Thursday, July 28, 2022

சம்(மின்)சாரம்

 காலையிலிருந்தே இனம் புரியாத ஏதோ ஒரு கவலையில் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி சற்று குறைந்துள்ளது போல் தோன்றியது பவானிக்கு.  இன்று  கணவரின் பிறந்த நாளுக்காக அவரது அலுவலக நட்புகள் மாலையில் விருந்தினர்களாக வருகை... . தடபுடலான உபசாரங்கள்.. முதல் நாள் இரவே  கணவனுடன் சேர்ந்தமர்ந்து வரும் விருந்தாளிகளுக்கென கலந்தாலோசித்த விதவிதமான உணவு பட்டியல்கள்...  சரியென்று அத்தனையும், அதற்கும் மேலாகவும் செய்ய உற்சாகமாக ஒப்புதல்  அளித்தப் பின்,.... இப்படி அதையெல்லாம் தவிர்த்து  பின்வாங்குவது சற்றேனும் முறையில்லையே என்று மனசாட்சியுடன் தர்ம போராட்டம்.... இப்படியாக காலை பத்து மணி முதற் கொண்டு மனதுக்குள்  இயலாமையால் எழுந்த கோப ஆறு வடிகால் ஏதுமின்றி பொங்கி, பொங்கி பெருகிக் கொண்டிருந்தது.

நேரம் தன் பாட்டுக்கு இறக்கையை விரித்த வானம்பாடியாக கொஞ்சமும் கவலையின்றி பறந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கதவை திறந்து வெளி வாசலில் சென்று நின்று "இதெல்லாம் மாலை கணவரின் அலுவல நண்பர்கள் விருந்துக்கு வரும் முன்பு முறையாக செய்து முடிக்க தன்னால் முடியுமா. .?" என சுற்றும் முற்றும் பார்த்தபடி யோசிக்கும் போதே மனதில் எழுந்த கவலை காரணமாக மறுபடி சீறிய கோப ஆறு தன் வெள்ள விபரீதத்தை பெருக்க செய்தது.

வாசல் கதவை சாத்தி விட்டு சமையலறை வந்தவள், ஒரு முடிவோடு சமயலறை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அந்த பொருட்களை நகர்த்த கொஞ்சம் சிரமபட்டாலும், கடினத்தைப் பாராமல் இழுத்து வைத்துக் கொண்டாள். வேறு வழியில்லை... இப்போதைக்கு தன் மனதின் கோபங்களை, இயலாமைகளை தணித்துக் கொள்ள இதுவும்  ஒரு சிறந்த செயல்தான் என அவள் மனம் மறுபடி, மறுபடி வலியுறுத்தியது. 

மாலை.... அவசரமான ஒரு இயந்திரமாக தன் உடம்பை வருத்திக் கொண்டதின் பலனாக முதல் நாளிரவு பட்டியல் போட்ட உணவு வகைகள் மலர்ச்சியுடன் ஒன்று கூடி சமயலறை மேடையில் புன்னகைத்து கொண்டிருந்தன. சப்பாத்தி, பூரிி அதற்கேற்ற தன் ஜோடிகளுடன், சில கலவன் சாதங்கள், வடை, பஜ்ஜி  போன்ற பலகாரங்களும், மற்றும் அவற்றின் இணையாகிய பல சட்னிகள் யாவும் இனிப்பான போளி, மற்றும் விதவிதமான கொழுக்கட்டைகளுடன் விருந்துக்கு தாங்கள் தயாராகிய கதைகளை இணக்கமாக பேசியபடியிருந்தன.  மாலையானதும், கணவருடனும், மற்றும் அதற்குப் பின்னரும், ஒவ்வொருவராக வந்த நட்பு விருந்தாளிகள் முன்னறைக்  கூடத்தை தங்கள் பேச்சினால் கலகலப்பாக்கி கொண்டிருந்தனர். 

"என்ன பவானி... எல்லாம் தயாரா?" என்றபடி தங்கள் அறைக்குள் முகம் கழுவி தன்னை கொஞ்சம் தெம்பாக்கி கொண்டிருந்த  மனைவியை நெருங்கிய அவள் கணவனுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் அவளின் அசாத்திய களைப்பு புரிந்தது. 

