Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Tuesday, October 25, 2022

சிவகாமியின் பந்தம் 4 ம் இறுதிப்பகுதி.

 இந்தக் கதையின்  3 ம் பகுதியின் சுட்டி. அதற்கு முந்தைய பகுதிகளான பகுதிகளான 2ஆம், 1ஆம் பகுதிகளின் சுட்டி. 

அக்கா.. நான் இப்போ நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீ உடன் பிறந்த எங்களுக்காக உன் வாழ்க்கையே விட்டுத் தந்திருக்கிறாய்..! அப்பாவின் முடிவையும், அதனால் நீ பட்ட கஷ்டங்களையும் எனக்கு ஒரளவு விபரம் தெரிந்த பிறகு அம்மா இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள்.....! முதலில் நீ, நான் என் விருப்பத்தை சொன்னவுடன்  இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு என்ன காரணம் என எனக்குத் தெரியாது. ஆனால், அதன் பின் நான் ஊரிலில்லாத போது இவள் வீட்டுக்கு சென்று பேசி, நீ கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டதற்கு காரணம் மட்டும் இவளாலேயே  தெரிய வந்தது. அதனால் நீ விரும்பிய நடராஜன் மாமாவின்  சொந்த  மகளல்ல இவள்....! ஒரு விபத்தில் உயிரிழந்த தன் அக்காவின் மகளான இவளை  உன்னைப் போலவே  அவரும் தன் சொந்த  மகளாக  நினைத்துக் கொண்டு திருமணமே செய்து கொள்ளாமல் வளர்த்து வருகிறார் என்ற உண்மை தெரிந்ததும், நீ உன் முடிவை மாற்றிக் கொண்டாய். .! அப்படித்தானே..... அக்கா.. !  கணேசன் பேச பேச சிவகாமி  அதிர்ந்தாள். .

சற்று சுதாரித்தபடி, "சரி..!! சரி..!! எப்படியோ எல்லாவற்றையும் தெரிந்து  வைத்திருக்கிறாயே. ஆமாம்.. எல்லாமே உண்மைதான். . .!!! நான் முதலில் மறுத்ததற்கு அதுதான் காரணம்...! உன் மனைவி தன் தந்தையெனக் கூறி நடராஜனின் போட்டோவை உன்னுடன் வந்த அன்று காண்பித்ததும், என் மனதே சரியில்லை.. . ...! என் பழைய கால வாழ்வின் நினைவுகளோடு சம்பந்தப்பட்டவரின் மகள் என்பதால், மீண்டும் அவரை எப்படி சந்திப்பது, எப்படி பேசுவது என்றுதான் முதலில்  உன் திருமணத்திற்கு தடை சொன்னேன். ஆனால்,.. ..!! என்றவளை அவசரமாக இடைமறித்தான் கணேஷ். 

 "அதுதான் இப்போ உண்மைகள் எல்லாம்  தெரிய வந்துடுச்சே அக்கா....!!  நடராஜ மாமா இவளின் சொந்த அப்பா இல்லை. .! அவரின் அக்கா பெண்தான் இவள் என்ற உண்மை உனக்கு மட்டுமில்லாமல், எங்களுக்கும் தெரிய வந்துடுச்சே.. .!! நீ இத்தனை காலம் எங்களுக்காக உன் திருமணத்தை ஒதுக்கிய மாதிரி, அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை காப்பதே கடமையென வாழ்ந்து வந்துள்ளார் என்பதை அறிந்த பின், நீங்கள் இருவரும் இனியாவது  திருமணம் செய்து கொண்டு  எங்களுக்காக சேர்ந்து வாழலாம் இல்லையா? அதைத்தான் நான் தரும் பரிசென்று உனக்கு கூறி, உன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம் என நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தை உன்னிடம் இன்று கூறி சம்மதம் பெறவும்  நினைத்தோம். ..!" என்றபடி தன் மனைவியை பார்த்தான் கணேசன்.

கணநேரம் மௌளனமாக இருந்த சிவகாமி," தம்பி உனக்கு இன்று திருமணம் உன் விருப்பப்படி நடந்தற்கே நம் அம்மாதான் காரணம் தெரியுமா?  நான் இல்லை.. " என்றவள் அன்று அம்மாவின் கடிதத்தை படித்த விபரங்களையும், நடராஜனின் கடிதத்தை சேர்த்து வைத்து படித்து புரிந்து கொண்டதையும், அதன் பின்னும்  ஆயிரம் தயக்கங்களுடன், நடராஜனை சந்தித்துப் பேசி," நம் தயக்கங்களுக்காக நம் குழந்தைகளின் வாழ்க்கையை பலியிட வேண்டாமென கலந்தாலோசித்து தீர்மானித்து அவர்களின் திருமணத்திற்கு நாள் குறித்ததையும்" விளக்கமாக கூறக்கூற கணேசன் ஆச்சரியமாக கேட்டபடியிருந்தான்.

"அக்கா.  .. எவ்வளவு நடந்திருக்கு.!!!!.நீ ஒன்றுமே கூறவில்லையே. .?  சரி.. . அப்பவும்  நீ சொன்ன பிரகாரம் அவர் சிவகாமி இல்லாத நடராஜனாகத்தானே உன்னை  மறுபடி சந்தித்திருக்கிறார். அப்போதும் உன் மனம் சஞ்சலத்திலிருந்து விடுபடவில்லையா? எங்களுக்காகவாவது நீயும், அவரும் உங்கள் வயதின் காரணத்தை ஒரு பொருட்டாக கூறாது அவரை திருமணம் செய்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கலாம் இல்லையா? "கணேசன் குரலில் ஆர்வம் மேலிட கேட்டான். 

தம்பி.. இது என்றுமே சாத்தியமில்லையடா... மேலும்,," என்று பேச ஆரம்பித்த அக்காவை பேச விடாமல்  தடைசெய்தபடி "அக்கா.. நீ கொஞ்சம் உன்னை, உன் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு எனக்காக யோசனை செய். உன் வாழ்வில் உன் விருப்பத்தை நம் அப்பா வேண்டாமென மறுத்த அந்த நிகழ்வுக்குப் பின் உனக்காக எதுவும் விருப்பப்படாமல், எங்களுக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறாய்..!! உன் வாழ்க்கையே இதுவரை ஒரு தவமாக கழிந்திருக்கிறது . இப்போது அந்த தவத்தின் பலன் கைமேல் கிடைக்கும் போது ஏன் வேண்டாமென மறுக்கிறே...!" என்றபடி  அவள் கைகளைப்பற்றி கெஞ்சாத குறையாக கூறினான் கணேசன். 

" தம்பி.  .. நீ இன்னமும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என எனக்கு இப்போது தோன்றுகிறது. தவமாக வாழ்வை கழித்து விட்டேன் என்று கூறுகிறாய்...! அப்படி பார்த்தால் அந்த தவத்திற்கு பலனை எதிர்பார்த்தா அந்த தவத்தை மேற்கொண்டேன்.. . இல்லையே...! ஒருவர் தான் செய்யும் தவத்திற்கு பிரதிபலனாக எந்தவொரு பலனையும் எதிர்பாராது தவத்தை மேற்கொள்வதுதான் அந்த தவத்திற்கே ஒரு சிறப்பு தெரியுமா? 

அன்று அவரை அவர் கடிதத்தில் எழுதியிருந்தபடி சந்திக்கும் போது உண்மையிலேயே எனக்கும் ரொம்ப பெருமையாகத்தான்  இருந்தது. அவருக்கும் அது மனதுக்குள் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பது அவரின் முக பாவத்திலும், பேச்சிலும் உணர்ந்து கொண்டேன். ஆனால், நாங்கள் மணம் செய்து கொள்ளாமல் ஒருவரின் நினைவுகளுடனே வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டோம். இறைவன் எங்களுக்காக  அளித்த செல்வங்களாக உங்கள் இருவரையும் ஏற்று வளர்த்து ஆளாக்கி விட்டோம் என்ற சந்தோஷத்தை தவிர்த்து, அவரிடமோ, என்னிடமோ வேறு எந்த உணர்ச்சிகளும் அன்று இடம் பெறவில்லை. அதனால் இத்தனை நாள் நாங்கள் மனதால் வாழ்ந்த வாழ்க்கைக்கு திருமணம் என்ற முடிச்சிட்டு கொச்சைப்படுத்த நாங்கள் இருவருமே விரும்பவில்லை..! இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு....!!!! இனி எங்கள் சந்தோஷம் உங்களிருவரின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மட்டுந்தான்..!! 

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்வை கண்குளிர கண்டு நாங்களும் சந்தோஷம் அடைவது மட்டுந்தான் மிகுதி இருக்கும் எங்கள் வாழ்வின் சந்தோஷமும். எங்கள் பந்தமும் உங்கள் இருவருடன் மட்டுந்தான்...! !! இதை அன்றே நாங்கள் தெளிவாக பேசி முடித்து விட்டோம். இனி இதைப்பற்றி வேறு எதுவும் பேசி என்னை துன்புறுத்தாதே. .!!! "  சற்று உணர்ச்சிவசப்பட்டவளாக சிவகாமி கூறி நிறுத்தினாள். 

அவளின் அழுத்தமான பேச்சின் முடிவு அவர்கள் இருவரையும் சற்றே திகைக்க வைத்தது. வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும், கவனமான அக்கறையுடனும், அழுத்தமான பொறுப்புணர்வுடனும் முடிவு எடுக்கும் தன் அக்கா ஒரு தெய்வப் பிறவியாக கணேசனின் கலங்கிய கண்களுக்கு தெரிந்தாள். அவர்களிடையே நிலவிய சிறிய மெளனம் அவளின் மன உறுதியை அங்கு ஆழமாக உழுத பெருமையில் சந்தோஷிப்பது போல் தோன்றியது. 

" அக்கா. ..! உன் மனதை புரிந்து கொள்ளாது என்னென்னவோ பேசி விட்டேன். என்னை மன்னித்து விடு..! நீங்கள் இருவரும் மனமொத்து எடுத்த முடிவு என்னை ஆச்சரியபடுத்துகிறது  இனி வரும் உன் வாழ்வில் உனக்கு  துணையாக நாங்கள் இருவரும் எப்போதுமே  உன்னுடன் இணைந்திருப்போம். இது சத்தியம் அக்கா... " என்று விழி கலங்கியபடி கூறிய கணேசனை  தானும் கலங்கிய விழிகளுடன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவர்களின் அன்பான பந்தம் புரிந்த மன நிறைவில், சிவகாமியின் தோளோடு தானும் அணைத்தாற் போல நின்றபடி கண்ணீர் உகுத்தாள் கணேசனின் மனைவி. 

அங்கே அவர்களின் இடையே உள்ள வாழ்வின் பந்தங்கள் புரிந்த நிம்மதியில் புகைப்படத்திலிருக்கும் தங்கள் அம்மா தான் பெற்ற செல்வங்களின் நல்ல மனதினை கண்டு நீடூழி வாழ ஆசிர்வதிப்பதை உணர்ந்தாள் சிவகாமி.

கதை நிறைவுற்றது.

இக்கதையை என்னுடன் தொடர்ந்து வந்து 4 பகுதிகள்தோறும் வாசித்து என் எழுத்துகளுக்கு பக்கபலமாக நல்ல கருத்துக்களை தந்த என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 

Saturday, October 22, 2022

சிவகாமியின் பந்தம் 3 ம் பகுதி.

இது இந்தக்கதையின் கடந்த முதல், இரண்டாம் பகுதியின் சுட்டிகள். 

1. ஆம் பகுதி சுட்டி

2. ஆம் பகுதி சுட்டி

ஆயிற்று... கணேசன் ஊரிலிருந்து அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய  மூன்றாம் நாள் மாலை அவன் இரவு சாப்பாட்டை முடித்தவுடன், "தம்பி உன்கிட்டே ஒன்னு சொல்லனுன்னு  நீ  ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே சொன்னேனே...  மறந்துட்டியா?" என்றபடி சிவகாமி ஹாலில் சோபாவில் அவனருகே வந்தமரவும். "ஆமாக்கா.... நினைவிருக்கு.  என்ன விஷயம்னு சொல்லு..! " என்றபடி  சோபாவில் சாய்வாக  அமர்ந்திருந்த கணேசன் சற்று நிமிர்ந்து எழுந்து அமர்ந்தான் ஆர்வமாக. 

"தம்பி.. உனக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்துட்டேன்.. என்று மகிழ்ச்சியான சிரிப்புடன் சொன்ன  சிவகாமி அவன் முகம் நொடியில் மாறுவதை கவனித்தவளாய், " என்ன பெண் யார் என இப்பவே சொல்லவா? இல்லை நாளைக் காலையிலேயே நிதானமா தெரிஞ்சுகிறயா?" என்று மறுபடியும் முகம் மலர சிரித்தபடி கேட்டாள். 

ஒரு நொடியில் தன் முக பாவத்தை சட்டென மாற்றிக் கொண்டவனாய், "இல்லையில்லை இப்பவே சொல்லேன்க்கா..." என்றான். ஆனால்  குரலில் அவ்வளவு சுரத்தில்லாதவனாக..! 

" சரி.. இப்போதே சொல்லவா? என்று புன்னகையுடன் சற்று இடைவெளி விட்ட பின் "வேறு யார்? எல்லாம் நீ பார்த்து வைத்திருக்கும் பெண்தான்....!! இப்ப உனக்கு சந்தோஷந்தானே.. .! " சிவகாமி இப்படி அவனையே ஒரு கேள்வி கேட்டதும், அவனுக்கு கால்களுக்கு அடியில் தரை நழுவுவது போல் ஒரு கணம் அதிர்ச்சி உண்டாக்கியது. 

"அக்கா. . என்னக்கா சொல்கிறாய்? என்னால் இதை நம்பவே முடியவில்லையே...!! எப்படி இந்த அதிசயம் இந்த ஒரு வாரத்தில், நடந்தது. .? அவன் வார்த்தைகள் தடுமாறியபடி சில விநாடிகள் கழிந்த பின்பாக திகைப்புடன் கேட்டவாறு விரைவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் . அவன் முகம் அளவு கடந்த சந்தோஷத்தில் விகசிப்பதை கண்டதும் சிவகாமியின் உள்ளமும் பூரித்தது. 

தம்பி.. உன் விருப்பத்தை நான் என்றாவது மீறி சொல்லியிருக்கிறேனா ? நீயுந்தான் என் பேச்சை எப்போதாவது மீறி நடந்திருக்கிறாயா? என்னவோ எனக்கு அன்று அப்படி தோன்றியது. பின் நீ இப்போது ஊருக்கு சென்றிருந்த போது யோசித்து பார்க்கையில், உன் மனநிலையை உணராது, வேறு பெண்ணை உனக்கு மணமுடித்தால், நீ வாழ்நாள் முழுக்க எவ்வளவு மன வேதனையடையோ எனத் தோன்றியது. அதனால்தான் உடனே அவளை நீ விருப்பப்பட்ட பெண்ணை உன் அலுவலகம் சென்று சந்தித்து, என் சம்மதத்தை கூறி. உடனேயே அவள் தந்தையையும், குடும்பத்தாரையும் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி அவர்களின் முடிவையும் சந்தோஷத்துடன் வாங்கி வந்து விட்டேன். நீ ஊரிலிருந்து உன் வேலைகள் முடிந்து திரும்பியதும் கூறலாமென உனக்கு கைப்பேசியில் கூடச் சொல்லவில்லை. என் வருங்கால மருமகளிடமும் "நானே இதைப்பற்றி அவனிடம் முதலில் கூறுகிறேன்.நீ அப்புறமாகச் சொல்லு.. " என கேட்டு சம்மதம் வாங்கி வந்திருந்தேன்.  போதுமா? விளக்கம்.....!!"என்று ஒரே மூச்சுடன் முடித்த அக்காவின் கைகளை அப்படியே இறுக பற்றியவாறு சந்தோஷம் தாங்க முடியாமல் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் கணேசன். 

"அக்கா..! உனக்குத்தான் என் மீது எவ்வளவு பாசம். இனி எத்தனைப் பிறவி எடுத்தாலும் உன் மகனாகவோ, மகளாவோ மட்டுமே பிறக்க வேண்டும்..!" என அவன் மனம் மானசீகமாக இறைவனை வேண்டும் போது அவன் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடியது. 

தம்பியின் தலையை தடவியவாறு அவன் மனதுடன்  பூத்திருந்த சந்தோஷத்தை புரிந்து கொண்ட சிவகாமியின் மனதும் ஏதும் பேச முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருந்தது. 

திருமணமண்டபம்  கலகலப்பாக இருந்தது. தன் தம்பியை திருமணக் கோலத்தில் பார்த்து சந்தோஷமடைந்திருந்த சிவகாமி சின்னப் பெண்ணாக மாறி அங்குமிங்கும் சென்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்றபடியும்  வந்தவர்களை நலம் விசாரித்தபடியும் ஓடிக் கொண்டிருந்தாள். 

"அக்கா. . நான் எப்படியிருக்கேன். .? இந்த உடையில் நன்றாக இருக்கிறேனா? " என்று முகம் மலர்ந்த புன்சிரிப்புடன் கண்ணால் கேட்டுக் கொண்டிருந்த தம்பி உற்றார் உறவினர் ஆசிர்வாதங்களுடன் திருமணம் முடிந்தவுடன் மணமக்களாக  தங்கள் வீட்டுக்குத் திரும்பியதும், அம்மாவின் படத்திற்கு முன்பாக வணங்கி அவளிடம் ஆசிர்வாதம் பெற்ற பின், தன் மனைவியுடன் தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற போது சிவகாமிக்கு உடலெல்லாம்  புல்லரித்தது. தன் உழைப்பால், தன் வாஞ்சைக்கு கட்டுப்பட்டு வளர்த்த தன் வளர்ப்பு மகனை தூக்கி நிறுத்தி கைகளால் அவன் முகம் வருடி திருஷ்டி கழித்து அணைத்துக் கொண்டாள். எதுவும் பேசாத நிலையில், பேச முடியாத தவிப்பில் அங்கு வார்த்தைகளுக்கு மௌனம் ஒரு திரை போட்டது. ஒரு நிமிடம் விழி நீரை கட்டுப்படுத்தி, அவன் மனைவியையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். 

"தம்பி. . .நீ நூறு வயது  உன் மனைவியுடன் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டுமடா... . !" என மனதாற வாழ்த்தியவள்,  "அம்மா இருந்திருந்தால் இப்போ எவ்வளவு சந்தோஷபட்டிருப்பாள்...! அவளுக்கு பார்க்க கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே...! ஆனால்,அவள் கனவுகளை நான் எப்படியோ நிறைவேற்றி விட்டேன்..! என்றவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினாள். 

"அக்கா.... அதுதான் அம்மாவுக்கு அம்மாவாக  அன்பாக இருந்து என்னை இந்தளவுக்கு நல்ல நிலைக்கு வளர்த்திருக்கிறாயே..! !மேலும் என் விருப்பமாக நான் மனதாற விரும்பியவளையும் எனக்கு வாழ்க்கைத் துணையாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறாய்...! இதற்கெல்லாம் இதை விட உன் அன்புக்கு பிரதியுபகாரமாக  நான் உனக்கு  என்னச் செய்யப் போகிறேன் எனத் தெரியவிலலை . ஆனாலும் இப்படி என்னை பார்த்துப்பார்த்து  வளர்த்திருக்கும் உனக்கு நான் இப்போது ஒரு சின்ன பரிசு தரப்போகிறேன். ஆனால், நீ அதை  மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக ஏற்றுக் கொள்வாயா? " அன்புடன பேசிய கணேசன் முகத்தில் ஒரு கெஞ்சுதல் பாவம் ஒலிப்பதை கண்டவள் "அப்படி என்னடா உன் அன்பு பரிசு.? என்றாள் வியப்பாக சிவகாமி.

தொடர்ந்து வரும். 

Friday, October 21, 2022

சிவகாமியின் பந்தம். 2 ம் பகுதி.

இது சென்ற முதல்  பகுதியின் சுட்டி

அக்கா.. எப்படி இருக்கிறாய்? இன்று கிளம்ப வேண்டியவன் கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகிறது. என் அலுவலக வேலைகள் முடிந்ததும், உடனே கிளம்பி வந்து விடுகிறேன். .இன்னமும் ஒரு நாளைககு மேலேயே ஆகும் போலிருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கோக்கா. " தம்பியின் குரல் வருத்தத்தில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் மறுநாள் பகலில் கைபேசியில் வந்தது. 

" அப்படியா? சரிடா.. இருந்து பார்த்து முடித்து விட்டு வா.! ! வேளைக்கு சாப்பிடு. வேலை இருக்குனு வயித்தை காயப்போடாதே...! எனக்கு ஒன்றும் சங்கடமில்லை. நீ நிம்மதியா வேலைகளை முடிச்சிட்டு வா...! என்றவள் அவன் தன்னிடம் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி கண் கலங்கினாள்..

