Showing posts with label நிதர்சனம். Show all posts
Showing posts with label நிதர்சனம். Show all posts

Monday, April 6, 2015

நிதர்சனங்கள்....


பட்டப் பகலென்ற அந்த ஒரு பெரும் பொழுதில்,
பலரும் பார்த்திருக்க, பல வண்ணங்கள் கலந்த
பளிங்கைப் போன்ற என்னைக் கண்ட பரவசத்தில்,
பார்வையை திருப்பி என்மேல் பதிய வைத்தாய்…..

பதிலேதும் சொல்லாத உன் முகபாவங்கள்
படுவேகமாய் வந்து என்னையும் பதம் பார்க்க.
பரிதவிக்கும் விழிகளுடன், பாசமான வாழ்வைத்தேடி
பகலிரவு பாராமல் உனக்காக காத்திருந்தேன்

சுற்றம் சூழ வந்திருந்த பிறிதொருநாளிலும்,
சுற்றி இருப்பவர்களை பற்றி சற்றும் உணராது,
என்னை உனதாக்கிக்கொள்ள, நீ பிரயத்தனித்தது கண்டு,
என்னுள்ளும் எழுந்தது மகிழ்ச்சியெனும் ஆரவாரப்புயல்

இன்று உன் கைத்தலம் பற்றி விட்டேன். சுருங்க௬றின்,
இனிதான உன் பாதத்தில் சரணடைந்து விட்டேன்.
நாட்கள் நகர்ந்ததில், “உனக்காக நான் மட்டுந்தான் எனும்,
நாட்கள் என்னை சிலிர்க்க வைத்துப் போயின..

உறவின் சந்திப்பிலும், நண்பர்களின் உரையாடலிலும்,
உலகத்தையே நீ மறந்தாலும், உன் உயிரோடு உறவாக,
என்னையும் மதித்தது, என்செய்கைகளை பெரிமிதபடுத்தியது,
என்னை, மீண்டும் இதே பிறவியுடனே உனையடைய வேண்டவைத்தது.

நீயும் நானும் எங்கு சென்றாலும், நீங்காது இணைந்திருந்தோம்.
நீண்ட காலங்கள் இதுபோல் பயணித்திருக்க வேண்டுமென,
நான் வேண்டாத தெய்வமில்லை! போகாத கோவிலில்லை!! அப்படியும்,
நம்மையும் பிரித்திட விதி செய்த சதியினிலே வீழ்ந்தேன் ஓர்நாள்

காலங்களின் ஓட்டத்தில், நீ என்னை சிறிது கண்டும், சிலநேரம்
காணாதும் போனதில், கவலைகள் கவலையின்றி என் மனம்புகுந்து,
கரம் பற்றி ஆறுதல் எனும் பெயரோடு என் ஆற்றாமைத் தீயை
கனலாக மாற்றி தகிக்க வைத்து விட்டுப் போனது

வாடிய முகமுடன் உன் வரவை எதிர்நோக்கி வாசலில் தவமிருந்தேன்
வந்ததும் உன்முகத்தில் அன்றைய மந்தகாசம் சுடருடன் பிரகாசிக்க,
விடியலில் உன்னுடன் இன்பபயணமென்று இரவை அசதிக்கு தந்து
விழிமூட, விடிந்ததும் விபரங்களை புரிய வைத்து தனியாக்கினாய்….

உற்சாகமாய் புதிதாக பிறந்த மகிழ்வுடன் புறப்பட்டு சென்ற உன்
உதாசீனங்கள் என் இனத்திற்கு என்றும் புதிதில்லையே.? இவையல்ல,  
மற்றவைக்கும் நாளை இக்கதியே.! என்ற தத்துவம் தோன்றி தேறிய
மனதினிலே சமாதானம் ஒருநொடியில் பிறந்தெழுந்து மறைந்தது..

அடுத்த நாள் என் இருப்பிடம் நீ ௬றாமலே எதுவென்றும் புரிந்தது.
அந்த நொடியில் என் வேதனை யாரறிவார் இப்புவியில்! எனினும்,
"காலுக்கு உதவாததை கழற்றி எறி," என்பது எங்களுக்கே வடித்த மொழி!
காலங்காலமாய் நாங்களறிந்த "பழமொழி!" பளபளக்கும் உடையுடனே
நாங்கள் உன் கைதவழ்ந்து புதிதாக வந்தாலும், வாழ்வெல்லாம் உன்
நிழல் பெற இயலாது.! ௬டிக்குலாவி நித்தமும் உன் காலுக்கு  
வேலியாய் நிரந்தரமாக முடியாது.! ஏனெனில் நான்.(ஏன் நீயும் ஓர்நாள்
வெறும் காதறுந்த பயனற்ற பழைய செருப்புதானே.!!


Thanks to Google
Thanks to Google