Monday, September 26, 2022

தேவி ஸ்லோகம்....

சங்கரி மைந்தன் சக்தி கணபதியே துணை. 

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள். அன்னையின் ஆசிகள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட நவராத்திரி அன்னைகளான முப்பெரும் தேவியர்களின் பாதங்களை இந்த  நாளில் பக்தியுடன் போற்றி  நமஸ்கரித்து கொள்வோம். 🙏. 

நன்றி கூகுள்
கொத்தருகும் 

கொன்றை தும்பை சூடும்

கோடி விங்கர் பாகமுடையவளே..

மைக்குழலி மங்கை உமையவளே.. 

வார்க்காது பனியுறையும் வடிவே.. . 

பொற்க்கொடியே 

அடியேனிடர் தீர்ப்பாய்.. . 

புகழுடைய முக்திப்பதம் தருவாய்...

சுத்தமாய் ஜோதியொளி காட்டி

ஜெயமான முக்திப்பதம் தருவாய்.... 

கணடங்கருத்தாரிடத்தில் 

கருணையுடன்

எனக்குறுதி சொல்வாய்....

தண்டம் பணிகிறேன். 

போற்றி. போற்றி. ..

சின்மயானந்த பதம் தருவாய்.... 

பாதகங்கள் தீரவே என்னைப்

பார்த்திடுவாய் உன் 

கருணை விழியால்... 

பார்வதி அம்மாவென்

பாவங்களைப் போக்கி...

பரிவுடனே மோட்ஷப்பதம் 

அருள்வாய்... 

அம்மா... எட்டாத தூரத்திலிருப்பாய்... 

எந்தனுடைய மனந்தனில்

 எப்போதும் இருப்பாய்...  

பக்தாளை தேடி அழைப்பாய்.. 

பாவங்கள் சேராமல் ஒழிப்பாய்.. 

துன்பமெனும் பாவக் கடலில் வீழ்ந்து.

தாய் முகம் காணாத பிள்ளை போல்,

புலம்புகின்றேன் கர்ம பூமியிலே... 

பெரியோர்கள் தொழுதேற்றும்

பெரிய நாயகியே.. 

தாயே சரணம். உன்

தாளே சரணம்.. 

சங்கரியே சரணம். 

மின்னே சரணம்.. 

மீனாம்பா சரணம்.. 

மீனாட்சி தேவியே சரணம்... 

பொன்னே சரணம்... 

பூவே சரணம்.. 

பொற்பாதமே சரணம்... 

சரணம்.. சரணம்.. என்னிடர் தீர்த்து

சாயுஞ்சம்  தருவாய்...

அச்சந்துலைப்பாய்.. 

அருளைப் பொழிவாய்.. 

அழியாப்பதம் தருவாய்.... 

தொப்பை வயிற்றான் 

தும்பிக்கையாலென்னை

தூக்கியே அக்கரை சேர்ப்பாய்.... 

சரணமென்றுந்தன் 

தாளினை நான் பணிந்தேன்

தள்ளி விடலாமோ... 

நெடுநாளாய் உன்னை 

நம்பினதெல்லாம்

நிஷ்பலனாய் விடுமோ... 

கருணாநிதியே... 

கல்யாணி உமையே. .

கதம்பவனஷ்வரியே... 

பாசத்தை போக்கி பாவ பயம் நீக்கி

பாத நிழலில் சேர்ப்பாய்.. 

பஞ்சாட்சரத்தை உபதேசம் செயது

பவபயம் போக்குவிப்பாய்.. 

தேவியே சங்கரர் 

வாமத்தில் விளங்குகின்ற

சேர்வையை தந்தருள்வாய்.. 

அன்னை உமையே 

உன்னை அல்லாமல்

எந்தனுக்கு ஆதாரம் வேறுமுண்டோ... 

கமலதள லோஷினி 

கதம்பவன வாஷினி

கைவல்ய பதகாரணி... 

விஸ்வமெல்லாம் நிறைந்த 

விஷ்வேஸர் வாமத்தில்

விளங்கியிருந்த தேவி நீயே.. 

அந்தரி.. சுந்தரி..  சிவகாமி கனகசபை

ஆதிபராசக்தி நீயே.. 

சந்ததமும் உன்னை நான்

சரணமென்று நம்பினேன். 

பாவமெல்லாம் போக்கியே

அனவிரதம் கருணா கடாட்சம்  

வைத்தெந்தனை 

அடிமை கொண்டே ஆள்வாய். 

🙏.   ஓம்.. தத். ஸத். பிரம்மார்ப்பிதம்.. 🙏


இது எப்போதும் என் சின்ன வயதிலிருந்தே தினமும் சொல்லி வருவது வழக்கம். எங்கள் அம்மா கற்று தந்த பாடல்களில் ஒன்று.எந்த பாடல் வரிசையில் இது உள்ளதென்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக செவ்வாய் வெள்ளிதோறும் மாலை விளக்கேற்றியதும்  இதைப்பாடி அனைவரையும் அன்னை பரமேஸ்வரி அருளுடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்து கொள்வேன். இந்த நவராத்திரியில் அன்னையின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட இப்போதும் இந்த பாடலை பதிவில் பகிர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 🙏. 

Saturday, September 17, 2022

பழி


வீடு திறந்திருந்தது. அதைப் பற்றி கவலையின்றி செல்வி யாரிடமோ கைப் பேசியில் அரட்டை அடித்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் "நானிருக்கும்"  தைரியந்தான் அவளது துணிச்சலுக்கு காரணம் என்பது எனக்கும் தெரியும். அதை பிரதீபும், செல்வியும் என் காதுபடவே கூறி என்னை சில சமயங்களில் உற்சாகப் படுத்துவார்கள். இதை குறித்து எனக்குள் ஒரு பெருமையும் என் முகத்தில் அடிக்கடி விகசிக்கும்.

நான் எட்டு வருடங்களாக இவர்களுடன் ஐக்கியமாகி இருக்கிறேன். பிரதீப் அலுவலகம் சென்றவுடன் செல்விக்கும், அவள் குழந்தைக்கும் நான்தான் முழுக்க முழுக்க துணை.

செல்வி என்னை நம்பி, என்னுள் இருக்கும் சமார்த்தியத்தை நம்பி, வீட்டையே என்னிடம் ஒப்படைத்த மாதிரி, இடைப்பட்ட நேரத்தில், அருகிலிருக்கும் கடைகளுக்கும் வேறுபல அவளுக்கு பிடித்தமான இடங்களுக்கும்  தைரியமாக போய் விட்டு வருவாள்.  குத்து மதிப்பாகச் சொன்னால் நான்தான் அவர்களையும், வீட்டையும் பாதுகாத்து வருபவன். 

இப்படியாக ஓடிய வாழ்வில் ஒரு நாள் இரவு. வழக்கம் போல் வராண்டாவில் என் இடத்தில் படுக்கை. மழை காலமாகையால், விட்டு விட்டு தூறலும், தீடீரென பெரு மழையுமாக பெய்து கொண்டிருந்தது. இரவில் குளிர் தாக்கும் என்பதால், என் மேல் போர்த்திக்் கொண்டிருக்கும் போர்வைக்குள் அடைக்கலமாகி, விழி மூடி தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்தபடி இருந்தேன். 

குழந்தை மாலு லேசான சிணுங்கலுடன் அழ ஆரம்பித்து அப்புறம் நிறுத்தி  தூங்கி விட்டிருப்பாள் போலும்.. .!!!! சத்தத்தை காணோம். காற்றும், மின்னலும், சற்று லேசான மேக உறுமலும் என் உறக்கத்தை ஒரு வழியாக உண்டு இல்லை என பண்ணிக் கொண்டிருந்தன.

