Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

Sunday, January 28, 2024

தவத்தின் பலன்.

தவமும், வரமும். 

பூமி தோன்றியவுடன் புத்தம் புதிதாக  தானும் தோன்றிய, பச்சை பசேலென்று இருந்த இயற்கை வனப்புகள் அனைத்தும் காலச்சுழற்சியில் தன்  பொலிவிழந்து  மங்கி காட்சியளித்தது.  என்னதான் கால மாறுதல்கள் அதன் மதிப்பை உணராமல் சீரழிக்க தன் பெருங்கரங்கள் கொண்டு உதவினாலும்,தான் இறைவனால் படைக்கப்பட்ட போது இருந்த தன் அழகுகள் இவ்வாறு மங்குவதற்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை  இயற்கையன்னை கடவுளை சந்திக்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தன் குறைகளைச் சொல்லி அங்கலாய்த்துக் கொண்டது. 

ஒவ்வொரு வீட்டிலும், குடும்பங்கள் சில பல, இடங்களிலும் தமது முந்தைய தலைமுறைகளின் பேச்சுக்கு மதிப்பளித்து இயற்கை சம்பிரதாயங்களை போற்றியபடி வாழ்ந்து வந்தாலும், செய்கைப் பூச்சுக்கள் அந்த இயற்கையின் சாராம்சத்தை அவ்வப்போது ஆசைதீர அள்ளிப் பருகி, தன்  ஆடம்பரங்களையும், அதன் விளைவால் பார்ப்பதற்கு பகட்டாக தோற்றமளித்த பொலிவுகளையும் பிறர் பார்த்து மெச்சும்படிக்கு  தக்க வைத்தபடி வளர்ந்து, கூட்டு குடும்பங்களின் கூட்டுறவான ஆணிவேரை சற்று ஆழமாக  பதம் பார்த்துக் கொண்டும், விருட்சமாக வளர்ந்து பெருகி அசையாதிருக்கும்  தன் சுயநலத்தின் பேரில் காலூன்றியபடியும் நிமிர்ந்து நிற்கவும் தொடங்கின. 

இவ்வாறு முடக்கப்பட்ட இயற்கை அம்சங்களும்,  கடவுளை காணும் போதெல்லாம், தன் மீது காலப்போக்கில்  திணிக்கப்பட்ட செயற்கை கவசத்தை அகற்றுமாறு வேதனையுடன் வேண்டிக் கொண்டது. 

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரு நகரங்களும், கிராமங்களால் சூழப்பட்ட சிறு நகரங்களும், பெரு நகரமாக ஆசை கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் சிறு நகரங்களும், இத்தகைய சூழலில் வளரலாமா, வேண்டாமா என சீட்டுக்குலுக்கி முடிவெடுக்கும் நிலையில் உள்ள பிற பகுதிகளும், பணத்தினால் ஏற்படுத்திக் கொள்ளும்  வசதிகள் ஒன்றையே பிரதானமாக கொண்டு வளர்ந்து, பெருநகரங்கள், கிராமங்களான நகரங்கள் அனைத்தும் வெவ்வேறு பல நாடுகளாகி, தங்களுக்குள் பல பிரிவுகள் ஏற்படுத்திக் கொண்டு, மனிதர்களின் கலாசாரம், பண்பாடு இவற்றை மாற்றியமைப்பதே தன் குறிக்கோளாக்கி, பூமிக்குள்ளேயே பிரிந்து போய் சந்தோஷப்பட்டுக் கொண்டது

இப்படி பிரிந்த பண்பாடுகளில் மக்களின் ஆர்வங்கள் காரணமாக யார் உயர்ந்தவர்கள்/தாழ்ந்தவர்கள் என்ற விகிதாசாரங்களில் பூமி செய்வதறியாது திகைப்புற்று திணறி கொண்டிருந்தது. மனிதர்கள் காலம் தந்த வசதியினால் ஒருவரை ஒருவர் இழிந்தும், பகைத்தும்  கொண்டார்கள். ஏழ்மை, வறுமை பகைமை பேதமை போன்றவைகள் உருவாயின

பணத்துக்காகவும், அது தந்த வசதிகளுக்காகவும் மனிதர்கள் எந்த பாதகங்களையும்,  அஞ்சாமல் செய்தார்கள். இது போக சுயநலங்கள் என்றவொன்று அவர்களின் இயல்புகளாகிப் போயின. தோன்றியவுடன் இயற்கையிலேயே அவர்களுடன் தோன்றிய பாசம், பந்தம், கடமை என்பதெல்லாம் வெறும் புரளி, கற்பனை என்ற மனோபாவங்கள் எளிதாக அவர்களிடம் குடி புகுந்தன. விலங்குகளின் குணங்களோடு மனித மனங்களும் ஒத்துப் போவதை கண்டு விலங்குகளே சில சமயங்களில் அதிர்ச்சியடைந்தன. 

இயற்கை தன் வலுவிழந்த போதும், இயற்கை மாறி கலாசாரங்களின் விதி முறைகள் மாறிய போதும், மனிதர்கள் தன்னையொத்த  மற்றவர்களால் வஞ்சிக்கப்படும் போதெல்லாம் எழுந்த வேதனை ஒலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொஞ்ச கொஞ்சமாக ஒரு" மாய உருவம்" திடகாத்திரமாக வளர்ந்து வந்தது. "அது" தன் நிலையில் என்றும் அழிவில்லாமல்  நிலைத்திருக்க வேண்டி இறைவனை நோக்கி கடுமையான  தவம் செய்ய ஆரம்பித்தது.

 ஆழமான "அதன்" தவத்தைக்கண்ட இறைவன் அதன் முன் காட்சியளித்து "நீ வேண்டும் வரம் என்ன?" என்றார். "முதலில் எனக்கு அழிவில்லாத வரம் வேண்டும். நான் வேதனைகளிலிருந்து பிறந்து வந்திருக்கிறேன்.அதனால் நான் யாரை அண்டி தீண்டினாலும், அவர்கள் வேதனையடைய வேண்டும்." என்றது.  சரி.. ! அவ்வாறே ஆகட்டும்... "என்றபடி வரத்தை தந்து விட்டு இறைவன் மறைந்தார். 

