Friday, February 7, 2025

கற்பனையுடன், கலந்த காவியம்.

 அம்மா..! ஏனோ என்னை நீ பெற்றெடுத்தாயே..!!

சூரசேனரின் மகள் குந்திதேவி. அவளின் சிறு வயது இயற்பெயர் பிருதை. (பிரீதா) பகவான் கண்ணபிரானின் வளர்ப்பு தந்தையான வசுதேவருடன் பிறந்தவள். ஸ்ரீகிருஷ்ணருக்கு அத்தை குந்திதேவி. . 

மன்னர் சூரசேனன்  தன் உயிர் நண்பர் குந்தி போஜனின் வேண்டுகோளுக்காக தனக்கு முதலாவதாக பிறந்த மகளை, அவர் மகளாக வளர்க்க விருப்பம் கொண்டு கேட்டதினால் அவருடன் அவர் நாட்டில் வளர அனுமதித்து அவருக்கு தத்தாக தாரையும் வார்த்து தந்தார். அன்றிலிருந்து அவள் பெயர் குந்திதேவி ஆயிற்று.

தன் யாகம், அது சம்பந்தபட்ட பூஜைகள் தடங்கலின்றி செய்ய உதவிக்கு பணிக்கப்பட்டிருந்த இளவரசி குந்தி தேவிக்கு இயல்பாகவே அந்த இளவயதிலேயே இருந்த சிறந்த ஆன்மிக பக்தியில் மனம் மகிழ்ந்து அவளுக்கு குழந்தை வரமருளும் ஒரு மந்திரோபதேசம் செய்து அருளியவர் துர்வாசர் மகரிஷி. மேலும், அவளுடைய பிற்கால வாழ்வையும் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் தன் தவ வலிமையால் அந்த மந்திரத்தை அவளுக்கு பயனுள்ளதாக இருக்குமென்றே  உபதேசித்தார். ஆனால், அவள் செய்த முதல் தவறு அதனை அந்த ஏதுமறியா இளவயதிலேயே  விளையாட்டாக சூரியபகவானை நோக்கி, பரீட்சித்து பார்த்ததுதான்..! அதன் மூலமாக பிறந்தவன் மாவீரன் கர்ணன்.

பொது வாழ்க்கைக்கு பயந்து அவள் செய்த இரண்டாவது தவறு தனக்குப் பிறந்த அந்த மகனை ஒரு பேழையில் வைத்து கங்கை நதியில் விட்டது. ஆனால், அப்பேழை தெய்வாதீனமாக நதி நீரினால், எந்த பங்கமும் வாராது,  பேழையுடன் மிதந்து சென்று அதிலுள்ள குழந்தை, ஹஸ்தினாபுரம் அரசவை தேரோட்டி அதிரதியிடம் சென்றடைந்து அவனால் சீரும் சிறப்புமாக வளர்க்கபட்டது. 

குழந்தை கர்ணன் வளர்ந்து நல்ல வாலிப வயதில் ஒரு நாள் தன் வளர்ப்பு தாய் தகப்பனால் தன் பிறப்பின் உண்மை அறிந்து தான் ஒரு பெற்றோர் யாரென தெரியாத அநாதை குழந்தையாக அடையாளம் காட்டப் பெற்ற போது துடித்துப் போகிறான். சென்ற இடமெல்லாம் அவமானம், இன்னாரின் மகன் எனத் தெரியாத அசிங்கங்கள் என மனம் துவன்ற போது, ஒரு காலகட்டத்தில் ஹஸ்தினாபுரத்து மூத்த இளவரசன் துரியோதனனுக்கு உயிரினும் மேலான நட்பாகினான். 

அவனால், சிற்றரசராக ஒரு ராஜ்ஜியம் பெற்று, மணிமுடி, பேர் புகழ் என அனைத்தும் கிடைத்தன. துரியோதனின் நன்மதிப்பால் பதவியேற்று நாட்டில் நல்லாட்சி செய்த போது, இவன் தேரோட்டி மகன் என்ற அவச்சொல் கொஞ்சம் மறைந்து, பிறர் கேட்டதை கொடுப்பதற்கென்றே பிறந்திருக்கும் கர்ண மாமன்னன் என்ற நல்ல பெயர் வந்தது. 

அடுத்து ஹஸ்தினாபுரத்தில் நாடும் சூதும் ஒன்றையொன்று தழுவி மகிழ்ந்தன. துரியோதனனின் சிற்றப்பா பாண்டுவை முறைப்படி மணமுடித்தும் குந்திதேவி தன் கணவனாகிய பாண்டுவுக்கு ஏற்பட்ட குழந்தைகள் இல்லாத ஒரு சாபத்தினாலும், மாற்றாக தன் சிறு வயது பழைய  மந்திர பலன்கனாலும், பெற்றெடுத்த பாண்டவர்களாகிய ஐவருக்கும், துரியோதனன் உட்பட கௌரவர்களாகிய திருதராஷ்டிரனின் நூறு புதல்வர்களுக்கும், பங்காளி சண்டைகள் பாரபட்சமின்றி உருவாயின. கௌரவர்கள் தங்களுடைய கபட சூதாட்டத்தில் வென்ற நாட்டின் அதில் இருவருக்குமான பங்கீடு வார்த்தைகள் படு தோல்வியில் முடிந்தன. 

கௌரவர்களின் தீய மதியினால் விளைந்த சூதும், சிக்கலும், பாண்டவர்களை முடிந்த வரை பழி வாங்கியும், இனி வருந்தி பயனில்லை என்பதாக தலை குனிந்து மெளனித்திருந்தன. தர்மத்தை அதர்மம் வெல்ல துடிதுடித்து கொண்டிருந்தன. 

விளைவு.. போர்...! குருஷேத்திரம் குருதி புனலில்  மூழ்கி தத்தளித்தது. பதினெட்டு நாள் யுத்தத்தில் நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். பாண்டவர்களின் வாரிசுகளும், கௌரவர்கள் அனைவரும், நாட்டுக்காக தம்முயிரை துச்சமாக நினைத்த அரசவை சான்றோர்கள், பெரியவர்கள் என அனைவரையும் யுத்தம் காவு கொண்டது. இறுதியில் தர்மம் வென்றது. அதர்மம் இயன்றவரை போராடி அனைவரின் உயிர்களையும் நடைபெற்ற போருக்கு பரிகாரமாக எடுத்துக் கொண்டபடி. தோற்றது. 

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த குந்திதேவி நினைவலைகளை விட்டு விலகி, ஒரு நீண்ட பெருமூச்செறிந்தாள். எத்தனை கொடிய சம்பவங்கள்  யாரிடமும் கேட்காமல், யாரையும் எதிர்பாராமல் நடந்து முடிந்து விட்டன. 

தன் வாழ்வில்தான் ஆரம்ப முதற் கொண்டு எத்தனை இன்னல்களை அனுபவித்தாயிற்று...! ஒன்றா...! இரண்டா..! வாழ்வில் அடுத்தடுத்து வந்த இன்னல்களை பொருட்படுத்தாது இன்முகத்துடன் மெளனமாக ஏற்று கொண்டதினால்தான்,சிறுவயதில் இருந்தே தன்னை ஒரு துறவியின் மனநிலையில் வாழுபவள் என்கிறார்களோ ..? 

தந்தைக்கு மதிப்பும் தந்து, பின் வளர்ப்பு தந்தைக்கு தன்னுடைய எந்த ஒரு செயலாலும் களங்கத்தை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு, திருமண வயதில் தனக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த சுயம்வரத்தில் தனக்கு மணாளனாக அமைந்த ஹஸ்தினாபுரத்து அரசன்  பாண்டுவுக்கு மனதாற மரியாதை செலுத்தி, புகுந்த நாட்டின் அரசவை பெரியவர்களையும், சான்றோர்களையும், உறவுகளையும் அவர்களின் வார்த்தைகளையும் சத்தியமாக நினைத்து மதித்து, எந்த துன்பங்கள் வந்த போதும், தன் பிள்ளைகளுடன் அனுசரித்து போய், சிறந்த அறிவுரைகள் கூறி அவர்களை வளர்த்து, இறுதியில் தர்மம், தர்மம் என்று, அதன் பால் கொண்ட நல்மதிப்புக்காக பெரும் அறப்போரை சந்தித்து, அன்பானவர்களையும், உறவுகளையும் இழந்து, கடமை என்ற ஒரு செயலுக்காக தன் புத்திரர்களை ஹஸ்தினாபுரத்து அரியணையில், அமர்த்தி அரசாள வைத்துப் பார்த்து, பிறகு வயதான தன் மைத்துனர்கள், மற்றும்  உடன்பிறவா சகோதரி காந்தாரியுடன் அவர்களின் வருத்தத்தையும், வார்த்தைகளையும் கண்டு தானும் மனம் வருந்தி, அவர்கள் வானபிரஸ்தம் ஏகுகையில், அவர்களை தட்டி அரசவையில் இருத்தி வைக்க இயலாமல், தானும் துறவு பூண்டு வனவாசம் ஏகி, அங்கு வசித்த பல வருடங்களுக்குப்பின், அந்தக் காட்டில் எழுந்த  காட்டுத்தீயின் வெப்பத்தையும், குளிர் நிலவாக ஏற்று வாழ்ந்த அந்த உலக வாழ்வை முடித்து விட்டு  இங்கு வந்தாகி விட்டது. 

இன்று வலிய வந்து ஏற்றுக் கொண்ட இருப்பிடம் இது. இதில் குறையொன்றும் இல்லை..! செய்த தவறுக்கு பரிகாரம் தேடித்தான் இந்த வாழ்வை ஏற்று வந்துள்ளேன் என மனத்துள்  கூறிக் கொண்டாள் குந்திதேவி. 