"சின்ன வயதிலிருந்தே அவன் விருப்பபட்டதை வாங்கித் தந்து அவனை கண் கலங்கி முகம் சுளிக்காமல், பார்த்துக் கொண்ட நான் இப்போது ஒரேடியாக அவன் விருப்பத்தை மறுக்கிறோனோ. .... " மனசு தேவையில்லாமல் அலைபாய்ந்தது. 

மதியம் ஒரு மன மாற்றத்திற்காக அம்மாவின் பீரோவை சரி செய்யும் வேலையில் இறங்கினாள். அதை அவ்வப்போது சுத்தம் செய்து அவர்கள் உபயோகப்படுத்திய கொண்டாலும், தாயின் மறைவுக்குப் பின் அம்மா உபயோகப்படுத்திய துணிகள் அடங்கிய சில பெட்டிகளை நினைவாக இருக்கட்டுமென அதை எடுக்கவேயில்லை. இன்று அதை உதறி மடித்து வைத்தால் அம்மாவின் நினைவில் நேரத்தை கடத்தி விடலாம் என ஆரம்பித்தவள் ஒரு புடவையை எடுத்து உதறிய போது உள்ளிருந்து பழைய டைரி ஒன்று விழுந்ததை கண்டு அதை எடுத்துப் பிரித்தாள். 

"அம்மாவுக்கு எழுதும் பழக்கம் இருந்து பார்த்ததில்லையே" என்ற வினாவுடன் எடுத்துப் பிரித்தவளுக்கு ஒரு பக்கத்தில் ஒரு கடிதம் பல விதத்தில் கிழிந்து காணப்பட்ட நிலையில் ஒரு கவருக்குள் சுருண்டு மடங்கியிருந்ததை கண்டாள். டைரியில் அந்தப் பக்கத்தில், அம்மாவின் சற்றே கோணாலான எழுத்துக்கள். 

அன்புள்ள சிவகாமி... 

இதை நீ எப்போ பார்ப்பேனு எனக்குத் தெரியாது. நீ பார்த்த பையன் உன் அப்பாவை பார்த்து தன் விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்க வந்த போது உன் அப்பா அவரை அசிங்கமாக பேசி அவமானபடுத்தி அனுப்பி விட்டார். அதைக்கூட உன்னிடம் சொன்னேன். உடனே அப்பாவின் தீடிரென்ற பிரிவின் மனக்கஷ்டத்திலே இன்னொன்றை நான் கூறவில்லை. அதுக்காக இந்த அம்மாவை மன்னிச்சுடு. 

அன்னைக்கு வந்துட்டு போன ஒரு வாரத்திலேயே அவர் மீண்டும் ஒருநாள் வந்து அப்பாகிட்டே ரொம்ப நேரம் பேசினாரு. அப்பாவும் பழைய கோபத்தோடுதான் அவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் போகும் போது உன் கிட்டே ஒரு கடிதாசியை மட்டும் கொடுக்கச் சொல்லி கொடுத்திட்டு போனார். அவர் தலை மறைஞ்சவுடனே அப்பா அந்த லெட்டரை கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு கோபமா வெளியே போயிட்டார். நான் அதை எடுத்து பத்திரப்படுத்தி உன்கிட்டே சமயம் பார்த்து கொடுக்க வச்சிருந்தேன். அதுக்குள்ளே உங்க அப்பா மரணமும், அடுக்கடுக்கா என்னென்வோ நடந்து போச்சு.. இப்ப இந்த புடவையை பிரிச்சதும் இந்த லெட்டரும் அந்த சம்பவமும் நினைவுக்கு வந்தது. உன்கிட்டே நேரடியா இதை தர இப்பவும் எனக்கு தைரியமில்லை. . இதை நீயா ஒரு நாள் பிரிச்சு பாத்துக்கோன்னு இந்த லெட்டரோடு என் கடிதாசியையும் எழுதி வைக்கிறேன். நீ. இதை பார்க்கும் போது என்னை மன்னிசுடும்மா.... 

சிவகாமிக்கு அம்மாவின் கடிதம் கண்களில் மளமளவென்று நீரை வரவழைத்தது. அப்பாவிடம் பேசிய நடராஜன் என்ன கடிதமென்றாலும் அதை என்னிடம் தந்திருக்கலாமில்லையா? அப்பாவிடம் அவன் பேசினதைப் பற்றி கூட தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அம்மா சொல்லித்தான் அறிந்து கொண்டாள். போகட்டும்....!!!! அப்பாவிடம் தைரியமாக பேசி அவர் மனக்குறைகள் போக்கி சம்மதம் வாங்கி விடலாம் என்றிருந்தவளுக்கு அப்பாவின் மரணம் சவுக்கடியைத்தான் தந்தது. அதன் பின் நடராஜனை பற்றிய திருமண நினைவுகளையும், ஒரு பள்ளி மாணவியாய், தான் அறியாமல் எழுதியதை ரப்பரால் அழிப்பதை போன்று அழித்து மனதோடு உதறி விட்டாள். 

"என்னை மணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதமா? என கண்ணியமாக கேட்ட நடராஜனின் உருவம் மட்டும் தன் மனதிலிருந்து அழியாததால், அப்பாவின் மறைவுக்குப் பின், தங்கைகளின் திருமணத்திற்குப் பின் தன் அம்மா எத்தனையோ நாட்கள் தன்னிடம் தன் திருமணத்தைப்பற்றி வலியுறுத்தும் போதும் அவள் அதை நிராகரித்து இருக்கிறாள். 

அம்மா.. எனக்கு இனி திருமண பந்தமே வேண்டாம். தம்பிதான் நான் பெறாத பிள்ளை. அவன் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவனுக்கு திருமணம் நடத்தி, அவன் வாரிசுகளை கொஞ்சி மகிழ்வதுதான் எனக்கு சந்தோஷம் தரும். அதை பார்க்கும் நாட்களுக்காக நீயும் என்னுடன் காத்திரு..!! இப்போதைக்கு நீயும், தம்பியுந்தான் நான் பாதுகாக்க வேண்டிய என் இரு கண்கள்....! இப்போதைக்கு அதை தவிர வேறு ஏதும் பேசாதே.. .! என கண்டிப்பான உறுதியுடன் சொல்லும் போது அம்மாவின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்து ஓடும். 

நினைவுகளின் சுமையில் ஆழமான மூச்சு வெளிப்பட்டது சிவகாமிக்கு. மெல்ல அந்த கடித துணுக்களை சேர்த்தெடுத்து வேறு ஒரு காகிதத்தில் பரப்பி சேர்த்து வைத்து படிக்கும் ஆவல் வந்தது. இதற்காகவே இன்று தம்பியை தன்னிடமிருந்து இறைவன் பிரித்து வைத்து வேடிக்கை செய்கிறானோ எனவும் தோன்றியது. 

தன் திட்டப்படி வேறு காகிதத்தில் நிறைய நேரங்களுக்குப்பின் கிழிந்த காகித துணுக்குகளை ஒன்று சேர்த்து வைத்து உருவாக்கிய கடிதத்தை ஒரு வழியாக படிக்க ஆரம்பித்தாள். 

அன்புள்ள சிவகாமிக்கு 

நான் எவ்வளவோ முயன்றும் உங்கள் தந்தை நம் திருமணத்திற்கு மறுத்து விட்டார். மற்றவர்கள் போல் அவர் உத்தரவு இல்லாமல் நாம் திருமணம் செய்து கொள்வது அந்த பந்தத்திற்கே இழுக்கு. ஆகவே காத்திருப்போம். உங்களால் உங்கள் குடும்ப சூழலால் அது முடியவில்லையென்றாலும், மற்றபடி இதற்கு முடிவேதும் கிடைக்கவில்லையென்றாலும், நான் இப்படியேதான் இருப்பேன். . உங்களைப் போல் என் குடும்பம் என்ற பந்தங்களும் என்னுடன் பிணைந்து சுற்றுவதால், என் காத்திருப்பு வேதனைகளும் எனக்கு பெரிதாக தெரியாது. உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வேலையை விட்டு அகலுகிறேன். நம் சந்திப்புகள் தொடர்ந்து இருந்தால், உங்கள் மனம் வேதனையுறும். அதன் விளைவுகள் உங்கள் குடும்பத்தில் எதிரொலிக்கும் என்பதால், வேறு ஊரில் வேலை தேடி போகிறேன். என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்கும் போதும் இந்த நடராஜன் சிவகாமி இல்லாத பழைய நடராஜனாகத்தான் இருப்பான். அது நிச்சயம். ...! ஏன். சத்தியமும் கூட... 

இப்படிக்கு

உங்கள் நடராஜன். 

தடுமாறியபடி கடிதத்தை படித்து முடித்ததும், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் சிவகாமி. தன் வாழ்வின் திசை திரும்பல்கள் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை நினைத்து வேதனைபடுவதா. .. வியப்படைவதா... எனத் தெரியாமல் அப்படியே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாள். 

தொடர்ந்து வரும்.

Wednesday, October 12, 2022

சிவகாமியின் பந்தம்.

 சிவகாமி அமைதியாய் இருந்தாள்.

"என்ன காரணம் அக்கா..? முதல்லே நான் சொல்றதை மறுக்காமே ஒப்புக் கொண்ட நீ... . இப்போ அவளை பார்த்து விட்டு வந்த பிறகு இப்படி இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றியே....!!! " கணேசன் அவளை ஆயிரம் தடவை விழிகளாலும், பத்துக்கு மேற்பட்ட முறை வாயினாலும் கேட்டு விட்டான்.

சிவகாமி பதிலேதும் கூறவில்லை." இது சரிவரும்"னு எனக்கு தோணலைடா.. தம்பி.. உனக்கு"னு பிறந்தவளை கண்டிப்பா உனக்கு முன்னாடி அந்த ஆண்டவன் கொண்டு நிறுத்துவார். நான் உன் விருப்பங்களை என்றாவது தடை பண்ணியிருக்கேனா ? தயவு செய்து இப்ப ... இந்த விஷயத்திலே என்னை புரிஞ்சுக்கோ...!!! " இது அவனுடன் அவன் விரும்பிய பெண்ணை மறுப்பேதும் சொல்லாமல் சென்று பார்த்து விட்டு வந்த நாளில் அவள் கூறியது. இன்றைய வரைக்கும் அந்த பதில்தான் அவள் அழுத்தந்திருத்தமாக கூறிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலும் இதேதான் அழியாமல் எழுதி ஒட்டியிருந்தது . 

இரு தினங்களில் அவன் அலுவலக வேலையாக வெளியூருக்கு கிளம்பும் போது" "தம்பி.. என்னை தப்பா புரிஞ்சுக்காதே. ..! தவறான பாதைகள் உன் வாழ்வில் வந்துட கூடாது. நான் நமக்கு தெரிஞ்ச உறவுகளில் சொல்லி சீக்கிரமா வேறு ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். உன்னை கல்யாண கோலத்திலே பார்க்க இந்த தாய் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கேன்டா ....! அதை மறந்துடாதே..! அக்காவின் கண்களில் நீர் கசிவை கண்டதும் கணேசன் மனம் பதறியது.... 

"அக்கா. .. உன்னைப்பத்தி தெரியாதா? எனனை அம்மாவுக்கும் மேலாக இருந்து வளர்த்திருக்கே....!!! உன் பேச்சில் என்னைக்குமே ஒரு அர்த்தம் இருக்கும்.. நான் உன்னைப் போல் எப்போதுமே திருமணமொன்றை செய்து கொள்ளாமல் கூட இருப்பேனே ஒழிய, அவளையே நினைத்துக் கொண்டு தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டேன். அதுவும் உன்னை நிர்க்கதியாக விட்டு விட்டு.. ..!! நீயிருக்கிற வரை நானும் உனக்காக இருப்பேன்... என்னை நம்பு..!!" என்றவனை உணர்ச்சி மிகுதியில் கண்ணில் கசிந்து தேங்கிய நீர் வடிய அவன் தோள் தொட்டு அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவன் சென்ற மறுதினம் தனிமை உறுத்தவே சிவகாமிக்கு மனதின் இத்தனை நாள் பாரங்களின் சுமைகள் பெரிதாக தெரிந்தன அன்றிரவு உறக்கம் வராததால், தன் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்கள் வேறு நினைவுகளில் வந்து சிறிதளவு வந்த உறக்கத்தையும் விழுங்க முயற்சிக்க நிம்மதியான நித்திரையை இழந்து அவதியுற்றாள்..

குடும்பத்தின் பெரிய மகளாக பிறந்த சிவகாமி அத்தனை பொறுப்புகளையும் உணர்ந்தவளாக வளர்ந்திருந்தாள். தனக்குப்பின் இடைவெளிகள் மிகவும் உடைய இரு தங்கைகள், இறுதியில் ஒரு கடைக்குட்டியாக ஒரு தம்பி......!!!! தம்பி அம்மாவுக்கு பிறக்கும் போது அம்மா பிரசவத்திற்கு அம்மாவுக்கு கூடமாட உதவியாய் இருந்தவளே சிவகாமிதான். அவளின் பொறுப்புள்ள குணத்தை கண்டு பாராட்டாத உறவுகளே இல்லை. 

படித்து முடித்து நல்லதோர் பள்ளி ஆசிரியையாக அவள் பணியில் அமர்ந்ததை பார்த்ததும் அவள் அம்மாவுக்கு பெருமை பிடிபடவில்லை. சட்டென தன் மகளுக்கு ஒரு திருமணம் செய்வித்து அவள் வாழ்க்கையில் வரும் வசந்தங்களை பார்க்க எல்லா தாயைப் போன்று அவளும் ஆசைப் பட்டாள். 

தன் கணவனுக்கு அந்த எண்ணம் சிறிதும் இல்லையென தெரிந்து கொண்ட போது அவளின் கவலைகள் ஆரம்பமாகியது. உறவுகளிலும் அவளை மணம் முடிக்க வந்தவர்களையும் ஏதேதோ பேசி தடுத்தார் அவள் கணவர்.

அதன் காரணம் தெரியாமலும், அவரை எதிர்த்து பேச தெரியாமலும் திண்டாடிய அந்த தாய்க்கு. சிவகாமி தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் நல்ல பண்பான குணமுள்ள நடராஜனை தான்்விரும்புவதாகவும், அப்பாவிடம் பேசி தங்கள் திருமணத்திற்கு அம்மா எப்படியாவது சம்மதம் வாங்கித்தர வேண்டுமென ஒருநாள் தனிமையிலிருக்கும் போது தன்னிடம் கூறியது வயிற்றில் பால் வார்த்தது போன்று இருந்தது. 

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு சிவகாமி.... நானே இதுபற்றி உன்கிட்டே பேசனும்'னு இருந்தேன். சாதரணமா ஒரு பொண்ணு தன் அம்மாகிட்ட இதுபோல தன் விருப்பத்தைப் பத்தி சொன்னா, உடனே கோபந்தான் படுவா...!!! ஆனா நான் சந்தோஷ படறேன்...!! ஏன்னா, உன் அப்பா ஏனோ உன்னை சீக்கிரம் திருமணம் செஞ்சு வைக்க விருப்பமே இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறார். என் பேச்சையும் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கிறார். தம்பியும் இப்பதான் பள்ளியில் படிச்சுகிட்டிருக்கான். அவன் வளர்ந்து இவர் சுமையை எப்போதான் வாங்கிப்பான் என்பதை போன்று பேசுறார். நீயும் எதையும் கண்டுக்காமல் தினமும் வேலைக்கு செல்வதே கடமையென இருக்கே... உனக்கு அப்பறம் இரு தங்கைகளுக்கும், பண்ண வேண்டுமே ..!! எப்படியென என யோசிக்கிறாரோ என்னவோ தெரியல்ல...!! இல்லை உன் சம்பாத்தியத்தை அவர் இழக்க விரும்பல்லையோ என என் மனசு கிடந்து தவிக்குது...! நீ இன்னைக்கு சொன்ன விஷயத்தை அவர்கிட்டேயே எப்படியாவது நாளைக்கே வலியுறுத்தி சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் செஞ்சிடலாம். எல்லா பொண்களை போலவும், நீயும் நல்லா வாழ வேண்டும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லையம்மா. .." அம்மா தன் இயல்பு நிலை மாறி மனக் கலக்கங்களை இறக்கி வைத்த சோர்வில் அழ ஆரம்பித்தாள். 

" அம்மா... அப்பாவை பத்தியும், அவரோட பயங்களை பத்தியும் எனக்கு தெரியுமம்மா.. நான் இந்த குடும்பத்துக்கு மூத்த மகனா இருந்து எல்லா பொறுப்பையும் சுமப்பேன். ஏன்னா எனக்கும் அந்த ஆசை இருக்கு....என் கடமையிலிருந்து நான் தவறவே மாட்டேன். நான் சொன்ன அவரும் இதுக்கெல்லாம் தடை ஏதும் சொல்லாதவரம்மா... அவருக்கு அவர் அப்பா இவருடைய சின்ன வயசிலே தவறிப்போயிட்டதாலே அக்கா, தங்கைன்னு குடும்ப பொறுப்புக்கள் இருக்கு... அதனாலே நீ தைரியமா அப்பாகிட்டே பேசு... என் திருமணத்துக்கு பின்னும் நான் இதே மாதிரி நம்ம குடும்பத்தை காப்பாத்துவேன். தம்பியை படிக்க வச்சி, அவனை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். என் பெரிய பையன் மாதிரி அவனை பாத்துக்குவேன். தங்கைகளுக்கும் படிப்பு முடிஞ்சதும், அவங்களுக்கு தகுந்த வாழ்க்கை வரும் போது நான் நிச்சயம் உங்க கூட இருப்பேன்ம்மா. அதைப்பற்றியும் அப்பாகிட்டே கூறி அவரை தைரியப்படுத்து.....!!! " சிவகாமி பேச. பேச அவள் தாய் இன்னமும் கண்ணீர் சிந்தினாள். 

எந்த நேரத்தில் அவள் அப்படிச் சொன்னாளோ, அவள் தந்தை அடுத்து வந்த சில மாதங்களில்,," நீயே குடும்பத்தை பார்த்துக்க....!!!!" என்பது போல், இவ்வுலக பந்தங்களை விட்டு விலகினார். அதற்குள் ஒருநாள் தன் மனைவி மூலமாக இவள் காதலிப்பதை தெரிந்து கொண்ட தந்தை உக்கிரமாக மறுத்ததோடு இல்லாமல், அதன் விபரம் தெரிந்து வீடு தேடி வந்து சுமூகமாக பேச வந்த நடராஜனை மிகவும் அவமானபடுத்தியும் அனுப்பினார். நடராஜனும் அவளிடம் ஏதும் கூறாமல் பள்ளி வேலையை விட்டு விலகியதை தந்தை மறைவு தந்த அதிர்ச்சியில் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கண்ணெதிரே தன் உயிரை விட பெரிதான நான்கு ஜீவன்களின் நிராதரவான நிலை ஒன்றே அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. 

தந்தையின் மறைவுக்குப் பின் இவளின் பொறுப்புக்கள் கூடியதில், மனதின் நிம்மதிக்காக காதலை தியாகம் செய்து விட்டு,பள்ளியையும் மாற்றிக் கொண்டு இங்கு வந்து விட்டாள். தங்கைகளின் படிப்பு, உத்தியோகம், திருமணங்கள்,, தம்பியின் படிப்பு, என்ற வாழ்வின் சுழற்சியில்,, நடராஜனின் நினைவுகள் புதைந்து கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து போயின. . மிகுந்த மனவருத்தத்தில் இருந்த தாயும், தம்பியின் கைகளை பிடித்து இவளிடம் ஒப்படைத்து இவளின் நிலை குறித்து வருத்தபட்டவளாய் ஒருநாள் அவளும் இவளுக்கு இன்னமும் சிரமம் கொடுக்க வேண்டாமென மறைந்தாள். 

அம்மாவும் ஒரு நாள் தீடிரென மறைந்தப் பின் தம்பி மேல் வைத்திருந்த பாசம் இன்னமும் இறுகியது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பதை கண்டதும் தன் உழைப்புக்கு பலன் தெரிந்தது. இதைக்காண இப்போது தாயும், தந்தையும் இல்லையே என்ற வருத்தம் தோன்றியதின் இடையே, "இதைக்காண முடியாதோ?" என்ற அச்சம் அப்பாவுக்கு ஏனோ எழுந்ததை குறித்து அம்மா உயிருடன் இருக்கும் போது அடிக்கடி அதைச் சொல்லி வருத்தப்பட்டதும், நினைவுக்கு வந்தது. இப்போது தம்பி தான் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாக கூறியதும் தடையேதும் சொல்லாமல், அவனுடன் வந்து அந்தப் பெண்ணை சந்திக்க ஒத்துக் கொண்டாள். அந்த உணவகத்தில் காஃபி அருந்தி கொண்டே. அவளுடன் பேசிய போது, "இவள் தன் தம்பிற்கேற்ற நல்ல மனைவிதான்.." எனத் தோன்றியது. அவளிடம் மனம் விட்டு அதை சொல்லி விடலாம் என்று நினைத்த போது, அவள் தன் குடும்ப  புகைப்படத்தை தன் கை பேசியில் யதேச்சையாக காட்டியதும் மனம் மாறி போனாள். அங்கிருந்து கிளம்பும் இறுதி வரை சற்று இறுக்கமான மன நிலையில் இருந்தவள், வீடு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை "தம்பி... உனக்கு அந்தப் பெண் வேண்டாம்டா..... " என்பதுதான். 