மீண்டும் முன்னைவிட பலத்துடன் "அது" பலகாலம் இறைவனை நோக்கி தவமிருக்கவே வந்த இறைவன் "இப்போது எதற்காக என்னை நினைத்து தவமிருந்தாய்?" எனக் கேட்கவும், "இன்னமும் என் தவங்கள் பூர்த்தியாகவில்லை. வரங்களும் என் விருப்பமான முறையில் கிடைக்கவில்லை." என "அது" குறை கூறவே "இப்போது சரியாக கேட்டு பெற்றுக் கொள்" என இறைவன் கூறவும்  "நான் உனக்கு நிகராக செயல்பட வேண்டும்... உன்னைப் போல் உயிர்களை படைப்பதில் எனக்கு சிறிதும் ஆர்வமில்லை. . ஆனால்  அழித்தலில் என் வஞ்சம் தீரும்படி என்னைக் கண்டு மானிடர் அனைவரும் அஞ்சி நடுக்க வேண்டும். இயற்கையை இழிந்த பாவத்திற்கு, அவர்களுக்கு வரும் இயற்கை முடிவு என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் திணரும் நிலை என்னால் உருவாக்கப்பட வேண்டும். என்ற "அதன்" குரலில் இருந்த காட்டமான வெஞ்சினத்தைக்கண்டு இறைவனே சற்று மன தடுமாற்றத்துடன் கலக்கமுற்றார்.  

"ஏன் இந்த வரம்.? மானிடர்களுக்கு அவரவர் விதிப்படி, நன்மை, தீமைகளை பெற்று வாழும் நிலைதான் அவர்கள் பிறந்தவுடனேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டதே..! மேலும் தவறுகள் செய்யாதவர்களும் தண்டனை அனுபவிப்பது நீதிக்கு புறம்பானதல்லவா...! அப்படியிருக்க இந்த வரத்தை நான் எப்படி உனக்குத் தருவது?" என்றார் இறைவன். 

அப்படியில்லை...! வேதனைகளிடமிருந்து பிறந்த என் நோக்கம் மானிடர்களை துன்புறுத்துவதுதான்.. . அதற்காகத்தான் இப்படி கடுந்தவமிருந்து வருகிறேன். இந்த வரம் நீ தராமல் போனால், இன்னமும் கடுந்தவமியற்றுவேன். எப்படியும் என் தவத்தின் பலனுக்கு பரிசளிக்க நீ வந்துதான் ஆக வேண்டும். . அதுதான் வழக்கமான தவத்தின் நியதி..."என்று ஆக்ரோஷமாக"அது" கூச்சலிட்டது.

" அது" கேட்ட வரங்களை வேறு வழியின்றி தந்த இறைவன்," சரி இனி என்னை அழைக்காதே.. " என்றபடி செல்ல முற்பட்ட போது, தடுத்து நிறுத்தியது "அது" ...   "இரு..இரு... இவ்வளவு பராக்கிரமங்களை பெற்ற எனக்கு ஒரு நல்ல பெயர் இல்லை பார்...அதையும் உன் வாயால் வைத்து அழைத்து விடு... இந்த வரத்தையும் தந்து விட்டு போ..." என்று வேண்டவும், "இதோ பார்....உன் தவத்தை மெச்சி உனக்கு வேண்டும் வரங்களை தந்தாகி விட்டது. இதுவும் என்னையும் மீறி தன்னிச்சையாக நடைபெற்ற செயல். இதில் உனக்கென ஒரு பெயர் வைத்து அழைக்கும் மன நிலையில் நான் இல்லை. உன் விதிப்படி உனக்கான பெயரை நீ விரும்பி நாடும் மானிடர்களே வைத்துக் கொள்வார்கள். இனி நீ அழைத்தாலும், உன்னால் சிரமப்பட்டு மன/உடல் நோகும் மானிடர்களே அழைத்தாலும் நான் வருவது சிரமமே.... ஏனெனில் இது விதியின் உக்கிர பிரவேசம்.  இந்த பிரவேசத்தில், பிரபஞ்சத்தில் அதன் வீரியங்களை யாராலும் தடுக்க இயலாது. உன் இந்த தவங்களும், வரங்களும் அது தீர்மானித்தவை. இதற்கு ஒரு முடிவென்பதையும் அதன் நேரம் வரும் போது அதுவேதான் தீர்மானிக்க வேண்டும். அப்போது அதன் அழைப்பில் பக்கபலமாக நான் அனைவரையும் காக்க அதனுடன் வருவேன். அப்போது நீ பெற்ற வரங்கள் பலனற்றுப் போகலாம். உன் பராகிரமங்கள்  தூள் தூளாகிப் போகலாம். எனவே இனி என்னை மறுபடியும் அழைக்கும் முயற்சியில் அடிக்கடி இறங்காதே. . " என்று சற்று கோபத்துடன் சொன்ன  இறைவன்  அடுத்த நொடியில் மறைந்தார். 

தவத்தினால் பெற்ற வரங்களை விதியின் வருகையை ஒரு பக்கம் எதிர்பார்த்தபடி, செயலாற்ற தொடங்கியது" அது."  அதன் பிடியில் அதன் வேண்டுதல்படி சிக்கி மானிடர்கள் மீள வழியின்றி தவித்தனர். செய்த, வினைகள், செய்யப்படுகிற வினைகள் செய்யப் போகும் வினைகளின் விளைவுகள்  இப்படி எதற்கும் அஞ்சாத மானிடர்கள், இதற்கு அஞ்சி ஒளிந்து கொண்டனர். "அது"வும்  இறைவன் கூற்றுப்படி தனக்கு மனிதர்களாலேயே ஒரு பெயர் கிடைத்த மகிழ்வில், தன் அரக்கத்தனமான செயலின் விபரீதத்தை பற்றி சிறிதும் கவலையில்லாமல், "அலை, அலையாக "அதனுள் எழுந்த  சந்தோஷங்களில் மூழ்கியபடி பூமியில் உலா வந்தது. 

