலும் அம்மாவை மீட்டு வர வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மாறவேயில்லை. அதன் விளைவே அவ்வப்போது பேயின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சி.

அப்பாவும், என் படிப்பு வாழ்வின் நலன் குறித்து சற்றே கண்டிக்க ஆரம்பித்து விட்டார். "சின்ன குழந்தையல்ல.. நீ..!  என் எதிர் காலத்தின் வாரிசாக கடவுளால் நியமிக்கப்பட்டவன். உனக்கென  ஒரு வாழ்வு, அதனைக்குறித்த தேடல் என வாழ்க்கை சக்கரத்தை விரிவாக்கி கொள்ள வேண்டுமேயன்றி, கடந்ததை, கடந்து கொண்டிருப்பதை "மனப்பேயின்" காலடியில் சமர்ப்பித்து, அப்பேயின் வலைக்குள் சிக்கி விடாதே... !" என்ற அறிவுரைகளை வழங்க ஆரம்பித்து விட்டார்.

என்றாலும். அம்மாவை நினைவு கூறும் சஞ்சலங்கள் பேய் ஆராய்ச்சியின் வடிவில் வடிகாலாக சிறு சிறு சமயங்களில் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கிறது.. அவ்வேளையில் அப்பாவிடம் இந்த மாதிரியான பேய்களின் சாராம்சத்தை பற்றி இரவு, பகல் பாராது பேச தூண்டுகிறது. அப்பா சொல்படி மாற்றங்கள் நடந்தால் நல்லதுதான்..!

நான்...

நான் நினைத்தபடி விவேக் பள்ளி இறுதியாண்டில் மாநிலத்திலேயே முதலானவனாக தேர்ச்சிப் பெற்று  கல்லூரி படிப்பை நல்லபடியாக முடித்து  வேலைக்கு அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடமிருந்த பழைய ஆராய்ச்சி குணமெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கும் சமயத்திலேயே அவனிடமிருந்து விலகியே விட்டது. அதற்கு காரணமாக இருந்த என் நண்பனுக்குதான், நான் நன்றி சொல்ல வேண்டும்.

"உன்னிடம் தனிமையில் பேசும் போதெல்லாம், பேய் பிசாசுகள் பற்றிப் பேசும் உன் மகன் மனதில் ஏதோ ஆழமான காயம் உள்ளது. அதனுடைய தாக்கந்தான் அவன் நண்பர்கள், படிப்பு, விளையாட்டு, உன்னுடனான நேரங்களை சந்தோஷமாக செலவில் என்று போக, மிச்ச நேரத்தை உன்னுடன் அதைப்பற்றி பேசி உன் மூலமாக சமாதானமடைந்து கொள்கிறான்.
ஒரு அதிர்ச்சி வைத்தியமாக இப்படிச் செய்து பாரேன். .! " என்று அவன் சொன்ன வைத்தியத்தை செய்துப் பார்த்த பின் விவேக்கிடம் சற்று மாறுதல் தெரிய ஆரம்பித்தது.

முன்பு போல் கேள்விகளை, சிந்தனைகளை குறைத்திருப்பது தோன்றியது. நல்ல மதிப் பெண்கள் எடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு, மனம் ஒத்த கருத்துக்களுடன் முன்னேறி, இதோ இன்று நல்ல இளைஞனாக வளர்ந்திருக்கிறான். இவனுக்கு இப்படியே ஒரு திருமணத்தை முடித்து விட்டால் தந்தையாக, தாயுமாக இருந்து வளர்த்த என் கடமை செவ்வனே முடிந்து விடும்....

என்னுடைய மனதின் பூரிப்பில் கண்கள் நிறைந்தது. என் பர்சில் வைத்திருந்த மனைவியின் படத்தைப் பார்த்து, "என் கடமையை செய்யும் நல்ல நேரத்துக்கு நீயும், இதுவரை எனக்கு துணையாக  இருந்தது போன்று, இனியும் துணையாக இருந்து அவனை ஆசிர்வதித்து  அவன் வாழ்க்கையை சிறக்க வை....!" எனக் கூறிய போது கண்கள் இன்னமும் நிறைந்தன.

