நான் சின்ன வயதில் அம்மா வீட்டில் இருக்கும் போது நாங்கள்..(நாங்கள் என்றால், வீட்டிலுள்ள அங்கத்தினர்) திரைப்படங்களை அடிக்கடி திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பது கொஞ்சம் அரிதானதுதான். ஆனாலும், நல்ல குடும்ப படங்கள், பக்தி படங்கள், என்றால், வீட்டில், அதுவும் பள்ளி பரீட்சை முடிந்த விடுமுறை தினங்களில், அழைத்துச் செல்வார்கள். வேறு எவர்களோடும், (உறவு முறை, நட்பு) எங்களை அனுப்பியதில்லை. என் அண்ணாவுக்கு மட்டும் கல்லூரி காலங்களில் தன் நண்பர்களோடு செல்ல அனுமதி கிடைத்து விடும். அம்மா, பாட்டி இவர்களோடு நல்ல படமாக இருந்தால் நாங்கள் சேர்ந்து போவோம். ஆனால் எல்லாமே வந்து ஒரிரு ஆண்டுகள் ஆன பழைய படங்கள்தாம். அவர்களோடு சென்று அவர்கள் காலத்திலும் வந்த ஒரிரு படங்களையும் பார்த்துள்ளேன்.
அப்போதுள்ள நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வேறு பொழுது போக்குகள் என்றில்லை. அருகில் இருக்கும் கோவில்களில் ஏதேனும் விஷேடங்கள், என வந்தாலொழிய கோவில்களுக்கு தினமும் செல்லும் பழக்கமும் இல்லை. இப்போது போல் மூலைக்கு மூலை பார்க்,தெருவுக்கு தெரு விதவிதமான பேன்சி கடைகள் என எதுவும் உற்பத்தியாகவில்லை. வாகனப் பெருக்கங்ககளும் அவ்வளவாக இல்லை. க. கெ. கு. சு என்ற பழமொழிக்கேற்ப அங்கே உள்ள திரையரங்கம் ஒன்றுதான் வழி.
அப்போது தி. லி யில் சென்ட்ரல், பார்வதி,ரத்னா, பாப்புலர், , ராயல் தியேட்டர் என அனேக திரையரங்குகள். இருந்தன. அப்புறம் பூரணகலா, இன்னும் பல திரையரங்குகள் புதிதாக வேறு முளைத்து வந்தன. அங்கெல்லாம் சென்று கூட ஓரிரு படங்கள் பார்த்துள்ளோம். (இப்போது அந்த திரையரங்குகள் இருக்கிறதாவென தெரியவில்லை) பொதுவாக பெரிய நகரங்களில் தீபாவளிக்கு, பொங்கலுக்கென வெளியிடும் புதுப் படங்கள் இங்கு வருவதற்கே தாமதமாகி விடும். ஆனால், அப்போது வரும் அந்த படங்களை பார்க்க வேண்டுமென இருந்த ஆர்வங்கள் இப்போது என்னவோ சுத்தமாக இல்லை. அது வேறு விஷயம்.
ஒரு தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் படங்களை அடுத்த தீபாவளிக்குள்...!! , இல்லை, அடுத்த தீபாவளியன்று வேறு ஏதாவது திரையரங்கில் அதே படங்களை போட்டால், செல்வோம். அதற்கு கூட அந்த தீபாவளி, பொங்கல் நாளன்று செல்ல மாட்டோம். ஒரு வாரத்திற்கு மேலாகவே, திரை அரங்குகளில் ஒரே கூட்டமாக இருக்கும் என வீட்டில் பல அபிப்பிராயங்கள் சொல்வார்கள்.