நினைவுகள் தந்த  இறுக்கம் குறைந்து அவள் நித்திரையை தொட்ட போது மணி நான்கை தாண்டியிருந்தது. 

தொடர்ந்து வரும்.

கதைக்கு ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு எப்போதும் என் நன்றி. 🙏. 

Sunday, July 4, 2021

தொடர் கதை... நானும், அவரும்.

கதையின் 6 ஆவது (நிறைவு) பகுதி... 

வந்தும், வராது ஏமாற்றிக் கொண்டிருந்த மழை அன்று காற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு இரவின் நடு ஜாமம் வரை தன் மனம் போனபடி கடுமையாக பெய்த சந்தோஷத்துடன் சற்று ஓய்ந்தது. மழை விட்டும், தூறல் விடாத, புலர்ந்தும், புலராத அந்த அதிகாலை பொழுதில், என்னைச் சுற்றி, ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது... "நல்லவேளை,.. . அவர் வீட்டின் மேல் விழுந்து அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், சாலையில் வந்து விழுந்ததே.... .! எத்தனையோ முறை இதை வெட்டுமாறு நாம் அவருக்கு எடுத்துச் சொல்லியும் அவர் இதன் மேல் வைத்திருந்த அன்பு காரணமாக மறுத்து வந்ததற்கு பிரதிபலனாக, இது அவரை காப்பாற்றி விட்டது.. "என்று என்னை புகழ்ந்தும், எனக்கு பாராட்டுரைகள் கூறி கொண்டும் இருந்தார்கள்.

இரவில் அடித்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, எல்லோரும் கூறியுள்ளபடி, அவர் வீட்டின் மேல் சாய்ந்து விழாமலிருக்க, ஒவ்வொரு நொடியும், இறைவனை வேண்டிக் கொண்டு, மரண அவஸ்தையுடன் ...... மரமாகிய நான்..... பட்ட வேதனை, காலையில் கண் விழித்ததும், சாலையின் குறுக்கே, நான், விழுந்து கிடந்ததை கண்டு களிக்கும், இவர்களுக்கெங்கே புரிய போகிறது. எப்படியோ.... எனக்கு உயிரை தந்து வளர்த்தவருக்கு, கெடுதல் விளைவிக்காமல் இம்மண்ணுலகை விட்டு மறைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேரோடு நான் விழுந்து விட்டாலும், எனது ஆணிவேரும் மண்ணும் சற்று உறவாடி கொண்டிருந்ததால், எனது உணர்வுகள் முழுவதும், அற்று போகாத அந்த நிலையில் என் உள்ளம் அவரைத் தேடியது. "எங்கே அவர்.  .? அவருக்கு உடம்பு பூரண குணமாகி நலமுடன் இருக்கிறாரா. . .? என்னைச் சுற்றி இத்தனை பேர்கள் இருந்தும் அவரைக் காணவில்லையே...? என்னவாயிற்று அவருக்கு... சத்தம் கேட்டு இதற்குள் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்திருப்பாரே. .. . இன்னமுமா உறங்கி கொண்டிருக்கிறார்??? என் உணர்வுகள் முழுவதும் செத்துப்போவதற்குள் அவரை கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாமே....  ... "என்று நான் அங்கலாய்த்தபடி மனம் தவித்த போது, அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த சுசீலாவின், ஓ.... வென்ற அலறலில், என்னை சுற்றியிருந்த அத்தனைக்்  கூட்டமும் அவர் வீட்டுக்கு ஒடியது. "ஐயோ!!! என்னவாயிற்று அவருக்கு.... தெரியவில்லையே..?" என்று உள்ளம் கீழே விழுந்து கிடந்த அந்த நிலையில் கூட பதறியது.

சாலையின் குறுக்கே நிகழ்ந்த என் சாவு வாகனங்களின் பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதால், மதியம் வேருடன் உறவாடியபடி மடிந்தும், மடியாமலும், கிடக்கும் என் உடலை வெட்டி அப்புறப்படுத்த கையில் கோடாரியுடனும், இதர ஆயதங்களுடனும் நான்கைந்து பேர்கள் என்னிடம் நெருங்கினார்கள். அவர்கள் பேசிய விஷயங்கள், அவரகள் கையிலிருந்த கோடாரியை விட பலமாக என்னுள் இறங்கின........

இரவு பெய்த பேய் மழையிலும், அவரை சந்தித்து அவர் உடல் நலத்தை பற்றி விசாரித்து அவருக்கு உணவு கொடுத்துச் சென்ற குமாரிடம்,,,, "தனக்கு இப்போது பரவாயில்லை. .. மிகவும் களைப்பாக மட்டும் இருக்கிறது. நன்கு உறங்கி எழுந்தால் நாளை காலை சரியாகிவிடும்....." என்று ௬றி அனுப்பியிருக்கிறார் சதாசிவம். இந்நிலையில் காலையில் வீட்டின் முன் இத்தனை அமர்களமாயிருந்தும் அவர் எழுந்து வராத நிலை கண்டு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லாமென்று, சுசீலா அவர் வீட்டு கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காமல் போகவே, அவர் படுத்திருந்த அறை ஜன்னல் வழியே அவரை பார்த்து விட்டு, அவரது நிலை கண்டு சந்தேகித்து.... ஓ... வென்று கத்தியிருக்கிறாள்.

வீட்டின் உட்பக்கம் பூட்டியிருந்ததால், கதவு உடைத்துக்கொண்டு அனைவரும் சென்று பார்த்ததில், அவர் உயிர் இரவு உறக்கத்திலேயே பிரிந்திருந்தது... நேற்று வரை நல்லாயிருந்த மனிதர் இப்படி திடீரென்று போய் விட்டாரே...! எத்தனை நல்ல மனிதர்.....ஒருவரிடமும் கோபபடாமல், அனைவரிடமும் அன்பாக பழகி, அனைவருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்து வாழ்ந்தவர்....

"இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே கஸ்டந்தான்... !!!! நல்லவர்களுக்குத்தான் இந்த மாதிரி நல்ல சாவு கிடைக்கிறது.. ஆனால் நமக்குத்தான் மனசு தாங்கவில்லை.... ரொம்ப கஸ்டமாயிருக்கு...! அவர் பையனுக்கும் உறவுகாரங்களுக்கும் தகவல் தந்திருக்கிருக்கிறார்கள்.  இன்று இரவுக்குள் அவர்கள் வந்து விட்டால், நாளை காலை அவர் கிளம்பி விடுவார். அதற்குள் இந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தி விட்டால் நல்லது...."

பெருமூச்சு விட்டவாறு கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவர்கள் பேசப்பேச என் இதயம் சுக்கு நூறாக வெடிப்பதை நான் உணர்ந்தேன்...." ஐயோ!!! இரவெல்லாம் மழை, காற்றுடன் நடந்த பெரும் யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன் என்று இறுமாந்து போயிருந்தேனே....! ஆனால் என்னுடன் போட்டியிட்டு கொண்டு அந்த எமனும் ஜெயித்து விட்டானே..... .! அவரை உயிருடன் கடைசியாக அருகில் நேற்று பார்த்தது நினைவுக்கு வந்தது.. அவர் மனதின் வேதனைகளை மனதோடு கேட்கும் ஒரு அனுபவம் கிடைத்தது...... அதுவே போதுமென்று அவரையும் என்னையும் ஒருசேர பிரித்து வி்ட்டாயா இறைவா!!! ஏன் இப்படி செய்து விட்டாய்???" என் உடம்பில் பட்ட வேதனையையும், படும் வேதனையையும், பொருட்படுத்தாமல் மனம் பரிதவித்தது. "கடவுளே!!! இனி எனக்கும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அவருடன் சேர்ந்து வாழ மீண்டும் ஒரு மரமாகவே பிறந்து அவருடன் இணை பிரியாமல் இருக்கும்படி செய்வாயா??? என்று வேண்டிக் கொண்டிருந்த போது என் உணரவுகளும் கொஞ்சகொஞ்சமாக மங்க தொடங்கின...

மறுநாள்.... நானும், அவரும்.... இந்த பிறவியில் வெவ்வேறு ஊர்திகளாயினும் ஒரு சேர பயணமாவோம் என்று நினைத்த போது அத்தனை வருத்தத்திலும், இனம்புரியாத ஒரு துளி ஆனந்தம் உதயமானது.

"நானும், அவரும்" என்ற இக்கதை நிறைவுற்றது.

நடிகர் திரு. விவேக் அவர்களின் தீடீர் மறைவு கொஞ்சம் அனைவரையுமே உலுக்கி விட்டது. நல்ல நடிகர். அந்தந்த நகைச்சுவை பேச்சுக்களுக்கு தன் முக பாவங்களில், நடிப்பை தந்து பேசி சிரிப்பை வரவழைத்தது மட்டுமின்றி, பகுத்தறிவு விஷயங்களில் சிந்திக்கவும் வைத்தவர். அவருடன் நடித்த நகைச்சுவை நடிகர்களை தன்னால் இயன்றவரை மிளிர வைத்தவர். அவர் பசுமை திட்டமான மரம் வளர்ப்பில் மரங்களை நேசித்ததும், அவர் நம் மனதில் நிலையாக நின்றிருக்க ஒரு காரணம். 

நடிகர் திரு விவேக் அவர்களின் மறைவு செய்தி ஏனோ முன்பு எழுதிய இக்கதையை   எனக்கு நினைவுபடுத்தி மீண்டும் பதியச் செய்தது. நல்லதொரு கலைஞர்... மரங்களின் நேசர்...இயற்கையின் அபிமானம் பெற்றவர்.. என்றெல்லாம் எண்ணியதாலோ  என்னவோ.... 🙏.

அன்றே கதையை பகுதியாக பிரித்து வெளியிட நினைத்தேன். இயலவில்லை. நாம் நினைப்பது ஒன்றாயினும், இறைவன் தான் நினைப்பதைதானே இறுதியில். நடத்தி வைக்கிறான். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.... 🙏... 

இக்கதையை அப்போது ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தந்தோடு மட்டுமின்றி, உடன் வந்த அவரது வலைச்சர ஆசிரியர் அறிமுகத்தில் என்னையும் என் எழுத்தையும் சிலாகித்து எழுதி, அங்கும் இந்தக் கதையை பிரகடனப்படுத்தி என்னை கெளரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்கள்தான். நன்றி. நன்றி கில்லர்ஜி சகோதரரே. . 🙏..

இந்தக் கதையை இப்போது படித்து கருத்துக்கள் தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

தொடர் கதை....

கதையின் 5 ஆவது பகுதி

ஒரு மனிதன் பிறக்கும் போதே சுயநலத்துடன்தான் பிறக்கிறான்... அவன் தேவைகள், அவன் ஆசைகள் இது மட்டுமே நிறைவேறினால் போதும் என்ற மனதுடன்தான் வளர்கிறான்... வாழ்கிறான்...  பிறந்த குழந்தை  தன் அன்னையின் அரவணைப்பிலிருந்து இறங்கி நடக்க கற்றுக் கொள்வது கூட, தான் விரும்பும் இடத்திற்கெல்லாம் தவழும் சுயநலத்திற்காகத்தான், இருக்குமோ....? 

இப்படி தன் ஆசைக்காக, தன் தேவைக்காக, தான் விரும்பியபடி வாழ  ஆரம்பிக்கும் மனிதன் சுயநலத்தின் பிடியில் படிப்படியாக முழுவதுமாக சிக்குகிறான். தன்னை பெற்றவர்களுடனும், மற்றவர்களுடனும், குடும்பத்துடனும், இதர சொந்த பந்தங்களுடனும், தன் குழந்தைகளுடனும், தான் வாழும்போது இதே சிந்தனைதான் அவன் மனதில் மேலோங்கி நிற்கிறது.  இறுதியில் வாழ்நாளின் கடைசியிலும் தன் வாரிசுகளை சார்ந்தே இருக்க வேண்டுமென நினைக்கிறான். மடிந்த பின்பும் தன் சந்ததியினர் தன் நினைவு நாளை நினைவாக நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டுமென எண்ணுகிறான். அந்த அளவுக்கு அவன் சுயநலத்துடன் ஒன்றி போகிறான்.... ..    

இப்படி பிறப்பிலிருந்து, இறப்பு வரை தனக்காக மட்டுமே வாழ ஆசைப்படும் மனிதர்கள் வாழும் போது தன்னுடன் வாழும் மற்றவர்களின் உணர்வுகளை மட்டும் ஏன் புரிந்து கொள்ளாமல் போகிறார்கள்.? சரி....... அப்படி அதை உணர்ந்து அந்த குணத்தை சிறிது  கஸ்டப்பட்டேனும் மாற்றியமைத்தானேயானால் அவன் உலகில் வாழத் தெரியாதவனாகிறான்..  . "திறமையற்றவன்....  ஒன்றுக்கும் உதவாதவன். .. உபயோகமில்லாதவன்...." இன்ன பிற பட்டங்களை பிறர் சுலபமாக தர அதையும் சுமக்கிறான்.... அப்படி சுயநலமாக வாழும் போதும்  மனிதனே மனிதனுக்கு பெரும் பகையுமாகிறான்...... ஆதி பிறப்பிலிருந்து தோன்றிய இந்த மனித வர்க்கங்களின் சுபாவங்கள்தாம் எத்தனை விசித்திரமானது...!!! 

மனதில் தோன்றிய இந்த சிந்தனைகள் சதாசிவத்தின் உள்ளத்தை முள்ளாக குத்தி வருத்தியது... "யோசித்து பார்த்தால், நானும் ஒரு வகையில் அப்படிப்பட்ட சுயநலவாதிதானே...!" என்று உண்மையை நினைத்த மாத்திரத்தில் மனசின் மைய பகுதியில் சுரீரென்று வலித்தது.... "நான் வளர்த்த பையன், என் வளர்ப்பு மகனானலும், அவன் என்னையே தஞ்சமென அண்டி இருக்க வேண்டும். வயதான என்னை நான் கண் மூடும் கடைசி காலம் வரை என் சொந்த வீட்டிலேயே சேர்ந்திருந்து அன்புடன் அனுசரித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில்தான், அவனுக்கு வேண்டியதெல்லாம் நான் பார்த்து, பார்த்து செய்தேனோ...? " என நினைத்த போது இதயம் வெடித்து விடும் போலிருந்தது... 

கண்கள் கலங்க அருகிலிருந்த மரத்தை தழுவி கொண்டார்.... . கைகளால் அதன் சொரசொரப்பை வாஞ்சையுடன் தடவியபோது உள்ளம் சற்று லேசாகியது. அண்ணாந்து சற்றே வீட்டின் பக்கமாக வளைந்திருந்த மரத்தை அதன் உச்சி வரை பார்த்தார். இந்த மரங்கள்தான் எத்தனை மேன்மையானவை.....   "பொதுவாக  உயரமான மனிதரை... மரம் மாதிரி வளர்ந்திருக்கிறாரே தவிர அறிவு வளரவில்லை..." என்பார்கள். ஆனால் மரத்தின் சிறப்பாம்சங்கள் மனிதனிடம் முழுமையாக இருந்துவிட்டால் அவன் உண்மையிலேயே உயர்ந்தவன்தான்..... 

தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல் தந்து, பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காக எப்போதும் வாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், தன் மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது. மரங்களுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது. அதனால்தான் மரத்தின் பெருமை விளங்குமாறு, அதனை அத்தனை உயரமாக படைத்திருக்கிறான் இறைவன்......! " எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால் உன் மாதிரி மனிதனை உனக்கே உரித்தான நேயத்துடன் கவனித்து கொள்ளும் உன்னைப்போல்  ஒரு மரமாக உன்னருகிலேயே பிறக்கவேண்டும்..... " என்று முணுமுணுத்தவாறு கண்களில் நீர் மல்க மீண்டும் அன்புடன் மரத்தை லேசாக அணைத்துக் கொண்டார் சதாசிவம்.

அவர் சொன்னதை ஆமோதித்து அவரை அமைதிபடுத்துவது போல் மரத்திலிருந்து சில இலைகள் அவர் மீது விழுந்து பின் தரையை தொட்டன.. . .மனஉளைச்சல் தந்த அலுப்பின் காரணமாக கட்டிலின் விளிம்பில்  சாய்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார் சதாசிவம். 

"உன்னையும், அவனையும் ஒரே மாதிரியான பாசத்துடன்தானே வளர்த்தேன்... அவன் மனதில் மட்டும் இத்தனை வேறுபாடுகள் இருப்பதாக ஏன் அனைவரும் குறைச் சொல்கிறார்கள்.? அவன் தன்னிடமிருக்கும் பாசமெனும் கிளைகளை ஏன் அவ்வப்போது யாரும் பார்க்காமலேயே வெட்டிக் கொள்கிறான். 

தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்து  சில உறவுகளின் பாராமுகத்திலும், சில உறவுகளின் பராமரிப்பிலும் எப்படியோ வளர்ந்து, நான் காலூன்றிய போது, நல்ல உண்மையான அன்புக்கு ஏங்கிய போது, அந்த உண்மையான பாசத்தை என் மனைவியின் வடிவில் இறைவன்  கைப்பிடித்து  கொடுத்தாள். அதன் பின் எங்களுக்காக உங்கள் இருவரையும் அதே பாசத்தின் பிணைப்பில் கட்டுண்டு வளர்த்த போது, அவன் மட்டும் ஏன் இப்படி மனதளவில் வேறானான்.....?

எத்தனையோ சிரமங்கள், மனைவி பிரிந்ததும் ஏற்பட்ட சோகமான எத்தனையோ நினைவுகளை அவனோடு கூட அதிகம் பகிராத வேதனைகளை, மனதோடு உன்னிடம்  சொல்லி, பகிர்ந்த போதெல்லாம்.,.... எங்கள் அன்பை புரிந்து கொள்ளும் உன் இயல்பான ஆற்றலோடு, உனக்கு மட்டும் பேசும் சக்தியையும் இறைவன் தந்திருந்தால், நீ எத்தனை ஆறுதலாக என்னோடு வாய் விட்டு பேசி இருந்திருப்பாய்.... !"  கண் மூடி தான் வளர்த்த  மரத்தோடு பேசிய  அவரை, அவர் பேச்சை, அவர் மனதை புரிந்து கொண்ட மனோபாவத்துடன் மரத்தின் கிளைகள் மேலும் அசைந்து, பல இலைகளை அவர் மீது உதிர்த்து தானும் அமைதி பெற்று கொண்டு, அவரையும் ஆசுவாசபடுத்தியது......  !!" 

இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை சுவடுகள் மனக்கண் முன் வந்து போயின.. .. இன்றும்,.... அதிகம் பேசாது பிறர் மனம் கோணது, தனக்கென வாழாது, தமக்கென்று வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவில், அவள்  அன்பின் பிரிவில், மனது அழுததால் அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. 

நண்பர் பாலு எச்சரித்து சொன்ன விஷயங்கள் வேறு மனதை லேசாக சலனப்படுத்தியது..... .! பட்ட பகலில் எல்லோரும் பார்க்கக் கூடிய பொது இடத்தில் இப்படி சிறு குழந்தையாக உணர்ச்சிவசபடுகிறோமே என்ற வெட்கத்தில் கண்களை அவசரமாக துடைத்தபடி திறந்த போது கண்கள் திறக்க முடியாமல் எரிந்தன. காலையில் சற்று குறைந்திருந்த காய்ச்சல் இப்போது மறுபடி அதிகமாயிருந்தது. 

சுசீலா கஞ்சியுடன் கொடுத்துச் சென்றிருந்த , சாப்பிட மறந்து விட்டிருந்த  அந்த  மாத்திரைகளை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டுமென்று நினைத்த போதில், "எதற்காக மாத்திரை சாப்பிட்டு அப்படி இந்த உடம்பை பாதுகாக்க வேண்டுமென்ற" வெறுப்பு ஒரு கணம் தோன்றியது.... "யாருக்கும் சிரமம் கொடுக்காமல், என்னையும் சிரமபடுத்தாமல், என்னை அழைத்துக் கொண்டு போய்விடு..." என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கையில், காற்று சில்லென்று அடிக்க, ஓரிரு மழைத் துளிகள் முகத்தில் வந்து விழுந்தது.

கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தார். மதியம் அடித்த வெயிலுக்கு பலத்த மழை வரும் போலிருந்தது. வானம் ஓர் மூலையில் ஒரு கறுத்த பெரிய யானையை போன்ற தோற்றத்துடன் கருமையாக காட்சியளித்தது.. ..கருமை அதிகம் படர்ந்த சூல் கொண்ட மேகங்கள் துரிதமாக ஆங்காங்கே பரவி விரிந்து அழகான நீலவானத்தை தன் மழை மேகங்களினால் மேலும் கறுப்பாக்கி விடும் லட்சியத்தை மிக விருப்பமான மனதுடன்  நிறைவேற்றும் பணியில் செயல்பட ஆரம்பித்திருந்தன... 

