Showing posts with label தந்தையர் தினம். Show all posts
Showing posts with label தந்தையர் தினம். Show all posts

Monday, July 27, 2020

எனக்குமா...! இந்த தந்தையர் தினம்.. .


வணக்கம் நட்புறவுகளே...
தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து  விட்டது.  ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம்  வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ..இது மனிதர்களாகிய நமக்கு மட்டுமில்லை.... மற்ற ஜீவராசிகளுக்கும் அது ஒரளவு வளரும் வரை அன்னை தந்தையின் அக்கறை  கலந்த கண்காணிப்பான பாசம் அத்தியாவசியமாகிறது.

முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து தன் இனங்களை காப்பாற்றி காக்கும் பாசமுள்ள   பறவையினங்களும், குட்டிகளை சுமந்து  ஈன்று பிரியத்துடன் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்களுக்கும்,  தன் பாசத்தை  அவைகள் ஒரளவு வளரும் வரை தனது வளர்ப்புகளுக்கு தரும் வகையில்தான் இறைவன் அவைகளுக்கும் சிலவற்றை உணர்ந்தறியும் பகுத்தறிவையும்  அமைத்து வைத்திருக்கிறான் இதில் அயராது தன் இணையுடன் பாடுபடும் அந்த தந்தை இனங்களுக்கும் அப்படி ஒரு பாசப்பங்குகள்  உண்டெனில் அவைகளுக்கும் தந்தையர் தினமென்ற ஒன்றில்  ஒர் தனிச்சிறப்பு உண்டல்லவா.. ? இப்படியெல்லாம் கீழுள்ள சிட்டுக்குருவிகள் என்னை யோசிக்க வைத்தது.

இந்த சின்னஞ்சிறிய பறவைக்குத்தான் என்ன சுறுசுறுப்பு, கடமை உணர்ச்சி. காலை நேரத்தில், முந்திய  இரவே பேசி வைத்து கொண்டதை போன்று வேறு எந்த நோக்கமுமின்றி, நேராக கூட்டமாக வளர்ந்திருக்கும் தாவரங்களுக்கிடையே  அடையாளம் கண்டு அங்கு சென்று  தன் சின்னஞ்சிறு அலகால் பறிப்பதும், (அது ஏதோ புல் வகையை சேர்ந்த மாதிரி இருக்கிறது .)  மீண்டும் பறந்து வந்து கூடு கட்டும் இடத்திற்கு வந்து சேர்வதுமாக என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..

அதுவும் ஒரு பறவை வந்ததும், மற்றொரு  பறவை அதற்கெனவே காத்திருந்த மாதிரி விருட்டென்று பறந்து அந்த புல் பறித்து வர வேகமாக பறந்து செல்கிறது. அது வந்ததும் இதுவும் அப்படியே....காத்திருந்தது போல.. ! இப்படியே தொடர்ந்து மணிக்கணக்கில்... நடுவில் சிறிதேனும் அயர்ச்சியோ. சோம்பலோ காட்டவில்லை.  அதற்கு பசியே எடுத்தாலும்  அதற்கு கூட நேரம் ஒதுக்காது போலிருக்கிறது என இவைகள்  விடுவிடுவென எங்கோ மேல் மாடியில் கூடு கட்டும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நான் எண்ணி வியந்து கொண்டேன்.


"அப்பாடா.. நம் சிறு அலகிலிருந்து இது எங்காவது நழுவி விடுமோ என்ற பயம் போக்குவதற்காகவே இந்த ஜன்னல் கம்பி கிடைத்திருக்கிறது. கொஞ்சம் நேரம் இதில் அமர்ந்து விட்டு செல்லலாம். ஆண்டவா..! இதை கொண்டு போய் எனது வீட்டிற்கு பக்க பலமாக அமைக்க  சேர்க்கும் வரை, இது என் அலகிலிருந்து நழுவி விடாமல் இருக்கச் செய்து விடு. என்று பிரார்த்திக்கிறதோ... " இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி.


" இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனாலும் எத்தனை தடவை இந்த கம்பியில் வந்து வந்து அமர்வது? இன்னும் கொஞ்ச தூரந்தானே.. ! இது எப்போதையும் விட கொஞ்சம் பளுவாகத்தான் இருக்கிறது..! கஸ்டப்படாமல் ஒரு செயலை முடிக்க இயலுமா.. ? இருந்தாலும் ஒரு எம்பில் எழுந்து பறந்து விடலாம். இதோ.. முயற்சித்தே விடுகிறேன்..!" என்கிறதோ இந்த சின்னச் சிட்டு.


" இவர்களுக்கென்ன ஜாலியாக  பிற மனிதர்களின் உதவியுடன் வீடு கட்டிக் கொண்டு வெய்யில், மழை, குளிர் என்ற சீதோஷ்ண நிலை பற்றியெல்லாம், கவலையில்லாமல் உள்ளேயே  சகல வசதியும் செய்து கொண்டு அவர்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். எங்கள்  குழந்தைகளை வளர்ப்பதற்கு வீடு கட்ட எங்கள் இருவரைத் தவிர வேறு  யாரையும் உதவிக்கு  அழைக்காது நாங்களே சிரமபட்டாலும், படைத்தவனின் கருணையெனும் உதவியை நினைத்து ஆனந்தம் அடைந்தபடி, வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறோம். அவ்வளவுதான்.. ! அவரவர் விதிப் பயன்களை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.. "என்ற தத்துவங்களில் சிறிது நேரம் லயித்து செலவிடுகிறதோ..? இந்த சிங்கார சின்னச்சிட்டு.


" என்னத்தான் தத்துவங்களை நான் உதிர்த்தாலும், எங்களுக்கும் சபலங்கள் உண்டு. சண்டை சச்சரவுகள் உண்டு. அதையும் மீறி இந்த அன்பு, பாசம் எங்களுக்குள்ளும் உண்டு. அதுவும் உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு அடைக்கலமாய் இடம் கொடுப்பதால், உங்களிடம் நன்றியும் உண்டு. இந்த நன்றியுணர்வை எங்களுக்கு தந்த அந்த ஆண்டவனுக்கும் நன்றி. இன்னமும் கடமை முடியவில்லை வரட்டுமா? எனக்காக அவள் காத்திருப்பாள்.." என்றபடி பறந்து செல்ல தயாரானது அந்த சின்னக்குருவி.


இந்த சிட்டுக்குருவிகளை பார்த்து புகைப்படங்கள் எடுத்து வருடமாகி விட்டது. படங்களை பதித்து பதிவாக எழுததான் இத்தனை தாமதமாகி விட்டது. இதைப்பற்றி பதிவாக  எழுத நினைக்கும் போதெல்லாம், எனக்கு சகோதரி  "கோமதி அரசு அவர்களின்" நினைவுதான் வரும். அவர்களும் இப்படித்தான் பறவைகளைப்பற்றி ஏதாவது அபிமானமாய் பதிவுகளை எழுதிக் கொண்டேயிருப்பார் என நான் நினைக்கும் பொழுதெல்லாம் அவரும் "ஜன்னல் வழியே" என பறவைகளைப் பற்றி  நிறைய பதிவுகள் எழுதிவிட்டார். "பறவைகளின் பாச மலரான" அவருக்கும் அந்தப் பறவைகளின் நன்றியோடு என் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு கவிதை (அதற்கு கவிதை என்றுதான் நான் பெயர் வைத்துள்ளேன்.) அவ்வாறு இல்லையென்றால் இந்த குருவிகளும், என்னை மன்னித்து விடட்டும். 


சிட்டுக்குருவி கவிதை.... 

சின்னஞ்சிறு உன் தேகம் கண்டு
சிட்டுக்குருவி என ஆனாயோ..இல்லை, 
சிட்டென பறக்கும் உன் திறன் கொண்டு
சிகரமாய் உன் பெயர் அதுவானதோ. .. 
இன்றும் விருட்டென்று நீஅங்குமிங்கும் 
பயந்தும், பாய்ந்தும் செல்லும் அழகில்
பட்டான உன்  மேனியழகு கண்டு
பரவசமாகுது என் உள்ளம். 