கண்கள் இப்படி அடிக்கும் மின்னல் வெளிச்சத்தில் கூசுகிறதே என்று நினைக்கும் பொழுதில், சடசடவென மழைத் தூறல் பெரிதாகி, காற்றையும் தன்னோடு உடனழைத்தபடி வாய் விட்டு நகைப்பது போன்ற சத்தத்துடன் பெரிதாக ஆரம்பித்தது.

 இருட்டு இரவுக்கு துணை போனாலும், அவ்வப்போது உமிழ்ந்து மறைந்து பின் கண் சிமிட்டி உதயமாகும் மின்சாரத்தை  ஏதோ கூறி  வைதபடியிருக்க, மழை, மின்னலை கைப் பிடித்த எக்களிப்புடன் காற்றுடன் சேர்ந்து கொண்டவாறு அதை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது..!

இந்த கேளிக்கை வைபவங்கள் இத்தனையும் மீறி ஆழ்ந்த உறக்கம் லேசாக என் கண்ணைத் தழுவ ஆரம்பித்த வேளையில், அத்தனை சத்தத்திலும்  வித்தியாசமாக  ஒரு சத்தம் எழ கண்ணையும், அறிவையும் திறந்து பார்த்து உணர்வதற்குள் ஒரு பாரம் என்னுடன் இணைந்தது மாதிரி ஒரு உணர்வு......!! "நானும் இனி உன்னுடன்தான்... !!" என்ற உரிமையுடன் வெறி கொண்ட மனதாக என் உடலுக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு.. ..!! உடலை குலுக்கியது போன்ற ஒரு அவஸ்தையுடன்  போர்வை விலக்கி எழுந்து அமர்வதற்குள் என்னை அது முழுதாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

"என்னங்க.....இது எப்படியிருக்கு.... நல்லா இருக்கா? பாத்துட்டு சொல்லுங்க.!" என்றபடி பார்வதி தன் எதிரில் ஒரு வட்டமான கூடையை திறந்து காண்பித்ததும், அவன் அலறி விட்டான்.

"என்னடீது சே.. சே...  முதல்லே வெளியிலே கொண்டு விடு" ...!. என்று அவன் பயங்கரமான அறுவெருப்புடன்  கத்தவும். முகம்  சுருங்கியவள்,. ... 

"இல்லைங்க.! காலையிலே அப்பா வரும் போது நம்ம வீட்டுக்கு அருகே நாலஞ்சு குட்டிகளை பாத்ததும் அப்பாவுக்கு என் ஞாபகம் வரவே அதில் ஒன்னை இங்கே கொண்டு வந்தார். எனக்கு கல்யாணம் ஆறதுக்கு முந்தியே நம்ம டைகரை நாந்தான் வளர்த்து பாத்துகிட்டே ன். அது தீடிரென்று  உடம்பு முடியாது போனவுடனே ரொம்ப நாள் அது நினவாகவே இருந்தேன். அதை ஞாபகம் வச்சுகிட்டு அப்பா இந்த குட்டியை  எனக்காக கொண்டு வந்திருக்கார். " அவள் தயங்கி வண்ணம் சொன்னாள்.

" என்ன இழவோ போ.! இதெல்லாம் எனக்கு பிடிக்ககாதுன்னு உனக்கு தெரியுந்தானே... திருப்பி அனுப்ப வேண்டியதுதானே..!" அவன் கோபத்துடன் சீறவும்  அவள் மெளனமாய் தலை குனிந்தாள்.

" அம்மா  வீட்டுலே பொழுது போற மாதிரி இங்க போறதில்லைன்னு சொன்னதை ஞாபகம் வைத்து அப்பா ஆசையா வந்து தந்திருக்கிறார். எப்படி வேண்டாமென்று சொல்வது? கொஞ்ச நாளைக்கு நம்மோடு வளர்ந்தா, அப்புறம் நமக்கே பிடிச்சு போயிடும். அதுக்கும் எங்கே போறதுன்னு இடம் தெரியாமே நம்மோடு பழகிடும். இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியனுங்கிறது இல்லே...!!! என்று அவள் மெல்ல இழுப்பதற்குள்.,  அவன் மேலும் கடுப்பானான்.

"என்ன.... .. உபதேசம் பண்ற உத்தேசமா? சமயம் கிடைக்கறப்ப இப்படியெல்லாம் வேறே சொல்லலாமுனு சொல்லிட்டு போனாரா உங்கப்பா.!  வார்த்தைகளின் உஷ்ணம் அவளை தகித்தது.

அவள் மடமடவென்று பெருக்கும் கண்ணீரை அடக்கியபடி," இல்லை.. இல்லை. அவரை எதுக்கு  இப்ப இழுக்குறீங்க? நான் யதேச்சையாகத்தான் சொன்னேன்." என்று முடிப்பதற்குள், "இவங்களை யார் இப்போ வரச் சொன்னாங்க? போகும் போது உன்னையும் கையோடு கூட்டிகிட்டு போகாமே, வளர்க்கிறது ஒன்னு, வாழறதுக்கு ஒன்னுன்னு என் உயிரை வாங்கிட்டு......சே.! கல்யாணம் பண்ணிகிட்டதே பெரிய தொந்தரவுப்பா.... கையிருக்கும் முகம் துடைத்த துண்டை சோபாவில் எறிந்து விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் அவன்.

பார்வதி பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள். வாய் விட்டு அழக் கூட தெம்பில்லாது மனசு சோர்ந்தது  கையிலிருந்த பிறந்தே இரண்டு நாட்களான அந்த ஜீவன் பரிதாபத்துடன் அவளை கண் திறந்து பார்த்து விட்டு மீண்டும்  சோம்பல் ஒன்றை விடுத்தபடி கண்ணை மூடிக் கொண்டது. அவள் அதன் முகத்தோடு முகம் வைத்தபடி கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தாள்.


நான் எப்போதும் போல் இல்லையென கொஞ்ச நாட்களாக சற்று புகார்களை என் எதிரிலேயே கூற ஆரம்பித்து விட்டாள் செல்வி. என் செயல்கள், சேவைகளில்  எந்த குறையும் இல்லையென்றாலும், அவர்களிடம் ஏனோ மனம் ஒட்ட மறுத்தது. செல்வியை பார்க்கும் போது என் விழிகளில் சமயத்தில் ஒரு வெப்பம் வருவதை உணர முடிந்தது. அதை அவள் கவனித்து விடுவாளோ என்ற பதற்றத்தில்் அவள் அருகாமையை தவிர்க்கப் பார்ப்பது அவளின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

"பிரதீப். ! நீங்க இப்ப ஊருக்கு போய்தான் ஆக வேண்டுமா? செல்வி கொஞ்சலுடன் மறுபடியும் அந்த கேள்வியை கேட்டாள்.

" என்னம்மா..! எத்தனை தடவை சொல்றது.. பிஸினஸ் விஷயமா நான் இப்படி போயிட்டு வர வேண்டிதானே இருக்கு.. ஒரு வாரத்திலேயே திரும்பிடுவேன். .எப்பவும் இந்த மாதிரி நேரத்திலே தைரியமாய் இருப்பே..! இந்த தடவை ரொம்பவே பயப்படுறே.. ஏன் என்ன ஆச்சு உனக்கு? என்றவன் ஆறுதலாக அவள் கைப்பற்றிக் கொண்டான்.

"ஒன்னுமில்லை! இந்த தடவை ஏனோ கொஞ்சம் பயம் வருது" என செல்வி தடுமாறினாள்.

