Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Saturday, November 9, 2024

எதிர்பார்க்காத நிமிடங்கள்.

நான் சின்ன வயதில் அம்மா வீட்டில் இருக்கும் போது நாங்கள்..(நாங்கள் என்றால், வீட்டிலுள்ள அங்கத்தினர்) திரைப்படங்களை அடிக்கடி  திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பது கொஞ்சம் அரிதானதுதான். ஆனாலும், நல்ல குடும்ப படங்கள், பக்தி படங்கள், என்றால், வீட்டில், அதுவும் பள்ளி பரீட்சை முடிந்த  விடுமுறை தினங்களில், அழைத்துச் செல்வார்கள். வேறு எவர்களோடும், (உறவு முறை, நட்பு) எங்களை அனுப்பியதில்லை. என் அண்ணாவுக்கு மட்டும் கல்லூரி காலங்களில் தன் நண்பர்களோடு செல்ல அனுமதி கிடைத்து விடும். அம்மா, பாட்டி இவர்களோடு நல்ல படமாக இருந்தால் நாங்கள் சேர்ந்து போவோம். ஆனால் எல்லாமே வந்து ஒரிரு ஆண்டுகள் ஆன பழைய படங்கள்தாம். அவர்களோடு சென்று அவர்கள் காலத்திலும் வந்த ஒரிரு படங்களையும் பார்த்துள்ளேன். 

அப்போதுள்ள  நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வேறு பொழுது போக்குகள் என்றில்லை. அருகில் இருக்கும் கோவில்களில் ஏதேனும் விஷேடங்கள், என வந்தாலொழிய கோவில்களுக்கு தினமும் செல்லும் பழக்கமும் இல்லை. இப்போது போல் மூலைக்கு மூலை பார்க்,தெருவுக்கு தெரு  விதவிதமான பேன்சி கடைகள் என எதுவும் உற்பத்தியாகவில்லை. வாகனப் பெருக்கங்ககளும் அவ்வளவாக இல்லை. க. கெ. கு. சு என்ற பழமொழிக்கேற்ப அங்கே உள்ள  திரையரங்கம் ஒன்றுதான் வழி. 

அப்போது தி. லி யில்  சென்ட்ரல், பார்வதி,ரத்னா, பாப்புலர், , ராயல் தியேட்டர் என அனேக திரையரங்குகள். இருந்தன. அப்புறம் பூரணகலா, இன்னும் பல திரையரங்குகள் புதிதாக வேறு முளைத்து வந்தன. அங்கெல்லாம் சென்று கூட ஓரிரு படங்கள் பார்த்துள்ளோம். (இப்போது அந்த திரையரங்குகள் இருக்கிறதாவென தெரியவில்லை) பொதுவாக பெரிய நகரங்களில் தீபாவளிக்கு, பொங்கலுக்கென வெளியிடும் புதுப் படங்கள் இங்கு வருவதற்கே தாமதமாகி விடும். ஆனால், அப்போது வரும் அந்த படங்களை பார்க்க வேண்டுமென இருந்த ஆர்வங்கள் இப்போது என்னவோ சுத்தமாக இல்லை. அது வேறு விஷயம். 

ஒரு தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் படங்களை அடுத்த தீபாவளிக்குள்...!! , இல்லை, அடுத்த தீபாவளியன்று வேறு ஏதாவது திரையரங்கில் அதே படங்களை போட்டால், செல்வோம். அதற்கு கூட அந்த தீபாவளி, பொங்கல் நாளன்று செல்ல மாட்டோம். ஒரு வாரத்திற்கு மேலாகவே, திரை அரங்குகளில் ஒரே கூட்டமாக இருக்கும் என வீட்டில் பல அபிப்பிராயங்கள் சொல்வார்கள். 

தீபாவளி முடிந்து ஒரு மாதங்களுக்கு மேலாகவே  தினசரி ஒவ்வொரு காட்சிகளுக்கும் வரும் கூட்டங்கள் ஆடி அடங்கிய மறுநாளோ, இல்லை, அதற்கடுத்த நாளோ,"இப்படம் இன்றே கடைசி" என்று திரையரங்கிலிருந்து அந்த படத்தை எடுத்து விடுவார்கள் என்ற ஒரு நிர்பந்த காலகட்டத்தில் அந்த படத்தை ஏற்கனவே ஒரு /பல முறை பார்த்தவர்கள் (வேறு யார்..? வீட்டின் அருகில் இருக்கும் சுற்றங்கள், நட்புகள்தான் )  "ஐயோ..! இன்னுமா நீங்கள் அந்த படத்தை பார்க்கவில்லை..? அதில் அந்த  கதாநாயகன், கதாநாயகி நடிப்பும் அந்த கதையும், முடிவும், பாடல்களும் அவ்வளவு  நன்றாக இருக்கிறது. இப்படி இதுநாள் வரை  எப்படி பார்க்காமல் இருக்கிறீர்களே?" என வீட்டில் அம்மா, பாட்டியிடம் மதிய வேளைகளில் அங்கலாய்த்த பின், "ஒரு வேளை அதை பார்க்கா விட்டால் ஏதேனும், உலகமகா குற்றமாகி விடுமோ" என்ற அவர்களின், (சமயங்களில் நானும் அவர்களுடன் இணைந்து ஏற்படுத்தும்) நினைப்பின் அலசலில், " இன்று போகலாமா.?" என ஒரு மட்டும் முடிவு செய்து புறப்படுவோம். 

