Showing posts with label கதைகள்.. Show all posts
Showing posts with label கதைகள்.. Show all posts

Saturday, October 26, 2024

காரண காரியங்கள்

இந்தப்பதிவுச்செடி இங்குமுளைத்தற்கு உதவியாக இருந்தது சென்ற சனியன்று எ. பியில் வெளிவந்த "சாப விமோசனம்" என்ற கதை. அதைப் படித்த பின் நான் அதற்கு சொன்ன கருத்துக்கு பதிலாக வந்த இந்த பதில் கருத்துக்கள்தான் இதன் காரண விதைகள்.

நானும் இன்று காலையிலேயே நல்ல புகழ் பெற்ற இந்த  எழுத்தாளரின் கதைகளை படித்து விட்டேன். ஆனால், கருத்து சொல்ல யோசனையாக உள்ளது. (மாறுபட்டு விட்டால் என்ன செய்வதென்ற மனக்குழப்பங்கள்.) இது நான். 

கவலையே படாதீர்கள்... தயங்காதீர்கள்.. அதுதான் வேண்டும். மாறுபட்ட கருத்துக்கள்தான் வேண்டும்...இது சகோதரர் ஸ்ரீராம். 

கமலாக்கா தயங்கவே வேண்டாம். மாறுபட்ட கருத்துகள் வேண்டும். அப்போதுதான் சிந்தனைகள் பிறக்கும் யோசிக்கும் திறன் வலுவடையும்.

சும்மா ஒரே குட்டைல இருந்தால் மனமும் மூளையும் நாறிப் போகும்!! கமான் கமலாக்கா உங்கள் கற்பனை, எண்ணங்கள் கருத்துகள் சிறகடிக்கட்டும். இது சகோதரி கீதாரெங்கன். 

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே & சகோதரி. உங்களிருவரின் ஊக்குவிப்புக்கு என் மனதில் பட்டதை எ. பியில் கருத்து சொல்ல ஆரம்பித்தேன். அது பதிவாக நீண்டு விட அதை இங்கேயே கொண்டு வந்து சிறைப் பிடித்து தங்க வைத்து விட்டேன். வந்து படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

இவ்வகையான புராண கதைகள் பல விதங்களில் பலரால் அலசப்படுவது இந்த கதைகளின் சுவாரஸ்யந்தான் காரணமா? இல்லை. மனிதர்களாகிய நம் மன விகாரங்களின் வேறுபாடுகளா?

அகல்யை ஒரு கற்புக்கரசி. சிறந்த அழகி. அவள் பெயர் காரணமே அதைதான் குறிக்கிறது தர்மம் வழுவாத ரிஷி பத்தினி. தேவலோக தலைவனான இந்திரனின் மனதில் ஏற்பட்ட காமம் அவள் தலையெழுத்தை மாற்றி, தன் கணவரின் வாயாலேயே கடுமையான சாபம் பெற்று கல்லாக (ஆனால், அவள் பெயரிலேயே கல் உள்ளதே.! அதுவே அவளுக்கு ஒரு பிறவி சாபந்தான் போலும்..!) போகச் செய்தது. 

பின்னர் இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரின் கால் (பாத துளிகள்.) அவள் மேல் பட்ட விநாடி அவள் மீண்டு சாபவிமோசனம் பெற்று, பழைய நிலைக்கு உருப்பெற்றாள். (இது இறைவனின் அவதாரமாக அவதரித்த ஸ்ரீ ராமரின் மகத்துவத்தை காட்டக் கூடியது.) அதன் பின் கௌதம மகரிஷி அவளை ஏற்றுக் கொண்டார் என்பது வரைதான் புராண காலத்து இப்பத்தினி பெண்மணியின் சிறப்பாக நாம் நம் வீட்டு பெரியவர்களின் கதை சொல்லி வளர்க்கும் திறனோடு பால காண்டமாக சொல்லி நாம் அறிந்தது.

அதன் பின் அகல்யை கல்லாக மாறவில்லை. தன் சாப விமோசனத்திற்காக மனம் கல்லாக இறுகி ஸ்ரீ ராமனின் வரவுக்காக காத்திருந்தாள். தவிரவும், அவளும், தன் பால்ய வயதில் மனதில் பல ஆசைகளை வளர்த்துக் கொண்டிருந்தாள்..! என்கிற மாதியான கதைகளை கேட்(படிக்)கும் போதெல்லாம், புராணங்களில் வரும் கதை மாந்தர்களை நாம் (மனிதர்கள்) எப்படியெல்லாம் மாற்றியமைத்து கதைகளை கயிறாக...! ஒரு நூலாக....! (அப்படி திரிக்கும் நூல் என்ற பெயரைத்தான் நாம் தயாரிக்கும் புத்தக வடிவிற்கும் "நூல்கள்" என வைக்கிறோமோ..?:)) ) திரிக்கிறோமோ என எண்ணும் போது, புராணங்களில் மேல் நமக்கிருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வங்கள் ( நமக்கு மட்டுமென்ன.. எதையும் முழுதாக நம்பும் ஆர்வங்களா? ஆயிரம்  சந்தேகங்களுடன் கூடிய ஆர்வ கோளாறுகள்தான். :)) ) இனி நம் சந்ததிகளுக்கு சுத்தமாக வராதோ என்ற நினைப்பும் எழுகிறது.

இளவயதில் தான் பழகி, தனக்கு பிடித்த இந்திரனையே தன் திருமண பிராயத்தில் "தன் விருப்பம் இவர்தான்.." என சொல்ல முடியாத மனநிலையில் இருந்திருக்கிறாள் அகல்யை. ஆனால், தன்னைப் படைத்த தந்தையான பிரம்மதேவர் கௌதமரை அவளுக்கென வரித்த போதும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. மாறாக அன்றே அவள் மனது கல்லாகி போனது. (மானசீக காதல்கள் அப்போதே அந்த புராண காலத்திலேயே தோற்றுப் போய்யுள்ளது.)

பிரம்மதேவர்  தான் படைத்த பெண் ஒரு சிறந்த தவமுனிவருக்கு பயனுள்ளவளாக இருக்க வேண்டுமென நினைத்தாரே ஒழிய அப்பெண்ணின் உள்ளத்து மனநிலையை கேட்டறியவில்லை. (அவரின் "தான் சொல்வதை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற குருட்டு நியதிகள் இன்று வரை நம்மையும் (அவர் படைத்த மனிதர்களாகிய நம்மையும். ) விடாது துரத்துகின்றன.:)) 

இந்திரன், கௌதமர் இருவருமே அகல்யையை மணமுடிக்க ஆசைப்பட்டால்,  பிரம்மன் இந்திரனுக்கும், கௌதமருக்கும் இடையே வைத்த ஒரு சுயவரப் போட்டியின்படி, முன்னும் பின்னும் ஒரே முகம் கொண்ட ஒரு பசுவை வலம் வந்த பின் சாட்சியுடன் முதலில் வருபவருக்கு அகல்யை பரிசாக கிடைப்பாள் என்ற முடிவு. கௌதமரும் முன்னும், பின்னும் ஒரே முகமுடைய ( அந்த பசு தன் வயிற்று சிசுவை அந்நாள் வரை சுமந்து பின் அதை ஈன்று பெறும் தருணம். ) ஒரு பசுவை நாதரின் யோசனையின் பேரில் கண்டு அதை  மூன்று முறை சுற்றி வந்து நாதரின் சாட்சியோடு  போட்டியில் வென்று அகல்யையை கைப்பிடித்தார். 