எப்பவும் போல நீ நார்மலா  இருக்கிற தைரியத்தாலே இத்தனை நாள் நான் கவலையில்லாமே  போயிட்டு வந்திருக்கிறேனே ! இப்ப மட்டும் ஏன் விசித்திரமா தயங்குறே! தைரியமா இரு! ஒரு வாரத்திலேயே வந்துடுவேன். நாள் பறந்து போயிடும்...." என்ற பிரதீப் பயணத்திற்கு ஆயுத்தங்கள் செய்ய ஆரம்பித்தான்.

"இப்படி ஏன் என்னை வெறுக்கிறீங்க? அதனாலே சாப்பாட்டை கூட சாப்பிடாம இருக்கனுமா? இன்னைக்கு நம்ம திருமண நாள்.. அதனால்தான் இந்ந ஸ்வீட் பண்ணினேன்.இதையாவது சாப்பிடுங்க.!" கிண்ணத்திலிருக்கும் பாயாசத்தை அவனருகே மெள்ள நகர்த்தியதும்,  அவன் அதே விட வேகத்தில் அதை எதிர்புறம் தள்ளினான்.

" நான் இப்போ ஸ்வீட் கேட்டேனா ? இல்லை உன்னை சாப்பாடு பறிமாறவும் நான் அழைத்தேனா ?  ஏன் இப்படி தொந்தரவு பண்றே? எனக்கு எது தேவையோ அதை நானே எடுத்து போட்டுக்கிறேன். அதை விட உன்னாலே  பண்ண முடியலைன்னா பேசாமே இரு.. நான் வெளியிலேயே சாப்பிட்டுகிறேன்.  இப்படி பண்ணி வைச்சதெல்லாம் சாப்பிட்டு பாக்கிற சாக்கிலே பேசி என்னோட அன்பு முழுமையா கிடைச்சிடும்னு மட்டும் எதிர்பார்க்காதே.. " அவன் வெறுப்புடன் வார்த்தைகளை உமிழ பார்வதி சட்டென்று ஏதும் பேசாமல் முகம் சுருங்கினாள்.

" நீங்க இப்படி இருக்க என்ன காரணம்"னு தெரியாமே நான் தினமும் வெந்து சாகிறேன். என்னை பிடிக்கலைன்னா கல்யாணம் பண்ணும் போதே நீங்க வேண்டாம்னு மறுத்திருக்கலாமே.!" மனசுக்குள் வந்த கேள்வியை எச்சிலுடன் விழுங்கியபடி "என்னை மன்னிச்சுடுங்க.. இனி நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.. என்றபடி தன் அறைக்குள் புகுத்தவளுக்கு கண்ணீர் ஆறுதல் தர படுக்கையை சரணடைந்தாள்.

மாதங்கள் ஓட நாட்கள் துணை புரிந்தது. ஓடிக் களைத்த நாட்களில் ஓர் நாள் ஊரிலிருந்து அவளை காண வந்த தனது தந்தையின் வரவு கண்டு சற்று மகிழ்ந்தாள் பார்வதி. அவள் நிலை கண்டு தந்தைதான் பதறி விட்டார்.

"என்னம்மா.... இப்படி சோர்வாக இருக்கிறே? இந்தளவுக்கு உடம்பு சரியில்லையா? டாக்டர்கிட்ட போனியா? கேட்டா மாப்பிள்ளைக்கு ஆபீஸ் வேலை சரியா இருக்குனு சொல்றே. உன்னை கவனிக்க கூட அவருக்கு நேரமில்லையா ? என்று பாசத்துடன் படபடத்த அவரை கொஞ்சம் அமைதிப்படுத்தினாள் பார்வதி.

" இல்லேப்பா இந்த ஒரு வாரமா கொஞ்சம் முடியலே... வேறே ஒன்னும் இல்லேப்பா? லேசான காய்ச்சல்தான். சரியாயிடும். அப்பா . நான் கொஞ்ச நாள் உங்க கூட ஊருக்கு... நம்ம வீட்டுக்கு வந்திருக்க ஆசைப்படறேன். வரட்டுமாப்பா?

" என்னம்மா நீ.. நம்ம வீட்டுக்கு வர்றதக்கு அனுமதியெல்லாம் கேப்பியா? உங்க அம்மா இருந்திருநதா உனக்கு உடம்புக்கு  முடியில்லைன்னு சொன்னதுமே உன்னை கூட்டிகிட்டு போயிருப்பா.. இங்கே அத்தையாவது உனக்கு ஒத்தாசையாக இருக்கவும் அந்த கடவுள் துணை புரியல்லியேம்மா... இப்ப இந்த அப்பா மட்டுந்தானே இருக்காருன்னு அனுமதி கேக்கிறியாம்மா?"

"அதெல்லாம் இல்லைப்பா.! அவரை தனியா விட்டுட்டு எப்படி வர போறோம்னு எனக்குதாப்பா ரொம்ப கவலை ? இல்லைன்னா, நான் போகனுன்னு சொன்னா என்னை அவரே கொண்டு வந்து விட்டிருக்க மாட்டாரா? என்று, வறட்டுப் புன்னகையுடன் கூறினாலும், "நான் போறேன்னு சொன்னா அடுத்த நிமிஷம் என்னை கொண்டு வந்து அங்கே விடறதுலேதான் அவருக்குதான்  ரொம்ப சந்தோஷப்பா..." என்று மனசுக்குள் அழுகையுடன் கூறிக் கொண்டாள்.

என்னவோ நீ நல்லா இருக்கனும்மா.! அம்மா இல்லாத குறை தெரியாமே உன்னை வளர்த்து உங்கம்மா பிரியபட்ட மாதிரியே அவ அண்ணன் பையனுக்கே உன்னை கட்டி வச்சேன். அவ அண்ணனும் ஒன்னு விட்ட உறவாயிருந்தும் எங்ககிட்டே பேசி சத்தியம் வாங்கியபடிக்கு தன்னோட மகனை எனக்கு மருமகன்ஆக்கினாரு. இதையெல்லாம் பார்க்க உங்கம்மா கொடுத்து வைக்கல்லேயே.! பாவி அவதான் முந்திகிட்டான்னா, மாப்பிள்ளையின் அப்பாவும், தன் மகனை எனக்கு மருமகன் ஆக்கின சந்தோஷத்திலே  இப்படி போயிட்டாரே... இப்ப நான்தான்  உங்க ரெண்டு பேரையும் பாக்கற ஆவல்லே அங்கிட்டும், இங்கிட்டுமாய் அல்லாடிகிட்டு இருக்கேன்.

."சரிப்பா!! நடந்த கதை இப்ப எதுக்கு? நீங்கதான் அம்மாவுக்கும் மேலாயிருந்து என்னை வளர்த்து கல்யாணம் பண்ணி வைக்கல்லியா? எனக்கு அம்மா இல்லைன்னு வருத்தாமாயிருந்தாலும், உங்ககிட்டயே அம்மா பாசத்தையும் சேர்த்து அனுபவிச்சே வளர்ந்துட்டேப்பா... அம்மா இல்லாத குறையே எனக்கில்லைப்பா.. நீங்க மட்டும் எனக்குன்னு என்னைக்கும் இருந்தா போதும்." கண்ணீருடன் விழிகளை துடைத்துக் கொண்டவளை  வாஞ்சையுடன் பார்த்த தந்தை தன் விழிகளிலும்  வழிந்த கண்ணீரை அடக்கமாட்டாமல் உகுத்தார்.