"என்னாச்சு.. முடியல்லையா?" ஆதரவாக கேட்டவனிடம், "ஒன்றுமில்லை.. வாருங்கள்.  எல்லோருக்கும் இலை போட்டு  பரிமாறுகிறேன்..." என்றபடி ஒரு மலர்ச்சிப் புன்னகை கூட தராது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவானி. 

"எப்போதும் விதவிதமாக சமைக்கும் எண்ணங்களில் ஆர்வமாக கலகலப்பாக இருக்கும் அவள் இன்று உற்சாகமில்லாமல் இருப்பதேன்? . நேற்று என்னை கேட்காமலே கூட விதவிதமாக பாரம்பரிய பட்டியல்களை சிலவற்றை அவளே தேர்ந்தெடுத்தாளே.... சிலவற்றிக்கு இது கடினமானது என நான் சொல்லியும், கேட்காமல், எனக்கு இது மிகவும் சுலபமென வாதிட்டு அதை செய்யவதற்கு ஒப்புக் கொண்டாளே ...  இன்று எதற்காக இந்த சோர்வு.. ஒரு வேளை என் வறுப்புறுத்தலில், யாருடைய துணையுமின்றி, எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட பொழுதுக்குள் செய்ய வேண்டியதாகி விட்டதே என்ற  சிறு கோபத்தில், எழுந்த இயல்பான வருத்தமாக இருக்குமோ...? " என்றெல்லாம்  மனதுக்குள் நினைத்தபடி நண்பர்களை உணவு உண்ணும் அறைக்கு அழைத்து வர தங்கள் அறையிலிருந்து அவனும் வெளியேறினான். 

அனைவரும் வானளாவ புகழ்ந்ததில், பவானிக்கு கொஞ்சம் சோர்வகன்று கூடுதலான முகக்களையும் வந்திருப்பதை புரிந்து கொண்டான் அவள் கணவன்." இதேப் போல் மற்றுமொரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ என அந்த நாட்களையும்  இப்போதே குறித்து வைத்தபடி.... " அவர்கள் அனைவரும் விடை பெற்றதும், திருப்தியான முகப்பாவத்துடன் கூடத்தில் அமர்ந்திருந்த பவானியின் அருகே  வந்தமர்ந்தான் அவள் கணவன். 

"பவானி... இன்று உன் கைப்பக்குவம்  போல் எங்கும் ருசித்ததில்லை என என் நண்பர்கள் அனைவரும் கூறியதை கேட்டாயல்லவா? நிஜமாகவே  நீ செய்யும் பக்குவங்களில் எப்போதையும் விட இன்று எல்லாமே மிக சரியாகவும், ருசியாகவும் அமைந்திருந்தது. அது எப்படியென கேட்க வேண்டுமென்று நானே நினைத்தேன்... அது சரி......  எல்லாமே நன்றாக, ருசியாக வந்திருக்க வேண்டுமேயென்ற கவலையில் உன் உடல்/ மனச்சோர்வு அகன்று, கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ச்சியெனும் போனஸை இப்போதாவது பெற்ற மாதிரி இருக்கிறதா? அவர்களது பாராட்டுக்கள் என்னையும் பெருமை கொள்ள வைக்கிறது. எனக்கும் இப்படியொரு சமையல் வித்தகியான சம்சாரம் என் வாழ்க்கைத் துணையாக கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். வா.. இப்போதும் மணியாகவில்லை. காலையில்தான் நமக்கு நேரமில்லை. எனக்கு அலுவலகத்தில் உள்ள கெடுபிடியால் விடுமுறையும் எடுக்க இயலவில்லை. நல்ல திருப்தியான மனதுடன் சந்தோஷமாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். வா.. புறப்படு "என்றான். 

"உண்மைதான்.... காலையில் நீங்கள் அலுவலம் சென்ற பின், என் மனதில் ஏற்பட்ட கோப வெள்ளத்தில் கரையேற முடியாமல் திண்டாடினேன். இன்றைய தினத்தில் பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நம் ஏரியா முழுக்க கிடைக்காமலே போன அந்த  மின்சாரத்திற்காக நானும் அதற்கு நன்றி கூறி, இப்போது உங்களுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். என்னைக்குமே" பழையது என்றுமே தங்கந்தான்"என்ற பழமொழிப்படி, நான் சென்று எனக்கு உதவிய அவைகளையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி விட்டு, "உங்களை இனி தினமும் விடாமல் நான் அங்கிகரித்துக் கொள்ளப் போகிறேன் என சொல்லி, அவைகளையும்  மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டு வருகிறேன்...." என்றபடி பழைய சுறுசுறுப்புடன் சமையல் அறைக்குள் புகுந்தாள் பவானி. 