தீபாவளி முடிந்து ஒரு மாதங்களுக்கு மேலாகவே தினசரி ஒவ்வொரு காட்சிகளுக்கும் வரும் கூட்டங்கள் ஆடி அடங்கிய மறுநாளோ, இல்லை, அதற்கடுத்த நாளோ,"இப்படம் இன்றே கடைசி" என்று திரையரங்கிலிருந்து அந்த படத்தை எடுத்து விடுவார்கள் என்ற ஒரு நிர்பந்த காலகட்டத்தில் அந்த படத்தை ஏற்கனவே ஒரு /பல முறை பார்த்தவர்கள் (வேறு யார்..? வீட்டின் அருகில் இருக்கும் சுற்றங்கள், நட்புகள்தான் ) "ஐயோ..! இன்னுமா நீங்கள் அந்த படத்தை பார்க்கவில்லை..? அதில் அந்த கதாநாயகன், கதாநாயகி நடிப்பும் அந்த கதையும், முடிவும், பாடல்களும் அவ்வளவு நன்றாக இருக்கிறது. இப்படி இதுநாள் வரை எப்படி பார்க்காமல் இருக்கிறீர்களே?" என வீட்டில் அம்மா, பாட்டியிடம் மதிய வேளைகளில் அங்கலாய்த்த பின், "ஒரு வேளை அதை பார்க்கா விட்டால் ஏதேனும், உலகமகா குற்றமாகி விடுமோ" என்ற அவர்களின், (சமயங்களில் நானும் அவர்களுடன் இணைந்து ஏற்படுத்தும்) நினைப்பின் அலசலில், " இன்று போகலாமா.?" என ஒரு மட்டும் முடிவு செய்து புறப்படுவோம்.
அந்த அளவுக்கு திரைப்படங்கள் பார்க்க தயக்கங்கள், கட்டுப்பாடுகள். இத்தனைக்கும் தரை டிக்கெட் விலை நாலணாதான். பெஞ்ச் டிக்கெட் எட்டணா. அந்த பெஞ்சில் பின்னாடி சாய்ந்து கொள்ள இரண்டு கட்டைகள் வைத்த பெஞ்ச் கட்டணம் முக்கால் ரூபாய், தனித்தனியாக உட்கார வசதியாக இருக்கும் சேர் ஒரு ரூபாய் என படிப்படியான வசதிகளுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் வேறு. அதில் அந்த முதலில் சொன்ன ஒருவருக்கு நாலணா என்றால், மூவர் சென்றால் கூட, முக்கால் ரூபாயாகி விடும். அது வீட்டின் அன்றாட இதர செலவுகளுக்கு பயன்படுமே என்ற நினைவுகள் வேறு வந்து படங்கள் பார்ப்பதை சில சமயம் தடை செய்யும். அப்போது வீட்டின் பணத்தட்டுப்பாடுகள் சினிமா பார்க்கும் ஆசைகளுக்கு பெரும்பாலும் தடை போடும்.
நாட்கள் செல்லச் செல்ல திரைப்படம் பார்ப்பதற்கான கட்டணங்கள், அணாவிலிருந்து ஒன்று, இரண்டென்ற ரூபாய்க்கு வந்து, ஐம்பது நூறாக மாறி, இன்று ஐநூறு, ஆயிரம் எனவும் வந்து விட்டது. அதுவும் முதல் நாளாகிய இன்றே பார்த்து விட வேண்டுமென்பவர்களுக்கு ஆயிரத்திலிருந்து மேலும் பல ஆயிரங்களை சேர்த்து தரும்படியாக (பிளாக் விற்பனையில்) சூழலைக் கூட தந்து விடும்.
எங்கள் திருமணத்திற்குப் பின் நான் சென்ற படங்களையும் எண்ணி கணக்கில் சொல்லி விடலாம். கூட்டு குடும்பம், குடும்பத்தில் பெரியவர்கள் என்ற மரியாதைகள், அவர்கள் விருப்பமின்றி வெளியில் செல்ல முடியாத சூழ்நிலைகள், என வாழ்ந்த போது சினிமாக்கள் எல்லாம் ஒரு கனவுதான்.(ஆமாம்.. இதில் இரவு நேர கனவு பலிக்குமா? பகல் நேர கனவு பலிக்குமா? "பகல் கனவு பலிக்காது" என்பார்கள்.ஏன் அப்படி? பகலில் அவ்வளவாக ஆழ்ந்த உறக்கம் வராது எனபதினாலா ? பகலில் சட்டென முழிப்பு வந்து விடும் போது கண்ட கனவுகள் சட்டென அது போலவே கரைந்து விட வாய்ப்புள்ளது என்பதாலா..? அதைப்பற்றி பிறகு ஒரு முறை விவாதிப்போம். :))) ) பிறகு வந்த காலங்களில், சிறு குழந்தைகளை அழைத்து செல்வதென்பதும், இயலாத காரியங்களாக போய் விட்டது.
முதன் முதலில் மக்களுக்காக தோன்றிய பொதிகை/ தூர்தர்ஷன் தொலைக்காட்சிகள்தான் ஏதோ ஒரு தமிழ் படத்தை ஞாயிறன்று மாலை இடையிடையே ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு இடையே ஒளிபரப்பி, என்னைப் போல் திரையரங்கம் சென்று திரைப்படம் பார்க்காதவர்களுக்காக புண்ணியம் தேடிக் கொண்டது. அப்போது எங்கள் புகுந்த வீட்டிலும் டி. வி கிடையாது. எதற்கு இடத்தை அடைத்துக் கொண்டு என வாங்கவில்லை. தெரிந்தவர் வீட்டிற்கு (ஒரளவுக்கு எங்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படியோ உறவு முறை என்ற சொந்தமும் கூட..!) சென்று, நான், எங்கள் நாத்தனார், அவரின் மகள், மகன் சமயத்தில் என் மாமியார் என அனைவரும் சேர்ந்து சென்று சில படங்கள் பார்த்திருக்கிறோம. அவர்கள் வீட்டில் அப்போதுதான் டி. வி. வாங்கியிருப்பார்கள் போலும். முகம் சுளிக்காமல் வரவேற்று உபசரிப்பார்கள்.
பின்னர் நாளடைவில் நாங்கள் சென்று வந்த அவர்கள் வீட்டிலும் இந்த மாதிரி நிறைய பேர் பார்க்க வரவே படம் பார்க்க தலைக்கு ஒரு ரூபாய், எட்டணா என வசூல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நல்லதொரு வரும்படிக்கான வழி.:)) (எங்களிடம் அவர்கள் கேட்கவில்லை. ஆனாலும் எங்கள் மனசாட்சி உறுத்தவே அதன் பின் அங்கு போவதற்கும் எங்கள் புகுந்த வீட்டில் தடையாகி விட்டது.)
அன்று மாலை படம் ஆரம்பித்து விடும் நேரம் நாங்கள் இருந்த சித்ர குளம் தெருவெல்லாம் மக்கள் கூட்டத்தையே காண முடியாது மயிலை கபாலீஸ்வரர் கோவில், மாட வீதிகள் எங்குமே காற்றாட கால் வீசி கூட்டங்களின் இடர்கள் இன்றி அன்று நடக்கலாம். மெரீனா, சாந்தோம் கடற்கரையில் கூட்டங்களின் இரைச்சகள் இல்லாத அலைகளின் ஓசையை மட்டும் ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். அப்படியும் ரசித்திருக்கிறோம். அது ஒரு காலம்.
அதன் பின் சில வருடங்களில் எங்கள் வீட்டில் எப்படியோ டி. வி (இத்தனைக்கும் அது சின்னதான பிளாக் அண்ட் ஒயிட் டி. வி தான்.) வாங்கியவுடன் அடுத்த ஞாயறு மாலையை ஞாயறு முடிந்த மறுநாளாகிய திங்களிலிருந்தே எண்ண ஆரம்பித்தோம். வரும் ஞாயறு நல்ல படமாக, இதுவரை பார்க்காத படமாக இருக்க வேண்டுமே என அனைவரின் எதிர்பார்ப்புகளும் இருக்கும். (ஆனால், பழைய படங்களின் அணிவகுப்பே தொடர்ந்து வரும்.)
அதன் பின் அனேக சேனல்களின் உதயங்கள் வந்து தொலை காட்சி பெட்டியை கலகலக்க வைத்தன. வாரம் ஒரு முறை ஒவ்வொன்றிலும் மாறுப்பட்ட படங்கள். அதன் பின் கேபிள் கனெக்ஷன்களின் உலா வரும் ஒளிக்கதிர்கள். தினமும் ஒரு படம்.... ! (ஆனால் பார்க்கத்தான் நேரம் இருக்காது.குழந்தைகள் அவர்களின் பள்ளி, படிப்பு, வேலைகள், கடமைகள் என அப்போது கீழே அமர கூட தயங்கும் கால்கள். ) வார விடுமுறைகளில் என்றாவது குடும்பத்துடன் அமர்ந்து நமக்கு பிடித்தமான படங்களை வாடகைக்கு எடுத்து டி. வியுடன் இணைத்துப் பார்க்கும் வசதிகள் என (அப்போதுதான் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான டிபன்கள், விதவிதமான சாப்பாடுக்கள், அதை எடுத்து பரிமாறும் வேலைகள் என எனக்கு அதே கடமைகள் காலோடு கையையும், கண்களையும் கட்டிப் போடும்.) காலம் தன் கால்களை வீசி முன்னேற ஆரம்பித்தது. ஆனால், எனக்கு திரைப்படங்களை பார்க்க மனதில் விருப்பங்கள் இல்லாமலும் போனது. ( அது இப்படி படங்களை பார்க்கும் நேரத்தில் நம்மால் பார்க்க கூட இயலாமல் போகிறதே என்ற விரக்தி தந்த வெறுப்பாக கூட இருக்கலாம்:)) இது அந்த வயதின் தாக்கம். )
இப்போது தொலைக்காட்சி பெட்டிகளே( டி. வி) விதவிதமான முன்னேற்றங்களை சந்தித்து வந்தும் கூட, அதில் இலவசமாக புது படங்களையே நம் சௌகரியபடி எப்போதுமே பார்க்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்தும் கூட, படங்கள் பார்க்கும் ஆர்வம் எனக்கு போயே போச்சு...!