சிறுமி நான்  உனைக் கண்ட நாளதில்

"சிட்டான உன்னைப்போல் அதுவும் ஓர்
சிட்டு என்பதால், அதன் பெயர்
சிட்டுக்குருவி" என்ற என் தாயின் 
சின்ன அறிமுகம்... உன்னுடனான  
சிறந்த நட்பாய் விரிந்தது. உன்
சின்னஞ்சிறிய அலகால் நான் இடும்
சிறு உணவுப் பருக்கைகளை நீ 
சிதறாமல் கொத்தும் அழகை
சிறிது நேரமாவது தினமும்  நான் 
சிந்தையொன்றி பார்த்துவந்தது என்
சிறு வயது நினைவிலிருந்து இன்னும் 
சிறிதேனும் விலகவில்லை. 

நடுவில் நான் உன்னைத் தேடிய

நல்லதோர் நாட்களில், நீ என்னை
நாடி வந்து பசியாற இயலாமல், 
என் பட்டிண வாசங்கள் உன்னை
என் பார்வையில் படாமல்
எங்கோ பதுக்கி வைத்திருந்தது.

கூடு கட்டி குடித்தனம் அமைக்க இந்த

கூச்சல் நகரம் உனக்கு தோதில்லை 
போலுமென என் மனதை தேற்றிய 
போதினிலே, காலப்பொழுதுகள்
பழுதாகி அமைந்த காரணத்தால், 
போலிகள் இல்லாத ஓர் இடம் தேடி,
"போய் வருகிறேன்"எனவும் சொல்லாது
உன்னினங்கள் கிளம்பி போய் விட்டதை
உன்னிப்பாய் கவனித்து கேட்டதில் ,
உயிர் போன வேதனை என்னுள்ளே ... 
உள்ளம் துடிக்க எழுந்ததை
உளமார நீ உணர்வாயா .. ! என்  
உள்ளங்கவர்ந்த சிட்டுக்குருவியே..! 

ஆண்டுகள் பலவும் கடந்த பின்பு, 

ஆறுதல் பெற்று நாங்கள் இன்புற 
மீண்டு வந்த உன்னைக் கண்டதுமே 
மற்றுமோர் பிறவி எடுத்து வந்த 
மட்டற்ற மகிழ்வு இன்று எங்கள் 
மனதினில்  இடம் பிடித்து அமர்கிறது. 

காக்கை. குருவி எங்கள் இனமென

களிப்புடன் நல் பாடல் தந்த கவி
பாரதியின் சொல் வாக்கை மீறி, இனி நீ 
வேற்றிசை  சென்றே வாழ்ந்திடும்
பிற வேறெந்த எண்ணங்களும் 
பின்னாளில் கொள்ள  வேண்டாம். 
பார் உள்ளளவும் உன் பேர் சொல்லி, 
பாசமுள்ள பறவைகள் இதுவென்று  
இனி வளரும் எங்கள் சந்ததிக்கும்  
பிரித்துணர்த்தி காட்டிப் பழக்கும் 
பேறொன்றை மட்டும்,  அந்த 
பாரதியின் நினைவாக நீ. . , பெரும்
பரிசெனவே எங்களுக்கு தந்து விடு...! 

சிறப்பு பிராத்தனைகள்....
ஏதோ எனக்கு தெரிந்த உரைநடை கவிதை என்ற பெயரில்,  சில  பல வார்த்தைகளை வரிசையாக கோர்த்து வடித்துள்ளேன். இதில் யாரும் நெற்றிக்கண் என்ற ஒன்றை  திறவாமல், அப்படியே திறந்தாலும், இதிலுள்ள குற்றங்களை மட்டும் சத்தமின்றி பொசுக்கி, குறைகளை உருவாக்கியவரை சுட்டெரிக்காமல் ,காத்தருள வேண்டுமாயும் எல்லாம் வல்ல சிவபெருமானையும் கூடவே நக்கீரரையும் மனமுருக வேண்டிக் கொள்கிறேன். நன்றி. 
🙏. 😀😁😀😁. 🙏. 

