Wednesday, May 27, 2020

சாதிப்பதும் ஒரு சந்தோஷமே..

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்..! ஆமாம்..! இதிலென்ன அதிசயம்? என நீங்களும் நினைக்கலாம்.  ஆனால்" அந்த கோஸ் என்னை எத்தனை விதமாக  அந்த கால முனிவர்கள் மாதிரி, என் சம்மதம் எதுவுமின்றி உன் சாபங்களினால் உருமாற்றி, உனக்கு சாதகமாக பயன்படுத்தி மகிழ்ந்திருக்கிறாய்.... உன்னை வேறு விதமாக  உனக்கு முக்கியத்துவம் தந்து டிபன் மாதிரி செய்யட்டுமா? என இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் கேட்டது நினைவில் இருக்கிறது.. ஆனால், எப்போதும் மதிய சாதத்தின் துணைக்கு மட்டுமே என்னை தூதாக  அனுப்புகிறாய்..!" என்று  அதன் முறை வரும் போது முணுமுணுத்து முகம் சுளித்தது..

சரி..  அது ஏதாவது கோபத்தின் மிகுதியில் சாபங்களை பதிலுக்கு மாறி தந்து விட்டால், சிரமமாகி விடுமேயென அன்றைய தினம் அதன் ஆசையை நிறைவேற்றினேன்.

இட்லி அரிசியை ஒரு டம்ளர் களைந்து ஊறவைத்து, பின் தனியாக து. பருப்பு  க. பருப்பு உ. பருப்பு மூன்றையும் அரைடம்ளர் வீதம்  ஒன்றாக களைந்து ஊற வைத்தேன். நான்கு மணிநேரம் ஊறிய அரிசியுடன்  உப்பு, மி. வத்தல், பெருங்காயம் சேர்த்து அடைக்கு அரைக்கிற மாதிரி  கெட்டியாக அரைத்துக் கொண்டேன்.பருப்பு கவலையையும் கெட்டியாக மிக நைசாக அரைக்காமல், அரைத்து அத்துடன் கலந்து வைத்துக் கொண்டேன்.



கோஸிடம் நெருங்கி (கோஸை சமாதானபடுத்தி "இன்று நீதான் மெயின் ரோல், கவலைப்படாதே. உன் விருப்பப்படி இன்று நீ காலை டிபனுக்கு தயாராக்க படுவாய்.. உனக்கு மகிழ்ச்சிதானே ..!! இன்றிலிருந்து  உன் புகழ் ஓங்கிச் செழிக்கட்டும்." .  என்ற வீர வசனம் பேசி வாளை, இல்லையில்லை கத்தியை கையில் எடுத்தேன்.) அதன் வீர பிரதாபங்களை மேலும் சொல்லவும், அதுவும் மகிழ்ச்சியாக சம்மதித்தது.



அப்புறமென்ன.. பொடிதாக நறுக்கிய கோஸை நன்கு கழுவி வடிகட்டியில் ஒரு நிமிடம் இரு..! என சொல்லி விட்டு, ஒரு கடாயில், கடுகு உ. ப தாளித்து விட்டு அதனுடன் கோஸுடன் நறுக்கி வைத்த இரண்டு பெ.ரிய வெங்காயத்தை வதக்கிக் கொண்டு, அதை தனியாக  எடுத்து வைத்தப்பின் கோஸை போட்டு உப்ப், மஞ்சள் தூளும் சேர்த்துப் போட்டு, அது  நன்றாக வேகும் தருவாயில், வதக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்துப் போட்டு இரண்டையும் "ஊர் வம்பு பேசி சற்று நேரம் மகிழ்ந்திருக்கிறீர்களா?" என கேட்டதும், அவைகளும் மகிழ்வுடன் சம்மதித்தன.




அதன் பின் அரைத்து வைத்திருக்கும் மாவில் கொஞசம் எடுத்து, நன்கு ஆய்ந்து அலம்பி போட்ட கொத்தமல்லி தழைகளையும் போட்டு ஒரு திருப்பு திருப்பி  அரைத்தமாவுடன் கலக்கிய பின் மாவை  இட்லி தட்டுக்களில் பரப்பி குக்கரில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். கொத்தமல்லி தழைகளை பொடிதாக நறுக்கியும் மாவில் கலக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் சாப்பிடும் போது அதையெல்லாம்  அகற்றிய ஆக வேண்டுமென அடம் செய்வதால்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை. முக்கால்வாசி அனைத்திலும் அரைத்தே கலக்கி விடுகிறேன்.எங்கள் வீட்டின்  பெரிய குழந்தைகளுக்கும் இதுதான் மிகவும் பிடித்துள்ளது.




ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், வேக வைத்த இட்லிகளை உதிர்த்து விட்டு, மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்றாக உதிர்ந்து உப்புமா மாதிரி வந்ததும். ஏற்கனவே வம்பு பேசிஅரட்டை அடித்துக் கொண்டிருக்கும் கோஸ், வெங்காய ஜோடிகளை "உப்புமா கலவையில் சேர்ந்து  கோஸ் உப்புமா என்ற தனிப்பெயருடன் மிளிர வருகிறீர்களா"? எனக் கேட்டதும் அவைகள் சம்மதிக்கவே அதையும் அந்த அரிசி பருப்பு உப்புமாவுடன் , கலந்து விட கோஸின் முகத்தில் தனி பெருமிதம் ஒன்று தெரிந்து என்னை கவர்ந்தது.


இது நம்மை கவரும், என்னுடன் பேசி ஜெயித்த கோஸின் முகப்பெருமிதத்தை நன்கு கவனிப்பதற்காக...!


நிச்சயமாக இது உங்களையும் கவரத்தான் போகிறது என்பது தெரிந்த உண்மை..

உண்மை என்றதும், அந்த   உண்மை  "கோஸ் டிபனான உண்மை கதையை சொல்லாமல், சாட்சிக்கு மட்டும் என்னை அழைக்கிறாயா" என கேட்டு முறைத்தது. 

சரி.. சரி.. முறைக்காதே..! 
" சொல்லத்தான் போகிறேன்.  சொல்லத்தான் எழுதினேன். 
வாயிருந்தும்  உண்மைதனை
சொல்லாமல் இருப்பேனா..! ஆகா.. 
சொல்லத்தான் போகிறேன்.. 
என நான் ராகம் போட்டு இழுக்கவும்,

போதும்.. நிறுத்து..! இன்று வெள்ளி யில்லை...நாளை வெள்ளி முளைக்கும் முன், கோஸின் பெருமையையும் கூடவே உன் பிரதாபத்தையும்  பிரகடனபடுத்தும் வழியைப்பார்..! என்றபடி முறைத்துக் கொண்டிருந்த உண்மை சற்று கோபம் தணிந்து நான் உண்மையை கூறப்போகும் மகிழ்வில் விடைப் பெற்று அகன்றது.

அது வேறொன்றுமில்லை..! இது எ.பியில் (இரண்டு வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்.)" திங்க"ப் பதிவில் அதன் ஆசிரியர் சகோதரர் கெளதமன் அவர்களின் மருமகள் செய்து பதிவிட்ட பதிவு இந்த கோஸ் உப்புமா. 

இதைப் பார்த்துதான் நான் அடிக்கடி கோஸிடம் சொன்னதை அது  நினைவில் வைத்துக் கொண்டு இந்த தடவை என்னை வறுப்புறுத்தி தான் "டிபனான பெருமையை" அடைந்தது.

கோஸின் பெரும் ஆவலை தணித்து வைக்க உதவிய எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள் அனைவருக்கும், கெளதமன் சகோதரர் அவர்களின் மருமகளுக்கும் எனது, மற்றும் கோஸின் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏.

கோஸை அதன் விருப்பபடி இன்று இப்படி வடிவமைத்து காட்டியமைக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அத்துடன் சேர்த்து  என் சுய பிரதாபத்தையும், இங்கு கொஞ்சம் அளக்கலாமென நான் நினைத்ததை உண்மை எப்படியோ கண்டுபிடித்து சொல்லி விட்டது.

இது என்னுடைய இரண்டாவது சதம்.. முதல் சதத்தை சுலபமாக அடித்து விட நிறைய சந்தர்ப்பத்தை தந்த இறைவன் நான் இரண்டாவதை அடித்து முடிக்க அவ்வளவாக தக்கத் தருணங்களை தராது இத்தனை நாளை நிதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். போகட்டும்..!