துறவு என்பதை வாழ்வின் இறுதி காலத்தில், எல்லாம் நடந்து முடிந்த பின், புகுந்த வீட்டு உறவுகளின பேச்சுக்கு கட்டுப்பட்ட பின், பிறகுதான் முழுமையாக ஏற்றுக் கொண்டேனா என்றால், இல்லையென்று தன் உடல்  நிச்சயத்துடன் கூறுகிறது என்பதையும் அவளால் மறுக்க இயலவில்லை. 

குந்தி ராஜ்ஜியத்தில் வாழ்ந்த போது வாலிப மனதில் அப்போது எத்தனை ஆசைகள்..? இளமை பருவத்தில் இளவரசியாக வசதியாக வலம் வந்து வாழ்ந்த காலங்கள்...! மங்கைப் பருவத்தில் ஹஸ்தினாபுரத்து மன்னர் பாண்டுவை சுயம்வரத்தில் கைப்பிடித்தவுடன் மனதில் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத சந்தோஷங்கள்...! அப்போது தன்னால் அவைகளை துறவு நிலையுடன் விலக்கி வைக்க இயலவில்லையே..! 

மணந்த கணவரிடம் தன் இளவயது தவறை சமயம் பார்த்துச் சொல்லி, மன்னிப்பு கேட்டு விட்டு வாழ்வின் சந்தோஷங்களை தொடரலாம் என்று தானே அந்த ஆசைப்பட்ட மனது துடித்தது. ஆனால், அதுவரை ஆசைப்பட்ட அந்த மனது அண்டை நாட்டுடன் போருக்குச் சென்ற கணவர் போரில் கிடைத்த பரிசாக மற்றொரு நாட்டுப் பெண்ணை மணமுடித்து கைப்பற்றி வந்ததை கண்டதும், பிறகு தன் கணவர் அவர் பெற்ற சாபத்தின் காரணமாக, நாட்டை விட்டு, கானக வாழ்வை ஏற்றுக் கொண்ட போது, தாம் இருவரும் அவருடனேயே கானகம் செல்ல வேண்டிய சமயங்களில்தான், முழுமையான துறவை நோக்கி, மனதுடன் உடலும்  செல்ல ஆரம்பித்து விட்டதை அவள் முழுவதுமாக உணர்ந்தாள். ...! 

பிறகு கணவர்  "தான் இரு மனைவிகளை பெற்றும், தன் சந்ததியினரை பெறாமலேயே  தன் வாழ்வு இவ்வாறு முடிய நேருகிறதே" என வருத்தமுற்று பேசிய ஒரு  சூழ்நிலையில், அதுநாள் வரை மூடி மறைந்திருந்த தன் மனதில் உள்ள அந்த உண்மையை எடுத்துச் சொன்ன போது, கணவரின் ஆஞ்கைபடி மூன்று மகன்களை தன் மந்திர உச்சாடன மகிமையில் ஈன்றெடுத்த தந்த போதும், மனதில் எவ்வித ஆசாபாசங்களுக்கும் இடம் தரவில்லையே...! அதனால்தான் தனக்கு  இளையவளான மாத்ரி கேட்டவுடன் அவளுக்கும் அந்த மந்திர உபதேசம் செய்வித்து, அவள் மூலமாகவும், இரு குழந்தைகளை தன் கணவருக்கு தர முடிந்தது. 

பின்பு விதி வழி அன்பு கணவரையும், இளையவள் இழப்பையும் தாங்கிக் கொண்டு பெற்ற குழந்தைகள் ஐவரை வளர்த்து காக்கும் பொறுப்பை சுமந்த போதும், மனது சமநிலையில்  பக்குவமடைந்து விட்டது. அந்த பக்குவந்தான் புகுந்த நாட்டுக்கு வந்து சேர்ந்ததும், பெரிய மைத்துனர் திருதராஷ்டிரனின் நூறு குமாரர்கள் தங்கள் புதல்வர்களை அலட்சியபடுத்தி, அவமானப்படுத்தி பார்க்கும் போதும், தன் புதல்வர்களுக்கு அமைதி காக்கும்படி அறிவுரைகள் சொல்ல வைத்தது. 

விதி அத்தோடு அவளை விட்டதா? இளவயதில், அறியா பருவத்தில் பெற்ற மகனை, நதி நீரில் அனுப்பி வைத்த மகனை, சந்திக்க வைத்து, அவனிடம், தங்களுடன் வந்து விடுமாறு அறிவுறுத்தி, அவன் அதை மறுத்து சொன்ன அந்த வார்த்தைகளில், அவனிடம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு, அவனிடமே இரண்டு கடுமையான வரங்களை கேட்கும்படி செய்த அந்த விதியிலும், அவள் பக்குவப்பட்ட மனம் அதிகம் கலங்காமல் சமனபட்டுதான் இருந்தது. பதிலுக்கு அவன் கேட்ட இரு வரங்களையும் தர முடிந்தது. 

இறுதியில் அந்த தலைமகன் சொன்னபடி போரில் வீரமரணம் அடைந்து உயிர் நீத்த போதும், அந்த மகனை வாரி அணைத்து, "இவனும் என் மகன்" என ஊரறிய சொல்லும் போதும், மனது அழுது துவண்டாலும் நிலைகுலைந்து போகாமல், ஒரு துறவியின் ஒருமை சார்ந்த எண்ணத்தில் வலுப்பட்டுத்தான் நின்றது. ஆனால், தன்னால் அவன் வாழும் போது பெற்ற அவமானங்களை தினமும் நினைக்கும் போது மனம் சஞ்சலங்களில் ஆழ்ந்ததை மட்டும் அவளால் தவிர்க்க இயலவில்லை. இதோ...! அதற்காகத்தான், ஒரு பிராயசித்தமாக இந்த இடத்தை அவள் தேர்ந்தெடுத்து பிடிவாதமாக வந்துள்ளாள். 

"அம்மா...! தாங்களா?" என்ற குரல் கேட்டு மீண்டும் கலைந்தாள் குந்திதேவி.

"யார்.. பாஞ்சாலியா..? நீ ஏனம்மா இங்கு வந்தாய்..? உன்னை யார் இங்கு வரச்சொன்னது? உன்னை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் யாருக்கு வந்தது.? எப்போதுமே அமைதியாக ஒலிக்கும் அவளின் குரல் பாஞ்சாலியின் பதிலுக்காக பரபரத்தது. 

" அம்மா..! நீங்கள் முதலில் சொல்லுங்கள்...! எதற்காக நீங்கள் இங்கு வாசம்..?நான் உங்களை இங்கு சற்றும் எதிர்பார்க்கவேயில்லை...!" பாஞ்சாலியின் வருத்தம் குரலில் தெரிந்தது.

"என் பிராயச்சித்தம் தேடி நானாக இங்கு  வந்திருக்கிறேன் மகளே..! இது இறைவன் அளித்த முடிவல்ல..! நானே விரும்பி அளித்துக் கொண்ட தண்டனை....!"ஆனால், உன்னை நான்  இங்கு எதிர்பார்க்கவில்லை. நீ எப்படி இவ்விடம் வந்தாய்..? அதைக்கூறு..! அழுத்தமாக வந்த அந்த குரலுக்கு பணிந்தாள் பாஞ்சாலி. 

மஹாராணி காந்தாரியின் சாபத்தினால், யாதவ குலம் ஒருவரை யொருவர் அடித்துத் தாக்கிக் கொண்டு அழிந்ததையும், அதன் மன்னனான கிருஷ்ணர் அதை கண்டு மனம் பொறுக்காமல், தான் இந்த பூலகில் வந்த தன் அவதார நோக்கம் முடிவுற்றதை மக்களுக்கு உணர்த்த வேண்டி, தம் பூத உடல் விட்டு வைகுண்டம் திரும்பியதையும் விவரித்து கூறினாள். 

"மேலும், பஞ்ச பாண்டவர்களும் கிருஷ்ணர் இல்லாத உலகில் வாழ விருப்பமின்றி, தங்கள் மகன் அபிமன்யுவின் புத்திரனாகிய பரீஷித்துவுக்கு அரசனாக பட்டம் கட்டி விட்டு, பூவுலகை துறக்க எண்ணம் கொண்டு உயிருடன் சொர்க்கத்தை அடைவதற்காக  மேருமலை ஏறி நடந்து வந்து கொண்டிருக்கும் போது, தான் முதலில் மயக்கமுற்று மடிந்ததினால், இங்கு வந்த கதையையும் கூறினாள் பாஞ்சாலி." 

"ஆ...!!! என் அன்பு மருமகன் கிருஷ்ணனுக்கா இந்த முடிவு..! மற்றவர்களின் செயல்களை மட்டுமின்றி அவனின் செயல்களையும்  அவன்தானே தீர்மானிப்பான். ...! அவனால் யாதவ குலத்தை கட்டுப்படுத்த இயலவில்லையா. ..?  என்ன ஒரு சோகம்..! ஆனால், எல்லாமே அவன் நினைத்ததை  நடத்தும் மாயைதான்...! இருந்தும் இங்கிருக்கும் எனக்கே அவன் மறைவு செய்தி வருத்தத்தை தரும் போது, அவனால் மட்டுமே, அவன் வார்த்தைகளின் போக்குப்படி அசைபவர்கள் நீங்கள் அனைவரும்...! உங்கள் மனதும் எனக்குப் புரிகிறது....!! சரி.. நீங்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைய எண்ணம் கொண்டு சேர்ந்து  செல்லும் போது, உனக்கு மட்டும் ஏன் இந்த முடிவு உண்டாயிற்று...? மகளே...!"குந்தியின் கவலை அவள் குரலில் ஒலித்தது. 