 நாமும் இறைவன் வரவு குறித்தும், "அது" முற்றிலும் அழியப்போகும் தருணம் குறித்தும் இறைவனை மனமுருக சிந்தனையில் இருத்தி வேண்டிக் கொண்டேயிருப்போம். எத்தனை தூரம் "அவனால்" படைக்கப்பட்ட மானிடர்கள் துன்புறுவதை பொறுப்பான் "அவன்." 

அந்த விதியும், "அவன்" மனவருத்தம் உணர்ந்து, அவன் சொல் கேட்டு விரைவில் மனம் மாறி அவனுடன் இணைந்து வரும். நம்புவோம். 🙏. 


மனதின் வேதனைகளில் இந்தப் பதிவை எப்போதோ இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எழுதினேன். இதில் ஏகப்பட்ட  மாற்றங்கள் இப்போது வந்திருக்கலாம். இப்போது இந்த நோயைப் பற்றிய பயங்கள் மக்களுக்கு பழகி விட்டதென்றாலும், அது மறுபடி, மறுபடி எழுந்து வந்து "நான் இன்னமும் இருக்கிறேன்" என்றபடி  பயமுறுத்திப் போகிறது. நெருக்கடியான சூழல்களில், மக்கள் கூட்டம் அலை மோதும் பிரதேச பகுதிகளில் மீண்டும் முகம் மூடி அலைய வைக்கிறது. தோன்றியதிலிருந்தே இயல்பாக வரும் சாதாரண ஜலதோஷங்கள் கூட நீடித்து பலவிதமான  தொந்தரவுகளைத் தந்தபடி அதன் பெயரை நினைத்து தடுமாற வைக்கிறது. ஆனாலும், ஆண்டவன் மேல் நாம் எந்நாளும் கொண்டிருக்கும் நம்பிக்கையை  தவிர்க்காமல்  இருந்தால் நல்லது. 

இந்தப் பதிவை படித்து அருமையான இந்தப்பாடலை கேட்பவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் .. 🙏... 

Monday, January 22, 2024

ஸ்ரீராம பக்தி.

ஸ்ரீராம ஜெயம். 


 *Namaskar.*                               Sending the rare portrait of SriRama pattabhishekam collected from AYODHYA. We request you to forward this to as many people as you can before Ram Lalla pran prathishtai on 22nd Jan 2024  Please do this as a mission to circulate the blessings of Lord Hanuman and positive vibrations in the society.                                 *Jai Sriram*

அன்பின் மறு உருவமாக 

விளங்கியவனே ஸ்ரீராமா...! 🙏. 

அருளின் திரு உதயமாக

அவதரித்தவனே ஸ்ரீராமா...!🙏. 

கருணையின் பிரதிபிம்பமாக

திகழ்ந்தவனே ஸ்ரீராமா...! 🙏. 

கதிரவனின் வழித்தோன்றலாக

தோன்றி,ஆதவனைபெருமையுற 

வைத்தவனே ஸ்ரீராமா...! 🙏. 

பெற்றோருக்கு மதிப்பளித்து

மகிழ்வுற்றவனே ஸ்ரீராமா...!🙏 

ஒரு சொல்,ஒரு தாரமே 

வாழ்வில் நிலைத்திருக்குமென 

நிரூபித்தவனே ஸ்ரீராமா...! 🙏.

நட்பின் இலக்கணத்தோடு

நன்மைகள் பலவும்

புரிந்தவனே..! ஸ்ரீராமா🙏. 

சத்தியத்தின் உதாரணமாக 

வாழ்ந்து நின்றவனே ஸ்ரீராமா.!🙏.

அநீதியை அன்பாலும் 

அழிக்கலாமென வென்று

காட்டியவனே ஸ்ரீராமா...! 🙏. 

சாந்தத்தின் முழு அளவென

பிரதிபலித்தவனே ஸ்ரீராமா..!🙏.

பொறுமையின் சிகரமாக 

பூமியில் கோலோச்சி

வீற்றிருந்தவனே ஸ்ரீராமா...!🙏. 

தர்மத்தின் பாதையை உலகிற்கு

எடுத்துரைத்தவனே ஸ்ரீராமா...!🙏.

ராம், ராம், ராம், ராம், ராம், ராம், 

என்ற புனிதமான சொல்லுடன், 

எங்களுடன் இயைந்து 

எங்கள் உள்ளொளியாய் 

கலந்தவனே ஸ்ரீராமா...! 🙏.🙏.🙏. 


நன்றி
கூகுள். 

உன் பாத கமலங்களை 

உள்ளன்போடு மறவாது 

போற்றித் துதிக்கும் பக்தியை

ஆனந்த பரவசமாக்கி

அனுபவிக்கும் ஸ்ரீராமபக்த 

ஆஞ்சநேயரின்ஆசிகளோடு 

எங்களுக்கும் உன் அருளமுத 

பார்வையிலான பக்தியை

பருக தந்துவிடு ஸ்ரீராமா...!🙏. 


ஸ்ரீராம ஜெயம்...ஸ்ரீராம ஜெயம்...

ஸ்ரீராம ஜெயம்...ஸ்ரீராம ஜெயம்... 

ஸ்ரீராம ஜெயம்... ஸ்ரீராம ஜெயம்...


இன்றைய நன்னாளில் வாட்சப்பில் குறுஞ்செய்தியுடன் வந்த ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துடன், என் மனதில் தோன்றியவைகளையும் எழுத்துருவாக்கி பதிந்திடத் தந்த ஸ்ரீராமபிரானின் பாதங்களை பணிவுடன் பற்றி வணங்குகிறேன். .

பதிவை படித்த என் சகோதர சகோதரிகளுக்கு  என் அன்பான நன்றிகள். 

ஜெய்ஸ்ரீராம்.

ஜெயராம். 