மறுநாள் "தந்தையுடன் ஊருக்கு போகிறேன்" "என்றவளை தடையேதும் சொல்லாமல் அவன் அனுப்பியதை கண்டதும் பார்வதியின் மனம் இன்னமும் சோர்வடைந்தது. அதுதான் அவளின் கடைசி பிரிவாகவும் இருக்குமென யாருமே நினைத்துப் பார்க்கவில்லை
.

வாசலில்  யாரோ அழைப்பு மணியை அழுத்தி அழைக்கவும், விரைந்து சென்று கதவை திறந்த செல்வி உள்ளே வந்தவனைப்பார்த்து "நீயா?" என கத்தி அதிர்ந்தாள்.

"நானேதான்....! எப்படி இவன் வீடு தேடி வந்து விட்டான் எனப் பாக்கிறியா? அதுவும் உன் காவலர் இல்லாத சமயமாக பார்த்து வந்ததற்கு நீ கண்டிப்பாக என்னை பாராட்டனும்... ! என்றான் வந்தவன் கண்களை சிமிட்டியபடி...

" நீ எதுக்கு வீட்டைத் தேடிக் கொண்டு இங்கேயெல்லாம் வருகிறாய்? நான்தான் நீ கேட்ட பணத்தை அன்னைக்கே அவருக்கு தெரியாமே எப்படியோ புரட்டி கொடுத்திட்டேனே..! ஏன் இப்படி என் வாழ்க்கையை கெடுக்க மறுபடி, மறுபடி வந்து தொந்தரவு செய்றே..! கோபத்துடன் அடிக்குரலில் கூறினாள் செல்வி.

"பணமா? நீ கொடுத்ததெல்லாம் ஒரு கணக்கா? நான் கேட்டதை கொடுத்தியா.. ஏதோ அதில் நாலிலொரு பங்கை கொடுத்துட்டு நானும் தந்திட்டேன் என்று சொல்லிக் காட்டுறியே.. !என்றவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு " ஆ... வீடு நல்லாத்தான் இருக்கு..!  பிடிச்சாலும், நல்லா வசதியானவனைத்தான் பிடிச்சிருக்கே .. ! அவனும் தன் மாஜி மாமனார் சொத்தை வளைச்சுப் போட்டு உன்னையும் அதில் ராணியாக வாழ வைக்கிறான்..! என்று எகத்தாளமாக கூறியபடி வாய் விட்டு சிரித்தான்.

" நீ இப்ப மரியாதையா வெளியே போகப் போறியா.. ! இல்லை..... கோபத்தில் குரல் நடுங்கியது செல்விக்கு.

"இல்லை... என்னப் பண்ணப்போறே? கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளப்போறியா? எங்கே தள்ளி விடு.... பார்க்கலாம்..! என்றபடி  அவளை நோக்கி தன் கழுத்தை முன்னுக்கு நீட்டியவனை கண்டதும் செல்வியின் முகம் கோபத்தில் கொதித்து சிவந்து கண்களில் கண்ணீரை வெளிப்படுத்தியது.

" அய்யோ...! நிறுத்து...!! இப்படி அழுது அழுதுதானே அன்னைக்கு என்னை காதலிச்சே.... ! அதுக்கப்புறம் என்னை கைவிடும் போதும், இதே அழுகைதான். உங்க உறவுலே உன்னையே ஒருத்தன் ரொம்ப வருடமா விரும்புறான்... அவனைத்தான் அப்பா, அம்மாவும்  கட்டிக்க சொல்றாங்கன்னு எத்தனை மாய்மாலமா பேசி, என்னை விட்டுட்டு, அதிக வசதியா இருக்கிற இவனை இரண்டாந்தாரம்"னு பாக்காம கல்யாணம் செஞ்சுகிட்டே.... ! அப்புறந்தானே தெரிஞ்சது..! அவனை நீயும் அவனிடம் இருந்த வசதியான அந்த பணத்துக்காக காதலிச்சதையும், அவன் உனக்காக வலுக்கட்டாயமாக தன் அப்பா கட்டி வைத்த மனைவியையே வெறுத்து ஒதுக்கி விட்டு அவள் அந்த வேதனையில் உள்ளம் உருகி இறந்ததும், உன்னை என்னவோ பெரிய மகாராணியா நினைச்சு உன்னோடு வாழ்ந்து வர்றததையும், அப்புறந்தானே தெரிஞ்சுகிட்டேன்..! "வந்தவன் அவளின் வாழ்க்கையை கேவலமாக பேசியபடி சோபாவில் அமர்ந்து கொண்டான்.

"இப்ப என்ன வேணும்"னு இப்படி தொந்தரவு  பண்றே?

"கண்டிப்பாக நீ வேண்டாம்.. "என்றவன் தான் அடித்த ஜோக்கை நினைத்து தானே பலமாக சிரித்தான்.

"எனக்கு பணமாக பத்து லட்சம் தந்து விடு...! உன் வாழ்க்கையை விட்டு  முழுதுமாக போய் விடுகிறேன்." என்று சிரித்தபடி கூறிய அவனைப் பார்த்து அதிர்ந்தாள் செல்வி.

"பத்தா? அவ்வளவுக்கு நான் எங்கே போவேன்? ஏற்கனவே அவருக்கு தெரியாமல், எப்படியோ என் நகைகளை வைத்து உனக்கு இரண்டு வரை கொடுத்து விட்டேன். தயவு செய்து என் நிலைமையை புரிஞ்சு பேசு." அவள் குரல் அழுகை கலந்ததால் கம்மியது.

அதுதான் சொன்னேனே..! அதெல்லாம் பணத்தோட கணக்கே இல்லைன்னு..!  நீ முழுசா பத்தை கொடுத்துட்டு, என் வாழ்க்கையிலும் விலகிப் போயிடு.. நானும் எங்கேயாவது போய் செட்டில் ஆயிடுவேன். இல்லாட்டி.. உன் கணவனோடேயே பேரம் பேச வேண்டியதிருக்கும்.. எப்படி வசதி?" அவனின் வன்ம சிரிப்பு அவளின் முகத்தில் அறைந்தது. 

அவள் முகம் பேயறைந்த மாதிரி சற்று வெளிறியது. 

அந்த அறைக்குள் நுழைய முடியாமல் ஏதோ என்னை தடுத்தது. அவர்களின் காரசாரமான பேச்சுக்கள் எனக்குள் சற்றே சந்தோஷத்தை  உண்டாக்கியதை என்னால் உணர முடிந்தது. 

" சரி . நான் இப்ப போயிட்டு  நாளை மறுநாள் வருகிறேன். அதற்குள் பணத்தை ரெடி பண்ணிடு....."அவன் கிளம்ப யத்தனித்தான்.

எப்படி? பாவி... பாவி... என் நிலைமை புரியாமே இப்படி சொல்றியே.. நாளைக்குள் எப்படி நீ கேட்கும் பணத்தை ரெடி பண்ண முடியும்...? அதற்குள் உனக்கு ஏதேனும் சாவு வரக்கூடாதா? மனதுக்குள் கடுமையாக அவள் திட்டிக் கொண்டாள். 

என்ன..? எனக்கு சாபம் கொடுக்கிறாயா? உன் சாபமெல்லாம் பலிக்காது. அப்படியே பலித்தாலும், அது உனக்கும் சேர்த்துதான் பலிக்கும். பார்க்கிறாயா.. ?"அவள் முக பாவத்தைக் கொண்டு கணித்து  அவளருகில் வந்து கிசுகிசுப்பான குரலில் அழுத்தமாக சொன்னவன் அவள் அவனின் பேச்சில் அதிர்ந்து நிற்கையில், அறை கதவை திறந்து வாசல் கடந்து வெளியேறினான். 