அந்த அளவுக்கு திரைப்படங்கள் பார்க்க தயக்கங்கள், கட்டுப்பாடுகள். இத்தனைக்கும் தரை டிக்கெட் விலை நாலணாதான். பெஞ்ச் டிக்கெட் எட்டணா. அந்த பெஞ்சில் பின்னாடி சாய்ந்து கொள்ள இரண்டு கட்டைகள் வைத்த பெஞ்ச் கட்டணம் முக்கால் ரூபாய், தனித்தனியாக உட்கார வசதியாக இருக்கும் சேர் ஒரு ரூபாய் என படிப்படியான வசதிகளுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் வேறு. அதில் அந்த முதலில் சொன்ன ஒருவருக்கு நாலணா என்றால், மூவர் சென்றால் கூட, முக்கால் ரூபாயாகி விடும். அது வீட்டின் அன்றாட இதர செலவுகளுக்கு பயன்படுமே என்ற நினைவுகள் வேறு வந்து படங்கள் பார்ப்பதை சில சமயம் தடை செய்யும். அப்போது வீட்டின்  பணத்தட்டுப்பாடுகள் சினிமா பார்க்கும் ஆசைகளுக்கு பெரும்பாலும் தடை போடும். 

நாட்கள் செல்லச் செல்ல திரைப்படம் பார்ப்பதற்கான கட்டணங்கள், அணாவிலிருந்து ஒன்று, இரண்டென்ற ரூபாய்க்கு வந்து, ஐம்பது நூறாக மாறி, இன்று ஐநூறு, ஆயிரம் எனவும் வந்து விட்டது. அதுவும் முதல் நாளாகிய  இன்றே பார்த்து விட வேண்டுமென்பவர்களுக்கு ஆயிரத்திலிருந்து மேலும் பல ஆயிரங்களை சேர்த்து தரும்படியாக (பிளாக் விற்பனையில்) சூழலைக் கூட தந்து விடும். 

எங்கள் திருமணத்திற்குப் பின் நான் சென்ற படங்களையும் எண்ணி கணக்கில் சொல்லி விடலாம். கூட்டு குடும்பம், குடும்பத்தில் பெரியவர்கள் என்ற மரியாதைகள், அவர்கள் விருப்பமின்றி வெளியில் செல்ல முடியாத சூழ்நிலைகள், என வாழ்ந்த போது சினிமாக்கள் எல்லாம் ஒரு  கனவுதான்.(ஆமாம்.. இதில் இரவு நேர கனவு பலிக்குமா? பகல் நேர கனவு பலிக்குமா? "பகல் கனவு பலிக்காது" என்பார்கள்.ஏன் அப்படி? பகலில் அவ்வளவாக ஆழ்ந்த உறக்கம் வராது எனபதினாலா ? பகலில் சட்டென  முழிப்பு வந்து விடும் போது கண்ட கனவுகள் சட்டென அது போலவே கரைந்து விட வாய்ப்புள்ளது என்பதாலா..? அதைப்பற்றி பிறகு ஒரு முறை விவாதிப்போம். :)))    ) பிறகு வந்த காலங்களில், சிறு குழந்தைகளை அழைத்து செல்வதென்பதும், இயலாத காரியங்களாக போய் விட்டது. 

முதன் முதலில் மக்களுக்காக தோன்றிய பொதிகை/ தூர்தர்ஷன் தொலைக்காட்சிகள்தான் ஏதோ ஒரு  தமிழ் படத்தை ஞாயிறன்று மாலை இடையிடையே ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு இடையே ஒளிபரப்பி, என்னைப் போல் திரையரங்கம் சென்று  திரைப்படம் பார்க்காதவர்களுக்காக புண்ணியம் தேடிக் கொண்டது. அப்போது எங்கள்  புகுந்த வீட்டிலும் டி. வி கிடையாது. எதற்கு இடத்தை அடைத்துக் கொண்டு என வாங்கவில்லை. தெரிந்தவர் வீட்டிற்கு (ஒரளவுக்கு எங்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படியோ உறவு முறை என்ற சொந்தமும் கூட..!) சென்று, நான், எங்கள் நாத்தனார், அவரின் மகள், மகன் சமயத்தில் என் மாமியார் என அனைவரும் சேர்ந்து சென்று சில படங்கள் பார்த்திருக்கிறோம. அவர்கள் வீட்டில் அப்போதுதான் டி. வி. வாங்கியிருப்பார்கள் போலும். முகம் சுளிக்காமல் வரவேற்று உபசரிப்பார்கள். 

பின்னர் நாளடைவில்  நாங்கள் சென்று வந்த அவர்கள் வீட்டிலும் இந்த மாதிரி நிறைய பேர் பார்க்க வரவே படம் பார்க்க தலைக்கு ஒரு ரூபாய், எட்டணா என வசூல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நல்லதொரு வரும்படிக்கான வழி.:)) (எங்களிடம் அவர்கள்  கேட்கவில்லை. ஆனாலும் எங்கள் மனசாட்சி உறுத்தவே அதன் பின் அங்கு போவதற்கும் எங்கள் புகுந்த வீட்டில் தடையாகி விட்டது.)