இது குறித்து எனக்கு எந்த வருத்தமோ, மகிழ்வோ இல்லை. இருப்பினும் ஆட்டத்தில்  தொடர்ந்து நின்று ஆடவைத்து சாதிக்க வைத்தமைக்கு அந்த ஆண்டவனுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
ஆனாலும், இரண்டு வருடங்களாக கணினி வசதி இல்லாமல், கைப்பேசி மூலமாக, பதிவுலகில் நவரச சுவைகளையும் அழகாய் பகிர்ந்து வரும் அனைவருக்கிடையில், எந்தவொரு சுவையும் இல்லாது ஏதோ எனக்குள் தோன்றியதை எழுதி வரும் எனக்கு நிறைய நட்புறவுகளை "அவன்" பரிசாக தந்தமைக்கு முன், என் இரண்டாவது சதத்தின் காலதாமதம் எனக்கொரு பொருட்டாகவே தோன்றவில்லை. எனினும் இந்தப் பதிவின் மூலம் அதை வெளிப்படுத்தும் போதில்,  அந்த இறைவனுக்கும், அவன் தந்த பரிசான நட்புறவுகளுக்கும் என் பணிவான நன்றியையும், அன்பையும் அந்த கோஸின் பெருமித மனப்பான்மையுடனும், கூடவே மனமார்ந்த மகிழ்வுடனும் சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி அன்பான சகோதர சகோதரிகளே....! நன்றி. 🙏. 

Tuesday, May 19, 2020

ஒரு கதை பிறந்த கதை.


சில கதைகள் எப்போதோ படித்தாலும் மனதை விட்டு அகலாமல் இருக்கும். ஆனால் யார் எழுதியது, எப்போது, எங்கே என்பது கூட சுத்தமாக மறந்து விடும்.

இந்த தோசை இருக்கிறதே. அதற்கு யார் ஆசையுடன் அந்த ஆசையையும் சேர்த்து பெயராக வைத்தார்களோ  தெரியவில்லை..?  "ஆசை வெட்கமறியாது" என்பது போல், "தோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட  வயிறு." என்றொரு பழமொழி உண்டு. எவ்வளவு ருசித்து தின்றாலும்  "இன்னும் ஒன்னே ஒன்னு சூடாக போட்டுக்கோ..."என்ற குரலுக்கு மறுபேச்சின்றி இணங்கி விடும். அதுதான் ஆசையின் பெயருடன் சற்று இணைந்தே இருக்கும் இந்த" தோசை" யின் சிறப்பு...

தோசைகள்  அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைய வகைகளில் உருப்பெறும்.  ஆனால்  வார்க்கும் வகைகளில் ஒருவரையொருவர் குற்றம் சொல்வது மட்டும் தவறாது இடம்பெறும்.

சிலருக்கு குண்டாக  தோசை வார்த்தால் பிடிக்காது. சிலருக்கு ஒல்லியாக இருந்தால், என்ன இப்படி காற்றில் பறக்கிற மாதிரி தோசை வார்த்திருக்கிறாய்.. எத்தனை தின்றாலும், வயிறே நிறைய மாட்டேன் என்கிறதே...! என்பார்கள்.

சிலருக்கு பட்சணங்கள் மாதிரி மொறு, மொறு என பல்லில் கடித்து சாப்பிடுகிற மாதிரி இருக்கனும். சிலருக்கு பஞ்சு மாதிரி மிருதுவாய், அதே சமயம் மிழுங்கும் போது தொண்டையை அடைக்காத மாதிரி வேண்டும்.

தோசைக்கே இப்படியென்றால், அதனுடன் கலந்து கூடும் துணைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவர் விதவிதமாக சட்னிகள்தான் அதற்கு பொருத்தமெனவும், மற்றொருவர், இட்லி மிளகாய்ப்பொடிதான் தோசைகளுக்கும் சாலச்சிறந்தது எனவும், இன்னுமொருவர் நல்ல சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் இல்லாத தோசை ஒரு தோசையா? எனவும், பிறிதொருவர்  காய்கறி, மசாலா கலந்து செய்யும் குருமாதான் இதற்கு உடன்பாடு எனவும், மீதமிருப்பவர் அதென்ன.. ஒன்றை விட்டு ஒன்றைச்சொல்வது? இவை எல்லாம் இருந்தால்தான் தோசைக்கே ஒரு அழகு. இல்லையெனில், எவ்வளவுதான் ருசியான தோசையாக அமைந்தாலும், அது வெறும் "சை"(த்) தான் எனவும் அவரவர்கள் வாதிட்டு அவர்களே வெல்வார்கள். இது அவரவர் தோ (தே) சா சுதந்திரம். ஹா.ஹா.