இந்திரன் தன்  ஐராவதி வாகனத்தில் மூவுலகும் சுற்றி அப்படிபட்ட பசுவைத் தேடி அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய போது கௌதமருக்கு, அகல்யை உரிமையாகி இருந்தாள்.  (பல பல யாகங்கள் செய்து இந்திர பதவியை தன் வசம் பெற்றிருந்த இந்திரனுக்கு அவ்விதமான பசுவைப் பற்றிய சூட்சுமம் தெரியாதா? இல்லை நாரதர்தான் இந்திரனுக்கு எதிரியா?) எல்லாம் பிரம்மன் போட்ட முடிச்சு. அவர் கணக்கு என்றும் தப்பாது. அந்த மாயைதான் இன்று வரை உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மாறு(வேறு)பாடில்லாமல், நடமாடி கொண்டுள்ளது. 

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கின்படி அகல்யை கௌதமருக்கு மனைவியாகி ஒரு நல்ல சதி தர்மத்துடன் நடந்து வந்தாலும், அவள் மனதில் இந்திரனின் மேல் தான்  ஆசைப்பட்டதையும், தன் பிதாவாகிய பிரம்மன் அது தெரிந்திருந்தும், தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காது கௌதமருக்கு பாணிக்கிரணம் செய்து தந்தது முதல் அவள் மனது கல்லாகி போனதென இப்போது ஒரு கதையில் படித்தேன்.

பெண்ணின் மனது எத்தனை முறைதான் கல்லாகும்படி அக்கால சூழ்நிலைகள் அவளை பாடாக படுத்திருக்கின்றன. அதன்பின் இந்திரனின் செய்கையால், அதைக்கண்டு கணவர்  சபித்ததினால் அவள் உயிருள்ள கல்லாகி போனது வேறு. அதுதான், ( இப்படி கல்லாகி போவது) ஏற்கனவே அவளுக்கு பல முறை பழக்கமானது ஆயிற்றே..!  

இந்திரனும், தன்னை மணப்பதற்காக அகல்யை காந்தர்வ முறையைச் சொல்லி வறுப்புறுத்திய போது கூட "அவசரம் கூடாது. தர்ம நியதிப்படி பெரியவர்களின் ஆசிகளோடுதான் நாம் மணந்து கொள்ள வேண்டுமென" அறிவுரை கூறினாராம். இதுவும் அந்த கதையில் தான் படித்தேன். 

இப்போது எ. பியில் சனியன்று வெளிவந்த பிரபல  எழுத்தாளர் புதுமை பித்தன் அவர்கள் எழுதிய "சாப விமோசனம்"  என்ற கதையில் அகல்யை ஸ்ரீ ராமரின் மூலம் சாப விமோசனம் பெற்றபின், நிறைய இன்னல்களையும், தன்னோடொத்த பிற ரிஷி பெண்களின்  அவச்சொற்களையும் அவமானத்தோடு சந்தித்த பிறகு மனம் வெறுத்து துவண்டு போயிருக்கும் போது, அந்நிலையில் அவள் மிகவும் அல்லலுறுவதை கண்டு ஒரு நாள் அவளைத் தேற்ற வரும் கணவனின் அன்பையும், அருகாமையையும்  உணருங்கால்  அவள் மனது மீண்டும் கல்லாவது போல் கதை  வடித்து தந்துள்ளார். நல்ல எழுத்து. சிறந்த உவமானங்கள். 

இந்நிலையில் இடையே கௌதமர் அகல்யை இருவருக்கும் ஒரு மகன் பிறந்து சதானந்தர் என்ற பெயருடன் மிதிலையின் மன்னர் ஜனகருக்கு அரசசபையில் தத்துவ விசார ஆலோசகராக இருந்து வருவதோடு துறவு வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகிறார். அவரும் தந்தை தாய் படும் தீர்க்க இயலாத  மனதின் துக்கங்களை கண்டு தன் மனம் வாடுகிறார். 

இவர்களுக்கு ஒரு மகளும் இருப்பதாக மற்றோர் இடத்து கதையிலும் படித்தேன். அந்த மகளின் பெயர் அஞ்சனை. இவரது மைந்தர்தான் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆவார். 

கற்பில் சிறந்த பஞ்ச கன்னிகைகளில் முதலில் இடம் பெறுபவர் அகல்யைதான். அதன்பின் சீதை, திரௌபதி, தாரா, மண்டோதரி இவர்கள். இதில் தங்கள் கற்பின் திறனை வெளிப்படுத்த தன்னை தீயில் இட்டு அது பூக்களாக்கி குளிர்வித்து தர தங்கள் கற்புத்திறனை உலகிற்கு மெய்பித்தவர்கள் சீதை, திரௌபதி, தாரா ஆகியோர். அகல்யை தன்னை சுற்றியுள்ளவர்களால் தன் வாழ்நாள் முழுவதும், மனம் கல்லாகி இறுகி இருந்தாள் என்றால், மண்டோதரியும் தன் கணவனின் குறுகிய செயல்களில் மனம் குன்றி, அவர் மீது பாசம் மிகுந்த மரியாதையை தந்த போதும் தன் மனதை கல்லாக்கிக் கொண்டவள். 

ஆக பெண் எனப்பட்டவள் அந்த காலங்களில் தங்கள் சூழலின்படி பல விதமான சுக துக்கங்களை அனுபவித்தே வந்திருக்கின்றனர். அவர்களின் தொடர்ச்சியாக  பரசுராமரின் தாய் ரேணுகா தேவி, அனுசுயாதேவி, தமயந்தி, சந்திரமதி, பக்த மீரா, சக்குபாய் என ஆசிரமங்களின்  பெண்களும், ராஜவாழ்வில் பிறந்த பெண்களுமாக தொடர்ந்து அல்லல்களும், இன்னல்களும் பட்டுக் கொண்டேதான் இருந்தனர். 

இன்றைய காலத்திலும், இப்படி கஸ்டபடும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படி அல்லாமல், இந்தப் பிறவியில் நல்லவிதமாக வாழும் பெண்கள்.  தன் வாழும் வாழ்விற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

நான் மெத்த படித்தவளும் இல்லை. பல புராணங்களை ஆழ்ந்து படித்து விவாதித்து அலசியதுமில்லை. ஏதோ என் சிற்றறிவுக்கு புலப்பட்டதை இங்கு  எழுதியுள்ளேன். இதில் ஏதேனும் தவறிருந்தால், படிக்கும் அனைவரும் மன்னிக்கவும். 🙏.

படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Wednesday, May 3, 2023

சந்தேகம்+கோடு=சந்தோஷ கேடு

அந்த அடர்ந்த அமானுஷ்யம் மனதுக்குள் எப்போதாவது சற்று  லேசான திகிலை உண்டாக்கியது. ஆனால் அதை விட மனதின் வெறுமை திடமாக இருந்ததில், இவையெல்லாம் வெகு  சாதாரணம்.... இதையெல்லாம்  வென்று விடலாமெனவும் ஒரு பட்சி உள்ளுக்குள் கூவி விட்டு சென்றது.

"என்ன சொல்லி விட்டாள் இவள்....! என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க எப்படி இவளுக்கு மனது வந்தது.? புலம்பி புலம்பி அலுத்துப் போன வார்த்தைகள் மறுபடி மறுபடி ஒரு குழந்தை ஊஞ்சலில் ஏறுவது போல ஆடி விட்டு,ஆட்டி விட்டு சென்றது. 

வீட்டிற்கு திரும்பிச் செல்லவே பிடிக்கவில்லை. என்ன இருக்கிறது அந்த  வீட்டில்...? ஒவ்வொரு கல்லையும், மண்ணையும் பார்த்துப் பார்த்து கட்டும் போது இருந்த மகிழ்ச்சி கோட்டை ,.. தனக்காக ஒருத்தி வந்து அந்த வீட்டை தான் நேசித்தது போல் தன்னையும் நேசித்து, தன்னை கலகலப்பாக்குவாள் என்ற மனக்கோட்டை இடிந்து விழுந்து பல வருடங்களாகி விட்டது. 

நண்பனின் மனைவி என்ற அறிமுகத்தில் எப்போதோ திருமணத்திற்கு முன் மாலினியிடம்  ஒரு சொந்த சகோதரி போல் பேசி பழகி அவர்களுக்கு உதவிகள் செய்த  அந்த பழைய விஷயங்களை  இவளிடம் ஒளிவு மறைவில்லாமல், ஒரு குழந்தையின் மனத்தோடு சொன்னதிலிருந்து இவளிடந்தான் என்னவொரு மாற்றங்கள்....! 

முதலில் அதைப்பற்றி சகஜமாக வார்த்தைகளை துவக்கி கேலி செய்து பேசியவள்  நாளாவட்டத்தில், "அதுதான் உண்மை போலும்....! அதனால்தான் தன்னிடம் இவன் இன்னமும் நெருங்கி உரையாட கூட தவிர்ப்பதாகவும்," இன்னமும் என்னென்னவோ பேசக் கூடாத வார்த்தைகள் அவள் நாவிலிருந்து வந்து விழுந்ததும் இவன் தினமும் தவித்துப் போனான் என்பது உண்மை. 

தன்னை சந்தேகத்துடன் அவள் கூர்மையான கத்தி கொண்டு  கிளறுவது தினமும் ஒரு  வாடிக்கையானதில், அவளிடம் முன்பிருந்த நெருக்கத்தை இவனால் காட்ட இயலவில்லை என்பதை இவன் அவளுக்கு புரிய வைத்து விளக்கும் போதெல்லாம் சந்தேக கோடுகள் அவளிடமிருந்து குறுக்கும் நெடுக்குமாக இவனுக்கும், அவளுக்குமிடையே நிறைய விழுந்து அவளை  முகம் கூட பார்க்க முடியாமல், பிடிக்காமல் மறைக்கவே தொடங்கின.. 

அலுவலக விடுமுறை நாட்களில் மனம் அமைதியுற இந்த அமானுஷ்யம் இவனுக்கு தேவையாக இருக்கவே அடிக்கடி இங்கு வரலானான். இந்த மலைப்பாங்கான இடத்துக்கு வரும் போதெல்லாம் இவன் ஏதோ மனதுக்குப் பிடித்தமான இடத்திற்கு வந்ததைப் போன்று உணர்ந்தான். காரணங்களை கூறி மனம் விட்டு பேசவும் இவனுக்கு சுற்று வட்டாரத்தில் அதிக நட்புகளில்லை. அப்படியே பேசினாலும், இவனிடமிருக்கும் ஒரு சுணக்கத்தை காரணம் காட்டி இவனை தவிர்க்கும் ஆழமில்லாத, வேரில்லாத நட்புகள். 

பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்த நிலையில் நெருங்கிய  உறவுகளும் சத்தமின்றி  ஒதுங்கிப் போய் இருந்ததினால், மனைவியின் உறவை மட்டுமே பெரிதாக நினைத்து திருமணம் செய்த நாள் முதலாய் வாழ்ந்தும், மனதின் நிறைந்திருந்த உண்மை நிலையை அன்றொரு நாள் அவள் அழுத்தி கேட்ட விதத்தில் இவன் புலப்படுத்தியதில், வாழ்க்கை இப்படி  திசைமாறிப் போனது. 

நினைவலைகளுக்குள் இறுக்கமாக இருந்தவனை இளங்காற்று கொஞ்சம் சிலுசிலுப்பாக்கியது. தன்னிலை உணர்ந்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டான். யாருமில்லாத அந்த தனிமை, அந்த ஒரு அத்துவான இடம் எதுவும் மனதில் படியவில்லை. பொதுவாக அந்த இடம் எவருமே நீண்ட நேரம் வந்தமர்ந்து விட தயங்கும் மனப்பான்மையை தருவதுதான். சுற்றிலும் சறுக்கலான ஏற்றமுடனும் சில இடங்களில் இறங்கி பள்ளத்தாக்கை நோக்கி ஓடும் இந்த மலை பிரதேச முகடுகளில் லேசாக காற்று தழுவும் போது கூட ஒரு அதிர்வுடன் கூடிய சத்தத்தை உண்டாக்கியது. 

காற்றின் அலாதி தன்மையே அதுதான். இதமாக மென்மையாக பூக்களை மட்டுமில்லாது மனித மேனியையும் வருடுகிற மாதிரி தழுவும் காற்று  தீடிரென ஒரு உத்வேகம் பெறும் போது அதன் நிலை மறந்து ஆரவாரத்துடன் பல சத்தங்களை தர ஆரம்பித்து விடும். 

பல சமயங்களில் வரண்ட மண் துகள்கள், மரத்திலிருந்து வயதான காரணத்தால் உதிர்ந்து கீழே விழுந்த வருத்தத்தில் சருகான இலைகள் என எல்லாவற்றையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பும். அப்போது ஏற்படும் அதன் ஆனந்த சிரிப்பு சத்தம் ஒரு வகை. 

மின்னலும், மழையும் கூடவே உடன் வரும் நண்பர்களாக சேர்ந்து வரும் போது கைத்தட்டி ஆரவாரமாக அவைகளை வரவேற்கும் குதூகுல மனநிலையிலான ஒரு சத்தம். 

இதையெல்லாம்  பொதுவாக சிந்தித்து  ரசிக்கும் மனநிலை இவனுக்கு இப்போது குறைந்தே போய் விட்டது. 

இன்று அவன் இங்கு வந்து நிறைய நேரம் ஆகி விட்டதை லேசான இருட்டு, தன் வழக்கமான போர்வை போர்த்துக் கொண்டு வந்து கூறியது. சற்று தள்ளியிருந்த மரங்களின் கிளைகளில், பட்சிகள் தாங்கள் ஓய்வெடுக்க வந்து விட்டதை உணர்த்தும் சப்தங்களை அதே காற்றுடன் கரைய விட்டு மாறி மாறி தந்த களைப்பில் அடங்கிப்போக ஆரம்பித்து கொண்டிருந்தன. 

இவன் மெதுவாக எழுந்து காலணிகளை காலில் மாட்டிக் கொண்டு நடக்க முயற்சிக்கும் போது யாரோ கால்களை அழுந்த பற்றியிருப்பது போன்று தோன்றியது. இத்தனை நேரமாக முழங்கால்களை கட்டியபடியும், மடித்தும், தொங்க விட்டபடியும் சற்று உயர்ந்திருந்த அந்த பாறை போன்ற இடத்தில் அமர்ந்திருந்ததின் விளைவுதான்  என்ற எண்ணத்தில் கால்களை ஒரு முறை மடக்கி நீட்டிய பின் நடக்க ஆரம்பித்தான்

வேறுவழி.....! மனதிற்கு  பிடிக்கவில்லையென்றாலும், வீட்டை தோக்கித்தான் நடக்க வேண்டும். 

இன்னமும் தாமதமானால், ஊரைக்கூட்டி அதற்கு ஒரு காரணத்தையும் கூறி விடுவாள். பிறகு இன்றிரவும் தூக்கமில்லாமல்தான் அவமானத்துடன் கழிக்க வேண்டும். 

எத்தனை இரவுகள் இப்படித்தான் கழிகின்றன. என்றுதான் எந்த ஒரு இரவுதான், நிம்மதியான உறக்கம் வந்து வாழ்க்கையை சந்தோஷமடைய வைக்கப் போகிறதோ?.... மன வேதனையில் சரிவான அந்த இடத்தின் நடப்பதால் வரும் சிரமங்கள் அவன் மனதில் பதியவில்லை. 

நடக்க ஆரம்பித்த சில அடிகளுக்கு ஒருமுறை கால்களில் அந்த அதிர்வு வந்து வந்து மறைந்தது. கால்களை சற்று உலுக்கி அடியெடுத்து வைத்ததில் பெரிய கனமான கல் ஒன்று உருண்டு, பள்ளம் நோக்கி பாய்ந்து அந்த மலைபிரதேச இடுக்குகளில் நிம்மதியாக உறங்கப் போயிற்று. 

தன்னை யாரோ பின் தொடர்வது போன்ற இனம் புரியாத ஒரு பிரமை அடிக்கடி அவனை  பின்னால் திரும்பி பார்க்க வைத்தது. சுற்றி வர ஒருவருமில்லை. இந்தப்பகுதியில் அவ்வளவாக யார் வரப்போகிறார்கள். இன்னமும் சற்று சறுக்கல் பாதையில் காலை ஊன்றி கவனத்துடன் நடந்து, அந்த மலைப் பகுதியை கடந்து விட்டால், சாலை வந்து விடும். அதில் இறங்கி அரைமணி தூரம் நடந்தால் அவன் வீடுதான்.

 வீடா அது...!  அவனைப் பொறுத்த வரை அந்த வீடு ஒரு இடுகாடுதான்.. மனம் வீட்டிற்கு செல்ல வெறுப்பை காட்டியதில் ,  உடம்பு  நடக்கையில் சிறிது தள்ளாடியது. மீண்டும் பாதங்களின் அழுத்தலில் அவன் நின்றான். 

"அண்ணா....  யாரோ அழைக்கிறார்கள். இவன் மெள்ள திரும்பி பார்க்க எங்கும்  ஒருவருமில்லை.காற்று படபடவென வேகம் எடுத்த மகிழ்வில் தன் கடமையை செய்ய, அந்த காற்றில் கலந்து ஏதோ ஒரு வாசனை மூக்கை நெருடி விட்டு அகன்றது. இப்படிப்பட்ட தனிமையின் வீண் பயங்களை இவனின் வாழ்க்கையின் வெறுப்புக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதை இவன் உணர்ந்து ரொம்ப நாட்களாகி விட்டன. இல்லாவிட்டால் இந்த தனிமை அடிக்கடி அவனுக்கு உகந்ததாக அமையுமா....? 

அண்ணா... நான்தான்.. என்னை தெரியவில்லையா? மீண்டும் ஒரு குரல் அழுத்தமாக மென்மையாக பிடரியில் மோதுகிற மாதிரி ஒலிக்கும் போது இவன் சாலையை அடைந்து விட்டான். யாராவது ஆரம்ப  மலைச்சரிவின் அந்த பக்கம்  வேறு யாருடனாவது பேசுகிறார்கள் போலும்....!! அதை சுத்தமாக அறிந்து கொள்ளும் ஆவலிலும் அவன் மனம் ஈடுபடவில்லை. 

வீடு வந்து, மனைவியின் வழக்கமான உபசரிப்பில் குளிர்ந்த போது இரவு மணி பத்ததை தொட்டிருந்தது. களைப்பு கண்களை மூடச்சொல்லி தழுவினாலும், ஒரு சில மணி நேரத்திற்குத்தான் இந்த தழுவல் நீடிக்கும் என்பதை அவன் உணர்ந்ததிருந்தும் படுக்கையில் விழுந்தான்...

வந்த வாரம் வழக்கமான அலுவலக வேலைகளில் மனத்தை செலுத்த நகர்ந்து முடிந்தது. இப்படியேதான் பொழுதுகள் பறக்கின்றன. 

தினமும் வேலைக்கும், வேலை முடிந்து வீட்டிற்கும்  என்று செல்வதே ஒரு கடமையாகப் போய் விட்டது. மற்ற பொழுதுகள் மெளனமாக புத்தகங்களை படிப்பதில் கழித்தாலும் மனத்தை அதில் முழு ஈடுபாட்டுடன் செலுத்த முடியாதபடிக்கு அவளின் சந்தேக கணைகள் துளைக்க ஆரம்பித்து விடும். அதற்கு இப்படி கிளம்பி காலாற நடந்தவுடன் கால்கள் கொண்டு சேர்க்குமிடம் அந்த பெரிய மலைதான். அங்குதான் தனக்கு வேண்டிய  நிம்மதி உள்ளதாக அவன் மனம் சொல்லும். நிர்மலமான அந்த இடத்தில் மனதில் பாரங்கள் அப்போதைக்கு சற்று குறைவதாக அவன் உணர்ந்தான். 

"என்ன இன்னைக்கு பொழுதுக்கு எங்கே கிளம்பீட்டீங்க? வழக்கமான சுடுசொல் தகித்தது. 

" சுசி.. இன்றாவது வழக்கத்தை மாற்றி பேசு. இன்று நாம் எங்கேயாவது வெளியில் போகலாமா சொல்... உனக்கு பிடித்தமான இடத்திற்கு நான் உன்னுடன் வருகிறேன். நான் எங்கும் தனியாக போகவில்லை.. இன்று என்னுடன் வெளியில் வருகிறாயா?" தயங்கி தயங்கி கேட்டான் அவன். 

"நான் எதற்கு? அப்படியே நான் வந்தாலும், அவளுடன் சென்ற அந்த இன்பமான நாட்களைப் போல் வருமா உங்களுக்கு..!!!" 

" ஐயோ.. மறுபடி ஏன் இப்படி பேசி வதைக்கிறாய்..? அது பழைய கதை. அப்போதும் அவள் என்னுடன் மட்டும் எங்கும் தனியாக வந்ததில்லை. நண்பனுடன், அவனும் நானுமாக கடைகளுக்கு போகும் போதுதான் வருவாள். மேலும் அவளை நான் என் தங்கையாகவே நினைத்துப் பழகினேன். எத்தனை தடவை இதை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... " வறண்ட குரலில் லேசான அழுகையும் கலந்து வெளி வர பார்த்தது. 

" இதை நான் நம்ப வேண்டுமாக்கும்....!! அந்த கடிதமே ஒரு அத்தாட்சியாக உங்களை காட்டித் தருகிறதே ..! 

"அது எப்போதோ அவர்கள் இந்த ஊரை விட்டு சென்றவுடன் எழுதியது. அதை வைத்து நீ என்னென்னவோ மனம் போன போக்குபடி பேசுகிறாய்... " அவனை முடிக்க கூட விடாமல் அவள் சீறினாள்

" ஆமா.. அதனால்தான் அதை இத்தனை நாட்களாக  பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்களா ? அப்படி என்ன ஒரு கரிசனம் அவளுக்கு உங்கள் மேல்.. ". 