பாதி புரிந்த பாவனையிலும், மீதி பாதியை யோசித்தபடியும் அமர்ந்திருந்தான் அவள் கணவன். 

கதை முடிந்தது. 

பி. கு... .." என்னடா இது... உங்களை சுருக்கச் சொன்னால், இப்படி ஒரேடியாகவா...? என்று வியக்கும் (வியப்பாரா?:)))   ) சகோதரர் நெல்லைத் தமிழரின் கருத்துக்காகவா இப்படி... ." (ஹா.ஹா.ஹா) என எண்ணாமல் இந்த சிறு கதை உங்களுக்கும் பிடித்ததாவென்று நீங்கள் அனைவரும் கருத்துரையில் கூறினால், நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பேன். மகிழ்ச்சி வெள்ளமாவதும், சிறு ஓடையாகி வடிந்து போவதும் உங்கள் அனைவரின் அன்பான தட்டச்சில்தான் உள்ளது. கருத்துச் சொல்லப் போகும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏. 

39 comments:

  1. நல்ல கணவன் மனைவியின் வாழ்க்கை சிறப்பாக தொடரட்டும்.....

    தொடர்ந்து கதைகளை எழுதுங்கள் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் உடனடியாக வருகை தந்து கருத்துக்கள் தெரிவித்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

      அந்த கணவன் மனைவியை அன்போடு வாழ்த்தியிருப்பதற்கு நன்றி..

      தொடர்ந்து கதைகள் எழுத தங்களது ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் கண்டிப்பாக துணை நிற்கும். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அணில் தொந்திரவால் மின்சாரம் இல்லாமல் கல்லுரலிலும் , அம்மியிலும் நானும் அம்பத்தூரில் இருந்தவரைக்கும் எல்லாமும் பண்ணி இருக்கேன். ஆனாலும் ஒரே நாளில் கொழுக்கட்டை, போளி எல்லாத்துக்கும் அரைச்சு எடுப்பது ரொம்பவே சிரமமான வேலை தான். எப்படியோ வேலை நல்லபடியாய் முடிஞ்சது. இப்போதெல்லாம் எங்களுக்கும் இந்த அணில் தொந்திரவு அதிகமாவே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அணில் தொந்தரவா? வயரை கடித்து மின்சாரத்தை துண்டித்து விடுமா? கஸ்டந்தான். இந்த உரலும், கல்லுரலும், அம்மியும், திருகையும் நமக்கு என்றும் புதிதில்லையே ... நானும் திருமணமாகி பத்து வருடங்களுக்கும் மேலாக அம்மியும், கல்லுரலுந்தான் பயன் படுத்தி உள்ளேன். அதன் பின்தான் இந்த மிக்ஸி பயன்பாடு எங்கள் வீட்டில் வந்தது. அதுவும் அப்போதெல்லாம் தினமும் வறுத்தரைத்த சாம்பார் கண்டிப்பாக உண்டு. அம்மியில் அரைத்துத்தான் செய்து கொண்டிருந்தேன்.

      கதையை ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றி. ஆனாலும் பவானிக்கு நிறைய வேலைகளாக நான் தந்து விட்டேனோ..? :))))) நல்லதொரு கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஹாஹாஹாஹா கமலா! அணில் தொந்திரவு என்பதை நீங்கள் புரிந்து கொண்ட விதம் எவ்வளவு அப்பாவியாய் இருக்கீங்க என்பதைச் சொல்லிவிட்டது. இது தமிழ்நாட்டு மின்சார அமைச்சர் அடிக்கட் ஏற்படும் மின்வெட்டுக்குக் கூறிய காரணம். ஆகவே இதைத் தான் அநேகமாகத் தமிழக மக்களில் பெரும்பாலோர் பயன்படுத்துகிறோம். முன்னால் ஆற்காடு வீராசாமி மின் துறை அமைச்சராக இருந்தப்போ ஏற்பட்ட மின்வெட்டுக்களின்போது "ஆற்காட்! வந்துட்டார்!" என்போம். இப்போ "அணில் விளையாட்டு ஆரம்பிச்சுடுத்து!" என்கிறோம். இடுக்கண் வருங்கால் நகுக! :)))))

