Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Thursday, March 18, 2021

மலர்ந்த நினைவுகள்.

 வலையுலக சகோதர சகோதரிகளுக்கு அன்பான வணக்கங்கள். 

இன்று நம் அன்பான சகோதரி வல்லி சிம்ஹன் அவர்கள் தபால்காரரைப் பற்றியும்  அந்தக்கால கடிதங்களின் சிறப்பைப் பற்றியும் தம் வலைப்பதிவில் எழுதியிருந்தார். அவரின் பதிவு பழைய காலத்திற்கே நம்மை கொண்டு சென்றது. அதிலும் பதிவின் முடிவில் "இணையத்தின் இணையற்ற தபால்காரர் நம் வலைப் பதிவுகள்.  "என அவர் முடித்திருக்ககும் வரிகளை ரசித்தேன். ஆம் . உண்மை.... இப்போது மறுபடியும் நம் எழுத்துக்களை வலைப்பதிவுகள் என்ற தபால்காரர் மூலம்  நாம் தினமும் ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். நன்றி சகோதரி. 

கடிதங்களின் இடத்தை இப்போதெல்லாம் கைப்பேசி பிடித்துக் கொண்டு விட்டது. கடிதம் எழுத இப்போது எவருக்கும் பொறுமையும், நேரமும் குறைவாக உள்ளது.  கைப்பேசியில் உடனுக்குடன் பேசி, எத்தனை மலைப்பான  தூரங்களையும் நெருக்கமாகி அருகில் வைத்துள்ளோம். 

அப்போதெல்லாம் கடிதங்களில் எழுதும் போது நிறைய விஷயங்கள் இருப்பது போல் தோன்றும். எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுணுக்கி எழுதிய பின்னும், இன்னமும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையும் வரும்.  பெறுநர் முகவரி பக்கம் மட்டுமே கோடு தாண்டா நேர்மையோடு முகவரிக்கென்றே ஒதுக்குவோம். "அதையாவது விட்டு வை.....அதிலேயும் கிறுக்கினால்,  கார்டு போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேராமல் நடுவிலேயே தத்தளித்து தவித்துப் போய் விடும்" என்ற கிண்டலான எச்சரிக்கைகள் வீட்டின் மூத்த உறவுகளிடமிருந்து  வந்து விழும் வரை இன்னமும்  என்ன எழுதுவது என்று யோசிப்பதை நிறுத்த மாட்டோம். 

அந்த காலத்தில் கவனக்குறைவால் தவறான முகவரிகள், இல்லை, மழை, புயல், (அக்காலத்திலெல்லாம் மழை காலத்தில் அவ்வப்போது வரும் புயலை கடும் சூறாவளி மழை   என ஒரே பெயரிட்டுதான் அழைப்போம். இப்போது அதற்கும்  விதவிதமான பெயர்கள் கிடைத்து விட்ட மகிழ்வில், வருடத்திற்கு அதன்  எண்ணிக்கைகள் நம்மை கேட்காமலேயே அதிகரித்து விட்டன.)  போன்றவற்றின் காரணங்களால் கடிதங்கள் அவரவர்களுக்கு சென்று சேராமல் போய் விடும். பதில்கள் வர வில்லையே என மீண்டுமொருமுறை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு எப்படியும் பத்து நாட்கள் ஆகிவிடும். அதற்குள் நம் மனம் படும் பாடு விவரிக்க இயலாது. 

அந்த நினைவுகளுடன், திரும்பி வராத இடத்திலிருக்கும் என் அன்னைக்கு ஒரு மடல் என நான் என் மன ஆறுதலுக்காக எப்போதோ எழுதினேன். வல்லி சிம்ஹன் சகோதரியின் பதிவுக்கு கருத்து எழுதும் போது கூட அங்கும் அவர்களைப் பற்றித்தான் (எங்கள் அம்மா) குறிப்பிட்டிருந்தேன்.

 திருமணத்திற்கு பின் என்னிடமிருந்து ஒவ்வொரு வாரமும் தவறாது மடல்களை எதிர்பார்க்கும் அன்னையின் நினைவு (அந்த உறவு மட்டுந்தான் நம்  எழுத்தை, அதன் மகிழ்வை, அதனுடன் இழையோடும் சோகத்தை தனதாக்கிக் கொண்டு,  தன் பங்குக்கும் அனைத்தையும்  பிரதிபலிக்க செய்யும் சக்தி வாய்ந்தது.) அதிகரிக்கவே இந்த அன்னைக்கு எழுதிய மடலுக்கு முன் மனதிலுள்ளதையும் பதிவாக இங்கு  எழுதினேன்.  இனி அன்னைக்கு ஒரு மடல். ...

