Showing posts with label கிருஷ்ண பரமாத்மா. Show all posts
Showing posts with label கிருஷ்ண பரமாத்மா. Show all posts

Monday, December 28, 2020

மார்கழியும், நினைவுகளும்.

  வைகுண்ட ஏகாதசி. 

தெய்வீக மாதமாம் மார்கழியில் அமாவாசை கழிந்ததும் வரும் சுக்லபட்ச ஏகாதசியில் இந்த வைகுண்ட ஏகாதசி  வருகிறது. பொதுவாக  மாதாமாதம் ஏகாதசி  விரதம்  இருப்பது சிறப்புத்தான். அது  இருக்க முடியாதவர்கள் ஒரு வருடத்தில் சிறப்பாக வரும் இந்த நாளன்று இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால், வருடந்தோறும் மாதத்திற்கு இருமுறையென வரும் ஏகாதசிகள்தோறும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும்.  எங்கள் பாட்டி (அவர்கள் உயிரோடு இருந்தவரை..)  மாதந்தோறும் வரும் ஏகாதசிகளில் அப்போது (எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து) விரதம் இருப்பார். 

ஏகாதசி மரணம் துவாதசி தகனம் சிறப்பென்பார்கள். அது அவர்களுக்கு கிடைத்தது. வைகுண்ட ஏகாதசியை அடுத்த ஏகாதசி திதியன்று கூட அவ்வளவு இயலாமையிலும்,  அன்று குளித்தவுடன்தான் அவர்களின்் அப்போதைய ஆகாரமான சிறிதளவு பாலை அருந்துவேன் என்று பிடிவாதத்துடன் ஏகாதசியை நினைவு கூர்ந்து விரதம் காத்தார். அன்று மதியம் அவரின் இழப்பை நாங்கள் தாங்க முடியாமல் தாங்கினோம். வருடங்கள் உருண்டோடினாலும், இந்த மார்கழியில் அவர் நினைவுகள் என்றும் எங்களோடு. என்னை பாசமுடன் வளர்த்த அவரை நான் என்றுமே நினைவு கூர்ந்தபடி உள்ளேன். 

முன்பு அம்மா வீட்டிலிருந்த போது   (அப்போது எனக்கு ஏழெட்டு வயது இருக்கும். .) இந்த சிறப்பான ஏகாதசி நாளன்று மட்டும் மதிய உணவு சாதமாக  எடுத்துக் கொள்ளாமல். பச்சரிசி தோசை செய்து  ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் திறப்புக்கு  (அங்கெல்லாம் அப்போது  மாலைதான் சுவர்க்க வாசல் திறப்பு.  இப்போது எப்படியோ தெரியவில்லை. ஆனால்  இங்கு  பெங்களூரில், மற்றும் எல்லாவிடங்களிலும் காலையிலேயே சுவர்க்க வாசல் திறப்பு ஆகி விடுகிறது. ) அருகிலிருக்கும் சுற்றம்,  நட்பு சூழ சென்று வருவோம். அப்போதெல்லாம் சுவர்க்க வாசல் என்றால், ஒரே கூட்டந்தான்.  தள்ளு முள்ளுவுடன் அம்மா கையை இறுக பிடித்தபடி அடித்துப் பிடித்து மூச்சு முட்ட இறைவனுடன்  சுவர்க்க வாசலை அடைவதற்குள், பாதி உயிர் போய் விடும். மீதி உயிர் எப்படியோ வாசலை கடந்ததும் மூர்ச்சை அடையாமல், சிறிது மூச்சை விட்டவுடன், அந்த பாதி உயிரும் ஒருவாறு தட்டுத்தடுமாறி வந்து இந்த மீதியுடன் ஒட்டிக் கொள்ளும்.  

அதன் பின் வந்த காலங்களில் "விரதம் மட்டுந்தான்.... நம் வீட்டில் பெருமாளுக்கு செய்யும்  வழிபாடுகள் போதும்... கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் தரிசனம் வேண்டாம். பிறகு ஒருநாள், நிதானமாக கோவிலுக்குச் சென்று தரிசிக்கலாமென"எங்கள் அம்மா எடுத்த முடிவில்  நாங்கள் மட்டும் எப்போதும் செல்லும் சுற்றங்களுடன் அன்றைய தினம் செல்வதில்லை. எனக்கு மட்டும்  ஒரு மாதிரி வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், எங்கள் அம்மாவுக்கு கூட்டத்தின் இடிபாடு பிடிக்கவில்லையே. . .... என்ன செய்வது?" "சரி... மற்ற சுற்றங்களுடன் நீங்களாவது சென்றிருக்கலாமே? "என நீங்கள் நினை(கேட்)க்கலாம்......  எங்கள் அம்மா இல்லாமல் நான் எங்கள் வீட்டு வாசல் படியையே தாண்டிய(தாண்டவிட்ட) தில்லை. இதில் சுவர்க்க வாசலை எப்படி சந்தித்து அதன் படிகளை தாண்டுவது?  அப்போதெல்லாம் அந்த நாள் மறுபடியும் அடுத்த வருடம் வருவதை எதிர்பார்த்தபடி மனது ஆவலாக இருக்கும். (அதற்கு காரணம் அன்று எங்கள் பாட்டிக்கு நிகராக நாமும் விரதமிருக்கிறோம்... என்ற பெருமையும், மற்ற சுற்றங்களுடனான  வீட்டு குழந்தைகளுடன் (என் வயதை ஒத்த) வெளியே அன்றைய தினம் ஜாலியாக சேர்ந்து செல்கிறோம் என்ற ஆனந்தமும் மட்டுந்தான் முதலில் நிலைத்து இருந்திருக்கிறது என்பதை  பின் வரும் வயதுகளில் மனது பக்தியில் பக்குவப்பட்டு உணர்ந்திருக்கிறது.)  பின்பு வந்த காலங்கள் எனக்கே கூட்டங்களை சந்திக்க பிடிக்கவில்லை. வீட்டிலிருந்தபடியே இறைவனை தியானித்து, முடிந்த அளவிற்கு விரதங்கள் இருந்தே பழக்கமாகி விட்டது. 

இப்போது இங்கெல்லாம் (பெங்களூரில்) அனைவரும் வரிசையில் நின்று நிதானமாக சென்று வருவதை பார்த்திருக்கிறேன். நானும் காலை சுவர்க்க வாசலுக்கு செல்ல முடியாவிடினும், மாலையாவது சில தடவைகள் பெருமாளை குடும்பத்துடன்  சென்று  அவ்விதமே  வரிசையில் சென்று தரிசித்துமிருக்கிறேன். இந்த தடவை கொரோனா அவ்வாறும்  செய்ய முடியாமல் தடை செய்து விட்டது. 

இந்த முக்கோடி ஏகாதசி மூன்று நாட்கள் முறையாக இருக்க வேண்டிய விரதம். ஏகாதசிக்கு விரதம் இருப்பவர்கள் முதல் நாள் தசமியன்று காலை குளித்து முடித்து, விரதம் எடுப்பதாக உறுதி பூண்டு, அன்று பகல் பொழுதில் ஒரு வேளை உணவு உண்டு, இரவு வெறும் பால் பழம் எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் உறங்காமல், நாராயணனை நாவாற பாடித் துதித்து, மறுநாள் விடியற்காலை ஏகாதசியன்று குளித்து வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் முதலானவை முடித்து பெருமாள் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்தபடி அன்றைய தினம் முழுவதும் ஏதும் உணவருந்தாமல் இருக்க வேண்டும். கோவில்களில் தரும் துளசி தீர்த்தத்தை ஒருவேளை உணவென கருதி பருகலாம். பின்பு மாலையும் வீட்டிலும். கோவில்களுக்கும் வழிபாடுகள் முடிந்தவுடன், ஸ்ரீ மன் நாராயணனை துதித்தபடி, இரவு முழுவதும் விழித்திருந்து, இரவு நாலாவது ஜாமத்தில் குளித்து முடித்து, துவாதசி பாரணை உணவுகளை பாயசத்தோடு (இதில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் முக்கியமானது) சமைக்கவாரம்பித்து, சூரியன் உதித்து வரும் முன் அதிகாலையில் வழக்கப்படி பூஜைகள் முடிந்ததும், சமைத்ததை அன்போடு இறைவனுக்கு படைத்து விட்டு, பிறகு இரண்டு பேருக்கு வயிறார அன்னம் படைத்த பின். பசுவுக்கும் காக்கைக்கும் வேண்டியதை புசிக்க கொடுத்தும், (அகத்தி கீரை கட்டுக்களை வாங்கித் தருவார்கள்) தானும் அமர்ந்து (விரதமிருப்பவர்கள்) சாப்பிடுவார்கள். அன்று  மதியமும் படுக்காமல் விழித்திருந்து மாலை இறைவழிபாடு முடிந்ததும் மறு பாரணையாக ஏதாவது சிறிதளவு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு இரவுதான் விரதம் முடித்து படுக்கச் செல்ல வேண்டும். இப்படி முறையாக செய்து முடிக்கும் இந்த விரதத்தின் மேன்மையை பற்றி எனக்கு தெரிந்த வரை சொல்லியுள்ளேன். 

நான் இந்த மாதிரி ஒரு தடவை கூட  இது வரை இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு பின் சென்னை வந்தும், குடும்பம், சூழல், என விரத ஆசைகள் நிராகரிக்கப்பட்டது. "உன் குழந்தைகளை கவனி.. அதுவே சிறந்த தெய்வ சேவைகள்" என்று  அறிவுறுத்தபட்ட வீட்டுப் பெரியவர்களுக்காக  எந்த விரதங்களும் எடுக்க இயலவில்லை. வீட்டின் சற்று அருகிலேயே இருக்கும் கேசவ மாதவ பெருமாளை (சித்திரக் குளம்) அன்றைய தினம் சென்று தரிசிக்க முடியாமல் போவதும் உண்டு. அவர்கள் (என் குழந்தைகள்) கொஞ்சம் பெரியவர்களானதும், இந்த ஏகாதசியில் ஒரிரு தடவைகள், வீட்டில் செய்து இறைவனுக்கு  நிவேதனம் செய்த கேசரி, பழங்கள் எடுத்துக் கொண்டு அன்று மட்டும் விரதம் இருந்துள்ளேன். ஆனால் இரவு முழுவதும் விழித்திருக்க இயலாது. மறுநாள் அலுவலகம் செல்லும், கணவர், மச்சினருக்கு காலையிலேயே சமையல்  சாப்பாடென வேலைகள் தொடரும் போது அது சிரமபடுத்தும் என்பதால் வழக்கப்படியான உறக்கம் தானாகவே வந்து கண்களை தழுவிக் கொண்டு விடும். ஆனால் குழந்தைகள் சற்று பெரியவரகள் ஆனதிலிருந்து பிறந்த வீட்டு வழக்கப்படி இன்று வரை மதியம் உணவாக சாதம் எடுத்துக் கொள்ளாமல், அன்னத்தை பின்னமாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. (அரிசி உப்புமா, அரிசி உப்புமா கொழுக்கட்டை, இல்லை பச்சரிசி தோசை என செய்வேன். இல்லை, ஒரிரு சமயத்தில் உப்பில்லாத சப்பாத்தி செய்து விடுவேன். தொட்டுக் கொள்ள வெல்லந்தான் அனைத்திற்கும். இறைவனுக்கு நிவேதனம் செய்யும் கேசரியும் துணையாக வரும். ) 

ஆலயம் தொழுவது  சாலவும் நன்று எனப் படித்துள்ளோம். ஆனால், இயலாதவர்கள் இறைவன் மேலுள்ள பக்தியை தியானம், பூஜை என வீட்டிலிருந்தபடியே நம்மால் இயன்றவரை செய்து "அவனை" வேண்டிக் கொள்ளலாம் என்றுதான் நினைத்து திருப்தியடைந்திருக்கிறேன்.  ஆனால், மார்கழி மாதம் முழுவதும் காலை மூன்று மணிக்கே எழுந்து, தெரு வாசலில் வண்ண கோலங்கள் போட்டு, குளித்து, தினம் ஒரு கோவிலாக சென்று வந்த சந்தர்ப்பம் ஒன்றும் எனக்கு சென்னையிலிருக்கும் (லஸ்ஸில்) போது ஒரு தடவை கிடைத்தது. அப்போது சாட்சாத் அந்த கோதை நாச்சியாராக நாங்கள் குடியிருந்த  வீட்டின் பெண் (உரிமையாளரின் கடைசி பெண்.  என்னை விட நான்கைந்து வயது சிறியவள். அப்போது அவளுக்கு திருமணமாகவில்லை. ) தோழி என்னை அந்த கடமையை செய்ய வைத்து (தினமும் காலை மூன்று மணிக்கே என்னை வந்து எழுப்பி விடுவாள்.) என்னை அந்த வருடம்  மார்கழி மாதம் முழுவதும்  சந்தோஷப்படுத்தினாள். இன்று அவள் எங்கிருக்கிறாளோ? ஒவ்வொரு வருட மார்கழியில் அவள் நினைவும் என்னுள் தவறாது மலரும். 

இந்த விரதம் முறையாக இருக்கும் போது நாம் செய்த பாவங்கள் அகன்று, புண்ணியங்கள் அதிகமாவதால் அனைவருமே நல்லகதி பெற்று சுவர்க்கத்தில் இடம் இல்லாமல் போய் விடும் என்பதை உணர்ந்த மாயை ( இந்த மாயாசக்தியால்தான் பெருமாள் தேவர்களின் தேவைக்காக பூவுலகின் நன்மைகளுக்காக என்று அடிக்கடி எடுக்கும் மோகனி அவதாரமும்.. .. .அவளின் அம்சத்தைக் கொண்டே திருமால் பெண்ணாக உருமாறுவது. . என்பதாக புராணங்கள் கூறுகிறது.) நாராயணனிடம் கேட்கிறாள் 

(பாற்கடலில் அசுரர்கள், தேவர்கள் இருவரும் சேர்ந்து  அமிர்தம் கடையும் போது, வந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு தெரியாமல் அசுரர்கள் அபகரித்து கொண்டு போக அதை அவர்களிடமிருந்து வாங்கி, தேவர்களுக்கு மட்டும் பங்கிட்டு தர நாராயணன் எடுத்த மோகினி அவதாரம். ஒன்று.. 

