Showing posts with label மலை. Show all posts
Showing posts with label மலை. Show all posts

Saturday, October 25, 2014

இமயமும் போற்றும்..!




கடவுள் தந்த வாழ்வு இதுவெனவே

கனிந்த மனமுடன் அதை ஏற்றாலும்,

காலமும் நேரமும் சேர்ந்தால்தான்

கடினச்செயலும் எளிதாகுமென்பதும்,



நன்மை தீமைகள் ஊழ்வினையால் இங்கு,

நடத்தி முடிப்பவனின் கட்டளையில்

நடந்து முடியும் என்பதெல்லாம்,

நாம் நன்றே அறிந்த ஒன்றாகிலும்,



காசும், பணமும் காடுடன் நாமும்,

கடுகளவேனும் கட்டிச்செல்லல்

கடினமான செயல் என்பதுவே,

கணிசமாய் மனம் உணர்ந்தாலும்,



வீடும் வாசலும் உறவும் சுகமும்,

வீதியோடன்றி, வீழ்ந்த உடலுடன்

விருப்பமாய் நம்மை தொடராதென்பதும்,

விரிவாக நமக்கு விளங்கினாலும்,



சூழ்ச்சி, வஞ்சனை, போட்டி, பொறாமை,

சூதும், வாதும், வெஞ்சினம், போன்றவை

ஏதும் அறியா நல்மனதுடனே நாம்

இயல்பாய் இருக்க ஏன் பழகவில்லை.?



உலகைப்படைத்தவன், தன் உளமாற

உயர்வாய் தந்த பிற அருங்குணங்களை

உள்ளத்தில் வேராய் ஊடுறுவ செய்து

உன்னதச்செடியாய் நாம் வளர்த்தால் என்ன?



௬டி வாழும் நற்குணங்கள் நம்மை

நாடி வரும் வேளையிலும், அதைத்

தேடிச்சென்று பகிராமல், பகையுடன்

ஓடி ஓடி ஏன்தான் ஒளிகின்றோம்..?



இத்தனை அறிந்தும் இத்தனை புரிந்தும்

இசைவாய் இத்தீயதுகளை விலக்கித் தள்ளி,

உயர்வாய் நாமும் விளங்கத்துவங்கினால்,
உயர்ந்த மலையும் நம்மை புகழ்ந்து போற்றும்..!



நன்றி Google..

Friday, August 29, 2014

மரியாதைக்குரிய மலையின் மரங்களே….!



 

வானத்தை நோக்கி வளர்ந்தாலும், சிறிதும்
வளையாது, வானத்தின் மேல் வைத்த
விழிகளையும், சற்றும் வாங்காது,
காற்றினையும், நீரினையும் மட்டுமே,
கடும் பசியிலும், உணவாக உட்கொண்டு,
மலையிதுவே எனவும் மலைத்து
மாளாமல், மண்ணின் மடியினிலே
உழலும் மற்ற உறவுதனையும்,
உதறித்தள்ளி, உள்ளமதில் கள்ளமில்லாது,
சுற்றியிருக்கும் சொந்தங்களையே
சுகமான சொர்க்கங்களாய், சுமந்து கொண்டு,     
தன்துணை நாடி வரும் பிற உயிர்களின்
தற்காப்பின் அவசியத்தை, உணரும் தன்மையுடனே,
தன்னலம் கருதாது, வளமையான எண்ணமுடனே,
தளர்வில்லா மனமுடனே, தாய்மையின் உள்ளத்துடனே,
அன்போடு தன் கிளைகளையும், இலைகளையும்
அமர்ந்து கொள்ள, அடைக்கலமாய் தந்தபடி,
குளிரையும், மழையினையும் ஒருபோதும்
குற்றமென்று நினைக்காமல், கொடும்
பனியையும், காற்றினையும், பெரும்பாலும்
பாதகமாய் நினையாமல், தினந்தோறும்
“மானிடர்களின் நலன்கள் சிறப்புற,
மாதவம் செய்யும் முனிவர்களின்
மனநிலையில், மட்டில்லா மகிழ்வோடு,
கால்கடுக்க நின்றபடி, கால நேரம் கணக்கின்றி
களைப்பாற நேரமின்றி கடுந்தவம் செய்யும்
மா”மரங்களே..! யாருக்காக இந்த தவம்..?
மரங்களாகிய உங்களுக்காவா..? இல்லை,,!
மற்றவர்களின் நலனுக்காகவா…? இருப்பினும் இந்த
மகத்தான மாண்பினுக்கு மனமதிலே மகிழ்வோடு,
மட்டில்லா மரியாதையுடன், மண்டியிட்டு வணங்குகிறேன்….!