காய்ச்சல் வேகத்தில் எழுந்து நிற்கவே முடியாத  சிரமத்துடன் எழுந்து நின்ற சதாசிவம் குடித்து முடித்திருந்த கஞ்சி பாத்திரங்களையும், மாத்திரை கவர்களையும் ஒரு கையில் எடுத்தபடி, மற்றொரு கையால் கயிற்று கட்டிலை மடித்து அருகிலிருக்கும் வீட்டு சுவற்றில் சாய்த்து விட்டு தள்ளாடியபடி நடந்து வீட்டினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்..

தொடர்ந்து வரும்.. . 

Saturday, July 3, 2021

தொடர் கதை.....

கதையின் 4 ம் பகுதி. 

 "அடாடா...சே... என்ன... இவன் இப்படியெல்லாம் பிரித்து பேச ஆரம்பித்து விட்டான்...? தெரிந்தவர்கள் குறை சொல்லும் போதெல்லாம் அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்படி யாருக்கு எடுத்து  கொடுத்து விட்டேன்...?  முகம் தெரியாத வேண்டாதவர்களுக்கா...? அவன் கூடப்  பிறந்த தங்கைக்கு, அவள் வாழ்க்கை  ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை வந்து விடாமலிருக்கவும், அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற அவன் அம்மாவின் சிரமத்தையும் குறைக்கத்தானே கொடுத்தேன்... சொல்லபோனால் அவன் எப்பாடுபட்டாவது செய்ய வேண்டிய கடமையைதானே நான் செய்தேன்.... நான் ஏதோ குற்றம் செய்து விட்ட மாதிரி பேசுகிறானே....? " நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. மொத்தத்தில் அன்று இரவு தூக்கம் முழுமையாக பறி போனது அவருக்கு.

அதன் பின் திருமணத்திற்கு தன்னுடன் வரச்சொல்லி மகன் அழைத்தபோது ௬ட, "நான் எதுக்குப்பா...? நீயும், உன் மனைவியும், போய் வாருங்கள். நான் வரவில்லை... ." என்று ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டார். அங்கு சென்ற பிறகு இவன் தன்னை வைத்துக் கொண்டு ஏதாவது பேச போக பிரச்சனை பெரிதாகி அது  அந்தக் கல்யாணத்தை பாதித்து விட்டால்... பாவம்.. . .!  அந்த பெண்....! என்ற கழிவிரக்கத்தில் அவர் மனம் திருமணத்திற்கு செல்ல ஒப்பவில்லை. இந்த விஷயமெல்லாம் நண்பர் பாலுவுக்கு தெரியாது. இவரும் எதைப் பற்றியும் சொல்லாமல், வழக்கப்படி தன் மனதில் போட்டு புதைத்து விட்டார். ஏற்கனவே தன் மகனை பற்றி அடிக்கடி குற்றம் சொல்லி கொண்டிருக்கும் பாலுவுக்கு இது தெரிந்தால் தன் மகனை நிற்க வைத்து கேள்வி கேட்டு பிரிவை பெரிதாக்கி விடுவார் என்ற பயம் தந்த தயக்கத்தில் சதாசிவம் பாலுவிடம் எதுவும் கூறவில்லை.

இருவரின் யோஜனைகளிலும் சிறிது நேரம் மெளனமாகவே நகர்ந்தது. அப்போது சுசீலா கஞ்சியும் மாத்திரையும் கொண்டு கொடுத்து விட்டு, "கஞ்சி குடித்து விட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள் மாமா" என்று ௬றி விட்டுச் சென்றாள்.

சற்று நேரம் பொறுத்து மெளனம் கலைந்த பாலு, "சரி, சதா.... நா கிளம்புறேன். உன் மகனை பத்தி குத்தம் சொல்ல எனக்கு மட்டுமென்ன ஆசையா..? உன்னோட நிலையை பாக்க பொறுக்காமேதான் மனசுலே படறதை சொல்றேன். நீ தப்பா எடுத்துகிட்டாலும் சரி,... நான் இன்னொன்றும் உன் நல்லதுக்காக மறுபடியும் சொல்றேன், இந்த வீட்டை விக்கறதுக்கு மட்டும் நீ மறுபேச்சில்லாமல் சம்மதிக்காதே.... அவ்வளவுதான்..! என்னாலே சொல்ல முடியும். சரி...சரி.. நீ கஞ்சியை குடிச்சிட்டு, மாத்திரை போட்டுகிட்டு நல்லா ஓய்வு எடுத்துக்கோ... நா மறுபடியும் சாயங்காலம் வந்து பாக்கறேன்... " என்றபடி எழுந்தார்.

" சரி, போய்வா.. . "என்று நண்பருக்கு விடை கொடுத்த சதாசிவம் கஞ்சியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

அன்றொரு நாள் தன்னை சந்திக்க வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பனை என் அருகாமையில் நின்றபடி விடை கொடுத்து அனுப்பும் போது, இவர் மகன் அவனிடம் ௬றிக் கொண்டிருந்ததை, நானுந்தான் கேட்டேன்...  "ஆமாப்பா... இது ஒரு நல்ல சான்ஸ்.. இதை நா கோட்டை விட்டுட்டா அப்புறம் இதைப் போல கிடைக்கவே கிடைக்காது. எப்படியாவது இந்த  பதவி உயர்வை  பயன்படுத்திகிட்டு சென்னைக்கு போயிட்டா, அப்புறம் ஒரு ஆறு மாசத்திலே வெளிநாடு போற வாய்ப்பு கம்பெனி மூலமா வருது..... அது கிடைச்சா  என் வாழ்க்கையே பிரமாதமாயிருக்கும். அதுக்காகவே நான் சென்னைக்கு போக ஒத்துக்கனும், அப்பாவையும் ஒத்துக்க வைக்கனும். வேற வழியில்லை,.. ..! இந்த வீட்டை வித்துட்டு சென்னையிலே  கொஞ்ச மாதங்களாவது ஏதேனும் வாடகை வீடு பார்த்து செட்டிலாக வேண்டியதுதான்..... அங்கிருக்கும் என்  நண்பனிடம் சொல்லி அப்படி ஒரு நல்ல வீடு பார்க்க ஏற்பாடு  செய்ய சொல்லியிருக்கிறேன். " அவன் குரலில் பதவி உயர்வின் ஆசையும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது...

"சரி.... நீ சென்னைக்கு போய் சில மாதங்களாவது  செட்டிலான பிறகு உனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்ததும் உன் குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு செல்ல முடியுமா,? அப்போது இந்த வீடு இருந்தால், அவர்கள் இங்கு வந்து வசிக்க வசதியாக இருக்குமே... " என்ற அவன் நண்பனின் கேள்விக்கு, " இல்லை, இல்லை. .. வெளிநாட்டில் எப்படியும் சில வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டி வரும். அதனால் மனைவி, குழந்தையை விட்டுட்டு போக முடியாது. அப்பாதான் பிரச்சனை..  அவரை கூடவே அழைத்து செல்லவும் முடியாது. அவர் உடம்புக்கும் அந்த ஊர் ஒத்துக்காது.  முடிந்தால் அவர் அங்கேயே தனியாக இருக்கட்டும் இல்லையென்றால் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்து விட்டுட்டு போக வேண்டியதுதான்.... " என்ற அவனின் அலட்சியமான பதிலில் நான் ஆடி போய் விட்டேன் இதை அவரிடம் நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொணடிருந்த போதுதான் அவர் நண்பர் பாலு அது பற்றி அவரிடம் விவாதித்தது  எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனக்காக தன் உழைப்பையும், வாழ்க்கையையும், தியாகம் செய்தவரை, வயதான காலத்தில் அவரை கவனித்து கொள்ள வேண்டியது தன் கடமை என்று உணராமல், சுயநலமாக மட்டும் திட்டமிடும் மகனுக்காக, இன்னும் வாதிடும் அவரை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.

தொடர்ந்து வரும்... 

Thursday, July 1, 2021

தொடர் கதை...

 கதையின்  2.ம் பகுதி.... 

"சதா, நேற்று உனக்கு உடம்பு சரியில்லையாமே, இப்பத்தான் குமார் சொன்னான். உடனே ஓடி வர்றேன் இப்ப எப்படி இருக்கு....?" என்று கவலையுடன் கேட்டபடி பக்கத்து வீட்டை பார்த்தார். 

அப்போது சதாசிவத்தின் வீட்டிலிருந்து வெளிவந்த சுசீலாவை பார்த்ததும், "அடேடே, சுசீலா, நீ இங்கேதான் இருக்கியா? இப்பத்தான் குமார், சதா மாமாக்கு நேற்று நல்ல ஜீரம், அவரை கட்டாயபடுத்தி டாக்டரிடம் அழைச்சிகிட்டு போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தேன். சுசீலாவையும் அவரை அடிக்கடி பாத்துக்கோன்னு சொல்லியிருக்கேன்னு , சொல்லிட்டு போறான்...." உடனே பதறி அடிச்சிகிட்டு ஓடி வர்றேன்... .நீதாம்மா இவனை பாத்துக்கணும், இந்த வயசில் இவனை தனியே விட்டுட்டு இவன் பையன் ஊருக்கு போகலாமா. . .? நீயே நியாயமா பதில் சொல்லு.... இவன் உறவை விடவா அந்த உறவு அவனுக்கு பெரிதாகி விட்டது... ?" என்று கோபத்துடன் வெடித்தார்.

"அவனை குத்தம் சொல்லாட்டா உனக்கு உறக்கமே வராதே, சரி விடு... எனக்கு நாளைக்கே சரியாகிடும் .. சாதாரண ஜீரந்தானே.... அவனும் இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் முடிந்ததும் வந்து விடுவான்.." மெல்லிய குரலில் மகனுக்கு ஆதரவாக பேசினார் சதாசிவம்.

"உன் மகனை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டியே.... ஆனால், அவன் முந்தி மாதிரி இல்லை தெரியுமா....? உனக்கு தெரிஞ்சாலும் நீயும்  வெளியிலே காட்டிக்க மாட்டே. ... உன் சுபாவம் அப்படி...! மனசுகுள்ளேயே உன் கவலைகளை வச்சு பூட்டி மத்தவங்களோட மகிழ்ச்சியை மட்டும் பார்த்து சந்தோஷபடறவன் நீ..... உன் பையன் இப்ப ரொம்ப மாறிட்டான்... வளர்த்த கடா நெஞ்சிலேதான் முட்டுமுனு.. உனக்கு தெரியாததா?ஆனால், வளர்த்த பாசம் உன் கண்ணை மறைக்கிறது .. நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ கொஞ்சமேனும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறே..." என்று அங்கலாயத்தபடி புலம்பி தள்ளினார் பாலு.

இவர்களது உரையாடலை சற்று தர்ம சங்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சுசீலா, "மாமா, ஒரு அரைமணி நேரம் கழித்து கஞ்சி போட்டு கொண்டு வரவா?" என்று வினவியபடி நகர யத்தனித்தாள்.

"சரியம்மா... .என்று அவளை அனுப்பிய சதாசிவம், நண்பரை பார்த்து, அட...! என்னப்பா...நீ... அந்த பொண்ணு முன்னாடி சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டிருக்கே.... , அவ எம் பையனை பத்தி தப்பா நினைக்க மாட்டாளா..? " என்று முடியாமல் ௬றியவர் அலுப்புடன் கண்களை மூடிக் கொண்டார்.. 

நண்பரின் இயலாமையை கண்டு மனம் கசிந்த பாலு அவர் அருகில் அமர்ந்து அவர் கையை பற்றிக்கொண்டார்.

"சரி... சரி.. , ஏதோ.... உன்னை இந்த நிலைமையிலே பாத்தது மனசு தாங்கலே, என்னாலே முடியலே சதா.. அதான் சொல்லிட்டேன்.. இது  இந்த சுசீலாவுக்கும், ஏன் அவ புருஷன் குமாருக்கும் தெரியும். போன வாரம் குமார் கூட உன் பையனோட குணத்தை பத்தி என்கிட்டே சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு பேசினான் தெரியுமா? இன்னொரு விஷயம், இந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கே உன்னையும் ௬ட்டிக்கிட்டு போக போறானாம்.... . உன்கிட்டே அது பத்தி சொல்லி இந்த வீட்டை விக்கிறதக்கு உன் சம்மதத்தை எப்படியாவது வாங்கனுன்னு குமார்கிட்டே உன் பையன் சொல்லியிருக்கான் தெரியுமா... ? நீ வாழ்ந்த இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு, ஏன், பாசத்துடன் பார்த்து பார்த்து வளர்த்தியே.. இந்த மரத்தை விட்டு, எங்களையெல்லாம் விட்டு எப்படி போவே சொல்லு.... நாங்களும் உன்னை விட்டுட்டு எப்படி இருப்போம்? இத்தனை வருஷ பழக்கத்தில் உன்னைப் பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையில், வாரக்கணக்கில், ஏன், மாதக்கணக்கில் கூட இருந்திருக்கிறேன்.. . ஆனால், ,உன்னை விட்டு நிரந்தரமாக....... எப்படி சதா?" மேற்கொண்டு பேச முடியாமல் குரல் தளுதளுக்க கண்கள் கசிய நண்பரின் கையை இறுக பற்றிக் கொண்டார் பாலு.

நண்பரின் பாசம் சதாசிவத்தின் உள்ளத்திலும் இடம் பெயர்ந்தது. ஆறுதலாக பாலுவின் தோளில் தட்டியவர் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, "வருத்தபடாதே பாலு...... நான் உங்களையெல்லாம் அப்படி விட்டுட்டு போயிடுவேனா.... , ஆனாலும் என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு.... அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா... அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். மற்றபடி அவனிடம் எந்த தவறுமில்லை,... இனியாவது அவனை புரிந்து கொள் ... " என்று மகனுக்காக எப்போதும் போல் பரிந்து பேசினார்

தொடர்ந்து வரும்..... 

Tuesday, June 29, 2021

தொடர் கதை...

வணக்கம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும். எனக்கு வாரத்துக்கு ஒன்றாகவாவது  புதிதாக ஏதேனும் பதிவுகள் எழுதும் ஆவல் அப்போதிலிருந்து  இப்போது வரை என்றுமே உள்ளது.  முன்பு அது ஒரளவு கைகூடி வந்தது. ஏனோ கொஞ்ச நாட்களாக அது தடைப்பட்டு போகிறது. (மன, உடல் பாதிப்புகள்தான் காரணம்) சிலவற்றை எழுதி பாதி, பாதியாக நிறுத்தி உள்ளேன். அதனை நல்லபடியாக முடிக்க இறைவன்தான் துணையாக வர வேண்டும். இப்போது பதிவுலகில் அனைவரையும் என்னால் முடிந்த வரை தினமும் அவர்களின் பதிவுகளை படித்து கருத்துக்கள் இட்டு என் எழுதும் ஆவலை இறைவன் நிறைவேற்றி வைக்கிறான். அதற்கு "அவனுக்கு" என் தாழ்மையான நன்றிகள். இன்றைய பதிவும் மறு பதிவானலும் பரவாயில்லையென  இப்படி என்றோ ஒருநாள் பதிவிட்டு உங்களை சந்திக்கும் ஆவலில் வர முயற்சித்திருக்கிறேன் .கதைகள் பற்றிய பதிவுகளை படித்ததும், நாமும் ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாமே என்ற எண்ணமும் காரணம். இப்பதிவுக்கு வந்து கருத்துக்கள் தந்து ஊக்குவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இந்தக்கதை நான் வலைப் பதிவில் கால் பதித்த போது  எழுதியது. அதை எப்போதும் போல் நீ.. ண்.. ட.. கதையாக எழுதியதில்  படிப்பதற்கு எவருக்கும் விருப்பம்  இருந்ததில்லை. அப்போது எனக்கு வலைத்தள நட்புகளும் குறுகிய வட்டம். ஆனாலும், அந்த சமயத்தில் என் வார்த்தைக்கு மதிப்பு தந்து நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி வந்து இக்கதை படித்து கருத்திட்ட ஒரே ஒரு சகோதரருக்கு என். 🙏. எப்போதும். அவரும் வந்து இப்போது இதை படிக்கலாம். அதற்கு அவருக்கு இப்போதும்..🙏. ஆனால், இப்போது அவரும் அதை வெளிக்காட்டாமல் படித்தால் "அது யார்" என்பது சஸ்பென்ஸாக இருக்கும். கதையின் இறுதிப் பகுதியில் நானே அவரைக் குறிப்பிடுகிறேன்.  

அன்று அவரின் ஆலோசனைபடி கதையை கூறாக்கி (கூராக்கி அல்ல..) அப்படியே தந்திருக்கிறேன்.  இப்போது படித்து கருத்திடும் சகோதர சகோதரிகளுக்கும் அன்பான என் நன்றிகள். 🙏. 

தோ ந்தக்தை.....

கதை பகுதி. 1.

பகல், வெயிலின் தகிப்புக்கு ஈடு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டு வாசலிலிருக்கும், பெரிய மரத்தடியிலிருந்த கயிற்று கட்டில் அந்த வீட்டின் சொந்தகாரரும், பெரியவருமான சதாசிவத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. 

"நானுந்தான். .....! பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் அவரை பார்க்காமலிருப்பது கண் இருந்தும் குருடனாய் இருப்பது மாதிரி தவித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளேனும் பார்க்காமல் இருக்கும் உறவா எங்களுடையது. 

பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா அவர் வீட்டின் கதவை தட்டி "மாமா, மாமா" என்று குரல் உசத்தி அழைத்து விட்டு பதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றாள்.

சதாசிவம் அந்த ஊருக்கு வேலை மாறுதல் காரணமாக வந்தவர், அந்த வேலை அவ்வூரிலேயே நிரந்தரமாக ஆனவுடன், இந்தவீட்டை கட்டிக்கொண்டு தன் மனைவியுடன் குடியேறினார். இயற்கையின்பால் அவர் கொண்ட பற்றின் காரணமாக, அவர் வீட்டின் முன்னும் பின்னும் செடிகொடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்தன. அன்பான நல்ல மனைவி, வீடு, நிறைந்த வேலை, என்று வாழ்க்கை வசதிகளை அவருக்கு தந்த இறைவன், கொடுக்க மறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அவர் அதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளாமல் தன் உறவுக்கார குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஊரில் பழகியவர்களும் உறவும் நச்சரித்த காரணத்தால், மிகவும் சிரமத்துடன் நான்கு குழந்தைகளுடன், வறுமையில் காலம் கழித்து வந்த அவருடைய ஒன்று விட்ட சகோதரி முறையுடைய அகிலாவிற்கு கடைசியாக பிறந்த ஆண்குழந்தையை, அவள் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். குழந்தையும் அவரிடமும், அவர் மனைவியிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவருடைய முழு கவனமும், குழந்தையுடன் இருக்க, அவர் இதுநாளும் வளர்த்து வந்த செடி கொடிகள் சரேலென்று காணமல் போயின. ஆனாலும் வீட்டு வாசலிருந்த மரம் மட்டும், "நீ என்னை கவனிக்காது விட்டாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்" , என்று பாசத்துடன் அவரை அரவணைத்து கொள்வது போல, அவர் வீட்டின் மேல் சாய்வது போன்ற தோற்றத்துடன் வளர ஆரம்பித்தது. குழந்தையும் மரமும் ஒரு சேர நன்கு வளர்ந்தன.

வருடங்கள் உருண்டோடி சதாசிவத்தின் பையனை வாலிபனாக்கியது. அவனை நல்ல முறையில் படிக்க வைத்து, அவனின் படிப்புகேற்ற ஒரு வேலையும் கிடைத்தவுடன், அவனுக்கு உரிய வயதில் ஒரு திருமணத்தையும் நடத்தி, சிலவருடங்களில் பேரனுடனும் கொஞ்சி மகிழ்ந்தார் சதாசிவம். 

கணவருடன் அவர் மனம் கோணமல் இதுநாள்வரை சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்த அவர் மனைவி தன் கணவரையும், வீட்டையும் மகன், மருமகளிடம் ஒப்படைத்து விட்டு திருப்தியுடன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாள். அன்பான மனைவியின் மறைவுக்குப்பின் வயதின் மூப்பும், தனிமையும் சேர்ந்து கொள்ள சதாசிவம், தன் மகனையும், வாசலில் இருக்கும் மரத்தையும் துணையாக கருதி வாழ்ந்து வந்தார்.