"காரணம்.. அதை நான் எப்படிச் சொல்வேன் அம்மா..! நான் உங்கள் குமாரர்களாகிய பஞ்ச பாண்டவர்களில், இளைய குமாரர் பார்த்தனின் மேல் வைத்த தனிப்பட்ட பாசந்தானாம் அம்மா..! ஐவரை விட அவர் மேல் நான் தனிப்பட்ட பக்தி, தனிப்பட்ட அதீத பாசம் வைத்திருந்தேனாம்..! இது எப்படி சாத்தியமாகும்...!! என்னையறியாமலேயே பார்த்தன் பேரில் நான் அதிகம் பற்று வைத்திருந்தேனா அம்மா...! இது உண்மையா அம்மா..! விசும்பலாக வந்தது பாஞ்சாலியின் குரல். 

"அது நீ அவனை மட்டும் மணமுடிக்க  நினைத்திருந்த போது, தீடிரென மாற்றங்களை எதிர்பார்த்திராத ஒரு காரணத்தால் கூட வந்ததாக இருக்கலாம். என்ன செய்வது? என் வாயிலாக உன் வாழ்க்கைப் பாதை மாறியது. நீ தவறேதும் செய்யவில்லை மகளே..! உன் குணத்துக்கு நீ எப்படியோ அப்படியேதான் இருந்தாய்..! இப்போதும் இருக்கிறாய்...! நீ ஒரு உத்தமி அம்மா...! உத்தமி. அதில் என்றும் மாற்றமில்லை மகளை... வீணாக வருந்தாதே...!! அன்றும் சரி,..! இன்றும் சரி..! என் வார்த்தைக்கு மறுப்பேதும் சொல்லவில்லை. உன்னைப்போல் ஒரு மருமகளைப் பெற.... இல்லையில்லை...., ஒரு மகளைப் பெற நான்தான் தவம் செய்திருக்க வேண்டும். 

இதோ... நானும்தான் நீ சொல்லும் அந்த மகனின் மேல் அதிக பாசம் வைத்து, என் வயிற்றில் பிறந்த அறுவரில் பெரியவனை இழந்து விட்டேன். இழந்ததோடு மட்டுமின்றி, அவனின் வாழ்ந்த காலம் தொட்டு மடியும் வரை அவனுக்கு ஏற்பட்ட  அவமானங்களுக்கு காரணமான நான் ஒரு பெரும் பாவியம்மா..... பாவி.. ! அந்தப் பாவத்தை எங்கு  எப்படி நான் கழித்து தீர்க்கப் போகிறேன்....?  அதனால்தான் காட்டுத் தீயில் மடிந்த பின், உன் பெரிய மாமனார்கள், அருமை தாயார் காந்தாரி அவர்கள் என யார் சொல்லியும் கேட்காமல், அனைவருக்கும் கிடைத்த அந்த  சொர்க்கத்தின அழைப்பை என்னையும் பகிர்ந்து கொள்ள அழைத்தும் கூட ஏற்று செல்லாமல் பிடிவாதமாக இந்த நரகத்திற்கு வந்தேன். ஆனால், இங்கும் என் வயதிற்காக எந்த கடுமையான வேலைகளும் தராமல், மரியாதை தந்து நோகடிக்கிறார்கள்...! நொந்து கிடக்கும் மனதிற்கு மருந்தாக என் உடலையும் கொஞ்சம் கடுமையான வேலைகளினால் நோகடித்தால்தானே எனக்கு....,!! நான் செய்த பாவத்திற்கு  பரிகாரமாக இருக்கும்...!! "கண்களில் கண்ணீருடன் ஒரே மூச்சில் குந்தி தேவி சொல்லி முடிக்கவும், அர்ஜுனன் நகுலன் சகாதேவன், பீமன் என நால்வரும் அங்கு வந்தனர். 

" அம்மா...! நீங்கள் எப்படி இங்கு...?" என பாஞ்சாலி கேட்ட அதே கேள்வியுடன் பதறி போய் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டனர். 

எதிர்பாராது காலடியில் பணிந்து நிற்கும் தன் அன்பு மகன்களை கண்டதும் குந்திதேவி திகைத்துப் போனாள். 

"குமாரர்களே ..! என் கேள்வியும் அதுதான்...! இப்போதுதான் பாஞ்சாலி வந்தாள்.. அடுத்தடுத்து நீங்களும் இங்கு வர காரணம்...? உங்களில் மூத்தவன் உங்கள் அண்ணன் எங்கே..? அவனை தனித்து விட்டு, விட்டு இப்படி வர உங்களுக்கு யார் ஆஞ்கையிட்டது...? திகைப்பு நீங்கி குந்திதேவியும் சற்றே கோபத்துடன்  கேட்டபடியே தன் மகன்களை அவர்கள் தலையை தொட்டு ஆசிர்வதித்தாள். 

" அம்மா..! அவரவர்களின் திறமைகள் மேல் நாங்கள் எங்களையறியாமலே அதிகமாக பெருமை கொண்ட காரணத்தால் இங்கு வர நேர்ந்தது...! அண்ணன் அவர் தர்மத்தில் என்றும் சிறிதும் பிறழாதவர் என்று தாங்கள் அறிவீர்கள். அவரின் செயல்கள் எவருக்குமே துன்பத்தை தராதபடிக்கு கடமை வீரராக மட்டுமே வாழ்ந்தவர். அதனால்,அவர் இப்போது அவருக்கு  விருப்பமின்றியே இருந்தாலும், சொர்க்கத்தை சென்றடைந்து இருப்பதாகவும் அறிந்தோம்..! அங்கு அவர் அனைவரின் விருப்பங்களை உணர்ந்து செயலாற்றி சத்திய தர்மங்களை அனுசரித்து நடந்து கொள்வார். இருப்பினும், இப்போது எதிர்பாராது உங்களிருவருடன் இங்கு நாங்கள் சேர்ந்திருப்பதையே எங்களின் சொர்க்கமாக கருதுகிறோம்...! அர்ஜுனன் அமைதியாக கூறியபடி அன்னையின் கைகளை வாஞ்சையுடன்ப் பற்றிக் கொண்டான். 

குந்தியின் மனம் சோர்வுற்றது....! "யாருமில்லாத தனிமையுடன் ஒரு துறவியின் மன நிலையோடு, தன் பிராயசித்தத்தை இங்கு கழிக்கலாமென்று வந்தால், இப்படி தன்னை சூழ்ந்த உறவுகளும் வந்து தங்களையும் என்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு சந்தோஷமடைகிறார்களே..!" என்ற வருத்தம் மேலோங்கியது அவள் மனதில்...! 

"குழந்தைகளே..! உங்களுக்கு ஏன் இந்த முடிவு..?  உங்களை பூலோகத்தில் ஒரு பொழுதேனும், வாழ விடாமல் இம்சித்து பார்த்து சந்தோஷமடைந்தவர்கள் அனைவரும் சுவர்க்கத்தில் இருக்க, நீங்கள் ஏன் இப்படி மறுபடியும் அல்லாட வேண்டும்..? ஏன் இந்த சோதனைகள் மறுபடியும்...! இது இறைவனுக்கே அடுக்குமா..? குந்தி தன்னையறியாமல் மனம் நொந்து கூறி கண்ணீர் விடவும், "

" அதைத்தான் அம்மா நானும் அங்கு சென்றவுடன்  கேட்டேன்..! உன் மனதில் இன்னமும் கௌரவர்கள் மேலுள்ள கோபங்கள் அசூயைகள் குறையவில்லையா..? நடந்த போரில் தர்மம் தோற்காது வெற்றிகளை உனக்கு அள்ளி அளித்தும் அவர்கள் மேலுள்ள உன் மனதின் வன்மங்கள் அழியவில்லையா ? நீ எத்தனை தர்மங்கள் செய்தும், உன் அறியாமையால் இப்படி உன் ஒன்று விட்ட  சகோதரர்களை இகழலாமா? அதனால் நீயும் உன் தம்பிகள், மனைவியுடன் சிறிது காலம் நரகத்திலிருந்து வா" வென தர்ம தேவன் என்னையும் இங்கு இருக்கப் பணித்து விட்டார்..! மேலும் கௌரவர்கள் மட்டுமின்றி குருஷேத்திர பூமியில் வீரமரணம் அடைந்த காரணத்தினால் அனைவரும் இன்று சொர்க்கத்தின் நிரந்தரவாசிகள் ஆகி விட்டார்கள். ஆசைகளையும், பற்றையும், அதன் காரணமாக எழும் கோபங்களையும் விடாதிருக்கும் எங்களுக்குத்தான் இந்த நிலை. எனக்கும் தம்பிகள், பாஞ்சாலி இல்லாமல் அங்கு தனித்திருக்க விருப்பமின்றி தோன்றவே உடனே இங்கு வந்து விட்டேன் அம்மா...!!" என்றபடி அங்கு தர்ம புத்திரர் வரவும் சரியாக இருந்தது. 

அனைவரும் தீடிரென அவர் சொல் கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த பின் ஒருவரையொருவர் பிரியமுடன பார்த்து கண்களால் அன்பை பகிர்ந்து கொண்டனர். 

