Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Wednesday, June 13, 2018

நினைவுகள்....


         கூட்டுக் குடும்பங்கள் சிறந்ததெனினும், தற்போதைய சூழ் நிலைகளில் நம்மால் அதை கடைப்பிடிக்க இயலவில்லை. காரணம் ஒவ்வொருவரின்  வேலைகள், கனவுகள்,  கற்பனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், அவசியங்கள் போன்றவை விரிந்து பரந்து  உலகளவு வியாபித்து விட்டது. நெருங்கிய உறவுகளே எப்போதோ சந்தித்து கை குலுக்கி கொள்கிறோம். அவசியமானதை கைபேசியில் பேசி,  கணினி திரையில் மனசுக்கு தோன்றும் போது பார்த்துப் பேசி உறவுகளை தொடர்பில் வைத்துள்ளோம்.  அதுவும் என்று நம் நினைவிலிருந்து கழன்று கொள்ளுமோ தெரியவில்லை. 

இதை எழுதும் போது என் பெற்றோர் (1973ல் இருக்குமென நினைக்கிறேன்.)  மதுரையில் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது, திருமணத்தில் சந்தித்த மற்றொரு உறவுகாரர்கள் அவர்கள் வீட்டுக்கு அழைத்ததின் பேரில் அங்கு செல்ல சம்மதித்து அவர்கள் வீட்டுக்கு சென்றார்களாம். 

அது மிகப் பெரியவீடு  வீட்டில் நான்கைந்து அண்ணன், தம்பிகள். அவர்களின் மனைவிகள் ஆளாளுக்கு மூன்று நான்கு குழந்தைகள், மனைவிகளின் சொந்தங்கள். கணவர்களின் உறவுகள் என வீடே ஒரு கல்யாண மண்டபமாய் கலகலத்துப் கொண்டிருந்ததாம்.... அண்ணன் தம்பி குழந்தைகள் ஜாடையில் ஒருவரை ஒருவர் ஒத்துப் போனதில்,  எத்தனை அறிமுகப்படுத்தியும், அவர்களை புரிந்து கொள்ள சற்று  கடினமாக இருந்ததாம். 

அவர்கள் என் அப்பா வழி உறவு என்றாலும், என் பெற்றோருக்கு அனைவரும் அவ்வளவாக  அறிமுகமில்லை. என் அப்பாவுக்கு அவர்களின் பெற்றோர் ஒன்று விட்ட வழி உறவுகள்.. அவர்கள வறுப்புறுத்தி அழைத்ததினால் இரவு தங்கி விட்டு மதியம் திரும்பி விட்டனர். மதிய சாப்பாடு பந்தி போல அனைவரும் அமர்ந்து சாப்பிட்டார்களாம்.  பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருந்தது என வந்த பின் அவர்களின் உறவின் பெருமையை சொல்லி, சொல்லி என் அப்பா அதிசயித்து கொண்டே இருந்தார்.

கிட்டதட்ட 30,  35 பேருக்கு தினமும் சமையல் செய்து பறிமாறி, வீடு வாசல் சுத்தம் செய்து,  ஒவ்வொருவரும் அத்தனைப் பொழுதும்  அந்த குடும்பத்துக்காகவே கழித்து, நாட் கிழமை என்று பண்டிகை காலங்களையும் வரவேற்று,  இதில் எந்த  விதமான மனஸ்தாபத்துக்கும் இடம் தராமல் புன்னகைத்து மன மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொண்டு, "எப்படித்தான் இவர்கள்" என நாங்கள் அந்த உறவின் பெருமையை  நினைத்து வியந்து போனது இன்னமும் என் நெஞ்சில்  பசுமரத்தாணி போல உள்ளது.

இன்று கணவன் மனைவி அவர்களின் குழந்தைகள், அதற்கு மேல் ஒரு உறவு என்றாலே அந்த வீட்டை ஒரு அதிசய பொருளாக பார்க்கிறார்கள்.  காலம் மாறி விட்டது.  நான் முதலில் சொன்ன காரணங்கள் கூட்டுக்குடும்ப வேர்களை தாக்கி  அந்த மரங்களை செல்லரிக்க செய்து  வீழ்த்தி விட்டன.

அந்த பெருங்குடும்பத்தை நானும் பார்க்க வேண்டுமென அம்மாவிடம் எத்தனையோ முறை அவர்களைப்பற்றி பேச்சு வரும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை.. வாழ்க்கைப் படகு திசைகள் மாறி பயணித்துதானே போகும். நினைவுகள் மட்டும் வருத்தமான சுமைகள், மகிழ்வான சுமைகள்  என சுமைகளை சுமந்து கொண்டு படகுடனே பயணிக்கும். 

(வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.)