இவன் நினைப்பில் அன்னையின் பிரிவு தெரிய கூடாதென்றுதான் அவள் நினைவுகளை உண்டாக்கும் அவளது புகைப்படத்தைக் கூட மறைத்து வைத்து வாழப் பழகியிருந்தேன். அவனும் இதுநாள் வரை அம்மாவைப்பற்றி எதுவும் கேட்க வில்லை. அவள் இறந்து போன போது அவளைப் பற்றி கேட்டதுதான்...! அதன் பின் இந்த  விளையாட்டாக பேய் கதைகள் கேட்டு, கேட்டு அவன் சிந்தனையின் போக்கையே வேறு பாதையில் திருப்பி விட்டது. இனி அனைத்தும் நல்லவிதமாகத்தான் நடக்கும். ஊர் உறவுகளுடன் பேசி உறவிலேயே பெண் பார்க்க ஆரம்பிக்க வேண்டியதுதான்...  !
.
விவேக்...

நான் இப்போது  நல்ல  ஸ்திரமான வேலையிருக்கிறேன் என அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. என்னைப்பற்றி நண்பர்களிடமும்  உறவுகளுடமும் சிறப்பாகத்தான் எப்போதும் பேசுகிறார். இப்படிப்பட்ட அப்பாவை, எனக்காக வாழும் அப்பாவை அன்றைய தினம் இழக்கப் பார்த்தேனே..! இனி காணும் கனவுகளில் கூட இதை மாதிரி ஒரு அசட்டுத்தனமான கனவு வராமல் இருக்க வேண்டும்.

பள்ளி இறுதியாண்டு நடந்து கொண்டிருக்கையில்  இப்படித்தான் ஒரு நாள் தேர்வுக்குத் தேவையானதை படித்து முடித்து படுதுறங்கப் போகும் நள்ளிரவு அப்பாவிடம்  இந்த பேய்கள் சம்பாஷணை நடத்தி விட்டு கண்ணயர்ந்த கொஞ்ச நேரத்தில், என் முன் வந்து அன்பாக ஏதேதோ பேசியபடியிருத்த  அப்பாவே தீடிரென ஒரு கொடுர பேயாக மாறி காட்சியளித்தார்.

அவர் முகம் படு விகாரமானதை நான் புரிந்து கொள்வதற்குள், "எப்ப பார்த்தாலும் பேய் பற்றியே பேசுகிறாயே..! பேய் எப்படியிருக்கும் என்று கேட்டாயே..! பார்த்துக் கொள். நான் ஒரு  பேயாக மாறிவிடுகிறேன். உனக்கு பேயின் கை வேண்டுமா? அல்லது காலா? இல்லை கண்களா? என்றவர் ஒவ்வொரு அங்கமாக அவர் உடலிலிருந்து பிய்த்து எடுத்துத் தந்தவர், இந்தா...! இதையும் வைத்துக் கொள். என கண்கள் இருந்த இடத்தில் ஒட்டையாக இருந்த தலையை திருக்கி ரத்தமும் சதையுமாக என்னிடம் தந்ததும், வாய் விட்டு அலறி விட்டேன். "அப்பா... அப்பா.. நீங்கள் அப்பாவாக மட்டும் எனக்கு எப்பவுமே இருந்தால் போதும். நீங்களாவது என்னுடன் எப்போதும் இருங்கள். அம்மாதான் பேயாக மாறி என்னை விட்டு போய் விட்டாள் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது கொண்டே இருக்கிறது. இப்படி நான் தினமும் பேயைப் பற்றி பேசிப்பேசி நீங்களும் பேயாக மாறி விட்டீர்களா? இனி உங்களிடம் இதைப்பற்றி பேசவே மாட்டேன்." என்று நான் வாய் விட்டு கத்தியதெல்லாம் தொண்டைக்குள் சிக்கி தடுமாறியபடி நெஞ்சையடைக்க, கண் விழித்ததும், அருகில் அப்பாவை காணாது, எதிரே மறுபடியும் ஒரு பேயுருவம்  கோரமாக கைகளை விரித்தபடி அருகில் வரவும், மீண்டும் அலறி, நான் படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்.