" அம்மா..! எங்களை விடுங்கள்..! நீங்கள் இப்படி விரும்பி இங்கு வரலாமா? உங்கள் வயதிற்கு எத்தனை இன்னல்களை அனுபவித்து விட்டீர்கள்..! அதை விடவா உங்கள் பிராயசித்தங்கள்..? உங்களை நாங்கள் அறிவோம் அம்மா..! உங்கள் மனதால் நீங்கள் யாருக்கும் கெடுதல்களை நினைத்ததில்லை...! அப்படியிருக்கும் போது ஏன் இந்த முடிவெடுத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்...? தர்மர் அன்னையின் அருகில் வந்து அமர்ந்தபடி இதமாக பேசினான். 

"குழந்தாய்.. நீ தர்மத்தின் புதல்வன்.. இப்படித்தான் உன்னால் யோசிக்க முடியும்...! ஆனால், நான் உன் தமையனுக்கு அளித்த வேதனைகளை நீ அறிவாயா.. ? உங்களை நான் எங்குமே எப்போதுமே எந்த நிலையிலுமே விட்டுத் தந்ததில்லை. மகிழ்வுகளும், அதே சமயம் வேதனைகளும், சூழும் போது, உங்களுக்கு பக்கபலமாக நான் உங்களுக்கு அருகிலேயே இருந்துள்ளேன். இரண்டையும் சமமாக பார்க்கும்படி கற்றுத் தந்துள்ளேன். விளைவுகளை கண்ட போதில் சமாதானபடுத்தியுள்ளேன். ஆனால், அவனை பிறந்தவுடன், மனமொப்பி இல்லையென்றாலும், என் ராஜ வாழ்க்கைக்கு புறம்பானதாக, ராஜ குடிமக்களுக்கு, அவச்சொற்களை தந்து விடக் கூடியதாக அவன் பிறப்பு இருந்து விட கூடாதே என்பதற்காக, அவன் வாழ்வை அவனை கேட்காமலேயே தியாகம் செய்ய வைத்த பெரும் பாவியடா நான்...! 

"அன்று உங்களுக்கு பக்கபலமாக, தூணாக, நின்ற மாயவனின் மூலமாக அவன்தான் என் மகன் எனபதையறிந்து, அவனைப் பார்க்கச் சென்ற போது, அவனின் தாயார் நான்தான் எனக் கூறியும் சிறிதளவும்  நம்பவில்லை அவன். 

மாறாக இப்படி ஒரு தாயார் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென என்னை பெருமைபடுத்தினான். என் சோகத்தை குறைப்பதற்காக உங்களை நீங்களே இப்படி பொய்யுரை சுமந்து வந்து கூறி என்னை ஆசுவாசபடுத்துகிறீர்களா என கேட்டு அவனை அவனே குறைத்து மதிப்பிட்டு கொண்டான். 

இறுதியில் உண்மை அவனின் மனதோடு உரத்து உரைத்ததும், "அம்மா...!  இன்றாவது என்னை பெற்றெடுத்தீர்களே..!!" என என்னை கௌரவப்படுத்தினான். அவனை நான் பெற்றதற்கு மகிழ்ந்த அந்த தருணத்திலிருந்து, "அம்மா..! என்னை ஏனோ நீ பெற்றெடுத்தாயே...!  என இன்று வரை நான் ஒவ்வொரு நாளும், என் தாயை நினைத்தபடி, பொழுதுக்கும் வருந்தி நிற்கிறேன்.  

அத்தனை நாள் பிரித்து வைத்த கோபத்தை அந்த நேரத்தில் சிறிதேனும் காட்டவில்லை அந்த குணமுடையோன். என்னை கண்ட சந்தோஷத்தில், நான் கேட்ட வரங்களை தட்டி கழிக்காமல் உடனே பரிசாக தந்தவன், பதிலுக்கு அவன் இரு வரங்களை கேட்டு என் வாயை கட்டிப் போட்டான். அச்சமயம் பேச்சிழந்து நின்றேனே ஒழிய  மூச்சிழந்து போகவில்லை நான்..! 

"கௌரவ படைகளுக்கு போர் பதவிகள் பங்கிட்டு தரும் சமயத்தில், "நீ வீரன் அல்ல...! பெற்றவர்கள் யாரென தெரியாத  கோழை" என சான்றோர்கள் இழிந்து பேசிய வருத்தத்தில், "இத்தனைக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்த அந்த அன்னை...! அன்னையா அவள்...! பெற்ற மகனை நதியில் இட்டு கொல்ல நினைத்த ஒரு பாவி... அரக்க குணமுடைய அவள் ஒரு அன்புத் தாயாக இருந்திருக்க மாட்டாள். ...? அவளால்தான் எனக்கு இந்த இழிவு..! இப்போது என் வயிறெரிய கூறுகிறேன். .அவள் செய்த இந்த  பாவங்களுக்கு அவள் ஏழேழு பிறவிக்கும் அவள் நரகத்தில்தான் வாசம் செய்ய வேண்டும்...!" என்று மனம் கடிந்து, உடல் கடினப்பட்டு கூறினானே ...!  அந்த சொல் சொல்லுமளவுக்கு அவன் மனம் எந்த பாடு பட்டிருக்கும்...? அந்த பாவத்திற்கு, பரிகாரமாக, அவன் சொல்படி நான் பிராயச்சித்தம் செய்ய வேண்டாமா கூறுங்கள்...!!" குந்திதேவி இத்தனை நாள் சோகத்தையும், மனதில் ஏற்பட்ட வருத்தத்தோடு சேர்த்து கண்ணீராகவும் கொட்டித் தீர்த்தாள். 

பாண்டவர்கள் ஐவரும், பாஞ்சாலியும் அவளை எப்படி தேற்றவது எனத் தெரியாமல் தவித்தபடி இருந்தனர். இதுநாள் வரை தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாது அமைதியாகவே இருந்த தாய் இன்று இப்படி உடைந்து போவாள் என்பதை அவர்கள் சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. 

" அம்மா.." ஆ.....! அன்று கேட்டு புளகாங்கிதமடைந்த அதே குரல்...! காதுகளில் தேனாக பாயந்து நாவின் வழி இறங்கி, அதன் சுவையை மனதுக்குள் பாய்ச்சியது குந்திதேவிக்கு. அங்கே கர்ணன் பழைய தேஜஸ் பெற்ற பொலிவோடு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

"கர்ணா.. என் அன்பு மகனே....! என்று பாய்ந்து சென்று அவனை தழுவி வரவேற்க குந்தியின் கைகளும், மனதும் பரபரத்தன. ஆனால், ஏதோ குற்ற உணர்வு தடுக்க, மனதை அடக்கியபடி "கர்ணனா..! வா. ! மகனே..! " என்றாள். 

" அம்மா..! நீங்கள் பேசியதெல்லாம் கேட்டேன். அன்று உணர்ச்சிவசப்பட்டு சொன்ன என் வார்த்தைக்காக உங்களுக்கு ஏனம்மா இந்த தண்டனையை வழங்கிக் கொள்கிறீர்கள்.? அன்று அந்த சான்றோரின் மனதில் உதித்த நல்ல எண்ணந்தான் என்னை முதல் நாளைக்கே யுத்தத்திற்கு செல்ல விடாமல் தடுத்தது என்றாரே..! அதனால்தான் என் நண்பனுடன் இன்னமும் பல நாட்கள் நான் பூவுலகில் இணைந்திருக்க முடிந்தது. அம்மா...! இப்போதும் என்னை வாழ வைத்த தெய்வம் சொல்லித்தான், அவன் வருத்தத்தை கண்டதும் நான் இங்கு வந்தேன். நீங்கள் படும் சிரமங்களை என்னால் பார்க்க இயலவில்லை. புறப்படுங்கள்..! இப்போதே..!  நாம் இங்கேயாவது சேர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததேயென என் மனம் பூரிக்கிறது... வாருங்கள் அம்மா...!போகலாம் " என்றபடி தன் கரம் பற்ற வந்த மகனை தன் கரம் கொண்டு விலக்கினாள் குந்திதேவி. 

" இல்லை.. மகனே...! உன் வாக்கு பொய்யாக கூடாது..! நான் சில காலம் இங்கிருந்து விடுகிறேன். அதுதான் நம் அனைவருக்குமே நல்லது...! மீண்டும் காண வேண்டிய பந்தங்களை காணும் போதும், கண்ட போதும், மனதில் அனேக கனல்கள் உருவாகும். அதை இந்த சுவர்க்க பூமியும் தாங்காது. மேலும், என்னால் மீண்டும் ஒரு பிரளயத்தை சகிக்க இயலாது..!" குந்தியின் குரலில் இப்போது கொஞ்சம் பயம் தெரிந்தது. 

" அம்மா..! அவ்விதம் இப்போது ஏதும் நடவாது என உறுதி தந்திருக்கிறார் உன் மருமகன்....!கர்ணனின் பேச்சில் குறும்பு தொனிக்கவும், திடுக்கிட்டாள் குந்திதேவி. 

"யார்..?  அந்த மாயவனா..? அவனும் இங்கே வந்து விட்டனா ?  குந்தி சுற்றுமுற்றும் நோக்கவே, "அத்தை..!! நான் எங்கு போயிருந்தேன். திரும்பி வருவதற்கு...? உங்களுடன்தானே எப்போதும் என் வாசமும்..!! என்ற குரல் கேட்டு மெய்சிலிர்த்தாள் குந்தி தேவி. 

அங்கு கிஷ்ணரின் விஜயம் கண்ட போதினில், அது அனைவருக்குமே அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தது.