ஏதோ மனதில் அகலாத கதை என்று சொல்லிவிட்டு இவள் தன் இஷ்டத்திற்கு காது குத்தி கொண்(ன்று)டு இருக்கிறாளே என நீங்கள் நினைக்கும் முன் அகலாமல் அமர்ந்திருக்கும் கதைக்கு வருகிறேன்.

கதை..

ஒருவர் தன் சொந்த வேலை விஷயமாக ஒரு ஊருக்கு தன் நண்பரோடு பயணிக்கிறார். அந்த நண்பருக்கும் அவருடன் சென்று வந்தால் அவரின் வேலைக்கும்  சில ஆதாயம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. . அந்த ஊரில் அவர் சந்திக்க  நினைக்கும் வீட்டை அடைந்ததும் அவருக்கும். நண்பருக்கும் ஏகப்பட்ட மரியாதை. அந்த வீட்டிலிருப்பவர்கள் ஒரளவு வயதான கணவனும், மனைவியும் மட்டுந்தான்..!

 வேலைக்காக சென்றவரும், அவ்வீட்டிலிருக்கும் பெரியவரும் ஏதோ ஒரு வகையில் உறவுதான். எனவே குசலபரிபாலனம் முடிந்த பின் இருவருக்கும் சாப்பாடு தயார் செய்ய தன் மனைவியிடம் சொல்லவும்,  அந்த மனைவி நல்ல முறையில் உணவு தயாரித்து இருவருக்கும் அன்போடு பரிமாறி அவர்கள் இருவரின் நன்றியையும் பெறுகிறார்.

இரவு வீட்டின் கூடத்தில் பிராயாணித்து  வந்த  அலுப்பு நீங்க  ஆனந்தமாக படுத்து உறங்கி காலை எழுந்தவுடன் அருமையான காஃபியை குடித்த பின் அவர்கள் இருவரும் அவர்கள் வந்த வேலையை சுமூகமாக அந்த வீட்டு  பெரியவர்  முடித்து தருவதாக சொன்ன செய்திக்கு மகிழ்வுடன் நன்றி தெரிவித்த பின் தங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும், "இருங்கள்.. என்ன அவசரம்? காலை டிபனை முடித்து விட்டு கிளம்பலாம்..! "என அந்த அன்பான கணவருடன் சேர்ந்து அவர் மனைவியும் மிகவும் வறுப்புறுத்தியதில் அவர்களும்  மனம் மாறி சம்மதித்து விடவே, இவர்களுக்கு குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து கொடுத்தார் அந்த வீட்டுப் பெரியவர். 

இவர்கள் குளித்து வந்தவுடன் தோசையின் மணம் நாசிக்குள் சென்று  வயிற்றில் பசியை உண்டாக்கியதையும் வாழை இலையில்.  தோசைகளுடன் தேங்காய் சட்னி பரிமாறி, வாசனையான எண்ணெயுடன் குழைத்த மிளகாய் பொடியை இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என அந்த பெரியவரின் மனைவி, ஒரு தாயின் பரிவுடன் கேட்டு, கேட்டு உபசரித்ததையும், அவர் வார்த்தெடுத்த தோசைகளின் அழகை இருவரும் ரசித்ததையும் இருவரும் அந்த கதையில் மனதுக்குள் விவரிக்கும் அழகே தனி... அதைப் படிக்கும் அந்த நேரத்தில் நமக்கே ஆழ்ந்த பசி வந்து கண்களை கட்டும். அதுவும் தோசைகளை அடுக்கி வைத்து பரிமாறிய அந்தம்மா மாதிரி நமக்கும் யாராவது சுவை மிகுந்த தோசைகளை தட்டில் போட்டு தர மாட்டார்களா என மனம் ஏங்கும். 