கவிதை என்ற பெயருடன் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் கவிதை என நினைத்துதான் இதை ஆரம்பித்தேன். ஆரம்ப ஒரு வரியையே இடையில் நிறுத்தாமல் நீண்ட வரியாக எழுதி முடித்திருக்கிறேன். படிப்பவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 

அன்னைக்கு ஒரு மடல்.... 

அன்னை தந்தை வளர்ப்பினிலே,

அருமையாய் தினம் வளர்ந்து,

குலப்பெருமை குன்றாமல்,

பிறர் குறையேதும் கூறாமல்,

குன்றில் இட்ட விளக்காக திகழ,

விரும்புமந்த இரு உள்ளங்களுக்காக, 

பால் மணம் மறக்கா பருவத்திலே,

பள்ளிப் பாடங்களை

பாங்காய் தினம் கற்று,

மழலை மொழி சொற்களை,

மாற்றியமைக்க பாடுபட்டு,

கற்றதை கண்டு பிறர் களிப்புறவும்,

கல்லாதவைக்கு கடுஞ்சொல்லும் பெற்று,

சற்று, கடுமையும், கனிவுமாக வளர்ந்து,

கடுகளவும் எண்ணம் சிதறாமல்,

கருத்தொன்றி படித்து, 

களை எடுத்த நாற்றாய்,

பள்ளிப் பாடங்களை பரிசீலித்து,

பள்ளிக்கு பின் பல்வேறு கனவுகளுடன்,

கல்லூரியில் கால் பதித்து, 

கற்றதை மேம்படுத்தி,

பாரினில் பிரகாசிக்க, 

பட்டங்கள் பல சுமந்து,

பழுதில்லா பணி தேடி,

தினமும் பல மைல் பயணித்து,

சுமந்த பட்டங்களுடன், சுயமாகி நின்றிட.., 

சுகமான ஒரு வேலைக்காக, 

ஓராயிரம் சுகங்களை உதாசித்து, 

இறுதியில் ஈட்டதொரு,

நல்லதோர் பணியில், 

நாள் பார்த்து அமர்ந்து,

நலங்கள் குன்றினாலும், 

நாள்தோறும் உழைத்து,

நாடு விட்டு நாடு சென்றும், 

நற்பெயர்கள் பலவும்,

நன்கு வாங்கியதில், 

நாட்கள் வருடத்தை சுவைத்திட, ஓரிரு

நரை முடிகளை தலையில் காட்டியதால்,

மனம் பதறிய மாதாவின் சொல் தட்டாது,

அடுத்தவ(ளி)ரின் வாழ்க்கையில்

அ(நா)வசியமாக பிரேவேசித்து,

அனுதினமும் அனுசரிக்க பழகி,

புதிய சொந்தகளை சொர்க்கமாக்கி,

பழைய பந்தங்களை பரணில் கிடத்தி,

பகட்டு வாழ்க்கைக்காக, 

பகல், இரவு பாராது, 

பணத்தை  வாழ்வின் இலட்சியமாக்கி

நோய் துறந்து, பாய் மறந்து,

நேரம் மட்டுமே, நேர்த்தியாய் பார்த்து,

நிமிடங்களை வீணடிக்காமல், 

நிம்மதியை தானமாக்கி, 

சற்று நிதானிக்கும் போது 

நின்று திரும்பினால்,

நீண்ட வாழ்நாளில் 

பாதி காணாமல் போயிருக்க,

நிதர்சனத்தின் கண்கள் சுட்டெரிக்க,

துறந்த நோய்கள் பலவும் துரத்த,

வளர்ந்து விட்ட வாரிசுகளின்,

வசமாகியிருந்த மிகுந்தந்த 

காலங்களின் படிகளில்,

வழுக்கி விழுந்து எழமுடியாமல்,

வருத்தத்தின் பிடியில் வசமாகும் போது,

அம்மா, உன் நினைவு வருகிறது.

அம்மா.. .உன் நினைவு மட்டுந்தான் 

வருத்தங்களோடு வசமாகினாலும், 

வாசமாக  மட்டும் என்னுடன்

வசித்திருப்பேனென்று வருகிறது.... 

தாயே! அன்று என்னைக் காண நீ

தவித்த சோகங்கள் தளர்வின்றி 

இன்று எனைத் தழுவுகிறது.