ஸ்ரீ கிருஷ்ணன் தேவகிக்கு சிறையில் பிறந்தவுடன் அவரை நந்தகோபன் கோகுலத்திற்கு  எடுத்துச் செல்லும் போது, அதே  நந்த கோபரால் கோகுலத்திலிருந்து சிறையில் கொண்டு  விடப்பட்ட பெண் குழந்தையாக மாயை காத்திருக்க, தேவகியின் அண்ணன் கம்சன்  எட்டாவதாக பிறந்த அக்குழந்தையை கொல்ல வரும் போது, அவனை கடுமையாக எச்சரித்து  அவன் கையிலிருந்து தப்பித்து மாயமாகிச் சென்ற மாயா சக்தியும் அவள்தான். )  

"இப்படி புண்ணியம் செய்து மறுபிறப்பெடுக்காமல் மனிதர்கள் இருந்து விட்டால் என் கடமையை எப்படி இந்த பூலோகத்தில் சரிவர செய்வது" என வினவ "கவலைப்படாதே.. முறையாக விரதம்  இருந்து மனிதர்கள் என்னருளை முழுமையாக பெறும் போது, உன் மாயையால், சிறிது அவர்கள் கண்களில் உறக்கத்தை வரவழைத்து மயங்கச் செய்து விடு. அதனால் அவர்களுடைய புண்ணியமும் உனக்கு வரும்.  அதன் பின்பு அவர்களின் பாப புண்ணியபடி நீ உன் கடமைகளையும் பூலோகத்தில் செய்யலாம் எனக் கூறினாராம். அதனால்தான் இந்த விரதம் இருப்பவர்களை மோகினி என்ற மாயை மூன்று நாட்களில் எப்போதேனும் ஒரு முறையாவது சிறிது  உறக்கத்தை தந்து கண் மயங்க வைத்து விடுவாள் என்றும் கூறுவார்கள். ( இதற்கு மாற்றாக உள்ளங்கால்களில் சிறிது நெய்யை தடவிக்கொண்டு சிலர் வைகுண்ட ஏகாதசியன்று மதியம் படுத்து விடுவார்கள். இப்படி செய்தால், மோகினி நம் புண்ணியத்தில் பங்குக்கு வரமாட்டாள் என நம்பிக்கை அந்த மனிதர்களுக்கு. அப்படி கண்மூடி ஒரு மாதிரி மயக்கம் தெளிந்து எழுந்தாலும் பரவாயில்லை. அதுதான் சாக்கென 2,3 மணி நேரங்கள் நன்றாக படுத்துறங்கி எழுபவர்களையும் பார்த்திருக்கிறேன்.  அது என்ன விரதமோ? அனவிரதம்.  .ஹா. ஹா. ஹா.) 

ஒரு கதை... எனக்குப் பிடித்தமான கதை... நான் எழுதிய இந்தக்கதையில் ஏதேனும் குறையிருந்தால் பொறுத்தருளவும். 

ஒரு சமயம் நாரதர் "தான்தான் ஸ்ரீ மன் நாராயணனுக்கு பிடித்தமானவர். நான் ஒருவன்தான் அவர் நாமத்தை நாள்தோறும் பக்தியுடன் கூறிவருகிறோம் " என லேசான கர்வம் கொண்டாராம். அவருள் எழுந்த கர்வத்தை அவர்  வாயிலாகவே  போக்கி விட எண்ணம் கொண்ட எம்பெருமான் நாரதர் தம்மை தரிசிக்க வந்த சமயம் பார்த்து, "நாரதா. .நீதான் திரிலோக சஞ்சாரியாயிற்றே. ! பூலோகத்தில் என் பக்தன் ஒருவன் என்னையே சதாசர்வகாலம் நினைத்தபடி, என் கருணையை வேண்டியபடி உள்ளான். அவன் விருப்பத்தை நிறைவேற்றலாம் என உள்ளேன். அவனை நீயும் அறிந்து வருகிறாயா? என வினவவும், நாரதருக்கு தன் கர்வத்தினால், சட்டென கோபம் வந்தது. "நாராயணா... அவன் என்ன என்னை விட உன்னிடத்தில் பக்தி உடையவனோ? என கேட்கவும்,, பரந்தாமன் புன் சிரிப்புடன்," ஆமாம் என்றுதான் நினைக்கிறேன். நீதான் பார்க்கப் போகிறாயே . ... இதோ அவன் இருப்பிடத்தின் வழியும் இதுதான்" என்றபடி அவன் இருக்குமிடத்தை நாரதருக்கு உணர்த்தினார். 

நாரதர் உடனே கிளம்பி விட்டார். அவரின் கோபத்தைக்கண்டு எம்பெருமான் மனதிற்குள் நகைத்துக் கொண்டார். 

மறுநாள் காலை அந்த பக்தன் வீட்டிற்கு முன்பாக அவன் கண்களுக்கு தெரியாமல் நாரதர் மறைந்திருந்து அவனை கண்காணிக்க ஆரம்பித்தார். அவன் வாசலில் படுத்திருந்த கயிற்று கட்டிலிருந்து கண் விழித்து எழுந்ததும், தன் உள்ளங்கைகளை பார்த்தபடி, நாராயணா..... நாராயணா.. . என இருமுறை உரத்து கூவியபடி, வானத்தை நோக்கி நமஸ்கரித்து விட்டு படுக்கையை சுருட்டியபடி எழுந்து வீட்டினுள்ளே சென்றான். 

"ஓ...... இவர்தான் அந்த பக்தன் போலிருக்கிறது. .கண் விழித்தவுடன் நாராயணனை தொழுகிறானே... ஒருவேளை உண்மையிலேயே பரந்தாமன் கூறியது போல என்னை விட சிறந்த பக்தன்தானோ.? . இன்னும் எத்தனை முறை அவர் நாமாவை சொல்லப் போகிறாரோ.. பார்ப்போம்.... இன்று முழுவதும் பொறுத்திருந்து  பார்ப்போம்." என எண்ணிக் கொண்டார் நாரதர். 

அதன் பின்பு அவன் வேலைகளுடன் அன்று பம்பரமாய் சுழன்றான்.  வயதான தன் தாய், தந்தையரை பல் தேய்க்க வைத்து, குளிப்பாட்டி உடைகள் அணிவித்து, அவர்களுக்கு காலை ஆகாரமாக கஞ்சி புகட்டிய பின், தொழுவத்தில் இருக்கும் நான்கு மாடுகளை சுத்தப்படுத்தி, பால் கறந்து, அவற்றை வாங்க வருபவருக்கு விற்று, தன் மனைவிக்கு அன்றைய சமையலுக்கு வேண்டியவற்றை வெளியில் சென்று வாங்கித்தந்து, தன் குழந்தைகளை அன்போடு கவனித்து, அவர்களுடன் அளவளாவி, மதியம் அவர்களுக்கு உணவளித்து, நடுவில், தாய் தந்தையையும் கவனித்தபடி, தனக்கென வீட்டின் பின்புறமிருந்த சின்ன வயலில் இறங்கி வேலை செய்து, பின் சுத்தமாக குளித்து, சாப்பாடனவுடன், வெளியில் ஏதோ ஒரு கடையில் வேலைக்குச் சென்று அங்கு  கணக்காளராக சிறிது பணியாற்றி வந்ததும், மாலை, மாடு, குழந்தைகள், தாய், தந்தை, மனைவியென அவரவர்கள் தேவைகளுக்கு உதவி, இரவு  அனைவரும் உணவருந்தியதும், குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அவர்கள் உறங்கச் சென்றதும், அனைவரும் வீட்டினுள் பத்திரமாக கண்ணயர்ந்து விட்டார்களா எனப் பார்த்து விட்டு, பின் வீட்டிற்கு வெளியே, கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டபடி படுக்க வந்தவன் மறுபடி வானத்தை நோக்கி. நாராயணா.. . நாராயணா என சத்தமாக கூவி கும்பிட்டபடி படுக்கையில் படுத்தவுடன் தன்னிலை மறந்தவனாய், அவனும் கண்ணயர்ந்தான். 

காலையிலிருந்து அவனை கண்காணித்தபடி இருந்த நாரதருக்கு அவன் இரவு வரை எத்தனை முறை பரந்தாமனின் நாமத்தைச் சொன்னான் என்பதை நினைவில் நிறுத்தி பார்த்தார். எண்ணி நான்கு முறைக்கு மேலாக அவன் நாராயணனை தொழவுமில்லை. சிந்திக்கவுமில்லை என்பது நினைவுக்கு வர, "இவனையா தன் பக்தன் என பரந்தாமன் கூறி மகிழ்நதார். ..  நல்லவேளை..  என்னைப் பார்த்து வரச் சொன்னார். இவனுக்கு குடும்பத்தை பார்த்து பார்த்து கொண்டாடவே நேரம் சரியாக இருக்கிறது. இவனைப் போய் எனக்கு நிகரானவனாக நாராயணன் கூறுகிறாரே... இதோ விரைவில் சென்று இவன் நிலையை தெளிவாக்குகிறேன்.. .. என்றபடி வைகுண்டதிற்கு ஏகினார். 

"என்ன நாரதா. ... என் பக்தனை கண்டு வந்தாயா? எப்படி இருக்கிறான்? பாவம் இல்லையா? அவனுக்கு நான் அருள் கூர்ந்து உதவ வேண்டுமில்லையா? என்ற கேள்வி கணைகளுடன் வரவேற்ற பரந்தாமனை கண்டதும் நாரதருக்கு நகைப்பு வந்தது. 

தான் காலை அவனை பார்த்த நிலையிலிருந்து, அவனின் அன்றாட வேலைகளை அவன் செய்த முறைகளையும், அவன் அவர் நாமத்தை பொழுதத்தனைக்கும், எத்தனை முறை சொன்னான் என்பதையும் விளக்கி விட்டு, "இவனையா எனக்கு சரியாக கூறினாய் ? என கேட்ட நாரதருக்கு சற்று கர்வம் முன்பை விட கூடியிருந்ததை கண்ட பரந்தாமன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 

" சரி நாரதா.... அவன் அவனுக்குண்டான கடமைகளை செய்யும் போது என்னை நினைக்க ஏது நேரம்? முதலில் அதை அவன் சரிவர செய்கிறான் பார்த்தாயா? இடைப்பட்ட நேரத்தில் என்னையும் துதிக்கிறான். அது போதாதா?. ..." என பரந்தாமன் நாதரின் கோபத்தை கிளறி விடவும், "நான் அவன் நிலையில் இருந்தால் உன்னை ஆயிரம் முறை துதித்திருப்பேன்.. . நீ வேண்டுமென்றே அவன் பக்கம் பேசுகிறாய்.  .!  என்றார் படபடப்பாக நாரதர். 

"நீயா? நீயோ கட்டை பிரம்மச்சாரி. அவன் சம்சாரி.. .நீ எப்படி அவன் நிலையில். ?? சரி. உனக்கேற்றபடி நான் ஒரு கடமையை தருகிறேன். இதோ ஒரு கிண்ணம் நிறைய எண்ணெய் தருகிறேன். நீ இதை கையில் வைத்துக் கொண்டு ஒரு துளியேனும் சிந்தாமல் சிதறாமல் மூவுலகமும் சுற்றி வரவேண்டும். எதிர்ப்படும் காரணம் கேட்கும் எவரிடமும் கோபமில்லாமல் சாந்தமாக நின்று உரையாட வேண்டும். நீ என்னிடம் இந்த எண்ணெய்யை கொண்டு சேர்ப்பிக்கும் போது ஒரு துளி குறைந்திருக்கவும் கூடாது. உன் கைகளிலும் எண்ணெய்கறை  சிறிதேனும் பட்டிருகக கூடாது. . செய்வாயா?" என்றதும், சவாலில் வெல்வதற்காக நாரதரும் எண்ணெய் கிண்ணத்துடன் மூவுலகை சுற்றி வர புறப்பட்டார். 

மூவுலகையும் சர்வ ஜாக்கிரதையுடன், எதிர்ப்பட்ட அனைவருக்கும் காரணத்தை விளக்கியபடி, ஒரு வழியாக நாராயணனின் கட்டளைப்படி துளி சிந்தாமல், சிதறாமல் எண்ணெய் கிண்ணத்தை கொண்டு வந்து தந்த நாதரின் முகத்தில் பெருமை சொல்லி மாளாமல் மின்னியதை கண்ட பரந்தாமன் மறுபடி சிரித்தார். 

"நாராயணா.... பார்த்தாயா என் சாமர்த்தியத்தை... ... அந்த பூலோக பக்தனால் இப்படி செய்ய முடியுமா?" நாதரின் முகம் பெருமையில் பளபளத்தது. 