Wednesday, April 7, 2021

விரும்பும் வேண்டுதல்.

பல்லாயிரம்  ஏன்.. அதற்கும் மேலாக பல கோடி செயல்கள் தன்னால்தான் நடக்கிறது என்று இந்த மானிடம் தற்பெருமை கொண்டு தறிகெட்டு சுய மகிழ்ச்சியில் இல்லை, பிறர் புகழ்ச்சியில் பாடி, ஆடி மகிழ்ந்திருந்தாலும், உலகில் இரண்டு விஷயங்கள் (பிறப்பு, இறப்பு) கண்டிப்பாக இறைவன் என்றொருவன் நம்மை (மானுடப் பிறவியை) ஆட்டுவிக்கும் கலையில் தேர்ச்சிப் பெற்று நம்முடனேயே இருப்பதை உணர்த்தி சொல்கிறது. 

மனம், பணம், பயிற்சி, முயற்சி, பெருமை, சிறுமை, வாழ்வு. தாழ்வு, எல்லாவற்றிலும் நம்மை பிணைத்தெடுக்கும் நூல் "அவன்" கையில்தான் உள்ளது. அதனைக் கொண்டு பொம்மைகளாகிய நம்மை ஆட்டி "அவன்" பெறும் மகிழ்ச்சி "அவனுக்கு" மட்டுமே உரித்தானது. 

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். 

செய்ய முடியாதவன் போதிக்கிறான். 

இது இன்றைக்கு நான் படித்த வாசகம். இதில் முடிந்தவனின் / முடியாதவனின், சாதிப்பதும்  போதிப்பதும் "அவன்" யோசனையில் வந்ததுதானே....! ஆக "அவனின்றி ஓர் அணுவும் அசையாது." 

ஆகா..! இவர்கள் இன்று போதிக்க ஆரம்பித்து விட்டார்களே..!  "ரம்பத்தை" எப்போதும் கையில் வைத்திருக்கும் இவர்களுக்கு இன்று "ரொம்பவும்" முத்தி விட்டதா....? என நீங்கள் எண்ணும் முன்,  உண்மையை சொல்லி விடுகிறேன். இன்றுதான் இந்தப்பதிவுக்கு நாள் நன்றாக இருப்பதாக  என் ஆஸ்தான ஜோதிடர் (அதுவும்" அவன்"தான்) சொன்னார்.  (அதனால்தான் இந்த அவசரப் பதிவும், அதன் விளைவாய்  கூடவே தொத்திக் கொண்ட என்னுடைய முந்தைய பதிவும்.) ஏனென்றால்் என்னை இந்த நாளில்  உலகத்தில் தான் விளையாடும் ஒரு பொம்மையாக உருவாக்கியவன் "அவன்"தானே....! 

இதோ என் முந்தைய பதிவு. இதில் "என்"என்ற வார்த்தையில் அகங்காரம் தெரிகிறது.  மன்னிக்கவும். அதனால் அவன் எழுத வைத்தப் பதிவு என்றே  இதனை குறிப்பிடுகிறேன். 


முருகா, 
உன் ஒரு திரு முகத்தின்
இரு விழிகள்என்னைக் 
கொஞ்சம் பார்த்தும்
பாராமலுமிருக்க
மற்ற இரு முகத்தின்,
இரு விழிகளின்,
ஓரப்பார்வை
என்னைச்சிறிது
தொட்டும்
தொடாமலுமிருக்க
தொடர்ந்திருக்கும்,
மூன்று முகங்களின் 
முழுப்பார்வையும்,
முழு திக்கிலும்
பரவி விரிந்திடவே,
முயற்சிக்கும் போதினிலும்
முருகா!
முழுமதியான உன் முகத்தில்,
மெளனமாக 
உன் இதழ் சிந்தும்,
மெளனப் புன்முறுவல்
என் வாய் பேசாத,
மெளனத்தை கலைத்து 
உன்னிடமிருந்துமறு
மொழியொன்றையும்
தினம் தினம் 
எதிர்பார்க்கின்றதே!


 பறவையாய் நான் 
பிறந்திருந்தாலும்என்
பறக்கும் திறனினால்
பந்தென கிளம்பி,
உன்னைச்சுற்றும் 
சில பறவைகளோடு,
உள்ளம் களிக்க 
உன்னைத் தொட்டுஎன்
சிறகுகளால்உனை 
தினம் வருடி,
சிறகடித்துவானில் 
வட்டமிடும் பிற
பறவைகளோடுஒரு 
பறவையாய்உன்னை
பலகாலம் பரவசமாய் சுற்றி 
வந்திருபபேன்.


 

மலர்களாய்நான் 
மலர்ந்திருந்தாலும்,
மணம் வீசும் அச்சிறு 
பொழுதில்உன்
மார் மீதும்தோள் மீதும்
மணம் மிகும்,
மலர் மாலைகளாக நான் 
மாறி மணந்திருக்க
மகிழ்ந்திருப்பேன்.
வசமுள்ள மனதுடனே,  
உன்னருளினால்,
வாடாத மல்லியாய் என்றும்நான்
வாழும் வரை வசித்திருப்பேன்


மேகமாய்நான் 
ஊர்ந்திருந்தாலும்
மோகமுற்ற மனதுடனேகடும்
வேகமாய் அவ்விடம் விட்டு 
நகராது,
வேறிடம் ஒன்றிருப்பதையும் அறியாது,
ஏகமாய் உனை விரும்பும் 
விருப்பத்துடனே,
எத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,
தாவி உன் பூ முகம் 
அணைந்திடவே,
தங்கு தடையில்லாநீர் 
தாரையாகியிருப்பேன்.