காத்திருந்து, காத்திருந்து, 

கண் மூடிவிட்ட உன்னை,

காண வந்த என்னிடம் இமை மூடிய

கண்களின் வழியே, நீ 

கேட்ட கேள்விகள் ஓராயிரம்!

அவற்றிக்கு பதிலளிக்க,

அப்போது தெரியாததால்,

இயன்றவரை பதில்சொல்ல,

இப்போது உனைத் தேடுகிறேன்.

தாயே நீ எங்கிருக்கிறாய்?

தனித்திருக்கிறாயா? உன்

தாயுடன் இருக்கிறாயா? உன்

வயது விளைவித்த 

வலிகளின் வலிமையை 

விளக்க, உன் வாரிசுகளின் 

வரவை விரும்பித் தேடியும்

வாராத நிலை கண்டு உன்னை

வளர்த்தவளிடம் விமர்சிக்க

வானுலகம் சென்றனையோ?

எந்திரமாக வாழ்ந்த நான் இந்த

எதார்த்த வாழ்வின் விளக்கம் பெற,

எப்படியும் என்னுடைய

தள்ளாத வயதில், மனம் தளர்ந்து,

தவித்துப் போய் நான் வரும்போது,

தாங்கி பிடித்து அமரவைக்க,

தனியிடம் ஒன்று உன் அருகாமையில்

தக்க வைத்துகொள் தாயே....! 

எப்படியும் எனக்காக இதை நீ செய்வாய்.. 

ஏனெனில் நீ  தியாகங்களின் சிகரம்....

அது உன்னதங்களின் உயரம். 

சிகரங்களுக்கு  பகைமை பாராட்டி

சினம் கொள்ளத் தெரியாது. 


இப்படிக்கு,

உன்னிடம் விரைந்து வர விளையும்,

உன் .............


என் பழைய நினைவுகளை (பிதற்றல்களை என்று கூட சொல்லலாம். ) படித்தவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏

Sunday, May 10, 2015

மனதோடு நான்...

நீ கற்றது கைமண் அளவு ௬ட இல்லை. ஆனால் கனவு மட்டும் கடலை விட பெரிதாய். ..இன்னும் அதனினும் பெரிதாய்….ஆகாயம் அளவு இருக்குமாஇல்லை அதை விடவும் பெருசா..சே! சே! இதுரொம்ப பேராசை.. இது எப்படி சாத்தியமாகும்?  இதை எவ்வாறு நீ சாதித்துக் காட்டுவாய் ? மனசு கேலியாய்  குதித்துக் கொண்டே இடித்துக் காட்டியது.
  
நீ கனவில் எப்பவாவது கட்டிய அழகிய கோட்டைகளை ௬ட இடித்து தள்ளி விடட்டுமா?” என்று தைரியமாக என்னை அணுகி கேட்டது.”

அதுசரி! இப்ப அதை இடிச்சிட்டு அந்த இடத்திலே என்ன பண்ண போறே..? இருக்குற இடத்தைஃ பிளாட் போட்டு வித்து  பணம் சம்பாதிக்க போறியா? இல்லை யாருக்காவது தானமா எழுதி தந்து போற வழிக்கு புண்ணியம் சம்பாதிக்க போறியா? அட.. என்னதான் செய்யப் போறே, சொல்லேன்?” என்று சள்ளென்று ஒரு நிமிஷம்  கோபப்படவும், மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு, இரண்டு நாளா பேச்சு வார்த்தை  எதுவுமில்லாமே, ஒரே டல்லா எதுலேயும் பிடித்தம் காட்டாது சோம்பேறியாய் ஆனது.

அப்பறம் வந்த கொஞ்சுண்டு கற்பனைக்கு மதிப்பு கொடுத்து கொஞ்சமா சாதனையின் முதல் படியருகே இருந்த ரொம்ப தூரத்துக்கு அப்பால் காலை எடுத்து வைத்து, பெற்ற அன்னையிடம்,” எனக்கு சாதனை பட்டியலில் இடம் பிடிக்கனும்னு ரொம்ப ஆசைம்மா.!”  நான் எப்படியாவது இதில் சாதித்து காட்டுவேனா? சொல்லேன்.! என்னையும் சாதனையிலே சிறந்தவங்கன்னு எல்லோரும் ஏத்துக்குவாங்களாம்மா.? என்று கேள்விகளாய் கேட்கும் போதும், அந்த மனசு நகைப்புடன் நையாண்டி பார்வைதான் பார்த்தது.