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      ஹா.ஹா.ஹா. தங்களது தகவல்களை அறிந்து கொண்டேன். உங்களது கருத்தும், நான் அதை புரிந்து கொண்ட விதமும் இன்னும் நினைக்க, நினைக்க சிரிப்பாக வருகிறது. எனக்கு இந்த அரசியல் அவ்வளவாக புரியாது. இந்த அணிலுக்கு இவ்வளவு காரணமா என திகைத்துப்போகிறேன். ஆம்.. இடுக்கண் வருங்கால் இவ்வித சிலேடைகளை உபயோகித்து நகைக்க த்தான் வேண்டும். நல்ல நகைச்சுவை.:))) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      சற்று தாமதமாக வந்து பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும். ஆனால் சிரித்து மனமும், உடல் உபாதைகளும் பாதி சரியாகி விட்டது.:)) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கதை நல்லாயிருக்கு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாக உள்ளதென தாங்கள் கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆட்டுக்கல்/.. ஆம் அதுவேதான். அதைக்கொண்டுதான் இக்கதை உருவானது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. என் பெரிய பின்னூட்டம் எங்கே போச்சு?
      அட்டுக்கல் என்று வந்து விட்டதை திருத்தி ஆட்டுக்கல் என்று வேறு போட்டேன். அது வந்து இருக்கிறது.
      கதை நன்றாக இருக்கிறது என்று தனியாக வந்து இருக்கிறது

      தேடி பாருங்கள்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      புரிந்து கொண்டேன். தாங்கள் மீள் வருகை தந்து விபரங்களை கூறி தாங்கள் தந்த கருத்துரையை கீழே கண்டு கொண்டேன். அதற்கு பதிலும் என் தாமதத்திற்கு காரணம் கூறி இப்போதுதான் தந்துள்ளேன். அதற்கும் மன்னிக்கவும்.

      நீங்கள் உங்களது சிரமம் பாராமல் மீ்ண்டும் வந்து கருத்தில் ஏற்பட்ட பிழைகளை கூறியதற்கு நன்றி. இப்போது ஏனோ இப்படிபட்ட குறைகளை நாம் அனைவருமே இந்த கருத்துப் பெட்டியில் கண்டு கொண்டுள்ளோம். இதுவும் விரைவில் சரியாகி விடுமென நம்புவோம். தங்களது அன்பான அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாக உள்ளதென தாங்கள் கூறியதை கண்டு என்மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தங்களின் அன்பார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கதை நன்றாக இருக்கிறது.

    எனக்குப் பொதுவாகவே இத்தனை வேலைகளையும் மனைவி தலையில் சுமத்துவது பிடிக்காது. அல்லது basic வேலைகள் எல்லாம் செய்துவிடுவேன். சில நேரங்களில் சிலவற்றை நானே செய்துவிடுவேன்.

    மனைவிக்கு அதிக வேலை கொடுப்பது guiltyயாக இருக்கும்.. காரணம் அப்கோ நாம் வெட்டியான வேலைகளில் ஈடுபட்டிருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாக உள்ளதென தாங்கள் பாராட்டியது கண்டு என் மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. நன்றி.

      /எனக்குப் பொதுவாகவே இத்தனை வேலைகளையும் மனைவி தலையில் சுமத்துவது பிடிக்காது/

      தங்களின் பெருந்தன்மையான செயல்களுக்கு மகிழ்ச்சி. தங்களின் எண்ணங்கள்
      கருத்துக்கள் அனைத்தும் சிறந்ததே. ஆனால் இந்தக்கதையில் அந்த மனைவியே இத்தனை வேலைகளையும் தானே செய்கிறேன் என பளுவை சுமக்கிறாள். இது போன்ற மனைவிகள் இப்போது இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்து அந்த காலத்தில் இருந்தார்கள். நானும் அப்படிப்பட்ட ஒரு மனைவிதான்.எனவும் சொல்லிக் கொள்கிறேன்.