"அது சரி. .  நாரதா... நீ இப்படி கிண்ணத்துடன் சுற்றி வரும் போது எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை தடவை என் நாமாவை சொன்னாய் ? என்ற பரந்தாமனை பார்த்து,, "பரந்தாமா  என்ன விளையாடுகிறாயா? இந்த கிண்ணத்திலிருக்கும் எண்ணெய் அசையாமல் நடக்கவே என் கவனம் முழுவதும் இருந்தது. இதில் இடைப்பட்டவர்களுக்கு நீ கூறியபடி பதில் சொல்லவே  சிரமப்பட்டேன். இதில் உன்னை எப்படி நினைப்பது? உன் நாமாவை எப்படி வாயாற பாடி துதிப்பது? அதற்கு எங்கு நேரம்? "

" அப்படி வா வழிக்கு. ...உன்னால் இந்த சிறு பாரத்தை சுமந்து, அதில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கும் போது, அந்த பூலோக பக்தன் தன்னை பெற்ற வயதான தாய், தந்தையையும் கவனித்துக் கொண்டு, தன்னை நம்பி வந்த தன் மனைவியின் முகம் சுளிக்காது அவளின் இல்லற தேவைக்காக உழைத்துக் கொண்டும், தன்னால் உருவான தன் மக்கட் செல்வங்களையும் பாசத்துடன் கவனித்துக் கொண்டு, தனக்காக வாழும் வாயில்லா ஜீவன்களையும் அன்புடன் கவனித்துக் கொண்டு. இடையில் தன் ஆத்மாவுக்கும்  புத்துணர்ச்சி அளித்தபடி, வாழும் கடமை மனிதன். நான் வேறு... கடமை வேறல்ல... என்று உணர்ந்தவன். அத்தகைய பொழுதிலும் அவன் என்னை நாளொன்றுக்கு நான்கு முறை நினைத்தான்.. இப்போது சொல்..... அவன் பக்தி சிறந்ததுதானே. .! " நாராயணனின் விளக்கத்தில் நாதரின் கர்வம் சூரியனை கண்ட பனி போல் விலகியது. " 

"உண்மைதான். ..  பரந்தாமா..  அத்தனை கடமைகளிலும் உன்னை இரு பொழுதாவது நினைக்கும் அவன் பக்தி சிறந்ததுதான் . . .   ஏன் என்னை விடவும் அவன் சிறந்தவன். உண்மையை உணர்ந்து கொண்டேன். உன் விருப்பபடி உன்னருளை அவனுக்கு வாரி வழங்கு. .. .என்னுள் எழுந்த கர்வம் இப்போது போன இடம் தெரியவில்லை.  உன் செயல்களுக்கு என்றுமே நன்மை பயக்கும் அர்த்தங்கள் நிறைய உள்ளது. நாராயணா. ..  உன் அருளின் பெருமையே உணரும் போது என்னுள் எழும் ஆனந்தத்திற்கு அளவில்லை. என்று நாராயணனின் புகழ் பாடி பலவிதமாக அவர் துதிபாடி, நாராயணா. .. நாராயணா. .. என்ற நாமம் தன்னைச் சுற்றிலும் மணம் பரப்ப மனச்சஞ்சலங்கள் அகன்றவராய்  தன்னிருப்பிடத்திற்கு சென்றார் நாரதர். 

எதிலும், நாம் செய்யும் எந்த செயல்களிலும் நம்மையறியாமல், நம் கர்வம் ( அதை பெருமிதம் என பலர் கூறுவதுமுண்டு. அதுவே அளவு கூடி நம்மை ஆளும் போது அது பெயர் மாறி கர்வமென்றாகிறது.  என்பது என் தாழ்வான எண்ணங்களில் ஒன்று.) நம்மை தட்டும் போது இத்தகைய கதைகள் நமக்கு பாடம் புகட்டும் நீதி நூல்கள் ஆகிறது 

அடுத்து வரும் இந்தக்கதை வாட்சப்பில் பகிர்ந்து வந்ததில் படித்தவுடன் பிடித்தது...

"சாதாரண மனிதர்களுக்கு புரிவதில்லை" 

உத்தவர் கண்ணனிடம் கேட்ட விளக்கங்கள்....

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. .மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்...

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! 

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம்... 

கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன்

. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்து விடும் போது தான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். 

எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். 

ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! 

இறைவன் நம் அருகிலேயே தான் இருக்கின்றார்... ஆனால் நம் வினை மறக்கச் செய்துவிடுகிறது.

இதிலும் வைகுந்த வாசியான காக்கும் கடவுள் ஸ்ரீமன்நாராயணன் அதர்மத்தை அளிக்க பூவுலகில் மானிட அவதாரமாக எடுத்து நம்மை நல்வழிப் படுத்துவதற்காக  வந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நம்முடன் நமக்கு பலமாக, நம் அருகிலேயே தாம் எப்போதும் இருப்பதை  உணர்த்துகிறார். நாம்தான் நம் கர்வம் என்ற பாறை தரை தட்ட நடுக்கடலில் பயணிக்க இயலாமல் தத்தளித்து ஆடும் கப்பலென தவிக்கிறோமோ என எண்ணுகிறேன். 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.

இதை வைகுண்ட ஏகாதசியன்றே வெளியிட நினைத்தேன். வழக்கப்படி தாமதந்தான். (எழுதினால் அல்லவா வெளியிட முடியும். அவலை நினைத்து உரலை இடித்த கதையாய்....ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ வந்து முடிந்திருக்கிறது. பொறுமையுடன் படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏. 

Monday, August 17, 2020

கண்ணன் கேட்ட பதிவு.

 கிருஷ்ணாய நமஃ.. 

"அநேகமாக எல்லோருமே கிருஷ்ண ஜெயந்தி பதிவை போட்டு விட்டார்கள். நீதான் தாமதம்.."  தினமும் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் குற்றம் சொல்வது போல் ஒரு பார்வை  பார்க்கிறார்.

"கிருஷ்ணா என்னை மன்னித்து விடு.. ஏதேதோ காரணங்களால் தாமதம்.. உனக்கு தெரியாதா? என்னுள் இருந்து  எல்லாவற்றையும் நடத்தி வைப்பவனே நீதானே..!" பதிலாக என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய், " சரி. .! சரி...! நான் சொல்வதை எனக்கே திருப்பியா?ஏதோ மனிதர்களாகிய உங்களுக்கு  புத்தி சொல்லப் போக  என்னவோ, எல்லாவற்றிலும் என் பேச்சை மீறாத  மாதிரியும், கிருணார்ப்பணம் என்று ஒரு சொல் சொல்லி கழற்றி  விடுகிற மாதிரி ஒரு பாவனை....!" கிருஷ்ணர் மீண்டும் ஒரு குறும்பு பார்வையுடன் தொடர்ந்தார். 

" பகவானே...! என்ன இது அபச்சாரம்.. !  உன் பேச்சை மதிக்கிற மாதிரி ஒரு பாவனையா...! உன்னைத்தானே சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டே இந்த மானிடப் பிறவியில் உழலுகிறோம்.  எந்த ஒரு கெட்ட செயலையும், நல்ல செயலையும் உன்னை நினைத்து கிருணார்ப்பணம் என்று சொல்லி உன்னிடம் ஒப்படைத்தால், முறையே  அது பன்படங்காக பெருகி, பாவ புண்ணியங்கள் எங்களையே வந்து சாரும் என்பது நீ அறியாததா? அப்படித்தானே இந்த அர்ப்பணிப்பு  அந்நாளிலிருந்து உதயமாகி வந்தது..." நான் படபடவென உணர்ச்சியில் தத்தளித்து மன்னிப்பு கேட்பதை ரசித்தபடி கண்ணன் மீண்டும் குறும்புடன் முறுவலித்தான். 

" பார்த்தாயா...!  மறுபடி நான் சொன்னதையே என்னிடம் பிரசிங்கித்து கொண்டு...!  ஆக மொத்தம் எனக்கு ஒன்று புரிந்து விட்டது.."என்றார். மீண்டும் அதே குறும்பு... 

"என்ன கண்ணா.... என்றவளிடம், குருவுக்கு மிஞ்சிய சீடர்களாய்... நீங்கள் என்னை விட நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். சரி. . ! நான் போய் வருகிறேன். நீ என்னை உன் நட்புகளுக்கு பார்வையாக்குகிறாயா என்பதை நான் மீண்டும் பார்க்க வருவதற்குள் என் அடுத்த பிறந்த நாள் வந்து விடும் போலிருக்கிறது." என்றவர்  கண்களில் அதே சிரிப்பு. 

சரி.. இன்று கிருஷ்ணருக்காகவேனும்  எப்படியாவது பதிவை  பகிர வேண்டுமென உடனே மெனக்கெட்டு எழுத ஆரம்பித்து விட்டேன். அதுவும் இன்று முதன் முதலாக மாறி வைத்திருக்கும் பிளாக்கர். முதலில்  வந்திருக்கும் மாறுதலில் அவனைத் தொழுது எழுதுவதே ஒரு  நல்ல செயல்தானே..! என்ன சொல்கிறீர்கள்...! 


தன் அழகான பாதங்களை பதித்து  மெள்ள மெள்ள  வீட்டினுள்ளே  நடந்து வந்த கிருஷ்ணர். 

பூஜையறைக்கு வந்தவர் அலங்கரித்து வைத்திருந்த  தன்னுருவை கண்டதும் தன்னுள்ளே தானே ஐக்கியமாக்கி கொண்டபடி பூஜைகளை ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்த படசணங்கள் எங்கே என்றபடி ஒரு பார்வை... 


" அட... இவ்வளவுதானா..! முன்பெல்லாம் நிறைய இருக்குமே என நான் குறை கூற மாட்டேன். நீ அன்புடன் அழைத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அவல் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... சந்தேகமாயிருந்தால் ருக்மணியிடம் கேட்டுப்பார்." அதே.. அதே . . சிரிப்புடன் என் மனதை கொள்ளையடிக்கும் குறும்புக்கார கிருஷ்ணர்..

இப்போதுதான் திருப்தியாக உள்ளது.  நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்."  என்கிறான் அதே சிரிப்புடன் அந்த  யசோதை பாலகன்.


அவனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் அப்போது எழுந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சிதானே...! அவன் நம் அனைவரின் மகிழ்விலுந்தான் இருக்கிறான் என்பதை அவனே சொன்ன பின் அதுதானே உண்மை.... என்றும் சாஸ்வதம்... 

ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ... 

எனதருமை சகோதர, சகோதரிகளுக்கும் ஸ்ரீ கண்ணனுடன் சேர்ந்து இந்தப்பதிவு பிடித்திருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கும் பிடித்து படித்தப் பின் கருத்திட வருபவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 🙏. 🙏. 🙏. 

Sunday, September 2, 2018

ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நாள்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா.

கணங்களுக்கு முதன்மையானவனே...
விக்கினங்களை களைபவனே...
விநாயகப் பெருமானே.. எனை என்றும்
காக்கும் கணேசா..! நல்லெழுத்துக்களை அறியவும், பதியவும் உன் துணை
வேண்டினேன். தப்பாமல் தந்தருள்வாய்
வேலனுக்கு சோதரனே....


ஓம் கார வடிவே கணேசா.!
எங்கள் உள்ளத்தில் ஓம் என ஓதினோம் நேசா.!
யேசுதாஸின் இனிமையான குரலில் என் இஷ்ட தெய்வத்தின் மீது எனக்குப் பிடித்த இனிமையான பாடலொன்றை கேட்கலாமா?


பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே கண்ணா...


அந்த பரவசங்களுக்கு நடுவே உன்  கோகுலத்தில், உன்னருகில் விளையாடும் ஒரு சிறிய பிறப்பாக நானும் பிறந்திருக்க கூடாதாவென என் பாழும் மனம் நினைக்கிறது கிருஷ்ணா..  அப்போதேனும் உன்னை தொட்டு தொடர்ந்து பால்யகால விளையாட்டில் பங்கேற்று சந்தோஷமடைந்திருப்பேனே தாமோதரா...


பிஞ்சு விரல்களால், நீ வெண்ணை உண்பதே அழகு. உன் அழகுக்கு அழகு செய்யும் ஆபரணங்கள்  இடையே ஒரு சிறு கல்லாக நான் இருக்க கூடாதாவென என் மனம் ஏங்குகிறது கண்ணா? .அப்போதேனும் உன் அழகை அருகிலிருந்து கண்டு களித்திருப்பேனே  கேசவா...


ஒரு விரலால்  வெண்ணை உண்ணும்  போது ,பிற விரல்களில் வடியும் வெண்ணையுடன் உன் அழகை காணும் போது, உருகும் வெண்ணையின் நிலையில் என் மனமும் தவிக்கிறது  அந்த வெண்ணெய் ஒரு துளியில் எங்கேனும் ஒரிடத்தில் நானும் சங்கமித்து இருக்க கூடாதா நாராயணா ...

தானே வந்து தவழ்ந்த நிலையில், நிரம்பி வழியும் பாலமுதை கை நிறைய சிந்திச் சிதறி எடுத்துண்ணும் கோலம் காண தேவாதி தேவர்களும் வந்து பார்க்கும் காட்சியை கண்டு உண்ண மறந்து கை ஊன்றிய நிலையில் திரும்பி நோக்கி அதிசயக்கிறாயோ? அந்த பாலமுதம் கடையும் மத்தாக நான் இருந்திருக்க கூடாதா கிருஷ்ணா ? அந்த சமயத்தில் கடையும் பொழுதில் கடைக் கண்ணால் உன் அழகை தரிசித்திருப்பேனே த்ரிவிக்கரமா.... 


சின்னஞ்சிறு விரல்களால் நீ உண்டது போறாது என அன்பின் மிகுதியில், உன் தாய்  ஊட்டி விடுவதை ஆனந்தமாக உண்ணும் கிருஷ்ணா... அதற்கு உன் தாயாகிய யசோதைக்கு கள்ளம் கபடமற்ற உன் உள்ளத்தையே பரிசாக்கி கொடுக்க  நினைக்கிறாயோ? அந்த  பொழுதில் உன் தாய்  விரலில் அணிந்திருக்கும் கணையாளியின் ஒரு உலோகமாக நான் பிறந்திருந்திருக்க கூடாதா யசோதை கிருஷ்ணா? அப்போது உன்னை ஸ்பரிசித்து மன மகிழ்ந்திருப்பேனே நரசிம்மா....


என்ன தவம் செய்தாய் யசோதா....பரம் பொருளை உன் மகனாக அடைவதற்கு.. உன் மடியமர்ந்து உண்ட களைப்போ உன் மகனுக்கு.. அதனால்தான் உன் அணைப்பில் ஆசுவாசபடுத்திக் கொள்கிறனோ ? உன் தழுவலில் அவனும், நீயும் மெய்மறந்த அழகை, நீ அமர்ந்திருக்கும் மர சிம்மாசனத்தில் ஒரு பலகையாக இருந்திருந்தாலும், உங்கள் அன்புள்ளங்களை தரிசித்திருப்பேனே பத்மநாபா.....