நீ திருந்தவே மாட்டியா? எல்லாரையும் மாதிரி, எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு எப்பவும் போல இருந்து, எப்படியெல்லாம் வாழலாம்ன்னு யோசிக்காமே, எப்ப பாத்தாலும், ஏதாவது வித்தியாசமா சாதிக்கனும்! நாலு பேர் பாராட்டனும்ஏன் இந்த வீபரீத ஆசை உனக்கு? அதுக்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேண்டாமா? “ஆசை இருக்கு தாசில் பண்ண.”! அப்படிங்கிற பழமொழியெல்லாம், உனக்குதானே கண்டு பிடிச்சது.! என்று அதன் மனம் போனபடி கண்டபடி பேச ஆரம்பிச்சதும், இந்த வாட்டி எனக்கு மூடு அவுட் ஆனது .

இந்த பாழும் காலம் இருக்கே,! அதுக்கு யாரையும்  கொஞ்சங்௬ட மதிக்கிறது பிடிக்காது.” நான்தான் கடவுளின் பிரதிநிதி! என்னோட கடமையை நான் பேசாமே பண்ணிகிட்டு போயிட்டே இருப்பேன். உங்களுக்கு எங்௬ட வர்றததுக்கு விருப்பம் இருந்தா வாங்கன்னு ஒரு அழைப்பை வச்சிட்டு பின்னாடி நாம வர்றோமா! இல்லையான்னு ௬ட பாக்காமே ஒரு கவலை இல்லாமே ஜாலியா போய்கிட்டே இருக்கும். எப்படியும் நம்ம பின்னே இவங்க வந்துதான் ஆகனுங்கிறது அதுவே முடிவு பண்ணின மாதிரி ஒரு அலட்சியம், அதோட பிடியிலே யாரு சிக்கிருக்கங்க, இவங்க எப்படிபட்டவங்க, தாங்கற சக்தியெல்லாம் இவங்களுக்கு இருக்கா, இல்லையா ? இவங்களுக்கு கஸ்டத்தை தரலாமா, ௬டாதாங்கற எந்தவித எண்ணமும் இல்லாமே, நான் என்ன தந்தாலும் அதை ஏத்துகிட்டு பேசாமே, நான் கை காட்டுற திசையிலே உன் பயணத்தை நீ தொடர்ந்துதான் ஆகனுங்கிற மாதிரி ஒருஅதிகார மனப்பான்மை. வேறுவழி.? அதுகாட்ற பாதையிலே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.!

அப்புறம் என்ன! காலத்தோட உருண்டு எழுந்து (அட! எத்தனையோ அடிகள் வேற பட்டாச்சு! ஐயோ! அப்பா! வலிக்குதே அப்படின்னு கத்தினாலும், வலியோட அவஸ்த்தையை பத்தியோ, வலிமையை பத்தியோ அதுக்கு கவலையே கிடையாது.) நடுவுலே நின்னு கொஞ்சம் திரும்பி பாத்தா, நமக்கு பின்னாடி எவ்வளவு பெரிய பாதை.! இத்தனையுமா கடந்து வந்துருக்கோம்.! எப்படி? இந்த பாதையிலே  சந்தோசமா குதியாட்டம் போட்டு நடந்து வர்றாமே, ஏதோ சிந்தனையுடன், பெரிய மேதாவியா ஆகப்போறோம்னு ஏதோ கோட்டையை பிடிக்கிற மாதிரி, பொழுதை கழிச்சு இப்படி ஓடி வந்திருக்கோமே.!  அப்படின்னு நான் கொஞ்சம் தயங்கி யோசனை பண்ணும் போது, மறுபடி மனசு வந்து முன்னாடி குதிச்சது.

பாத்தியா.? அதுக்குதான் அப்பவே சொன்னேன். உன்னை மாதிரி இருக்கறவங்க எல்லாரையும் மாதிரி  ஜாலியா இருக்காமே, ஏதோ யோசிச்சு, யோசிச்சு பெரிசா என்னத்தை சாதிச்சிட்டே!. ஒண்ணுமில்லை., நீ எதிர்பார்த்த மாதிரி யெல்லாம் உன்னாலே வர முடிஞ்சதா? என்று பேச ஆரம்பிக்க………