      தங்கள் கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. எங்கள் 25 வருட வெளிதாட்டு வாழ்க்கையில் கரண்ட் போனது என்பது 5-6 தடவைகள் நடந்திருந்தால் அதிசயம். ஒரு தடவை 6-8 மணி நேரம் கரண்ட் இல்லை. அதைக் கறுப்பு தினமாக பஹ்ரைனில் குறிப்பிடுவர், ஆனால் பெரும்பான்மையினர் மால்களுக்குச் சென்றுவிடுவர், அங்கே ஏசி என்பதால். இன்னொரு தடவை 2 மணி நேரம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வெளிநாட்டு நிலைக்குறித்து விபரமான பதிலும், தகவலும் தந்தமைக்கு சந்தோஷம். இங்கு மாதத்திற்கு ஒரு முறையாவது, காலை பத்திலிருந்து மாலை வரை கரண்ட் இல்லை என்ற நிலை தொடர்கிறது. வீட்டில் கரண்ட் இல்லாமல் போகும் பிரச்சனை தெரியாதிருக்க சாதனம் உள்ளது. ஆனாலும், மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை செயல்படுத்த முடியாது. சமீபத்தில் அதன் விளைவாக உருவானதுதான் இந்தக்கதை. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இப்போது இருக்கும் இடத்திலும் ஜெனரேட்டர்கள் உண்டு என்பதால் அரை நிமிடம் கூட மின்சாரம் போவதில்லை. எலெக்ட்ரிகல் அப்ளையன்ஸஸ் வேலை செய்யவில்லைனா எப்படி சமையல் செய்வது?

    மிகவும் டயர்டாகவும் உடம்பு சிறிது முடியாமலும் நேற்று (இன்று) இரவு 3 மணிக்கு வந்த எனக்கு, நான்தான் கரண்டி பிடிக்கணும் என்ற நிலை. அமாவாசை என்பதால் வெளிச் சாப்பாடு கிடையாது. உடனே புளிசேரி ;தேங், ப.மி அரைத்து மோரில் கலக்கி பதைக்கவைப்பது), வெண்டை கறி, உருளை கட் கரேமது பண்ணினேன். புளிசேரிக்கு அரைக்கும்கோது, எல்லா சாதனங்களும் இருப்பதால் டக் டக் என்று செய்முவிட முடிகிறது. இதே புளிசேரி பண்ண என் பெரியம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

    அந்த எண்ணத்தை ஒட்டிய கதை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இங்கும் ஜெஜெனரேட்டர்கள் இருக்கின்றன. லிப்ட் முதற்கொண்டு உடனே பயன்படுத்த முடியும். ஆனாலும் எலெக்ட்ரிக் ஸ்டவ் எனும் போது பிரச்சனை வரும். சில எலெக்ட்ரிக் சாதனங்கள் கரண்ட இல்லாமல் போகும் போதும் பயன்படுத்த முடிவதில்லை.

      நீங்கள் ஒரு வாரமாக திருமலைக்கு சென்று வந்ததினால், அலுப்பும், முடியாமையும் கண்டிப்பாக இருந்திருக்கும். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு ஏன் பிற வீட்டு வேலைகளும்...?
      இன்று அமாவாசை.. வெளிச் சாப்பாடும் கூடாது என்பதாலும் சிம்பிளாக ஏதாவது மோர் தாளித்துக் கொட்டி செய்திருக்கலாமே... ஆனால் தங்கள் கைப்பக்குவத்தில் குழந்தைகளுக்குச் செய்யும் போது ஒரு மகிழ்வு, நிம்மதி உங்களுக்கு உண்டாகியிருக்கும்.

      உண்மைதான்.. அந்தக்காலத்தில் தினமுமே இதே பயன்பாடுகளைத்தானே உபயோகித்து வீட்டில், செய்து தந்தார்கள். அதன் ருசிகள் இந்த நவீனத்தில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்தக்கதையே கரண்ட் இல்லாமல் போன அந்த ஒருநாள் நிகழ்வில்தான் பழைய அந்த காலத்தை க்கொண்டு உருவானது.