என் மனது முழுக்க ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம் சட்டென ஓடி ஓடி சந்தோஷிப்பதை புரிந்து கொண்டேன்." 

எங்கே போய் தொலைஞ்சே...! சமயத்தில நீ ரொம்ப என்னைை கண்டுக்காமல் காலை வாரி விடறே....! என சுள்ளென்று செல்வி கத்தியதும் ஒரு இன்பமாகத்தான் இருந்தது. அவனைப் பற்றி என்னிடம் முழுதாக சொல்ல முடியாத ஒரு இக்கட்டில் அவள் இப்படி கோபப்படுவதை பார்க்கும் போது என்னுள்ளும் அவளை துன்புறுத்தும்  வெறி வருவதை உணர்ந்து கொண்டபடி நான் அவள் அறையை விட்டு மெளனமாக வெளியேறினேன். 

மறுநாள் மாலை வரை அவளிடத்தில் எந்த கலகலப்புமின்றி, குழந்தையை கவனிப்பதை மட்டும் கடனாக செய்து வந்ததை  நானும் புரிந்து கொண்டேன்.  என்னுடன் அவளை விளையாட கூட அனுமதிக்காமல், தன்னுடனே வைத்துக் கொண்டிருந்ததும்
 எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அன்று மாலைக்கு பின் எங்கோ குழந்தையுடன் சென்று விட்டு வந்தவளிடம் ஒரு இனம் புரியாத படபடப்பு இருந்தது. "வரட்டும்....நாளை.. நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று லேசாக ஒரு தடவை சத்தமாகவே  முணுமுணுத்துக் கொண்டதை நான் பார்த்ததும், இன்னும் படபடப்பாக வியர்வை துளிர்க்கும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.  இரவு பிரதீப்புடன் ஃபோனில் பேசும் போதும் எப்போதும் போல், நிறைய நேரம் பேசாமல், "இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடுவீர்களா? ஒன்றும் பயமில்லை.. .!!! நான் தைரியமாகத்தான்
 இருக்கேன். .  !!! .சரி... சரி. ... எப்போ வேலை முடியுதோ..... அப்போ உங்க செளகரியப்படி புறப்பட்டு வாங்க.... ஒன்றும் பயமில்லை..." என்று குரல் உசத்திப் பேசியவள்  சீக்கிரம்  பேச்சை துண்டித்து விட்டு படுக்கச் சென்றாள். மறுநாள் விடியப் போகும் காலைப் பொழுதை  ஆவலுடன் நானும் எதிர்பார்த்தபடி கண் மூடினேன். 

மறுநாள் மதியத்திற்கு மேல் கதவு தட்டப்படும் ஒலியில் மாடியிலிருந்து விரைந்து வந்த செல்வி குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த என்னை பொருட்படுத்தாது சென்று கதவை திறந்தாள். அங்கே அவனைக் கண்டதும் "உள்ளே வா" என்றபடி மாடிக்கு விரைந்த அவளை அவனே சற்று ஆச்சரியத்தோடு பார்ப்பதை என் விழிகள் கவனிக்க தயங்கவில்லை. 

"என்ன உபசாரம் பலமாக இருக்கிறது? கொடுக்க வேண்டியதை தந்து விட்டால் இப்படி வெளியேற எனக்கும் சௌகரியமாக இருக்குமே" வந்தவன் அதே நக்கலோடு ஆரம்பிக்க அவள் அதற்குத்தான் "வா என்றேனே.." என்றவள் ஒரு கண்ணசைவில் என்னை நோக்கினாள். 

"ஓ..  புரிகிறது.. புரிகிறது.. கொடுக்க இருப்பதை யாருக்கும் தெரியாமல்.... சரி... சரி. ..முறைக்காதே. .. இதோ வந்து விட்டேன்.."என்றபடி அவன் மாடிப்படியேறினான். 

எனக்குள் இன்னதென்று தெரியாத ஒரு வெப்பம் உடலெங்கும் பரவியது. 

மெதுவாக அவர்கள் அறியாதபடி நானும் மேலேறி அவர்கள் இருந்த அறை வாசலில் நின்று கொண்டேன். அறைக்கதவு தாழ்ப்பாள் இடாமல் வெறுமனே சார்த்தியிருக்க, அந்த சாத்திருந்த கதவை சுலபமாக திறந்து கொண்டு உள்ளே செல்ல முடியும் என்பதை புரிந்து கொண்டேன். 

"என்ன. . உள்ளே அழைத்து விட்டு ரகசியம் பேசவா வந்திருக்கிறேன். இல்லை. .. அப்போ அனுபவிக்காததையும் இப்ப சேர்த்துக் கொடுக்கச
போகிறாயா? ." என்றபடி அவன் விஷமத்தனமாக கேட்பது எனக்குள்ளும் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. 

"ஆமாம். .  கொடுக்கத்தான் போகிறேன்.. இந்தா வாங்கிக் கொண்டு நிம்மதியாக போய்ச் சேர். ... ." என்ற அவளின் பதிலுக்கு அவன் விதிர்விதித்து, சற்றுப் படபடத்த குரலில்,  " ஏய்.... ஏய்.. என்னது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறே.. .? எனவும் நான் மெள்ள கதவை திறக்கலானேன். 

அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திகைப்படைய செய்தது. கையில் துப்பாக்கியை வைத்தபடி நெருங்கி வரும் அவனை குறி பார்த்தபடி பயங்கர கோபத்திலிருந்த செல்வியின் முகம் எனக்கே சற்று பயத்தை உண்டாக்கியது. 

"ஏய். ... அட.. உனக்கு இப்படி சுடக் கூடத்  தெரியுமா? சுட்டுடாதே.. .. சுட்டுடாதே.   அப்படியே நீ  சுட்டாலும், சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வரவங்கிட்டேயிருந்து எப்படி தப்புவே. ...? போலீஸ் வந்து விசாரிச்சு, கொலை கேஸ்ன்னு வெளியிலே நியூஸ் வந்து, 
அப்புறம் உன் கணவன் வந்து விபரம் தெரிஞ்சு அவமானம் தாள முடியாம அவனும் ஒரு முழ கயித்தை நாடுவான். .. இதெல்லாம் உனக்குத் தேவையா. .. ?"  அவன் கையை உயர்த்திபடி பேசிக் கொண்டே ஒவ்வொரு இன்ச்சாக  மெள்ள  அவளை நோக்கி நகர்வதை
உணர்ந்தேன். 

" ஏய்... கிட்ட வராதே. . . நிஜமாகவே இப்பவே சுட்டுவேன். இது எந்த சத்தமும் கேட்காத லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி.... போயிடு.... என்னை விட்டு போயிடு.. இனி என் வாழ்க்கையோடு நீ தொடர்ந்து வந்தேன்னா உன் உயிர் உன் கிட்டே இருக்காது.... எனவே சத்தம் போடாம நீ இப்போ போயிட்டு.. இனி எப்பவும் இங்கு வரவே வராதே..." அவள் படபடவென வார்த்தைகளை முடித்ததும், அவன் கை எப்படியோ அவளை வளைத்துப்பிடித்து அவள் கையிலிருக்கும் துப்பாக்கியை பறித்துக் கொண்டது. 

அந்த கண நேர மாற்றத்தில் என் நெஞ்சும் அதிர்ந்து படப்படத்தது. 