அன்று மாலை படம் ஆரம்பித்து விடும் நேரம் நாங்கள் இருந்த சித்ர குளம் தெருவெல்லாம் மக்கள் கூட்டத்தையே காண முடியாது மயிலை கபாலீஸ்வரர் கோவில், மாட வீதிகள் எங்குமே காற்றாட கால் வீசி கூட்டங்களின் இடர்கள் இன்றி அன்று நடக்கலாம். மெரீனா, சாந்தோம் கடற்கரையில் கூட்டங்களின் இரைச்சகள் இல்லாத அலைகளின் ஓசையை மட்டும் ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். அப்படியும் ரசித்திருக்கிறோம். அது ஒரு காலம். 

அதன் பின் சில வருடங்களில் எங்கள் வீட்டில் எப்படியோ டி. வி  (இத்தனைக்கும் அது சின்னதான பிளாக் அண்ட் ஒயிட் டி. வி தான்.) வாங்கியவுடன் அடுத்த  ஞாயறு மாலையை  ஞாயறு முடிந்த மறுநாளாகிய திங்களிலிருந்தே எண்ண ஆரம்பித்தோம்.  வரும் ஞாயறு நல்ல படமாக, இதுவரை பார்க்காத படமாக இருக்க வேண்டுமே என அனைவரின் எதிர்பார்ப்புகளும் இருக்கும். (ஆனால், பழைய படங்களின் அணிவகுப்பே தொடர்ந்து வரும்.) 

அதன் பின் அனேக சேனல்களின் உதயங்கள் வந்து தொலை காட்சி பெட்டியை கலகலக்க வைத்தன. வாரம் ஒரு முறை ஒவ்வொன்றிலும் மாறுப்பட்ட படங்கள். அதன் பின் கேபிள் கனெக்ஷன்களின் உலா வரும் ஒளிக்கதிர்கள். தினமும் ஒரு படம்.... ! (ஆனால் பார்க்கத்தான் நேரம் இருக்காது.குழந்தைகள் அவர்களின் பள்ளி, படிப்பு, வேலைகள், கடமைகள் என அப்போது  கீழே அமர கூட தயங்கும் கால்கள். ) வார விடுமுறைகளில் என்றாவது குடும்பத்துடன் அமர்ந்து நமக்கு பிடித்தமான படங்களை வாடகைக்கு எடுத்து டி. வியுடன் இணைத்துப் பார்க்கும் வசதிகள் என (அப்போதுதான்  வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான டிபன்கள், விதவிதமான சாப்பாடுக்கள், அதை எடுத்து பரிமாறும் வேலைகள் என எனக்கு  அதே கடமைகள் காலோடு கையையும், கண்களையும் கட்டிப் போடும்.) காலம் தன் கால்களை வீசி முன்னேற ஆரம்பித்தது. ஆனால், எனக்கு திரைப்படங்களை பார்க்க மனதில் விருப்பங்கள் இல்லாமலும் போனது.  ( அது இப்படி படங்களை பார்க்கும் நேரத்தில் நம்மால் பார்க்க கூட  இயலாமல் போகிறதே என்ற விரக்தி தந்த வெறுப்பாக கூட இருக்கலாம்:))  இது அந்த வயதின் தாக்கம். ) 

இப்போது தொலைக்காட்சி பெட்டிகளே( டி. வி) விதவிதமான முன்னேற்றங்களை சந்தித்து வந்தும் கூட, அதில் இலவசமாக புது படங்களையே நம் சௌகரியபடி  எப்போதுமே பார்க்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்தும் கூட, படங்கள் பார்க்கும் ஆர்வம் எனக்கு போயே போச்சு...! 

இத்தனை பீடிகை இப்போதெற்கு என்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். நீங்களும் என்னுடைய அந்த கால பழைய பல்லவிகளை கேட்டு, அதை நினைத்து சற்றே சலிப்பாவதற்குள் இந்த தீபாவளிக்கு நான் சற்றும் எதிர்பாராது மகன்கள் அன்று வெளி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படமான "அமரனை" பார்க்க ஆன்லைனில் டிக்கெட் எடுத்து விட்டதால், குடும்பத்துடன் சென்று வந்தோம் என்பதை சொல்லி விடுகிறேன். 

"படம் நன்றாக உள்ளது நீங்களும் கண்டிப்பாக வாருங்கள்" என சொன்னதில் அனைவரும் தீபாவளியன்றே மதியம் இரண்டாவது காட்சிக்கு சென்று வந்தோம். 

அன்று காலை அந்த படம் இங்கு  ரீலீஸ் ஆகி, முதல் காட்சி வந்து பின் இரண்டாவது காட்சிக்கு நான் கடந்து வந்த என் இத்தனை வருட வாழ்நாளில், முதன்முறையாக சென்ற முதல் புது திரைப்படம்... ,! அதுவும் தீபாவளியன்றே சென்று வந்த திரைப்படம்..! என்றொரு  பெருமையை அமரன் பிடித்தது. (பெருமை எனக்கா, இல்லை, அந்த படத்திற்கா, என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை உங்கள் கருத்தில் அவசியம்  சொல்லுங்கள்.அன்புடன் எதிர்பார்க்கிறேன். ஹா ஹா) 

இரண்டு நாள் கழித்து வந்த  சென்ற ஞாயிறன்று  மீண்டும் ஒரு திரைப்படம். நடிகர்  மம்முட்டியின் மகன் நடித்த "லக்கி பாஸ்கர்" என்ற  திரைப்படம். இது காலை 9 மணிக்கே ஆரம்பம் .! இதுவும் தீடிர் என்றுதான் நான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்தது. 