கட்டில் சப்தம் கேட்டு கலைந்தேன். சதாசிவம், "அப்பாடா, என்று முனகியவாறு வந்தமர்ந்தார். அவர் முகம் மனச்சோர்வை வெளிக்காட்டியது. அவர் உடல் நலமில்லாமலிருப்பதை முகம் கண்ணாடியாய் காட்டியது என்னை வருத்தியது. மனைவியின் மறைவுக்குப் பின் மனிதர் மிகவும் தளர்ந்துதான் போய் விட்டார், என்ன செய்வது,. ..? என்று நான் வருந்தி கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா இவரை பார்த்ததும் ஓடிவந்தாள். 

"மாமா, இப்ப உடம்பு எப்படியிருக்கு? காலையிலே நான் வந்து கதவை தட்டிப் பாத்தேன். நீங்க எந்திரிக்கலே, ஒரே கவலையாயிருந்திச்சி, இப்ப காய்ச்சல் குறைஞ்சிருக்கா? எப்படியிருக்கு மாமா", என்று வாஞ்சையுடன் விசாரித்தாள்.

"பரவாயில்லையம்மா, பாவம்; உனக்குத்தான் சிரமம். உன் வீட்டிலுள்ளவர்களை கவனிச்சிக்கிறது போறாது"னு, நடுநடுவே என்னை வேறே பார்த்துக்க வேண்டியதாயிடிச்சு, எல்லாம் என் நேரம்", என்று நொந்து கொண்டார்.

"இதுலே என்ன கஷ்டம் மாமா. .. , என் அப்பாவை நான் கவனிக்க மாட்டேனா, அதுமாதிரிதான் இதுவும்... இதுக்கெல்லாம் கவலைபடாதீங்க,.! " என்றவள்," உங்களுக்கு சாப்பிட இன்றாவது இட்லி எடுத்து வரட்டுமா?" என்றாள் அக்கறையுடன்.

"வேண்டாம்மா, கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிட்டுகிறேன், அப்புறமா, நேற்று மாதிரி வெறும் கஞ்சி மட்டும் போட்டு கொடு போதும். இட்லிபெல்லாம்  வேண்டாம்.... வாய்க்கு இன்னமும் ஒன்றும் பிடிக்கவில்லை... ." என்று அவளை தடுத்தார்.

" சரி மாமா, உங்க விருப்பம்...  நான் உங்க வீட்டை பெருக்கி சுத்தபடுத்துறேன்", என்றபடி அவரின் அனுமதிக்கு காத்திராமல் அவர் வீட்டினுள் சென்றாள் சுசீலா.

"பாவம், இந்த பெண்... மகனும் மருமகளும் தவிர்க்க முடியாத உறவு வீட்டின் திருமணத்திற்கு ஒரு வாரம் அவரை தனிமையில் விட்டு சென்ற பின் இவள்தான் பாசத்துடன் அவரை கவனித்து கொள்கிறாள். இதில் இரண்டு நாட்களாக சற்று உடல் உபாதை வேறு... " என்று சதாசிவம் மனம் கனிந்து யோசித்துக்கொண்டிருக்கையில், அடுத்த தெருவிலிருக்கும் அவருடைய நண்பர் பாலு சற்று வேகமாக, ஓடி வராத குறையாக மூச்சிறைக்க வந்தார்.

தொடர்ந்து வரும்.... 

Friday, October 4, 2019

அன்பு மலரும் போது...

இதுவும் நான் என் பதினேழில், பிதற்றியதுதான். இத்தனை நாளாக வெளியிடவில்லை. இந்தக் கதையின் சம்பவங்களை இப்போதுள்ள காலகட்டத்திற்கு யாராலும் ஏற்றுக் கொள்ள இயலுமா? என வந்த சந்தேகங்களின் காரணங்கள் வெளியிட தாமதித்ததுவா எனத் தெரியவில்லை. ஆனால் தற்சமய காலங்கள் இதன் போக்கை மாற்றி எழுத அனுமதித்தாலும், எனக்கு என்னவோ என் டைரியிலிருந்து சில பக்கங்களை புரட்டி, கிழித்து ஒளித்து திசை மாற்றிப்போட மனது ஒப்பவில்லை. 

இப்பொழுது அந்த எழுத்துக்களை அப்படியே பதிக்கும் போது   எழுதிய "அன்றைய தினங்களில்"  இந்தக் கதைக்கான சிந்தனைகளின் சுவையை சுவாசித்த என் மனம் "இன்று" அந்த மலரும் நினைவுகளையும் சுவைத்து ரசிக்கிறது. அது தவறா? இல்லை சரியா? என்பதை உணர்ந்து படிக்கும் நீங்கள் என் சந்தேகங்களைப் தெளிவாக்குவீர்கள் என சந்தேகமற நம்புகிறேன். கதையை
படிப்பதற்கு என் நன்றிகளும்... 

அன்புடன், 
உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன். 



சுமியின் கண்கள் கூடத்து அறையில் இருந்த பெரிய கடிகாரத்தில் தவழ்ந்தன. ஆயிற்று, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது உற்ற தோழி நளினியின் கழுத்தில் மாங்கல்யம் என்ற மலர் மலர்ந்து விடும். அந்த மலர் வாடிவிடாமல் என்றும் மணம் வீசிக்கொண்டே இருக்கவேண்டுமென இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்து கொண்டாள் சுமி.

ஒரு மணி நேரத்தில் "ஒருவருக்கு" சொந்தமாகிவிடும் நளினி நாளை இந்த நேரத்தில் "அந்த ஒருவரின்" வீட்டில் இருப்பாள். அதன் பின்பு சுமிக்கு இந்த வீட்டில், ஏன், இந்த உலகத்திலேயே "அன்பு" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. தெரியாமல் போய்விடும்.

இதோ! நளினி வருகிறாள். கழுத்து நிறைய நகைகளும் பட்டு சேலையும் மின்ன அவள் நடந்து வருவது  அழகுக்கே சவால் விடுவது போல் இருந்தது சுமிக்கு.

"சுமி" என்றபடி நளினி ஓடி வந்து சுமியை தழுவிகொண்டாள்.

ஓ! நாளையிலிருந்து இவள் அன்பில் திளைக்க  முடியாது. இன்று மட்டும்தான்! இனி எப்போதோ? சுமியின் கண்கள் மழை மேகங்களாக மாறுகின்றது.

"நளி, என்ன இது? அங்கே உன்னை எல்லோரும் தேட போறா, நீ இங்க வந்து உக்காந்திருக்கியேமா.."

"சுமி, பிறந்ததிலிருந்து என்னோட சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துகிட்ட நீ இப்ப மட்டும் வரமாட்டேங்கிறியே இது நியாயமா?" நளினி குரல் தழுதழுக்க கேட்டாள்.

"நளி இத்தன வருஷமா நீ என்ன புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா? இந்த சமூகத்திலிருந்து, அதாவது ....இந்த ஜனங்களோட உள்ளத்திலிருந்து நான் விலக்கபட்டுடேன் நளி. இனிமே இவங்க மத்தியிலே வந்து என்னால உட்கார முடியாது. என்னோட வாழ்க்கைங்கிற பாலிலே இந்த  "ஊனமிங்கற " உப்பு விழுந்துடுச்சு நளி. அது இனிமே சுத்தமான தயிராகாவும், சுவையான மோராகவும் வெண்ணையாகவும் நெய்யாகவும் மாறமுடியாது. பழைய பாலாகவும் லாயிக்கியில்லை. இப்ப புரியுதாமா நான் ஏன் உன்னுடைய திருமணத்துக்கு வரலைன்னு" என்று கேட்டு விட்டு விரக்தியுடன் சிரித்தாள் சுமி.

நளியின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

"சுமி! ஐ'ம் சாரி! நான் உன்னோட மனசை புண்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடு!"

"நோ நளி! நோ.. அப்படியெல்லாம் சொல்லாதே!"

"சுமி! இங்கேயே உங்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன்" என்றபடி நளினி சுமி தடுப்பதற்குள் அவள் காலடியில் சரிந்து விட்டாள்.

பதறிபோய் அவளை தூக்கி அமர்த்திய சுமி, "நளி! உனக்கு எந்த ஒரு குறையும் வரக்கூடாது.. நீ நீடூழி வாழனும். அதோட ஒரு வேண்டுகோள் நளி! நீ எங்கே இருந்தாலும், என்னைக்கும், ஐ மீன் ...... ஐ மீன் என் உடலிலிருந்து உயிர் வெளியேறும் வரை நீ என்மீது  செலுத்தும் அன்பு மாறவே கூடாது நளி" கடைசி வார்த்தைகளை தழுதழுத்தபடி கூறினாள்.

"சுமி! இதை நீ சொல்லனுமா?"

" நளினா"! என்ற குரல் சிவபூஜையில் கரடிபோல், அந்த அன்பு சுவரின் நடுவில் விரிசில் கண்டது போல் எழுந்தது.

"நீ இங்கேயா வந்திருக்கிறே! உன்னை எங்கெல்லாம் தேடறது. மணமேடையிலே உட்காரவேண்டியவ இந்த நொண்டிகிட்டே வந்து உட்காந்திருக்கியா?" கோபமாக கேட்டாள் நளியின் தாய்.

"அம்மா" மகள் பார்வையில் தெறித்த உக்கிரத்தில் தாய் மகளை பார்த்து "வா" என்றவாறு மேற்கொண்டு ஏதும் பேசாது அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"சுமி! எனக்காக அம்மாவை.........."

"நளி! இந்த ஊனம் எனக்கு ஏற்பட்ட நாளிலிருந்து இந்த மாதிரி சொல்றவங்களுக்காக நீ மன்னிப்பு கேட்டுகிட்டு தான் இருக்கே.. ஆனா! என் இதயம் எல்லாத்தையும் தாங்கி தாங்கி பழகிப்போச்சு. நீ போயிட்டு வாம்மா" என்றாள் சுமி.

கண்களை துடைத்தபடி நடந்தாள் நளினி.

"ஏய்! நொண்டிக் கழுதை! சமையலறைக்கு வந்து கொட்டிக்கிட்டு போயேன். பெரிய மகாராணி! கையிலே கொண்டு வந்து தட்டை வைக்கனுமாக்கும்," சித்தியின் குரல் பன்னிரண்டு மணி வெயில் மாதிரி தகித்தது.

"சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் மகாராணி தான். இதோபார் என்னுடைய சிம்மாசனம்." என்று சிரித்தபடி கூறியவாறே தன் சக்கர நாற்காலியை தட்டி காண்பித்தாள் சுமி.

"கால் இல்லைன்னாலும் வாயாவது இருக்கே", முகத்தை நொடித்தவாறு உள்ளே சென்றாள் அலமேலு.

எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது. இவர்களுக்கு இதயமே இல்லையா! அந்த இதயத்திலே இருக்கும் அன்பெனும் ஊற்று அடைத்துப் போய் விட்டதா? அதை எப்படி அடைத்தார்கள்!

இதயத்திலிருக்கும் காயத்தை ஆற்ற முயற்சி செய்யாவிட்டாலும் போகிறது. அதை இப்படியா கிளறி விட வேண்டும்.

"அம்மா" என்றபடி வேதனையுடன் நிமிர்ந்தாள் சுமி.

"அம்மா"... அந்த அம்மா மட்டும் இப்போது இருந்திருந்தால் சுமியின் கால்களாகவே மாறியிருப்பாள்.

அந்த பாக்கியந்தான் அவள் செய்யவில்லையே! செய்திருந்தால் ஏழாவது வயதில் பெற்ற தாயைபறிகொடுத்து விட்டு ஒரு மாத விஷக்காய்ச்சலின் விளைவால் இந்த நிலைக்கு வந்து இப்படியெல்லாம் எல்லோரிடமும் பட வேண்டியதிருக்காதே.!!

பக்கத்து வீட்டில் இருக்கும் நளினி மட்டும் சுமியின் உலகத்தில் இருந்திடாவிட்டால் அவள் இந்த உலகைவிட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். பிறந்ததிலிருந்து இருவருக்குமிடையில் இறுகிய பாசம் அந்த எமனால் கூட பிரிக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

சுமியின் தந்தையை சொல்லிக் குற்றமில்லை. மந்திரவாதியின் கையிலிருக்கும் மந்திரகோல் மாதிரி சித்தியின் கையில் அகப்பட்டுக்கொண்டு திணறுகிறார்.

ஏதோ இவளுக்கென்று செய்யும் கடமைகளில் தந்தை சற்று கண்டிப்பு காட்டுவதால், அச்சமயங்களில் சித்தியும் ஏதும் குற்றம் குறை சொல்லாது வாளாதிருக்கிறாள்  அவளுக்கு தனக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போய் நாளாகி விட்டதாலும், தன்னிடம் வெறுப்புடன் கூடிய அன்பையும், தந்தையின் கண்டிப்பிற்காக அவ்வப்போது காட்டுகிறாள் என்பது சுமி அறிந்ததுதான்.!!

 இவளின் தேவைகளை சமயத்தில் அறிந்து அவள் செய்வதால், சித்தியின் "சுள்"ளென்ற பேச்சுக்கள் சிலசமயத்தில் வெப்பமாய் தகிப்பதை இவளாகவே சமாதான நீருற்றி அணைத்துக் கொள்வாள்.

தன் வாழ்க்கையில், அறிவு சார்ந்த விஷயங்களுக்கும், அன்புக்கும் நளினி ஒருத்திதான் கடவுள் தனக்காக கொடுத்திரும் வரம் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கையில் தைரியமாக  இருந்த சுமிக்கு அவளின் பிரிவு கொஞ்சம் வேதனையை தந்தது.

தனக்கென்று இறைவன் அளவிட்டு கொடுத்திருப்பதை பெற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். வேண்டாம் என்று மறுத்தாலும், வருவதிலுள்ள அளவீடுகள் கூட்டிக் குறையப் போவதில்லை என்ற தத்துவ எண்ணங்கள்  அவளுக்கு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனதையும்  தாராளமாக தந்திருந்தது.

ஏதோ யோசனையில் இருந்தவள் சித்தியிடமிருந்து மீண்டும் ஒரு சத்தம் வரவே, ஒரு பெருமூச்சுடன் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு போனாள்.

"அலமேலு! சுமித்ராவுக்கும் கல்யாணத்தை எப்போ நடத்த போறே?" வாசலில் எதிர் வீட்டுகாரி சித்தியிடம் அக்கறையுடன் விசாரிப்பது துல்லியமாக சுமியின் காதில் விழுந்தது.

"ஆமாம்! அது ஒன்னுதான் அவளுக்கு கொறைச்சல்! எவன் வந்து இந்த நொண்டியை கட்டிக்கப் போறான்?"

ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்ப்பட்டது சுமிக்கு.

மறுநிமிடம் சற்று வாய்விட்டு சிரித்துகொண்டாள் சுமி. நொண்டி,.. நொண்டி, நொண்டி.. ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் இந்த வார்த்தையையும் உபயோகிக்க தவறுவதில்லை சித்தி. சொல்லிவிட்டு போகட்டுமே! இல்லாததையா சொல்லுகிறாள்? உண்மையை தானே சொல்லுகிறாள் உண்மைக்கு ஏன் வருத்தப்படவேண்டும்.

காலமும், இளமையும் போட்டி போட்டுகொண்டு பறந்தது. காலம் சுமியின் தலையில் ஆங்காங்கே சில வெள்ளிக் கம்பிகளை உண்டாக்கி இருந்தது. இளமை அவளது அழகிய முகத்தில் சற்று முதிர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கடந்த நான்கைந்து மாதங்களாக நளினியிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவள் திருமணமாகி சென்றதிலிருந்து சுமிக்கு வாரம் இருமுறை கடிதம் எழுதிக்கொண்டு இருந்தாள். நாளாக நாளாக அவளது கடிதம் வருவதும் அரிதாகிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்றதடவை அவளிடமிருந்து வந்த கடிதத்தில் அவள் தாயாகும் விபரம் குறித்து எழுதி இருந்தது சுமிக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது. திருமணத்திற்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து அவள் தாயாகும் பேறு பெற்றிருப்பதால் அவளின் நலம் குறித்து சுமியும் அடிக்கடி விசாரித்து வந்தாள். ஆனால் தற்சமயம் அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததாலும், அவளைப்பற்றி விசாரித்துக்கொள்ள இயலாமல் அருகிலிருந்த அவளது பெற்றோர்களும் அவளுக்கு திருமணமான ஓரு வருடத்திலேயே, வேறு ஊருக்கு குடி பெயர்ந்து விட்டதாலும்,  வேறு எவரிடமும் எதுவும் கேட்கமுடியாமல் தோழியின் நினைவை மௌனத்திலேயே கரைத்து வந்தாள் சுமி.

வாசல் கதவை தட்டும் ஓசை கேட்டது.

"வெளியில் சென்றிருந்த சித்திதான் வந்துவிட்டாளோ?"

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போய் கதவை திறந்தாள் சுமி.

உள்ளே நுழைந்த நளினியின் கணவன் மகேந்திரனை பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும், திகைத்துப் போனாள்  சுமி.

"வாருங்கள், எதிர்பார்க்கவே இல்லை.. நலந்தானே? அமருங்கள்.. வார்த்தைகள் சமந்தமில்லாமல் குளறி குளறி வெளிவந்தன சுமிக்கு.

"என் நளி சௌக்கியந்தானே?"

அவன் அவளை மெளனமாக ஏறிட்டு நோக்கிய விதம் அவளை என்னமோ செய்தது.

"நளினி நம்மையெல்லாம் மோசம் பண்ணிவிட்டு நிம்மதியாக போய் சேர்ந்து விட்டாள் சுமித்ரா!"

என்ன? அதிர்ச்சியில் கண்கள் நிலைகுத்த முன்னால் சாய்ந்தவளை தாங்கி பிடித்துக் கொண்டான் மகேந்திரன்.

"சற்று அமைதிபடுத்திக் கொள் சுமி!"

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சுமி.

"சுமி" அதேகனிவு! "அவள் மட்டுமே அழைக்கும் சொல்!" கண்ணீர் அணை உடைந்து சிதறியது.

"நீங்கள் ஏன் எனக்கு தெரியபடுத்தவேயில்லை?" விம்மலுக்கிடையிலும் கோபத்துடன் எழுந்தது சுமியின் குரல்.

"என்னை மன்னித்துவிடு சுமித்ரா! மூன்று மாததிற்கு முன்பு ஒரு புதிய ஜீவனை இந்த உலகத்திற்கு தந்துவிட்டு அவள் இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டாள். இறப்பதற்கு இரண்டு நாள்முன்பு இந்த கடிதத்தை என்னிடம் கொடுத்து, "என்றைக்கு உன்னிடம் இதை நான் சேர்பிக்கிறேனோ, அன்றுதான் தான் இறந்ததைப் பற்றியும் கூற வேண்டுமென்று நிபந்தனை போட்டாள்". என்ன செய்வது? அவள் கட்டளைப்படிதான் என்னால் நடக்க முடிந்தது." என்றபடி கடிதத்தை சுமியிடம் கொடுத்தான் மகேந்திரன்.

சுமியின் கைகள் கடிதத்தை பிரித்தன; கண்கள் படித்தன.

"என் ஆருயிர் தோழி சுமிக்கு,

இதுவே நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். ஏனோ, இந்த தடவை நான் பிழைக்கமாட்டேனென்று என் உள்ளத்தில் ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. என் அன்பு சுமி.... என் திருமண நாளன்று நீ சொன்னது நினைவு இருக்கிறதா? என் வாழ்க்கைங்கிற பாலிலே ஊனமிங்கிற உப்புகல் விழுந்து திரிந்து போய்விட்டது. அதை இனி சாக்கடையில் தான் கொட்ட வேண்டுமென்று சொன்னாய்.!! ஆனால் அது என் சுமியின் வாழ்க்கை.! அந்த வாழ்க்கைப் பால் திரிந்தே போயிருந்தாலும் சரி, அதை நான் உபயோகபடுத்தி கொள்வேனே தவிர சாக்கடையில் கொட்டவிடமாட்டேன். புரியவில்லையா சுமி?

என் குழந்தைக்கு என் ஸ்தானத்தில் நீ வர வேண்டும். நீண்ட நேர விவாதத்திற்கு பின், அவரிடம் சம்மதம் வாங்கி விட்டேன். நீயும் சம்மதிப்பாய் என்று எனக்குத் தெரியும். என் தோழியை எனக்கு தெரியாதா? இதை நீ செய்தால்தான் என் ஆத்மா சாந்தியடையும்."

இப்படிக்கு
உங்களை என் மாறா அன்புடன் வாழ்த்திக் கொண்டிருக்கும்,
உன் "நளி".   


கடிதத்தை படித்துவிட்டு கதறியழுதாள் சுமி...

"சுமி! இந்த மனிதர்கள் இதயத்தில்தான் அன்புங்கிற மலர் மலருகிறது. அந்த மலர் சில சமயங்களில் தியாக கனியாக கனிந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி நளி. ஆனால் ஒவ்வொருவர் மனதிலே அந்த மலர் மலராமல் வெறும் மரமாகவே மாறிடறாங்க," குரலடைக்க கூறினான் மகேந்திரன்.