இதோ பாரு.! நா படிச்சதை வச்சுகிட்டு ஏதோ என் கனவை இப்பத்தான்  நனவாக்கி வந்துகிட்டிருக்கேன். அது போதும் எனக்கு.! அப்படி கனவை நிலையான கட்டடமாக்கறதுக்கு,  ரெண்டு தூண்கள் ரொம்ப உதவியா நின்னு கொஞ்சம் தாங்கிபிடிச்சது.! இப்ப ஏதோ ஊரு உலகத்துக்கு என்னை தெரியாட்டியும் , ஒரு பத்து பேருக்காவது இந்த பதிவுலகத்திலே என்னை தெரிஞ்சிருக்கு. அந்த சந்தோஷமும் நிம்மதியும் இந்த பாக்கி இருக்கிற ஆயுள் முழுக்க போறும்.!அந்தவகையிலே , அன்னிக்கு எங்க அம்மாகிட்டே சொன்னமாதிரி, ஒரு சாதனையாதான் இது நடந்திருக்கு. இந்த குட்டி சாதனையை என்அம்மாவுத்தான் நான் பரிசா தரப்போறேன். என் அம்மா இப்ப இருந்திருந்தா, என்னோட இந்த சின்ன சாதனையை பாத்தே இது எப்படிப்பான்னுரொம்ப சந்தோசபட்டு இருப்பாங்க. ஆனா, அதுக்கும் நான் கொடுத்து வைக்கலே.! என் குரல் கம்மலில் மனசு நெருடலாய் ஒரு பார்வை பார்த்தாலும், ஏதும் பேசாது கொஞ்சம் அமைதி காத்தது.


அப்போ உன்௬டவே இத்தனை வருசம் ஓடி வந்திருக்கேனே.! என்னதான் நக்கலா உன்னை பேசினாலும், நீ நினைச்சதெல்லாம் நல்லபடியா நடக்கனும், நீ எதிர்பாக்கறது எல்லாம் உனக்கு கிடைக்கனும்ன்னு, என் மனசுகுள்ளேவேண்டிக்கிட்டு உன்௬டவே சுத்தி சுத்தி ஓடிவந்தேனே.! என்னை விட உனக்கு……

ஆமா, எனக்கு என் அம்மாதான் பெருசு.! அம்மாங்கிற ஒரு ஜீவன் என்னை சுமந்து பெத்து பாதுகாக்கலைன்னா, நான் ஏது? என் ௬ட சுத்தி வர்ற நீதான் ஏது? அதனாலே நீ என்ன நினைச்சாலும் எனக்கு என் அம்மாதான் பெருசு.! இந்த பெருமையும் பரிசும் அவங்களைத்தான் சாரும். அவங்ககிட்ட அன்னிக்கு சொன்ன மாதிரி, என்னோட இந்த  சின்ன ஆசையை இன்னைக்குமுருகன்அவர் அருளாலே நிறைவேத்தியிருக்கார். அதுவும் மீண்டும் கனவா போயிட ௬டாதேன்னு, அந்த கனவையே என் பேரோடும் சுமந்துகிட்டு, என் அம்மாவுக்கு, எனக்கு கிடைச்சிருக்கிற   “இந்த நன் நாளை எப்படியாவது பரிசா  தரனும்னு என் உயிரையும்  என் பேரோடு கொஞ்ச நாள் தங்க வைன்னு அந்த ஆண்டவனைவேண்டிக்கிட்டு சுத்தி வந்தேன். இப்ப புரியுதா? இதை எங்கம்மாவுக்குதான் நா தர விருப்ப படறேன்னு”, என்றதும் மனசு லேசான முனகலுடன்….

உன் ஆசை சரிதான்! ஆனாலும், நா சொன்னதையெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்தி எழுதுறே.! இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு பில்டப்பான்னு உனக்கு நிறையவெகுமதிகிடைக்கிறப்போ  நீ என்னை புரிஞ்சிப்பே.! என்றபடி புகை மாதிரி தோற்றத்துடன் ஒரு வழியாக கலைந்து போகஅப்பாடாஎன்றிருந்தது எனக்கு.

பின்னே என்னங்க.! ஒரு மட்டும் கஸ்டபட்டு எப்படியோ எழுதி தட்டுத் தடுமாறி நூறாவதுபதிவை அணுகிய இந்த சந்தோஷத்தை என் தாயுடன் பகிர்ந்து கொண்டு, அந்த தாய்க்கு பரிசாக தர நான் நினைத்தது தவறா? அதுவும் இந்த அன்னையர் தினத்துக்குகென்றே யதேச்சையாய் அமைந்திருக்கும்  இந்தப்பதிவான நூறை என் அன்னைக்குத் தராமல், வேறு யாருக்கு தருவது சொல்லுங்கள்..?

