Showing posts with label ஆவி. Show all posts
Showing posts with label ஆவி. Show all posts

Monday, August 13, 2018

நோய் விரட்டி....

அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியது. மழை ஒரு நிலையில்லாது  ஈரக் காற்றின் உதவியோடு, நசநசத்து பெய்து.. குளிருக்கு துணையாக  "நான் இருக்கிறேன் உனக்கு" என்றபடி தோளில் கை போட்டு நட்புணர்ச்சியோடு புன்னகைத்துக் கொண்டிருந்தது.

சாலையில் அவ்வப்போது ஓடிக் கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் அனைத்தும், கூடி பேசிக்கொண்டவை போல், ஒன்றன் பின் ஒன்றாக  தன் சத்தத்தை நிறுத்த ஆரம்பித்து வெற்றி கண்டு விட்டது. ஐப்பசியின் முன்னிரவு  நேரம் பின்னிரவு நேரத்தை சற்று தொடர்ந்து களைப் பேதுமின்றி பயணித்து களிப்புடன் நெருங்கும் பொழுதும் ஆரம்பித்தாகி விட்டது... எங்கோ ஒரு மரத்தில் ஆந்தை அலறும் சப்தம் விட்டு விட்டு கேட்டதும் நின்று போக,  சாலையோரத்து சின்ன சின்ன மரம் செடிகளின் மறைவில்  சுவர் கோழிகள்  ஓயாது போட்ட  கிர்...கிறீச்..கிர்.. கிறீச்.. என்ற சப்தமும் நிசப்தத்தின் வருகை கண்டு அதிர்ந்து போனதில், அரண்டு போய் நின்றிருந்தன.

மெளனம் தான் அழகாய் இருப்பதை கொஞ்சம் கர்வத்தோடு தனக்குத்தானே புகழ்ந்து  கொள்வது கண்ட சிலீரென்ற காற்று, ஒரளவு உயரமான மர இலைகளின் ஊடே மோதி சற்றே சலசலப்பை உண்டாக்கி, மெளனத்தின் கர்வங்கொண்ட  மனதின் பொறுமையை சோதித்து சந்தோஸமடைந்தன.

இந்த கால கட்டத்தில்தான். மனித சஞ்சாரம் இல்லாத  இந்த நேரத்தில்தான், இவைகளின் நடமாட்டம் தீவிரமாகப் இருக்கும்.... இருளில் விழிகள் எட்டி துழாவும் போது, விழி தட்டி கண்ணிணுடேயே படர்ந்து பரவிப் போகும்.  வர்ணனைகளை கேட்டதோடு சரி.. ஒரு தடவையும், பார்த்ததோ  பிடித்ததோ இல்லை... ஆயிற்று.. இன்று இதை சந்திக்கத்தானே இந்த நேரம்  பார்த்து காத்திருந்து வந்தாகி விட்டது.

அத்தனை நிகழ்விலும்  சரக்.. சரக்....கென  பாதச்சேர்ந்த செருப்பின் ஓசை சிறிது  கண்ணயர்ந்த இருளையே  திடும்மென விழித்துக் கொள்ள வைத்தது.  மிரளும் இருட்டும் கலையாதிருக்க வேண்டும். கலைந்து போகாத இந்த இருளுக்குள், "அதை"  எப்படி அடையாளம் காண்பது? வெள்ளை உருவில், புகை மாதிரி கண்ணுக்கு தெரிந்து "பிடிக்க" ப் போகும் போது கைக்கு அகப்படுமா? இல்லை கைத் தட்டி பறந்து மறைந்து விடுமா?

இல்லை, சாதரண உருவில் நடந்து வந்து, "என்னை உனக்குப் பிடிக்கிறதா? நான் முன்னால் போனால் ஓடி வந்து பிடிக்கிறாயா?  இல்லை.. உன்னை ஓட விட்டு நீ களைப்படையும் போது  சத்தமின்றி நான் வந்து நிற்கும் போது  பிடிக்கிறாயா? எப்படி வசதி" என்று கேட்குமா?

அதுவுமில்லாது,  தலை விரித்துப் போட்டபடி, பற்பசை கொண்டு  பல் துலக்கும் கோலத்தில், இரண்டு நீண்ட பல்லை மட்டும் வாயோரங்களில் காட்டி,  பயங்கர சிரிப்பொன்றை உதிர்த்து, மற்ற பற்களை சிரித்த பின் காட்டியபடி ,வக்ரமான  முகத்துடன்  மெதுவாக  காற்றில் வேண்டுமென்றே மறையுமா ? இதை முன் பின் பார்த்திருந்தாலாவது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.  ஐயோ... எப்படி இருக்குமென்று தெரியவில்லையே...