"உண்மைதான்! அன்னிக்கு ஒருநாள் நா அவக்கிட்ட ஒருவேண்டுகோள் விடுத்தேன். இப்போ அவ ஒரு பெரிய தியாகத்தை செஞ்சிட்டு என்கிட்டேயே......". முடிக்க முடியாது விம்மினாள் சுமி.

"சுமி! அவளே போனபிறகு எனக்கு இன்னொரு கல்யாணம் அவசியமே யில்லை. ஆனாலும் அவளோட ஆத்ம திருப்திக்காகத்தான் சம்மதிச்சேன். அவ கட்டளைக்காகத்தான் தலை வணங்குகிறேன். நா கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே சுமி! என்னை மணக்க உனக்கு சம்மதந்தானே!" உணர்ச்சியற்ற குரலில் கேட்டு கொண்டே அவள் எதிரே தன் கரத்தை நீட்டினான் மகேந்திரன்.

அவன் கண்களில் தெரிந்த வெறுமை அவளை அவன் சொன்னது உண்மை என நம்ப வைத்தது....

"என் நளினியின் திருபதிக்காக நான் என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கேன்" என்ற சுமி தன் சம்மதத்தை தெரிவிக்கும் பாவனையில் அவன் கைகளில் தன் கையை பதித்தாள்.

அங்கே அன்பு மலர் மலர்வது கண்டு மேலேயிருந்து அந்த தியாகக்கனி நிறைவுடன் சிரித்தது.

நிறைந்தது. 

Wednesday, May 1, 2019

உழைப்பாளர் தினம் – சிறுகதை 1)

வலையுலக  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது
அனைத்து நாடுகளிலும் பல் வேறு இயக்கங்கள் தோன்றி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க பெரும்பாடுபட்டது

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போரட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

நன்றி விக்கிப்பீடியா.... 

இன்றும் ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு இனத்தின் நிலை.. ஆனாலும் உழைப்புக்கு உதாரணமாய் சுட்டிக் காட்டப்படுபவர்கள்..  இது பழைய பதிவெனினும், இன்றைய தினத்திற்கானது. அதனால் மீண்டும் ஒருமுறை அனைவரின் பார்வைக்காகவும், சில திருத்தங்களுடன் பகிர்கிறேன். இதை "மீண்டும் ஒருமுறையா" என சோர்வில்லாமல் படிக்கும் அனைவருக்கும்  மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உழைப்பின் கதை... 

"என்னங்க  இன்னைக்கு  பாட்டுக்கு உழைக்கப் போகலையாவாசலில் சோர்வாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து கேட்டாள் மனைவி. 

     உம்ம்ம்... போகணும். என்னவோ காலையிலேயே சோம்பலா இருக்கு! இன்றைக்கு என்னவோ உழைப்பாளர் தினமாம்! என்றவனை இடைமறித்த அவன் மனைவி அப்படியெல்லாம் நாம இருந்தா எப்படிநம்ப வயிற்றுப் பாட்டுக்கு எங்க போறதுதினமும் சுறுசுறுப்பா அங்கே இங்கே அலஞ்சா தானே நமக்கு வேண்டியது கிடைக்கும் என்று கனிவுடன் உபதேசித்தாள் மனைவி.

     "உம்ம்ம்... புரியுது அந்த காலத்திலேயே இருந்து நாம ஓடியாடி வேலை செஞ்சவங்கதானே! (பெருமூச்சுடன்) ம்ம்..இதோ கிளம்பறேன். நீ புள்ளைங்களை பாத்துக்கோ.! "என்றபடி கிளம்ப எத்தனித்தான் அவன்.

   " பாத்து போயிட்டு வாங்க! வழியிலே ஓரமாவே நடந்து போயிட்டு வாங்க! இப்ப நீங்க புறப்பட்டு போன தான் பொழுது போறதுக்குள்ள வீடு திரும்ப முடியும். வானம் வேற கறுத்து கிடக்கு! இந்த மழை வேற வந்துடாமே இருக்கனும்.!" என்று அவன் மேல் அக்கறையுடன் பேசினாள் அவள்.

    "மழையாஅது எங்கே இப்பெல்லாம் ஒழுங்கா பெய்யுதுஅந்த காலமெல்லாம் போயாச்சு! இப்பெல்லாம் முந்தி மாதிரி எதுவுமில்லை! இந்தோபார்..! ஏதோ புயல் வந்து ஊரெல்லாம் ஒரே மழைவரப் போகுதூன்னு என அன்னைக்கு  பேசிகிட்டாங்க.! இப்ப இரண்டு நாளா அதுவும் இல்லைன்னு வேறே சொல்றாங்க.! ஒன்னும் புரியலே போ.! 

நமக்கும் ஒரு இடத்திலேயும் ஒழுங்கா முந்தி மாதிரி உழைக்க முடியலே! நேத்திக்கு ௯ட ஒரு இடத்துலேஅரிசி பருப்புன்னு மூட்டை மூட்டையா சாமான்களைஏத்திகிட்டும்இறக்கிட்டும் இருந்தாங்க! சரி! நமக்கு ஏதாவது உழைப்புக்கு ஒரு வேலை இருக்குமான்னு போனேன். அங்கிருந்த எல்லாரும் விரட்ட மிதி படாத குறையாக ஓடி வந்துட்டேன். அதேமாதிரி அவங்கவங்க வீட்டிலேயும் அவங்களுக்கு பிடிச்ச வேலைகாரங்களை வச்சுகிட்டு சுத்தபத்தமா இருக்கனும்’னு விரும்புறாங்க! நம்ம தேவையை புரிஞ்கிட்டு  நம்ப உழைப்புக்கேத்த மாதிரி நாம செய்ற வேலையை எங்கே மதிக்கிறாங்க? என்றான் சலிப்புடன் அவன்.

   "புள்ளைங்களும் பாவம்! நேத்து அப்பா என்ன கொண்டு வந்திருக்காருனு ஆசையா கேட்டதுங்க! வீட்லே ஒரு குந்துமணி அரிசி ௯ட இல்லைன்னு நான் எப்படி சொல்ல முடியும்நேத்து சின்னவன் ரொம்ப பசிக்கிதுன்னு என் காலை சுத்தி சுத்தி வந்தான். உங்களையும் காணமா! அதனாலே அவனுக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழிபண்ணலாம்னு போயி அலைஞ்சதுதான் மிச்சம்...." என தன் அனுபவத்தை சோகத்துடன் ௯றினாள் அவள்.

  " அப்படியெல்லாம் சின்னபுள்ளைங்கள தனியா வீட்டுல விட்டுட்டு போவாதே.! உனக்கும் முந்தி மாதிரி இப்பெல்லாம் முடியலை! அப்படியிருக்கும் போது ஏன் வெளியில போற? நான் போய் என்னாலே ஆனதை வீட்டுக்கு கொண்டு வரேனில்லியா? "அவன் சற்று கோபமாக கேட்டான்.

   "இல்லே! நேத்து புள்ள ரொம்ப பசின்னு சொன்னதினாலே தான் போனேன். இல்லாட்டி நீங்க தினமும் சம்பாரிச்சு கொண்டு வர்றது நமக்கு வயித்துக்கும்பாடுக்கும் சரியாதானே போறது! மத்தபடி முந்தி மாதிரி நாளைக்குனு எங்கே வச்சுக்க முடியுது? ம்ம்... நீங்க இப்படி சிரமபடுறதை பாக்கும் போதுதான் எனக்கு மனசு தாங்கல!" என்று அவனை சமாதான படுத்தியவள், “ஆமாம் அப்பவே என்னமோ சொல்ல வந்தீங்களே?” என்று ஞாபகபடுத்தினாள்.

  " ஆமாம்! அதாவது இன்றைக்கு உழைப்பாளர் தினமாம்! நேத்திக்கு வேலைய தேட போகும் போது நாலுபேர் சொல்லிகிட்டிருந்தது காதிலே விழுந்திச்சு! அந்தகாலத்துலே, "உழைப்புக்குன்னா இவர்கள்தான்னு" நம்மளை சுட்டிக்காட்டி பேசிட்டு இன்னைக்கு அவங்களை அவங்களே பெருமைபடுத்திக்கிறாங்க! ஏன் நாமெல்லாம் உழைக்கிற வர்க்கம் இல்லையா? எப்படியோ போகட்டும்! இந்த மட்டுக்காவது, எங்கோ ஒரு இடத்துல, எப்பவாச்சுமாவது  உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் ஒரு உதாரணமா நம்மளை காட்டாறாங்களே!!


""இப்படி ஒரு தினத்தை வச்சு கொண்டாடுறாங்களே! அன்னிக்காவது நமக்கெல்லாம் ஒரு இனிப்பு, ஹும்.. ஹும்.. வேண்டாம்மா, ஒரு சின்னமிட்டாயாவது கொடுக்கலாம்ன்னு அவங்களுக்கு தோண்றதா? போகட்டும்! அவங்க நல்லா வாழ்ந்துட்டு போகட்டும்! நாமதான் அன்னியிலேருந்து இன்னைய வரைக்கும், உதைபட்டும் மிதிபட்டும் சாவறோம். ஒருநாள் வெளியிலே போயிட்டு வர்றதுக்குள்ளே அன்னைக்கு உசிரு நம்மகிட்டே இருக்குமான்னு தெரியலே! நம்ம பொழைப்பு அப்படி! படைச்சவன் அவங்களையும் நம்மளையும் அப்படி படைச்சிட்டான்! இரண்டாவது நாம் வாங்கி வந்த வரம் ( இதைச் சுட்டினால், இதன் இரண்டாவது கதையும்  இத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை காணலாம்.) அப்படி! சரி! நான் புறப்படறேன். நீ பத்திரமா இருந்துக்கோ!! "என்றபடி மனைவியிடம் விடைபெற்று வெளியில் வந்தவன் அருகிலிருக்கும் ஒரு  வீட்டின் கதவு  மூடியிருப்பினும், படிகளின் ஒரமாக உள்நுழைந்து தனக்கும், தன் குடும்பத்துக்கும் உணவு தேடுவதற்கான வேலையை கவனிக்க வேண்டி , உழைப்பாளியான அந்த கடமை தவறாத கணவனான அந்த எறும்பினம் அந்த வீட்டினுள் மெள்ள பயணித்தது.

நாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2)


கதையினுள் உட்கதை

"கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் நம்மினம் மட்டும் உருவத்தில் மாறுபட்டவையாக இருப்பதினால் எவ்வளவு திறமையுடன் ஓடி ஆடி திரிந்தாலும் மற்ற பிறவிகளின் காலுக்கடியில் மிதிபட்டும் அடிபட்டும் சீக்கரமாக முடிவை சந்தித்து கொண்டிருக்கின்றன..ஏன் இப்படி?" என்ற அந்த கவலையில் உண்ண பிடிக்காமல், உறக்கம் வராமல் தவித்தார் அவ்வினத்தின் தலைவர்.

ஒரு நாள் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர உலகில் உள்ள தன் மொத்த இனத்தையும் கூட்டமாக கூட்டி வைத்துக்கொண்டு அந்த தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

" நண்பர்களே! இன்று நம் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குக்கெல்லாம் புரியும் என நினைக்கிறன். நம்மையெல்லாம் படைத்த கடவுள்  நம்மை படைக்கும் போது, நமக்கு வேண்டும் போது அவரிடம் நமக்கு வேண்டிய வரத்தை  வாங்கிக் கொள்ளலாமென கூறியிருந்தார். அதன்படி அரக்கர்களும், மிருகங்களும், தேவர்களும், மனிதர்களும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர். அதனால் நாமும் நமக்கு சாதகமாக சாகா வரத்தை பெற்று விட்டால் எக்காலத்திலும் நாம் சந்தோஷமாய் இருக்கலாம். உங்களுடைய கருத்து என்ன?"

இவ்வாறு தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து துணிச்சலான குரல் வந்தது. “நீங்கள் சொல்வது உண்மைதான் தலைவரே! அந்த மாதிரி ஒரு வரத்தை பெற்று விட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது" என்ற தைரியமான குரலை பார்த்த தலைவர், ""அப்படியானால், நம்மில் யார் சென்று வரம் பெற்று வருவது என்று தீர்மானியுங்கள்"! என்றவுடன், அந்த துணிச்சல் குரலுக்குடையவரை தவிர்த்து மற்றவர்கள்  தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாக பட்டியலிட்டு ௯றி விலக ஆரம்பித்தனர். 

தலைவர் யோசித்தார்! முதலில் வந்த குரலுக்குரியவரையே பக்குவமாக பேசி கடவுளிடம் வரம் கேட்க அனுப்பி வைத்தாலொழிய இந்த பிரச்சனை தீராது என்பதை புரிந்து கொண்டவராய்....

இதோ பார்! நீதான் மிகவும் தைரியமாயிருக்கிறாய்! இந்த வேலைக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரி வர மாட்டார்கள்! நீ இதை முடித்து வந்தால் நம் இனம் உன்னை என்றும் நன்றியுடன் போற்றிக் கொண்டிருக்கும்! என்றதும், "வெறும் நன்றிதானா?" என்று மறுபடியும்  அந்த குரல் மறுபடி எகத்தாளமாக கேட்க, "சரி நீ என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று பதிலுக்கு தலைவர் சொன்னதும், "நான் திரும்பி வந்ததும் உங்கள் இடத்தை தருவீர்களா?" என்று கேட்டதும் ஒரு நிமிடம் மெளனமானார் தலைவர்.

தன் இனங்களின் நன்மைக்காக தன் பதவியை தியாகம் செய்வது ஒரு சாதாரணசெயல்! இதனால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது! இந்த செயலினால் தன் பேரும் புகழும் பன்மடங்கு பெருகும் என்பதை புரிந்து கொண்டவராய், “சரி! நீ போய் சாதித்து வா! வந்தவுடன் மேடையின்றி, ௯ட்டமின்றி, தேர்வின்றி நீதான் நம்மினத்திற்கு தலைவன்! போதுமா?” என்று உறுதியளித்தார் தலைவர்.

"சரி!" என்று சந்தோசமாக கடவுளின் இருப்பிடத்திற்கு கிளம்பிய அந்த தைரியமான குரலுக்குரியவருடன் அவர் உற்ற நண்பனும் "நானும் வருவேன்" என ஒட்டிக் கொண்டு புறப்பட்ட, "சரி போனால் போகிறதென்று அவரையும் அழைத்துச் சென்ற அந்த தைரியவான் தன் முறை வந்ததும் கடவுளை சந்தித்தார்.

என்ன வேண்டும்? என்ற கடவளிடம், தங்கள் குறைகளை தைரியமாக எடுத்துரைத்தப்பின் வேண்டிய வரத்தை கேட்கும் முன் தைரியமான குரலின் நண்பன் முந்தி கொண்டபடி, “அண்ணே! அண்ணே! இதை மட்டும் நான் கேட்கிறேன் அண்ணே! என்று கெஞ்சி ௯த்தாட, அந்த தைரியவானும், "சரி! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அதே மாதிரி கேட்பாயா? என்று அகங்காரத்துடன் கேட்ட பின் , "சரி! ஒழுங்காக கூறி வரத்தை பெற்றுக் கொண்டு வா! நான் வெளியில் காத்திருக்கிறேன்." என்றபடி வெளியில் வந்து அமர்ந்து கொண்டார். .

சற்று நேரம் கழித்து வெளியில் வந்த நண்பனிடம் "முடிந்ததா? கடவுள் வரம் தந்து விட்டாரா? நான் சொன்னபடி கேட்டாயா? எப்படிகேட்டாய்? ஒருமுறை சொல்! பார்க்கலாம்! என்ற குரலுக்குரியவரிடம் அவர் நண்பன் தான் கேட்ட வரத்தை சொன்னதை கேட்டதும் அவரின் குரலே எழும்பவில்லை!

அடபாவி! “நாங்கள் கடித்து அனைவரும் சாக வேண்டும்! முக்கியமாக மனிதர்கள்!” என்றல்லவா கேட்கச்சொன்னேன். “நீ நாங்கள் கடித்தவுடன் சாக வேண்டுமென” மொட்டையாக கேட்டு வரத்தையும் பெற்று வந்திருக்கிறாயே! பாவி! பாவி! என்று துரத்தி துரத்தி நண்பனை அடிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்றபடி கடவுள் எட்டி பார்க்க, “கடவுளே! என் நண்பனுக்கு மறதி அதிகம் அதனால் மாற்றிக் கேட்டு விட்டார். தயவு செய்து மன்னித்து வரத்தை நான் கேட்பது போல் தாருங்கள்!” என்று வரம் பெற வந்தவர்  பல முறை வேண்டியும் அதை ஏற்காத கடவுள், “அவ்வளவுதான்! கொடுத்த வரத்தை மாற்ற முடியாது! இனி உங்கள் விதிப்படிதான் நடக்கும் அந்த மனித இனத்துடன்தான் நீங்கள் காலங்காலமாய் வாழ்ந்து, சாவையும்,சந்திப்பீர்கள்!” என்று கடுமையாக ௯றி விட்டு மறைந்து விட்டார்.

வரம் கேட்டு வந்த தன் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதே,!!! என்று நொந்தபடி நண்பனுடன் வந்த அந்த தைரியவான் தலைவரின் காலில் விழுந்து கதறியபடி “நாம் இப்போதாவது சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்தோம், சாகா வரம் கேட்கப்போய் அதிலும் மனிதர்களை கடித்து சாகடிக்கும் வரத்தை கேட்கப்போய் அவர்களை கடித்தவுடன் நாம் இறக்கும் வரத்தை பெற்று வந்திருக்கிறோம்! அது மட்டுமின்றி அவர்களுடனே காலங்காலமாய் வாழ்ந்து இறக்கும் வரமும் கிடைத்துள்ளது, நம்மினத்திற்கு நல்லது செய்கிறோம் என செருக்குடன் சென்ற நான் என் நிலை உணராமல், பேராசையுடன் செயலாற்றியதில் , நம்மினமே சாபம் அடையும்படி ஆகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். ” என்றபடி அரற்றி அழுத அந்த எறும்பினம் துக்கம் தாங்காமல் உயிரை விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.




நன்றி கூகிள்.

Thursday, September 6, 2018

இழந்த கண்கள்


இதுவும்  ஆயிரத்து, தொழாயிரத்து  எழுபத்து ஆறாம் ஆண்டில், எனக்காக படைத்ததுதான். (எனக்காக என்றால் என்னுடைய தீவிரமான  எழுத்தார்வத்திற்காக .. இது இப்போது என் பதிவில் வெளி வந்திருப்பது இப்போது என் எழுத்தையும் விரும்பி ரசிக்கும் உங்களுக்காக.....)

இந்தக் கதைகள் ( எழுதியது இன்னமும் நிறைய உள்ளது.) படைக்கும் போது  எனக்கு எழுத்தாற்றல் சுத்தமாக இல்லையெனத்தான் கூறுவேன். (ஏனெனில் அப்போது என் பிறப்பு படிக்கல்லில் எண் பதினேழில் கால் பதித்திருந்தேன். அந்த பொழுதில் என் கற்பனைச் சிறகுகள் சிறிதளவுதான் முளைத்திருந்தன... (அதுவும் நான் அனுமானித்ததுதான்.) அனுபவங்கள் என்ற வாழ்க்கை பாடங்களில் ஒரு சின்ன பரிசோ, இல்லை பட்டமோ கூட வாங்கத் தெரியாத காலங்களது.)  ஆனாலும் கதைகள்  எழுதும் ஆர்வம் மிகுதியாக இருந்தது. 

அதனால் அந்த  ஆர்வ கோளாறுகள் ஒரு உருவாகி வடிவமடைந்து "கதைகள்" என்ற பெயரையும் பெற்று நிலைத்து எழுந்து விட்டன அதன் பின் அமைந்த குடும்பச் சூழல் கற்பனை சிறகுகளை மேலும் வளர்க்கத் தெரியாமல் நிறுத்தி விட்ட.து. போகட்டும் !.. இப்பவும் சிறகுகள் முழுமையடையாத கற்பனை பறவையாகத்தான் இருக்கிறேன். 

எனினும்,
  
இதை இப்போது இந்தக் கதைகளை படிக்கும், படித்து கருத்திடும் உங்களனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்

இழந்த கண்கள். 
======  ========

என்ன இது விநோதா? தங்கை தன் முன் வைத்தப் பணத்தைப்பார்த்து திகைப்புடன் கேட்டான் ரகுநாதன்...

  ''நம் தங்கை மாலினியின் திருமண  செலவிற்கு என்னால் இயன்ற உதவி அண்ணா..'' விநோதா நிதானமாக கூறினாள்.

   ''நீ செய்றது கொஞ்சம் கூட நன்னாயில்லை விநோதா'' நான் ஒருத்தன் மரமாட்டம் இருக்கிற போது நீ உதவி செய்யத்தான் வேண்டுமா?'' கோபத்துடன் கேட்டான் அவன்.

    '' இருந்தாலும் அந்தமரத்தோட நிழலிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிச்சிடலாம்'ன்னு, நாங்க நினைக்கிறது முட்டாள்தனம் அண்ணா ''

 '' அது அந்த மரத்தோட கடமை, விநோதா.."