இத்தனையும் தந்த அந்த ஆண்டவனுக்கும், தூணாகி எனை நிமிர்த்திய என் சந்ததிகளுக்கும், என் எழுத்துக் கட்டடத்தின் உறுதிக்கு உதவியாக  வாழ்த்திப் பாராட்டி அந்த உறுதியில் தொய்வின்றி இத்துனைக்காலம் நான் நிலைத்து நிற்க உறுதுணையாய் வலம் வந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும், இதை முதலில் பணிவோடு சமர்பித்து பின்  என் அன்னைக்கு இதை பரிசாக்குகிறேன்.

இதில் அன்னையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாய் , எனக்கு என் மகள் அனுப்பிய சில வரிக் கவிதைகளை இத்துடன் அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணமாக்குகிறேன் . இதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருந்தாலும், எனக்காக மீண்டும் என் பதிவிலும் வலம் வரும்  இதை படிக்கும் அனைவருக்கும் பணிவுடன் என் நன்றியையும் சமர்பித்துக் கொள்கிறேன்.   
                                                 
             
நன்றி.!  நன்றி!   நன்றி!

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

=================== 
அப்பா கட்டிய 
வீடாயிருந்தாலும் 
அது நமக்கு 
அம்மா வீடுதான் ! 
=================== 
அடுப்படியே 
அம்மாவின் 
அலுவலகம் ! 
அன்பு மட்டுமே 
எதிர்பார்க்கும் சம்பளம் ! 
=================== 
காய்ச்சல் வந்தால் 
மருந்து தேவையில்லை ! 
அடிக்கடி வந்து 
தொட்டுப்பார்க்கும் 
அம்மாவின் கையே 
போதுமானது ! 
=================== 
இவ்வளவு 
வயதாகியும் 
புதுச்சட்டைக்கு 
மஞ்சள்வைத்து 
வருபவனைக் 
கேலி செய்யும் 
நண்பர்களே .......... 
அது, 
அவன் வைத்த 
மஞ்சள் அல்ல ! 
அவன், 
அம்மா வைத்த 
மஞ்சள் ! 
=================== 
டைப்பாய்டு வந்து 
படுத்த அம்மாவுக்கு 
'சமைக்க முடியவில்லையே'
என்கிற கவலை ! 
=================== 
'அம்மா தாயே'
என்று 
முதன் முதலில் 
பிச்சை கேட்டவன் 
உளவியல் மேதைகளுக்கெல்லாம் 
ஆசான் ! 
=================== 
எந்தப் பொய் 
சொல்லியும் 
அம்மாக்களை 
ஏமாற்றிவிடமுடியும் 
'சாப்பிட்டு விட்டேன் '
என்கிற 
அந்த ஒரு பொய்யைத்தவிர ! 
=================== 
அத்தி பூத்தாற்போல 
அப்பனும் 
மகனும் 
பேசிச்சிரித்தால் 
விழாத தூசிக்கு 
கண்களை தேய்த்துக்கொண்டே 
நகர்ந்து விடு்கிறார்கள் 
அம்மாக்கள் ! 
=================== 
வெளியூர் செல்லும் 
பிள்ளைகளின் 
பயணப்பைக்குள் 
பிரியங்களைத் 
திணித்து வைப்பவர்கள் 
இந்த அம்மாக்கள் ! 
=================== 
பீஸ் கட்ட 
பணமென்றால் 
பிள்ளைகள் 
அம்மாவைத்தான் 
நாடுகின்றன ........ 
காரணம், 
எப்படியும் 
வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! 
அல்லது 
எடுத்துக் கொடுத்துவிட்டு 
திட்டு வாங்கிக்கொள்வாள் ! 
=================== 
வீட்டுக்குள் 
அப்பாவும் 
இருந்தாலும் 
அம்மா என்றுதான் 
கதவு தட்டுகிறோம் ! 
=================== 
அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் ! 
=================== 
அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் .......... 
"எம்புள்ள 
பசி தாங்காது! "

#பிடித்திருந்தால்_மற்றவர்களுடன்  பகிர்ந்து_கொள்ளுங்கள்...

அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கடைசியாக எனக்கு பிடித்த பாடல் ஒன்றை, உங்களுக்கும் பிடிக்குமென்று நினைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவிஞர்  வாலி இயற்றிஇளையராஜா இசையமைத்து, எஸ். பி. பியின் அருமையான குரலில் மனம் கவர்ந்த பாட்டு. நானாக  நானில்லை தாயே.!