Sunday, June 17, 2018

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..


இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும்  ஒவ்வொரு  நாட்டிலும்,  நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர்.   ஆனால் 
இந்த தினம் நாட்டுக்கு நாடு வேறு படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, ஜப்பான், இந்தியா  ஆகிய நாடுகளில் மட்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறன்று  தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது.  ஒவ்வொரு வீட்டடிலுமுள்ள அங்கத்தினருக்கு (அன்னை, தந்தை  பெற்றோர்கள் குழந்தைகள் சகோதர சகோதரிகள்) , என ஒரு வருடங்களில் வரும் ஒவ்வொரு  மாதங்களிலும், குறிப்பிட்ட தேதியில் ஒவ்வொருவருக்கும் உரிய தினமாக அறிவித்து கொண்டாடபட்டு  வருகிறது. 

அதன்படி இன்று தந்தையர் தினம்

தாய் தந்தை இருவருமே நம் முகத்தின் இரு விழிகள். ஒரு மனித முகத்தில் இரு விழிகளையும் ஒரே நேர்  கோட்டில் ஆண்டவன் படைத்த காரணமே இரு விழிக்குள்ளும் பாரபட்சம் என்ற வேறுபாடு வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான். ஆனால், பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு கட்டத்துக்கும் நமக்காக பார்த்து பார்த்து செலவு செய்து நம் நலனுக்காக பாடுபடும் அப்பாவை சில வீடுகளில் இரண்டாவதாகத்தான் கருதுகிறார்கள். தந்தையின் கண்டிப்பு சற்று பிடிக்காத காரணத்தால், என்றுமே அவர் நம் நல்லதுக்காகத்தானே சொல்லுவார் என்ற எண்ணம் சிறிதுமின்றி அவரை, அவர் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், அலட்சியபடுத்துகிறார்கள். 

மாதா, பிதா, குரு, தெய்வம் என நாலு பேரை நம் பிறப்பிலிருந்து ஒரு சிறந்த பார்வையில், வைத்துப் பார்க்கிறோம். 
கடைசியில் இருக்கும் தெய்வம்தான்  மனித இனத்தை தலைமைச்சிற்பியாய் இருந்து செதுக்கி சரியான பரிமாணத்திற்கு கொண்டு வர, (மாதாவை) அன்னையின் மூலம் சிறந்த தகுந்த சிலை செய்வதற்கான கற்களை தேர்ந்தெடுக்கவும்,  (பிதாவை) தந்தையின் மூலம் அக் கற்களை வடிவமைத்து செதுக்க தேவையான பொருளீட்டவும், (குருவை) கல்வி கேள்வி அறிவுகளை கற்பிக்கும் ஆசிரியர் மூலம் உளி கொண்டு கற்களை  பின்னமில்லா அழகிய சிற்பமாக செய்யவும் செய்து, உலகில் உலா வரவும் பயன்படுத்திக் கொள்கிறான். இதில் மாதா, பிதா, குரு மூவருக்கும்  அவன் (தெய்வம்) தலைமைச் சிற்பியாய் இருந்து அவர்களையும் வேலை வாங்கி கடைசியில் நின்று கண்காணித்து பெருமை யடைகிறான். மற்ற  இருவரும் அவன் கட்டளைக்கிணங்கி உளி கொண்டு செதுக்கும் போது ஏற்படும் வலியினை, வெறுத்து நாம் சிற்பமாக மாறத் தயங்கினால், நஷ்டம் சிற்பத்திற்கேயன்றி, உளிக்கல்ல!. அதனால் ஏற்படும் கோப தாபங்களின் காரணமாக,  பெற்றெடுத்த உறவுகளை  மன சஞ்சலபடுத்தாமல், அவர்களின் சிறப்புகளை உணர்ந்து வாழ்வோமாக...இன்று நாம் அந்த பரிபூரண அன்பை  நம்மை பெற்றவர்களுக்கு தந்தால் நாளை நம் குழந்தைகளிடமிருந்து அது நிச்சயமாக  திருப்பி நமக்கு கிடைக்கும்.