எது அண்ணா ?'' தன்னாட நிழல்லே இருக்கறவங்கதானே, என்ன வேணுமானாலும் பேசலாங்கற அலட்சியத்திலே, தூக்கி எறிஞ்சிடறதா ?''

                  '' விநோதா.... ''

 '' ஸாரிஅண்ணா, '' உணர்ச்சிவசபட்டு ஏதேதோ பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே... நீ, உன் தங்கைக்கு என்னவெல்லாம்  செய்யனும்'ன்னு, ஆசைபடறியோ, அதேமாதிரி ஆசைப்பட எனக்கும் உரிமையுன்டு. ஏன்னா, அவ எனக்கும் தங்கை. நீ அவ கல்யாணத்துக்கு'ன்னு, வச்சிருக்கிற  பணத்திலே, இது கால்வாசிகூட பெறாது.. ஆனா என்ன செய்றது, என்னோட மூணுவருஷ உழைப்பின் ஊதியம் இவ்வளவுதான். இதையாவது செய்ய முடிஞ்சதேங்கிற திருப்தி என் உள்ளத்தை நிறைய செய்யறது அண்ணா!!. இதை தயவு செய்து வேணாம்'ன்னு, ஒதுக்காமே ஏத்துக்கோ... இது அந்த ராமருக்கு அணில் செஞ்ச உதவி மாதிரி.. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடு... எனக்கு ஆபீஸீக்கு லேட்டாயித்து... நான் வர்றேன் '' படபடவென பொரிந்து விட்டு வெளியேறினாள் அவள்.

  தானும் காரியாலயத்திற்கு போக வேண்டுமென்பதை மறந்து விட்டவனாய், ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தான் ரகுநாதன்...

இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி மைதலிக்கு பரிந்து தங்கை மீது சுள்ளென்று விழுந்ததை, அவள் எவ்வளவு நாசூக்காய் சுட்டி காண்பித்துவிட்டு போய் விட்டாள், திகைப்பிலிருந்து விடுபட நீண்ட நேரமாயிற்று, அவனுக்கு.... 

          '' மாலினி ...''

   '' என்ன அக்கா ?'' கண்களை துடைத்தவாறு நிமிர்ந்தாள் மாலினி..

          '' ஏன்  அழறே ?''

       ''  சாம்பாரில் சொஞ்சம்  காரம் துாக்கலாய் இருக்கு'ன்னு.. மன்னி.." மேற்கொண்டு முடிக்க முடியாது விம்மினாள் அவள்.

  '' பைத்தியம்!! இதுக்கு போய் அழறியா?  மன்னிதானே சொல்றாள்'ன்னு பேசாமே இருக்கனும், இல்லாட்டா முகத்திலே அறைஞ்சாப்லே.. ஏதாவது பேசிட்டு வரனும் .. உனக்கு சமைக்க தெரியலைன்னா, பக்குவமா எடுத்து சொல்லனும்..  இல்லாட்டா அவளே தன் கைபாகத்தை காட்ட வேண்டியதுதானே... சற்று உஷ்ணத்துடன  கேட்டாள் விநோதா.

  '' உஷ்  அக்கா '' மன்னி வந்துட போறா.. '' என்னமோ அடுக்கிண்டே போறியே.. எனக்கு உன் மாதிரி பொறுமையா, நிதானமா, பேச வராது. பயத்துலே சட்டுன்னு அழுகைதான் வருது.''

 ''  முதல்லே பயத்தை விடு மாலினி மனுஷாளுக்கு மனுஷா ஏன்பயப்படனும்,,, நீ என்ன அவளுக்கு கொறைஞ்சி போயிட்டியா???

 ''  இன்னும் உன்னை போல வேலைக்கு போய் சம்பாதிச்சாளோ, என்னைக்கும் நிறைஞ்சே இருப்பா...  நா, இப்ப என்ன சொல்லிட்டேன்  நாளைக்கு ஒர் ஆத்துக்கு போப்போற பொண்ணு சமைக்க நல்லா கத்துக்கோன்னேன் அது தப்பா 'அங்கு வந்த அவர்களின் மன்னி மைதிலி பரபரவென்று பொரிந்தாள்.

   ''மன்னி..'' என்று தடுமாறியபடி எழுந்தாள் மாலினி.

  '' எதுக்கு நிறுத்திட்டே, உன் தங்கைக்கு இன்னும் நல்லா புத்தி சொல்லி கொடு.. உன்னை மாதிரி ஒருத்தனை மனசிலே நினைச்சிண்டு அழவும், வேலை பாக்கிறேன், வேலைபாக்கிறேன்னுட்டு, ஆபீஸிலே எல்லாரோடையும்.... ''

மன்னி,, போதும் நிறுத்து... இதை விட ஆயிரம் ஊசிகொண்டு நீ என்னை குத்தியிருக்கலாம். ஆனா அதைவிட கூர்மையா இருக்கு உன் பேச்சு " என்றாள் விநோதா.

  '' ஆஹா!!! யார்கிட்டே உன் பசப்பெல்லாம்??? எனக்கு தெரியாதாக்கும் உன் கதையெல்லாம்.....'''

    ''  மன்னி.... ''மனசின் வலி ஏற்படுத்திய  கோபத்தில் குரல்  உசத்தினாள் விநோதா.

      '' என்ன அங்கே கலாட்டா? ''

அப்போதுதான் வெளியிலிருந்து வந்த ரகுநாதன் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தான்...

   ஒரு நிமிடத்தில்  தன் முகபாவத்தை மாற்றிக்கொண்ட விநோதா '' நத்திங் ''என்றபடி சிரித்தாள்.

   " எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதப்பத்தி உனக்கென்ன அண்ணா ? நீ உன் வேலையை பாத்துண்டு போ..." என்ற விநோதா அவன் தோளில் கைவைத்து விளையாட்டாய் அறைக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனாள்.

                       அத்தை....''

 அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய விநோதா வாசலில் விளையாடி கொண்டிருந்த தன் அண்ணனின் ஒரே மகன் ரவி ஆவலுடன் ஓடி வந்து அவள் காலை கட்டிகொள்ளவும் அவனை பாசத்துடன் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.

    "அத்தை.. எனக்கு என்ன வாங்கி வந்திருக்கே?" ரவி ஆவலுடன் கேட்கவும், ''ம்.. ரவிகுட்டிக்கு இன்னைக்கு என்ன தெரியுமா நீ ரொம்ப நாளா கேட்டுகிட்டிருந்த இந்த பொம்மையை அத்தை இன்னிக்கு கஷ்டபட்டு தேடி வாங்கி வந்திருக்கேனாக்கும்..." என்று விநோதா நீட்டி முழக்கி சொல்லவும் ரவி அவசரமாய் அவள் பிடியிலிருந்து இறங்கியபடி "கொடு அத்தை.. சீக்கிரம்" என்று அவசரப் படுத்தினான்.

    விநோதா சிரித்து கொண்டே அவள் பையிலிருந்து எடுத்துகொடுக்கவும் ரவி அதை பார்த்த மகிழ்ச்சியில் "ரொம்ப நல்ல அத்தை" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 விநோதா அவனை தூக்கி அணைத்தவாறு  "போக்கிரி பயலே.. வாங்கி வந்தால் நல்ல அத்தையாக்கும், இல்லாட்டி.." என்றவாறு சிரித்துக் கொண்டு கேட்டு விட்டு, அவனை இறக்கி விட்டவள். ''சரி, நீ சமர்த்தா விளையாடிண்டிரு அத்தை உள்ளே போய் டிரஸ் மாத்திண்டு உன் கூட விளையாட வா்றேன் சரியா?'' என்று கொஞ்சிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

    ''ஏன்னா... உங்க சின்ன தங்கைக்கு ஒருவழியா கல்யாணத்தை முடிச்சாச்சு, அடுத்து  பெரியவளுக்கும் ஏதாச்சும் ஓரு இடத்துலே பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேணாமா? ''

 தன் அறைக்குள் நுழைய போன விநோதா தன்னை பற்றி அண்ணாவும் மன்னியும் பேசுவதை கேட்டு சட்டென்று நின்றாள். ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசுவதால், அதை கடந்து செல்லும் தன் அறைக்கு எப்படிச் செல்வது என்ற எண்ணமும் அவள் கால்களை சற்றே கட்டிப் போட்டது.

   "ஏன்னா.. உங்களைத்தான் கேட்கிறேன்,"  மன்னி விடாமல் திரும்பவும் ஆரம்பித்தாள்.

 "என்னை என்னதான் செய்ய சொல்றே மைதிலி?" அண்ணா நொந்த குரலில் அலுத்துக்கொள்வது விநோதாவிற்கு புரிந்தது.

 "உங்க தங்கைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணச்சொல்றேன்.. ஏதோ நடந்தது நடந்து போச்சு.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே  இருக்க முடியும்..."

            '' அவ சம்மதிச்சாதானே...''

 "அவளை சம்மதிக்க வைக்கனும்... ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன்.. அப்புறம் உங்கபாடு.. உங்க தங்கைபாடு.. எனக்கென்ன வந்தது.. ஊரே சிரிக்கிறது நம்ப மானம் போகமே இருக்னும்னா காலாகாலத்திலே பண்றதை பண்ணுங்கோ அவ்வளவுதான் சொல்வேன்.  கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் பண்ணி பிரோயஜனமில்லை."

     ''என்ன சொன்னே? என் தங்கையை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவளை மாதிரி எல்லோரும் இருந்தா போறும்,'' என்றான் ரகுநாதன் உஷ்ணம் ஏறிய குரலில்...

  "உங்களுக்கு தெரிஞ்சா போதுமா? ஊர்லே எல்லோரும் என்ன பேசிக்கிறான்''னு கொஞ்சம் கவனிக்கனும்.. கண்டவனோடையும் பழகிட்டு...

    "போதும் நிறுத்து.. உன் தங்கையை நினைச்சிண்டு பேசறியா? வீட்டைவிட்டு மனம்போனபடி ஒடினவதானே அவ.. உங்காத்திலேயே  இப்படி நடந்திருக்கும் போது நீ இந்த ஆத்தைபத்தி பேச உனக்கு தகுதியில்லை, அதுவும் என் தங்கையை பத்தி தப்பா பேசினேன்னா.. உன்னை என்ன பண்ணுவேன்''னு'' எனக்கே தெரியாது..." என்று கோபத்தின் மிகுதியில் கத்தினான் ரகுநாதன்.

   "நீங்களும் கொஞ்சம் நாக்கை அடக்கி பேசுங்கோ... உங்க குடும்பத்தை பத்தி தெரியாதாக்கும்.. உங்கப்பா போன பிறகு நாலாத்துலே  சமையல் வேலை மட்டும் செஞ்சு உங்களையெல்லாம் இப்படி படிக்க வசசி காப்பாத்தியிருக்க முடியுமா உங்கம்மாவாலே?  எங்கம்மா ஏற்கனவே உங்க குடும்பத்தை பத்தி எங்கி்ட்டே சொல்லியிருக்கா.. ஏதோ நீங்கள்லாம் நல்லவா''னு''தான் எங்காத்துலே என்னை உங்களுக்கு கட்டிவச்சா.. தாயை போல பிள்ளைம்பா, அதுக்கு ஏத்தாற்போல் உங்க தங்கையும்.... கொஞ்சமாவா ஆடினா.. என்னமோ என்கிட்டே பாயறேளே?"

 "என்னடி சொன்னே? நானும் போகுதுன்''னு'' இவ்வளவுநேரம் பொறுமையாயிருந்தேன்.. " என்ற ரகுநாதன் '' பளார்'' என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.

   "என்னை அடியுங்கோ.. கொல்லுங்கோ.. என்னை சொல்லனும் உங்களை போய் கட்டிண்டேன் பாருங்கோ.." என்று கத்திவிட்டு மைதிலி அழுவது விநோதாவிற்கு கேட்டது.

   "சே, என்னதான் இருந்தாலும் ஒரு பெண்பிள்ளையை இப்படி அறைந்திருக்க௬டாது. பொறுமைக்கு மறுபெயராக விளங்கும் அண்ணாவா இப்படி செய்தான்" என்று விநோதா திகைத்து போயிருந்தபோது.. முகம் சிவக்க கோபத்துடன் வெளிவந்த ரகுநாதனும் அவளைகண்டு திடுக்கிட்டு நின்றான்.

 ''எல்லாவற்றையும் கேட்டிருப்பாளோ...''

     "ஸாரி விநோத், உன் மன்னி தெரியாமே உன்னைபத்தி என்னவெல்லாமோ பேசிட்டா.. அவளுக்கு நான் ரொம்ப இடம் கொடுத்திட்டேன்னு எனக்கு இப்பத்தான் புரியறது."

  "நான் அதைபத்தி கவலைபடலேண்ணா.. என் மனசு சுத்தமா, திடமா, இருக்கற வரைக்கும் யார் என்ன சொன்னாலும் பொறுத்துப்பேன். அவ என்னதான் சொன்னாலும் நீ மன்னியை அடிச்சது தப்பு. நான் உன்கிட்டே இதை எதிர்பார்க்கலே.. " நிதானமாக ௯றினாள் விநோதா.

     "அது உன்னாலேதான்..." என்றபடி சிவந்து போயிருந்த கன்னத்தை கைகளால் தடவியபடி அழுதுகொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் மைதிலி.

   '' எது மன்னி?''சற்றும் பதட்டமில்லாது விநோதா வினவினாள.

  "எதுவா? பழசையெல்லாம் கனவா மறந்துட்டு ஒரு கல்யாணத்தை பண்ணிக்காமே என் குடும்பத்திலே குட்டையை குழப்புறே பாரு, அதுதான். உன்னைப்போய் உன்அண்ணாவும் தலையிலே தூக்கி வச்சிண்டு கொண்டாடுறார்."

                     '' மைதிலி...''

 "அண்ணா, போதும். உங்க சண்டை சச்சரவெல்லாம்..." என்ற விநோதா மைதிலியின் அருகில் வந்தாள்.

  "மன்னி நீ என்னாலே அண்ணாகிட்டே அடிவாங்கினதுக்கு என்னை மன்னிச்சிடு.. அப்புறம், உனக்கே தெரியும், காலேஜ் லைப்பிலிருந்து நானும் ராஜசேகரும் பழக ஆரம்பிச்சோம்.. அந்த நட்பு நாளடைவில் வலுப்பட்டு திருமணத்தில் வந்து நின்னப்போ.. நான் உன்கிட்டேயும் அண்ணாகிட்டேயும் சம்மதத்திற்காக எவ்வளவு கெஞ்சினேன். அது வரைக்கும் என் விருப்பத்திக்கெல்லாம் வளைந்து கொடுத்த அண்ணாவும் இந்த ஒரு விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் பிகு செய்தான். அதன் விளைவு முடிவு கொஞ்சநாள் கழித்துதான் தெரிந்தது. அந்த முடிவு  எனக்கு சாதகமாக இருக்கவே, அதை ஆவலோடும், சந்தோஷத்தோடும் அவரிடம் சொல்ல விரைந்த போது என்னை அதே மகிழ்ச்சியுடன் சந்திக்க வந்து கொண்டிருந்த அவருக்கு, அந்த விபத்து ஏற்பட்டது. "இந்த பாவியை மணப்பதை விட சாவை சந்திப்பது மேல்" என்று கடவுள்  நினைத்தானோ என்னவோ? அவரை தன்னிடமே அழைத்துக்கொண்டுவிட்டான்.  நான் ஒரு முடிவாடு வந்திருப்பதை அறியாமல் அவர்  முடிவின் எல்லைக்கே சென்று என் வாழ்க்கையையும் முடித்து விட்டார். ஒவ்வொருத்தரை போல இதயத்தில் ஒருவரை சுமந்து கொண்டு  வெளி உலகத்திற்காக ஒருவரின் ''மனைவி" என்ற பட்டத்தில் வாழ எனக்கு தெரியாது, என்னால் முடியவும் முடியாது. இந்த ஜென்மத்தில்  அவர்தான் எனக்கு கணவர். அவரை நினைத்துக்கொண்டே அவருடன் மனதால் வாழ்ந்து கொண்டே, நான் இருக்கிற வரை என் காலத்தை  கழித்து விடுவேன். இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி நான் திருமணமாகமல் கெட்டு போய் கொண்டிருக்கிற ஒரு கன்னிப்பெண், ஆனால்  என்னை பொறுத்தமட்டில் நான் பூவோடும் பொட்டோடும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நித்திய சுமங்கலி". என்னைப்பார்த்து, என் செய்கையை பார்த்து இந்த ஊர் சிரிக்கட்டும், உலகம் சிரிக்கட்டும், நான் அதை பத்தி கவலைப் படலே... ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்காமே, என்னென்னவோ பேசறே பாரு, அதை நினைச்சுதான் நான் ரொம்ப வருத்தப் படறேன் மன்னி..." மிகவும் உணர்ச்சிவசப்பட்டு  பேசிய விநோதா சற்று நிறுத்தினாள்.

 "கண் கலங்க அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரகுநாதன்.

"பழசையெல்லாம் இப்ப ஏன் கிளறுறே? முடிவா இப்ப சொல்லு?  எங்க திருப்திக்காக, கெளரவத்திற்காக, கல்யாணம் பண்ணிப்பியா,  இல்லை,  இன்னும் ஊர் வாய்க்கு அவலாகத்தான் இருக்க போறியா?"  என்று மைதிலி கேட்ட விதம் அவள் இன்னும் இளகவில்லை  என்பதை விநோதாவிற்கு எடுத்துக் காட்டியது.

   '' மன்னி.. நீ, இன்னமும் என்னை புரிஞ்சுக்கலே.. அதை பத்தி நா கவலைபடலே, இன்னொருத்தர் திருப்திகாகவெல்லாம், எம்மனசை மாத்திக்க நான் தயாராயில்லை.. அப்படி உங்க திருப்திதான்  பெருசுன்னா, என் உயிரை தர்றேன். என்னை இன்னொருத்தனுக்கு தரமாட்டேன்,  இதுதான் என்பதில்.''  உறுதியான குரலில் ௬றிவிட்டு தன் அறைக்கு திரும்பிய விநோதா  சட்டென்று நின்றாள்.

   "மன்னி, நான் கேக்கறது தப்புன்னா என்னை மன்னிச்சிடு.  என் நிலைமை உனக்கு வந்திச்சுன்னா..  ஐ...மீன், அண்ணாவுக்கே ஏதாச்சும்  ஒண்ணு ஆயிடிச்சின்னா, நீ இன்னொரு கல்யாணம்  பண்ணிப்பியா? அந்த நிலமையிலே என்னை வச்சி யோசிச்சு பாரு.. நான் இப்படி  ஒரு கேள்வி கேட்டதுக்கு நீதான் காரணம். இருந்தாலும் ஐ.யாம்.. ஸாரி..."

விநோதா அறைக்குள் போய் விட்டாள்.

  திகைப்பிலிருந்து நீங்கிய மைதிலி பதறிய குரலில் பகைமையை மறந்தவளாய், ''கேட்டேளா, உங்க தங்கை பேச்சை, தேகத்திலே, எவ்வளவு கொழுப்பு இருந்திச்சின்னா, சொந்த மன்னின்னு பாக்காமே, இப்படி பேசிட்டு போவா.." என்றாள் படபடப்புடன்.

   "அவ கேட்டது ரொம்ப கரெக்ட்" என்றபடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே அங்கிருந்து அகன்றான் ரகுநாதன்.


            "என்ன விஷயம் அண்ணா? என்னமோ தனியா பேசனும்ன்னு ௬ட்டிண்டு வந்துட்டு இப்போ எதுவுமே பேசாமே எங்கேயோ வெறிச்சிண்டு உட்காரந்திருக்கியே?" விநோதாதான் பேச்சை ஆரம்பித்தாள்.

  "ஸாரி விநோத், அந்த காலத்துக்கே போயிட்டேன். நம்ப அம்மா எவ்வளவு நல்லவ..  நம்ப அப்பா போன பிறகு அம்மா நம்பளையெல்லாம் எவ்வளவு கஷ்டபட்டு  காப்பாத்தினா? கல்மிஷ மில்லாத அந்த உத்தமியை போய் இந்த பாவி என்னவெல்லாம் பேசிட்டா.." குமுறிய குரலில் வருத்தம் தொண்டையடைக்க பேசினான் ரகுநாதன்.

  "நீ இன்னும் அதையெல்லாம் நினைச்சிண்டிருக்கியா அண்ணா? நான் அப்பவே மறந்திட்டேன். மன்னி பேசினதை மட்டுமில்லை,  யார் என்ன பேசினாலும் சரி "டேக் இட் ஈசி" ன்னு எடுத்துக்கனும் அப்பத்தான் இந்த உலகத்திலே நிம்மதியாய் வாழ முடியும்."

 "எல்லாத்தையும் அப்படி எடுத்துக்கலாம் விநோதா, ஆனா நம்மை பெத்த அம்மாவை நம்மகிட்டயே தூஷனையா பேசறபோது என்ன செய்ரோம்ங்கிற நினைவு இல்லாமே போயிடறது.."