வான் நிலவாய் நான் 
நீ(வாழ்)ந்தி(யி)ருந்தாலும்,
நீக்கமுற நிறைந்திருக்கும்
என்
தண்ணொளியால்
உந்தன் தங்கத்
தளிர் வதனம் கண்டு 
மனமுவந்து,
இரவின் பொழுதெல்லாம்
உன்னை
இரசித்துகரையாமல்
கரைந்திடவும்,
இமையோன் மைந்தா
உன்னிடம் என்
இமை மூடா வரம் கேட்டுப் 
பெற்றிடவும்,
இயன்றவரை 
முயன்றிருப்பேன்


உமையவளின் அருமைந்தா!
உன்னைச் சுற்றிச் 
சூழ்ந்திருக்கும்மற்ற
மரங்களினிடையே
ஒரு மரமாக
மண்ணோடு நான் 
நின்றிருந்தாலும்என்
கிளைகள் ஆடும் 
அவ்வேளையில்,
கிளுகிளுக்கும் மணியோசை போல்,
காற்றுடன் காற்றாக 
நான் கலந்துஉன்
காதோடு தினம் உறவாடி
என்னை
"காக்ககாக்க!," என்றே 
துதி பாடிநின்
கழலடியை மறவாதிருக்க 
பண் பாடிஎன்
மனதின்எண்ணமெல்லாம்இந்த
மால் மருகனை விட்டகலாது, என்றேனும் ஒருநாளில்,
மண்ணின் மடியில் 
சாய்ந்தாலும்,
மமதையின்றி வீ்ழ்ந்திடும் 
வரத்தை,
கண் மூடிமனம் கசிந்து நான் பெற்றிடவே,
கண்ணின் கருமணியாம்
எந்தன்
கந்தனை வேண்டியபடி
நின்றபடியிருந்தாலும்,
காலமெல்லாம் 
களித்திருப்பேன்.


ஆனால், 
இவற்றிலொன்றிலும்
நான் பிறவாமல்,
இந்த மண்ணுலகின் 
மாந்தரென்று,
பிறந்து விட்ட ஒரு 
காரணத்தால்,
பிறவியின் பயன் தொட்டு
உன்னைத்
தொடவும் நேரம்  
பிறக்கவில்லை!
தொடரவும்வழி 
அமையவில்லைஎன்னைத்
தொடர்ந்து வரும் 
பாபங்களினால்,
கடமையெனும் கயிறானது
இறுகவே
கட்டி விட்டது கண்களையும்,
கைகால்களையும்
தற்சமயம் நின் கருணைஅக்
கட்டவிழ்த்து போனதில்
உந்தன்
காட்சி கிடைத்திட
என் கவலை அகன்றிட,
கந்தாஎனை நோக்கி 
இனியேனும்மனம்
களிப்புற கருணைக்கண் 
திறவாய்.!
   என் சிந்தனை என்றென்றும்,
உன்னிடம் 
சிரத்தையோடிருக்க,
கந்தனேஉன் சிந்தைதனில்நீ
எந்தனையும்சற்று 
நினைத்திருக்க, வேண்டுமென
வந்தனையோடு 
துதிக்கின்றேன்.! அவ்
வரம் வேண்டி தவிக்கின்றேன்
என்
மரணம் என்னை தொடும் 
வரைஉன்னை
மறவாத வரம் தந்தருள 
வேண்டுகின்றேன்.! 
மறவாது அவ்வரத்தை
தந்திடுவாய் என,
மனமாற வணங்கிப் 
போற்றுகின்றேன்.!!!!
மனதாற துதித்து 
யாசிக்கின்றேன்.!!!!

இதைப் இப்பிறவியில் "அவன்" தந்தருள வேண்டுமென இந்நாளில் மட்டுமல்ல.. . . எந்நாளும் வேண்டிக் கொள்கிறேன். 🙏. மனிதபிறவிக்கென்றே தோன்றும் சுயநல எண்ணங்கள் எனக்குள்ளும் எழுவது இயல்புதானே.. ! இன்று இதை அன்போடு படிக்கும் வலைத்தள உறவுகளின் பண்பான உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 🙏. 

Thursday, April 26, 2018

மஹாபாரதம் உணர்த்திய உண்மைகள்....


கீதையில்  கடமையை செய்..... பலனை.எதிர்பாராதே!  என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்தமா... கூடவே இரு மனங்களையும், அதாவது ஒரு செயலை செய்யும் பக்குவமான உள்ளத்தையும், அந்த செயலை செய்தால் ஏதேனும் திருப்பங்கள் உண்டாகுமா எனறு எதிர் நோக்கும் உள்ளத்தையும் ஒருங்கே தந்து விட்டான் நம்மை படைத்த ஆண்டவன். ..  ஆததால் எந்த ஒரு செயலையும் கடமையாக மட்டுமே எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மிடம் உள்ளதா என்பதே ஒரு கேள்விக்குறி?. கடமையை செய்யும் போதே மனசு அடுத்ததாக பலன் ஏதாவது இருக்கிறதா,.... இல்லையா......என்ற சிந்திக்க ஆரம்பிக்கும் போதே  அச்செயல் கடனாகி விடுகிறது.

நமக்கென உண்டாகி இருப்பது..... இதனை நாம் செய்தால்தான் இது பரிபூரணம் அடைந்து சிறக்கும் என உணர்ந்து செய்யும் செயலே கடமை.

இதை எதற்காக  நாம் செய்யவேண்டும்? இந்தளவிற்கு இதில் கவனம் செலுத்தினால் போதும்... என்று மனமொவ்வாமல்  சுவாரஸ்யமின்றி செய்யும் செயலே கடன்.  என்பது என் கருத்து.

அவ்வாறு கடமையாக விரும்பியும், கடனாக வெறுத்து ஒதுக்கியும் இராமல் இறைவன் விட்ட வழி எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும்.. என்று எதிலும் கவனமின்றி      பற்றற்று இருப்பதும் பலன் ஒன்றும் நல்காது என்கிறது கீதை.

இப்பிறப்பில் உனக்கு விதித்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதில் இன்பங்கள், மகிழ்வுகள் சந்தோஷங்கள்  இப்படி எது வந்தாலும் அதையும்,  துன்பங்கள் துக்கங்கள் துயரங்கள்  எது வரினும் அதையும் ஒன்றாகவே பாவித்து  அப்போதும் உன் கடமையின்று வழுவாது அதற்குண்டான  பலனையும் எதிர்பாராது, அமைதியாக உன் செயலை செய்து கொண்டே இரு.  அதுதான் சிறந்த பற்றின்மை என்கிறது கீதாச்சாரம்.