அன்பு தாயின் கைகளால் வெண்ணையை உண்டு மகிழ்ந்த நீ பதிலாக அவ்வெண்ணை ஈந்த பசுவினத்தை மகிழ்விக்க  உன் இதழ்கள்  தந்த இசையமுதை அவை செவி குளிர மனம் நிறைய பருகச் சொல்லி அளிக்கின்றனையோ? அதன் மேல் சாய்ந்து நீ கானம் இசைத்த போது உனை சுற்றி மலர்ந்திருக்கும் மலரிடையே ஒரு மலராக நானும் மலர்ந்திருக்க கூடாதோ மணிவண்ணா? அப்போதாவது உன் மலர் முகம் கண்டு மகிழ்ந்திருப்பேனே புருஷோத்தமா....


உன் அருகாமையில் "ஆ" வினங்களை கட்டுண்டு நிற்க வைத்த மாதவா... அவைகள் முந்தைய பிறவியில் செய்த மாபெரும் புண்ணியந்தான் உன்னை அங்கு கொண்டு சேர்த்ததுவோ மதுசூதனா... அந்த "ஆ"வினங்களின் கொம்புகளில் கட்டிய சிறு மணியாகவாவது என்னை நீ உருவாக் கியிருக்க கூடாதா? அப்போதாவது உன்னை கண்டு அகமகிழ்ந்திருப்பேனே கோவிந்தா.......


உனது கான மழைதான் ராதையின் சுவாசம். அதனால்தான் அவள் உன்னுடனே பிரிக்க முடியாதபடி ராதா கிருஷ்ணனாக வாசமாகி சங்கமித்து விட்டாள். வண்ணமய ஆடைகள் அணிந்து அவளுடன் பாடிக் களித்திருந்த போது, அந்த பட்டாடையின் ஒரு நூலாகவேனும் நான் பிறப்பெய்திருக்க கூடாதா ராதே கிருஷ்ணா? அந்த சமயத்தில்  உங்களிருவரையும் கண்டு ஆனந்தித்து பரவசமாகியிருப்பேனே வாமனா.....


உன்னையே நினைக்கும் அனைத்து உள்ளங்களிலும் நீ ஒருவனே குடியிருப்பாய்.  உன் புல்லாங்குழல் இசையில் மயங்கியதால் தன்னிலை மறந்த நிலையில் கோபிகா ஸ்திரிகளின்  மெய் மறந்த கோலம்... உன் அருகிலிருக்கும் மரத்தின் ஒரு இலையாகவேனும் நான் பிறவி எடுத்திருக்கலாகாதா அநிருத்தா?அப்போதாவது உன்னை தரிசித்திருப்பேனே உபேந்திரா.....


பொன்னும், பொருளும் எனக்கு இணையாகுமோ? அன்புக்கு மட்டுமே என்றும் நான் ஐக்கியமானவன். ஒரு சின்னஞ்சிறு துளசி இதழுக்கு முன் அந்த பொருள்கள் எல்லாம் வீண். ஆடம்பரம் நிலைக்காதது என அந்த நிமிடம் உணர்த்திய அச்சுதா... அந்த துளசியின் அடி மண்ணில் ஒருசிறு துகள்களாக நான் ஜனித்திருக்க கூடாதா?  அந்த சமயத்திலாவது  உன்னை கண்டுகந்திருப்பேனே  ஜனார்த்தனா..


நீதான் பரம் பொருள். உன்னை புரிந்தவர்களுக்கு மட்டும்.... உன்னையே உளமாற சரனென அண்டியவர்களை நீ என்றும் உன் கைகளில் தரித்திருக்கும் சங்கு சக்கரம் போல் கை விட்டதில்லை. உன் மணிமுடியில்  ஆடும் முத்துச்சரத்தின் ஒரு முத்தாக நான் அலங்கரிக்கப்பட்டு இருக்க கூடாதா பரந்தாமா? அந்த நிலையில் உனைக் கண்டு அகமகிழ்ந்திருப்பேனே சங்கர்ஷணா....


ஒரு மனிதனாக செய்ய வேண்டிய செயல்களில், பலன்களை எதிர்பாராது கடமையை மட்டும் செய்து முடிக்க உன் பார்த்திபனுக்கு  அன்பாக கட்டளையிட்ட பரந்தாமா ! அன்றேனும் ரத  கஜ, துரக பாதாதிகளில், ஓருயிராக படைத்திருக்க கூடாதா? இத்தனை சமயங்களிலும்  எந்த விதத்திலும் உன்னை தரிசிக்க இயலாமல் செய்து விட்ட என் ஊழ் வினையகற்றி  என்னை உன் பார்த்திபன் நிலையில் நீ பிறந்த பொன்னாளான இன்றேனும் இப்போதாவது  அனுகிரஹித்து விடு தீன தயாளா.!


      கோவிந்தா   🎆   கோபாலா
      ஹரே ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமுவந்த கிருஷ்ண ஜயந்தி நல் வாழ்த்துகள்.

Thursday, April 26, 2018

மஹாபாரதம் உணர்த்திய உண்மைகள்....


கீதையில்  கடமையை செய்..... பலனை.எதிர்பாராதே!  என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்தமா... கூடவே இரு மனங்களையும், அதாவது ஒரு செயலை செய்யும் பக்குவமான உள்ளத்தையும், அந்த செயலை செய்தால் ஏதேனும் திருப்பங்கள் உண்டாகுமா எனறு எதிர் நோக்கும் உள்ளத்தையும் ஒருங்கே தந்து விட்டான் நம்மை படைத்த ஆண்டவன். ..  ஆததால் எந்த ஒரு செயலையும் கடமையாக மட்டுமே எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மிடம் உள்ளதா என்பதே ஒரு கேள்விக்குறி?. கடமையை செய்யும் போதே மனசு அடுத்ததாக பலன் ஏதாவது இருக்கிறதா,.... இல்லையா......என்ற சிந்திக்க ஆரம்பிக்கும் போதே  அச்செயல் கடனாகி விடுகிறது.

நமக்கென உண்டாகி இருப்பது..... இதனை நாம் செய்தால்தான் இது பரிபூரணம் அடைந்து சிறக்கும் என உணர்ந்து செய்யும் செயலே கடமை.

இதை எதற்காக  நாம் செய்யவேண்டும்? இந்தளவிற்கு இதில் கவனம் செலுத்தினால் போதும்... என்று மனமொவ்வாமல்  சுவாரஸ்யமின்றி செய்யும் செயலே கடன்.  என்பது என் கருத்து.

அவ்வாறு கடமையாக விரும்பியும், கடனாக வெறுத்து ஒதுக்கியும் இராமல் இறைவன் விட்ட வழி எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும்.. என்று எதிலும் கவனமின்றி      பற்றற்று இருப்பதும் பலன் ஒன்றும் நல்காது என்கிறது கீதை.

இப்பிறப்பில் உனக்கு விதித்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதில் இன்பங்கள், மகிழ்வுகள் சந்தோஷங்கள்  இப்படி எது வந்தாலும் அதையும்,  துன்பங்கள் துக்கங்கள் துயரங்கள்  எது வரினும் அதையும் ஒன்றாகவே பாவித்து  அப்போதும் உன் கடமையின்று வழுவாது அதற்குண்டான  பலனையும் எதிர்பாராது, அமைதியாக உன் செயலை செய்து கொண்டே இரு.  அதுதான் சிறந்த பற்றின்மை என்கிறது கீதாச்சாரம்.

இவ்வாறாக நிறைய ஆன்றோர், சான்றோர் உலகில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இதிகாசங்களில் ஒன்றான மஹா பாரத காலத்தில் அக்கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணங்களில் சிறப்பானவர்களாக இருந்தார்கள். ஆனால் அவரவர்  குணாதிசயங்களிலிருந்து மாறுபடாமலும் இருந்து  தம்முடைய கொள்கைகளை நிறைவேற்றி உள்ளார்கள்.ஒவ்வொருவருடனும்  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒவ்வொரு காலகட்டத்தில் அவர்களுடன் விவாதித்து அவரவர்களின் கர்ம வினைகளை உணரும்படி செய்து அருள் பாலித்திருக்கிறார். அவர்களும் நடத்துவிப்பவனின் எண்ணப்படி நடப்பது நடந்துதான் தீரும். இடையில் நாம் ஒரு கருவிதான் என்ற சரணாகதி மனப்பான்மையுடன் வாழ்ந்து நமக்கு ஒரு பாடமாக இருந்திருக்கிறார்கள். அப்படி தெய்வத்தின் அருகாமையில் அவன் நிழலில் வாழ்ந்தவர்களாகிய அவர்களே ஏகத்திற்கும்  துக்கங்களையும், சங்கடங்களையும், சந்தித்திருக்கும் போது சாதரண மனிதர்களாகிய நாமெல்லாம் எம்மாத்திரம்..... நாம் வாழும் இந்த வாழ்விலும் ஒரு கணத்தில்  மாறி மாறி வரும் சந்தோஷம், துயரங்கள் போன்றவற்றை ஒரே நிலையில் நிறுத்தி சமமாக பாவிக்கும் மனோதிடத்தை தந்தருள வேண்டும் என மனமுருகி ஸ்ரீ கிருஷ்ணரின் பாதம் பற்றி பிரார்த்திக்கிறேன்.பாரத போரின் போது பார்த்திபனின் மனசஞ்சலம்  போக்குவதற்காக, அவன் சமமான மனநிலை எய்துவதற்காக அவன் அருகாமையிலிருந்து, கீதோபதேசம்  செய்தவர், நல் வழிகளை எடுத்துச் சொல்லி காண்டீபனை ஒரு கர்ம வீரனாய் ஆக்கியவர், இப்போது நம்முடைய மனதிலிருந்தபடியே  இதமாக எடுத்துக்கூறி நம் மன சஞ்சலங்களையும் களைவார் என்று நம்புவோம்..

          அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்...

இவ்வாறு அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்  என்று சொல்லும் போது படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் செய்த நற்செயல்களை மட்டுந்தான் அவனிடம் சமர்பிக்க வேண்டும். அது பன்மடங்காகப் பெருகி நம்மையே வந்தடையும். மாறாக அறிந்தறியாமல் செய்யும் தவறானதொரு செயலின் விளைவையும், அவனிடம் அர்ப்பணித்தால்  அது பன்மடங்குக்கும் மேலாக பெருகி நம்மிடமே சரணடைந்து விடும். ஏனெனில் நம்முள் இருப்பவனும், நம்மை நன்குணர்ந்தவனும் அவனல்லவா... ..................................................................................................................................... ................... .......

பின் வரும் வாசகங்களை படிக்க நேர்ந்தது. அதை படித்துணரும் போது என் மனதில் தோன்றியதையும் பக்தியுடன் எழுதி, படித்த வாசகங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னுடன் படிப்பீர்கள் என  நம்புகிறேன்.
படிப்பதற்கும்   படித்ததற்கும்  மிக்க நன்றி.


மகாபாரதம் உணர்த்தும்.   உண்மைகள்....
********************************************
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
-------------------------------
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
- கங்கை மைந்தானாய்..
--------------------------------
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....
------------------------------
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
- சகுனியாய்...
------------------------------
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...
-------------------------------
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....
------------------------------
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...
------------------------------
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...
------------------------------
கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...
------------------------------
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..
------------------------------
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....
------------------------------
பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....
------------------------------
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....
------------------------------
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..
------------------------------
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ
------------------------------
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....
------------------------------
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...

Sunday, February 11, 2018

சேமித்தல் அவசியம்...

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடுகள் அவர்கள் வாழ்க்கையில் அமையும்  வசதிகளைப் பொறுத்தே அமைகிறது என்பது திண்ணம். வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அதற்கு மூலதனம் பணந்தான்! (உதாரணம் அதில்தான் "தனம்" என்ற வார்த்தையே உள்ளதே! ) ஆனால் உலகில் எல்லோராலும்  பணத்தால் வாழ்க்கையை வசதியாய் அமைத்துக்கொண்டு வாழ்ந்திட முடியுமா? அதுவும் இயலாது! ஏனெனில் எவரவர் எப்படி வாழ வேண்டுமோ அந்த நியதிபடிதான் படைத்தவன் படைத்து அனுப்பியிருக்கிறான். அதன்படி நாம் வாழ்ந்து வந்தாலும், நாளைய வாழ்வுக்காக. எதிர் கால நன்மைக்காக, சந்ததிகளின் வாழ்க்கைகாக, இல்லை பிற உபயோகத்திற்காக என்று நமக்கு இறைவன் அமைத்து கொடுத்திருக்கும் வசதி வாய்ப்புகளை (பணத்தை) சேமிக்கிறோம். சேமிப்பு என்பது தவறல்ல! கடந்த காலங்களில் தவற விட்டவைகளை, எதிர் காலத்திலாவது பெறமுடியுமா என்ற கேள்விக்குறிகளோடு, நிகழ் காலத்திலேயே முடிந்தவரை அனுபவித்து விட வேண்டுமென்ற தீவிரமான ஆ(நிரா)சைகளோடு வாழ்ந்து வரும் நாம்  அதே சமயம் சேமிப்பும் ஒரு அத்தியாவசியம் என்ற உணர்வோடு அதிலும் கவனம் செலுத்துகிறோம்.

சேமிப்பு என்பது இருவகைப்படும். ஒன்று மேலே சொன்ன காரணங்களுக்காக ஒரு குடும்பத்தின் தலைவனோ, தலைவியோ, தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் துன்புறுத்தாது, நிகழ்கால தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்தபடி சேமிப்பது, மற்றொன்று தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வருத்தி, நிகழ்காலங்களை சோகத்தில் தள்ளி அதன் கனவுகளை தகர்த்தெறிந்து விட்டு "நாளைக்காக" என்று சேமிப்பது. முதலாவது சிக்கனமென்றால், இரண்டாவது கஞ்சம் ! இரண்டிலும்  தவறுகள் நிகழலாம். ஆனால் பின்னதில் ஒரு துளியேனும் மகிழ்ச்சி கீற்றை சந்திக்காமலே போகும் வாய்ப்புகள் உள்ளது. எப்படியோ சேமித்தல் நலமாகி பலனை நல்கினால்
மொத்தத்தில் அனைவருக்கும் நலமே!


மஹா பாரத காலத்தில்  ஒரு சமயம்  விதுரரை சந்தித்து பேச கண்ணன்அவர் இருப்பிடம் சென்றான். கண்ணனை கண்ட மாத்திரத்தில் விதுரருக்கு தலை கால் புரியாத மகிழச்சி. தன்னை நாடி வந்த பரந்தாமனுக்கு  ஏதேனும் விருந்தளித்து பசியாற்றி அனுப்பவேண்டுமென்ற ஆர்வத்தில், அங்குமிங்கும் ஓடியதை கண்ணன் ," விதுரா ! ஏன் இப்படி ஓடி நேரத்தை கழி்க்கிறாய்? நான் கொஞ்ச நேரம் இங்கு தங்கி உன்னுடன் அளவளாவவே  வந்தேன். உன் கையால் சிறிது பழங்களை தந்தால் கூட போதும். என் பசி ஆறிவிடும். நீ சிறிதும் சிரமபட வேண்டாம். "" என்றதும், விதுரருக்கும் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கும் அந்த பேறுக்காகவே, அந்த யோசனை சரியெனபட்டது. பரந்தாமனின் அருகிலேயே அமரந்து அவரின் பொலிவான முகத்தையும்,  அவர் திறம்பட பேசும் பாங்கையும் ரசித்தபடி வாழைப்பழங்களை உரித்து கொடுக்க ஆரம்பித்தார். கண்ணனும் அவர் அளித்ததை தட்டாமல் அமுதமென உண்டு கொண்டேயிருந்தார்.

கண்ணனும் ஒரு கால கட்டத்தில் தன் பேச்சை நிறுத்தி விதுரரிடம் ஏதோ கேட்கவே சுய நினைவு எய்திய விதுரர் பழத்தட்டை யதேசையாக நோக்கியதும் திடுக்கிட்டுப் போனார். பதறிப் போன குரலில், "கிருஷ்ணா! மாபெரும் தவறிழைத்து விட்டேனே! இந்தப் பாபத்தை எங்கு சென்று போக்குவேன்? நீ அருகிலிருந்தும் கூட  தவறிழைக்கும் என் செய்கையை சுட்டிக்காட்டி திருத்த முயலக்கூடாதா? மகா பாபியாகி விட்டேனே!" என்று மனம் நொந்த அழுகையுடன் கதறவும், கிருஷ்ணர் விதுரரின் அருகில் சென்று ஆதரவாக ஆலிங்கனம் செய்து கொண்டார். "விதுரா! என்ன பிழை செய்து விட்டாய் என்று இப்படி புலம்புகிறாய்? என சிரித்துக் கொண்டே கேட்கவும்,  "பரந்தாமா!  இப்படி ஒன்றும் அறியாதவன்  போல் கேட்கிறாயே!  இந்தப் பழத்தட்டை பார்!  பழத்தை இங்கு போட்டு விட்டு வெறும் தோல்களை உனக்கு தந்திருக்கிறேன். நீயும் ஒன்றும் சொல்லாமல் அனைத்தையும் உண்டிருக்கிறாய்! நான் அறியாமல் செய்து கொண்டிருக்கும் பிழையை நீ ஒரு கண்ணசைவில் சுட்டிக் காட்டியிருந்தால், இதை தவிர்த்திருக்கலாம் இல்லையா? இனி வரும் வாழ்வில் இந்த என் செய்கை....விதுரர் தான் ஒரு ஆண்மகன் என்பதை மறந்து விம்மி அழ ஆரம்பித்தார்.

கண்ணன் விதுரரின் கைகளை தன் கைகளில் அன்புடன் ஏந்தியவாறு அவர் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைத்தபடி, "விதுரா! இதோ பார்! சற்றேனும் உன் செயலுக்கு வருந்தாதே!  உன் அன்பு நான் அறியாததா? நீ என் மீது எவ்வளவு அன்புடன் இருந்திருந்தால் மெய்மறந்து உபசாரம் செய்திருப்பாய் எனபதை நான் அறியாதவனா?  உனது யாதும் கடந்த நிலை எனக்கு தெரியாததா?  இரண்டாவதாக கோகுலத்தில் வளரும் சமயம் என்அன்னை யசோதாதேவி  பழங்களை எனக்கும் அண்ணன் பலராமனுக்கும் ஊட்டி விட்டு தோல்களை பசுவினத்திற்கு அளிப்பார்கள். அப்போதிலிருந்தே  எனக்கு அந்த ஆவினம் உண்ணும் பழத்தோல்களை நானும் உண்ண ஆசை! அதை இன்றுதான் உன் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்! ஆகவே நீ எனக்கு ஒருவிதத்தில் நன்மைதான் செய்துள்ளாய். என் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்துள்ளாய் என்பதை நினைவில் வைத்துக்கொள்!  இதில் வருந்த ஏதும் இல்லை"  என்றான் சற்று குறும்பும் கலந்த குரலில்.

கண்ணனின் சமாதான பேச்சில் மயங்கிய விதுரரும் சற்றே மனம் விட்டு இளநகை புரிந்தார்.. அங்கே அன்புக்கு, கண்ணன் மேல் விதுரர் கொண்ட பக்திக்கு மரியாதை கிடைத்தது. தவறுகள் அன்பெனும் மாயையால் முழுதாக மூடப்பெற்று குற்றங்குறை என்ற ஏதும் இல்லாத மனப்பாங்கு உருவாக்கபட்டது. பரந்தாமன் மேல்  உண்மையான பக்தி செலுத்தினால் அறியாமல் செய்த தவறுகளை அவன்  கையில் சுழலும் சக்கராயுதத்தின் மூலம் துடைத்தெறிந்து அழித்திடுவான். என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு படிப்பினை. ஒரு உதாரணம்.

நான் 70, 80 களில் ஒரு வார இதழில் கதை ஒன்று படித்தேன். அதை எழுதியவர் பெயரோ கதா பாத்திரங்களின் பெயரோ நினைவில் இல்லை. வார இதழ் கூட  (குமுதம் என்று நினைக்கிறேன்.) சரியாக நினைவில்லை! ஆனால் இன்னமும்  கதையின் கரு மட்டும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

திருமண வயதை கடந்த  (அதாவது 30 க்கும் மேல் ! அந்த காலத்தில் 30 வயதில் திருமணமாகமல் வீட்டில் ஒரு பெண் இருந்தால், ஊர் உறவுகள் பேசும்.! அண்டை அசல் பேசும்! ஏன் ஊரிலிருக்கிற வாயில்லா ஜீவன்கள் கூட பேசும்! போகிற வருகிற இடமெல்லாம் பெண்ணுக்கு எப்போ திருமணம்? கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க? என்ற பேச்சுக்கள் அடிபடும்.அது இயல்பான ஒன்று ! ) பெண் தனது தந்தையுடன் வாழ்ந்து  வருகிறாள். தாயார் சிறு வயதிலேயே தவறியதால், குடும்ப  பொறுப்புகள் அனைத்தும் திறம்பட செய்து வீட்டை நிர்வகிக்கும் திறமைசாலி. அவளது தந்தை பெண் திருமண வயதை எட்டியதிலிருந்து வரன் தேடிக் கொண்டேதான் இருக்கிறார். ஜாதகம் சரியாக அமையும் இடத்தில் பெண் பிடிக்காமல் போகும். இரண்டும் பிடித்தமாகும் இடத்தில் இவர்களது "வசதிகள்" (பொருளாதாரம்)  ஒத்து வராமல் போகும். இப்படியாக தட்டிப்போனதில் தந்தையின் கவலைகள் பெருகியதை கண்ட மகள் ஏதாவது ஒரு இடத்தில் நல்லபடியாக வரன் அமைந்தால், தந்தையின் மனச்சுமை குறையுமே என்ற ஆதங்கம் அதிகமாக, தரகர் வந்து சொல்லிச் செல்லும் மாப்பிள்ளையின் ஜாதகத்திலிருந்து, அடுத்தடுத்து நிகழும் சம்பிரதாய நிகழ்வுகளுக்காக, தன்னை படைத்தவனிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்தபடி வேண்டிக் கொள்வதை ஒரு கடமையாக்கி கொள்ள ஆரம்பித்தாள்.

ஒரு சமயம்  அப்படி வந்த ஒரு மாப்பிள்ளையின் ஜாதகம் நன்றாக பொருந்தியிருந்தது அவர்கள் வீட்டிலும் பையனின் தாயார் மட்டுந்தான் ! தங்கள் மகனை அவன் தந்தை தவறியதிலிருந்து அந்த தாயார் வளர்த்து வருதால் பையன் தாய் சொல்லை தட்டியேதில்லை. அவர்களும் பெண் வீட்டில் எதையுமே எதிர் பார்க்க மாட்டார்கள்.  கல்யாண செலவைக்கூட அவர்களே ஏற்றுக் கொள்வார்கள்! ஏனெனில்  அந்த அம்மாவும் கஸ்டபட்ட நிலைமையில்தான்  தன் மகனை வளர்த்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் பண கஸ்டம் என்பது எங்களுக்கும் தெரியுமெனவும்  பையனின் அம்மா கூறி விட்டதாகவும், அந்த பையனும் எதையும் அம்மா விருப்பபடி கேட்டு கேட்டு செய்வதாகவும், தான் திருமணத்திற்கு பார்க்கும் பெண்ணைக்கூட தன் தாயே தேர்ந்தெடுக்கும் உரிமையை தாய்க்கு  தந்து விட்டதாகவும் , குடும்ப பாங்காக,  தன் தாய் பேச்சை தட்டாமல் இருக்கும்  பெண் யாராக இருந்தாலும் சரி! தாய்க்கு பிடித்து விட்டால் எனக்கும் சரிதான் என அந்த பையனே சொல்லி விட்டதாகவும், தரகர்  வந்து சொன்ன போது இந்த பெண்ணுக்கு மனதுக்குள் உல்லாச பறவையொன்று சிறகடித்து பறந்தது.

கடைசியில் ஒரு நாள் அந்த அம்மா மட்டும் வந்து பெண்ணைப்பார்த்து பிடித்து விட்டால், உடனே நிச்சயதார்ந்தான்!  அது மட்டுமல்ல! என்  மருமகளின் குடும்ப பொறுப்பையும் சமையலையும் ரசித்து , ருசித்து பார்க்கிறேன் என்று அவர்கள் வீட்டிலிருந்து கடிதம் (அந்த காலங்களில் கடிந்தானே!) வர, தந்தைக்கும் மகளுக்கும் சந்தோஸம் எட்டிப் பார்த்தது. வரும் அன்று வீட்டை பார்த்து பார்த்து சுத்தம் செய்ததோடு, அன்று அவர்கள் வீட்டிலேயே  பசியாறி விட்டும் போகலாம் என்பதினால், வடை பாயாசம் செய்து விருந்தாக சமைத்து வை என்று சொல்லி விட்டு வெளியில்  சென்ற  தந்தையின்  கட்டளைபடி  சமைக்க ஆரம்பித்தவளுக்கு, சின்ன சந்தேகம் உதித்தது. செட்டு கட்டாக குடும்பம் நடத்தி தன் மகனை வளர்த்து படிக்க வைத்தவருக்கு, வந்த முதல் நாளிலேயே அமர்களமாக சமையல் வகைகளை செய்து  பறிமாறினால்,  அதை ஆடம்பரமாக கருதி விட்டால் என்ன செய்வது என சந்தேகம் எழ, ஒரு சாம்பார், ரசம், வாழைக்காய் பொரியல், அப்பளம் என அளவோடு தயார் செய்து வைத்தாள். தானும் மிகவும் எளிய ஆடை அலங்காரங்களுடன் தயாராகி, வரும் விருந்தாளியையும் வெளியில் சென்றிருக்கும் தந்தையையும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சொன்னபடி வந்த பையனின் அம்மா அறிமுக படலம் முடிந்ததும்,. வீட்டின் நேர்த்தியை பார்த்து பாராட்டினார். அவளுடைய எளிய நடை உடைகளை கண்டு வியந்தார். ஓய்வு நேரத்தில்  அவள் செய்திருந்த கலைப் பொருள்களை கண் கொட்டாது பார்த்து சான்றிதழ் தந்தார். பையனின் அம்மா வருதற்கு முன்பே ஓட்டமாய் ஓடி வந்திருந்த பெண்ணின் தந்தை பார்த்துபார்த்து அவருடன் பவ்யமாக பேசியபடி தன் பெண்ணின் திறமைகளை அவவப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சாப்பிடும் போது முகம் முழுக்க மகிழ்வுடன் " சமையல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.இந்த பொரியல் என் மகன் விரும்பி சாப்பிடுவான். உன் கைமணம் பிரமாதம்! இதற்கே என் மகன் மயங்கி விடுவான்." என்றெல்லாம் சிறிதும் வெட்கப்படாமல் கூறி, தன்   பெண்ணை வெட்கப்பட வைத்ததைக் கண்டு தந்தை திருமண நிச்சயமே நடந்து விட்டதை போல மகிழ்ந்தார். வெகுவாக தன் சமையலை பாராட்டியதும் நாண மிகுதியில் நின்றிருந்தவளிடம் பையனின் அம்மா "வாழைக்காய் பொரியலுடன் காரமாக மற்றொரு பொரியல் செய்திருந்தாயே அது என்னம்மா?" எனக் கேட்கவும், வாழைக்காய்  தோல்களை வீணாக்காமல் அதையும் தான் புதுவிதமாக  புது பாணியில்  சமைத்திருப்பதை சொல்ல. "பேஷ் எனக்கேற்ற மருமகள்தான் நீ"! என்று தனியான ஒரு பாராட்டுரைத்து, இன்னும் ஒரு வாரத்தில், நாள் பார்த்து என்மகனுடன் வந்து நிச்சயம் செய்து விடுவோம் என்று நம்பிக்கை விதைகளைத் தூவி விடை பெற்றுச் சென்றார். அப்போதே வீடு திருமணக் களையை கட்டியிருந்தது போன்ற ஆனந்தத்தில் தந்தை மிதக்க, மகளும் தந்தையின் மன சஞ்சலம் நீங்கியது கண்டு பெருமகிழ்ச்சியடைந்தாள்.