அன்று  நடக்காத ஒன்றை,  தெரியாத முகங்கள் ஏற்படுத்திய  உற்சாக உறவுக் கூட்ட மகிமையை, அப்படி சேர்ந்து பேசி, கூடி மகிழ்ந்திருக்கும்  உறவின் பெருமையை அறிய வைக்க  இன்று "எங்கள் ப்ளாக்" மூலமாக உணரும்படி ஒரு சந்தர்ப்பம்  அமைத்து கொடுத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

ஒரு குடும்பமாக தினமும் அவரவர்கள் சந்தோசங்கள், வருத்தங்கள் ஆற்றாமைகள் ஆக்கங்கள் என பகிர்ந்து கொள்ளும்  எ. பி உறவின் கூட்டங்களுக்கு நடுவே நானும் தினமும் பேசி உலாவி வருவது அன்றைய "நினைவுகளை" புரட்டிப்பார்த்துச் சென்றது.  இங்கும் ஒரு சிலரை தவிர அனைவரும் அறியாத தெரியாத முகங்கள்தான். (என்னையும் சேர்த்து)  ஆயினும் உடல் நலம் சரியில்லாத போது அன்புடன் விசாரிப்பதிலிருந்து, அனைவரது உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு உறவு குடும்பமிது.

என் வலைத்தளம் ஆரம்பித்து எனக்கு தெரிந்த மாதிரி பதிவுகள் எழுதி அதற்கு கருத்துக்கள் வரும் போது, அதற்கு  பதிலளித்து  எனக்கு புன்னகைக்க ம‌ட்டுமே தெரியும். ஆனால் நான் புன்னகைப்பது யாருக்குத் தெரியும்? ( மோனலிஸாவின் புன்னகை என்றால் "இதுதான்" என்று அனைவரும்  உணர்ந்தது. ஆனால் அது விலை மதிப்பற்றது.. )  இங்கு வந்து குடும்பத்தில் எ. பி குடும்பத்தில் ஒருவர் என்று ஆன பின்தான் புன்னகையிலிருந்து சற்று முன்னேறி வாய் விட்டு  சிரிக்க கற்றுக் கொண்டேன்.   ஹா. ஹா. ஹா.ஹா மிகவும் நன்றி "எங்கள் ப்ளாக்" சகோதர சகோதரிகளே அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சமர்பிக்கிறேன். 


அனைவரைப் பற்றியும் வலைத்தள உறவுகள் பற்றியும் என் குடும்பத்திலுள்ளவர்களிடமும்  கூறியுள்ளேன். நல்லவர்களை பற்றி சிறப்பாக கூறுவது இயல்புதானே. என் வலைத்தள எழுத்துகளுக்கு உதவியாய் இருக்கும் என் குழந்தைகளிடமும் கூறியுள்ளேன். ஒருவேளை மரணம் வந்து என் எழுத்துகளையும், என்னையும் பிரித்தால் அதையும் பகிர்ந்து அனைவருக்கும் தெரிவித்து விடும்படியும் சொல்லியிருக்கிறேன்.  எதுவும் அவன் செயல் அல்லவா.. நம் கையில் என்ன உள்ளது....

படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

Tuesday, April 28, 2015

அந்த நால்வரின் மனம்... ( இறுதிப்பகுதி 11)


முந்தைய பகுதியின் முடிவு

முதல்ல அவங்க தன் சம்மதத்தை சொல்லட்டும்…! அவங்க சம்மதிச்சா, நான் என் வெளி நாட்டு வேலையை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா விருப்பப்படி இங்கேயே ஒரு வேலை தேடிக்கவும் சம்மதிக்கிறேன்..! என்று தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்திய நண்பனை அளவு மீறிய சந்தோஷத்தில் ஆரத் தழுவிக்கொண்டான் பிரபாகர்.

இன்றைய தொடர்ச்சி..

கடற்கரை..! என்ன பிரபா..? இன்னமும் அவங்களை காணோமே..!என்றான் தவிப்பான குரலில் கார்த்திக்…!

இரு..! கொஞ்ச நேரம் பார்க்கலாம்…! அவங்க நானறிந்து சொன்ன வாக்கு தவறியது இல்லை. வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் ஃபோன் செய்து விசாரிக்கலாம்..!

நீ சொன்னாயே என்றுதான் நான் இங்கு வர ஒத்துக்கொண்டேன்..! இல்லையென்றால், இந்த காத்திருப்பும், தவிப்பும் நாம் இப்படி தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை..!என்று சலிப்பான குரலில் அலுத்துக்கொண்டான் கார்த்திக்..!

சற்று மனத்தாங்கலுடன் நேரம் நகர்ந்தது. சற்றுப்பொழுது கடலை வெறித்தபடி எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாயிருந்தனர்.