எனவே எப்பொழுதும், உறுதியாக நிலைத்திருக்கும்  வாசகங்கள்.... 

தாயிற் சிறந்த கோவிலுமில்லை ..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. 

தந்தையர் தினப் பதிவுக்காக நான் எழுதியதுடன் நான் படித்து பிடித்த கதை ஒன்றையும் இத்துடன் பகிர்ந்துள்ளேன். அனைவரும் படிப்பதற்கு மிக்க நன்றி. 

வலையுலக சகோதரர்கள் அனைவருக்கும் என்றுமே தந்தையர் தின நல்வாழ்த்துகள். 


படித்ததில் பிடித்த கதை.
========================
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி... மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பதுதானே அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது .இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை .கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது.

குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக. மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. 

“நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?”
என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின் பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்பு போய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன  யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார். 

நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித் தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
அந்த மகன்.



தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.



அன்னையர் தினம் எழுதும் போது யதேச்சையாக 100வது பதிவாக அமைந்தது. நடுவில் ஒரு வருட காலங்கள் எதுவும் எழுதவில்லை. மறுபடியும் துவங்கும் காலத்தில் தந்தையர் தினம் பற்றி எழுதும் போது, யதேச்சையாக பார்க்கிறேன். இது 150 தாவது பதிவு.  தந்தையின் ஆசிகளை பெற்ற ஒரு மகிழ்வு...ஒரு நெகிழ்வு.. அனைத்தும் கிடைத்திட்ட ஒரு  திருப்தி...... தங்களின் அன்பான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் காத்திருக்கும் உங்கள் சகோதரி... 
மிக்க நன்றி....

   =======🌼==🌼====🙏====🌼==🌼=======


Sunday, June 15, 2014

அப்பா…


நன்றி கூகிள்...
பெரியப்பா!..” என்று அழைத்தபடி ஓடி வந்து அவர் கைகளை பற்றிக் கொண்டாள் பிரியா.



“வாம்மா! உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்! எப்படி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” அவள் தோளை பற்றி லேசாக அணைத்தபடி, அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார் அவள் பெரியப்பா சேகர்

பெரியம்மா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பு உறவுகள் அவளைச் சுற்றி நலம் விசாரித்து அன்பு கடலில் மூழ்கடித்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

“பிரியா! போய் குளித்து விட்டு சாப்பிட வா! உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் பண்ணியிருக்கேன்! சீக்கிரம் வா! சூடு ஆறிடும்.” என்று அன்பு கட்டளை இட்டபடி பெரியம்மா உள்ளே சென்றாள்.

அண்ணனும் அண்ணியும் “அதேயே சொல்லி விட்டு முக்கியமான  வேலை ஒன்றுக்காக வெளியில் சென்று வந்து விடுகிறோம்” என்று ௬றி அகல, தங்கை “உன் லக்கேஜை உன் அறையில் கொண்டு வைக்கிறேனக்கா!” என்றபடி மாடியேறி சென்றாள்.

“பெரியப்பா! தம்பி இன்னுமா வரவில்லை? என்ற பிரியாவுக்கு, “அவனுக்கு வேலை அதிகமா இருக்கிறதாலே, இன்னைக்கு புறப்பட்டு நாளை காலையிலே வந்துடுவாம்மா! மறுநாள்தானே நிச்சயதார்த்தம்! சரி! நீ போய் குளித்து விட்டு வா! சாப்பிடலாம்! என்ற பெரியப்பாவை கனிவுடன் பார்த்த பிரியா “சரி! இதோ! வந்து விடுகிறேன். நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள். நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்!” என்றபடி தன் அறைக்கு சென்றாள்.

             இரண்டு நாட்களும் வீடு கலகலப்பாக இருந்தது. தன் ஒரே தம்பியின் நிச்சியதார்த்தம், உறவினர் ௬ட்டத்தின் கலகலப்போடு நன்றாக முடிய, அவன் திருமண தேதியும், இரு மாதத்திற்கு பின் முடிவு செய்யபட்ட சந்தோஷத்தில், அவள் தம்பியும், வேலை பார்க்கும் தன் ஊருக்கு திரும்பிச்செல்ல, பிரியாவும் தானும் ஊருக்கு கிளம்ப போவதாக சேகரிடம் சொன்னாள்.