      தங்களின்விபரமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. இதேபாதிரி கரண்ட இல்லை, விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், எளிய கலவை ணாதம், மீதி ஸ்விக்கி அல்லது எஸ் எல் விதான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. இப்போதெல்லாம் இந்த சௌகரியங்கள் வந்து விட்டன. அந்தக்காலத்தில் இந்தப்பிரச்சனை தீடிரென ஏற்பட்டு விட்டால், எப்படியும், உரல், அம்மியை நாடாமல் இருக்கமாட்டோம்.
      ஏனென்றால் வீட்டுக்கு வீடு அவைகளும் உடனிருந்தன. இப்போது இந்த மாதிரி கல்லுரல் , அம்மி, மண்பானை சமையல் என மறுபடியும் பழைய காலத்திற்கு மக்கள் திரும்புகிறார்கள். விறகடுப்பு கூட விரைவில் வீடுகள்தோறும் வர முயற்சித்து கொண்டிருக்கின்றன. எல்லாமே ஒரு மாறுபாடு விரும்பும் காலச்சுழற்சிதான்...

      தங்களின் அலுப்பைக்கூட பொருட்படுத்தாமல், கதைப் பதிவைக்குறித்து பல கருத்துகள் தந்திருப்பதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலாக்கா கதை இதோ முழுவதும் வாசித்து வருகிறேன்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      வாங்க. வாங்க.. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. கதை நன்றாக இருக்கிறது கமலாக்கா.....நான் இப்போதும் சில சமயங்களில் உரலில் அரைப்பதுண்டு. இங்கு இந்த வீட்டில் அடுக்களையில் ஒரு சிறிய உரல் இருக்கிறது. தரையில் பதிந்து. பொடிகளை கை உரலில் போடு தட்டிக் கொண்டுவிடுவேன். உண்மையைச் சொல்ல வெண்டும் என்றால் மிக்ஸியில் அரைப்பதை விட இது சுவையாகவே இருக்கும். கரன்ட் இல்லை என்றால் இந்த வீட்டில் நான் கவலைப்பட்டதில்லை உரல் இருப்பதால். கொஞ்சம் நேரம் எடுக்கும் அவ்வளவுதான்.. ஆனால் முந்தைய வீடுகளில் உரலும் கிடையாதா அப்போது மெனுவை மாத்திவிடுவேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து விட்டீர்களா? கதை நன்றாக உள்ளதென்று தாங்கள் கூறியதை கண்டதும் என் மனம் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி..

      உங்கள் அனைவரின் ஊக்கம் தரும் மன பலந்தான் என்னை இப்படி ஏதோ கிறுக்க வைக்கிறது.

      தாங்களும் இன்னமும் விடாது கல்லுரல் முதலியவற்றை பயன்படுத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      நானும் சென்னை, திருமங்கலம் வரை இதைத்தான் பயன் படுத்தி வந்தேன். அங்கிருந்து இங்கு வரும் அவற்றை வீட்டுக்காரர்களிடமே தந்து விட்டு வந்து விட்டோம். இப்போதும் நிறைய இடங்களில் மறுபடி பிரச்சனமாகியிருக்கும் உரல்களை பார்க்கும் போது வாங்கலாமா என்ற யோசனை வருகிறது.

      தாங்கள் சொல்வது போல் அதைப் பயன்படுத்தி செய்யும் சமையலே ஒரு ருசிதான். அது கிடைக்காத பட்சத்தில் மனுவை மாற்றி சுவைபட தயாரிப்பதும் ஒரு கலைதான். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. மனைவியின் சிரமமறிந்து கணவன் நடந்து கொண்டால் அதுவே பாதி கஷ்டத்தைப் போக்கி விடும்.  மாலை இருவரும் அக்கடாவென்று கோவில் சென்று திரும்பும்போது ஏற்படும் சந்தோஷம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் அலுவலக வேலைகளின் நடுவே நானும் தொந்தரவு தந்து விட்டேனா?

      ஆம்.. கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையில் நடந்து கொண்டால் என்றும் சந்தோஷமே... கதையுடன் வாழும் தம்பதிகளும் மனமொத்து இருப்பதால் அவர்களும் மகிழ்வாக த்தான் இருப்பார்கள்.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கதை மிக நன்று. கணவன் மனைவிக்கு உதவினால் அது மிக நல்ல விஷயம். இவர்களுக்குள் புரிதல் இருப்பதால் நல்ல மகிழ்வான வாழ்க்கைதான். மாலையில் வெளியில் சென்று வரும் போது சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

    கரன்ட் போனால் கஷ்டம்தான். எங்கள் வீடுகளில் அம்மி இப்போதும் பயன்பாட்டில்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாக இருப்பதாக தாங்கள் கூறியது எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது. கதையை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.