வானவெளி மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக ஒரே அடைச்சலாக காட்சி தந்தது..! அந்தி வெளிச்சத்தில், ஆங்காங்கே பளிச்சிடும் நட்சத்திரங்கள் ஒன்று ௬ட கண்ணுக்கு புலப்படாமல் போய், “எங்கே எங்களில் ஒருவரையாவது எப்படியாவது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!என்று சவால் விடுவது போல மறைந்துப் போயிருந்தன..! மழை வருவதற்கான அறிகுறிகளை விரைந்து சென்று சொல்லுங்கள்.என்று உறுமியவாறு கட்டளையிட்ட மேகங்களின் அதிரடி கட்டளைக்கு பயந்து அவ்வப்போது லேசான கொடி மின்னலும், பெருங்காற்றும்,    நீ சென்று சொல்கிறாயா? இல்லை நான்தான் செல்ல வேண்டுமா?” என்று சிறு சிறு பிணக்குகள் இட்டுக் கொண்ட போதும், “இந்த முறை நீதான் செல்ல வேண்டும்என்று சிம்மமாய் வந்து கர்ஜித்த மேகக் குரலுக்கு வேறு வழியின்றி பணிந்து எந்நேரமும் மழை வரலாம்.என காற்று வந்து தன் வேகத்தை சற்றுக் ௬ட்டி எச்சரித்து விட்டு போனபடியிருந்தது..! கடலலைகள் பெரும் சத்தத்துடன் நுரைகளை உமிழ்ந்தபடி சோம்பல் ஏதுமின்றி கரைக்கு வந்து போய்க் கொண்டிருந்தன..! கடமை உணர்வுடன் கரைக்கு வந்து ஆர்பரித்து போனாலும், நட்சத்திரங்களின் கண் சிமிட்டலுடன், அவைகளின்  பேச்சுக்கள் ஏதுமில்லா மெளனமாக இருண்டு கொண்டிருந்த இருட்டைக்கண்டு, அலைகளின் மனவருத்தம் கோபமாக மாறத் துவங்கியது. அதனுடன் பேசுவதற்கு தோதாக யாருமில்லை என்ற கோபம், அதன் பொங்கி வந்த சீற்றத்தில் மிகவும் வெளிப்படையாக தெரிந்தது..! இரவின் இருட்டு, “நான் இன்னும் சற்று கருமையாகி விடட்டுமா..?” என்று இரவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது..! இயற்கையின் இந்த சலசலப்பைக் கண்டு மனிதர்கள் ௬ட்டங்௬ட்டமாக எழுந்து கலைந்து சென்ற வண்ணம் இருந்தனர்..!

இனி காத்திருப்பதில் பலனில்லை, என பிரபாவும், கார்த்திக்கும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.

நான்தான் அப்பவே சொன்னேன், அவங்களுக்கு இதில் இஸ்டமில்லை என்று..! நீதான் தேவையில்லாமல் அவங்களை வைத்துக்கொண்டே பேச்சை ஆரம்பித்து, இங்க வந்து உறுதியான அவங்க முடிவை தெரியப்படுத்திறதா, அவங்க சொன்னாங்கன்னு என்னையும் ௬ட்டி வந்து, இப்ப என்ன ஆச்சு பாத்தியா..?” கார்த்திக் அவமானத்தினிடம் பட்ட வலியின் வேதனை பொறுக்காமல், ௬றினான்..!

பிரபாவுக்கும் சற்று வருத்தமாக இருந்தது..! தான் சற்று அவசரப்பட்டு பிரச்சனையை பெரிதாக்கி விட்டோமோ…? என்று தோன்றியது…! சங்கவிக்கு கார்த்திக்கை மணம் செய்து கொள்ளச்சம்மதமா..? என்று கார்த்திக்கை வைத்துக் கொண்டே அவளிடம் கேட்டது தவறோ..? சங்கவிக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமைத்து கொடுப்பதை தன் கடமையாக நினைத்ததை சற்று நிதானிக்காமல் கேட்டு, இதனால் தனக்கு தான் விரும்பிய வாழ்வை அடைய உதவி செய்த இருவரின் மனதையும் அனாவசியமாக புண்படுத்தி விட்டோமோ..! என்றெல்லாம் யோசனை செய்தபடி கார்த்திக்குடன் நடந்து கொண்டிருந்தான்..!