இவ்வாறாக நிறைய ஆன்றோர், சான்றோர் உலகில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இதிகாசங்களில் ஒன்றான மஹா பாரத காலத்தில் அக்கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணங்களில் சிறப்பானவர்களாக இருந்தார்கள். ஆனால் அவரவர்  குணாதிசயங்களிலிருந்து மாறுபடாமலும் இருந்து  தம்முடைய கொள்கைகளை நிறைவேற்றி உள்ளார்கள்.ஒவ்வொருவருடனும்  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒவ்வொரு காலகட்டத்தில் அவர்களுடன் விவாதித்து அவரவர்களின் கர்ம வினைகளை உணரும்படி செய்து அருள் பாலித்திருக்கிறார். அவர்களும் நடத்துவிப்பவனின் எண்ணப்படி நடப்பது நடந்துதான் தீரும். இடையில் நாம் ஒரு கருவிதான் என்ற சரணாகதி மனப்பான்மையுடன் வாழ்ந்து நமக்கு ஒரு பாடமாக இருந்திருக்கிறார்கள். அப்படி தெய்வத்தின் அருகாமையில் அவன் நிழலில் வாழ்ந்தவர்களாகிய அவர்களே ஏகத்திற்கும்  துக்கங்களையும், சங்கடங்களையும், சந்தித்திருக்கும் போது சாதரண மனிதர்களாகிய நாமெல்லாம் எம்மாத்திரம்..... நாம் வாழும் இந்த வாழ்விலும் ஒரு கணத்தில்  மாறி மாறி வரும் சந்தோஷம், துயரங்கள் போன்றவற்றை ஒரே நிலையில் நிறுத்தி சமமாக பாவிக்கும் மனோதிடத்தை தந்தருள வேண்டும் என மனமுருகி ஸ்ரீ கிருஷ்ணரின் பாதம் பற்றி பிரார்த்திக்கிறேன்.பாரத போரின் போது பார்த்திபனின் மனசஞ்சலம்  போக்குவதற்காக, அவன் சமமான மனநிலை எய்துவதற்காக அவன் அருகாமையிலிருந்து, கீதோபதேசம்  செய்தவர், நல் வழிகளை எடுத்துச் சொல்லி காண்டீபனை ஒரு கர்ம வீரனாய் ஆக்கியவர், இப்போது நம்முடைய மனதிலிருந்தபடியே  இதமாக எடுத்துக்கூறி நம் மன சஞ்சலங்களையும் களைவார் என்று நம்புவோம்..

          அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்...

இவ்வாறு அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்  என்று சொல்லும் போது படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் செய்த நற்செயல்களை மட்டுந்தான் அவனிடம் சமர்பிக்க வேண்டும். அது பன்மடங்காகப் பெருகி நம்மையே வந்தடையும். மாறாக அறிந்தறியாமல் செய்யும் தவறானதொரு செயலின் விளைவையும், அவனிடம் அர்ப்பணித்தால்  அது பன்மடங்குக்கும் மேலாக பெருகி நம்மிடமே சரணடைந்து விடும். ஏனெனில் நம்முள் இருப்பவனும், நம்மை நன்குணர்ந்தவனும் அவனல்லவா... ..................................................................................................................................... ................... .......

பின் வரும் வாசகங்களை படிக்க நேர்ந்தது. அதை படித்துணரும் போது என் மனதில் தோன்றியதையும் பக்தியுடன் எழுதி, படித்த வாசகங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னுடன் படிப்பீர்கள் என  நம்புகிறேன்.
படிப்பதற்கும்   படித்ததற்கும்  மிக்க நன்றி.


மகாபாரதம் உணர்த்தும்.   உண்மைகள்....
********************************************
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
-------------------------------
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
- கங்கை மைந்தானாய்..
--------------------------------
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....
------------------------------
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
- சகுனியாய்...
------------------------------
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...
-------------------------------
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....
------------------------------
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...
------------------------------
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...
------------------------------
கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...
------------------------------
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..
------------------------------
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....
------------------------------
பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....
------------------------------
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....
------------------------------
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..
------------------------------
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ
------------------------------
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....
------------------------------
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...

Wednesday, January 31, 2018

முருகனின் திருக்கல்யாண வைபோகம்..



ஓம் விக்கினேஷ்வராய  நமஹ...



அனைத்துலகங்களையும் தன்னுள்ளே  அடக்கி , ஒவ்வொரு ஜீவராசியும் செய்யும் செயல்களுக்கு அருள்பாலித்து வரும் கணேஷமூர்த்திக்கு முதல் வணக்கம்.


பாலும் தெளிதேனும்  பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்.
கோலம் செய் துங்கக்கரிமுகத்து தூமணியே! நீ
எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.

என பாடிய ஒளவைக்கு அருள்  செய்த  வேழ முகத்தோனே.
வேலவனின் புகழ் பாட உன் துணை வேண்டினேன்.
தெய்வயானையுடன் வள்ளியை கரம் பிடித்த உன்
இளையோனின்  கதையை செப்பிட வந்தேன். உந்தன்.
இன்னருளாலே வேண்டிய வடிவில் தந்தருள்வாய்!


முருகன், குமரன் அழகன், ஆறுமுகத்தவன் என்று பெற்றவர்களாலும். தேவாதி தேவர்களாலும்.,செல்லமாக அழைத்து வளர்ந்து வந்த வேலவன் திருமண பருவத்தை  வந்தடைந்தார். அதற்கு முன் அவர்  எடுத்த அவதார நோக்கம் பூர்த்தியடைய வேண்டுமே!  அதற்காகத்தானே தேவாதி தேவர்களெல்லாம் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.


பிரம்மனை நோக்கி தவமிருந்த சூரபத்மன் என்ற அசுரன் தானும், தன்னுடன் பிறந்தவர்களும் சிவபெருமானின் புதல்வனால் மட்டுந்தான் அழிய வேண்டுமென வரத்தை பெற்றுக்கொண்டு, அனைவரையும் துன்புறுத்தியபடி மூவுலகங்களையும், கட்டி ஆண்டு கொண்டிருந்தான். விண்ணுலகத்திலிருக்கும் தேவாதி தேவர்களெல்லாம், இதற்கு என்ன விமோசனம் என்று யோசித்தபடியே, அசுரன் தரும் துன்பங்களையெல்லாம் பொறுத்தபடி வாழ்வை நகர்த்தி கொண்டிருந்தார்கள். எதற்கும் ஒரு நேரம் காலம் என்ற ஒன்று வரவேண்டுமே! அதன்படி அனைவரும் ஒருநாள் ஒன்று கூடி சிவனாரின் புதல்வனால்தான் நமக்கு நல்லவழி பிறக்கும்! ஆனால் சிவனின் கடும் தவத்தை எப்படி கலைத்து நாம் படும் துன்பங்களை எடுத்துரைப்பது? என்று செய்வதறியாது பேசிக் கொண்டிருக்கும்  போது, அங்கு வந்த நாரதரின் யோசனையின் பேரில்  கடும் யோக தவத்திலிருக்கும் சிவபெருமானின் மேல் மன்மதனைக் கொண்டு அம்பெய்தி அவர் தவத்தை கலைக்க செய்யவே, கோபம் கொண்ட சிவபெருமானார் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீப்பொறியினால், மன்மதன் எரிந்து சாம்பலானான். எப்போதுமே முக்காலமும் உணர்ந்த நாரதர் கலகம் தீமை ஏதும் விளைவிக்காமல் நன்மையில்தான் முடியும்!. அதன்படி மன்மதனை சுட்டெரித்த அந்த தீப்பொறியானது  முற்றிலும் அடங்காது சுற்றி வரவே அதை வாயு பகவானை அவருடைய சக்தியால் சரவண பொய்கையில் கொண்டு சேர்க்கும்படி நாரதர் கூறினார்.  தடாகத்தில் பூத்திருந்த ஆறு தாமரை மலர்களில் வந்து சரணடைந்த அந்த தீப்பொறி ஆறு அழகிய குழந்தைகளாக உருமாறியது. அந்த குழந்தைகளைக் கண்ட தேவர்கள் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தார்கள். சிவனின்  குழந்தைகளாக ஒன்றில்லாமல் ஆறு குழந்தைகள் உருவாகி விட்டனர். அறுவரில் ஒன்று நம் இன்னல்களை தீர்த்துவிடுமென்று மகிழ்வடைந்தார்கள். ஆறுவரும் ஒன்றாகும் விந்தை கூடிய விரைவில் நடக்குமென்பதை அவர்கள் அறியார். ஆனால் அதே சமயம் தங்கள் நன்மைக்காக எரிந்து சாம்பலான மன்மதனை எழுப்பித்தரும்படி கருணை வடிவான அன்னை உமா மகேஷ்வரியை நோக்கி அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள்.

 
 

அப்போது அங்கு கோபம் தணிந்து அன்னை உமா தேவியுடன் எழுந்தருளிய சிவபெருமானும், சாந்தமான முகத்துடன் தேவர்களை பார்த்து" இனி கவலையேதும் வேண்டாம்.! தாமரை மலரில் அவதரித்த என் புதல்வன் சூரபத்பனை அழித்து  உங்களை இன்னல்களிலிருந்து விடுவிக்கும் நாள் நெருங்கி விட்டது. உங்கள் விருப்பப்படி மன்மதனை முன்னிலும் சக்தி வாய்ந்தவனாக எழுப்பித்தருகிறேன்.''  என்று ஆசிர்வதித்தார். மீண்டும் உயிர்பித்து எழுந்த மன்மதன் சிவனையும் அன்னையையும் கண்ட மகிழ்வுடன் தான் செய்த பிழை பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டான்.  அதன் பின் கார்த்திகை பெண்கள் அறுவரை தாமரை மலர்களில் அவதரித்த அழகான அக்குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளா்த்து வரும்படி பணித்து விட்டு உமையும் சிவ பெருமானுடன் கயிலைக்கு ஏகினார். குழந்தைகள் வளர்ந்து வரும் நாளில் ஒரு கார்த்திகை தினத்தன்று வளர்ந்து வரும் தன் குழந்தைகளின் நலனைக் காண வந்த அன்னை உமா தேவி அனைவரையும் ஒரு சேர தன்னுடன் அணைத்துக் கொண்டதும் ஒருடலும், ஆறுமுகமும் கொண்ட ஒரே குழந்தையாக மாறி ஆறுமுகன் என்று பெயரையும் பெற்றார் சிவகுமாரர்.





இவ்வாறாக சிவனாரின் குமாரர் அன்னையின் அன்போடும், அருளோடும் வளர்ந்து பால்ய பருவத்திற்கே உரித்தான குறும்புகளை பெற்றவரும் மற்றவரும் போற்றும்படி செய்து அனைவரையும் மகிழ்வித்து தனக்கென்று ஒரிடம் தன் பக்தர்கள் என்ற ரீதியில் வளர்ந்து வாலிப வயதையடைந்தார். அசுரர்களை போரிட்டு வெல்வதற்காக, படைகளை சிறந்த முறையில் நடத்திச்செல்லும் வீரராக இளமை பருவத்தையடைந்ததும், தந்தையின் ஆஞ்கையை சிரமேற்க்கொண்டவராய், தாயின் சக்தி வேலினையும் பெற்றுக் கொண்டு அசுரனை வெற்றிவாகை சூடிட போருக்கு கிளம்பினார். தேவர்கள் பூக்களை பொழிந்து, "வெற்றியோடு திரும்பி வா குமரா! இந்த நாளுக்காகத்தான் நாங்கள் தவமிருக்கிறோம்.' என்று ஆசிர்வதித்து அனுப்ப சற்றேனும் பயமின்றி ஜெயம் கொண்ட மனதோடு படைகளம் நோக்கிச் சென்றான் மாயோனின் மருகன்.