      “கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு பிரியா! அதனாலே நீ இப்ப வந்த மாதிரி வராம பத்து இருபது நாளுக்கு முன்னாடியே புறப்பட்டு வந்து விடு! எனக்கும் முன்பு மாதிரி தனியா எல்லா வேலையும் பண்ண முடியல்லை!” என்று இடையில் வந்து சொல்லிச் சென்ற பெரியம்மாவுக்கு “சரி பெரியம்மா!” என்றவள் “பெரியப்பா! உங்களிடம் கொஞ்சம் தனியா பேசனும்!” என்றவாறே அவரது அறையை நோக்கி நடந்தாள்.

    “அதற்கென்ன! பேசலாம் வா!” என்றபடி தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்ற சேகர், “என்னம்மா பிரியா? நானும் பார்த்தேன்! நீ நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்கறே! என்ன விஷயம்? என்றார்.

   “ பெரியப்பா! நேரடியாக நான் விஷயத்துக்கே வருகிறேன். உங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளோடு என்னையும் என் தம்பியையும் நீங்கள்தான் சிறுவயது முதல் வளர்த்து ஆளாக்கி என்னையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இப்போ என் தம்பிக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்து ஒரு அப்பா அம்மா ஸ்தானத்திலே நின்னு எல்லாம் பண்ணறீங்க! நடுவிலே இந்த ஆளுக்கு இங்கு என்ன பெரியப்பா வேலை? இவர் ஏன் என் திருமணத்திலேயும் கலந்துகிட்டாரு? இப்போ தம்பி நிச்சயத்திலேயும்…. இன்னமும் அவன் கல்யாணத்திலேயும் வந்து அசிங்கபடுத்துவாரா? பெரியப்பா! ஏன் எந்த விஷயத்தையும் அவருக்கும் சொல்லி அவரையும் ௬ப்பிடுறீங்க? என்று கோபமாக படபடத்தாள் பிரியா.   
        “ஏன்னா? அவன் உன் அப்பாம்மா! உன்னை பெற்றவன் அவன்… உங்களுக்கு நடக்கிற நல்லதுகளை பார்க்கிற உரிமை, சந்தோசம், திருப்தி அவனுக்கில்லியா? அதுக்கும் மேலே என் தம்பிக்கு நான் சொல்லி வரவழைக்காமே, இருக்க முடியுமா? சொல்லு!” என்று நிதானமாக ஆரம்பித்த பெரியப்பாவை இடைமறித்தாள் பிரியா.

               “அப்பாவா? அவரை அப்பா என்று அறிந்த நாள் முதல் கொண்டு மனதும் உடம்பும் ௬சுகிறது! பெரியப்பா! காதலிச்சு தன் விருப்படி, தன் பெற்றோர் பேச்சை ௬ட எதிர்த்து, கல்யாணம் செய்துகிட்ட அம்மாவை, கொன்ற கொலைகார பாவின்னு தெரிஞ்ச நாள் முதலாய் இவரும் போய் சேர்ந்திருக்க ௬டாதான்னு மனசு அடிச்சுக்குது, ஜெயில் வாசம் முடிஞ்சு எங்கேயோ கண்காணத இடத்திலே இருந்தவர், ஒருநாள் திடீர்னு எங்க ஞாபகம் வந்து இங்க வந்து, நான்தான் உங்கள் “அப்பான்னு” அறிமுகப்படுத்திண்டு நின்ன அந்த நாளை என்னாலே மறக்கவே முடியாது பெரியப்பா! நம்ம பெரியம்மா அந்த கதையெல்லாம் எங்களுக்கு சொன்ன, அந்த நிமிடத்திலிருந்து, அவரை பார்த்தாலே எங்களுக்கு பிடிக்கல்லே பெரியப்பா! ஆனா, அதுவரைக்கும் எங்களுக்கு எந்த விபரமும் சரியா தெரியாததாலே உங்களைதான் பெரியப்பா நாங்க அப்பா, அம்மாவா நினைச்சு வாழ்ந்துகிட்டு வந்தோம். இப்பவும் உங்களை தவிர வேறு யாரையும்……மனசாலே ௬ட அப்பாவா ஏத்துக்க முடியாது!” என்றபடி கண்கள் கலங்க பேச முடியாது, இன்னமும் சற்றும், கோபம் குறையாத குரலில் தடுமாறினாள் பிரியா. 