வேதனையை குறைக்க பிரபாகரின் கைப்பேசி ஒலித்தது..! ஹலோ..! பிரபா! நான்தான் சங்கவி பேசுறேன். என்னால் நான் ௬றியபடி அங்கு வரமுடியவில்லை..! மன்னித்து விடுங்கள்..! என்றதும், என்னங்க.! நீங்க இங்கே எங்களை வரச்சொல்லிட்டு இப்படிஎன்று ஆரம்பித்த பிரபாவை, ஹலோ, கொஞ்சம் இருங்க.! அதைத்தான் சொல்ல வர்றேன், மழை வர்ற மாதிரி இருக்குன்னு அம்மா தடுத்திட்டாங்க. பிடிவாதமா கிளம்ப முடியலே.! அதான் ஃபோன் பண்றேன். நீங்க தீடிரென்று என்னிடம் கார்த்திக்கை மணக்க சம்மதமா? என்று நேத்துக் கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம் இருவருக்கும் திருமண ஏற்பாட்டை நம் வீட்டில் தொடர்ந்த போது௬ட, உங்களை முதலில் சந்தித்த போது என் பெற்றோரை மகிழ்விப்பதற்காக ஒத்துக் கொண்டேன் என்ற உண்மையை ௬றினேன். ஆனால் கார்திக்கை நா முதன் முதலில் சந்தித்ததும், நீங்க அருணாவை தவிர வேறு எவரையும் மணந்து கொள்ள முடியாதுங்கிற பிடிவாதத்தில் உறுதியாக இருந்தீங்களே.! அந்த நிலையை நானும் என்னுள் மெதுவாக உணர ஆரம்பித்தேன். புரிகிறதா? ஆனா என் எண்ணத்தை எப்படி சொல்றதுன்னு நா மனசுக்குள்ளே நினைசிண்டிருந்தப்போ நீங்களே இந்த விஷயத்தை ஆரம்பிச்சு வைச்சீங்க.! ஆனாலும் கார்த்திக் பேச்சு இதுக்கு ஒத்துக்காத மாதிரி இருக்கவே என் முடிவை நாளை சொல்றேன்னு அங்கிருந்து கிளம்பிட்டேன். மறுபடியும் நீங்க நேத்து சொன்னதை இன்னைக்கு காலையிலேயும் சொல்லி என் சம்மதத்தை கேட்கவும் நானும் மறுபடி யோசிச்சேன்..! நீங்க என் நன்மையை மனசிலே, வச்சிகிட்டு நல்ல முடிவா சொல்லியிருக்கீங்க..! என் விருப்பத்தை நா உங்க கிட்டையாவது சொல்லாம்னு நினைச்சேன். ஆனா உங்க நண்பரோட விருப்பத்தை முதல்லே தெரிஞ்சிக்காமே,… அவர் என்னதான், எனக்கு தெரிந்தவரா, உறவினரா இருந்தாலும், உங்க விருப்பத்துக்காக சம்மதிச்சு, என்னை கல்யாணம் பண்ணிகிட்டா, அப்புறம் பின்னாடிவர நாளெல்லாம், உங்களுக்காகத்தான் என்னை பண்ணிகிட்டேங்கிற மாதிரி ஏதாவது எண்ணங்களோ பேச்சுக்களோ வந்துட ௬டாதில்லியா..? அதனாலே முதல்லே அவர் சம்மதத்தை முழுசா கேட்டுக்குங்க..! மனசார அவர் என்னை விரும்புனா, அந்த மாதிரி அவர் சம்மதிச்சா, அப்புறமா என்னோட விருப்பத்தை நான் சொல்றேன்..! அதைத்தான் இன்று அங்குவந்து மனம்விட்டு பேசலாம்ன்னு….” என்று சங்கவி பேசிக்கொண்டே போக, குறுக்கிட்ட பிரபா சரி சங்கவி! இப்ப ஒரு விஷயம் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் யார் முதல்லே சொல்றதுங்கிற ஒரே மன நிலையில்தான் இருக்கிறீங்க.! நா இப்ப உங்க விருப்பபடி அவனை கேட்டு நல்ல முடிவோட, நாளைக் காலையிலே கார்த்திக் அப்பா அம்மாவை ௬ட்டிகிட்டு உங்க வீட்டுக்கு வந்து பெரியவங்க சம்மதத்தோட கல்யாண நாளே குறிச்சிடலாம் சரியா? என்றதும், மறு பக்கம் வெட்கத்தாலோ என்னவோ குரல் எழும்பாமல் சற்று அமைதி காக்க, தொடர்பை துண்டித்து விட்டு கார்த்திக்கின் கையை பிடித்து உற்சாகமாய் குலுக்கினான்..!

கார்த்திக்.! உன் எண்ணமும், சங்கவியின் எண்ணமும் ஒரே மாதிரி அமைஞ்சிருக்கு..! உங்க வீட்டிலே உன் பெத்தவங்க வேற எந்தப்பொண்ணை உனக்கு பேசி முடிச்சிருந்தாலும், இந்த மாதிரி ஒரு பொருத்தம் அமையாது.. நீ ரொம்ப கொடுத்து வைத்தவன். இப்ப நா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா..? என்றபடி, சங்கவி ஃபோனில் சொன்னதை ௬றியதும், நண்பனின் முகத்தில் உதித்த அந்த பரிபூரண மகிழ்ச்சியை கண்டு கார்த்திக் உள்ளமும் சங்கவியை ஏற்றுக்கொள்ள மிகவும் இசைவாயிருப்பதை உணர்ந்தவனாய் உள்ளம் குளிர்ந்தான் பிரபா..!