" அத்தை.! உன் சந்தேகங்கள் தீர்ந்ததா ? நான் இந்த அவதார நோக்கத்தில் எடுத்த பிறவி உலக மக்களின் நன்மை கருதியே..! அதன் நன்மைக்காக நீங்கள் அனைவரும் என் மனதை புரிந்து கொண்டவர்களாக பிறந்து வாழ்ந்து,வீழ்ந்து இப்போது மறுபடியும் என்னுள்ளேயே கலந்து விட்டீர்கள். இனியேது மறுபடி, சூது, வாது, யுத்தம் பூசல் பிரிவெல்லாம்...? கலங்காதே அத்தை. இனி அனைவரும் என்னிருப்பிடத்திலேயே கலந்து விடலாம்...! "வா.. உன் மக்களுடன்.. அங்கே உனதருமை கணவரும் காத்திருக்கிறார். நீ செய்த தான தர்மங்கள், உன் நல்ல உள்ளத்தின் பிரதிபலிப்புகள் அங்கு உன் நிழலாக இருக்க வேண்டி காத்திருக்கிறது. புண்ணிய உலகத்தில் பலகாலம் இருந்த பின் உனக்கென விதிக்கப்பட்டதை பிறகு ஏற்றுக் கொள். புனரபி ஜனனம். புனரபி மரணம் என்பதை நீ அறியாதவள் இல்லையே....!!! "  கிருஷ்ணன் தன் அன்பு கரம் பற்றி அவளை அழைத்துப் போனதில், குந்திதேவி  சிந்தை தெளிவுற்று அவனுடன் நடந்து போனாள். 

அவளைச்சுற்றி, அவள் அருகாமையில் தன் மக்கள் அறுவரும், நட்புறவோடு கலந்து நடந்து வருவதைக் காண மனம் மகிழ்வுற்றாள். பாஞ்சாலியும் ஓடிவந்து தன்னுடன் கரம் கோர்த்து கொண்ட போது, அவள் அடைந்த பெருமைக்கு அளவில்லை எனச் சொல்லலாம். தர்ம தேவரும், கௌரவர்களும், சொர்க்கத்தின் வாயிலில் வந்து நின்றபடி அவளை அன்புடன் வரவேற்றார்கள். 

சூரியதேவன் தன் ஸவர்ணமயமான  பொற்கரங்களால் அனைவரையும் ஆசிர்வதித்ததுடன், மகிழ்வில் சற்று அதிகமாகவே ஜகத்ஜோதியாக காட்சியளித்தார். 

                               கற்பனை

                                காவியம்       

                                  முற்றும்.

இது சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் ஒரு (கடந்த வெள்ளிக்கு முன்பான வெள்ளி என நினைக்கிறேன்.)  வெள்ளியன்று கர்ணன் திரைப்படத்தில் ஒரு பகுதியை (குந்தி தன் மகனையறிதல்) தந்து அதில் வரும் காட்சிகளை மற்ற திரைப்படங்களோடு ஒப்பிட்டு தொகுத்த போது, சொன்னது. "இதற்கு தோதாக யாராவது இந்தகாட்சிகள் சம்பந்தப்பட்டதாக எழுதுங்களேன்." என்றார். எனக்குத் தந்த கருத்திலும் அவ்வாறே சொன்னார். என்னையும் அந்தப்படத்தின் காட்சிகள் வெகுவாக பாதித்தது. அதன் விளைவே இந்தப் பதிவு. இதில் என் கற்பனை முழுக்க உண்மைகளுடன் கலந்துள்ளது. 

நான் மஹாபாரதத்தை அக்கு வேர், ஆணிவேராக கரைத்து குடித்தவள் அல்ல..! எனவே இதில் ஏதேனும் அறிந்தறியாத பிழைகள் இருந்தால், மஹாபாரதத்தை முழுக்க அறிந்து படித்தவர்கள் மன்னித்து விடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

பதிவு பெரிதாக உள்ளதேயென யாரும் புறக்கணிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். மஹாபாரதம்  என்றால், அதை சார்ந்த பதிவும் சற்று நீளத்தைதானே காணும். நானும் என்னாலான வண்ணம் சுருக்கி உள்ளேன். :)) 

ஸ்ரீராம் அவர்கள் எபிக்கு எழுதி அனுப்பச் சொன்னதாக நினைவு. ஆனால், இரண்டு வாரங்களாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதத் தொடங்கி இன்றுதான் என் கற்பனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். இதுவே பயங்கர தா.. ம... த.. ம்.. இதில் எழுதியதை என் கைப்பேசியில், ஒருங்கே அமைத்து சீராக்கி, அவருக்கு அனுப்புவதற்குள் பல வெள்ளிகள் முளைத்து விடுமென்பதால், இந்த வெள்ளியிலேயே என் பதிவில் இறக்கி விட்டேன்..மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரரே.

இதை படித்து கருத்துக்கள் தெரிவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.

மேலும் சென்ற பதிவுக்கு வந்த அனைவருக்கும் பதில் கருத்துக்கள் வழங்க முடியாதபடிக்கு ஒரு மாதமாக என் உடல்நலம் பாடாக படுத்தி விட்டது. அதற்குள் இந்தப்பதிவை எழுதி முடிக்கும் ஆவலும் வேறு சேர்ந்து கொண்டதால்,அதற்கு பதிலுக்கு நன்றி சொல்ல இயலாமல் போய் விட்டது. அதற்காகவும் அனைவரும் மன்னிக்கவும். 🙏. 

Saturday, January 11, 2025

பழகிய இனிப்பும், காரமும்.

 மணிக் கொழுக்கட்டை.


இது கடாயில் ந. எண்ணெய் சிறிது ஊற்றி அடுப்பில் காய வைத்த படம்.   


இது இரண்டு டம்ளர் அரிசி மாவு, அதற்கு தகுந்த உப்பு, கொஞ்சம் காரப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கலந்து வைத்த கலவை.


இது  அடுப்பில் கடாயில் வைத்த அந்த ந. எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் கலந்து வைத்த அரிசி மாவு கலவையை விட்டு கை விடாமல் கிளறி அதை ஒரு வழியாக்கும் படம். 


இது அந்த கெட்டியான மாவு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்த படம். 


இந்த மாவு உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் போல் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். 


"நம் முன்னைய நிலை என்ன..?  என எண்ணி  கலங்கிய வண்ணம் இருந்தாலும்,   உ. ப. க. பாவாகிய நாங்கள் சி. வத்தல், ப. மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் இவைகளின் நட்பில் இணைந்து ஒரு கூட்டாகி இருக்கிறோம். 
 

அது போல் எங்களை முதலிலேயே முறையே படங்கள் எடுத்து  பிரசுரபடுத்தவில்லையென்றாலும், இப்போது சிம்மாசனத்தில் வந்து அமர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளோம் 


இது அந்த பருப்பு இட்லி மீண்டும் தன்னைச் சுடும் நெருப்பின் தணலால் மனம் உடைந்து உதிர்ந்து வரும் நிலை. 


அப்பாடா..! ஒரு மட்டும் இதெல்லாம் கலந்த கலவையாக நான் உருபெறுமாறு செய்து ஒரு பெயரையும் சூட்டி விட்டார்கள். 😀

இனி இனிப்பு கொழுக்கட்டை. 

நல்ல பெரிய தேங்காயாக( சற்று முதிர்ந்தது..அப்போதுதான் பூரணம் நன்றாக இருக்கும்.) ஒன்றை உடைத்து பொடிதாக துருவி வைத்துக்கொள்ளவும். 200 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் க. பருப்பு இரண்டையும் எடுத்துக்கொண்டு ( அடுப்பை பற்றவைத்துக்கொண்டு) வெறும் கடாயில் சற்று பொன்னிறமாக வறுத்து பின் நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு ( மண்டை வெல்லமாக இருந்தால் பெரிய சைசில் ஒரு உருண்டை அளவு போதும்! இந்தப் பக்குவத்திற்கு சரியாக இருக்கும். ) கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டிக்கொள்ளவும். பிறகு கடாயில் வடி கட்டிய வெல்லத்துடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும். தேங்காய் பூவும் வெல்லமும் சேர்ந்து வரும் சமயம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பாசி பருப்பு பொடியை சிறிதுசிறிதாக அதனுடன் கலந்து கிண்டி கெட்டியாகும் தருணத்தில் ஏலப்பொடி சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேறு பாத்திரத்தில் ரெடியான வெல்லப் பூரணத்தை மாற்றிக் கொள்ளவும். பாசிப் பருப்புக்கு பதிலாக கடலைப் பருப்பை மட்டும் வறுத்து பொடி செய்தும் பூரணம் செய்யலாம். அல்லது பாதி பாதி அளவாக இரு பருப்பையும் எடுத்துக் கொண்டு தனித்தனியே வறுத்து பொடி செய்து போடலாம். இந்த கலவையும் ருசி நன்றாகவிருக்கும். நான் முக்கால்வாசி இந்த முறையில் செய்வேன். சில பேர் பருப்புகள் எதுவும் கலக்காமல் வெறும் தேங்காய் பூரணம் மட்டும் செய்வார்கள். போளிக்கு பூரணம் செய்வது போல் கடலைப் பருப்பை வறுத்து ஊற வைத்து அரைத்து தேங்காய் வெல்லப் பூரணத்துடன் கலந்தும் கொழுக்கட்டைகள் செய்யலாம். இப்படியான நாலு விதங்களில் நமக்கு எது சௌகரியபடுகிறதோ அவ்விதம் செய்து கொள்ளலாம். 

இத்தனை விதங்களில் உண்டான இனிப்பு பூரணத்தை ஆறியதும் இவ்விதமாக தனிதனியே தட்டில் உருட்டி வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை மேல்மாவையும் பூரணத்தையும் ஒருசேர தொட்டு செய்தால் கொழுக்கட்டைகள் ஒழுங்கான வடிவத்தில் வராது சிறிது அடம்பிடிக்கும்.