இத்தனை பீடிகை இப்போதெற்கு என்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். நீங்களும் என்னுடைய அந்த கால பழைய பல்லவிகளை கேட்டு, அதை நினைத்து சற்றே சலிப்பாவதற்குள் இந்த தீபாவளிக்கு நான் சற்றும் எதிர்பாராது மகன்கள் அன்று வெளி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படமான "அமரனை" பார்க்க ஆன்லைனில் டிக்கெட் எடுத்து விட்டதால், குடும்பத்துடன் சென்று வந்தோம் என்பதை சொல்லி விடுகிறேன்.
"படம் நன்றாக உள்ளது நீங்களும் கண்டிப்பாக வாருங்கள்" என சொன்னதில் அனைவரும் தீபாவளியன்றே மதியம் இரண்டாவது காட்சிக்கு சென்று வந்தோம்.
அன்று காலை அந்த படம் இங்கு ரீலீஸ் ஆகி, முதல் காட்சி வந்து பின் இரண்டாவது காட்சிக்கு நான் கடந்து வந்த என் இத்தனை வருட வாழ்நாளில், முதன்முறையாக சென்ற முதல் புது திரைப்படம்... ,! அதுவும் தீபாவளியன்றே சென்று வந்த திரைப்படம்..! என்றொரு பெருமையை அமரன் பிடித்தது. (பெருமை எனக்கா, இல்லை, அந்த படத்திற்கா, என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை உங்கள் கருத்தில் அவசியம் சொல்லுங்கள்.அன்புடன் எதிர்பார்க்கிறேன். ஹா ஹா)
இரண்டு நாள் கழித்து வந்த சென்ற ஞாயிறன்று மீண்டும் ஒரு திரைப்படம். நடிகர் மம்முட்டியின் மகன் நடித்த "லக்கி பாஸ்கர்" என்ற திரைப்படம். இது காலை 9 மணிக்கே ஆரம்பம் .! இதுவும் தீடிர் என்றுதான் நான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்தது.
முதலாவது படம் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் உண்மை கதையை மையமாக கொண்டு எடுத்தது. இரண்டாவது படம் வீட்டுக்காக எதையும் செய்ய துணிச்சலுடன் செயல்படும் வகையை சார்ந்த படம். இரண்டுமே வெவ்வேறான இரு கோணங்கள். அதில் நடித்தவர்களின் உழைப்பையும், திரைப்படத்தின் மற்ற துறைகளில் சிறந்த அக்கறையுடன் செயல்பட்டவர்களையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
எனக்குத்தான் இரு நாட்களும், வீட்டின் வேலைகளோடு வெளியிலும் அலைந்து திரிந்ததில் மிக அசதியாக இருந்தது. அதனால் ஒரு வாரமாக காலையிலேயே பதிவுகளுக்கு வர இயலவில்லை.
இதனால், இத்தனை நாட்கள் எந்த படங்களையும் பார்க்க அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தது போய், இந்த இரு புது படங்களை அடுத்தடுத்து பார்த்த நிலையில், இப்போது படங்களை பார்க்கும் பழைய ஆசைகளும் மீண்டும் மனதில் தலை தூக்கி ஏற்படாமல் இருக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், ஆசைகள்தான் நம் அழிவுக்கும் ஒரு மூல காரணமல்லவா.. ?