முதலாவது படம் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் உண்மை கதையை மையமாக கொண்டு எடுத்தது. இரண்டாவது படம் வீட்டுக்காக எதையும் செய்ய  துணிச்சலுடன் செயல்படும் வகையை சார்ந்த படம். இரண்டுமே வெவ்வேறான இரு கோணங்கள். அதில் நடித்தவர்களின்  உழைப்பையும், திரைப்படத்தின் மற்ற துறைகளில் சிறந்த அக்கறையுடன் செயல்பட்டவர்களையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். 

எனக்குத்தான் இரு நாட்களும், வீட்டின் வேலைகளோடு வெளியிலும் அலைந்து திரிந்ததில் மிக அசதியாக இருந்தது. அதனால் ஒரு வாரமாக காலையிலேயே பதிவுகளுக்கு வர இயலவில்லை. 

இதனால், இத்தனை நாட்கள் எந்த படங்களையும் பார்க்க அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தது போய், இந்த இரு புது படங்களை அடுத்தடுத்து பார்த்த நிலையில், இப்போது  படங்களை பார்க்கும் பழைய ஆசைகளும் மீண்டும் மனதில் தலை தூக்கி ஏற்படாமல் இருக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், ஆசைகள்தான் நம் அழிவுக்கும் ஒரு மூல காரணமல்லவா.. ? 

Wednesday, May 1, 2019

நாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2)


கதையினுள் உட்கதை

"கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் நம்மினம் மட்டும் உருவத்தில் மாறுபட்டவையாக இருப்பதினால் எவ்வளவு திறமையுடன் ஓடி ஆடி திரிந்தாலும் மற்ற பிறவிகளின் காலுக்கடியில் மிதிபட்டும் அடிபட்டும் சீக்கரமாக முடிவை சந்தித்து கொண்டிருக்கின்றன..ஏன் இப்படி?" என்ற அந்த கவலையில் உண்ண பிடிக்காமல், உறக்கம் வராமல் தவித்தார் அவ்வினத்தின் தலைவர்.

ஒரு நாள் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர உலகில் உள்ள தன் மொத்த இனத்தையும் கூட்டமாக கூட்டி வைத்துக்கொண்டு அந்த தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

" நண்பர்களே! இன்று நம் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குக்கெல்லாம் புரியும் என நினைக்கிறன். நம்மையெல்லாம் படைத்த கடவுள்  நம்மை படைக்கும் போது, நமக்கு வேண்டும் போது அவரிடம் நமக்கு வேண்டிய வரத்தை  வாங்கிக் கொள்ளலாமென கூறியிருந்தார். அதன்படி அரக்கர்களும், மிருகங்களும், தேவர்களும், மனிதர்களும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர். அதனால் நாமும் நமக்கு சாதகமாக சாகா வரத்தை பெற்று விட்டால் எக்காலத்திலும் நாம் சந்தோஷமாய் இருக்கலாம். உங்களுடைய கருத்து என்ன?"

இவ்வாறு தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து துணிச்சலான குரல் வந்தது. “நீங்கள் சொல்வது உண்மைதான் தலைவரே! அந்த மாதிரி ஒரு வரத்தை பெற்று விட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது" என்ற தைரியமான குரலை பார்த்த தலைவர், ""அப்படியானால், நம்மில் யார் சென்று வரம் பெற்று வருவது என்று தீர்மானியுங்கள்"! என்றவுடன், அந்த துணிச்சல் குரலுக்குடையவரை தவிர்த்து மற்றவர்கள்  தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாக பட்டியலிட்டு ௯றி விலக ஆரம்பித்தனர். 

தலைவர் யோசித்தார்! முதலில் வந்த குரலுக்குரியவரையே பக்குவமாக பேசி கடவுளிடம் வரம் கேட்க அனுப்பி வைத்தாலொழிய இந்த பிரச்சனை தீராது என்பதை புரிந்து கொண்டவராய்....

இதோ பார்! நீதான் மிகவும் தைரியமாயிருக்கிறாய்! இந்த வேலைக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரி வர மாட்டார்கள்! நீ இதை முடித்து வந்தால் நம் இனம் உன்னை என்றும் நன்றியுடன் போற்றிக் கொண்டிருக்கும்! என்றதும், "வெறும் நன்றிதானா?" என்று மறுபடியும்  அந்த குரல் மறுபடி எகத்தாளமாக கேட்க, "சரி நீ என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று பதிலுக்கு தலைவர் சொன்னதும், "நான் திரும்பி வந்ததும் உங்கள் இடத்தை தருவீர்களா?" என்று கேட்டதும் ஒரு நிமிடம் மெளனமானார் தலைவர்.

தன் இனங்களின் நன்மைக்காக தன் பதவியை தியாகம் செய்வது ஒரு சாதாரணசெயல்! இதனால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது! இந்த செயலினால் தன் பேரும் புகழும் பன்மடங்கு பெருகும் என்பதை புரிந்து கொண்டவராய், “சரி! நீ போய் சாதித்து வா! வந்தவுடன் மேடையின்றி, ௯ட்டமின்றி, தேர்வின்றி நீதான் நம்மினத்திற்கு தலைவன்! போதுமா?” என்று உறுதியளித்தார் தலைவர்.

"சரி!" என்று சந்தோசமாக கடவுளின் இருப்பிடத்திற்கு கிளம்பிய அந்த தைரியமான குரலுக்குரியவருடன் அவர் உற்ற நண்பனும் "நானும் வருவேன்" என ஒட்டிக் கொண்டு புறப்பட்ட, "சரி போனால் போகிறதென்று அவரையும் அழைத்துச் சென்ற அந்த தைரியவான் தன் முறை வந்ததும் கடவுளை சந்தித்தார்.

என்ன வேண்டும்? என்ற கடவளிடம், தங்கள் குறைகளை தைரியமாக எடுத்துரைத்தப்பின் வேண்டிய வரத்தை கேட்கும் முன் தைரியமான குரலின் நண்பன் முந்தி கொண்டபடி, “அண்ணே! அண்ணே! இதை மட்டும் நான் கேட்கிறேன் அண்ணே! என்று கெஞ்சி ௯த்தாட, அந்த தைரியவானும், "சரி! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அதே மாதிரி கேட்பாயா? என்று அகங்காரத்துடன் கேட்ட பின் , "சரி! ஒழுங்காக கூறி வரத்தை பெற்றுக் கொண்டு வா! நான் வெளியில் காத்திருக்கிறேன்." என்றபடி வெளியில் வந்து அமர்ந்து கொண்டார். .

சற்று நேரம் கழித்து வெளியில் வந்த நண்பனிடம் "முடிந்ததா? கடவுள் வரம் தந்து விட்டாரா? நான் சொன்னபடி கேட்டாயா? எப்படிகேட்டாய்? ஒருமுறை சொல்! பார்க்கலாம்! என்ற குரலுக்குரியவரிடம் அவர் நண்பன் தான் கேட்ட வரத்தை சொன்னதை கேட்டதும் அவரின் குரலே எழும்பவில்லை!

அடபாவி! “நாங்கள் கடித்து அனைவரும் சாக வேண்டும்! முக்கியமாக மனிதர்கள்!” என்றல்லவா கேட்கச்சொன்னேன். “நீ நாங்கள் கடித்தவுடன் சாக வேண்டுமென” மொட்டையாக கேட்டு வரத்தையும் பெற்று வந்திருக்கிறாயே! பாவி! பாவி! என்று துரத்தி துரத்தி நண்பனை அடிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்றபடி கடவுள் எட்டி பார்க்க, “கடவுளே! என் நண்பனுக்கு மறதி அதிகம் அதனால் மாற்றிக் கேட்டு விட்டார். தயவு செய்து மன்னித்து வரத்தை நான் கேட்பது போல் தாருங்கள்!” என்று வரம் பெற வந்தவர்  பல முறை வேண்டியும் அதை ஏற்காத கடவுள், “அவ்வளவுதான்! கொடுத்த வரத்தை மாற்ற முடியாது! இனி உங்கள் விதிப்படிதான் நடக்கும் அந்த மனித இனத்துடன்தான் நீங்கள் காலங்காலமாய் வாழ்ந்து, சாவையும்,சந்திப்பீர்கள்!” என்று கடுமையாக ௯றி விட்டு மறைந்து விட்டார்.

வரம் கேட்டு வந்த தன் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதே,!!! என்று நொந்தபடி நண்பனுடன் வந்த அந்த தைரியவான் தலைவரின் காலில் விழுந்து கதறியபடி “நாம் இப்போதாவது சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்தோம், சாகா வரம் கேட்கப்போய் அதிலும் மனிதர்களை கடித்து சாகடிக்கும் வரத்தை கேட்கப்போய் அவர்களை கடித்தவுடன் நாம் இறக்கும் வரத்தை பெற்று வந்திருக்கிறோம்! அது மட்டுமின்றி அவர்களுடனே காலங்காலமாய் வாழ்ந்து இறக்கும் வரமும் கிடைத்துள்ளது, நம்மினத்திற்கு நல்லது செய்கிறோம் என செருக்குடன் சென்ற நான் என் நிலை உணராமல், பேராசையுடன் செயலாற்றியதில் , நம்மினமே சாபம் அடையும்படி ஆகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். ” என்றபடி அரற்றி அழுத அந்த எறும்பினம் துக்கம் தாங்காமல் உயிரை விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.




நன்றி கூகிள்.

Friday, July 4, 2014

புதியது கேட்கின்….


கந்தன் கருணை படத்தில் ஔவையிடம் கேள்விகள் கேட்டு பாட்டாலேயே பதிலளிக்க ௬றும் முருகப்பெருமான் என்னிடமும் வந்து (அவரும், நானும் சத்தியமாக ஒன்றாகி விட முடியாது.) புதியது கேட்கின், (தலைப்புகேற்றவாறு ஏதோ சுற்றுகிறேன்.)

          புதியது கேட்கின்! பன்னிரு விழியழகா!
          என் பயணமும் புதிது! உந்தன்
      பார்வையின் விளைவால், எந்தன் பாதையும் புதிது!
          உன் புது அருளாலே! உனை
        புனைந்ததும் புதிது! இனி புனைவதும் புதிது!

என்று ராகம் போட்டு பாடுவதற்குள் விட்டால் போதுமென்று, மாயமாய் மறைந்திருப்பான். ஆனால் உங்களை தப்பிக்க விட மாட்டேன். “புதியது கேட்கின்” உரைநடையாய் வருகிறது. சற்று படித்துதான் பாருங்களேன்.

              சிறுவயதில் நிறைய பயணங்கள் எனக்கு அவ்வளவாக கிடைத்ததில்லை! நாங்கள் வசித்தவிடத்தில் அப்போது 1960,70, பதுகளில், ஆங்காங்கே, பேருந்துகளும், புகை வண்டிகளுமாக நிறைய ஆக்கிரமிக்கவில்லை! அரைமணி நேரத்திற்கு, சற்று ௬டுதலாக நடைபயணம் சென்றால்தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். இல்லையென்றால், மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ, அமர்த்திக்கொண்டு செல்ல வேண்டும். நான்கு பேர்கள் சிரமத்துடன்தான் அதில் அமர்ந்து பயணிக்க முடியும். வண்டி சாயும் போதும், அல்லது, வண்டிக்காரரின் மிரட்டலுக்கு பயந்து மாடு வேகமாக ஓடும் போதும் வண்டியில் தலை இடித்துக்கொள்ளும் அடிகள் இன்னமும் பசுமையாக மனதில் இருக்கிறது. (ஆனால், அந்த வண்டியை பிடித்துக்கொண்டே, வண்டியின் பின்னாலேயே, ஓடி குறிப்பிட்ட இடம் வரைச்செல்ல எங்களுக்கெல்லாம் (எனக்கும், என் அண்ணாவுக்கும்.) அப்போது ஆசையாக இருக்கும். ஆனால், அம்மாவின் பாசமான கண்டிப்பு அந்த ஆசையை தடை செய்து விடும். ஏனைய உறவின் சிறுவர் சிறுமியர் “இந்த செயலைக்௬ட உங்களால் செய்ய முடியவில்லையே!!” என்ற பாவனையில் மட்டம் தட்டி கேலி செய்யும் போது சுருக்கென்ற கோபம் தீயாய் தகிக்கும். அம்மாவிடம் ௬ட சற்று கோபம் வரும். ஆனால், அம்மாவின் பாசம் மிகுந்த சமாதானத்தில் மனம் கரைய, “எங்கள் அம்மாவை போல் உங்கள் அம்மா உங்களிடத்தில் உயிராக இல்லை! அதனால்தான் நீங்கள் கால் வலிக்க ஓடி வர சம்மதித்திருக்கிறார்கள்!” எனறு பதிலடி கொடுத்து சமாளித்திருக்கிறேன். சிறு பிராயம் மாறி, வந்த காலங்களில், “மொத்தத்தில் இந்த ஊரின் சிறந்த ஓட்ட பந்தய வீரர்கள் இவர்கள்! என்று சொல்லும் வாய்ப்பை பெற இந்த ஊர் கொடுத்து வைக்கவில்லை! என்று நம் மனதை தேற்றிக்கொள்ளலாம்”!!! என்று நான் என் அண்ணாவிடம் சொல்லுவேன்.) பயணங்கள் சுலபமாக இல்லாவிடினும், அந்த சந்தோசமான காலங்கள் இனி வராது. காலங்கள் ஓடி ஓடி நிறையவே முன்னேறி விட்டது. (இப்போதெல்லாம் பிறந்த குழந்தைகள் ௬ட, பெற்றோருடன் இரண்டு சக்கர, மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர்.)

                    இப்படியான நாட்கள் முன்னேறி (சென்னையில் வாழ்க்கைப்பட்ட பின்,) இன்று வரை என் வாழ்க்கையில் பேருந்துகளிலும், புகைவண்டிகளிலுமாக, நிறைய தடவைகள் பயணத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டன. ஆனாலும், விமானத்தில் எங்கும் ஒரு தடவை ௬ட செல்லவில்லையை!! என்ற என் சிறு குறையையும், சென்ற வாரம் என் மூத்த மகன் அகற்றி விட்டான். “ஏர் ஏசியா” வின் புதிய வருகையை ஒட்டி பெங்களுரிலிருந்து  சென்னை, மீண்டும் சென்னையிலிருந்து, பெங்களுர். என இருதடவை அந்த பயணமும் அமைந்து விட்டது. இதுவரை செல்லாத புதிதான பயணமாகையால், சற்று பயமாகத்தான் இருந்தது. (மாட்டு வண்டியின் பின்னால் ஓடியே செல்ல வேண்டுமென ஆசைப்பட்ட அந்த வயதிற்கும், நிறைய வயதாகி விட்டதால், ஆசைக்கு ஒரு படி முன்னதாவே, பயம் காலூன்றி நிற்கிறது போலும்! என்று நினைத்துக் கொண்டேன்.)