  அவள் அருகில் வந்து அன்புடன், அவள் கைபிடித்து கட்டிலில் அமர வைத்த சேகர், “நீங்க எப்பவுமே என் குழந்தைகள்தான், பிரியா! அதுலே எந்த மாற்றமும் கிடையாது! என்றதும் “அப்படியானால், இனி அவரை நீங்க தம்பி கல்யாணத்துக்கு வரச் சொல்லாதீங்க பெரியப்பா! தம்பியும் வருத்தபட்டான். நான்தான் உங்ககிட்டே பேசி உன் கல்யாணத்துக்கு அவரை வராமே தடுக்கறேன்னு, அவனை சமாதானபடுத்தி ஊருக்கு அனுப்பினேன் என்றாள் பிரியா.

         “இந்த கல்யாணத்தை மட்டும் அவன் பார்த்துட்டு அவன் பழையபடி தான் இது வரைக்கும் இருந்த இடத்துக்கே போயிடுவாம்மா! தன் குழந்தைங்க திருமணத்தை பார்க்கற வாய்ப்பை ௬ட அவனுக்கு நான் தராமல் போனால் எப்படி? அவ்வளவு பெரிய பாவத்தை நான் எப்படி செய்வேன்? பெரியப்பா குரல் கம்ம ௬றியதை கேட்டதும் பிரியாவுக்கு ஆத்திரமாக வந்தது.

             “ யார் பாவி? நீங்களா? இல்லை அவரா? அந்த பாவி மேல் ஏன்தான் இப்படி இரக்கம் காட்டுறீங்களோ தெரியல! தம்பி திருமணத்திற்கு அவர் வந்து பார்த்து விட்டு எங்கேயோ போவதற்கு முன், இப்போதே அவர் ஒரேடியாக போய் தொலைந்தால்தான் என்ன? கோபத்தில் வார்த்தைகள் பிரியாவிடமிருந்து வெடித்தன.

            “பிரியா!!!!! சேகர் ஆவேசமாக கத்தினார். பின் ஒரு நிமிடத்தில் சற்று சுதாரித்து கொண்டவராய் அவள் அருகில் வந்து கையை பிடித்தபடி, பிரியா! என் தம்பியை பற்றி உனக்கு தெரியாது! அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்!