" நீ அத்தனையுமே தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாய்.. சுசி.!! அவள் ஏதோ தன் மனக்குறையை என்னை தன் அண்ணனாக நினைத்து கடிதத்தில்  கூறியிருக்கிறாள்.மேலும் நம் திருமணத்திற்கு முன்பு கூட அவர்களை சந்திக்க நான் போகவேயில்லை. நம் திருமணத்திற்கு கூட அவர்களின் மாற்றிப் போன முகவரி  தெரியாத காரணத்தால் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்கு உள்ளார்கள் என்று கூட இதுவரை எனக்குத் தெரியாது. அறிந்து கொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை. அப்போது என்றோ அவள் எழுதிய இந்த கடிதம் கூட இப்போது உன் கைகளில் என் துணிகளுடன் சேர்ந்துதான் உனக்கு கிடைத்திருக்கிறது. 

"அதுதான் பொக்கிஷமாக நினைச்சு துணிமணிக்குள் வைத்து காப்பாற்றி வருகிறீர்களோ..." நக்கலான  குரலில் கூறி அவள் விம்மினாள். 

"இல்லை.. சுசி. இது என் கையில் கிடைத்திருந்தால் நான் எப்போதோ கிழித்தெறிந்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். அதற்கு மாறாக...." அவனை முடிக்க விடாமல் அவள் அழுகையை நிறுத்தி விட்டு உறுமினாள். 

" அதான்...! என் கையில் கிடைச்சதாலே ஐயாவுக்கு தன் குட்டு அவ்வளவும் வெளிப்பட்டு இப்போ ரொம்ப திண்டாட்டமாக இருக்கா...? "" 

சே..! என்ன பெண் நீ..! இவ்வளவு சொல்லியும் நம்பாமல்... கோபமும் வருத்தமும் ஒரு சேர அவன் வீட்டை விட்டு  வெளியேறினான். . 

அந்த மலை ஏற்றம் இன்று மன வருத்தத்தினால் கொஞ்சும் கடினமாக தெரிந்தது. 

என்ன இவள்..? என்ன சொல்லியும் நம்பாமல் ஏதேதோ பேசி அவளையும் வருத்தத்துள்ளாக்கிக் கொண்டு நம்மையும் வருத்தப்பட வைக்கிறாள்.. அந்த கடிதம் அவள் கையில் ஏன்தான் சிக்கியதோ....? அதிலும் அந்தப்  பெண் மாலினி அப்படி என்னதான் எழுதி விட்டாள்.? வந்து சேர்ந்த விபரங்களை எழுதியவள். "இப்போதெல்லாம் தன் கணவன் அங்கிருந்த போது இருந்ததை போன்று அன்பாக இல்லையென்றும், அங்கு உங்களுடன் நட்பாக, பேசி பழகிய வாழ்வை போல இப்போது இல்லையென்றும் வருத்தப்பட்டு எழுதியிருந்தாள்..."

இவனும் "அது நண்பன் புதிதாக சேர்ந்த வேலை மும்மரத்தின் அலுப்பாக இருக்குமெனவும், சமயங்களில், ஏதோ விளையாட்டுக்காக அவன்  அப்படி செய்திருப்பான் கூடிய விரைவில் எல்லாம் சரியாகி விடுமெனவும் பதில் கடிதம் எழுதி போட்டானே..!!! இதையெல்லாம்  ஒரு பிரமாதமாக எடுத்துக் கொள்ள இவளால் எப்படி முடிகிறது... ? 

அதன் பின் நண்பனிடமிருந்தும், அவளிடமிருந்தும் எந்த ஒரு விசாரிப்புகளும் கடிதமும் வராத நிலையில், வாழ்க்கை ஓட, இடையில் ஒரு சில சுற்றங்கள் வலிய வந்து  இவன் திருமண ஆயுத்தங்களை ஆரம்பிக்கவும்  இவன் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்ததில் அவர்களை மறந்தே போனான் என்று கூட சொல்லலாம். 

திருமணத்திற்கு முன் அதிர்ஷ்டவசமாக வீடு அமையும் யோகமும் வரவே, அனைவரும் மனைவி வரும் வேளை நல்ல வேளை எனக்கூறி அவர்களை இவன் நினைவிலிருந்து அழித்தே விட்டனர். 

ஆரம்ப வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டிருந்த வேளையில், இவன் உண்மையை சொல்லி, இப்போது எங்கிருந்தோ இந்த கடிதமும் அவள் கையில் வந்து சேரவே இவனின் துரதிரஷ்டம் ஆரம்பமானது. 

மனதில் எழுந்த வெறுப்பு வானின் சூழலை கவனிக்க விடவில்லை. 

காற்று சற்று பலமாகி வானுடன் கலந்து கீழிறங்கும் மழை மேகங்களை சந்தோஷத்தோடு  வரவேற்கச் சென்றது. மழைத் தூறல்கள் ஒன்று, இரண்டு மூன்று என்ற எண்ணிக்கையை வரிசைப்படுத்தி, தான் கற்ற கணக்கை ஒப்புவிக்க தயாராயின. 

மழைத்துளிகள் விழுந்த வேகத்தில் இவன் லேசாக கவனம் கலைந்து இடத்தை விட்டு  எழுந்தான். 

மறுபடி வீடு செல்ல விருப்பமில்லை. எனினும் வேறு எங்குதான் செல்வது?  கால்கள் ஒரு சரிவில் சற்றே நிலை தடுமாறி சறுக்கின. 

"அண்ணா.... இவ்வளவு வேதனையை சுமந்து கொண்டு எப்படி வீட்டிற்கு  செல்லப்போகிறீர்கள்? என்னுடன் வந்து விடுங்கள். அடுத்தப் பிறவியில் நீங்களும், நானும் நிஜமாகவே ஒருதாய் வயிற்றில் பிறந்து நம் சகோதர பாசத்தை அனைவருக்கும் உணர்த்துவோம்.."!!!! 

சற்று அதிகரித்த காற்றுடன் மெல்லிய இதமான குரல் தனக்கு ஆறுதலாக  காதருகே வந்து உரசியது. 

 "யார்? யார்... பேசுவது?  இவன் சற்று பதட்டத்துடன் சுற்று முற்றும் பார்த்தான். சுறறி வர யாருமேயில்லை. 

மழையினால் சீக்கிரமாகவே இருட்டு போர்வையை போர்த்திக் கொண்ட வானம் "இன்றாவது நிம்மதியாக சீக்கிரமே உறங்கப்போகிறேன்.. இல்லையென்றால் இந்த நட்சத்திரங்கள் உரிமையுடன் கதவை தட்டிக் கொண்டு வந்து இரவெல்லாம் கதைப் பேச துவங்கி விடும். "  என்றபடி வேறு எதிர்பார்ப்பில்லாமல் படுத்துறங்கப் போய் விட்டது. 

யாருமில்லாத அந்த அத்வானத்தில், கீழ் குரலில் அந்தப் பேச்சும் தன் பிரமையாகத்தான் இருக்குமென நினைத்தபடி ஒரு வேகம் கொண்டு  அவன் அவசரமாக முன்னேறினான்

" மழை சுதந்திரமாக தன் ராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்ட எக்களிப்புடன்  காற்றுடன் சேர்ந்து கொண்டாடலாமா என கைதட்டி ஆரவரித்தது." 

"அண்ணா.. வேற்றூருக்கு சென்ற பின உங்கள் நண்பரும் இதே சந்தேகத்தோடு என்னை தினமும் வாட்டி எடுத்ததில் உங்களிடம் சொல்லி, ஆறுதல் பெற நான் இங்கு வந்த வேளையில் உங்கள் திருமணம். அவரிடம் எதையும் சொல்லிக் கொள்ளாமல் வந்த நான் உங்களிடம் அதுவும் புது மனைவியுடன் இருக்கும் உங்களிடம் எப்படி சொல்வதென்ற சலனத்தில் இருந்த போது, எனக்கு இந்த மலையில்தான் விடுதலை கிடைத்தது. அன்று உங்களிடம் சொல்லும் நேரத்திற்காக காத்திருக்க எண்ணி பொழுதை கழிக்க இதில் ஏறியதில் என் வாழ்வையே இந்த மலை விழுங்கி கொண்டது. ஒரு விதத்தில் எனக்கு அது நல்லதுதான் என எண்ணினேன். இப்போது நீங்களும் என் இடத்தில்..!!!  தினமும் நீங்கள் படும் வேதனையை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. என்னால்தான் உங்களுக்கும் இப்படி ஒரு கஸ்டமான வாழ்வு. என்னுடனேயே வந்து விடுங்கள் அண்ணா..!! இப்போது நானிருக்கும் இடந்தான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. அடுத்தப் பிறவியில் நாம்  ஒன்றாக பிறப்போம் . அப்போது எப்படி இவர்கள்  நம்மை சந்தேகப்படுவார்கள்...!! பார்க்கலாம்..? 

தன் மனதுதான் கற்பனையாக ஏதேதோ நினைத்துப் பேசுகிறது என இவனுக்குத் அசட்டுத்தனமாக தோன்றினாலும், இல்லையில்லை...... தன்னைச்சுற்றி, தன்னருகேயே வந்து  நிஜமாகவே யாரோ பேசுவது போல தோன்றியதாலும் இவன் நடந்த வேகம் சற்று தடைப்பட்டது. கால்களை மேலும் ஒரு அடி எடுத்து வைக்க முடியாதபடிக்கு மீண்டும் கால்களில் ஒரு அழுத்தம். 

மழை பெரிதாக வலுப்பதற்குள் மெள்ள இறங்கி அந்த சாலையை அடைந்து விடலாம் என்ற  ஒரு இனம் புரியாத படப்படப்பில் அடுத்த அடிக்காக வேகமாக கால் வைத்தவன் அடுத்த அடி வைக்க முடியாதபடிக்கு சறுக்கி உயரமான அந்த இடத்திலிருந்து பாறைகளின்  இடைவெளிகளில வழியே தீடிரென எதிர்பாராத வண்ணம் குடுகுடுவென உருண்டு ஒரு அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான். 

நிம்மதியில்லா மனதுடன் இத்தனை நாள் நரகத்தில் இருப்பதைப் போல உயிர் வாழ்ந்த இவனை சந்திக்க வேண்டி அங்கே காத்திருந்த ஓர்  உயிர் இவனை அன்பாக சகோதர பாசத்தோடு வரவேற்றது. 

கதை நிறைவுற்றது... 

இன்றைய பதிவாக ஒரு கதை.இதை ஒரே நேரத்தில் தந்து விட்டால்,படிக்கும் போது  சுவாரஸ்யத்திற்கு பங்கம் வராமல், நன்றாக இருக்குமென மொத்தமாக பகிர்ந்து விட்டேன். பிரித்து தந்தால் இரு பாகமாக தந்திருக்கலாம். நீளமாக உள்ளதென கதையை முழுதுமாக படிக்காமல் இருந்து விடாதீர்கள். உங்கள் அனைவரது ஊக்கமே எனது ஆக்கம். 

எனக்கு அவ்வளவாக கதைகளை, அதுவும் சுவாரஸ்யமாக எழுத வராது. ஆனால், ஆரம்பம் முதல்  (பதினேழு வயது முதல்) எழுதும் ஆர்வம் காரணமாக  கதைகளை இப்படி எழுதி பிதற்றுவது பிடித்தமாகிப் போனது. நடுவில் திருமண வாழ்க்கை, குடும்ப சூழ்நிலைகள் எழுதுவதை ஒத்தி வைத்தது. புதிதாக வலைத்தளம் ஆரம்பித்திலிருந்து இப்படி என்னுள் கருவாக உதிக்கும் கதைகளை அசட்டுத்தனமான என்  எழுத்துக்களால்  வடிக்கிறேன். அதுவும் இப்போது இருக்கும் நேரத்தில் கைப்பேசியிலேயே கொஞ்ச கொஞ்சமாக எழுதி வருகிறேன். என் கதைகள் அச்சு எழுத்துக்களில் வர வேண்டுமென்பதும் என் நீண்ட நாளைய  விருப்பம். அது எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை. பார்க்கலாம்..! 

வலைத்தள உறவுகள் நான் எழுதும் கதைகளை படித்துப் பார்த்து அவர்களின் கருத்துக்களை சொல்வதே இப்போதைய மனமகிழ்வாக உள்ளது. என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் என் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எப்போதும் என் அன்பான நன்றிகள். 🙏

Sunday, January 23, 2022

முரண்பாடுகள் .

எப்போதும் இந்த சண்டைதானா ....? வர வர இதற்கு ஒரு முடிவு காணவே இயலவில்லையே.. ?" காலையில் எழுந்ததுமே மனம் புழுங்கியபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் தேன்மொழி.

கண்ணாடியில் தன் முகம்  பார்த்துக் கொண்டிருந்த முத்தரசனின் மனமும் இதே யோசனையுடன் கூடிய  வேதனையில்தான் இருந்தது. 

"அழகாய் அதிலும் அருமையாய்  இருந்த அந்த இளமை காலம் இனி வரவே வராதோ...?"  என ஒரு நொடி தோன்றியதும் , கண்ணாடியில் தன் முகம் பார்க்கப் பிடிக்காமல், மனது வெறுப்பில் சுடு தணலில் நின்ற மாதிரி சுணங்கி கொண்டது. 

"என்ன பேசாமல் காலையிலிருந்து இப்படியே கண்ணாடியை பார்த்தபடி இருந்தால்,  பொழுதுக்கென்று சாப்பிடும் வயிற்று பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டாமா?சமைத்து வைத்ததெல்லாம் ஆறி அவலாக வேறு போகிறது...." முணுமுணுப்பது போல் சொன்னாலும், தேன்மொழியின்  பேச்சு  மாறி சற்றே கோபக் கூக்குரலாய் கேட்டது முத்தரசனின் காதுகளில். 

"என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? தினசரி நானுந்தான் நாள் தவறாது உழைக்கிறேன். நம் உடம்பு  சிறிதளவாவது பலமாக இருக்க உன் வாயையும் நீ சிறிது கட்டிக் கொள்ள வேண்டும்...! காலையிலேயே இப்படி நாவுக்கு ருசிக்க செய்ததை சாப்பிடுவதா? அது மட்டுமின்றி பிறகு வேண்டுமென்றே என்னையும், வசை பாடும் வார்த்தைகளால் தோண்டித் துருவி ஆயிரம் ரணமாக்கி, நீயும் உன்னை வீணில் காயப்படுத்தி கொள்கிறாய்.... பிறகு  எதுவுமே அடிக்கடி முடியவில்லையே என்ற புலம்பல் வேறு..! " கொஞ்சம் கோபம் வரப்பார்த்தது முத்தரசனின் வார்த்தைகளில். 

" ஆமாம்... என்னவோ... உன்னைத்தான் நான் எப்போதும் குறை சொல்வதாய்  நீயாக கற்பனைச் செய்து கொள்கிறாய்...! எனக்கென்று வரும் என் வேதனைகளை நான் வேறு யாரிடம் புலம்பி தீர்த்துக் கொள்வதாம்....? " தேன்மொழியின் வார்த்தைகளில் சற்று வேகம் தெறித்ததும், முத்தரசன் வேறு வழியின்றி அடங்கிப் போக ஆரம்பித்தான். 

பதிலுக்குப் பேசப்பேச இப்போதெல்லாம் அது வீண் சண்டையில்தான் முடிகிறது. இறுதியில் வேதனையும் வருத்தமுந்தான் முத்தரசனுக்கு பரிசாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

  "சரி.. சரி நம்மிருவருக்குள் இப்போதே சண்டை வேண்டாம். இப்போதைக்கு உன்  வாயாற வேண்டியதை  திருப்தியாக  நீ உண்டு கொள். என்னை மட்டும் தொந்தரவு செய்யாதே...! "

" எப்படி நீயும் என் அருகில் இருக்கும் போது உன்னை மட்டும் விட்டு, விட்டு நான் எப்படி எனக்கு வேண்டியதை சாப்பிடவாம்....? அதுதான் எனக்கும் உனக்கும் கட்டிப் போட்ட வாழ்நாள் பந்தமென்ற ஒன்று இருக்கிறதே...! என்றாள் கடுப்பான தேன்மொழி. 

" அதை நினைத்துத்தான் எனக்கும்  எப்போதும் சங்கடமாக உள்ளது. அன்பான உறவாகவும் இருக்க முடியவில்லை. சட்டென உதறி விட்டும் போகவும்  முடியவில்லை. " அவனின் பதிலாக வார்த்தைகளின் முணுமுணுப்பை கேட்டதும், 

"என்ன சொல்கிறாய் ? சரியாக கேட்கவில்லை. ஏன் இப்படி பல்லை கடித்துக் கொண்டு பேசுவது போல் பேசுகிறாய்..? சொல்வதை சத்தமாகத்தான் சொல்லேன். ..! " என  தேன் மொழி புலுபுலுவென பிடித்துக் கொண்டாள். 

" ஒன்றுமில்லை... ஏதோ என் மனக்குறையை சொன்னேன்... சரி வா.. இருப்பதை, வாய்க்கு ருசிப்பதை சாப்பிடலாம். .. ! என்றபடி, கண்ணாடியை விட்டு நகர முற்பட்டான் . 

"ஆமாம்... இந்தக் மனக்குறைவுக்கொன்றும் தினசரி குறைவில்லை." முகம் வளைத்து சுற்றி முணங்கி கொண்டாள் தேன்மொழி. 

இரவு. ... வீட்டில் அனைவரும் படுக்கையை விரித்து துயல துவங்கி விட்டனர். அமைதியான  அந்த பொழுதில், தேன்மொழி அவன்  உள்ளத்தின் வேதனை முனகல் கண்டு மறுபடி ஆரம்பித்தாள்.  "என்னவாயிற்று? ஏன் இப்படி அமைதியாக தூங்காமல், என்னையும் படுத்துகிறாய் ?" 

"ஒன்றுமில்லை..  காலை, மதிய உணவுகள் கொஞ்சம் ஒத்துக்கல்லை.." 

"ஏன் நன்றாய்தானே இருந்தது. அதில் என்ன பிரச்சனை உனக்கு....? என் நாவுக்கு எல்லாமே சுவையாகத்தான் இருந்தது... எனக்காக எதையும் விட்டுத் தந்துப் போகும் சுபாவம் உனக்கு இப்போதெல்லாம் வருவதேயில்லை..." என்றவள் தன் மனதில் அதன் ருசியை நினைத்தபடி அதில் திளைத்தாள்.  

"என்னையும் சாப்பிட வேண்டுமென்று தொந்தரவு செய்கிறாய்.... உன் ருசி வேறு..... உன் ரசனை வேறு.... உன் ஆரோக்கியமும் வேறு.... உன்னளவுக்கு என்னால் ஒத்துப் போக முடியுமா . என்பதை யோசிக்கவே மாட்டேன் என்கிறாய்...!" என்றான் சிறிது வலி தந்த கடுகடுப்புடன். 

"சரி... சரி.. பேசிப் பேசி உள்ளே அமைதியாய் தூங்கும் நம் குழந்தை மெளனமொழியை எழுப்பி விடாதே.  .. உன்னால் எனக்கும் அவளுக்கும்  இப்போதெல்லாம் தினமும் ஏதோவொரு  பிரச்சனை.... அவள் சின்னவள்தானே என்ற அலட்சியம் உனக்கு என்றுமே அதிகம்.... பேசாமல் வலிகளை பொறுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்...!! நாளைக் காலையில் உன் பிரச்சனை எல்லாம்  சரியாகி விடும்..... " என்று உணவின் ருசியோடு ஒன்றியிருந்த தன் நினைவுகளை  கெடுத்து விட்டானே  என்ற கோபம் தலைக்கேற கடுகடுத்தாள் அவள். 

" ஏன் இப்படி கோபப்படுகிறாய்.. ? உனக்கு கொஞ்சமும் ஆறுதலாக பேசத் தெரியாதா? நீ இப்படி இப்போதெல்லாம், தினமும் வெறுப்போடு  பேசியே என் நிம்மதி போய் விட்டது. நம் இளமை கால  ஆரம்பத்தில், நான் பிறரிடம் பேசும் போதெல்லாம்  அடக்கவொடுக்கமாய் என் பின்னால் நின்றபடி அவரவருக்கு தக்கபடி பதில் சொல்வாய்....! அப்போது எனக்குப் பெருமையாயிருக்கும்....ஆனால், வரவர உன் பேச்சுகளில், என் உறவையே விரும்பாதவள் போல் அவ்வப்போது என்னையே ஒதுக்குகிறாய்...!  நான் என்ன சொன்னாலும், என் செயல்களில் ஏதோவோரு குற்றம் காணுகிறாய்..   காரணம்...! இப்போது கொஞ்ச நாட்களாக நான் உன் கண்களுக்கு  முன்பு இருந்ததை விட  அழகற்றவனாகி விட்டேன். இல்லையா..? அதனால்தான் இப்படி.. என்னை அவமதிக்கிறாய்.. இல்லையா... " படபடவென்று சொன்ன அவன் வார்த்தை அழுத்தங்களில், அவன் மனவலி, உடல் வலி இன்னமும் அதிகமானது அவனுக்கு தெரிந்தது. 

" இதற்குத்தான் எவ்வளவு  அழகாக இருந்தாலும், ஆரோக்கியமாகவும்  இருக்க வேண்டுமென்பது.... புரிகிறதா..? அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில், அப்போது என்னைப்பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் எல்லோரிடமும் வலிய போய் சிரித்து, சிரித்துப் பேசினாய்..... அப்போது எனக்கு எப்படி வலித்திருக்கும்....?" அவளின் பழைய நினைவை அவன் மீட்டெடுத்து தந்த நினைவலைகளுக்குள் வந்து கோபமாய் சிடுசிடுத்தாள். 

" ஆமாம்.. ஆரோக்கியதிற்கு என்ன குறைச்சல்... உன்னுடன் வந்து வாழ ஆரம்பித்த போது, எனக்கு உன்னை விட ஒரு வயது குறைவு வேறு...!!!! ஆனால், அதற்காக நீயோ, நானோ அன்று குறையேதும் பட்டுக் கொள்ளவில்லை. அழகான திடமான ஆரோக்கியத்துடன்தான்  நம் ஆரம்பகால உறவு தொடர்ந்தது.. . அப்போதெல்லாம்  உன்னுடன் நான் ஒற்றுமையாக வாழவில்லையா?  நம் ஒற்றுமையை பார்த்து நம் குடும்ப உறவுகளும், நம்மை சுற்றியுள்ளவர்களும் புகழவில்லையா? எல்லாம் இத்தனை காலம் நல்லபடியாகத்தான் போயிற்று. ...! ஏதோ.. என் போதாத நேரம்....!! இப்போதெல்லாம்  உன்னிடம் அன்பை இழந்து வெறும் வசவுகளை மட்டுந்தான்  கேட்க வேண்டுமென்ற சாபங்கள் பெற்று வந்து விட்டேன்  போலும்.....!!!!"அவன் தனக்கும் கோபம் எப்போதேனும் இப்படி வருமென நிரூபித்தான்.