              நீல வானத்தினிடையே, நீந்துவது போன்ற உணர்வுடன் பறந்ததும், தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்து ரசித்த கருமையும் வெண்மையுமான மேகங்கள், நம் காலுக்கடியில் விரைவாக ஓடி கண்களுக்கு விருந்தளித்த காட்சிகளும், மனதை விட்டு அகலாதிருந்தாலும், “இந்த இரு வாரங்கள் (போன வாரமும் ரயிலிலும், பேருந்திலுமாக தமிழ் நாட்டு பயணம்!) எதுவுமே எழுதவில்லேயே! அறிந்த, தெரிந்த, எழுத்துக்களையும், ரசித்து படிக்க முடியவில்லையே!” என்ற எண்ணங்கள் வேறு மிகப் பெரிய குறையாக மனதில் வந்து பயணத்தின் ரசிப்பை குறைத்துச் சென்றன. பேருந்திலோ, ரயிலிலோ பெங்களுரிலிருந்து சென்னை செல்ல குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகும் பயணம், விமானத்தில் அரை மணி நேரம் ௬ட ஆகாதது ஆச்சரிய அனுபவத்தை ஏற்படுத்தியது. எப்படியோ! புதிதாய் (எனக்கு) ஒரு வாகனத்தில், முதல் முறையாக (கடைசி??) பயணப்பட்டு வந்தாகி விட்டது. மனிதர்களையும், (மிதி வண்டி) விலங்குகளையும் நீண்ட பயணத்திற்கு நம்பியிருந்த காலங்கள் மாறி, நிமிடங்களின் இடைவெளியில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வரும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திய, இக்கால அறிவியல் மாற்றங்கள் பெருமைபடக்௬டிய வியக்கத்தகு அருமையான மாற்றங்கள்தாம்.

       இது முக்கால்வாசி அனைவருக்குமே பழகி போன விஷயமாக இருக்கலாம். இப்போது அனைவருமே கடல் கடந்து சென்று வேலை பார்த்து வருவதால், இது மிகவும் சாதரணமாக தோன்றலாம். (என் மகனும் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின், வேலை நிமித்தம் சில மாதங்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவன்தான்.) ஆனால் என்னை போலவும் சிலர் இருப்பார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இந்த பயணம் குறித்த எண்ணங்களை பகிர்ந்து விட்டேன். (ஆனாலும் இன்னமும் என் மாதிரி சிறுவயதில் மாட்டு வண்டிக்கு பின்னாலேயே ஓடி வர வேண்டுமென்ற ஆசை கொண்ட சிறுவர், சிறுமியர் எங்காவது ஒரு மூலையில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது அப்போது இருக்கும் அறிவியல் மாற்றங்கள் அவர்களையும் வியக்க வைக்கலாம்.)

            பொறுமை(யின்றி)யுடன் படித்தமைக்கு நன்றி.

Thursday, May 1, 2014

நாம் வாங்கி வந்த வரம்...


உட்கதை

கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் நம்மினம் மட்டும் உருவத்தில் மாறுபட்டவையாக இருப்பதினால் எவ்வளவு திறமையுடன் ஓடி ஆடி திரிந்தாலும் மற்ற பிறவிகளின் காலுக்கடியில் மிதிபட்டும் அடிபட்டும் சீக்கரமாக முடிவை சந்தித்து கொண்டிருக்கின்றன..ஏன் இப்படி? என்ற அந்த கவலையில் உண்ண பிடிக்காமல், உறக்கம் வராமல் தவித்தார் அவ்வினத்தின் தலைவர்.

ஒரு நாள் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர உலகில் உள்ள தன் மொத்த இனத்தையும் கூட்டமாக கூட்டி வைத்துக்கொண்டு அந்த தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

நண்பர்களே! இன்று நம் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குக்கெல்லாம் புரியும் என நினைக்கிறன். நம்மையெல்லாம் படைத்தவர் நமக்கு வேண்டும் போது அவரிடம் நமக்கு வரம் வாங்கிக்கொள்ளலாமென கூறியிருந்தார். அதன்படி அரக்கர்களும், மிருகங்களும், தேவர்களும், மனிதர்களும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர். அதனால் நாமும் நமக்கு சாதகமாக சாகா வரத்தை பெற்று விட்டால் எக்காலத்திலும் நாம் சந்தோஷமாய் இருக்கலாம். உங்களுடைய கருத்து என்ன?

இவ்வாறு தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து துணிச்சலான குரல் வந்தது. “நீங்கள் சொல்வது உண்மைதான் தலைவரே! அந்த மாதிரி ஒரு வரத்தை பெற்று விட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற தைரியமான குரலை பார்த்த தலைவர், அப்படியானால், நம்மில் யார் சென்று வரம் பெற்று வருவது என்று தீர்மானியுங்கள்! என்றவுடன், அந்த துணிச்சல் குரல் தவிர்த்து மற்ற குரல்கள் தனக்கு தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாக பட்டியலிட்டு ௯றி விலக ஆரம்பித்தன,

தலைவர் யோசித்தார்! முதலில் வந்த குரலையே பக்குவமாக பேசி கடவுளிடம் வரம் கேட்க அனுப்பி வைத்தாலொழிய இந்த பிரச்சனை தீராது என்பதை புரிந்து கொண்டவராய்....