ஒரு கிலோ பச்சரிசி எடுத்து சுத்தப்படுத்தி மாவரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து மாவாக்கி அதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அரிசியை நன்கு கழுவி வடிகட்டிய பின் அரைமணி நேரம் ஈரத்துணியில் பரப்பி ஆற வைத்த பின்னர் மிக்ஸியிலேயே மாவாக்கி கொள்ளலாம். வீட்டில் விசேடங்களுக்கு ஸ்வாமி நேவேத்தியங்களுக்கு இப்படித்தான் நான் மாவு தயாரித்துக் கொள்வேன்.அல்லது தண்ணீரில் ஊற வைத்த ப. அரிசியை மிருதுவாக அரைத்து அந்த விழுதில் சற்றே நீர்க்க தண்ணீர் கலந்து கடாயில் கிண்டியும் தயாரித்துக் கொள்ளலாம். 

அவ்வாறு தயாரான மாவை ஒரு பங்குக்கு ஒன்றரை என்னும் அளவு விகிதத்தில் தண்ணீருடன் சிறிதளவு பொடிஉப்பையும் கலந்து கரைத்துக் கொள்ளவும். பின் அடி கனமான கடாய் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அந்த மாவு கரைசலை விட்டு கெட்டியாக கிண்டிக் கொள்ளலாம். 


இது வறுத்த, க. ப. பா. ப. 


இது பொடிதாக துருவிய  தேங்காய் துருவல்.
 

இது வறுத்தப்பருப்புக்களை மிக்ஸியில் பொடித்த மாவுகள்.  


இது வெல்லமும், தேங்காய் துருவலும் கலந்த ஆரம்ப கலவை. 
 

இது வெல்லம் கரைந்து, பருப்பு பொடி சேர்த்த கலவை. (இது முதல் படமாக இதற்கு கீழுள்ளதை பின்னுக்குத் தள்ளி  சற்றே முன்னுக்கு வந்து விட்டது. நல்ல அறிவாளி.) 


இது வெல்லம் தேங்காயுடன் கலந்த கலவை. 


இது கிளறி முடித்ததும் ஆற வைத்த பூரண கலவை.
 

இது ஆறியதும் உருட்டி வைத்த பூரண உருண்டைகள். 


இது அதற்கான மேலே சொன்னபடி தயாரித்த மேல் மாவு உருண்டைகள். 


இது மேல் மாவை வைத்து கப் செய்து பூரணத்தை தன்னுள் அடக்கியபடி ஆனால், முழுமையான பூரணத்துவத்தும் பெறாத  கொழுக்கட்டைகள். 


இது இட்லி தட்டில் வேக வைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்ட கொழுக்கட்டைகள். 


இது வெந்த பின் நாம் சாப்பிட போவதற்காக காத்திருக்கும்  இனிப்பு வெல்லப்பூரண கொழுக்கட்டைகள்

"என்ன...! இப்போது நீங்கள் சாப்பிட தயாரா..? என படங்கள் கேட்கின்றனவா... ? 

புத்தாண்டின் ஆரம்பமாக சென்ற வருட இறுதியில் சென்று வந்த பயணத்தில் ஒரு இறை பதிவு ஒன்றை எழுதி வெளியிட்டேன் அது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அந்தப் பதிவின் மனசோர்வை களைவதற்காக அடுத்து இனிப்பாக ஒன்றும், அதற்கு ஜோடியாக காரத்துடன் ஒன்றுமாக ஒரு பதிவு எழுதுவோமேயென்று எல்லோரும்/எல்லோருக்கும்  அறிந்த, அனைவரும் அடிக்கடி செய்யும் இனிப்பு, காரங்களையே படங்களுடன் பதிவாக எழுதி  பகிர்ந்திருக்கிறேன். இவை நம்முடன் அடிக்கடி வந்து  பழகியவைதாம் என்பதால் பொறுத்து, மன்னித்துக் கொள்ளவும். 

பதிவை படித்து படங்களையும் ரசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Thursday, January 9, 2025

அன்னையின் அருள்.

எண்ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்... என்பது  பழமொழி.  (எண் ஜாண் என்பது எட்டு ஜாண். ஒரு ஜாண் என்பது அவரவர் கை விரல்களை விரித்து கட்டை விரலில் இருந்து சுண்டு விரல்  வரையுலுமான அளவு என்பது எல்லோரும் அறிந்ததே...! இது அவரவர் கை விரல்களுக்கு ஏற்ப, அவரவர் உடம்பு (சிரசிலிருந்து, ஆரம்பித்து குதிங்கால் வரை) எட்டு ஜாண் அளவு என்பதாக முடியும்.) 

அது போலவே எண்ஜாண் உடலில் உள்ள ஒரு ஜாண் வயிறும் முக்கிய பிரதானந்தான். ஒரு நாளேனும் வயிற்றிக்கு போதிய உணவு இல்லையேல் நம் உடல் பலம் தளர்ந்துதான் போகும். ஆனால், அதற்காக வயிறு கொள்ளாமல் சாப்பிட்டு விட்டு இரண்டொரு நாட்கள் பட்டினியாக இருக்கவும் இயலாது. 

ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்!

இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய்! ஒரு நாளும்

என் நோவு அறியாய் இடும்பைகூர் என் வயிறே.

உன்னோடு வாழ்தல் அரிது!' 

என்ற ஔவை பிராட்டியின் பாடலின்படி வயிற்றுக்கு வேண்டியதை அவ்வப்போது ஈவது நம் கடமையாகும். 

"செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிக்கும் ஈயப்படும்." 

இது அறிவுரையாக திருக்குறளில் கூறப்படுவது. "எப்போதும் கேள்வி ஞானந்தான் அறிவு விருத்தி பெற மிகச்சிறந்தது. அப்படியான கேள்வி ஞானங்களை கேட்க இயலாத துரதிர்ஷ்டவசமான அந்த சூழ்நிலையில், சிறிதளவு உணவை உன் உடல் தளர்ச்சியாக போகாமல் இருப்பதற்காக, உன் வயிற்றிக்கும் கொடு..!"என்பதாக கூறப்படுவது. 

அதுபோல் சிரசில் (தலை) இறைவன் படைத்திருக்கும் மூளை ஒழுங்காக வேலை செய்தால்தான் அந்தந்த சமயத்திற்கேற்ப சூட்சுமமான அறிவும், அதன் பயன்களும் ஒருவரை முழுமையாக வந்தடையும். அதே சமயம் நம் மனதில் அநாவசியமாக தோன்றும் கர்வம் (தன்னைப் போல அறிவில் சிறந்ததாக யாருமில்லை  என ஒப்பிடும் ஆணவம்) பலம் பெற்றால் மூளையின் செயல்பாடுகளும் சற்றே அகங்காரம் கொண்டு மாறுதல் கொள்ளும். அதனால்தான் நம் அறிவுக்கும்,(மூளைக்கும்) நம் மனதிற்கும் (எண்ணங்களுக்கும்) சம்பந்தமுண்டு என்பார்கள்.

"ஆகா.... வருட ஆரம்பத்தில் ரம்பமாக போர் அடிக்கிறீர்களே..! ஏன் இப்படி..?" என்பதற்குள் விஷயத்திற்கு வருகிறேன். 

இந்த இரண்டும் நம் வாழ்நாள் உள்ள வரை நம்முடன் இணைந்திருப்பவை. முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரண்டிற்காக உலகத்தையே காத்து ரட்சிக்கும் பார்வதி பரமேஸ்வரர் இடையே ஒரு தர்க்கமே நடந்துள்ளதாம் . . "அனைவரும் உண்ணும் உணவே  ஒரு மாயை" என்பதாக சிவபெருமானும், இல்லை...இல்லை.. உணவு இல்லையேல் உலகத்தில் ஒரு ஜீவனும் எழுந்து நடமாட இயலாது. உலகம் மொத்தமும் ஸ்தம்பித்து நின்று விடுமென" பதிலுக்கு பார்வதி தேவியும் வாதிட்டனர்.

பொதுவாக இருவருக்கிடையே (அதுவும் தம்பதியினர்) ஒரு வாதம் என்று வந்து விட்டால் அது பிரச்சனையை முடிவாக  கொண்டதாகத்தான் அமையும்  இந்த உலகத்திற்கே மாதா, பிதாவாகிய  இருவரிடையே எழுந்த வாக்குவாதமும் இவ்விதமே ..! 

வாதத்தின் இறுதியில் கோபம் கொண்ட அம்பிகை சிவனை விட்டு விலகிப் போக, சிவனாரும் "உணவு ஒரு மாயை" என்பதை அனைவரும் உணர்வதற்காக  அண்டசராசரங்களையும் தன்  கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி வைத்தார். பார்வதி தேவி சொன்ன மாதிரி உலகம் ஸ்தம்பித்தது. தட்ப வெப்ப நிலைகள் மாறுதல்களை சந்தித்தன. சூரிய சந்திரன், அஸ்டதிக்பாலகர்கள் உட்பட அனைவரும் தம் கடமையை செய்ய மறந்தனர். தாவரங்கள் செழித்து  வளரவில்லை. பயிர் பச்சைகள், செடி, கொடிகள் தம் நிலை மறந்து கிடந்தன. மக்கள் பசியால் தவித்தனர். இந்த பயங்கர நிலை கண்டு உலகத்தின் மீது இரக்கம் கொண்ட அன்னை பார்வதி தேவி அன்னபூர்ணேஸ்வரியாக உரு கொண்டு உலகத்தின் பஞ்சத்தை போக்கி, மக்களுக்கு உணவளித்து/ உணர்வளித்து உலகத்தை பழைய நிலைக்கு கொண்டு வந்தாள். அதற்காக இந்த பூமியிலேயே தங்கி விட்டாள். இதுவும் அன்னையின் ஒரு விளையாட்டுதான் என தேர்வர்கள் துதிபாட அன்னை பரமேஸ்வரி அகமகிழ்ந்து மக்களின் பசிப்பிணி நீக்கி அருள் பாலித்தாள் சிவனும், அன்னையின் ஆசிகள் பூரணமாக இந்த உலகத்திற்கு கிடைக்க ஒரு வழியை உண்டாக்கிய திருப்தியில் திளைத்தார். இவ்விதம் இவர்களின் விவாத தர்க்கம் நல்ல விதத்தில், பயனுள்ளதாக முடிவடைந்தது. 