இவர்களைப்போல் சிறப்பான எண்ணங்கள் உடையவர்களை இந்த பூமித்தாய் பெற்றெடுத்த மகிழ்ச்சியில், மனநிறைவில், வானம் மனம் மகிழ்ந்து இவர்களுக்காகவேனும், மழையை தந்து இந்த மண்ணுலகிற்கு உதவ வேண்டுமென உறுதி பூண்ட மனதுடன் மடமடவென மழையை பொழிவித்து தன் மனதினையும் குளிர்வித்து கொண்டு பூமியில் உள்ளவர்களையும், குளிர்விக்க முயன்றது…!


--------------------------------முற்றும்----------------------------------------

 பிரபா அருணா, 
கார்த்திக் சங்கவி 
ஜோடிகளை இனிப்புடன் வாழ்த்துவோம்

முடிவுரை:::
இந்தக்கதைக்கு முன்னுரை என்ற ஒன்றை நான் எழுதா விடினும், முடிவுரையை எழுத என் மனம் ஆவல் கொள்கிறது நான் ஏற்கனவே  ( 1 வருடம் முன்பு ) டிராப்டில் எழுதிய இதை நீண்டகதையாக உள்ளதே என 11 பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் ஆலோசனைபடியும், சில வரிகளை உடன் சேர்த்தேன். இன்னும் பெரிதாக்கினால், படிக்கும் பொறுமைக்கு பங்கம் வந்தால் என்னசெய்வதென கொஞ்சம் விரைவாகமுடித்து விட்டேன்.


இக்கதைக்கு ஆதரவளித்து மிகவும் பொறுமையுடன் தினமும் வந்து படித்துக் கருத்திட்ட நான்குமனங்களுக்கும், அவ்வப்போது வந்து படித்துக் கருத்திட்ட நான்குமனங்களுக்கும், கதையில் உலவிய மாந்தர்களின் நான்கு மனங்களின் நன்றியோடு சேர்த்து என் மனதில் எழுந்த மிக மிக பணிவான நன்றியையும், தெரிவித்துக்கொள்கிறேன்.

( இப்போது தெரிகிறதா? நான் எழுதியக் கதைக்கு எவ்வளவு பொருத்தமான பெயராகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று. ) மறுபடியும் இது போலவே நிறைய கதைகளோடு உங்களை சந்திக்கும் வரை நன்றி.


Monday, April 27, 2015

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 10)


முந்தைய பகுதியின் முடிவு

போதுமடா..! சாமி..! நீ மறுபடியும் என்கிட்டேயிருந்து, உன் நன்றி புராணத்தை ஆரம்பிச்சிடாதே..!”’ தாங்க முடியலே..! இப்படி பேசிகிட்டேயிருந்தா, எனக்கு போரடிச்சு, நான் பேசாம அருணாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, எங்க அப்பாகிட்டே சம்மதம்  சொல்லிடுவேன்..!என்று கிண்டலாக கார்த்திக் சொன்னதும் அனைவரின் முகத்திலும் சிரிப்பு பூத்தது..!

இன்றைய தொடர்ச்சி..

சில நிமிடங்கள் அவ்விடத்தை அமைதி தழுவியது..!
பிரச்சனைகளை ஒருவருக்வொருவர், மனம் விட்டு பேசினால், எந்தவொரு செயல்களும், நல்லபடியாக நடக்கும் என்பதை புரிந்து கொண்டதால், அந்த நால்வரின் மனங்களும் சற்று அமைதியாக இருந்தன.! மற்றவர்களுக்கு விட்டுத்தரும் இயல்புகளை, அனைவருமே பெற்றிருந்ததால், சுமுகமாக முடியப்போகும் நல்ல விஷயங்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி, கவலைகளை அகற்றி மேலும் சந்தோஷங்களை தரும் என்ற நம்பிக்கை அனைவரின் முகத்திலும் பிரகாசித்தது.
 
சங்கவி சற்று சிரமபட்டு எழுந்தவள், “சரி அப்ப நான் கிளம்பறேன்”! இதற்குள் அப்பா, அருணா வீட்டிலும், உங்க வீட்டிலும், பேசி ஒரு நல்லதோரு முடிவை ஏற்படுத்தியிருப்பார்..! நா அருணாவை அவங்க வீட்டிலே போய் விட்டிட்டு நல்ல தகவலை உங்களுக்கு விரைவில் தெரியபடுத்துறேன்..!  என்றாள் நம்பிக்கையான குரலில்.