வாரம் ஒன்றின் மேல் கடந்து சில தினங்களாயினும், தகவல் ஒன்றும் வாராமலிருக்க தானே கடிதம் எழுதி விசாரிக்கலாமா  என தந்தை யோசிக்கையில்  அவர்களிமிருந்து கடிதம் வந்தது. பெண்ணின் பெருமைகளை குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் நேர்த்தியை, அமைதியான சுபாவத்தை, சமையல் திறத்தை அனைத்தையும் மீண்டும் ஒருமுறை புகழ்ந்து எழுதியிருந்த பையனின் அம்மா, "உங்கள் பெண்ணை எனக்கு மிகவும் பிடித்துள்ளது .ஆனால் அவளை மருமகளாக அடையும்  பாக்கியம் எனக்கில்லை! உங்கள் பெண்ணின் திறமைகளை கூறி என்மகனுடன் எத்தனையோ விவாதம் செய்து விட்டேன். ஒரு காயுடன் அந்தக் காயின் தோல்களை வைத்து திறமையாக சிக்கனமாக உணவு தயாரிக்கும் பாங்கையும் சுட்டிக் காண்பித்து விட்டேன். ஆனால், இப்போதுதான் நாம் நல்ல நிலையில் இருக்கிறோமே அம்மா! மறுபடியும் உங்களை மாதிரியே சிக்கனத்தை உபதேசித்து, என் நிகழ்கால கனவுகளை கலைக்கும்படியாக ஒரு பெண் தேவையா? தயவு செய்து  வேறிடம்  பாருங்கள்! இந்த ஒரு விசயத்தில் மட்டும் உங்கள் பேச்சை கேட்காததற்கு மன்னியுங்கள்! எனறு கூறி விட்டான். அவனை வறுப்புறுத்த முடியவில்லை! தயவு செய்து நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்.உங்கள் பெண்ணின் குணத்திறகும்,, திறமைகளுக்கும்  நல்ல இடம் கிடைக்கும்!"என்றபடியாக முடிந்திருந்த கடிதத்தை கண்டதும் படித்துக் கொண்டிருந்த தந்தை அதை வெறித்தோடிய முகத்துடன் நழுவ விட்டதும், அதை எடுத்து வரி விடாமல் கண்களை ஓட விட்டவள்,  மனம் கனத்து கண்களில் ஓடத் துடித்த கண்ணீருக்கு சட்டென்று தடை போட்டவளாய், தந்தையை பார்த்தாள்..வாடிப்போயிருந்த தந்தையை கண்டதும் கண்களின் விளிம்பில் விடாமல் ஓடிச் சிதற துடித்துக் கொண்டிருந்த கண்ணீர் அவள்அனுமதியின்றி கண்ணங்களில் வழிந்து மறைந்தது.

இந்த கல்யாண சந்தையில் மாமியாரை பார்ப்பதா? இல்லை! கணவனாக வருகிறவனை கவனிப்பதா? ஒருவரை திருப்திபடுத்தி சந்தோஸபடுத்தியதற்கு பரிசாய் மற்றவரின் அதிருப்தியை  பெற வேண்டியுள்ளதே!  என்று மனதில் எழுந்த எண்ணத்தின் விளைவாய் இளநகை ஒன்றை சிந்தியபடி கடிதத்தை கிழித்தெறிந்து விட்டு தற்சமயம் தந்தையை தேற்றுவதே தன் பணி என்பதை உணர்ந்தவளாய் தந்தையை சமாதானபடுத்த முனைந்தாள்.

இந்தக்கதை என்னுள் இன்றளவும்.மறையவேயில்லை.  நான் எழுதும் போது சற்று மிகை படுத்தி  வார்த்தைகளை உபயோகித்திருக்கலாம்.  ( தந்தை பாத்திரம்  என் கற்பனையில் உதித்தாக கூட இருக்கலாம். .ஆனால்  கதையின் கரு இதுதான்.) நான் எழுதிய இந்த மூன்று விசயங்கஞக்கும் சம்பந்தம் இருக்கிறதாவென்றும் எனக்குத் தெரியவில்லை. என் மனதில் தோன்றியதை எழுதி விட்டேன். இதைப் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்!

Thursday, August 25, 2016

ஆழ்ந்த பக்தி

சுயநலன்கள் ஒவ்வொரு மனிதரையும்  அவர் அறியாமலே,  பிடித்து வாட்டும் ஒரு  நோய்!  அந்த நோயை கடவுளிடம் பக்தியோடிருத்தல் என்ற மருந்தின் மூலம் சற்று புரையோட விடாமல், காப்பாற்றலாம்..

நீ என்னையே அனுதினமும் நினை! ஏனெனில் நான் எப்போதும்  உன்னில்தான் உள்ளேன்.  நீ வேறு , நான் வேறு அல்ல! என்றான் பரந்தாமன்.


துவாரகை  நகருக்குள் நுழைந்த  அந்த   ஏழை  அந்தணனரால்,  தான் காண்பது கனவா,  நனவா  என்று அனுமானிக்க    முடியாமல்   தத்தளித்துக் கொண்டிருந்தார். பார்க்கும் இடங்களெல்லாம்  மாட மாளிகைகளும்,  கூட கோபுரங்களும்  மனதில் ஒரு  வகையாக அச்சுறுத்தின.  எங்கு பார்த்தாலும், செல்வத்தின் செழிப்புதான்!. பின்னே! பரந்தாமனும்,  அவனில் பாதியான செல்வத்தின் நாயகியுமான  திருமகளும் வாசம் செய்யும் புண்ணிய பூமி சுவர்க்கமயமாகத் தானே  திகழும்.  அந்த  ஏழை அந்தணருக்கு மனதிற்குள் பெருமிதம் பொங்கித் ததும்பியது. இளமையில், பால்ய  காலத்து நண்பன், குரு குல வாசத்தில் ஒன்றாக  படித்தவன்,  அழகே உருவானவன், வீர தீரங்களில் வல்லவன், மாயா ஜாலங்களில்  நிகரற்றவன், காண்போரின் மனதையெல்லாம் கவர்ந்தவன், அன்பு தாய், தந்தையரைப் பெற்றவன், அநீதிகளை அழிக்க வென்றே அவதரித்தவன்,  இத்தனைக்கும் மேலே  ஏராளமான சிறப்புக்கள் பெற்ற சாட்சாத்  அந்த பமன்நாராயணனின் அம்சமான கிருஷ்ண பரமாத்மாவை , இத்தனை வருடங்கள் கழித்து காணும் பேறு பெற்றமைக்கு, பிறந்திலிருந்து இதுவரை இல்லாத சிறு கர்வமொன்று, மனதுக்குள்  பந்தாக எழும்பி அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

நகரில்  கிருஷ்ணனின்  அரண்மனையை விசாரித்து  உள்ளே  நுழைந்தாகி விட்டது. வாசலில் கண்ணனை காண தவமிருக்கும்  ஏராளாமானவர்களை எப்படியோ கடந்து இதோ! தன் முறை வரும் வரை  பொறுமை காத்து காவலாளியின் முன் வந்து தடங்கலுடன்,  உள்ளே செல்ல அனுமதியின்றி, தடைபட்டு நிற்கும் அவல நிலை வருமென சற்றும்  நினைக்கவில்லை அந்த அந்தணர்.

"எங்கள் மன்னனை  பார்க்கவெல்லாம்  உன்னை அனுமதிக்க  முடியாது. போ! போ!  போய் உன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்க்கிற தகுதியோடு வா! இல்லையென்றால்,  அவரை காணும்  எண்ணத்தை கைவிட்டு விட்டு  இவ்விடம் நில்லாது  திரும்பிப் போ!'' காவலாளி   தயவு  தாட்சண்யம் இல்லாமல் விரட்டியபடி இருந்தான்..

"தான்  வந்த  நோக்கம்  நிறைவேறாமல்  போய் விடுமோ?  மனது  அனலாக கொதிக்க,  பல  நாட்கள்  பட்டினியாய்  கிடந்த தேகம்  தள்ளாட,  காடு ,.மலை பாராமல்  நடந்தோய்ந்த  புழுதி படர்ந்த  கால்கள் நடுங்க,  கிழிந்த  தன் மேலாடையால் , ஆறாகப் பெருகிய  வியர்வையை  துடைத்தபடி, '' ஐயா !  நீர் போய் இன்னார்  வந்திருக்கிறார் என்றால்,  எம்பெருமான் மகிழ்வடைவார். கண்டிப்பாக என்னை  காண்பதற்கு  ஆவலோடு  என்னை அழைத்து வரச் சொல்லுவார். தயவு செய்து என்னை மறுக்காமல் உள்ளே அனுப்புவதற்கு ஆவணச் செய்யுங்கள்.''  என்றார்  அந்த  அந்தணர்  குரலில்  சிறிது  கெஞ்சல் மிகைப்பட்டது.

அவரது  தோற்றமும்   அழுக்கடைந்த  கந்தல் ஆடைகளினால் , உடம்பை மூடவியலாது  படும்  சிரமங்களுடன்  அவர்  நின்றிருந்த  கோலமும்,   கண்களை உறுத்தினாலும்,. அவர் முகத்தில்  கற்றறிந்த  களை ஒரு தனிக் களையாய் ஜொலித்தை   கண்ட  காவலாளிக்கு, "இவரை  கண்ணனை பார்க்க அனுப்பா   விட்டால், பின் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்  என்ன  செய்வது? அதற்காக கண்ணன் கடிந்து கொண்டால்  எப்படி சமாளிப்பது? ''  என்ற சிந்தனை கொஞ்சம் தலை தூக்கவே,  "சரி! மன்னர் கேட்டால் நான் யார் வந்திருப்பது என்று சொல்வது? அப்படியே கூறிய பின்னும், அவர் காண விருப்பமில்லை என்று சொல்லி விட்டால், நீர் இந்த இடத்தை விட்டு அகன்று விடவேண்டும். சம்மதமா?'' என்ற ஒப்பந்ததத்தின்  முடிவில்  காவலாளி  சற்று தளர்ந்து வந்தான்.

அந்தணருக்கு  அப்போதே கண்ணனை  கண்ட  மாதிரி ஒரு ஆசுவாச உணர்வு ஏற்பட்டது. நிம்மதி பெருமூச்சுடன், அப்பா! நீ நன்றாகவிருப்பாய்!  உங்கள் மன்னனிடம்  சென்று உங்கள் பால்ய சிநேகிதன் சுதாமகன் உங்களை காணும் ஆவலோடு  வந்திருக்கிறான் என்று சொல்லு!  அதற்குபின் அவர் என்னை காண பிரியபடவில்லையென்றால். நான் உன்னை எந்த சிரமத்திற்கும் உட்படுத்தாமல், கிளம்பி விடுக்றேன்.''  என்றார்.

காவலாளியும் அரைகுறை மனதோடு  கண்ணனைக் கண்டு விபரங்கள் சொல்ல மாளிகையுள் பிரேவேசித்தான்.

தங்கள் வறுமை நீங்க  ஏதேனும் பொருள் பெற்று வரும்படி தன்னை இவ்விடம் அனுப்பி வைத்த தன்  மனைவி சுசீலையை ஒரு  விநாடி  நினைத்த போது சுதாமகருக்கு,  தான் அவ்விடத்திலிருந்து  கண்ணனிடம்  பொருள் யாசிக்க கிளம்பும்  முன், தனக்கும் அவளுக்குமிடையே நடந்த வாக்குவாதங்கள் நினைவுக்கு வந்தன." என்னதான் பால்ய சிநேகிதன், குரு குலத்தில் ஒன்றாக படித்தவர்கள் என்றாலும், வளர்ந்து வாலிபத்தை எட்டி கிரகஸ்த வாழ்வைத் துவக்கி,  வெவ்வேறான பின்னும், பால்ய நினைவுகளை  சுட்டிக் காண்பித்துக் கொண்டு உதவி கேட்க, சுதாமகருக்கு கொஞ்சமேனும் விருப்பமில்லை!. ஆனால், சுசீலையும் என்ன செய்வாள்?  தான் தினமும் கொண்டு வந்து தரும் சொல்ப தான்யங்களை  வைத்துக்கொண்டு, இருபத்தேழு குழந்தைகளையுடைய தங்கள் பெருங்குடும்பத்தை எவ்விதம் சமாளிப்பாள்? தினமும் கால் வயிறும், ஒரோர் நாள் பட்டினியுமாக  அவர்கள் அனைவரும் பசியின் கொடுமையால்  அழுது அரற்றி  தூங்கிப்போகும் காட்சியை  ஒரு அன்புள்ள தாய் எப்படி சகிப்பாள்?  மிகுந்த   பொறுமைசாலியான  தன் மனைவி நாட்டில் பஞ்சம் வேறு தலைவிரித்து ஆடியவுடன், வேறு வழியின்றி தன்னிடம் , "உதவி செய்ய  உறவுகள் ஒருவரும் இல்லை! குழந்தைகளின் பசி மயக்கத்தை  ஒவ்வொரு நாளும் காண சகிக்கவில்லை. அதனால் குழந்தைகளுக் காகவாவது  தாட்சண்யம்  பாராமல், பார்த்துப்பேசி விட்டு வாருங்கள்! ''என்று பால்ய நண்பன் கண்ணன் நாட்டையாளும் மன்னனாய் இருப்பதை  உணர்த்தி, அவனிடம்  பொருளுதவி பெற்று வர தன்னிடம் வாதம் புரிந்து  அதில் வெற்றி பெற்று,  இதோ! துவாரகையின்  வாசல் வரை வந்து நிற்கும்படி  செய்து விட்டாள்.