      கரண்ட் இல்லாத போது அம்மி, கல்லுரல் போன்றவற்றை பயன்பாட்டுக்கு உபயோகிப்பது நல்லதுதான். தங்கள் வீட்டிலும், அந்த பயன்பாடு இப்போதும் இருப்பதறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. நேற்றே இன்னும் இரண்டு கமெண்ட்ஸ் போட்ட நினைவு.  ஸ்பாமில் இருக்கக் கூடும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அப்படியா? நானும் தேடிப்பார்த்தேன். அதில் வேறு கமெண்ட் ஒன்றும் காணவில்லையே..? என்னவோ எல்லோரும் போடும் கமெண்ட்ஸ் எங்குதான் சென்று மாயமாகிறதோ? புரியவில்லை. தகவலுக்கு மிக்க நன்றி சகோதரரே. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் கருத்துக்கு பதிலளிக்க சற்று கால தாமதம் ஆகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. சம்சாரத்தையும் மின்சாரத்தையும் இணைத்து கதை எழுதியது நன்றாக இருக்கிறது என்றும். பழைய காலம் போல பாரம்பரிய உணவு சமைத்ததால் உணவுக்கு சுவை கூடி இருக்கிறது. ஆட்டுக்கல், அம்மிகல்லில் அரைத்து சமைத்த காரணத்தால் ஏற்பட்ட உடல் களைப்பு நண்பர்கள் கொடுத்த பாராட்டுக்கள் போக வைத்து இருக்கும்.
    கணவரும் பெருமை பட்டது மேலும் மகிழ்ச்சி தந்து இருக்கும்.
    கணவருடன் மகிழ்ச்சியாக கோவிலுக்கு போய் வரட்டும் பவானி என்று கருத்து போட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் மறுபடியும் வந்து உங்களது கருத்தை அழகாக சொன்னதற்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

      உண்மையிலேயே நானும் உங்கள் கருத்தைப் பார்த்தவுடன், பதிவுக்கு இவ்வளவு சுருக்கமாக சகோதரி கருத்து தந்திருக்கிறாரே... ஏதோ அவசர வேலைகள் போலும்....அதனால் நேரமிமின்மையால், சுருக்கமாக தந்து விட்டார் எனவும் நினைத்துக் கொண்டேன். ஆனால் இப்படி அனைவரும் இடும் கருத்துக்கள் மாயமாகி போவது இப்போது வழக்கமான ஒன்றாகி விட்டது. என்பது வருத்தமான விஷயந்தான். என்ன செய்வது? நானும் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொன்னது போல் ஸ்பாமில் உங்களின் கருத்துரையையும் தேடினேன். கிடைக்கவில்லை.

      மறுபடி வந்து தந்த தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. இரண்டு நாட்களாக சிறிது உடல்நலக் குறைவு, மற்றும் ஏதோ வேலைகளினால் இதற்கு பதிலளிக்க எனக்கு சற்று கால தாமதம் ஆகி விட்டது. மன்னித்துக் கொள்ளவும். ரொம்பவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. ஜெனரேட்டர் போட்டு விடுவார்கள் கரண்ட் போனால். மிக்ஸி மட்டும் போடலாம். கிரைண்டருக்கு கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. இங்கும் ஜெஜெனரேட்டர் இருக்கிறது. வீட்டிலும் எங்களுககென்று தனியாக வைத்துள்ளோம். ஆனால் நீங்கள் சொல்வது போல், மிக்ஸி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர் இவையெல்லாம் ஒர்க் ஆகாது. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. // இந்த சிறு கதை உங்களுக்கும் பிடித்ததாவென்று.. //

    தங்களது எழுத்துகளுக்கு என்று வாசக வட்டம் இருக்கின்றதே...

    தங்களைப் போல் விரிவான கருத்துரைக்கு இயல வில்லை..
    உள்ளங்கை நெல்லிக்காய் போல நல்ல கதை.. எபி யிலும் எழுதுங்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே .

      கதையை ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தரும் உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்களது பாராட்டுக்களை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் . தங்களுக்கு பதில் தர இரண்டு நாட்கள் பல சந்தர்ப்பங்கள் காரணமாக கால தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.தங்களின் அன்பான கருத்துக்கு மீண்டும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete