சூரியனின் விண்ணப்பம்....
மழை வருது.. மழை வருது... குடை கொண்டு வா..! வெண்மேகமே..
மழை, மழை...எங்கும் சூழ்ந்த மழை.! சூரியனின் கட்டளைப்படி அவனுக்காக குடை கொண்டு வந்து தந்தாலும், கரு மேகங்களுடன் நானும் ஐக்கியமானதில், குடைகள் கை தவறி காற்றுடன் கலக்கின்றனவே.! என்ன செய்வேன்?
மழை பெய்தாலும், பெய்து நின்றாலும், இரவில் எங்களுக்கும் ஒடுங்கிக் கொள்ள குருவி விட்டுச் சென்ற இந்த ஜன்னல் கம்பிகள்தான்.
ஏய்.! இந்த இருட்டிலே என்னை தனியா விட்டுட்டு எங்கே போனாய்? எனக்கு பயமாயிருக்கிறது என்பது ஒரு பக்கமிருந்தாலும், உனக்குத்தான் இருட்டிலே தனியா போக கொஞ்சமாவது தைரியமிருக்கா?
ஹப்பாடா.! ஒரு வழியா வந்திட்டியா? இப்ப இந்த இருட்டிலே நாம் இருவர்தான் ஒருவருக்கொருவர் துணை. நாளை காலை மழையின் விடாப்பிடியான பிடியில் மறைந்திருக்கும் சூரியன் களைப்புத்தீர வெளி வந்ததும், நீ யாரோ.! நான் யாரோன்னு பறந்து போயிடுவோமோ...! அப்படி போக மாட்டோம்னுதான் நம்புகிறேன். நாளையும் என்னுடன் துணையாக இருப்பாயா ?
மலர்களின் ரசனை...
வானம் நமக்கு தோழன்.. காற்றும், மழையும் நண்பன். காற்றில் பொன்னூஞ்சல் ஆடி இலை மெத்தை தேடி நாம் வந்த வேளை இது..!
ஆகா.. இந்த பாட்டை முன்பே எங்கேயோ.....எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.! சரி.! சரி.! எங்கே கேட்டாலும், அந்த வானமும், காற்றும். மழையுந்தான் நமக்கும் தோழன், நண்பன் எல்லாமும்.. நாமும் அந்த பெருசின் உடன் பிறப்புகள்தானே! இதோ இந்தப் பாட்டையும் கொஞ்சம் கேளு...
மலர்களிலே பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்.
பச்சை நிறம் அவன் திருமேனி....
பவள நிறம் அவன் செவ்விதழே....
மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்....
வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்....
மலர்களிலே பல மணம் கண்டேன். திரு மாலவன் கருணை மனம் கண்டேன்.
பாடல் எல்லாவற்றையும் கேட்டாயா? என்னவொரு ரசனை இந்த மலர்களுக்கு. நாம்தான் கொஞ்சமும் எவ்வித ரசனையுமின்றி நெடிதுயர்ந்து வளர்வதிலேயே கவனமாக இருந்து விட்டோமோ ?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... நம்மை படைத்தவன் சொல்கிற கடமையைதான் செய்கிறோம். சூரியன் தன் பாதுகாப்புக்கு "குடை கொண்டு வா" எனச் சொல்வதற்கு காரணமாயிருந்த மழையையே நாம்தான் தோற்றுவிக்கிறோம். அந்த பெருமையொன்றே நமக்கு போதாதா? மேலும் நம்மிடையே மலர்களையும், காய் கனிகளையும் உண்டாக்கும், மரங்கள் இல்லையா? யாருக்கு எது கிடைக்கிறதோ அது தப்பாமல் அவர்களுக்கு கிடைக்கும்.
உண்மையான பேச்சு.! இப்படி பூங்காவில்,
கண்களுக்கு விருந்தாக, சோர்வுறும் ஒரு மனதிற்கு இதமளிக்கும் விதமாக,
பார்க்க வரும் அனைவருக்கும், பார்வையாளர்களாக நாங்கள் வளர்ந்து நிற்கவில்லையா ?
பூவும், காயுமாக பலனளிக்கும் விதமாக நாங்களில்லையா? ஒவ்வொருவருக்கும் ரசனைகள் மாறுபடும். இந்த உலகத்தில் நம்மை ரசிப்பவர்களும் இருக்கிறீர்கள். அந்த திருப்தி போதும் நமக்கு...
ஆவ்... என்ன விவாதமிங்கே.! பொல்லாத ரசிப்புக்கு பெயர் போனவர்கள் இவர்கள்... காட்டின் ராஜாவாக கவலைகள் ஏதுமின்றி உலாத்திய என்னை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து இந்த சிறு இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். கூண்டுக்குள் நடமாடும் இவர்களை நான் கூட்டின் வெளியிலிருந்து பார்ப்பதாக அவ்வப்போது கற்பனை செய்து கொள்கிறேன். இல்லையென்றால், என் ஒரு உறுமலுக்கு இவர்கள் அந்த கூண்டிலிருந்து வெளியே ஓடி விடுவார்கள். எங்கே...!.!.! கூண்டை திறந்து ஒரு நடை உள்ளை வந்து என்னைத் தொட்டு, என்னுடன் பேசி ரசிக்கத் சொல்லுங்கள் பார்க்கலாம்.... தினமும் ஓராயிரம் பார்வைகளை சந்திக்கிறேன். ஒன்றிலும் ரசிப்புத் தன்மையே இல்லை....
அதென்னவோஉண்மைதான்.. நான் நடந்து வரும்போதெல்லாம் என்னைப் பார்த்து, என் நடையை பார்த்து ரசிக்காது, கையிலிருக்கும் சின்ன ஒளிப் பெட்டியை இயக்கி, அதில் என்னை அவர்களுடன் இணைத்துக் கொள்வதிலேயே நாட்டமாக இருக்கிறார்கள். என்னவோ போ. ! இந்த நடையில் கால் ஓய்ந்ததும் படுக்க இடம் போட வேண்டியதுதான்!....
ஆங்காங்கே எடுத்த படங்களை இணைத்து ஒரு கதம்பமாய்... ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏


