பிரியா! உங்களுக்கெல்லாம் தெரியாத உண்மையை நான் இப்போது அவனுக்கு தந்த வாக்குறுதியையும் மீறி சொல்லத்தான் போறேன். இப்போது நீ புரிந்து கொள்ளும் வயதையும் அடைந்து விட்டாய்! உன் பெரியம்மா சொன்னபடி உன் அம்மாவை அவன் கொல்லவில்லை! அவனைதான் கொன்று சிதைத்து விட்டாள் உன் அம்மா. அந்த பழியை அவன் மீது சுமத்தி விட்டு நீங்கள் சின்ன குழந்தைகள்”னு ௬ட இரக்கம் இல்லாமே தாய் பாசத்தையும், உதறி தள்ளி விட்டு தன் சுகந்தான் பெருசா நினைச்சு என் தம்பியை விட்டுட்டு அவ எங்கேயோ போயிட்டா! விபரம் அறிந்து சென்றேன், அங்கே என் தம்பி “அண்ணா. இந்த ரெண்டு பேரையும், உன் குழந்தைகளோடு நல்லபடியா வளர்த்து ஆளாக்கிற சிரமத்தை உன்கிட்டே கொடுக்கறேன். அம்மா இருந்தும், இல்லையென்று ஆகி விட்டது. “அவள் ஓடிப் போனவள்!” என்ற பேரோடு இந்த குழந்தைகள் இங்கு வளர்வதை விட அம்மா இறந்து போயிட்டா! அப்பா எங்கேயோ போயிட்டார்! அதனாலே அப்பா அம்மா இல்லாத குழந்தைகள் இதுங்கற, பரிதாபத்திலேயே வளரட்டும். அதுதான் இவங்க வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் வராமல் இருக்கும். இதை யாரிடமும் சொல்லாதே! எதையாவது சொல்லி சமாளிச்சுக்கோ! இந்த பிரச்சனைகள் முடிஞ்சதும் நான் எங்கேயாவது போய் என்னால் முடிஞ்ச அளவு உழைச்சு உனக்கு பணம் அனுப்புறேன். இந்த குழந்தைகளை காப்பாத்து!” அப்படின்னு என்கிட்டே சத்தியம் வாங்கிட்டு போனான். நானும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன் அம்மாவை, நல்லவளாக்கி, என் தம்பியை கெட்டவனாக்கி, ஊர் வாயை மூடி உங்களை வளர்த்தேன். உன் திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் போது வந்தவன், உங்களை பற்றி கேள்வி பட்டு எவ்வளவு சந்தோசபட்டான் தெரியுமா? “என் குழந்தைகளா இப்படி”ன்னு எவ்வளவு பூரிப்படைந்தான் தெரியுமா? உன் திருமணத்திற்கும் யாரோ ஒருவன் மாதிரிதான் வந்து பார்த்து வாழ்த்திட்டு போனான். எல்லோரின் உதாசீனத்தையும், வெறுப்பையும் பார்த்தவன், உடனே கிளம்பிச் செல்வதாகதான் சொன்னான். நான் தான் “உன் பையனுக்கும் திருமணம் ௬டி வருகிறது. இருந்து பார்த்து விட்டுப் போ!” என்று தடுத்தேன். அவன் கொடுத்த பணத்தில்தான் உன் திருமணத்தை சிறப்பாக செய்தேன். ஒரு சிறந்த அப்பா இடத்திலே இருந்து, மறைமுகமா மறைஞ்சிருந்து, மானசீகமா, நீங்க நல்லா வாழனுன்னு நினைச்சபடி, வாழ்ந்து வந்திருக்கான் என் தம்பி! அவனையா ‘ஒரேடியா’ போகனுன்னு நினைக்கிறே! மனசாற சபிக்கிறே பிரியா! சொல்லு? உணர்ச்சியுடன் கண்களில் நீர் மல்க கேட்டார் சேகர்.

தன் தாயின் தவறை மறைக்க, அதுவும் தங்கள் நலத்துக்காக, தங்களுக்கு அவப்பெயர் ஏதும் வரக்௬டாது என்பதை கருத்தில் கொண்டு, தன் வாழ்வையே தியாகம் செய்தது அப்பாவா? அவரையா இத்தனை நாள் தவறாக புரிந்து வெறுத்தோம்? இதயத்தில் ௬ரிய கத்தி கொண்டு அறுத்தது போல் பிரியாவுக்கு வலித்தது. தன் தாயினால் தன் அப்பா பட்ட துயரங்களை கேட்டதும் விக்கித்து போனவளுக்கு, இத்தனை நாள் தவறான கண்ணோட்டத்தில் தந்தையை நினைத்த தன் செய்கைக்கு மனதும் கனத்ததால் அவள் விழிகளி்ல் கண்ணீர் ஆறாக பயணித்து ஓடியது.

சட்டென்று எழுந்து பெரியப்பாவின் கைகளை பற்றியபடி, “பெரியப்பா இப்பவே, எங்கள் அப்பாவை பார்க்க போவோமா?” எனக்கு உடனே எங்கப்பாவை பார்க்கனும். அவர் காலில் விழுந்து கதறனும் போல இருக்கு!” என்றபடி விம்மி விம்மி அழலானாள் பிரியா.

நன்றி கூகிள்...