சங்கவி..! நா ஒன்னு சொல்லுவேன். நீங்க நான் சொல்றதை தட்டாமல் கேட்கணும்..! என்று தீடிரென ஆரம்பித்த பிரபாவை என்ன..?”வென்பது பார்த்தாள் சங்கவி ..!

நீங்க சொல்லறபடி நானும், அருணாவும் சந்தோஷமா வாழ்கையிலே ஒண்ணு சேர்ந்தாலும், எனக்கும் சரி.!! அருணாவுக்கும் சரி..!! ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கும்..! அதனாலே எங்க விருப்பபடி உங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சி குடுத்தாதான், எங்களுக்கு சந்தோஷமா, இருக்கும். அதனாலே நீங்கநாசொல்லப் போகும் விஷயத்தை பத்தி கோவப்படாமே பொறுமையா கேட்கனும்என்று பீடிகையுடன் இழுத்தான்.பிரபா..!

சரி கோவப்படலே.! என்ன சொல்லுங்க….? என்றாள் சங்கவி

மறுபடிச் சொல்றேன். நீங்க தயவு செஞ்சு கோபப்படக்௬டாது சங்கவி..! என் மனசுலே தீடிர்னு எழுந்த ஒரு விருப்பம் இது.  அதை தயவு செஞ்சு நீங்க தப்பா நினைக்காமே, நா சொல்றதை புரிஞ்சிக்கனும். உங்கப்பா விரும்பியபடி, இப்ப என் விருப்பபடி நீங்க ஏன் எங்க கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க ௬டாது..? கார்த்திக் உனக்கும் இதுலே சம்மதந்தானே..! என்று பக்குவமாய் பிரபாகர் கார்த்திக்கையும், பார்த்தபடி கேட்டாலும், மற்ற அனைவருமே என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர்.

மீண்டும் மெளனம் சூழலின் இறுக்கத்தை ஆக்கிரமிக்க, சில நிமிடம் கழித்து காரத்திக்தான் அதை கலைத்தான்..!
 
பிரபா..! நீ என்ன புரிஞ்சிதான் பேசுறியா..? இல்லை ஏதோ சொல்லனுமேன்னு சொல்றியா..?

இல்லை கார்த்திக்..! நான் பேசாமே இருந்தாலும், சங்கவி வீட்டிலே அவங்க அப்பா எப்படியும் சங்கவிக்கு திருமணம் முடித்து வைக்க இதே விஷயத்தை மறுபடியும் ஆரம்பிப்பார். எப்படியும் ஆரம்பிக்கும் இந்த பேச்சுனாலே, கொஞ்ச காலம் கழிச்சு, சங்கவி முகம் தெரியாத யார் ௬டவோ, தன் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு, உன்னோடயே, ஒரு தெரிந்த உறவின் துணையிலேயே துவங்கலாமில்லையா? சங்கவியும் உனக்கு ஒருவகையில் உறவுதானே…!  நீங்கள் இருவரும் சரியென்று ஒத்துக் கொண்டு விட்டால், நானே உன் அப்பாவிடம் இதைப்பற்றியெல்லாம் பேசி நல்லபடியாக முடித்து வைக்கிறேன்..!நம் நால்வரும் குற்ற உணர்ச்சி இல்லாமே சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.! என்று பிரபா முடிக்கவும் அருணாவும் அதை ஒரளவு ஆமோதிக்கும் பாவனையில், இருவர் முகத்தையும் பதிலுக்காக ஆவலுடன் பார்த்தாள்..!

கார்த்திக் மெளனமாக இருக்க, சங்கவி சட்டென்று சுதாரித்து கொண்டு புறப்பட எத்தனித்தாள்..! அவள் முகம் இயல்பை மீறி சற்று இறுக்கமானதாக தோன்றிற்று பிரபாகருக்கு. சரி பிரபா…! இப்போ எதுவும் இதைப் பத்தி பேச வேண்டாமே..! உங்கள் அன்பும், பரிவும் யோசனையும் புரிகிறது.  நாளை யோசிச்சு இதைப் பற்றி பேசி ஒரு முடிவை எடுக்கலாம்.…! என்று அழுத்தமான குரலுடன் விடைபெற்ற சங்கவி, “அருணா போகலாமா? என்றவுடன் அருணாவும் சற்று விசனமான முகத்துடன் கிளம்ப, இருவரையும் வழியனுப்பி விட்டு வந்த பிரபா, “கார்த்திக்..! நான் கேட்டது உனக்கு வருத்தமா..? என்றான்.

என்னை விடு பிரபா..! தீடிரென்று அப்படி கேட்டவுடன் அவங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னு யோசிச்சு பாத்தியா..? அவங்க முகமே அதை காட்டிக் கொடுத்திடுச்சு.. சங்கடமான குரலில் ௬றினான் கார்த்திக்.