இந்த அன்னை அவ்வாறு குடி கொண்ட இடம் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் கலசா எனும் வட்டத்தில் உள்ள ஹொரநாடு என்ற ஊரில் உள்ளது.



அன்னபூர்ணேஸ்வரி.🙏. 

###############################

இந்தக் கோவில் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. கோவிலில் மூலவராக இருக்கும் அன்னபூர்ணேஸ்வரி சிலை அகத்தியரால் எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையானது சிதிலமடைந்து காணப்பட்டதால், அந்த சிலை புதுப்பிக்கப்பட்ட பின்பு, அம்மனுக்கு ‘ஆதி சக்த்ய மஹா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி’ என்று புதிய பெயரை சூட்டி அழைத்து வந்தனர். இந்த சிலை முழுவதும் தங்கத்தால் ஆனது. அன்னபூர்ணேஸ்வரி தாய் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

######################################

இந்த செய்தி,மற்றும் இந்த ஒரு படம் மட்டும் இணையம். நன்றி கூகுள். 

ஆக கூடி எண்ஜாண் உடம்பிற்கு வயிற்றின் பிரதானத்தைப் பார்த்தோம். இனி சிரசு...! ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தது. அதனால்  சற்று அகங்காரம் மேற்பட சிவனை மதியாது "நீங்கள் நான்கு திசைகளிலுமாக என்னை சுற்றி வந்து வழிபட வேண்டும். அப்படியும் பூரணமாக என்னை சுற்றி வர இயலாது. ஏனெனில் என்னுடைய ஐந்தாவது தலையை எப்படி வழிபடுவீர்கள்" என ஒரு சமயம் கர்வமாக கேட்டு ஏளனமாக நடந்து கொள்ளவே, சிவன் மிகவும் கோபம் கொண்டு பிரம்மாவின் ஒரு தலையை தன் வலது கைகளாலேயே கிள்ளி கொய்தார். அதன் வலி பொறுக்காத பிரம்மா," இந்த தலை தங்கள் கைகளிலேயே கபால ஓடாக நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும்...! எவர் இதன் நிறைய பிக்ஷை வழங்கியும், அது நிரம்பாமல் வழிந்து ஓடிக் கொண்டேயிருக்கும். ஆனால், என்றைக்கு இந்த ஓடு நிரம்ப தானியத்தை வழியாமல் நிரப்ப முடிகிறதோ அன்று வரை இந்த கபால ஓடு தங்கள் கைகளை விட்டு விலகாது" என சாபமிட்டார். சிவனும் அந்த சாபத்தின்படி கைகளில் அந்த கபால ஓட்டை (சிரசை) சுமந்தபடி பிச்சாடனராக மூவுலகும் வலம் வந்தார். தேவர்கள் அனைவரும் ஓடு நிரம்ப பிக்ஷை தந்தும் அந்த சிரசாகிய ஓட்டில் தானியம் (உணவு) முழுவதுமாக நிரம்பியும் நிற்காமல் வழிந்து ஓடியதால், அவர் கைகளை விட்டு அந்த ஓடு அகலவில்லை. 

இறுதியில் இந்த கோவிலில் உள்ள அன்னபூரணேஸ்வரியின் அருட்பார்வையால்தான், தானியங்களால் கபால ஓடு நிரம்பி வழியாமல் நின்று சாப விமோசனம் அடைந்ததால், அந்த கபால ஓடு அவர் கைகளை விட்டு தானாக அகன்றது. இவ்விதம் அந்த சிரசின் (ஓட்டின்) அகங்காரத்தையும் இந்த அன்னபூரணேஸ்வரி (உணவு மாதா)  களைந்தாள் என்பது வரலாறு. ஆக நம்  எண்ஜான் உடலுக்கு சிரசும், வயிறும் எவ்வளவு முக்கியமென இந்த இரண்டு புராண கதைகளும் நமக்கு ஒரு பாடமாக உணர்த்துகிறது. 

இந்த பிரசித்தி பெற்ற கோவிலுக்கு இப்போது நாங்கள் குடும்பத்துடன் தீடிரென ஒருநாளில் முடிவாகி புறப்பட்டு சென்று வந்தோம். எங்களை தீடிரென வரச் சொல்லி அழைத்ததும் கண்டிப்பாக அந்த அன்னை அன்னபூர்ணேஸ்வரிதான். அதனாலேயே அவள் அருட்பார்வை தரிசனமும் சிறப்பாக கிடைத்தது. 

டிசம்பர் 25ம் தேதியன்று இரவில் பயணம். நடு இரவில் சுற்றி வளைத்து மலை ஏறும் போது உலகமே தட்டாமாலையென ஆடியது. நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டு சென்ற வண்டி  ஓட்டுனரின் கைவண்ணத்தில் சட்சட்டென பாதையின் சரிவான விளிம்புகள் கண் முன்னை வந்து பயமுறுத்த வளைந்து, வளைந்து சென்று ஒரு மட்டும் காலை 6 மணியளவில் கோவில் இருப்பிடத்தை அடைந்தோம். அங்கு நான்கு மணி நேரத்திற்கென்று முன் கூட்டியே (முதல் நாளன்று) ஏற்பாடு செய்த ஒரு தங்குமிடம் சென்று குளித்து விட்டு குறிப்பிட்ட நேரத்தில் கோவிலை அடைந்தோம். 

அன்னையின் தரிசனத்தை மறக்கவோ, வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 🙏. கேட்பவர்க்கு மட்டுமின்றி, கேளாதோர்க்கும் கேட்காமலேயே தன்னருளை தரும் அன்னை அன்னபூர்ணேஸ்வரி தன் அருளை பூரணமாக தந்தாள். அன்னையே..! அனைவருக்கும் உன்னருளை வாரி வழங்கிடு என பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டோம்.🙏. 

கீழே காணும் இவை நான்கும் என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படங்கள். 





                            பனி சூழ்ந்த அடர்வனம்.  

ஆனாலும் நாங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை (இங்கு வந்த புதிதில்) சென்ற போது அங்கிருந்த பனிபொழிவு இப்போது இல்லை.அப்போது இதே காலை வேளையில் பனி பார்வையை மறைத்தபடி கண்களின்  முன்னால் பெய்தது. குளிர் பயங்கரமாக தாங்க முடியாமல் தாக்கியது. இப்போது  பனியினால் வெறும் புகைமூட்டந்தான். குளிரும் அவ்வளவாக இல்லை. காரணம் அங்கும் காடுகளை அழித்து கான்கீரிட் கட்டிடங்கள் பல உருவாகி விட்டன. 

மலர்ந்த இப்புத்தாண்டில் முதலில் இறை சம்பந்தப்பட்ட பதிவை வழங்க வைத்த இறைவனுக்கு என் பணிவான நன்றி. நாங்கள் அந்த இரண்டு மூன்று  தினங்களில் மேற்கொண்டு சென்ற இடங்களை இறைவன் அருள் இருந்தால் ஒவ்வொன்றாக பகிர்கிறேன். 🙏. 
இதை படிக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள்.🙏. 

Tuesday, December 24, 2024

மறக்க முடியாத பாடல்கள்.

டிசம்பர் 24. 

தமிழக முன்னாள் முதல்வராகவும், மக்கள் திலகமுமாக திரையுலகிலும் கொடிக்கட்டி பறந்த திரு. எம். ஜி ராமச்சந்திரன் அவர்கள் இந்த உலகை விட்டு  மறைந்த நாள். இது நம்மால் எளிதில் மறக்க முடியாத நாளும் கூட. இரண்டு இடங்களிலும் தன் திறமையை பறைசாற்றிய அவரின் புகழ் அவர் மறைந்தும் என்றும் நீடித்து நிற்கும். / நிற்கிறது. அதுபோலவே நல்ல கருத்துள்ள மறக்க முடியாத பல பாடல்கள் திரைப்படங்களில் இவருக்கெனவே உருவானவை. அந்த வரிசையில் இன்று நான் பகிர்ந்த இந்த பாடல்கள். 

பிரபல பாடகர் திரு. டி. எம் சௌந்திரராஜன் இவருக்கெனவே பிறந்தது போல், நல்ல கம்பீரமான குரலுடன் இந்த நல்ல அர்த்தமுள்ள பாடல்களை பாடுவதற்காகவே இறைவனால் நிர்ணயக்கப்பட்டவர். திரு. டி. எம் எஸ் அவர்கள் நிறைய பக்தி ரசமிக்க பாடல்களையும் இறைவன் அருளால் தந்துள்ளார். தவிரவும் மக்கள் திலகத்திற்கெனவே நிறைய பாடல்களைப் பாடி  இருவரின் வெற்றிகளையும் நிலை நிறுத்தி கொண்டவர். இவரின் புகழும் என்றும் நீடித்து நிற்கும். 