இதோ பார்! நீதான் மிகவும் தைரியமாயிருக்கிறாய்! இந்த வேலைக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரி வர மாட்டார்கள்! நீ இதை முடித்து வந்தால் நம் இனம் உன்னை என்றும் நன்றியுடன் போற்றிக் கொண்டிருக்கும்! என்றதும், வெறும் நன்றிதானா? என்று அந்தகுரல் எகத்தாளமாக கேட்க, சரி நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என்று பதிலுக்கு தலைவர் சொன்னதும், நான் திரும்பி வந்ததும் உங்கள் இடத்தை தருவீர்களா? என கேட்டதும் ஒருநிமிடம் மெளனமானார் தலைவர்.

தன் இனங்களின் நன்மைக்காக தன் பதவியை தியாகம் செய்வது ஒரு சாதாரணசெயல்! இதனால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது! தன் பேரும் புகழும் பன்மடங்கு பெருகும் என்பதை புரிந்து கொண்டவராய், “சரி! நீ போய் சாதித்து வா! வந்தவுடன் மேடையின்றி, ௯ட்டமின்றி, தேர்வின்றி நீதான் நம்மினத்திற்கு தலைவன்! போதுமா?” என்று உறுதியளித்தார் தலைவர்.

சரி! என்று சந்தோசமாக கடவுளின் இருப்பிடத்திற்கு கிளம்பிய அந்த குரலுடன் அதன் உற்ற நண்பனும் நானும் வருவேன் என ஒட்டிக் கொண்டு புறப்பட்டது. போனால் போகிறதென்று அதையும் அழைத்துச் சென்ற குரல் தன் முறை வந்ததும் கடவுளை சந்தித்தது.

என்ன வேண்டும்? என்ற கடவளிடம், தங்கள் குறைகளை தைரியமாக எடுத்துரைத்தப்பின் வேண்டிய வரத்தை கேட்கும் முன் குரலின் நண்பன் முந்தி கொண்டபடி, “அண்ணே! அண்ணே! இதை மட்டும் நான் கேட்கிறேன் அண்ணே! என்று கெஞ்சி ௯த்தாட, சரி! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அதே மாதிரி கேட்பாயா? என்று அகங்காரத்துடன் கேட்க, சரி! வரத்தை பெற்றுக்கொண்டு வா! நான் வெளியில் காத்திருக்கிறேன். என்றபடி வெளியில் வந்து அமர்ந்து கொண்டது.

சற்று நேரம் கழித்து வெளியில் வந்த நண்பனிடம் முடிந்ததா? வரம் தந்து விட்டாரா? நான் சொன்னபடி கேட்டாயா? எப்படிகேட்டாய்? ஒருமுறை சொல்! பார்க்கலாம்! என்ற குரலுக்கு அதன் நண்பன் சொன்னதை கேட்டதும் குரலே எழும்பவில்லை!

அடபாவி! “நாங்கள் கடித்து அனைவரும் சாக வேண்டும்! முக்கியமாக மனிதர்கள்!” என்றல்லவா கேட்கச்சொன்னேன். “நீ நாங்கள் கடித்தவுடன் சாக வேண்டுமென” மொட்டையாக கேட்டு வரத்தையும் பெற்று வந்திருக்கிறாயே! பாவி! பாவி! என்று துரத்தி துரத்தி நண்பனை அடிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்றபடி கடவுள் எட்டி பார்க்க, “கடவுளே! என் நண்பனுக்கு மறதி அதிகம் அதனால் மாற்றிக் கேட்டு விட்டது. தயவு செய்து மன்னித்து வரத்தை நான் கேட்பது போல் தாருங்கள்!” என்று குரல் பல முறை வேண்டியும் அதை ஏற்காத கடவுள், “அவ்வளவுதான்! கொடுத்த வரத்தை மாற்ற முடியாது! இனி உங்கள் விதிப்படிதான் நடக்கும் அந்த மனித இனத்துடன்தான் நீங்கள் காலங்காலமாய் வாழ்ந்து, சாவையும்,சந்திப்பீர்கள்!” என்று கடுமையாக ௯றி விட்டு மறைந்து விட்டார்.

வரம் கேட்டு வந்த தன் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதே,!!! என்று நொந்தபடி நண்பனுடன் வந்த அந்த குரல் தலைவரின் காலில் விழுந்து கதறியபடி “நாம் இப்போதாவது சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்தோம், சாகா வரம் கேட்கப்போய் அதிலும் மனிதர்களை கடித்து சாகடிக்கும் வரத்தை கேட்கப்போய் அவர்களை கடித்தவுடன் நாம் இறக்கும் வரத்தை பெற்று வந்திருக்கிறோம்! அது மட்டுமின்றி அவர்களுடனே காலங்காலமாய் வாழ்ந்து இறக்கும் வரமும் கிடைத்துள்ளது, என் நிலை உணராமல் பேராசையுடன் செயலாற்றிய என்னால் நம்மினமே சாபம் அடையும்படி ஆகி விட்டது, என்னை மன்னித்து விடுங்கள்” என்றபடி துக்கம் தாங்காமல் உயிரை விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.

நன்றி கூகிள்.