குறிப்பாக இவற்றை எந்த பாலில், ஆண், பெண் என்ற எந்த பாலில் அடையாளம் கண்டு பிடித்துக் கொண்டு பிடிப்பது?  எது பிடிக்க இலகுவாக வசப்படுமென அறிந்து கொள்ளாமல் இந்த நடு நிசியில் வந்து இப்படி  தடுமாற வேண்டுமா?  உள்ளெழுந்த  நினைவுகள் படபடவென திட்டி தீர்ப்பதற்குள் ,  இருளில் ஏதோ ஒரு பறவை வழி தடம் மாறி வந்து "கீறீச்" சென அலறி முகத்தில் "பட்"டெனஅறைந்தபடி பறந்து சென்றது. மனசு முழுக்க திகில் வெள்ளம் திடிரென பிரவாகமாய்  பாய்ந்து வந்து நின்று ஒரு உலுக்கு உலுக்கியது. . . சிறிது முடியாமல் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இருட்டு மையை விழி நிறைய வேண்டிய மட்டும் அப்பிக்கொண்டு,  இரு கை கொண்டு வழித்தெடுத்த ஒரு இடைவெளியில், விழி கூர்ந்த போது, வெள்ளை உருவொன்று கையசைத்து "வா" "வா" என்றபடி நகர்வது மங்கலாக புலப்பட்டது. "யார் நீ" என்ற வினாவுக்கு, சற்றும் பயமேதும் கொள்ளாமல், அருகில் வந்து பற்கள் இல்லா வாயை  "ஆ" வென "வி" ரித்துக் காட்ட "ஓ நீதானா அது" என்றபடி கை நீட்டி பிடிக்க உத்தேசிக்கும் போது, பளாரென்ற ஓர் அறை கன்னத்தில்  விழுந்தது.

இதை எப்படி பிடிப்பது .... 

ஒரே குழப்பமாக இருந்தாலும். உடலின் வலியோடு, தலை கழன்று போகும்படியான வலியும், கண்கள் இரண்டும், இரு அருவிகளாக மாறாத பாறாங்கற்களாக, சிக்கித் திணற, கற்களுக்கிடையே  ஊறும் நீரை உள்ளடக்கி, விடும் மூச்சை,  வாய் வழி மூச்சாக்கி, மூக்கின் வழி சுவாசத்தை, கடந்த இருபது நாட்கள் வரை மரணத்தின் வசமும் தராமல், தானும் பெருக்கெடுத்து ஓடி  நாசியின் நலனை சரி வர பாதுகாக்கா மலும், பெரும் சோதனைக்குள்ளாக்கி, இரவின் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தை கை பிடித்து நரகத்தின் வாசலுக்கே கொண்டு விடும் இந்த நீர் தே(தோ)சத்திற் காக இதை பிடிக்கத்தான் வேண்டும் போலும்.

சற்று நகர்ந்து மரமொன்றின் இடை வெளியில், அதன் அசைவு மறுபடி தெரிய பிடிக்க விரையும் போது, ஒரு பெரிய கல் தடுக்கி சட்டென மண்ணை கவ்வி விழுந்ததில். படபடக்கும் இதயம் சுய நினைவை திருப்பி இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து கண்களை மலரச் செய்தது....

வேறு ஒன்றுமில்லை... "மாத்திரை போட்டால், ஒரு வாரம்... போடாவிட்டால் ஏழு நாட்கள்" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய நோயாகிய  ஜலதோஷம்,  இந்த தடவை  வந்த தென் மேற்கு மழை தீவிரத்தைப் போல் கடந்த இருபது நாட்களாக கடைசி பாராவில் சொல்லியதை போல் சற்று வெறி  பிடித்தால் போல் தாக்க உறவுகள் "ஆவி"யையும் கூடவே பிடித்தால் உங்களுக்கு கொஞ்சம் சரியாக வாய்ப்புள்ளது என்று வலியுறுத்தி  கூற, நானும் ஒவ்வொரு நாளும் படுக்க போகும் முன், என் "ஆவி" யை தொலைந்து விடும் அவஸ்த்தையை பட்டாலும்,  சரி!  நாளை "பிடித்து" பார்க்கலாம், என தள்ளிப் போட்டு கொண்டே வந்தேன். "ஆவி"பிடித்தல் என்ற வார்த்தை என்னுள் "நமக்கும் பேய் கதைகள் எழுதும் ஆற்றலை உண்டாக்கி கொள்ளலாமே " என எண்ணியதில்,  இரவு வராத  நித்திரையில் சிறிது கற்பனையை தோற்றுவித்தது. அதன் விளைவே இந்த பதிவு.

அனைவரும்,
என்னுடன், 
வந்து
அறு(ஆ.வி)வையை, 
ப(பி)டித்ததற்கு, 
நன்றிகள்.
   
              ==================😀===================