இருவரும் முந்தைய நாளின் கூச்சமின்றி வேண்டிய அளவு தோசைகளை சாப்பிட்ட பின் மீண்டும் ஆவி பறக்கும் காஃபி குடித்து.ஆசுவாச படுத்திக் கொண்டு  இருவருக்கும் நன்றி சொல்லி கிளம்பும் போது, "மதியம் இவர்கள் ஊர் சென்று சேர நாழியாகி விடும். தோசைகள் நிறைய வார்த்திருந்தால் ஆளுக்கு நாலு தோசை இலையில் கட்டி பார்சல் செய்து கொடேன். வழியில்  சாப்பிட்டு பசியாறட்டும்.." ! என்ற கணவரின் பேச்சுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த அந்த மனைவி சமையலறை உள்ளே சென்று வாழையிலையில், தோசைகளை  வைத்து கட்டித் தந்த அந்த பார்சலை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... 

அவர்களே " இந்த மாதிரி ருசியான தோசைகளை இனி வாழ்நாளில் எப்போது சாப்பிட போகிறோம்..? பேசாமல் ஊருக்கு கிளம்பும் போதும் நாலு தோசைகளை கேட்டு வாங்கியே செல்லலாமா? "என்ற மனரீதியில் யோசித்ததையும், ஊருக்கு திரும்பும் போது பிரயாணத்தில் இருவரின் மனநிலையும், யோசனையும் ஒன்றாக இருந்ததையும் அவர்கள் பேசிக் கொள்வதை கதாசிரியர் அவ்வளவு அழகாக விமர்சரித்திருப்பார். 

இந்தக் கதையில் நான்  சம்பவங்களை கோர்வையாக தந்துள்ளேனா இல்லை சற்று என் கற்பனைகளையும் கலந்து விட்டேனா என தெரியவில்லை. கதையில் கதை எழுதியவர்,  "பெரியவர் இவர்கள் வருகையை அவ்வளவாக விரும்பாத மாதிரியும், அவர் மனைவியை நல்ல மனதுடையவராகவும்  காட்டியிருப்பாரா" என்பது இப்போது விமர்சித்த பின்  குழப்பமாக உள்ளது. எப்படியிருந்தாலும்  படிக்கும் போது அதுவும் ஒரு வகையான சுவாரஷயமே ..!

(என்னடா இது..! மனதில் அகலாத என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாது இவ்வளவு குழப்பங்களா? என நீங்கள் குழம்பலாம். எப்போதுமே ஒரு விஷயம் மனதை விட்டு அகலாமல் இருப்பதால்தான் ஒரு குழப்பமே உருவாகிறது.  ஹா. ஹா. ஹா.)

கதை எழுதியவர் வந்து படித்து அவர் எழுதிய  கதையைக் கூறி, இதில் சிலது மாறியுள்ளது.. நான் எழுதியதில் இப்படி இருக்கும்... என்று சொன்னால்தான் உண்டு. ஆனால் அதுவும் நடக்க வாய்ப்பில்லையோ எனவும் மனம் நினைக்கிறது.

நன்றாக நினைவில் நிற்கும் கதையிது என சொல்லி விட்டு மாற்றி விட்டேனோ என ஏன் பேதலிக்கிறார் என நீங்கள் எண்ணலாம். "கரு தோசையின் சிறப்பை வர்ணிப்பதும், அதை ஊருக்கு கிளம்பும் கடைசிவரை நின்று வாங்கிச் செல்லும் நிகழ்வுகள்தான்." இடையில் சில மாறுதல்களை நான் விமர்சித்தது கொண்டு வந்திருக்குமோ எனத் தெரியவில்லை. இந்த கதை என்றோ படித்தது. இதை வேறு யாரேனும் படித்து ரசித்திருக்கலாம். ரசித்தவர்கள் இந்தக் கதையின் தலைப்பையும், எழுதியவர் யாரென்ற பெயரையும் தெரிவித்தால் நன்றியுடையவளாக இருப்பேன்.

இன்று என் பதிவுக்கு உபகாரமாக அன்று  இந்தக் கதையை அருமையாக எழுதியவருக்கும், நான் என் பதிவில் எழுதியதை சலிப்பின்றி படித்த  என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏. 🙏.

பி. கு. இன்னமும் ஒரு கதை அகலாமல் மனதில் உள்ளது. வேறு வழியில்லை. பதிவுலக சட்டப்படி நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும். ஹா. ஹா. ஹா.  நன்றி.. 🙏. 😀😀