"என்ன. . சத்தமே கேட்காத துப்பாக்கியா?நான் சுட்டாலும் இது சத்தம் போடாதா? இப்ப சுட்டு காண்பிக்கட்டுமா. .. .? இல்லை எனக்குதான்  சுடத்தெரியாதுன்"னு நினைச்சுகிட்டு இருக்கியா? ஆனாலும் உன் உயிர் எனக்கு தேவையில்லை.. நான் கேட்ட பணத்தை கொடுத்துடு. ...".  நானும் இப்படியே உன் உயிரை எடுக்காமலே போயிடுறேன்.. .." என்றபடி அவன் பல்லைக் கடித்தபடி கேலியாக கூறிச் சிரிக்கவும், 

அவள் சற்று பயம் கலந்த முரட்டுத்தனத்துடன் அவன் கையிலிருக்கும் ரிவால்வர் பிடுங்க முயற்சி செய்ததும் நான் அவர்கள் எதிர்பாராதபடிக்கு, அவர்கள் இருவர் நடுவிலும் பாய்ந்தேன். 

அந்த ஒரு நொடியில், அவர்களின் கை அழுத்தத்தில், அந்த சத்தம் இல்லாத துப்பாக்கியின்  குண்டு என் உடலைத் துளைத்ததும், நான்" ஆ, "வென்ற அலறலில் துள்ளி விழுந்ததை கண்ட செல்வி, ஆ..... .. அய்யோ...  .என்று சத்தமிட்டபடி கதறினாள். அவனும் ஒரு நிமிடம் தடுமாறியவன் மறுநிமிடமே  சுதாரித்தபடி கையிலிருப்பதை எறிந்தபடி வெளியே ஓடியதை நான் மெள்ள கீழே சாயும் போது என் கண்களால் காண முடிந்தது. 

"அய்யோ.. .. நீ எனக்காக உன் உயிரை இப்படி தியாகம் செய்து விட்டாயே. . இப்போ நான் என்ன செய்வேன்.. .. " செல்வி கதறுவதை உயிர் இன்னமும் பிரியாத மயக்கம் தழுவி கொண்டிருந்த என்னால்  கேட்க முடிந்தது. என்னை விட்டு  இத்தனை நாள் என்னுள்ளிருந்து மகிழ்ந்திருந்த  அந்த மற்றொரு உயிரும் காற்றாய் கலந்து பரந்து விரிந்ததையும் என், கண்களின் ஜீவன் குறையாமல் இருந்த அந்த வேளையில் புரிந்து கொள்ள முடிந்தது. 

"உன்னைப் போல் ஒரு அன்பான ஜீவனை நானும் என் வாழ்வில் நேசித்து வளர்த்து வந்தேன். என் கணவனின் பிடிவாதத்தால் என் தந்தை தந்த அதை என் தந்தையிடமே  தந்து விட்டேன். இவளின் காதல் மயக்கத்தில் இருந்த என் கணவன் அவளால் வளர்த்த உன்னை எப்படியோ ஏற்றுக் கொண்டதும் இப்போது எனக்கு சௌகரியமாக இருந்தது. நான் உனக்குள் இங்கு வந்த வேளையில், இவளின் முகத் திரைகள்  இவளின் பழைய செய்கைகளால் கிழிந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். 

வாழும் போதும் சரி... வாழ்ந்த வாழ்விலும் சரி. .. அதன் பின் இறந்த பின்னும்  நிம்மதியின்றி சுற்றி வந்த நான் இவளை பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் அதுவாக வந்ததை கண்டு அந்த நேரத்திற்காக உன்னுடன் இணைந்து தங்கினேன். 

என் முன்னாள் கணவனிடம் இவளின் பழைய வாழ்வை காண்பித்து, நிரூபித்து சந்தோஷபட வேண்டி உனக்குள் காத்திருந்தேன். ஆனால், நானும் ஒரு பெண்தானே.. . "பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பார்கள். அதுவும் நான் சுபாவத்திலே நல்லவளாக வாழ்ந்து எனக்கு என் கணவன் தந்த மனவருத்தத்தில் மட்டுமே என் உயிரை பிரிந்தவள். அந்த நல்ல குணம் இப்போதும் என்னில் அப்படியே இருந்ததினால் இவள் துப்பாக்கியில் அடிபட்டு இறந்து விடுவாளோ என்பதை காண சகியாமல், சண்டையிடும் இவர்கள் இருவரின் நடுவில் பாய நினைத்தேன். 

அந்த என் நினைப்புடன் உன் நினைப்பும் இணைந்ததால், அது நடந்தே விட்டது. ஏனென்றால் நீயும் இந்த உலகில் மனிதர்களோடு இந்த மனிதர்களுக்காக நன்றியுடன் மட்டுமே வாழப் பிறந்தவன். அதனால் அநியாயமாக உன் உயிரும் இப்போது போகப் போகிறது. எப்போதும் விதியை மாற்ற இயலாது. என் உயிர் காற்றிலே கலந்து இறைவனோடு சங்கமிக்கும் நேரம் வந்து விட்டது. எனக்காக இத்தனை நாள் உன்னுடலில் இடம் தந்த உன்னை நான் வாழ்த்துகிறேன்.. .. வணங்குகிறேன்... என்னால்தான் உனக்கிந்த வேதனை என்றால், என்னை மன்னித்தும் விடு.... நான் வருகிறேன்... " என்றபடி ஒரு பெண்ணுருவம் என் காதோடு  பேசியபடி என் உடலை அன்புடன் தன் கை கொண்டு ஸ்பரிசித்த நேரம் அவள்  மெதுவாக காற்றோடு கலைய என் இறுதி மயக்கம் மிக அருகில் என்னோடு  நீடித்து வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

கதை நிறைவுற்றது.

ஒரு வித்தியாசத்திற்காக  இந்தக்கதை எழுத ஆரம்பித்து வருட கணக்கில் முடிக்காது பாதியிலேயே வைத்திருந்தேன். கதை ஆரம்பிக்கும் போது எடுத்த கதை கருவும் சற்றே மறந்தே விட்டது எனலாம். எப்படியோ ஒரு மட்டும் இன்னமும் கதையை நீட்டாமல் முடித்துள்ளேன். 

கதை சற்று பெரிதாக உள்ளதால் முதலில் இதை இரு பாகமாக வெளியிடலாம் எனவும் நினைத்தேன். ஆனால் அதன் ஸ்வாரஸ்யம் (அப்படியும்  ஒன்று கதையில் இருந்தால் ஹா ஹா ஹா. ) குன்றி விடுமோவென ஒரே பதிவாக வெளியிட்டு விட்டேன். பொறுமையுடன் படிக்கும் உங்கள் அனைவரின் ஊக்கமிகு கருத்துக்கள் மேலும் என்னை எழுத வைக்கும் (பயம் வேண்டாம்... இதே கதையை அல்ல... ஹா ஹா ஹா) என நினைக்கிறேன். கருத்துக்கள் அளிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

Thursday, September 8, 2022

காக்கும் கடவுள் கணபதி.

பிள்ளையார் சுழி. 