இல்லை கார்த்திக்..!  அவங்க ரொம்ப நல்லவங்க! என் மூலமா அவங்க வாழ்க்கையிலே ஏற்பட்ட குழப்பம் நீங்கி அவங்க வாழ்க்கை நல்லாயிருக்கனுமேன்னு, ஒரு பரிதவிப்பிலே அப்படி கேட்டுட்டேன். நீயும் என் நண்பன்தானேங்கிற உரிமையிலே, “நீ ஏதும் தப்பா நினைக்க மாட்டேன்னுநினைச்சு அப்படி அவசரபட்டு என் மனசுலே எழுந்த ஆசையை வெளிப்படுத்திட்டேன். என் கேள்வியிலே ஏதேனும் உன் மனசை கஷ்டபடுத்தியிருந்தா என்னை மன்னிச்சுடு. உனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? ..! இப்ப நாம தனியாதானே இருக்கோம்..! என்கிட்டே மனம் விட்டு சொல்லேன்.!   என்று தவிப்பான மனதுடன் கேட்டான் பிரபா.
    
முதல்ல அவங்க தன் சம்மதத்தை சொல்லட்டும்…! அவங்க சம்மதிச்சா, நான் என் வெளி நாட்டு வேலையை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா விருப்பப்படி இங்கேயே ஒரு வேலை தேடிக்கவும் சம்மதிக்கிறேன்..! என்று தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்திய நண்பனை அளவு மீறிய சந்தோஷத்தில் ஆரத் தழுவிக்கொண்டான் பிரபாகர்.


தொடரும்

அந்த நால்வரின் மனம்... ( பகுதி 9)


முந்தைய பகுதியின் முடிவு

சரி! இவனை இங்கே எப்படி சந்தித்தீர்கள்? என்ற பிரபாகரை புன்னகையுடன் பார்த்தவாறு நான் ஆரம்பித்துதான் இருக்கிறேன் இன்னமும் முடிக்கவில்லை! அதற்குள் அவசரபடுகிறீர்களே.? என்றவள்  மீண்டும் தொடர்ந்தாள்.

இன்றைய தொடர்ச்சி..

விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்தாள் சங்கவி…!

சில நாட்களுக்கு முன் ஒரு உறவின் திருமணத்திலே எங்க அப்பா, கார்த்திக்கோட அப்பாவை சந்திருச்சிக்கார். இருவரும் மனம்விட்டு பேசும் போது, என் திருமணம் முடிவான விசயத்தை, அப்பா சொல்லவும், ”என் பையனுக்கும் பெண் பார்த்து முடிவாக இருப்பதாவும், ௬ட நாங்களும், வரவேண்டும்”! என்று கார்த்திக் அப்பா கேட்டுக் கொண்டதினால், நானும் அப்பாவும் இவருடன் உங்க அருணா வீட்டுக்கு சென்றிருந்தோம். போன இடத்திலே பெண் பார்த்த பிறகு நிறைய விசயங்கள் ஏன்! எல்லா விஷயமும், தெரிஞ்சு போச்சு! புரிஞ்சு போச்சுன்னும் சொல்லலாம். கார்த்திக்தான் எல்லா விபரங்களையும் என்கிட்டே சொல்லி புரிய வைத்தார். நீங்க அன்னைக்கு எங்கிட்டே தயங்கி தயங்கி என்ன சொல்ல வந்தீங்கன்னு நா கார்த்திக்கோட அருணாவை பொண்ணு பாத்துட்டு வந்தபிறகு புரிஞ்சுகிட்டேன். இத்தனை விபரமும், உங்க கிட்டே நானே சொல்லனும்தான், நானே நேரிலே இங்க வந்தேன். நா மட்டும் தனியா வரலே! ௬ட ஒரு துணையையும் ௬ட்டிகிட்டு வந்திருக்கேன்.! என்றவள் எழுந்து அருகிலிருக்கும் அறைக்குள் சென்று தான் அழைத்து வந்த ஆளை கண்டதும் பிரபாகர் வாயடைத்துப் போனான்
.
நீயா? எப்படி அருணா? என்னாலே நம்பவே முடியில்லேயே! பிரபாகர் சந்தோசத்தில் திகைத்தான்.