வறுமைதான்! என்னசெய்வது? அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். வீடு நிறைய குழந்தை செல்வங்களை கொடுத்தவன் அவர்களை வைத்து சம்ரட்சணை  பண்ணவும் ஒரு உபாயத்தை கொடுப்பானில்லையா? பொறுப்போம்!  என்று மனைவியிடம் தினமும் வலியுறுத்தி, காலம் கடத்தி வந்த சுதாமகருக்கும், நாளாக,  நாளாக நண்பனை காணும்  ஆவல் உந்தித்தள்ள,  ஒரு நாள்  பொறுக்க முடியாமல்  சென்று வருகிறேன்'' என்றவுடன் , இருப்பதில் கொஞ்சம் நல்ல ஆடையை எடுத்து அவரை அணியச் செய்து,  கண்ணனுக்குப் பிடித்தமான அவலை எப்படியோ அங்குமிங்கும் அலைந்து கொஞ்சம் பிரயத்தனத்தில்  ஏற்பாடு செய்து கொடுத்து, நல்ல செய்தியோடு வாருங்கள்!  காத்திருக்கிறோம். என அனுப்பிவைத்து விட்டாள். யாசகம் பெற இயலாது போயினும், நண்பனை  கண் குளிர,மனம் நிறைய தரிசனம் செய்ய வாய்ப்பு வந்ததேயென, கால் கடுக்க ஒடி வந்தவனை இங்கு காவலாளி ஆயிரம் காரணம்  சொல்லித் தடுத்து நிறுத்துகிறான். "வேறு சிறப்பான உடை அணிந்து வந்தால், மன்னனை காண வழிவிடுகிறேன்'' என்கிறான். இதை விட சிறப்பான உடைக்கு தாம் எங்கே போவது?  வந்திருக்கும் அந்த சூழலிலும், தம் நிலை குறித்தெழுந்த சிந்தனையில், இளநகை ஒன்று அவர் இதழ்களில் எழுந்து மறைந்தது.

"தன்னைப்போலவே கண்ணனும் தன்னை மறவாதிருப்பானா?  குரு குலவாசத்தில் தன் ஏழ்மை நிலையை பொருட்படுத்தாமல், தன்னை அரவணைத்து அன்பு செலுத்தியவன் இப்போதும் அதேபோல் அன்புடன் நேசம் காட்டி பேசுவானா? இல்லை ,  மன்னனுக்குரிய குணநலன்களில்,  பால்ய நட்பை மறக்க முயற்சித்திருப்பானா? '' காவலாளி  வெளியே வந்து சொல்லப்போகும் அந்த விநாடிக்காக  உயிர் துடிக்கும் அவஸ்தையோடு காத்திருந்தார் சுதாமகர்.


பரந்தாமன் கண்ணன்  வாயில் காப்போன் வந்து சொன்னதும்,  சிறிதும் தாமதியாது,  வாசலுக்கே  விரைந்து வந்து விட்டான்.  ''வாசலிலேயே அவரை யார் என்று  விசாரித்து அனுப்பு  என்றோ, இல்லை  அவருக்கு வேண்டிய  உதவி யாது? என விபரமாக கேட்டு  அதற்கு வேண்டியதை  தக்கபடி செய்து அனுப்பு !என்றோ  மன்னன் கூறுவான் என்று எதிர்பார்த்து  விபரம் சொல்ல வந்தவன் மூர்ச்சித்து விழாத குறையாக திக்பிரமையடைந்து  நின்று விட்டான். சிறிது தெளிந்து கண்ணனை பின் தொடர்ந்து  அவனும் ஓட  வாசலில் கண்ட காட்சி அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"வா! வா! சுதாமகா ஏன் வாசலோடு நிற்கிறாய்! எபபோது  வந்தாய்?  வந்தவன் நேராக என்னை தேடி வராமல் தாமதித்து கொண்டு  கால்  கடுக்க இங்கேயே ஏன் நிற்கிறாய்?  இந்த  சேவகன்  உன்னை விட மறுத்தானா?  என்றபடி ஓடி வந்து மார்போடு தழுவிக்கொண்ட  கண்ணனைக்  கண்டதும் ,சுதாமகர் ஆனந்தத்தின் உச்சிக்கு சென்று விட்டபடியால், பேச நாவெழும்பவில்லை! கண்களில் நீர்வடிய  கண்ணனின் செய்கையால் மெய் சிலிர்த்து நடுங்கிய தன் தேகத்தை அவன் அணைப்பிற்குள், இன்னும் சற்று ஒடுக்கியபடி,  நாத்தடுமாற கண்ணா,  கண்ணா என்று அரற்றலானார்.

கண்ணன், அன்பின் மிகுதியினால் சுதாமகரை  அரவணைத்து கொண்டபடி., ""சொல்லு சுதாமா, நீ வந்ததை முன்பே தெரிவித்திருக்க கூடாதா?  இந்த சேவகன்தான் தாமதபடுத்தி விட்டானா? கண்ணன் மேலும், மேலும் துருவி கேட்க, தன்னை  ஒருவாறு சாளித்தவாறு, " இல்லை! இல்லை  கண்ணா நான் இப்போதுதான் வந்தேன். உன்னைக் காணவேண்டுமென்று சொன்னதும், அவர் ஓடோடிச் சென்று உன்னிடம்  நான்  வந்திருப்பதை கூறியதும்தான் உன்னை காணும் பாக்கியம் எனக்கு உடனடியாக உன் அரண்மனை வாசலிலேயே கிடைத்தது.'' என்ற சுதாமகரின் பதிலால் பயத்தின் பிடியிலிருந்த காவலாளி நெகிழ்ந்து சுதாமகரை பார்த்து நமஸ்கரித்தான்.


அடுத்து வந்த இருதினங்களிலும், நண்பனின் இனிய  உபசாரங்களில் மூழ்கித் தவித்தார் சுதாமகர். தாம் எங்கிருக்கிறோம்!  தாம் யார்?  எதற்காக இங்கு வந்திருக்கிறோம்!  என்ற சுயசிந்தனை சற்றும் எழாமல் கண்ணனின் நட்பு , பாசம் பெரும் கயிறாக அவரை கட்டிப் போட்டது.  அன்று வாசலில் சந்தித்தவுடன், தன் மனைவி  ருக்மணிதேவியின் உதவியுடன் தங்கத் தாம்பாளத்தில்  தான் தடுத்து நிறுத்தியும்  கேளாமல்,  தன் காலில் நிறைந்திருந்த புழுதியைப் பற்றி கூட  கவலையுறாது,  பாத பூஜை செய்வித்து தன்னை உள்ளே அழைத்து சென்றதிலிருந்து , இன்று வரை அவனுடைய  ராஜ்ஜிய பரிபாலனையை கூட அவசர கதியில் முடித்து விட்டு, தன்னுடனேயே பொழுதைப்போக்கி தனக்கு ராஜ உபசாரம் செய்வதை  மட்டும் கண்ணும் கருத்துமாக எண்ணி  செய்து வந்த கண்ணனை நினைத்து,  நினைத்து மெய்யுருகிப் போனார்.  அன்று வாசலில் நின்றிருந்த    போது  தன்னை சந்திப்பதில் அக்கறை எடுத்துக்கொள்வானோ இல்லையோ?  என்று ஒரு விநாடி  அவனை  தான் சந்தேகித்தது எத்தனை பெரிய பாவம்!  அந்தப் பாவத்தை எங்கே கொண்டு கரைக்க போகிறோம்  என்று மனதுக்குள்  அடிக்கடி  சஞ்சலமடைந்தார்.

இவ்விதமாக  இரு தினங்கள் கழிய  மூன்றாவது நாள் சுதாமகருடன்  பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்த  கண்ணன்,  "சுதாமா, நீ என்னை தேடி வந்த நோக்கத்தை இது வரை நான் அறிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை பார்!  நீயும் சொல்லவேயில்லை!  நானும் நாள் கடந்து உன்னை சந்தித்த  மகிழ்ச்சியில் அதைப்பற்றி  கேட்கவில்லை பார்த்தாயா?  என்னால் உனக்கு ஏதாவது உபகாரம் வேண்டுமா?  நீ எது வேண்டினும் தருகிறேன்.'' என்றதும்தான், தன்னுடைய பழைய உலகிற்கே திரும்பினார் சுதாமகர். மனைவியின்  நினைவும,  பசியில் கரைந்துருகும்  குழந்தைகளின் முகங்களும், நினைவுக்கு  வர,  தாம்  யாசகம்  வேண்டி  இங்கு  வந்ததன்  நோக்கம்  ஞாபகம் வந்தது.. ஆனால்,  இத்தனை  பிரியத்துடன்  நட்பை பொழிந்தவனிடம், "பொருளுதவி  வேண்டிதான்  உன்னைக்காண  வந்தேன்.'' என்று  சொல்ல மனம் வரவில்லை.   தன் மனைவி "சென்று வாருங்கள்'' என்று வறுப்புறுத்திய போது கண்ணனை கண் குளிர தரிசிக்க வேண்டும்  என உள்மனதில் ஆசை எழுந்ததை நினைவு கூர்ந்தவராய், "நோக்கம் எதுவுமில்லை பரந்தாமா! உன்னைப்பார்த்து நீண்ட  வருடங்கள்  ஆகிவிட்டபடியால், பார்த்து விட்டு செல்லலாமென  வந்தேன். உன் அளவு கடந்த உபசரிப்பினால், என் பிறவி முழுக்க  பெரும் ஆனந்தம்  கொள்ளும்படி செய்து விட்டாய்!  இந்தப்பிறவியில் உன்னுடனிருந்த இந்த நினைவுகளை ரசித்துக்கொண்டே  காலத்தைகழித்து விடுவேன். பார்த்தாயா!  உன்னுடன் இருந்த இந்த நாட்களில்  என் மனைவி மக்களை மறந்தே  போனேன். என் வரவுக்காக அவர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள்!  எனக்கு விடை கொடு!  நான் கிளம்புகிறேன். '' என்றார்.

கண்ணன் உள்ளூர  நகைத்துக்கொண்டான்.  அத்தனை ஏழ்மையிலும், நண்பனென்ற போதும்,  பொருளுக்காக பிறரை அண்டாத உத்தம குணம் படைத்த தன் நண்பனை நினைக்கையில்,  மனதில்  பெருமிதம் மூண்டது. இவன் எதுவும்  வேண்டாமலே,  இவனுடைய  சிரமங்களை குறைக்கும் காலத்தை கொடுக்கும் கடமை  தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்தவராகையால், " சரி சுதாமா! நீ சென்று  வா! உன் மனைவி குழந்தைகளை விசாரித்தாகக் கூறு.! அடுத்த தடவை அவர்களையும் சந்திக்க நான்  பிரியப் படுவதாக  சொல்!  ஆமாம் ! நீ என்னை காணவரும் போது வெறும் கையோடாகவா வந்தாய்? அப்படியே நீ என்னை காணும் ஆவலில் வந்திருந்தாலும் ,  என் அண்ணி அவ்விதம் அனுப்பியிருக்க மாட்டார்களே? ஏதாவது கொடுக்கச்சொல்லி தயாரித்து தந்திருப்பார்களே''என்று அனைத்தும் அறிந்த கண்ணன் கேலியாக வினவவும், சுதாமகருக்கு சங்கடமாகப் போயிற்று.

பழைய அழுக்கான கந்தல் அங்கவஸ்தரத்தில் முடி போட்டு கொண்டு வந்திருந்த அவலை "இதுதான் நான் உனக்காக கொண்டு வந்த வஸ்து ' என்று கூறி அதை எடுத்துத்தர அவமானமாய் இருந்தது.  யசோதையின் மைந்தனாய் அன்றிருந்த இளமை காலத்து நிலையில், வேண்டிய உணவோடு அவலும், அவனின் பிரியமான உணவாக இருந்திருக்கிறது. ஆனால், கண்ணன் இன்றிருக்கும் ராஜ வாழ்வில் இதை அங்கீகரிப்பானா? இதுதான் நாங்கள் உனக்காக தயாரித்து வந்த அன்பின் அடையாளம்'' என்று எப்படி  தருவது என சுதாமகர் தயங்கி நிற்கும் சமயத்தில், கண்ணன் அவரின் மேலாடை மறைவிலிருந்த அவலைக்  கைப்பற்றி, "ஆஹா!! எனக்கு மிகவும் பிடித்தமான  அவலைத்தான் கொண்டு  வந்திருக்கிறாயா? அதுதானே  பார்த்தேன். !அண்ணி  என்னை ஒரு நாளும்  மறந்ததில்லை, என்றபடி ஒரு பிடி  அவலை எடுத்த வாயில் போட்டு மென்றார்.  மற்றொரு பிடியும் வாயில் போட்டபடி ஆஹா! என்ன ஒரு ஆனந்தம். பழைய நினைவுகள் மீணடும்  வருகிறதே சுதாமா'' என்றபடி. மூன்றாவது பிடியை கையில் எடுத்தவுடன், அதுவரை இவர்கள் சம்பாஷனையை அருகிலிருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த ருக்மணி தேவி, "போதும், உங்கள் விளையாட்டு! தங்கள்  சிறு பிள்ளை விளையாட்டை  துவக்கி விட்டால், என்னைக்கூட மறந்து விடுவீர்களே!  எனக்கும் தங்கள் நண்பர் கொண்டு வந்திருக்கும் அவலில் ஒரு பங்கு வேண்டாமா?'' என்றபடி தன் கணவரிடமிருந்த அவலை தான் பெற்றுக்கொண்டாள்.