புதிதாக வந்த என் கைப்பேசியில் முதன் முதலாக எடுத்தவுடன் ஸ்ரீ விக்னேஷ்வரரைப் பற்றிதான் எழுத வேண்டுமென ஆசைப்பட்டேன்.  ஏனென்றால், நான்  பிறந்ததிலிருந்து எனக்கு  நிழலாக இருந்து, என் உயிரோடு கலந்து என் நினைவிலே எப்பொழுதும் நிறைந்து நிற்பவன் "அவன்"தான். எங்கள் வாழ்வில் எந்த செயலுக்கும் "அவன்" துணைதான் எங்களுக்கு சஞ்சலங்கள் இல்லாத  நிம்மதியை தருவது. ஆனால்,  அதற்குள் "அவன்" ஆணையில் அந்தக் கைபேசி வந்த விபரம் குறித்து எழுத வைத்து விட்டான். சரி..இப்படி ஏதோ எழுத ஆரம்பித்து விட்டோமே என அவ்வப்போது டிராப்டில் ஏதோ கிறுக்கி வைத்ததையும் பகிரலாம் என அதையும், பழைய போட்டோக்களையும் நான் பார்வையிட்ட போது "என்னை வைத்து ஏதோ எழுத நினைத்தாயே..! இதோ..!! உன் பழைய கைப்பேசியில் ஆர்வத்துடன் என்னை
எடுத்த புகைப்படத்தை வைத்து உன் ஆசைப்படி ஒரு பதிவாக்கி துவக்கி விடேன்." என்று "அவன்" புன்னகையுடன் மறுபடி ஆணையிட சரியென சம்மதித்தேன். எனக்கு அந்த கோவிலைப் பற்றிய  விபரங்கள் சரியான அளவில் கூறத் தெரியாது என்றாலும், கூகுளில் தேடிப்பிடித்து என்னாலான விபரங்கள் தந்துள்ளேன். அதன்படி பிறந்தது இந்தப்பதிவு. எல்லாம் "அவன்" செயல்தானே.... 🙏. 

எங்கள் மகன் இளையவன் ஊரிலிருநது
வந்திருந்த சமயம் தொற்று குறைந்திருந்தாலும், இரண்டு வருடங்களாக நாங்கள் படி தாண்டாத பத்தினியாகத்தான் வாழ்ந்து வந்தோம். நீண்ட வருடங்கள் கழித்து முதன் முதலில் அவனுடன் வெளியில் செல்லும் போது பிள்ளையார் கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமென நான் விருப்பப்பட்டதால். அதன்படி பசவனகுடி தொட்ட கணபதியை  தரிசிக்கலாமென ஒரு நல்ல நாளில் காலையில் ஒரு ஒன்பது மணியளவில் வீட்டிலிருந்து  கிளம்பினோம். பன்னிரண்டு வரை கோவில் திறந்திருக்கும். பிறகு மாலை நான்கு மணிக்கு மேல்தான் தரிசனம் காண முடியும். ஒரே பெரிய பாறை போன்ற கல்லில் செதுக்கி அமைத்த பெரிய விநாயகர் சிலையுடன் உள்ள  கோவில்தான். இது நாங்கள் இங்கு வந்த பின் அடிக்கடி சென்ற கோவிலும் கூட. . முதலில் குடியிருநத பழைய வீட்டிலிருந்து 2 கி. மீ தொலைவு இருக்கும். சனி ஞாயறுகளில் நடந்தே சென்று விடுவோம். அனைத்திற்கும் அவனிடம் வேண்டிக் கொண்டு அங்கு சென்று சிதறுகாய் போட்டு விட்டு வருவோம். இந்த தொற்றினால் அந்தக் கோவிலுக்குச் சென்று இங்கு வந்த பின் மூன்று வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அதன் அருகில் பத்தடி தொலைவில் இருக்கும் படிகள் ஏறிச் மேலே சென்றால் புல்டெம்பிள் என்ற நந்திகேஷ்வரரின் தனிக் கோவில். நந்தியின் பின் அலங்காரத்துடன்  அழகான சிறிய சிவபெருமான். இருவரையும் மனதாற தரிசித்து விட்டு  அந்தப் பக்கம் படிகள் இறங்கினால்  அழகான கண்களுக்கு விருந்தாக பெரிய பூங்கா. அன்று இந்தக் கோவிலுக்கு எங்களால் செல்ல இயலவில்லை. வேறொரு வேலையும் அந்த நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில்  அவசியம் முடிக்க வேண்டியிருந்ததால், விநாயகரை மட்டும் வணங்கி விட்டு, இன்னொரு சமயம் அங்கு வரலாமென வந்து விட்டோம். 

பின்வரும் செய்தி... 
இது கூகுள் உதவி மூலமாக தினமலர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி. 
நன்றி கூகுள் மற்றும், 
நன்றி தினமலர் செய்திகளுக்கும். . 

பெங்களூர் பசவனகுடியில் நந்தி கோயிலுக்கு அருகே எழுந்தருளியுள்ளார் தொட்டகணபதி. தொட்ட என்றால் கன்னடத்தில் பெரிய என்று பொருள். ஒரே பாறையில் பெரிய அளவில் விநாயகரின் திருஉருவம் மேற்குநோக்கி செதுக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்தோடு மிக அழகாக இந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பெங்களூரில் புதிய வாகனங்கள் வாங்குவோர் முதலில் இந்த கணபதிக்கு பூஜை செய்த பிறகே வாகனத்தை ஓட்டுகின்றனர். இந்தப் பெரிய விநாயகர் விபத்தைத் தவிர்த்து சுபிட்சத்தை அளிப்பார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இது புல்டெம்பிள் எனப்படும் பெரிய நந்திகேஷ்வரர் கோவில். 

பசவன குடியில், நந்திதேவருக்கு என தனியே ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் பெங்களூரை நிர்மாணித்த ராஜகேம்பே கவுடாவால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு யானைத் தந்தங்கள் போன்ற அமைப்பு, கோயில் செல்லும் நுழைவாயிலில் காணப்படுகிறது. வடக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. 46 மீட்டர் (135 அடி) உயரமுள்ள ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட நந்திதேவர் வடக்கு நோக்கி அருள் புரிகிறார்.

நந்திதேவரின் பின்னால் சிவ பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தனது வாகனத்திற்குச் சிறப்பளிக்கும் வகையில் சிவபெருமான் இங்கு சிறுவடிவில் காட்சியளிப்பது நந்திக்கு கிடைத்த சிறப்பு. கோயிலுக்கு முன்பு உள்ள பழமைமிக்க அரச மரங்களின் பின்னால் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நந்திதேவரை வணங்கு; தடை யாவும் விலகும் என்பது ஐதிகம்.

இக்கோவில்களின் புகைப்படங்கள் அங்கு சென்ற பொழுதெல்லாம் குழந்தைகள் தங்கள் கைப்பேசியில் எடுத்ததுதான். அவையனைத்ததையும் டெஸ்க் டாப்பில் ஏற்றி அடிக்கடி நாங்கள்  பார்ப்பதுண்டு. ஆனால் அதுவெல்லாம் இப்போது இருக்கிறதாவென தெரியவில்லை.. எல்லாம் அழிந்து விட்டதாக குழந்தைகள் கூறினார்கள். அதனால் இப்போது சென்ற போது நான்கைந்து  படங்கள மட்டும் நான் என் கைப்பேசியில் எடுத்தேன். கோவிலின் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. படத்தைப் பெரிதாக்கி பார்த்தால் அருள் பாலிக்கும் பெரிய பிள்ளையாரை மனங்குளிர காணலாம். 





இக்கோவில் இந்தியாவில்  உள்ள புகழ் பெற்ற விநாயகர் கோவில்களில் ஒன்றாக இருப்பதாக ஒரு செய்தி பட்டியலில் இடம் பெறுகிறது

தொட்ட கணபதியை மனதாற தரிசித்து விட்டு சிதறு காய்களும் போட்டு விட்டு மனத்திருப்தியுடன் வேறு வேலைகளையும் முடித்து விட்டு மாலை வீடு திரும்பினோம்.

இது எங்கள் வீட்டில் விநாயகர் வந்தமர்ந்த படங்கள். 