அருணா, அவனை மகிழ்ச்சியாய், பார்த்தபடி! எப்படியோ, உங்க நண்பராலே நம்ம பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தாச்சு..!!இவங்கதான், சங்கவின்னு எனக்கும் தெரியாது..! ஆனா அன்னைக்கு என்னை கார்த்திக் பொண்ணு பார்க்க வந்திருந்த போது அவருக்கு நெருங்கிய உறவுன்னுதான் சங்கவியை அறிமுகபடுத்தினாங்க..! அதானாலே இன்னிக்கு. சங்கவி அவங்க அப்பாவோட வந்து, “என்னை கொஞ்சம் வெளியிலே ௬ட்டிகிட்டு போறேன்னுசொன்னதும், எங்க அப்பாவும் சரின்னு அவங்களோட அனுப்பிட்டாங்க..! வரும் வழியிலே, “சங்கவி எல்லா விஷயத்தையும் சொல்லி, என்னை சமாதானபடுத்தி, உங்க கல்யாணத்தை தடையில்லாமே நாங்க முடிச்சு வைக்கிறோம்  அப்படினாங்க..!என்றாள் சங்கவியை நன்றியுடன் பார்த்தபடி..!

அருணா..! இன்னும் நம்ப வீட்டுக்கு எந்தவொரு விஷயமும் தெரியாது..! இனிமேதான் பிரச்சனையே எப்படியெல்லாம் பெருசாக போகுதோ..! என்னவோ..? என்றான் கவலையாக பிராபகர்.

அந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம்..! இதற்குள் உங்க  வீட்டுக்கும், அருணா வீட்டுக்கும் எல்லாவிபரத்தையும் சொல்லி எல்லா விஷயமும் எல்லோரும் புரிந்துகொண்டிருப்பார்கள்…! அதற்கான ஏற்பாடுகளை என் அப்பாவை செய்ய சொல்லி விட்டுதான் வந்திருக்கிறேன்..! அப்பாவும் என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து எல்லாவற்றிக்கும் ஒத்துக்கொண்டு விட்டார்..! பிரபா..! உங்களுக்கும் உங்க அண்ணாவுக்கும் எங்க அப்பா ஆரம்பிச்சிருக்கற கம்பெனியிலே நிச்சயம் வேலை உண்டு. உங்களுக்கு செய்யப்போறதா, சொன்ன உதவியெல்லாம் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு..! அதனாலே நீங்க ஆசைபட்டபடி உங்க கல்யாணம் கண்டிப்பா நல்லபடியா நடக்கும்..!! கவலைப்படாதீங்க..! ஆறுதலாக சொன்ன சங்கவியை பார்த்து கை ௬ப்பினான் பிரபாகர்..!

சங்கவி..! உங்ககிட்டே என்னசொல்றதுன்னு எனக்குத் தெரியலே..! நீங்க செஞ்ச இந்த உதவிக்கு நான் திருப்பி என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலே..! உணர்ச்சி வசப்பட்டதால், சற்று கண் கலங்கி பேச நாவெழாமல் தடுமாறினான் பிரபாகர்..!

பிரபா..!தயவுசெஞ்சு இப்படியெல்லாம் பேசி என்னை பிரிக்காதீங்க..! எனக்கு ௬டப்பிறந்தவங்க யாருமேயில்லை..! அருணாவை என் ௬டப்பிறந்தவளா நினைச்சு, இந்த உதவியெல்லாம் நான் செய்றேன்னு நினைச்சு சந்தோசபடுங்களேன்..!என்றதும் அருணா சட்டென்று கண்களில் நீர் வழிய, சங்கவியை அணைத்துக்கொண்டாள்.

சங்கவி..! உங்களைப் போல் ஒரு உடன்பிறப்பு அமைய நான் கொடுத்து வச்சிருக்கனும்..! நீங்க செய்றது உதவி இல்லே..! தியாகம்..! அதுவும் உங்க வாழ்க்கையையே.. எனக்காகஎன்று மெளனமாக அழுத அருணாவை சங்கவியும், கண்கலங்க அணைத்துக்கொண்டாள். பிறகு சட்டென்று சுதாரித்தவளாய், “அருணா, இதோ, பாருங்க..! நீங்க என்னை பத்தியே பேசிறீங்க..! கார்த்திக்கை நாம எல்லோரும் மறந்தே போயிட்டோம்..! அவர் இல்லேன்னா, இப்படியெல்லாம் உங்க வாழ்க்கையிலே, பல திருப்பங்கள் நடந்தே இருக்காது..!என்றதும் பிரபா கார்த்திக்கின், கைகளை அன்போடு இறுக பிடித்தபடி, ஏதும் பேச வராமல், தத்தளித்தான்..!

போதுமடா..! சாமி..! நீ மறுபடியும் என்கிட்டேயிருந்து, உன் நன்றி புராணத்தை ஆரம்பிச்சிடாதே..!”’ தாங்க முடியலே..! இப்படி பேசிகிட்டேயிருந்தா, எனக்கு போரடிச்சு, நான் பேசாம அருணாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, எங்க அப்பாகிட்டே சம்மதம்  சொல்லிடுவேன்..!என்று கிண்டலாக கார்த்திக் சொன்னதும் அனைவரின் முகத்திலும் சிரிப்பு பூத்தது..!


தொடரும்