  மன்னியை கை நீட்டி அடித்ததற்காகவும் அண்ணா வருத்தப் படுகிறான். என்பதை உணர்ந்து கொண்ட விநோதா அவனை சமாதானபடுத்தும்  குரலில் "விடு அண்ணா... மன்னி ஏதோ தெரியாமல் பேசி விட்டாள்.அவ சமயத்திலே இப்படித்தான்  பேச தெரியாமே பேசிடுவா... நீ அதை நினைச்சி கவலை பட்டுண்டே இருக்காதே" என்றாள் .

  "இல்லை விநோதா, எனக்கு இன்னமும் மனசு தாங்கலே.. உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ப அம்மா இந்த உலகை விட்டு போறதுக்கு  முன்னாடி ஒருநாள் என்னை தனியா கூப்பிட்டு பேச தடுமாறிய அந்த முடியாத நிலையில், '' ரகுநாதா, உன்னை எப்பிடியோ கஷ்டபட்டு படிக்க வச்சுட்டேன். இனிமே ஒரு நல்ல  வேலையை சம்பாதிச்சிண்டு நீ நல்ல நிலைக்கு வர்னும்முனு நா அந்த பகவானை வேண்டிக்கிறேன். உனக்கு நா  அந்த சிரமத்தை மட்டும்  கொடுத்துட்டு போகமே, இன்னும் இரண்டு பிரச்சனை வேறேயும் வச்சிட்டு போறேன். உன் இரண்டு தங்கைகளைதான் சொல்றேன். இனிமே அதுகளை உன் இரண்டு கண்களா நினைச்சிக்கோ, அந்த இரண்டு கண்களையும் என்னைக்கும் இழந்துடாமே வச்சு காப்பாத்துறது  உன்னோட பொறுப்பு எனக்காக நீ இதை செய்வேன்'னு'' நம்பறேன்.'' அப்படின்னு சொல்லிட்டு போனா, அதை எப்ப நினைச்சிண்டாலும்  அம்மாவுக்கு  கொடுத்த வாக்கை நா சரியா நிறைவேத்தலையோன்னு எனக்கு தோணறது விநோத்'' கண்களில் நீர் மல்க ௬றினான் ரகு.

    "நீ சுத்தி வளைச்சு எங்கே வர்னேன்னு எனக்கு புரியறதண்ணா... அம்மா சொன்னபடி பாத்தாலும், நீ ஒரு கண்ணை தானமா கொடுத்துட்டு  நிக்கிறே, அம்மா என்னைக்கும் இழந்துடாமே வச்சுக்க சொன்னதை மறந்துட்டே.." விநோதா புன்னகையுடன் உண்மையை எடுத்து ௬றினாள்.

 "நீ சொல்றது தப்பு விநோதா... அந்த கண்ணோட நன்மைக்காகத்தான் அந்த கண்ணை தானமா கொடுத்தேன். தெய்வமா வாழ்ந்திண்டிருக்கும் நம்ப அம்மாவுக்கு அது நன்னா புரியும்.." சற்று அழுத்தமாக ௬றினான் ரகுநாதன்.

  "அண்ணா, இனிமே இந்த மாதிரி யெல்லாம் பேசாதே, கூடப் பிறந்து இத்தனை வருஷமா என்னோட பழகிட்டும். என்னை நீயும் சரியா, புரிஞ்சிகில்லையே , இந்த கண்ணுக்கு இனிமே எந்த நன்மையும் வேண்டாம் அண்ணா, இந்த கண் எப்பவும் உன்னோட இருக்கதான்  பிரியபடறது. அதை புரிஞ்சுக்காமே பேசாதே, இப்போ நம்ப அம்மா உயிரோட இருந்தாகூட என்னோட முடிவு சரிதான்னு, சொல்லுவா.. அப்படி பிடிவாதமா அந்த கண்ணை நீ இழக்கத்தான் போறேன்னா, அதை ஒரேடியா அழிச்சிடு அண்ணா, தானமா மட்டும் கொடுத்துடாதே,  உணர்ச்சிகளின் பாதிப்பில் பேச முடியாது" திணறினாள் விநோதா.

     "விநோத் ஸாரிம்மா, உன்னை இனிமே எப்பவும் நிர்பந்திக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடும்மா.."

            சிறிது நேரம் இருவருக்குமிடையே ஒரு வருத்தமான மெளனம் நிலவியது. நாம் பேசியது தவறோவென்ற சிந்தனை இருவரையும் வாய் மூடிய மெளனியாக்கியது.

  "விநோத், நம்ப இரண்டு பேர்களோட வாழ்க்கையிலும் இப்போ கொஞ்ச நாளா ஒரு முள் நெருடிண்டே இருக்கு அந்த முள்ளை ஒரேடியா எடுத்தெறிய போறேன் அதை சொல்லத்தான் நா உன்னை இங்கே அழைச்சிண்டு வந்தேன் அதை மறந்திட்டு  ஏதேதோ பேசி உன்னை புண்படுத்திட் டேன்."

       "நீ எண்ணன்னா சொல்றே? புரியாமல் கேட்டாள் விநோதா.

 "மாலினியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... .அவளைப்  பத்தி இனி எனக்கு எந்த கவலையும் இல்லை ஏன்னா, அவாத்திலே அவளை நன்னா  பாத்துக்கிறா... மாப்பிள்ளையும் தங்கம்! இப்போ என்னோட கவலையெல்லாம் உன்னை பத்தி மட்டுந்தான் விநோத்மா, நான் இருக்கிற வரை  உனக்கு ஒரு வருத்தம் வராமல் நீ சந்தோஷமா இருக்கனும் அது மட்டுந்தான் என் வாழ்க்கையின் லட்சியம். உனக்காக என் வாழ்க்கையில் நான் எதை வேணும்னாலும் இழக்க தயாரா இருக்கேன்.  உன் மன்னி வேறே எப்பவும் உன்னை ஏதாவது சொல்லி புண்படுத்திண்டே இருக்கா, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி என்னையும் நச்சரிச்சிண்டே இருக்கா, இவளாளே நம்ம நிம்மதி தினமும் பறி போறது அதனாலே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அவளை அவ பிறந்தாத்ததுக்கு அனுப்பிட்டு நாம ரெண்டு பேரும் நம்ப படிப்புக்கு ஏத்த உத்யோகத்தை தேடிண்டு எங்கேயாவது கண்காணாத ஊருக்கு போய் விடலாம் சாகற வரைக்கும் உனக்கு நான் துணை எனக்கு நீ துணை, முடிஞ்சா உன் மன்னிக்கு விவாக ரத்து கூட தந்துடறேன். அவ வழியிலே அவ வாழ்க்கையை அமைச்சிப்பா, எனக்கு  நீ தான் முக்கியம் விநோத்" கண்களில் கண்ணீர் ததும்ப லேசாக விசும்பினான் ரகு.

   ''அண்ணா...'' எதிலும் நிதானமாக இருப்பவள் பொது இடம் என்று கூட பாராமல் சற்று வாய் விட்டு கத்தி விட்டாள் விநோதா.

  கண்கள் சற்று நேரம் இமைக்க மறந்து அதிர்ச்சியில் சமைந்தன.

  "உனக்கென்ன பைத்தியமா அண்ணா? இன்னைக்கென்னவோ எல்லாமே விசித்திரமா பேசறே?" திகைப்பிலிருந்து விடுபட்டு அவள் இந்த  கேள்வியை கேட்க சில வினாடிகள் ஆயின.

 "நோ விநோத்.. நான் தெளிவாதான் இருக்கேன். அவ அனாவசியமா உன் விருப்பபடி நீ வாழறதுக்கு தடையாவும், என் வாழ்க்கையிலேயும் என்  நிம்மதிக்கு குறுக்கீடாகவும், என்னோட பொறுமைக்கே சோதனையா இருக்கா, அதனாலேதான் இந்த முடிவு" பதட்டமில்லாமல் சொன்னான் ரகுநாதன்.

 "அண்ணா... இதுலே என்னோட பிரச்சனையும் கொஞ்சம் கலந்திருக்கு, ஐ மீன்.. நீ மன்னியை அப்படி விடறதுக்கு நானும் ஒரு காரணமா  இருக்கேன். அதனாலே என்னோட யோசனையையும், நான் சொல்வேன் நீ அதை தட்டாமே ஏத்துக்கனும்."

   "தாராளமாய் விநோத், உன் கருத்தை நான் என்னிக்குமே மறுப்பேனா?அதற்குதானே உன்னைஇங்கே தனியா கூட்டிண்டு வந்து ஆலோசனை கேட்கிறேன்."

  "தேங்க் யூ அண்ணா... நான் இன்னும் ஒரு வாரத்திலே யோசிச்சு ஒரு முடிவை சொல்றேன். அது வரைக்கும் இது விஷயமாய் நீ மன்னி கிட்டே கண்டிப்பா நடக்காமே எப்போதும் போலவே பழகணும் சரியா.... நாம இப்போ பேசினதையெல்லாம் தப்பி தவறி ஒரு வார்த்தை கூட மன்னி கிட்டே சொல்லிடாதே.. மேற்கொண்டு இந்த விஷயத்துலே ஆழமா காலை விடக்௬டாது தெரிஞ்சுதா.. குறிப்பா நான் என்னோட முடிவை  சொல்றவரைக்கும் இதைப் பத்தி மறந்துடனும் சரியா?" கண்டிப்பான குரலில் ௬றினாள் விநோதா.

        "சரி விநோத்.. புறப்படலாமா?" உன் யோசனைப்படியே ஆகட்டும். ." என்றபடி எழுந்தான் ரகுநாதன்.

   "எனக்காக..... என் மனம் வருத்தப்படக்   கூடாது என்பதற்காக...... தனிமரமாக நிற்கும்  என் ஒருத்திக்காக. ...ஒரு குடும்பத்தையே......ஒருகூட்டையே...... கலைக்க தயாராயிருக்கியே அண்ணா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா? அதுக்கு ஒரு எல்லையே இல்லையா.. எனக்காக உன் வாழ்வையே தியாகம் செய்ய துணிஞ்சிட்டியே அண்ணா. .. நீ ரொம்ப... ரொம்ப..... இமயமலை மாதிரி உயர்ந்திட்டே என் சிறிய மனசாலே  உன்னை அண்ணாந்து பாக்க முடியலேண்ணா , உன்னை புரிஞ்சிககாமே எத்தனையோ நாள் தாழ்வா நினைச்சதுக்கு விஷ்வரூபம் எடுத்தது மாதிரி  உயரே.... உயரே .... போயிட்டேயேண்ணா, சில சமயம் உன்னை பத்தி தவறா நினைச்சி மனசுகுள்ளே சில நிமிஷங்கள் வெறுத்தற்கு எனக்கு பெரிய  தண்டனையா கொடுத்துட்டேயேண்ணா, என்னை மன்னிச்சுடு அண்ணா.. .மன்னிச்சுடு.! இந்த பிறவியில் உன் தங்கையாய் பிறந்த பாக்கியத்தை அடைந்த  நான், இனி  எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு தங்கையாகவே பிறக்கணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேண்ணா.." அவனை மனதுக்குள்  நினைத்து  ஜபித்துக் கொண்டே புலம்பியபடி கண்களில் நீர்மலக அவனைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள் விநோதா.

தன் கையிலிருந்த சூட்கேசை கீழே வைத்து விட்டு தன்னையும் தன்மனைவியையும் ஒருங்கே நிற்க வைத்து  காலில் விழுந்து நமஸ்கரித்த விநோதாவை பார்த்து திகைத்தான் ரகுநாதன்.

   "என்ன விநோதா இதெல்லாம்??"

  "என்னை ஆசிர்வதித்து விடை கொடு அண்ணா..."

  "விநோதா..." என்று அலறியபடி காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன், அவளை உற்று பார்த்தவாறு "விநோத்ம்மா உனக்கு என்ன ஆச்சு?" என்றான் பதறிய குரலில்.

  "எனக்கு ஒன்றுமில்லையண்ணா, நீ என் மேலே வச்சிருக்கிற பாசத்தை தியாகமா மாத்துறத்துக்கு முன்னாடி நான் உன் கிட்டேயிருந்து விலகிட தீர்மானிச்சிட்டேன் அண்ணா அதுக்காக என்னை மன்னிச்சுடு,  என் ஆபீஸீலே என்னை டெல்லிக்கு மாத்தியிருக்காங்க அண்ணா.. . இன்னும் ஒருவாரத்திலே வேலையிலே ஐாயின் பண்ணனும். அதுக்கு நான் இன்னைக்கு கிளம்பினாதான் சரியாயிருக்கும்.."

  "விநோதா என்கிட்டே நீ இதுவரைக்கும் சொல்லவேயில்லையே...? சற்று கோபத்துடன் கேட்டான் ரகுநாதன்.

  "அன்னைக்கு உங்கிட்டே அதை சொல்லனுந்தான் நினைச்சிட்டிருந்தேன்  ஆனா நீ வேற ''விஷயத்துக்கு'' போயிட்டதாலே சொல்ல வாய்ப்பு இல்லாமே போயிடுத்து... நானும் அதை மனசுலே வச்சுகிட்டுத்தான்  இன்னும் ஒரு வாரத்திலே  என் முடிவை சொல்றதா  சொன்னேன் அண்ணா,  நான் இந்தாத்திலே இருந்து போயிடறதுனாலே, நீ கற்பனை பண்ணின  அந்த ''விஷயத்துக்கு'' ஒரு காரணமும் போயிடுத்துன்னு வச்சிக்கோ.... இனிமே நீ அந்த ''விஷயத்தை'' கனவிலே கூட நினைக்க மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணி கெடுக்கும்... அதுதான் எனக்கு நீ பண்ற உதவியாகவும் இருக்கும்... நம்ப அம்மாவின் ஆத்மாவும் நல்லபடியா சாந்தி அடையும்..." நிதானமாக  கூறி நிறுத்தினாள் விநோதா.

  '' விநோதா...''  வார்த்தைகள் வராமல் நின்றான் ரகுநாதன்.

     புரியாத புதிர் ஒன்றை கண்டு விட்டவள் போல் இருவரையும் மாறி, மாறி வெறித்து கொண்டு நின்றாள் மைதிலி.

       "மன்னி , ஒரு தாய்க்கும் மேலா என்னை இது வரைக்கும் கவனிச்சிண்டே,... அதுக்கு நான் உனக்கு ரொம்ப கடமைபட்டிருக்கேன். நான் டெல்லியிலிருந்தாலும் சரி, வேறே எங்கேயிருந்தாலும் சரி,  உன்னை மறக்கவே மாட்டேன் மறக்கவும் முடியாது. அண்ணா,  ஒரு அசட்டு காரியம் பண்ண இருந்தான் அதுக்கு மூலகாரணம் நான்தான்.... நல்லவேளை.. !
நான் அதிலிருந்து தப்பிச்சிட்டேன். ஆனா நான் அதுக்காகத்தான் பயந்துண்டு ஓடறதா நினைச்சிக்காதே. ! அண்ணா நினைச்ச காரியம் தெய்வத்துக்கு கூட பொறுக்கலே, அதான் " சந்தர்பங்கிற" பெயரிலே வந்து மூலக் காரணமாயிருந்த என்னை தள்ளிண்டு போறது..... அதுக்காக நான் அந்த தெய்வத்துக்கு நன்றி சொலறேன்.   அங்கேயிருக்கிற என்மேலே நீ சந்தேகப்படாதே!. நான் என் அண்ணாவுக்கு தங்கை. .. அவன் மேலே உனக்கு நம்பிக்கையிருந்தா என்னையும் நம்பு. அவ்வளவுதான் சொல்வேன்..  நீ எத்தனையோ தடவை என்னை என்னென்வோ சொல்லியிருந்தாலும், எனக்கு உன் மேலேயிருக்கிற அன்பும் மதிப்பும் குறையவே குறையாது. நான் போயிட்டு வர்றேன்  அங்கே போன பிறகு நான் தங்கியிருக்கும் விலாசம் தெரியபடுத்துறேன் அடிக்கடி கடிதம் எழுது, உன் உடம்பை பாத்துக்கோ..." என்ற விநோதா மீண்டும் ஒருமுறை அவள் காலில் விழுந்து  நமஸ்கரித்தாள்..

         "அண்ணா,  நான் உன்னோடேயே எப்பவும் இருக்கனும்னு ஆசைபட்டேன். நான் உன்னை விட்டு போறதுக்கு நீதான் காரணம்.  ஆமாம், அண்ணா  நீ மட்டும் அன்னைக்கு அந்த ''விஷயத்தை'' ஆரம்பிக்கலேன்னா, என்னை எங்காபீஸிலே டெல்லிக்கு மாத்தியிருக்கிறதை  உன்கிட்டே சொல்லிட்டு, மறு நாளே என்அண்ணாவை விட்டு என்னாலே பிரிந்திருக்கமுடியாது, அதனாலே, இந்த வேலையை விடறேன்னு சொல்லிடவான்னு உங்கிட்டே கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா உன்கிட்டே பேசின பிறகு.....என் எண்ணத்தை மாத்திண்டேன்."

   "விநோதா, என்னை மன்னிச்சிடும்மா தயவு செய்து உன் பிரயாணத்தை நிறுத்து. நான் இனிமே எந்த வித பிரச்சனையும் உனக்கு கொடுக்க  மாட்டேன்மா, பிராமிஸா.. , என்னுடைய அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைச்சிடுறேன். என்னை நம்பும்மா, நீ என்னை விட்டுட்டு  எங்கேயும் போயிடாதே,..." குரல் உடைய உருக்கமாக கூறினான் ரகுநாதன்.

  "நோ அண்ணா.. அது இனிமே முடியாத காரியம்  நான் வேலையை ஒத்துண்டாச்சு, இரண்டாவது நான் இங்கேயிருந்தா உன் மனசுலே அந்த மாதிரி எண்ணங்கள் தலைதூக்கிண்டேதான் இருக்கும்  இந்த தனிப்பறவைக்காக, நீ ஒருகூட்டிலிருந்து பிரிஞ்சு வர முயற்சிக்காதே  அண்ணா, இது ஒரு சிறகொடிஞ்ச  கட்டுபாட்டுக்குள்ளே அடங்கிய, ஓருசுதந்திர பறவை. ஆனா நீ.......... நீ.......... அப்படியில்லை..." மேற்கொண்டு  பேசமுடியாமல் தடுமாறிய விநோதா,  சற்று நிறுத்தி  சுதாரித்துக் கொணடு ரகுநாதனின் அருகில் சென்று அவன் கைகளை  பற்றியபடி  "அண்ணா, எனக்கு ரயிலுக்கு நேரமாயிடுத்து. நான் போயிட்டு வர்றேன். நான்அடுத்த தடவை சந்திக்கும்போது உன் மனசுலே உதயமான  அந்த விஷ மரம் வேரோடு சாய்ஞ்சு நீ பழைய அண்ணாவா, அந்த ராமர் மாதிரி... பழைய ரகுநாதனா, காட்சி தரணும்.." என்ற விநோதா பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு பறப்பட்டாள்.

      ''விநோதா..''  அவளை பிரிய மனமில்லாமல் தவித்தான் ரகுநாதன்.

  "அண்ணா, மன்னி... ரவி எழுந்தா என்னை தேடுவான். அதான் அவன் தூங்கறச்சேயே கிளம்புறேன். அவனை பத்திரமா பாத்துக்கோங்க. 'கூடிய சீக்கிரம் அத்தை வந்துடுவாள்னு சொல்லுங்கோ'" என்று ரவியின் பிரிவை நினைத்து சற்று கண் கலங்கியவள்... கண்களை துடைத்தபடி அண்ணா, மன்னி, "நான் இதுவரை ஏதாவது தப்பா நடந்திண்டிருந்தாலும், உங்கள் மனம் புண்படும்படி தப்பா பேசியிருந்தாலும் ரவிக்கு மூத்த குழந்தையா  நினைச்சி என்னை மன்னிச்சிடுங்கோ, நான் போயிட்டு வர்றேன்.."

விநோதா கண்களிலிருந்து மறைந்து விட்டாள்.

      பாதி புரிந்தும், பாதி புரியாத பாவத்திலும், பேச சக்தியற்று மலைத்துப் போய் நின்றிருந்தாள் மைதிலி.

   "அம்மா, உன்னோட  சொல்லை நான் காப்பாத்தலேம்மா, நான் உனக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றலேம்மா, நீ எனக்கு கொடுத்த, என்னை பத்திரமா பாத்துக்கச்சொல்லி கொடுத்த.. இரண்டு கண்களிலே ஒண்ணை தானமா கொடுத்துட்டேன் இன்னொன்னு தானவே போயிடுச்சுமா, ஆகக்கூடி  நான் இப்போ இரண்டு கண்களையும இழந்த குருடனாய் தவிக்கிறேனம்மா.." தனக்குள் முணுமுணுத்தபடி  கண்களில் நீர் வடிய நாற்காலியில் சாய்ந்தான் ரகுநாதன்.