" சரி... இப்போது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்..? உனக்கு என்னுடன் வாழ பிடிக்கவில்லையென்றால், அன்றைக்கு நம் உறவுகள்  சொல்லியபடி,  உன் விருப்பப்படி பிரிந்து என்னை விட்டு வாழ வகை செய்து கொள்... அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை...." அவள் சட்டென்று சற்று விட்டேத்தியாக கூறியதும் அவன் ஒரு நிமிடம் தன்  வலி மறந்து அதிர்ந்துப் போனான். 

" என்ன இப்படி பட்டென்று  சொல்லி விட்டாய்.... .? இதுதான் இத்தனை நாள் நாம் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாது சேர்ந்து வாழ்ந்தற்கு அடையாளமா.. .? அதை நினைவில் கொண்டு நீ இத்தனை நாள், வாழ்க்கையில், உன் கோபங்களுக்கிடையே  எத்தனையோ தடவைகள் மரியாதை குறைவாக என்னை அதட்டி பேசிய  போதெல்லாம் கூட நான் இப்படி வருத்தப்பட்டதில்லையே. .. இன்று என்னை கொஞ்சமும் அன்பின்றி, உன் விருப்பப்படி பிரிந்து போவதானால் போ.. என்கிறாயே....நான் விரும்பி வேண்டும் விருப்பமா இது..? " அவன் குரல் உடைந்து அழாத குரலில் குமுறினான். 

" பின்னே என்ன செய்வதாம் ? எப்படியும் ஆயுசு பரியந்தம் நாம் இணையாக சேர்ந்து வாழப் போவதில்லை....இதுவரை நாம், நீ சொல்கிறபடி, ஒற்றுமையுடனும், பிறர் கண்டு பொறாமைபடும்படிக்கும் நல்லபடியாக வாழ்ந்தாகி விட்டோம். எனக்கு மட்டும் உன்னைப் பிரிய ஆசையா? இல்லை, நீ இல்லாமல் சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்தாயா.... ? நானும் நிலை குலைந்துதான் போவேன்.. நீயும் முன்னைப் போலில்லாமல், என்னையும், நான் சங்கடமில்லாமல் உண்டு உடுப்பதையும் எப்போதும் குறை கூறிக் கொண்டேயிருக்கிறாய்.... நான் பிறப்பிலிருந்தே இறைவன் எனக்களித்த என் கடமையைத்தான் செய்கிறேன்.  உனக்கு என்னுடன் இருந்து ஒத்துழைத்து வாழ முடியாவிடில், அல்லது, விருப்பமில்லாவிட்டால், இல்லை, உன் வலிகளும், உன் ஆசைகளுந்தான்  பெரிதாக தோன்றும் போது, நம் குடும்ப உறவுகள் சொல்படி கேட்டு அவர்களின்  குடும்ப மருத்துவரை சென்று பார்த்து நாம்  நிரந்தரமாக பிரிவதற்கு ஏற்பாடு செய்து கொள்... என்றேன்...  நான் கூறுவது சரியா, தவறா. . என நீயே இன்று இரவு முழுவதும் விழித்திருந்து யோசித்துப் பார்த்துக் கொள்.." என்று மடமடவென முடிவெடுத்தது போல  பேசிய தேன்மொழி" எனக்கு தூக்கம் வருகிறது.. . .." என்றபடி மெளனமானாள். 

ஒரு நிமிடம் தெறிக்கும் வலிகளையும் பொருட்படுத்தாது திகைத்து நின்றான் முத்தரசன். 

" இவள் பேசுவதும் நியாந்தானே.....!!  உலகில்  வாழும் அனைவரைப் போலவும் தனியாகத்தான் பிறந்தோம்.... தனியாகத்தான் பிரியப் போகிறோம்....உறவுகள் என்றும் நிரந்தரமல்ல.. ..!!! இடையில் வரும் உறவுகளால் பிரிவையும், பாசத்தையும் அதையும் தங்கள் சுயநலங்களுக்காக காட்ட முடியுமே தவிர்த்து நம் தலைவிதியை அவர்களால்  மாற்ற முடியுமோ...? " என்ற வேதாந்த தத்துவத்தில் ஆழ்ந்த முத்தரசன் "கோபத்துடன் பேசினாலும் அவள் பேச்சில் வெளிப்பட்ட உண்மையை உணர்ந்தவனாய், "இனி தன் வலிகளை பெரிதுபடுத்தி, இல்லை, தன் உயிரே கூட போனாலும், அவள் விருப்பத்திற்கு தடைகளை போடக் கூடாதென்ற" உறுதியை எடுத்தபடி, நாளைப் பொழுதில் விடியும் நல்லதொரு விடியலை எதிர்பார்த்து வேறு வழியில்லாமல் வலியுடன் தூங்க முயற்சித்தான். 

வணக்கம் சகோதர சகோதரிகளே. ..

கதையை புரிந்து கொள்ள முடிந்ததோ ..? ஒன்றுமில்லை....!! இப்படி வலிகளுடன் வேதாந்தமும், தத்துவங்களும் சேர்ந்து  இணைந்து நம் மனதில் தோன்றி விட்டால், நம்மால் பொறுக்க  முடியாத வலிகளைக் கூட ஒரளவு பொறுத்தபடி சமாளித்து விடலாம் என்பது என்னை ஆண்டு வரும்  தற்போதைய  காலமாகிய இந்த "பல்லவர்களின் ஆட்சியில்" நான் பெறும்/பெற்று வரும் கீதோபதேசங்கள். அதன்படி  தூங்காத இரவுகளில்,  என் கற்பனை குதிரையுடன் கடிவாளம் ஏதுமின்றி பயணித்ததில் சேர்ந்து  எழுந்த கதை   இவை. ..  .:))  புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். புரிந்து படித்ததற்கு சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றிகள். 🙏. 

இது போன வருடமே என் ப(ல்)ல தொந்தரவுகளின் காரணத்தால் பிறந்த கதை. இந்த கதையை படிக்கும் பொறுமை அப்போது அனைவருக்கும் இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகள் இருந்து கொண்டேதான் இருந்தன. சரி.. நாமும் இதைப் படிக்கச் சொல்லி தொந்தரவு தர வேண்டாமென இதை தூக்கி கிடப்பில் போட்டு விட்டேன். இப்போது மறுபடியும் பத்து நாட்களாக என்னை மிகவும் இந்த கதையின் விஷயங்கள் தொந்தரவிப்பதால், எங்கோ மறைவில்  கிடந்த  இந்தக்கதையை  அது நினைக்க வைத்து விட்டது. :)))) 

இடுக்கண் வருங்கால் நகைத்துதானே ஆக வேண்டும். அதுவும் நட்புகளோடு சொல்லி மனம் விட்டு சிரிக்கும் போது  வலி தரும் வேதனைகள் குறைந்து விடும் அல்லவா...!! ஆனால் இப்போதும் உங்கள் அனைவருக்கும் தொந்தரவு தருவதற்கு பொறுத்துக் கொள்ளவும். அதெல்லாம் ஒன்றுமில்லையென ஆர்வத்துடன் படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள் . 🙏.