Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, January 26, 2021

கடன் வாங்கியாவது..

அப்பாடா.. எப்படியோ  வந்து விட்டேன்..  இந்த நம்பிக்கை பாலம்  ஒன்றுதானே எப்போதும் எந்த காலத்திலும் நம் பலம்... நெட் பிரச்சனை காரணமாகவும்,   (தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி... தை பிறந்தவுடன் எனக்கும், இணைய தொடர்பு வழிகளுக்குமான வழிகள்  மூடிக்கொள்ள வேண்டுமா? அதுதான் கொடுமை. . ) வேறு சில பல சொந்த காரணங்களுக்காகவும் என் வலையுலக பிரவேசத்திற்கு தடை போட்ட விதியும்,  அதன் சதியும்  சற்றே அசந்து போய் இருந்த இடைப்பட்ட நேரத்தில் புகுந்து எப்படியும் வந்துருவோம்ல.....! (இங்குதான் என் பதிவை  படிப்பவர்களின் விதியும், (எனக்காக வந்து படிப்பதைதான்  கூறுகிறேன்.) சரியில்லை என்றுதான் நினைக்கிறேன்.:) ) 

சரி..  எப்படியோ வந்தாச்சு.. ஏதேனும் எழுதி கிழிக்காமல் போவதா? என ஒரு மனம் தேவையில்லாமல்  இடிக்க, பதிலுக்கு "உன் தொல்லையில்லாமல் அனைவரையும் நிம்மதியாக இருக்க கொஞ்ச நாட்கள் சும்மாவேனும் இரேன்" என இன்னொரு மனம் (நமக்குத்தான் இந்த இரண்டு மனங்களை நாம் கேட்காமலேயே இறைவன் தந்திருக்கின்றானே ....) கிண்டலடித்து சந்தோஷம் அடைந்தது.

இதை கேட்டதும் எதாவது இரண்டு வரிகளை எழுதியேத்தான் ஆக வேண்டுமென கை விரல்கள் சும்மாயிராமல் பிடிவாதம் பிடிக்க, சரி... " கடன் வாங்கி கழித்தல்" முறையிலாவது வந்து விடலாமென முயன்றேன். (அதாவது என்னைத் தவிர்த்து கைபேசிக்கு மொபைல் டேட்டா வைத்திருக்கும் என் குழந்தைகளிடம்  நெட் கடன் வாங்குவதன் மூலம்..  )  ஆனால், அதுவும் ஏனோ இத்தனை நாட்களாக சரியாக வரவில்லை. ( இந்த கடன் வாங்கி களித்தல் என்பது எனக்கு மட்டுந்தான் ராசியில்லை போலும்.....! என மன சமாதானமும் என்னால்  அடைய முடியவில்லை. ஆனால், எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்படும் பணப் பற்றாக்குறையை  சரி செய்ய நிறையவே பிறரிடம் கடன் வாங்கி உடனடியாக அதை கழிக்க மறந்தவர்களாய் தினமும் மனம் போனபடி களித்திருக்கிறார்கள்... களித்து கொண்டுமிருக்கிறார்கள்.....:) அதுவும் உண்மையிலேயே அவரவர்கள் யோகங்களை பொறுத்ததுதான் அமையும் போலும்... :)  ) 

எப்போதும் எங்கள் வீட்டில், Wi-Fi வசதி தடையற இருந்ததினால், என்னுடைய  கைபேசியில் இதுவரை வேறு எந்த பிற வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது ஒரு சூழ்நிலைக்காக ஒரு சிறிய இடமாற்றம். இடமாற்றத்தில், ஏகமாக வந்து குவிந்த வேலைகள் வேறு.  ஆனால் இங்கும் எப்போதும் தடையற இருக்கும் இணைய தொடர்பு  கொஞ்சமும் தாட்சண்யமின்றி, காலை வாரி விட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் என்னால் முன்பு மாதிரி  எல்லோரின் வலைத்தளங்களுக்கு சரளமாக வர இயலவில்லை...ஆனாலும், இப்போது எனக்கு வலைத்தளத்திற்கு வந்து உங்கள் அனைவரின் பதிவுகளை பார்த்து மகிழ்ந்து, கருத்துக்கள் இடும் அடக்க முடியாத அபரிமிதமான ஆவலில், என் கைப்பேசிக்கும் சிறிது நெட் இணைப்பு தந்து வருகை தந்துள்ளேன். இதிலும்  மிக தாமதமாகத்தான் எல்லா  இணைய தொடர்புகள்  வருகின்றன. இருந்தாலும், பழையபடி முன்பிருந்த  இணைய தொடர்பு எளிதாக கிடைக்கும் வரை அவ்வப்போது இயன்ற வரையில் வரலாம் இல்லையா? இப்போது இந்த நெட் வகைகள் எவ்வளவோ வந்து விட்டது. எதை. எப்படி எடுப்பது என்பதில்தான் ஏகமான குழப்பங்கள்.. தாமதங்கள்.. தடுமாற்றங்கள்.. எப்படியோ நட்புறவுகள் அனைவருடனும் இன்று மனம் விட்டு பேச வைத்த இந்த மொபைல் டேட்டாவுக்கும் நன்றி. எப்போதும் என்னை மறக்காத  அன்புள்ள சகோதர சகோதரிகளான உங்களனைவருக்கும்  என் நன்றி. 

பின்பு  சும்மாவேனும் வந்து விட்டு போனால். நன்றாக இருக்காது என்பதினால்,  நான்  படித்த சும்மா பதிவு ஒன்றுறையும் பகிர்ந்துள்ளேன். "நாங்களும் சும்மாயிருக்கிற நேரத்தில் இதை படித்துள்ளோம்.. எதற்கு இப்படி சும்மா.. சும்மாவென்று எங்களை சும்மா தொந்தரவு செய்கிறீர்கள்" என கேட்காது சும்மா இதையும் இன்னொரு தடவை படித்து விட்டோம் என  ரசிக்கும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான. 🙏. 

இதோ அந்த ப (பி) டித்த பதிவு..... 

**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

அது சரி *சும்மா* என்றால் என்ன? 

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*. 

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*

*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*

3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*

4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*

5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*

6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*

7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*

8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*

9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*

10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*

11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*

12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*

13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*

14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*

15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றன, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..

எதற்கும் *சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள.. நன்றி... 

இந்த பதிவை படித்து விட்டீர்களா? எப்படியோ என் இணைய பிரச்சனை நடுவிலும் ஒரு பதிவை தேற்றி வந்து விட்டேன். கடவுளுக்கு நன்றி. பதிவைப் படித்து எப்படி  உள்ளதென  கூறும் உங்கள் அனைவரின் கருத்துரைகளுக்கும்  நன்றி. 🙏..

Thursday, June 18, 2020

இதுவும் ஓர் நோய்தான்..

பசி என்பது உலகத்திலேயே ஒரு கொடுமையான நோய்... எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு அந்தந்த நோய்களை  குணப்படுத்தி விடலாம்./விட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பசி நோய்க்கு வயிறார இரு வேளையாவது உணவளித்தால்தான் அது குணமாகும். இல்லையென்றால், அறிவு மழுங்கும். அவ்வாறான அறிவின் சறுக்கல்களில், தீய குணங்கள் பலதும் உற்பத்தியாகும். அது  பசியாற சிறிதேனும் திருடத்தூண்டி, அந்த திருட்டை மறைக்க பொய் எனும் பாலம் அமைத்து அதில் நடக்க வைத்து, இடையில் பெருங் கொள்ளைகளை அநாயசமாக செய்ய வைத்து, சமயத்தில் கொலைக்கும் வழி வகுக்கும். இதில் இந்தப் பசியை போக்கும் மருந்தாகிய  செல்வம் வெவ்வேறு அராஜக முறையில் வந்த பின் கூட அப்போதைக்கு பசியெனும் நோய் தன்னை அகற்றிக் கொண்டு அம்மனிதருக்குள் பஞ்சமாபாதகங்கள் எனும் தீயகுணங்கள் அபரிமிதமாக பெருகி தாண்டவமாடுவதை பார்த்து ரசிக்கும். 

பசி வந்திட பத்தும் பறக்கும். . என்றார் ஔவை பிராட்டி. 


அதென்ன...? பத்தும் என்றால், கீழுள்ள இவைகள்தான்... ! 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

விளக்கம்:-
ஒரு மனிதருக்கு பசியெனும் நோய் தோன்றி அது தீர்க்கப்படாமல் போகும் போது, அவர் அந்த கடும் நோயினால், அவதிப்படும் போது அவரிடத்தில் உள்ள சிறந்த குணங்களாக கருதப்படும்  அனைத்தும் கண்காணாமல் போய்விடும். இதைத்தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்றார் ஔவை பிராட்டியார். 

அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பசியின் மயக்கத்தில் பறந்து போகும்.

மேலே குறிப்பிட்டபடி பசி நோயினால், ஒரு மனிதருக்கு இவை அனைத்தும் காணாமல் போனபின் பசிக்கும் தருணங்கள் வந்தாலும், வந்த பசியை அலட்சியம் செய்து. அறிவு மழுங்களின் காரணமாக மனிதருடன் நட்பாகியிருக்கும் தீய எண்ணங்கள் முன்னே வந்து  நின்று, அதன் வழியே நடக்க வைக்கும். 

இத்துடன் இல்லாமை, இயலாமை போன்ற ஆமைகள் புகுந்த இடத்தில்  இந்த வறுமையும் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்து கொண்டு விடும்.  வறுமை எனும் நோய்க்கும், இந்த பசி நோயும் ஒர் இணைபிரியாத ஆத்மார்த்தமான நண்பன். ஆகவே இரண்டும் சேர்ந்து நட்புறவாகி இருக்கும் இடத்தில் மனிதர்கள் அது தீரும் மட்டும் சிரமபடுகிறார்கள். 

எப்போதுமே ஒரு பக்கத்திற்கு மறுபக்கம்  என்ற ஒன்று இருப்பதைப் போன்று, மேற்சொன்ன  மாதிரி தீய எண்ணங்கள் உருவாகும் வாய்ப்புக்கு எதிரிடையாக பிறப்பிலேயே நல்ல குணங்களோடு பிறந்திருப்பவர்கள் வறுமையையும்  ஏழ்மையையும் பொறுமையாக தாங்கி  கொண்டு போவதுடன்,  பிறரிடம்  அதை வெளிக்காட்டாமலும் இருப்பார்கள். அவர்களுக்கு இறைவனே நல்ல தீர்வு ஒன்றை நல்ல சமயத்தில் மறக்காமல் தருவான். 

 இதற்கேற்ற மாதிரி "தோழனோடும் ஏழமை பேசேல்.."என்றொரு பழமொழியும் உண்டு. நம்மோடு நெருங்கி பழகும் நட்பாக அயலார் இருந்தால் கூட, நம் ஏழ்மையைக்கூறி அவரை வருத்தவோ, தானும் வருந்தவோ கூடாது என்பார்கள். "செழிப்பை  அவசியமின்றி வெளிக் காட்டினால் அது பிறரை நோகடிக்கும் அகம்பாவம்.. ஏழ்மையை  அடிக்கடி வெளிப்படுத்தினால் அது பிறரால் நோகும் அவமானம்." என்பதும் எந்நாளும்  மாற்ற இயலாத வார்த்தைகள்தானே..! 

பொறுமை காத்து ஏழ்மையில் வாடும்  இவர்களுக்காக இறைவன்  மனித வடிவில் கண்டிப்பாக வந்து உதவி செய்வான். . ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் " உள்கட" ந்து இருக்கத்தான் செய்கிறான். ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ளும் போது, "அவன்"அந்த மனிதர்களின் மனதிலிருந்து வெளிப்படுகிறான். அதைதான் நாம்" மனித நேயம் "என்றும், "மனிதாபிமானம்" எனவும் சொல்கிறோம்

கீழுள்ள இந்தக் கதையை (இல்லை, கதை மாதிரி)  உள்ளதை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் தோன்றியது. 
 
படித்ததில் பிடித்தது .... 

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில், ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதித் தொங்க விடப் பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப் படித்தேன். 

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. 


எனக்கும் பொழுது போகவில்லை, அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "அந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனா ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு".


அங்கே ஓர் சிறிய கீத்துக் கொட்டகை. ஒரு நாள் மழைக்குக் கூடத் தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும், தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும்,


யாருப்பா நீ?


அம்மா, நான் இந்த வழியா வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 


தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சதுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறாங்க... 

அந்த கடிதம் நான் எழுதல தம்பி. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 

. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன். 

"தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்தக் கடிதத்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு.." என்று அறிவுரைத்தாள் அந்தத் தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தைக் கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டு தான் இருப்பார். ஆனாலும் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். *நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்*


மனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம்.


"அண்ணே இந்த விலாசம் எங்கேன்னு சொல்ல முடியுமா? கீழே 50 ரூபாய் கிடந்தது. அந்த அம்மாகிட்டக் குடுக்கணும். வழி சொல்றீங்களா?"


*மனித நேயம் செத்துப் போனது என்று யார் சொன்னது??? இன்னும் சாகவில்லை.


இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் மனித நேயம்!!

உண்மைதானே..! செல்வங்கள் என்றொரு தலைப்பில் நான் அன்றோர் பதிவு எழுதும் போது, அதற்கு நல்லதொரு கருத்துக்கள் தந்த  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள்"பசி வந்திட பத்தும் பறக்கும் " என்பது பற்றி எழுதுங்கள் என தன்  ஊக்க கருத்தையும்  சொன்னார். நேரம் வாய்த்தால் எழுதுகிறேன் என நானும் அவர்களின் கருத்துக்கு  பதில் சொல்லியிருந்தேன். 

அது போல் அந்த நேரம் வாய்த்ததோ  என்னவோ, இந்த" படித்ததில் பிடித்தது" எனக்கு வாட்சப்பில் வந்ததும், ஒரு மனிதரின் பசி எவ்வளவு கொடுமையானது, அதுவும் இப்போதுள்ள "இந்த கால கட்டத்தில்" எனத் தோன்றவே இந்தப்பதிவை எழுதினேன். இந்த வாட்சப் கதையை  அனேகமாக அனைவரும் படித்திருக்கலாம்.  இருப்பினும் என் பதிவிலும் படித்து அந்த வயதான பெண்மணிக்குள் அத்தனை ஏழ்மையிலும் இருக்கும்  நல்ல உள்ளத்தையும், அவருக்கு உதவும் நல்ல உள்ளங்களையும் மனதாற போற்றுவோம். சரிதானே..! 

அன்புடன் இந்தப் பதிவை படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏 . 

Tuesday, May 19, 2020

ஒரு கதை பிறந்த கதை.


சில கதைகள் எப்போதோ படித்தாலும் மனதை விட்டு அகலாமல் இருக்கும். ஆனால் யார் எழுதியது, எப்போது, எங்கே என்பது கூட சுத்தமாக மறந்து விடும்.

இந்த தோசை இருக்கிறதே. அதற்கு யார் ஆசையுடன் அந்த ஆசையையும் சேர்த்து பெயராக வைத்தார்களோ  தெரியவில்லை..?  "ஆசை வெட்கமறியாது" என்பது போல், "தோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட  வயிறு." என்றொரு பழமொழி உண்டு. எவ்வளவு ருசித்து தின்றாலும்  "இன்னும் ஒன்னே ஒன்னு சூடாக போட்டுக்கோ..."என்ற குரலுக்கு மறுபேச்சின்றி இணங்கி விடும். அதுதான் ஆசையின் பெயருடன் சற்று இணைந்தே இருக்கும் இந்த" தோசை" யின் சிறப்பு...

தோசைகள்  அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைய வகைகளில் உருப்பெறும்.  ஆனால்  வார்க்கும் வகைகளில் ஒருவரையொருவர் குற்றம் சொல்வது மட்டும் தவறாது இடம்பெறும்.

சிலருக்கு குண்டாக  தோசை வார்த்தால் பிடிக்காது. சிலருக்கு ஒல்லியாக இருந்தால், என்ன இப்படி காற்றில் பறக்கிற மாதிரி தோசை வார்த்திருக்கிறாய்.. எத்தனை தின்றாலும், வயிறே நிறைய மாட்டேன் என்கிறதே...! என்பார்கள்.

சிலருக்கு பட்சணங்கள் மாதிரி மொறு, மொறு என பல்லில் கடித்து சாப்பிடுகிற மாதிரி இருக்கனும். சிலருக்கு பஞ்சு மாதிரி மிருதுவாய், அதே சமயம் மிழுங்கும் போது தொண்டையை அடைக்காத மாதிரி வேண்டும்.

தோசைக்கே இப்படியென்றால், அதனுடன் கலந்து கூடும் துணைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவர் விதவிதமாக சட்னிகள்தான் அதற்கு பொருத்தமெனவும், மற்றொருவர், இட்லி மிளகாய்ப்பொடிதான் தோசைகளுக்கும் சாலச்சிறந்தது எனவும், இன்னுமொருவர் நல்ல சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் இல்லாத தோசை ஒரு தோசையா? எனவும், பிறிதொருவர்  காய்கறி, மசாலா கலந்து செய்யும் குருமாதான் இதற்கு உடன்பாடு எனவும், மீதமிருப்பவர் அதென்ன.. ஒன்றை விட்டு ஒன்றைச்சொல்வது? இவை எல்லாம் இருந்தால்தான் தோசைக்கே ஒரு அழகு. இல்லையெனில், எவ்வளவுதான் ருசியான தோசையாக அமைந்தாலும், அது வெறும் "சை"(த்) தான் எனவும் அவரவர்கள் வாதிட்டு அவர்களே வெல்வார்கள். இது அவரவர் தோ (தே) சா சுதந்திரம். ஹா.ஹா.

ஏதோ மனதில் அகலாத கதை என்று சொல்லிவிட்டு இவள் தன் இஷ்டத்திற்கு காது குத்தி கொண்(ன்று)டு இருக்கிறாளே என நீங்கள் நினைக்கும் முன் அகலாமல் அமர்ந்திருக்கும் கதைக்கு வருகிறேன்.

கதை..

ஒருவர் தன் சொந்த வேலை விஷயமாக ஒரு ஊருக்கு தன் நண்பரோடு பயணிக்கிறார். அந்த நண்பருக்கும் அவருடன் சென்று வந்தால் அவரின் வேலைக்கும்  சில ஆதாயம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. . அந்த ஊரில் அவர் சந்திக்க  நினைக்கும் வீட்டை அடைந்ததும் அவருக்கும். நண்பருக்கும் ஏகப்பட்ட மரியாதை. அந்த வீட்டிலிருப்பவர்கள் ஒரளவு வயதான கணவனும், மனைவியும் மட்டுந்தான்..!

 வேலைக்காக சென்றவரும், அவ்வீட்டிலிருக்கும் பெரியவரும் ஏதோ ஒரு வகையில் உறவுதான். எனவே குசலபரிபாலனம் முடிந்த பின் இருவருக்கும் சாப்பாடு தயார் செய்ய தன் மனைவியிடம் சொல்லவும்,  அந்த மனைவி நல்ல முறையில் உணவு தயாரித்து இருவருக்கும் அன்போடு பரிமாறி அவர்கள் இருவரின் நன்றியையும் பெறுகிறார்.

இரவு வீட்டின் கூடத்தில் பிராயாணித்து  வந்த  அலுப்பு நீங்க  ஆனந்தமாக படுத்து உறங்கி காலை எழுந்தவுடன் அருமையான காஃபியை குடித்த பின் அவர்கள் இருவரும் அவர்கள் வந்த வேலையை சுமூகமாக அந்த வீட்டு  பெரியவர்  முடித்து தருவதாக சொன்ன செய்திக்கு மகிழ்வுடன் நன்றி தெரிவித்த பின் தங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும், "இருங்கள்.. என்ன அவசரம்? காலை டிபனை முடித்து விட்டு கிளம்பலாம்..! "என அந்த அன்பான கணவருடன் சேர்ந்து அவர் மனைவியும் மிகவும் வறுப்புறுத்தியதில் அவர்களும்  மனம் மாறி சம்மதித்து விடவே, இவர்களுக்கு குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து கொடுத்தார் அந்த வீட்டுப் பெரியவர். 

இவர்கள் குளித்து வந்தவுடன் தோசையின் மணம் நாசிக்குள் சென்று  வயிற்றில் பசியை உண்டாக்கியதையும் வாழை இலையில்.  தோசைகளுடன் தேங்காய் சட்னி பரிமாறி, வாசனையான எண்ணெயுடன் குழைத்த மிளகாய் பொடியை இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என அந்த பெரியவரின் மனைவி, ஒரு தாயின் பரிவுடன் கேட்டு, கேட்டு உபசரித்ததையும், அவர் வார்த்தெடுத்த தோசைகளின் அழகை இருவரும் ரசித்ததையும் இருவரும் அந்த கதையில் மனதுக்குள் விவரிக்கும் அழகே தனி... அதைப் படிக்கும் அந்த நேரத்தில் நமக்கே ஆழ்ந்த பசி வந்து கண்களை கட்டும். அதுவும் தோசைகளை அடுக்கி வைத்து பரிமாறிய அந்தம்மா மாதிரி நமக்கும் யாராவது சுவை மிகுந்த தோசைகளை தட்டில் போட்டு தர மாட்டார்களா என மனம் ஏங்கும். 

இருவரும் முந்தைய நாளின் கூச்சமின்றி வேண்டிய அளவு தோசைகளை சாப்பிட்ட பின் மீண்டும் ஆவி பறக்கும் காஃபி குடித்து.ஆசுவாச படுத்திக் கொண்டு  இருவருக்கும் நன்றி சொல்லி கிளம்பும் போது, "மதியம் இவர்கள் ஊர் சென்று சேர நாழியாகி விடும். தோசைகள் நிறைய வார்த்திருந்தால் ஆளுக்கு நாலு தோசை இலையில் கட்டி பார்சல் செய்து கொடேன். வழியில்  சாப்பிட்டு பசியாறட்டும்.." ! என்ற கணவரின் பேச்சுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த அந்த மனைவி சமையலறை உள்ளே சென்று வாழையிலையில், தோசைகளை  வைத்து கட்டித் தந்த அந்த பார்சலை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... 

அவர்களே " இந்த மாதிரி ருசியான தோசைகளை இனி வாழ்நாளில் எப்போது சாப்பிட போகிறோம்..? பேசாமல் ஊருக்கு கிளம்பும் போதும் நாலு தோசைகளை கேட்டு வாங்கியே செல்லலாமா? "என்ற மனரீதியில் யோசித்ததையும், ஊருக்கு திரும்பும் போது பிரயாணத்தில் இருவரின் மனநிலையும், யோசனையும் ஒன்றாக இருந்ததையும் அவர்கள் பேசிக் கொள்வதை கதாசிரியர் அவ்வளவு அழகாக விமர்சரித்திருப்பார். 

இந்தக் கதையில் நான்  சம்பவங்களை கோர்வையாக தந்துள்ளேனா இல்லை சற்று என் கற்பனைகளையும் கலந்து விட்டேனா என தெரியவில்லை. கதையில் கதை எழுதியவர்,  "பெரியவர் இவர்கள் வருகையை அவ்வளவாக விரும்பாத மாதிரியும், அவர் மனைவியை நல்ல மனதுடையவராகவும்  காட்டியிருப்பாரா" என்பது இப்போது விமர்சித்த பின்  குழப்பமாக உள்ளது. எப்படியிருந்தாலும்  படிக்கும் போது அதுவும் ஒரு வகையான சுவாரஷயமே ..!

(என்னடா இது..! மனதில் அகலாத என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாது இவ்வளவு குழப்பங்களா? என நீங்கள் குழம்பலாம். எப்போதுமே ஒரு விஷயம் மனதை விட்டு அகலாமல் இருப்பதால்தான் ஒரு குழப்பமே உருவாகிறது.  ஹா. ஹா. ஹா.)

கதை எழுதியவர் வந்து படித்து அவர் எழுதிய  கதையைக் கூறி, இதில் சிலது மாறியுள்ளது.. நான் எழுதியதில் இப்படி இருக்கும்... என்று சொன்னால்தான் உண்டு. ஆனால் அதுவும் நடக்க வாய்ப்பில்லையோ எனவும் மனம் நினைக்கிறது.

நன்றாக நினைவில் நிற்கும் கதையிது என சொல்லி விட்டு மாற்றி விட்டேனோ என ஏன் பேதலிக்கிறார் என நீங்கள் எண்ணலாம். "கரு தோசையின் சிறப்பை வர்ணிப்பதும், அதை ஊருக்கு கிளம்பும் கடைசிவரை நின்று வாங்கிச் செல்லும் நிகழ்வுகள்தான்." இடையில் சில மாறுதல்களை நான் விமர்சித்தது கொண்டு வந்திருக்குமோ எனத் தெரியவில்லை. இந்த கதை என்றோ படித்தது. இதை வேறு யாரேனும் படித்து ரசித்திருக்கலாம். ரசித்தவர்கள் இந்தக் கதையின் தலைப்பையும், எழுதியவர் யாரென்ற பெயரையும் தெரிவித்தால் நன்றியுடையவளாக இருப்பேன்.

இன்று என் பதிவுக்கு உபகாரமாக அன்று  இந்தக் கதையை அருமையாக எழுதியவருக்கும், நான் என் பதிவில் எழுதியதை சலிப்பின்றி படித்த  என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏. 🙏.

பி. கு. இன்னமும் ஒரு கதை அகலாமல் மனதில் உள்ளது. வேறு வழியில்லை. பதிவுலக சட்டப்படி நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும். ஹா. ஹா. ஹா.  நன்றி.. 🙏. 😀😀

Monday, September 23, 2019

பாட்டி சொல்லை தட்டாதே..

அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம்  என்பது ஒவ்வொரு வீட்டிலும் தப்பாமல்  இருந்தது. குடும்பமென்றால்  மூத்தவர்கள், அனுபவ அறிவு நிரம்பியவர்கள் என்று ஒரு நான்கு பேராவது அதில் இருந்தனர். அவர்கள் குடும்பத்தின் பொறுப்புகளைை சிரமேற் கொண்டு வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து, வீட்டின்  அனைத்து   சுப நிகழ்ச்சிகளையும், பிறர் மெச்சும்படிக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நடத்தி குடும்பத்தினர்களை பெருமையுடன் கூடிய மகிழ்வு கொள்ளும்படி செய்வதோடு மட்டுமின்றி, 🙏

 ஒரு அவசர ஆத்திரத்திற்கு அவர்கள்தான் அந்த குடும்பத்து உறுப்பினர்களுக்கு நாடி பார்த்து சுகப்படுத்தும் வைத்தியராக, 🙏

விஷக்கடிகளுக்கு மந்திரிந்து வீபூதியிட்டு, விஷக் கடிகளை இறக்கி  நல்லபடியாக அதை குணப்படுத்துபவர்களாக, 🙏

ஏதேனும் சொத்து சம்பந்தபட்டதோ, இல்லை குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளோ அதை சாமர்த்தியமாக பேசி தீர்த்து வைக்கும் சட்ட ஆலோசகராக, 🙏

ஒரு கோவில் குளத்திற்கு செல்ல ,பரிந்துரைத்தோ, இல்லை தாங்களும் முன்னின்று அழைத்துச் சென்று தெய்வீகமான  சிந்தனைகளைை வலியுறுத்தி, வளர்ப்பவர்களாக,🙏

 நல்லது கெட்டதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லும் ஜோசியராக, இத்தனைக்கும் மேலாக அந்த வீட்டு குடும்பத்தினரால், மரியாதையாக நடத்தப்படும் அத்தனையும் தெரிந்த பெரியவர்களாக மதிக்கப்பட்டு வந்தார்கள். 🙏

நாளடைவில், நாகரீகமும், சுயநலங்களும், பெருக பெருக, தனித்தனி வாழ்க்கை, அதில் வரும் சின்னச்சின்ன இன்பங்களுக்கு  மனிதர்கள் அடிமையாகி, கூட்டுக் குடும்பங்கள் நெரிசல்களில் சிக்கிய வாகனங்களாக உருமாறி நசுங்கிப் போய் விட்டது. 

பெரிய  விருஷமாக ஆலமரங்களாய் கிளை விட்டபடி சேர்ந்து பரவி கிடந்த கூட்டுக் குடும்பங்கள்  மலிந்து நாளடைவில் அவை வளைந்து, நெளிந்து இயற்கையாகவே எந்தவொரு புயலுக்கும் சவால் விட்டபடி காலுன்றி இருக்கும் நாணல் புற்களாக சமாளித்து வந்த போதிலும், அந்த சமாளிப்புகளையும், புதுப்புனலாக வந்த  நாகரீக மோகங்களும், சுயநல தாகங்களும் கூடவே இணைந்து கைகோர்த்தபடி கொண்டாடி, சிதறடித்து விட்டன. 

இந்த இடைவெளியில் பெரியவர்களின் அறிவுரைகள் அவசியமில்லாததாக ஆகிப்போயின. ஏட்டுப் படிப்பறிவு மட்டும் பெற்று, சிறப்பாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கைக் கல்விகள், அனுபவ பாடங்கள் நம் சுதந்திரத்தை பாதிப்பதாக நினைத்த தவறான முடிவுகளில், நாம் தனியாக ஒதுங்க, அவர்களின் ஆலோசனைகள் என்ற ஒரு "பாடப்பகுதியை" நாம்  எந்த கல்வி நிலையங்களிலும் பெறாமலே பட்டம் வாங்கி, பணம் நிறைத்தும் பயனற்று வாழ்கிறோம். ஆனால் அவர்களின் வாழ்க்கைப் பாடங்களை முறையாக பின் பற்றியிருந்தால், இன்று எத்தனையோ நன்மைகள் இனியதாக நம்மை தொடர்ந்திருக்கும். 

வாட்சப்பில் சுற்றுலாவாக வந்து என்னை கவர்ந்த இந்த வரிகள் "இனியேனும் இவற்றை பின்பற்றுங்கள்" என்பதாக வந்திருக்கும் வாசகங்கள் இவையனைத்தும், இனியேனும்  நம் சந்ததிகளுக்கு எப்போதும்  பிடித்திருந்தால் சரிதான்!!

இதோ அந்த வாசகங்கள்.
பாட்டி அடிக்கடி சொல்லுவாள்... 

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுமனே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள்! இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே! 

சொல்லலாம். அதற்கு முன் இவைகளை அழகாய் சொல்லும் திறனை நமக்கும், ஆசையாய் கேட்கும் அவகாசத்தை அவர்களுக்கும், உருவாக்கித் தரும் கால நேரங்களை இறைவனிடம் நாம் கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும் .. 🙏...

Monday, December 31, 2018

வாழ்த்துகளுடன், படித்ததும் பார்வைக்கு....

இப்போதுதான் 2018 ம் ஆண்டின் துவக்கம் மாதிரி இருந்தது.  அதற்குள் இவ்வருட கடைசி மாதத்தில் இருக்கிறோம். காலம் நம்முடன் போட்டி போட்டு கொண்டு ஓடுகிறதா? இல்லை நாம்தான் காலத்தை ஜெயிக்க விடாது செய்ய வேண்டுமென ஓடி ஓடி கண்மூடி திறப்பதற்குள் இறுதி மாதத்தில் விரைவாக வந்து நிற்கிறோமா? புரியவில்லை.... ஆனால் இன்னமும் ஒரு நாளுக்குள், மறுபடி ஒரு புது வருடத்தை சந்திக்கப் போகிறோம். சென்ற வருடத்தில், எவ்வளவு  சந்தோஷங்கள், எத்தனை மகிழ்வுகள், இல்லை,  எத்தனை பிரச்சனைகள், எவ்வளவு கவலைகள் என அனைத்தையும் சமமாகவோ, அல்லது, முறையே நிறையவோ, குறையவோ சந்தித்திருப்போம். அது போல அல்லாமல் இனி வரப் போகும் புது வருடமாகிய  2019 இனிதே பிறந்து எப்பொழுதும் வருட இறுதி மாதம் வரை அனைவருக்கும் மகிழ்வினை மட்டும் அள்ளி அள்ளி தந்து செல்ல வேண்டுமென மனதாற காலத்திடம் வேண்டிக் கொள்கிறேன். 

முந்தைய காலங்கள் என்பது ஒரு வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. சென்ற வருடத்தில் இருந்த செளகரியங்கள் "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அப்படி சேர்ந்து இருந்தவைகள் "அ" வை விடுவித்து விட்டோ, நடை போட்டபடிதான் இருக்கின்றன. இதோ கீழே நான் படிக்க நேர்ந்தவைகளை அனைவரும் உணர்ந்திருக்கலாம். (ஏன் அனைவரும் படித்தேயிருக்கலாம். அப்படி உணராதவர்கள் இனி உணரும் சந்தர்ப்பங்கள் வராது என இவை கூறுகின்றன.)

இந்த விஞ்ஞானமும் வருடத்திற்கு வருடம் முன்னேறிக் கொண்டுதான் உள்ளது. அதன் பயன்பாடும் நமக்கு தேவையாகத்தான் உள்ளது. ( கீழே காணும் இவையும் விஞ்ஞானம் வெற்றி கண்ட வாட்சப் என்ற பயன்பாட்டின் மூலம் வந்து படித்தவைதான்.) ஒன்றுமில்லை.. ஒரு கையடக்க கருவியில் இந்த  மாதிரி விஷயங்களை தொகுத்தோ, இல்லை தனித்தனியாகவோ, வெளியிட்டு பகிர்ந்து மகிழ்கிறோம். இதுவும்  விஞ்ஞான வளர்ச்சியினால்தான் சாத்தியமாகிறது.                                     
                           
                                ஆனால்,

இந்த விஞ்ஞான தரகரின் விபரீத வளர்ச்சியால், சோம்பேறித்"தனம்" என்ற ஒன்று உண்மையான "தனத்தை" விட அதிக செல்வாக்குடன் நம் உடம்பில் வாடகை எதுவும் எதிர்பாராமல் வந்தமர்ந்து குடியேறி விட்டன.  ஆக்கிரமித்து விட்டவைகளை சில சமயம் அகற்ற இயலாமல் தத்தளிக்கிறோம். நம்முடைய பெற்றோரின் சிரமங்களுக்கிடையே வளர்ந்து விட்டு தற்சமயம் சொகுசின் சுகம் புரிந்து விட்ட நாமும் நம்  இளைய தலைமுறையினருக்கு அதே சுகத்தை அது கெடுதல் என புரிந்து கொண்ட பின்னரும்   தக்கவைக்க பாடுபடுகிறோம்.

என்ன இருந்தாலும் உடல் உழைப்பும், அதனால் வரும் இன்பங்களும் இனியதல்லவா.!அந்த உழைப்புகளையும். இன்பங்களையும் முழுதாக நாமும் அனுபவியாமல், நம் சந்ததிகளுக்கும் அது என்னவென்றே தெரியாதபடிக்கு செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.

இந்த மாதிரி வருடங்கள் உருண்டோடி, காலச் சுழற்சியில் மீண்டும் பழைய காலங்கள் ஏற்படலாம்.  அதைக்காண நம்மில் பின்வரும் எந்த தலைமுறை புண்ணியம் செய்திருக்கிறதோ.! அந்த கடவுளுக்கே வெளிச்சம்.. ஆனால் அந்த கடவுளே ஒளி உமிழும் பலவகையான விளக்குகளையும்,  மின்சார மணி எழுப்பும் ஓசைகளையும், தற்சமயம் மெளனமாய் அங்கிகரித்து வருகிறார்.
                   எது எப்படியாயினும் 
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்வான தருணங்களை நிறைய தர வேண்டுமென மனதாற ஆண்டவனிடம்  பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

       வலைத்தள சகோதர, சகோதரிகள்   
  அனைவருக்கும்  இனிதே பிறக்கவிருக்கும்
                           2019 ம் ஆண்டின்
                   புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

படித்ததை பிடித்ததால் பகருகிறேன்.

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

 வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார்.
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

 ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

 ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

 விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

 மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

 உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

 மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

 ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது…

அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டனர்…

 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

 யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

 ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…

அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

இது எல்லாமே உண்மைதானே. ! என எண்ணவும் தோன்றுகிறது

Sunday, June 17, 2018

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..


இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும்  ஒவ்வொரு  நாட்டிலும்,  நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர்.   ஆனால் 
இந்த தினம் நாட்டுக்கு நாடு வேறு படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, ஜப்பான், இந்தியா  ஆகிய நாடுகளில் மட்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறன்று  தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது.  ஒவ்வொரு வீட்டடிலுமுள்ள அங்கத்தினருக்கு (அன்னை, தந்தை  பெற்றோர்கள் குழந்தைகள் சகோதர சகோதரிகள்) , என ஒரு வருடங்களில் வரும் ஒவ்வொரு  மாதங்களிலும், குறிப்பிட்ட தேதியில் ஒவ்வொருவருக்கும் உரிய தினமாக அறிவித்து கொண்டாடபட்டு  வருகிறது. 

அதன்படி இன்று தந்தையர் தினம்

தாய் தந்தை இருவருமே நம் முகத்தின் இரு விழிகள். ஒரு மனித முகத்தில் இரு விழிகளையும் ஒரே நேர்  கோட்டில் ஆண்டவன் படைத்த காரணமே இரு விழிக்குள்ளும் பாரபட்சம் என்ற வேறுபாடு வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான். ஆனால், பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு கட்டத்துக்கும் நமக்காக பார்த்து பார்த்து செலவு செய்து நம் நலனுக்காக பாடுபடும் அப்பாவை சில வீடுகளில் இரண்டாவதாகத்தான் கருதுகிறார்கள். தந்தையின் கண்டிப்பு சற்று பிடிக்காத காரணத்தால், என்றுமே அவர் நம் நல்லதுக்காகத்தானே சொல்லுவார் என்ற எண்ணம் சிறிதுமின்றி அவரை, அவர் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், அலட்சியபடுத்துகிறார்கள். 

மாதா, பிதா, குரு, தெய்வம் என நாலு பேரை நம் பிறப்பிலிருந்து ஒரு சிறந்த பார்வையில், வைத்துப் பார்க்கிறோம். 
கடைசியில் இருக்கும் தெய்வம்தான்  மனித இனத்தை தலைமைச்சிற்பியாய் இருந்து செதுக்கி சரியான பரிமாணத்திற்கு கொண்டு வர, (மாதாவை) அன்னையின் மூலம் சிறந்த தகுந்த சிலை செய்வதற்கான கற்களை தேர்ந்தெடுக்கவும்,  (பிதாவை) தந்தையின் மூலம் அக் கற்களை வடிவமைத்து செதுக்க தேவையான பொருளீட்டவும், (குருவை) கல்வி கேள்வி அறிவுகளை கற்பிக்கும் ஆசிரியர் மூலம் உளி கொண்டு கற்களை  பின்னமில்லா அழகிய சிற்பமாக செய்யவும் செய்து, உலகில் உலா வரவும் பயன்படுத்திக் கொள்கிறான். இதில் மாதா, பிதா, குரு மூவருக்கும்  அவன் (தெய்வம்) தலைமைச் சிற்பியாய் இருந்து அவர்களையும் வேலை வாங்கி கடைசியில் நின்று கண்காணித்து பெருமை யடைகிறான். மற்ற  இருவரும் அவன் கட்டளைக்கிணங்கி உளி கொண்டு செதுக்கும் போது ஏற்படும் வலியினை, வெறுத்து நாம் சிற்பமாக மாறத் தயங்கினால், நஷ்டம் சிற்பத்திற்கேயன்றி, உளிக்கல்ல!. அதனால் ஏற்படும் கோப தாபங்களின் காரணமாக,  பெற்றெடுத்த உறவுகளை  மன சஞ்சலபடுத்தாமல், அவர்களின் சிறப்புகளை உணர்ந்து வாழ்வோமாக...இன்று நாம் அந்த பரிபூரண அன்பை  நம்மை பெற்றவர்களுக்கு தந்தால் நாளை நம் குழந்தைகளிடமிருந்து அது நிச்சயமாக  திருப்பி நமக்கு கிடைக்கும்.

எனவே எப்பொழுதும், உறுதியாக நிலைத்திருக்கும்  வாசகங்கள்.... 

தாயிற் சிறந்த கோவிலுமில்லை ..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. 

தந்தையர் தினப் பதிவுக்காக நான் எழுதியதுடன் நான் படித்து பிடித்த கதை ஒன்றையும் இத்துடன் பகிர்ந்துள்ளேன். அனைவரும் படிப்பதற்கு மிக்க நன்றி. 

வலையுலக சகோதரர்கள் அனைவருக்கும் என்றுமே தந்தையர் தின நல்வாழ்த்துகள். 


படித்ததில் பிடித்த கதை.
========================
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி... மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பதுதானே அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது .இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை .கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது.

குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக. மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. 

“நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?”
என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின் பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்பு போய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன  யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார். 

நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித் தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
அந்த மகன்.



தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.



அன்னையர் தினம் எழுதும் போது யதேச்சையாக 100வது பதிவாக அமைந்தது. நடுவில் ஒரு வருட காலங்கள் எதுவும் எழுதவில்லை. மறுபடியும் துவங்கும் காலத்தில் தந்தையர் தினம் பற்றி எழுதும் போது, யதேச்சையாக பார்க்கிறேன். இது 150 தாவது பதிவு.  தந்தையின் ஆசிகளை பெற்ற ஒரு மகிழ்வு...ஒரு நெகிழ்வு.. அனைத்தும் கிடைத்திட்ட ஒரு  திருப்தி...... தங்களின் அன்பான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் காத்திருக்கும் உங்கள் சகோதரி... 
மிக்க நன்றி....

   =======🌼==🌼====🙏====🌼==🌼=======


Saturday, April 14, 2018

நற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....


ஆசைதான் அழிவுக்கு காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. அதிலும் பேராசை பெரு நஷ்டம்  எனும் பழமொழியும் நாம் அனைவரும் உணர்ந்ததே..  இருந்தாலும் எந்த  ஒரு விசயத்திற்கும் நாம் அதை முன்னிறுத்திதான் அழகு பார்த்து ரசித்து விட்டு அழிவு வரும் போது அல்லலுருகிறோம்....

"ஆசைப்படு...உன் தேவையை உணர்ந்து அதற்கு மட்டும் ஆசைப்படு...  தேவையில்லாமல் பேராசை வளர்த்து பெருந்துயரம் அடையாதே ."  என பார்த்திபனுக்கு கீதை சொன்ன கிருஷ்ணபரமாத்மாவிலிருந்து அன்றைய  நற்சான்றோர்கள்  இன்றைய அறிஞர்கள் நம் வீட்டு அனுபவமெய்திய பெரியோர்கள் அனைவரும்  இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.

பெற்ற வரத்தின் மூலம், தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்  விந்தை கண்டு  ஆசையின் அதிதீதமாகிய  பேராசையால் தன் மகளை தங்கமாக்கி  தவறிழைத்தவரின் கதைகள், 

கடவுள் தந்த வரத்தால்  தினம் ஒரு பொன்  முட்டையிட்டு தினசரி வாழ்வை செழிப்பாக்கி கொண்டிருந்த அதிசய வாத்தை,   
அத்தனை முட்டைகளை மொத்தமாக அதன் வயிற்றிலிருந்து எடுத்து விட்டால், பெரிய பணக்காரனாக ஆகி விடலாம் என்ற பேராசை காரணமாய் அதை கொன்று தினசரி வாழ்வையும் இழந்து பரம ஏழையான ஒரு ஏழையின் கதைகள்,  

இப்படி எத்தனையோ அனுபவ கதைகள் கண்டும், கேட்டும்,   நம் ஆசைகளை பேராசைகளாக மாற்றும் முயற்சியில் நாம் இன்னமும் தோற்காமல் வென்று கொண்டேதான்  இருக்கிறோம். 

இந்த பேராசைகள் நாளடைவில் தன்னலத்திற்காக,  தன்னல எண்ணங்களை நமக்குள் விதைத்து பயனில்லாத  மரமாக்கி, அதன்  ராட்சத வேரூன்றி இலை செழித்து, தலை விரித்து ஆடுகின்றன..அந்த சுயநலத்தின் விளைவுகள் பெரும்பான்மையாக குடும்பத்தில் சிதைவுகளுக்கு வழிவகுத்து,  அங்கு நிம்மதியெனும் வசந்தத்தை ஆழ குழியிலிட்டு  புதைத்து விட்டுச் செல்கின்றன... அந்த மரங்களை பயனற்றதாக்கி, வேரோடு களைய நாம் ஆசை விதைகளை  நம்முள் என்றும் தூவாமலிருக்க, நம்மை படைத்த ஆண்டவனை தினமும் பிராத்திப்போமாக... 

இந்த தமிழ் வருட பிறப்பிலிருந்தாவது இந்த பேராசை விதைகளுக்கு  என் மனது இடம் தராமல்  இருக்க வேண்டிக்கொண்டு,, தமிழினிய சீராட்டல்களுடன் வரும் சித்தரை வருட நாளில் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.


வாழ்க தமிழமுதம் ...

வளர்க தமிழுணர்வு... 

வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


படித்ததில் பிடித்ததால் ஒரு சிறு கதையை இங்கு பகிர்ந்து.கொண்டுள்ளேன். 
இதையும் படிக்கும் அனைவருக்கும் மிகவும் நன்றிகள்

ஒரு அருமையான கதை... 

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன் எரிந்துகொண்டிருந்தது  ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று  எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறார்கள் ? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று
கூறினான்.

இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. 
அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
"அதே வீடு தான் " ,
"அதே நெருப்பு தான் " ,
ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
அவனிடம் இல்லை.

"" சிறிது நேரத்தில் வணிகனின்  இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே  ஏன் இப்படி கவலையில்லாம  சிரிக்கிறீர்கள்?  நாங்கள் விற்ற இந்த  வீட்டிற்கு முன்பணம் மட்டுமே  வாங்கியுள்ளோம்.  முழு தொகை இன்னும் வரவில்லை.
"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி  பணத்தை தருவானா என்பது சந்தேகமே”  என்றான். .

 "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி
அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்."தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம்  மீண்டும் அவனை வாட்டியது.

"சில மணித்துளிகள் பின்பு வணிகனின்
  மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.  “தந்தையே கவலை வேண்டாம். இந்த  வீட்டை வாங்கிய மனிதன் மிகவு நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
ஆகையால் நான் பேசியபடி முழு
தொகையை கொடுப்பது தான் நியாயம்
என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
தெரிவித்தான்.

"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.
 கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
 மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
 மீண்டும் காணாமல் போய்விட்டது.
"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று    வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

=========================≠==============

 " இங்கு எதுவுமே மாறவில்லை
" அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",
" இது என்னுடையது என்று நினைக்கும்
  போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
" இது என்னுடையது அல்ல என்று
 நினைக்கும் போது உங்களை சோகம்
 தாக்குவது இல்லை. .

"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
"ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது
  இல்லை. அனைத்துமே அழிய கூடியது.
 "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட   காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது  வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது

======================================

இதைத்தான் அனைத்து மதமும்   சொல்கிறது
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...

படித்தமைக்கு மிக்க நன்றிகள். 


========================================

Sunday, March 18, 2018

படித்ததில் பிடித்தது.

சில வரிகள் கேட்கும் போது மனதில் பதிந்து விடும்.
சில வரிகள்படிக்கும் போது மனதில்  தங்கி விடும். அவ்வகையான வரிகளை படித்ததில் பிடித்ததினால் பதிந்திருக்கிறேன். உங்களுக்கும் இந்தப் பதிவில் படிப்பதனைத்தும் பிடிக்குமென நம்புகிறேன்.

படித்ததற்கு நன்றி.


தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்

மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!


========================================================================

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை

அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..! 

========================================================================
'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது 

உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது

உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை


========================================================================

நோய் வரும் வரை உண்பவன்,

உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!


========================================================================

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல

ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!


========================================================================

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!

உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!


========================================================================

பிச்சை போடுவது கூட சுயநலமே...

புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...


========================================================================

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை

ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.


========================================================================

வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு 

அதற்கு அவமானம் தெரியாது 

விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!


========================================================================

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 

========================================================================
திருமணம்

ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்

ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!


========================================================================

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்

பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்

அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 

========================================================================
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் 

என்ற ஒரு காரணத்திற்காகவே 

நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன


========================================================================  
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 

========================================================================
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட

வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!


========================================================================

பகலில் தூக்கம் வந்தால், 

உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! 

இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!


========================================================================

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது

கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  


========================================================================

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்

எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது

========================================================================
#அழகான வரிகள் பிடித்திருந்தால் பகிரவும்...



Friday, January 19, 2018

தந்தையின் தனித்துவம்....




   இவ்வுலகத்தில்  அன்னை, தந்தை எனவும், மாதா  பிதா  எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை ! தந்தை சொல் மிக்க மந்திரமல்லை! என்று தாயை கோவிலாக்கி  தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்)  தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.

அன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும்  சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி  நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை! ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம்  சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்?

சிறுவயது பருவம் கடந்து  வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும்  அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல்,  அப்பா பேச ஆரம்பித்தாலே  அறிவுரையாக ஏதாவது  (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே!  )  சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில்,   எத்தனை அலட்சியங்களை அவருக்கு  பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும்  பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி.! அந்தளவிற்கு  நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.

( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே!  எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு?  என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே!  இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய  பதிவொன்றை நான் படித்தேன். அதனால்  எழுந்ததுவே இந்தப் பதிவு!. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை!. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றிகள்.)

ஆனால், அனைத்து இல்லங்களிலும்,  இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர்  தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து  அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை.!   அவர்களுக்கெல்லாம்  என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்..! நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு  பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம்!. பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும்  நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.

                     படித்தமைக்கு  நன்றிகள்.




படித்து பிடித்தது.....

*அப்பாவிற்கு அழத்தெரியாது!!*
⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்!*
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது!*
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!*
⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்...
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽  *அந்த பைத்தியத்திற்கு*
*அழவும்தெரியாது!*
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்! 
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே  வெளிப்படுத்தி விடுங்கள்!
 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா   
      மரணமோ!
 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
     ஒருவரின் மரணமோ! 
 உங்களை புரட்டி போட்டு!
     அவர் பாசம் புரிந்து!
     அப்பாவை தேடி ஓடிரும்போது!
 வீட்டில் அப்பா...
      சிரித்துக்கொண்டிருக்கலாம்...
      புகைப்படத்தில்!!
*பாவம்_அவருக்குதான்..*
*அழத்தெரியாதே!!*
படித்தேன்!
பகிர்ந்தேன்!!

Monday, January 1, 2018

ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்





வணக்கம் நட்புறவுகளே!  உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த  வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் அன்பான வணக்கம்.

 நான் வலையுலகில், வலம் வந்து உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாட்கள்( இல்லையில்லை! நீண்ட  வருடம் ) ஆகி  விட்டது.எனினும், இன்னமும் மறவா அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

குடும்ப  சூழல்களினால், வலைப்பக்கம் வர இயலாது போப் விட்டது மன்னிக்கவும்.!  வலையினுள் பிரேவேசிக்க முடியாத நேரங்கள், மிகுந்த வருத்தத்தை அளித்த அந்த நாட்கள் வருடமாக  வளர்ந்து  2018 ன் முதல் நாளை தொட்டு விட்ட தருணத்தில், மீண்டும்  என்  சகோதர சகோதரிகளை  சந்தித்து விட்டதை நினைத்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.


இ்ன்று பிறந்த புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும். அன்பையும், மகிழ்ச்சியையும், மனித நேயங்களையும் குறைவர தந்து, நோய் நொடி இல்லாத இனிதான வாழ்வையும்  மலர செய்யுமாறு,  மலர்ந்து மணம் பரப்ப வேண்டுமென  இறைவனை மனமாற வேண்டிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் என் அன்பான இனிய 2018 ம்ஆண்டின் ஆங்கிலப்புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.




இத்துடன் வாட்சப்பில் வந்து படித்த செய்திகளையும் பகிர்ந்துள்ளேன். படித்தமைக்கு மிக்க நன்றி.


*புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்..*

1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள். அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்
4. இந்துக்களாக இருப்பின், மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோ மீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
       
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும், நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.ஆக, இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ, அக்கம் பக்கத்து குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்  நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள். யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.  
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்பாருங்கள். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்
11. சின்ன விஷயங்களுக்கும் கூட நன்றி சொல்லப் பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கொரு முறை அரை மணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள். அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். அது ஓலா எப்படி புக் செய்வது, யூபர் டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக் கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி முயலுங்கள்.
16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாக,கதை எழுதுவதாக , சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை  பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.    
   
19 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்க இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும், அதனால் இவற்றில் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று "ஆசைப்படுவேன்" .
இவற்றை முயற்சி செய்தால் 2018  மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் தான் இருக்கும்.