மறு நாள் அப்பா அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அழைத்துப் போய் பூசாரியிடம் முகத்தில் நீர் தெளிக்க வைத்து, வீபூதி குங்குமமிட்டு "உங்கள் பையன்  எங்கோ பயந்திருக்கிறார். மூன்று தினங்கள் அம்மன் அபிஷேக நீர் தெளித்தால் சரியாகி விடும்." என்று அவர் பயமொன்றுமில்லை எனச் சொன்னதை நினைத்து  சந்தோஷமடைந்து கொண்டார்.

நானும் என் கனவை, கனவுக்கு பின் கண் விழித்ததும் பார்த்ததை எதுவுமே அப்பாவிடம் சொல்லவில்லை. அவரும் "எங்கு எப்படி பயந்தாய்..?  என்ற விபரம் கேட்கவில்லை. என்னைப்பார்த்ததும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென அவருக்கு  தோன்றியுள்ளது." ஏன்?"என நானும் கேட்கவில்லை. எனக்கும் அநாவசியமாக அவரை பயமுறுத்த விருப்பமில்லை. இப்படியாக அந்த சம்பவம் நடந்து முடிந்த பின் நான் படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த, இதோ...! இன்று முழு மனிதனாக வளர்ந்து நிற்கிறேன். அப்பாவும் என் திருமணதிற்கு சம்மதம் கேட்க. நானும் சரியென்றதில், பெண் பார்க்கும் படலங்கள் ஆரம்பித்துள்ளன.

 நான்..

நல்லபடியாக ஜாம்ஜாமென்று விவேக்கிற்கு திருமணம் செய்து விட்டேன்.  உறவிலேயே, அவனுக்கு ஒன்று விட்ட அத்தைப் பெண்.  இரு மனம் கூடி கலந்து பேசி திருமணத்திற்கு மனம்  ஒத்து என் மருகளாய் வந்தாள் என் தங்கை பெற்ற அன்பு மகளாம் காவேரி. .

அன்பும், அனுசரனையும், அவள் இரு கண்களாக இருக்கக்கண்டு என் மனம் உவகையடைந்தது. கிராமத்தில் படித்து வளர்ந்து வந்ததால் அந்த பண்பாடு விவேக்கை  இன்னமும் வளர வைக்கும் என்ற நம்பிக்கை மனதுள் வேரூன்றியது.

இருவரும்  ஊர் உறவு விருந்துக்கு என்று சென்று திரும்பி வந்து தேனிலவும் சென்று வந்து விட்டு விவேக் பழையபடி அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான். நாட்கள் நல்லபடியாக மருமகளின் அன்பான கட்டுக்கோப்பில் நகர்ந்து கொண்டிருந்தன.

தனிமை சிறையும்,  தனிச்சூழலும், மனைவி பிரிந்ததிலிருந்து விவேக்கை அண்டி அரவணைத்து வாழ்ந்த காலங்களை நினைவு படுத்தினாலும், "இனி இதுதானே அவனுக்கும், நமக்குமான வாழ்க்கைச் சுழற்சி. " என்பதையும் அடிக்கடி  ஞாபகப்படுத்தி ஒரு விதமான வருத்தத்தை மனதில் தேக்க வைத்துச் சென்றதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு விடுமுறை நாளின் மகிழ்வான காலைப் பொழுது. "விவேக் எங்கேமமா?" எழுந்து பல் துலக்கி மருமகள் சூடாக கொண்டு வந்து தந்த காஃபியை பருகியபடி கேட்டேன்." ஏதோ நண்பரைப் பார்க்க வெளியில் சென்று விட்டு வரும் நேரந்தான் மாமா..! என்றாள்." ஏன் ஏதாச்சும் பேசனுமா?"என்றவளிடம்," இல்லேம்மா உன் கிட்டேத்தான் பேசனும்.  விவேக் எப்படிம்மா? உன்கிட்டே நல்லபடியாக அன்பாக பேசி பழகுறானா? இதை நான் கேட்க கூடாது. அந்த மகராசி இருந்திருந்தா அவ எல்லாத்தையும் பாத்துப்பா..! ஆனா அவ இடத்திலேயும், நானே இருந்து அவனை வளர்த்ததாலே நானே கூச்சத்தை விட்டு கேட்கிறேன்...! என்றேன் தயக்கமாக.