தான் கொண்டு வந்த  எளிய பொருளை,  கணவனும் மனைவியும் பெருந்தன்மையாக  போட்டி போட்டு உண்பதைக் கண்ட சுதாமருக்கு பரமானந்தமாக இருந்தது.எப்படியோ யாசகம் ஏதும் பெறாமல்..கண்ணனிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கண்ணனுடன்  கழித்து ஆனத்தித்த நினைவுகளை மனதில் இருத்தியபடி  சுதாமகர் தன்  ஊரை  அடைந்தார். மனைவி குழந்தைகளை வறுமையினின்றி எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற கவலையும், நடுநடுவே எழுந்தாலும்,  தான்பெற்ற கிருஷ்ண தரிசனமே, தன் குழந்தைகளை  வறுமை பிடியிலிருந்து   காப்பாற்றி கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் ஊரினுள் கால் பதித்தவர் .தன் ஊரே துவாரகையாக மாறி இருந்ததை கண்டவுடன் திகைத்தப்போனார்.

உற்றமும்  சுற்றமும் ஊரில் உள்ளவர்களும் தன் மனைவி மக்கள் அனைவருமே அடையாளம் தெரியாதபடிக்கு செல்வச்செழிப்புடன் மாறியிருந்த விந்தை கண்டும், தான் துவாரகையிலிருந்து  கிளம்பும் நேரத்தில்தான் ,இவ்வித அதிசயம் நிகழ்ந்தது என சுசீலை கூறவும்,  சுதாமகருக்கு அனைத்தும் புரிந்தது. அள்ள, அள்ளக்குறையாத  மஹாலெஷ்மியின் மணாளன், மாயா ஜாலங்களை பிறந்ததிலிருந்து செய்து  மற்றவர்களுக்காக வாழும் தன்னுயிர் நண்பன் கண்ணனின் அதி அற்புத விளையாடல்களில் இதுவும் ஒன்றென  விளங்கியது.

"பரந்தாமா! எங்களூரின் வறுமை அகல என்னை ஒரு காரண கர்த்தாவாக்கி  நீ செய்த இந்த திருவிளையாடலை என்னவென்று எடுத்துரைப்பேன் . உன்னையே சரணடைந்தவர்களை  நீ என்றுமே கை விட்டதில்லை என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும் '' என்று கண்களில் நீர் வடிய மெய்யுருகி  நின்ற சுதாமகர் முன்னிலும் அதிகமாக இறைவன் கண்ணனிடம் பக்தியுடன் நட்பு கொண்டு  வாழ்ந்து வந்தார்.


நாளை கண்ணன் அவதரித்த நாள்!  (ஜன்மாஷ்டமி)  சுதாமகரை போன்று நாமும் கண்ணனிடம் தூய நட்பு கொண்டு  அவன் மிகவும் விரும்பும் அவலை (நாம் எத்தனையோ பட்சணங்கள் அவனுக்காக செய்து நிவேதனம் செய்தாலும்) அவனுக்கு மனதாற படைத்து ,  எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனையிலும் அவனை மறவாதிருக்க வேண்டி  பிரார்த்தனை செய்து, பூஜிப்போமாக....
                       
                                         வாழ்க இறையருள் .









Sunday, March 8, 2015

பெங்களூரின் கோவர்த்தனா ஆலயம்...




ண்ணனின் சிறப்பைக்௬றும், குகைக்கோவில், அல்லது குகை வடிவில் அமைத்தக்கோவில் இங்கு நான் பார்த்த இந்த கோவில்..! கோவர்த்தனா கோவில் என்ற பெயருடன் உள்ளது. சிறப்பான அந்தக்  கோவிலின் மத்தியில் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி (மலை) யை தன் இடது கையின் சுண்டு விரலால் தாங்கியபடி நின்றிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். 

தேவகிக்கு மகனாய் பிறந்து, கோகுலத்தில் ஆயர் பாடி சிறுவனாய், யசோதையிடத்தில்  பாசமாக வளர்ந்து வந்தார் பகவான் கிருஷ்ண பரமாத்மா. குறும்புகள் பல செய்து அனைவரின் மனம் கவர்ந்து, யாதவர்களின் இடர் களைந்து, தன்னை அழிக்க வந்த அசுர சக்திகளை  விளையாட்டுத்தனமாய், சிறிதும் பயமின்றி அழித்து யாதவர்களை வியக்குமாறு செய்வதே கண்ணனின் சிறுவயது லீலைகளாய் இருந்தது.

அவ்வாறு ஒரு தடவை யாதவர்கள் எப்போதும் மழை சுபிஷ்டமாக பெய்ய வேண்டி, யாகங்கள் செய்யும் சமயம், தேவேந்திரனுக்கு அழித்து வந்த மரியாதையை செய்ய மறந்து, அந்தவிழாவை கொண்டாடியதால், கோபமுற்ற தேவேந்திரன், கண்ணின் லீலைகளில் மயங்கித்தான் தன்னை அவர்கள் மறந்து விட்டனர் என்ற எண்ணம் கொண்டு அவர்களை பழி வாங்கும் விதத்தில், பெரு மழையையும் காற்றையும் உண்டாக்கி யாதவர்களை நடுங்க வைத்தான்.! சற்றும் நிற்காமல் சீறிப்பாயும் விதத்தில் மழையும், காற்றும் ஒருசேர கோகுலத்தை அழிக்க வந்த அசுரனின் மனோ பாவத்தில் நர்த்தனமாடியதில்,யாதவர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பயிர்கள் மூழ்கின..அவர்களின் ஜீவாதாரமாகிய கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெளியில் தலை காட்ட முடியாமல், யாதவர்கள் அனைவரும் சில நாட்கள் பொறுத்தபின், இனி அது இயலாத செயல் என்பதால், அரக்கர்களிடமிருந்து தன்னையும் காத்துக் கொண்டு, தம்முடைய நலன்களையும் காத்து ரட்சிக்கும், கிருஷ்ணனிடம் அடைக்கலமாயினர்.

கிருஷ்ணா, மாதவா, கோவிந்தா, ஆபத்பாந்தவா, அனாதைரட்சகா, நீ சிறுவனாய் இருந்தாலும், எங்களை ஆபத்துகளிலிருந்து அனேகமுறை காத்திருக்கிறாய்.! இந்தமுறையும் இயல்பாய் இயற்கை அமைதி கொள்ளும் என்று நாங்கள் பொறுத்திருந்தோம்.! இனி அது நடவாத செயல் என்பதை உணர்ந்து கொண்டோம். வீடு வாசலிலிருந்து கால்நடைகள் மற்றைய செல்வங்கள், ஏன் எங்கள் உயிர்களையும் இழந்து விடும் அபாயம் எங்களை சூழ்ந்துள்ளது. வீடு வாசலைக்௬ட காத்துக்கொள்ள நாங்கள் செய்த முயற்சிகள் வீணாகி விட்டன. கால்நடைகளும் வெள்ளத்தில் போக ஆரம்பித்து விட்டன. இனி நீதான் எங்களை காப்பாற்ற வேண்டுமென முறையிட்டார்கள்.

உலகையே படைத்து அதில் வாழும் சகல ஜீவராசிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்கும் பரமாத்மாவாகிய கண்ணனுக்கு தெரியாதா.? இச் சம்பவம் எதனால் எழுந்தது.? இதை எப்படி முடித்து வைப்பது,! என்று அவன் அறியாததா.? யாதவர்களும், “சிறுவன்தானே! இயற்கையை வெல்லும் சக்தியெல்லாம் இவனிடம் ஏது? என்ற சந்தேகத்தினால் தானே, தம்மால் முடிந்த வரையில் செய்து விட்டு பிறகு தன்னிடம் வந்து அடைக்கலமாயிருக்கின்றனர்.! புன்னகையுடன் அனைத்தையும் செவிமடுத்தார் கிருஷ்ணபரமாத்மா...! எல்லாம் அறிவார் பகவான்.! ஆனாலும் "தம்மை  நம்பி  தம்மிடம் முழுமையாக சரணடைந்து விட்டவர்களை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை.!" தம் பகைவனுக்கே அவ்விதம் அருளும் மனமுடையவராததால், யாதவர்களும், இந்திரனும்  உண்மையை  உணர விரும்பி, யாதவர்களை தன்னுடன் வருமாறு அழைத்து  கொண்டபடி,  சீறும் மழையைப் பொருட் படுத்தாமல், பெரும் மலையாய் அகன்று படுத்து கிடக்கும் கோவர்த்தன மலையை  நோக்கி நடந்து  சென்றார். 

யாதவர்கள் அனைவரும் கையில் கிடைத்த செல்வங்களுடன்,  மிச்சம் மிகுதியாக இருக்கும் கால்நடைகளுடனும்,  மனைவி  மக்கள்  சுற்றம் சூழ ஒன்றும் புரியாமல், கிருஷ்ணனை பின் தொடர்ந்தனர். இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும், தம்செயல், தம்வழி, தம்மால்தான் எதுவும், என்ற ஆணவத்தை  மறந்து விட்டு பகவான்  வழி  காட்டி அழைத்துச் செல்லும் பாதையில்தானே செல்ல வேண்டும். அது ஒன்றுதானே, என்றும் சாசுவதமானது.! அந்நிகழ்வைதான் அவர் நடத்திக்காட்டியபடி, ஒடிச் சென்று அந்த பெரும் மலையை தம் சிறு கையால்  எவ்வித சிரமமின்றி பெயர்த்து அம் மலையின் நடு பாகத்தில் தன் இடது கையின் சுண்டு விரல் ஒன்றினால்,அனாசியமாக  தாங்கிப் பிடித்தபடி, “வாருங்கள் ! வாருங்கள்! எல்லோரும் இதற்குள் வந்து மழைக்கு அடக்கமாய்  நின்று கொள்ளுங்கள்,! மழை முழுவதுமாய் நின்ற பின் வெளியேறலாம்.!” என்று கனிவாய் அழைக்கவும், மழைக்குப் பாதுகாப்பாய் ஒண்டிக் கொள்ள இடம் கிடைத்த மகிழ்வில் எதையும் யோசிக்காமல், யாதவர்கள் ௬ட்டங்௬ட்டமாய், தத்தம் பொருட்களுடன், அந்த மலைக்குள்  சரணடைந்தனர்.! அச்செயல் சகல ஜீவன்களும் பரமாத்துமாவாகிய  "அவனுள்" அடக்கம் எனும் உண்மையை உணர்த்தியது.

கோபத்தில் கொந்தளித்து போயிருந்த இந்திரன் இதையெல்லாம்  பார்த்தான். "கோபம் எப்போது ஒருவனின் கண்ணை மறைக்கிறதோ, அச்சமயம்  அவனது ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு முழுவதும் மறைந்து விடும்..!" அந்த இயல்பின்படி  கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த இந்திரன், யாதவர்கள் பாதுகாப்பாக காக்கப்படுவதை கண்டான். இது சாமான்யமான ஒரு மனிதனால், அதுவும் ஒரு சிறு வயது பாலகனால், செய்யக்௬டிய செயலல்ல! யாதவர்களின் மேலிருந்த  கோபத்திரை படிப்படியாக  அகல, பரந்தாமன் கிருஷ்ணாவதாரமாக,  பிறந்திருந்த  செயல் மறந்திருந்த அந்த அறிவினில் உதயமானது.. பரந்தாமனின் கோபத்திற்கு இன்னும் ஆளாகாமல் தப்பிக்க  மழையையும், சுழலும் காற்றையும். நிறுத்தியபடி பெருமானின் பாதார விந்தங்களை வந்து பற்றியபடி சரணடைந்தான். “கண்ணா, பரந்தாமா, தீனதயாளா, நீயார்? என்பதை என் கோபத் தீ மறைத்ததினால், என் மனம் போனபடி நடந்து கொண்டு விட்டேன். என்னை மன்னித்து என்ன தண்டனை வேண்டுமானலும் கொடு ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மன்னிக்க மாட்டேன் என்று மட்டும் ௬றி விடாதே.!” என்று கதறியபடி காலில் விழுந்த இந்திரனை பார்த்து கிருஷ்ணர் புன்னகையுடன் ௬றினார். “சரி! மன்னித்தேன். இனி எப்போதும் இத்தவறு செய்யாதே .! யாதவர்களின் வாழ்கைக்கும், வசதிக்கும் வேண்டிய மழையை தருவித்து அவர்களின் வளத்திற்கு பங்கம் வராமல் நடந்து கொள்.!” என்று மன்னித்தருளினார்.

அப்போது தான் கிருஷ்ணர் தன் ஒரு கை விரலால் பெரிய மலையை தாங்கியபடி தங்களை காத்தருளியதை உணர்ந்து கொண்ட யாதவர்கள், பரந்தாமனை ஒரு சிறுவனாக பாவித்ததை மனதாற உணர்ந்தவர்களாய், அவன் துதிகளைச் சொல்லி அவன் காலில் விழுந்து சரணடைந்து  மன்னிப்பு கேட்டனர்.  அவன் புகழ் பாடி அவனை தோளில் சுமந்தபடி கொண்டாடினர். இவ்விதமாக லீலைகளை செய்தபடி யாதவர்களின் நண்பனாக, சுற்றமாக,  யாதுமாக பகவான், தான் அவதரித்த நோக்கத்திற்காக அவர்களுடன் வாழ்ந்திருந்தார்..!

இந்த கிருஷ்ணனின், லீலைகளை, நான் பார்த்த அந்த குகை கோவிலின் சுவர்களில் அழகாக ஓவியங்களாய் செதுக்கியிருக்கிறார்கள்..! பெங்களூரில் பசவனகுடி என்ற  இடத்தில் இந்த கோவில் உள்ளது. இது குறித்து தகவல்கள்  ஏதேனும் ஒரு பதிவில் ஏற்கனவே வெளியாகி யிருக்கலாம். ஆனாலும் என் பதிவிலும் இட்டு உங்களுடன் பகிர்ந்து  கொள்வதில் மகிழ்வடைகிறேன்..  
   
                                                               நன்றி..!