மேலும் இந்த பாடல்களை இயற்றி, அதற்கு இசையமைத்து மேலே குறிப்பிட்ட இருவரின் வெற்றிகளுக்கும் படிக்கல்லாக இருந்த பாடலாசிரியர்களுக்கும் இசையமைத்த இசை மேதைகளுக்கும் என் பணிவான வணக்கங்கள். நன்றிகள். 🙏. 

திருடாதே பாப்பா.. நல்ல அறிவுரைகளுடன் கூடிய ஒரு பாடல். 

திரைப்படம்: திருடாதே (1961)

இசை: S.M. சுப்பைய்யா நாயுடு

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்


தூங்காதே தம்பி தூங்காதே.. சோம்பலை விரட்டும் நல்ல பாடல். 

திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)

இசை: S.M. சுப்பைய்யா நாயுடு

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். இதுவும் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பாடல். 

படம் : வேட்டைக்காரன்

இசை : K.v.மகாதேவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் :: T.M.செளந்தரராஜன்


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே...! குழந்தைகளுக்கான அறிவுரை பாடல். 

திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை:  : K.v.மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்


இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. கண் போன போக்கிலே காலும்...! மனம் போன போக்கெல்லாம் மனிதனும் போகக்கூடாது என்பதை அறிவுறுத்தும் பாடல். 

பாடல்: கண் போன போக்கிலே கால் போகலாமா.. ? 
படம் : பணம் படைத்தவன் ( 1965 )
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலி


நேற்று (23ஆம் தேதி. திங்கள்கிழமை) தேசிய விவசாயிகள் தினம். இது ஏதேச்சையாக இன்றைய முதல் நாளாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கான இந்த அற்புதமான பாடலை நான் பகிர நினைத்தேன்.அதற்கு பொருத்தமாக இந்த (விவசாயிகள் தினம்.) நாளும் இணைந்து கொண்டது. இந்த படத்தில் நல்ல நடிப்புடன் அருமையான இந்தப்பாடலையும் திரு. எம்ஜிஆர் அவர்கள் விவசாயிகளை போற்றுபடி தந்திருக்கிறார்

படம்: விவசாயி 

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

இயற்றியவர்: A.மருதகாசி

இசை: K.V. மகாதேவன்


கூகுளுக்கு நன்றி பாடல்கள் பகிர்வுக்கு

இன்னமும் பல பல பாடல்கள் நம் மனதை விட்டு நீங்காதவையாக இருக்கின்றன. இப்படிபட்ட  பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், பதிவு நீண்டு விடும் என்பதால் மற்றதை நம் மனதோடு விட்டு, கூட்டுத் தொகையில் சிறந்த பாடலாக நான் நினைத்ததை மட்டும் (ஆ(றாக)ரமாக) பதிவிடடு உள்ளேன். மறக்காத இந்த பல பாடல்களை தந்த  இந்த அபூர்வ கலைஞர்களுக்கு நம் வணக்கங்களும் நன்றிகளும்🙏.

இந்த பதிவையும், பாடல்களையும் ரசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 

Tuesday, December 17, 2024

அழகின் பிரம்மாண்டங்கள்.

சென்ற  வருட தொடக்கத்தில்,    (ஒரு வேளை இது அதற்கும் முந்தைய வருட தொடக்கமா என்பது சரியாக நினைவில் இல்லை.:)) ) குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்ததும் குடும்பத்துடன் மைசூர் இரண்டு மூன்று நாட்களுக்குள் சென்று வருவதாக திட்டம் தீட்டி சென்று வந்தோம். சனிக்கிழமை  அதிகாலை கிளம்பி, திங்கட்கிழமை மாலை வாக்கில் வீடு திரும்பி விட்டோம். காலையில் செல்லும் வழியில் குழந்தைகளுக்காக ஒரு பார்க் (ஜி.ஆர்.எஸ் பார்க். அதில் நீர் நிலைகளில் விளையாட்டுக்கள். அதற்கு உள்ளே செலவதற்கே ஒரு நபருக்கு ரூ1000 கட்டணம் வசூலித்தார்கள். கிளம்புவதற்கு முன் கூட்டியே  ஆன்லைனில் மகன் அதற்குரிய கட்டணம் கட்டி  ஏற்பாடு செய்து விட்டார். ) சென்று விட்டு மாலைக்குள் தங்குமிடமாக ஒரு தரமான ஹோட்டல் ரூமில் இடம் அமர்த்திக் கொண்டுதான் சென்றோம் மாலையில் வேறு எங்கும் சுற்ற முடியாதென்பதால் குழந்தைகளும் (பேரன், பேத்திகள்) நீரில் ஓடியாடி    விளையாடி அலுப்பாக இருப்பதால், இரவு உணவை அருகிலிருக்கும் வேறொரு உணவகத்தில் முடித்துக் கொண்டு வந்து,ஓய்வெடுத்து மறுநாள் காலை மைசூர் அரண்மனை செல்லலாமென முடிவு செய்தோம் .

மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை முதலில் சாமுண்டி கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு அரண்மனை செல்லலாம் என நினைத்தால், அந்த ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணியில் உள்ளவர்கள். "ஞாயிறு கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வார. நாட்களான நாளை காலை செல்லுங்கள்" எனக் கூறியதால், கோவிலுக்கும் செல்லும் முடிவை மாற்றி வைதது அரண்மனை செல்ல முடிவாகியது. 

சரி... அன்று அரண்மனை செல்லாமென்றால், ஞாயிறு அரண்மனை உள்ளே சுற்றிப்பார்க்க அனுமதி இல்லையாம். அதற்கு பதிலாக அன்று மாலை செயற்கை தீப அலங்கராங்களுடன் ஒளிமயமான அரண்மனையை பார்க்கலாம் என்றதும், காலை வேறு ஒரு சில  இடங்களுக்கு சென்று விட்டு, மதியம் உணவு முடிந்ததும் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு மாலை அரண்மனையை காணச் சென்று. அரண்மனை மின்னொளி அலங்காரங்களை சுற்றிப் பார்த்து விட்டு. அறைக்கு திரும்பினோம். அந்த காட்சிகளை இன்றைய பதிவாக படங்களுடன் தந்துள்ளேன. இது புகைப்படங்களுடன் இணைத்து ஒரு வழியாக பதிவாக்கி அப்போதே கொஞ்சம் எழுதி வைத்ததை, இப்போதும் வெளியிடாது விட்டால், மேலும் ஒரு மாமாங்கம் ஆகி விடுமென்பதால், இன்று பாக்கி எழுதாததை முடிந்த வரையில் எழுதி முடித்து இணைத்து  வெளியிடுகிறேன். :)) 



















இது என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படங்கள். அங்கு அன்று ஒரே கூட்டம். அத்தனை இருளிலும், மக்கள் வெள்ளமாக அரண்மனை முழுக்க ஒளிரும்  ஒளிக்காட்சியை காண வந்திருந்தார்கள். நாங்கள் கொஞ்ச. தூரம் வரை தட்டித் தடுமாறிதான் நகர்ந்து சென்றோம். ஆனால், அரண்மனை உள்ளே சென்று அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பம் இனி எப்போது வாய்க்குமோ தெரியவில்லை... ? 

அங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதிகள் உண்டா.?இல்லை கைப்பேசி முதற்கொண்டு காமிராக்களை வெளியில் பத்திரப்படுத்தி விட்டுதான் உள்ளே செல்ல வேண்டுமா..? தெரியவில்லை. இப்போது புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள கைப்பேசி என்னிடம் உள்ளது. ஆனால் அது முன்பொரு தடவை (பல, பல வருடங்களுக்கு முன்பு.) மைசூர் அரண்மனையை சுற்றிப்பார்க்க சென்ற போது என் கையில் இல்லை. ஏதோ இந்த அரண்மனை மின்னொளி காட்சியை மட்டுமாவது இப்போது எடுக்க முடிந்ததே என மனம் மகிழ்வுற வேண்டியதுதான்..! 

ஒரு தடவை நாங்கள் இங்கு வந்த புதிதில் (பல வருடங்களுக்கு முன்பாக) சென்ற மைசூர் பயணத்தில் அரண்மனை உள்ளே  சென்று சுற்றிப் பார்த்துள்ளோம்.  அப்போது இந்த மாலை தீப அலங்காரங்கள் எல்லாம் இல்லையென நினைக்கிறேன். ஒரு நாளில் மாலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அரண்மனையை சுற்றிப்பார்க்க அனுமதி இருந்தது. ஆனால், அப்போது ரசிக்கும் ஆவலும், நேரமும் குறைவோ என்று இப்போது என் மனதில்  தோன்றுகிறது. 

அப்போது ஒரே நாளில் மைசூரில் பிரசித்தியான சில இடங்களை மட்டும் சுற்றி விட்டு மறுநாள் களைப்புடன் திரும்பி வந்து விட்டோம். இப்போது இரு தினங்கள் அங்கு தங்கியும் அரண்மனை உள்ளே சென்று பார்க்கும் நேரம் வேறு பல அனேக திட்டங்களுக்கிடையே நழுவி விட்டது. 


ஒரு பழமொழி உண்டே..! கல்லுக்கும், நாயிக்குமான ஒரு பழமொழி....! அது போலத்தான். ஆனால், இதற்கும் தகுந்த ஒரு கதை உள்ளதை இன்றுதான் கூகுளில் ஒர் இடத்தில் படித்தேன .(பழமொழிகளின் உண்மையான விளக்கத்தை உணர்த்தும் கதை).

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் பொதுவாக  நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.

அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சில நாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார். அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்கு நாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர்.

அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறுதான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழி.

கதை விளக்கத்திற்கு நன்றி. கூகுள்.

இந்தப்பதிவை படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.