"அதுக்கென்ன மாமா..! ஒரு குறையும் இல்லை எனக்கு.. ஆனா பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகனும்." அப்படீன்னு எங்கம்மா அடிக்கடிச் சொல்வாங்க.. ..! என்று அவள் சொன்ன பதில் என்னை திடுக்கிடச் செய்த ஒரு நொடியில்...

"ஆமாம்மாம்..! பேய் பிசாசை மறந்துடலாம்னு நினைக்கிற நேரத்திலே அதுவே மீண்டும் வந்து உன்னை மறக்க மாட்டேன்னு ஒட்டிக்கிட்டா நான் எந்த மரத்திலே ஏறுவதாம்" என்றபடி வெளியில் சென்றிருந்த விவேக் வரவும், மருமகளின் கண்களில் அப்பியிருந்த வெட்கம் கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அவள் அவசரமாக உள்ளே ஒடினாள்.

என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்ட திருப்தியில், நான் செய்தி தாளில் மூழ்கும் போது, அவளைத் தொடர்ந்து சென்ற  விவேக்கின் சிரிப்பொலி உள்ளேயிருந்து கேட்டது. கூடவே துணைக்கு மருமகளின் சிரிப்பொலியையும் உடனழைத்து கொண்டது. இனி கவலையில்லை..! விவேக்கிற்கு அவன் தாய் மீண்டும் கிடைத்து விட்டாள். நிறைந்த மனது செய்தித் தாள்களை புறந்தள்ள, செருப்பை மாட்டியபடி, "நான் கொஞ்சம் காலாற நடந்து வருகிறேன் விவேக்...!" என்றபடி வாசல் படியிறங்கினேன்.

"கொஞ்ச நாட்களாக நான் அமைதியாய் இருப்பதாகவும், எனக்கு நானே என்னுள்ளேயே  ஏதோ பேசிக் கொள்வதாகவும்" என் நண்பரிடம் என் மகன் புகார் தந்து, "இந்த மாதிரி அவரைப் பார்த்ததேயில்லை..! அவரை பழையபடி சந்தோஷமாக பார்க்க நான் என்ன செய்ய வேண்டுமென ஐடியா கேட்டதாக " என் நண்பர் சொல்லவும், "என் கையில் ஒரு பேரனோ, பேத்தியோ வளர வந்து விட்டால் எனக்கு ஏது அமைதி? என்று நீ சொல்ல வேண்டியதுதானே. !" என நான் சொல்லவும், "இதை உன்னிடம் கேட்டா நான் சொல்லுவேன். அவனுக்கான இந்த பதிலை அப்போதே தந்து விட்டேனே...! " என்றார் கடகடவென்ற சிரிப்புடன்.

அவர்  விடைபெற்று சென்றவுடன் மனது லேசாக கனத்தது." அவன் கேள்விக்கு மற்றொரு பதிலும்  இப்போது என்னுள் இருக்கிறது என்று கூற தயக்கமாக உள்ளது நண்பா...!  உன்னிடம் கூட கூற முடியவில்லை. என்னே தானே பேசத் தூண்டுகிறது..! பேசவும் வைக்கிறது.. அது வேறு ஒன்றுமில்லை..! அது தனிமைப் பேய்...!" என்றேன் சிறிது முணுமுணுப்பாக....!!!!

முடிந்தது....

நட்புறவுகள் அனைவருக்கும் என அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.