இத்துடன் இந்த வருடம் எங்கள் வீட்டில் வழிபட்ட விநாயகர் சதுர்த்தி பூஜை படத்தினையும் பகிர்ந்து கொள்கிறேன். இதில் முதலாவதாக  அமர்ந்திருக்கும் பிள்ளையார்  (கொழுக்கட்டை, அவர் வாகனம் சகிதம் இருப்பவர்) மகள் அவளின் குழந்தையின் (எங்கள் பேத்தி) விருப்பத்திற்காக செய்தது. நல்ல அம்சமாக வந்தது. பூஜைக்கென மண் சிலை வாங்கவில்லையே என்ற குறையை போக்கியது. 

வீட்டிலிருக்கும் படங்களையும், இருக்கும் விநாயகர் சிலைகளையுந்தான் இப்போதெல்லாம் பூஜையில் வைப்பது வழக்கமாகி விட்டது. திருமங்கலம் வரை பூஜைக்கென அன்றைய தினம் விநாயகர் மண் சிலைகளை வாங்குவது வழக்கமாக இருந்தது. இங்கு வந்த பின் அவ்வளவாக அதுபோல் வாங்குவதில்லை. 

இந்த வருடம் என்னால் இயன்ற நேவேதனங்களைத்தான் (கொழுக்கட்டைகள் , சர்க்கரைப் பொங்கல், வடை, மஹா நேவேத்தியத்துடன் என சிம்பிளாக) செய்தேன். மூன்று வகை கொழுக்கட்டைகளை சாஸ்திரத்திற்காக பதினொன்றுதான் செய்தேன். அதுவும் இருதினம் முன்பே எனக்கு பல்வலி துவங்கி விட்டதால், பல்லை கடித்துக் கொண்டுதான் செய்ய முடிந்தது. எப்போதும் இடம் பெறும் கலவன் சாதங்கள் எதுவும் செய்ய இயலவில்லை. அவருக்கென பச்சரிசி இட்லி கூட செய்யவில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியில் அரைத்த மாவாகையால் அந்த இட்லிகளை அவருக்கு நேவேதனத்திற்கு வைக்க முடியவில்லை. பிள்ளையார் பொறுத்துக் கொண்டு அனைவரையும் தன் நல்லருளால் காத்தருள்வார் என வேண்டிக் கொண்டேன்.

எப்போதும் போல் நீளமான பதிவு என்றாலும், பொறுமையாக படித்த உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Friday, September 2, 2022

பிணக்கும் பிரிவும்.

வணக்கம் என் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.

ஒரு வார காலத்திற்கும் மேலாக எங்களுக்குள் இருந்த அதிகப்படியான பிணக்குகள் காரணமாக  ஒருவர் மீது ஒருவருடன் அதிகபட்ச வெறுப்புக்கள் தோன்றியது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலைதான். இருப்பினும்  இணைந்து விட்ட ஏதோ ஒரு அன்பின் ஈர்ப்புடன்  எங்கள் வாழ்க்கை இதுநாள் வரை ஓடிக் கொண்டிருந்தது.  

நாங்கள் அன்பாக இணைந்து பல வருடங்களுக்கு மேலாகவே ஆகி விட்ட இந்த நிலையில் "இப்போது இது தேவைதானா" என்ற வருத்தம் இருவருக்குமே ஒரு புறம் மனதை அலைக்கழிப்பதாக எனக்குள் தோன்றியது.

சரி...சரி....விடு அம்மா."காலுக்கு உதவாததை" என்ற பழமொழியை என் குழந்தைகள் வலியுறுத்தவே ஆரம்பித்து விட்டனர். ஆனால் எனக்கு மனம் வரவில்லை. "கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று சொல்லும் போதே மனசு வலித்தது. என்னதான் அவ்வப்போது பிரச்சனைகள் பெரியதாகிப் போனாலும்  ஒரு அநாவசியமான பிரிவை தாங்கவே என் மனதில் தைரியம் இல்லை‌.

போன வாரம்... "அம்மா.. விரைவில் உனக்கு ஒரு.... ..."என்று இளைய மகன் ஆரம்பித்ததும், நான் பதறியபடி எவ்வளவோ தடுத்தும் அது நடந்து விட்டது. எனக்குத்தான் மனம் தாங்காமல் ஒரு மாதிரி தளர்ந்து போனது.

எந்தவொரு பிரச்சனைகளின் இறுதி வடிவம் பிரிவுதானா? வேறு சமரச மார்க்கமே இல்லையா? இப்படி எடுத்தற்கெல்லாம் சட்டென்று முடிவெடுக்கும் பிரிவென்றால அந்த காலத்தில் எந்தவொரு தடுமாற்றமுமின்றி அனைத்து மக்களும் நலமுடன் வாழவில்லையா? என் மனதில் எழுந்த ஏகப்பட்ட கேள்விகளால் புது உறவு பூக்க சற்று தாமதமானது. ஆயினும் என் குழந்தைகளின் மனதில் பாசத்தோடு வளர்ந்த செடி இலைகளின் அன்பான ஆதரவோடு மொட்டு விட்ட பூ மலர்ந்து விட்டது.

அட...... பிரச்சனை வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் குழம்பி தவிப்பதற்குள் புதிரை விடுவித்து விடுகிறேன்.

இது என் புது கைப்பேசி வந்த வரலாறு.

பிரிவுக்கு ஒரு மனதாக தயாரான என்னிடமிருந்த  கைப்பேசி புகைப்படங்கள் வீடீயோ எதையும் சரியாக பார்க்க விடாது, நீண்ட நேரங்கள் தன்னைப் பார்க்கும் என் கண்‌ நலம் கருதி படிக்க விடாமலும் படுத்த ஆரம்பித்து விட்டது.

"எல்லாம் உன் நலத்திற்ககாகத்தானே இப்படி......" என்ற  கேள்வி வேறு அதனிடமிருந்து அடிக்கடி எழும்புவதால், சரியென்று நானும் ஆமோதித்தபடி என்னை அமைதிபடுத்திக்  கொள்வேன். இறுதியில் புதுசு வந்தாக வேண்டுமென்ற விதியின் விளையாட்டிற்கு முன்  அதன் விளையாடல்கள் செல்லுபடி ஆகவில்லை.

ஆனாலும், அதை அதன் உடல்நலம் பாதிக்கப்பட்ட உடனே  மருத்துவரிடம்‌ முறையாக சென்று காண்பித்திருக்க வேண்டுமோ என்ற தவிப்பு இன்னமும்‌ என் மனதில் அதைப் பிரிந்த வேதனையோடு இணைந்து உறவாடியபடி உள்ளது. எதுவுமே நமக்கென்று  நிரந்தரமில்லாத இந்த  உலகத்தில் வாழும் போதும், அதனின் இயல்பான ஒத்துழைப்புக்கள் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. அதனின் இயல்பை இந்த புதிதாக வந்திருக்கும் இதனிடம் கற்றுக் கொள்ள எனக்கு சற்று காலதாமதம் ஆகலாம்.

இந்த கைப்பேசி வந்து அது என்னுடன் பழகும் பொழுதினில் ஏற்பட்ட தாமதத்தில் முந்தைய முள்ளங்கி பரோட்டாவை‌ பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிய வைத்த சகோதரர்கள் ஸ்ரீராம், கில்லர்ஜி, நெல்லைத்தமிழர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பான நன்றிகள். மற்றும்,அனைத்து சகோதர, சகோதரிகளின் நிறைய பதிவுகளையும் நான் தவற விட்டிருக்கிறேன். அனைவரிடம் என் மனமார்ந்த மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இனி எப்போதும் போல் வலைத்தளம் வர இறைவன் அருளை வேண்டிக் கொள்கிறேன்.