அசுர்களையெல்லாம்  சம்ஹரிகரித்த கையோடு,  மாயையால் பல வடிவெடுத்துக் கொண்டு போராடிய சூரபத்பனை, அவன் மா மரமாய் மாறிய போது தாயின் சக்தி வேல் கொண்டு அம்மரத்தை இரு கூறாக்கி,  ஒரு புறத்தை மயிலாக்கி அதை தன் வாகனமாயும், மற்றொன்றை சேவலாக்கி அதை தன் கொடியிலும் இருக்கச் செய்தார். அதனால் மயில் வாகனார், சேவற்கொடியுடையோன் என்று வானவர் புகழ் பாட  வெற்றியுடன் படைகளம் விட்டு திரும்பினார் முருகப் பெருமான். ஒருவழியாக அசுரரின் கொடுமைகளிலிருந்து மீண்ட தேவர்களெல்லாம் தத்தம் ராஜ்ஜியங்களை அடைந்து முருகவேளின் பெருமைகளை பற்றி துதி பாடியவாறு  சந்தோஸமாக இருந்தார்கள். நம் துன்பங்களை முற்றிலும் களைந்த செந்தில் நாதனுக்கு பரிசாக தேவர்களின் அரசனான தேவந்திரனின் மகளை திருமணம் செய்வித்தால் பொருத்தமாக இருக்கும்  என்ற தேவ முனி நாரதரின் ஆலோசனைக்கு சம்மதம் தெரிவித்த தேவேந்திரன் மகிழ்ச்சியுடன் சிவபெருமானை சந்தித்து திருமண  விசயத்தை  பற்றி கூறி சம்மதம் வாங்க கைலாயம் புறப்பட்டுச் சென்றார்.


சிவபெருமானின் ஒரு அம்சம்தான் ஆடல் கலை. அத்தகைய  ஆடல் கலையை ஒரு நாள் மிகுந்த ரசிப்போடு ஆடிக் கொண்டிருந்த சிவபெருமானின் ஆனந்த நடனத்தை தாயார் உமா தேவியும், முப்பத்து முக்கோடி தேவர்களும், பிரம்மா, மஹாவிஷ்ணு, சப்தரிஷிகள்,  நந்திஹேஷ்வரர் உட்பட அனைவரும் கண்டுகளித்து ரசித்து கொண்டிருந்த போது, மகா விஷ்ணுவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் இரண்டு துளி வெளி வந்தது. அதை அருகிலிருக்கும் மஹா லெட்சுமி தன் உள்ளங்கையில் ஏந்த திருமாலின் அருளாலும், அன்னையின் சக்தியினாலும் அந்த நீர்த்துளிகள் அழகிய இரு பெண் மகவுகளாக உருப் பெற்றனர். அவர்கள் இருவருக்கும் அமுதவல்லி, சுந்தரவல்லி என பெயரிட்டு திருமாலும், மஹா லட்சுமியும் வளர்த்து வந்தனர்.அக் குழந்தைகள்  யோக மார்கத்துடன் வளர்ந்துவரும் போது  தம் இருவருக்கும் கணவராக முருகப் பெருமான்தான் அமைய வேண்டுமென ஒரு மனதாக முருகனை நோக்கி தவமிருந்தார்கள். முருகரும் அவர்கள் முன் தோன்றி" யாம் அரக்கர்களை அழித்து வதம் செய்த பின் உங்கள் எண்ணம் ஈடேறும். ஆனால், அமுதவல்லி விண்ணுலகத்தில் தேவந்திரனின் மகளாக தோன்றி அங்கு வளர்ந்து வர வேண்டும். சுந்தரவல்லி மண்ணுலகத்தில் வேடர்குல தலைவனான நம்பிராஜனுக்கு  மகளாக தோன்றி அங்கு  வளர்ந்து வர வேண்டும். உரிய காலங்களில்  உங்கள் இருவரையும் நான் வந்து மணந்து கொள்கிறேன்.' என்றருளி மறைந்தார்.


அதன்படி தேவந்திரனின் மகளாக,  தேவர்களுக்கெல்லாம் பெரும் புகழ் சேர்க்கும்படியாக தேவலோகத்திலுள்ள நீலோத்பவ தாடகத்தில்அந்த மலர்களிடையே ஒரு மலராக குழந்தை அமுதவல்லி ஜனித்தாள். தேவந்திரனும் அவன் மனைவி இந்திராணியும்  அந்த அழகான குழந்தையை கண்டெடுத்து "தெய்வயானை' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தனர். மண்ணுலகத்தில், ஒரு சிவ யோகியின் பார்வை பட்டு அழகிய மான் ஒன்றின் கருவுக்குள் தன் யோக சக்தியால் பிரவேசித்து வள்ளிக்கிழங்கை அகன்றெடுத்த குழிக்குள் வள்ளிச்செடிகளுக்கிடையே மறுபிறவி எடுத்தாள்  சுந்தரவல்லி.. அது சமயம் அங்கு வேட்டையாட வந்த வேடுவர்கள் தாங்கள் குழந்தையொன்றை கண்டோமென தங்கள் தலைவனிடம் சென்று பகர, செய்தியறிந்த வேடுவ தலைவன் நம்பிராஜன்  விரைந்து வந்து அக்குழந்தையை  தன் மகளாக ஸ்வீகரித்து வள்ளிச்செடிகளுக்கு இடையே குழந்தையை கண்டெடுத்ததால்," வள்ளி' எனப் பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தான்.

இவ்விதமாக அவ்விருவரின் அவதார நோக்கங்கள் பூர்த்தியாகி வளர்ந்து மணப்பருவத்தை அடைந்து கொண்டிருக்கும் போதுதான், நம் முருகப்பெருமான் அசுரர்களை  அழித்து  வெற்றிவாகை சூடி வந்திருந்தார். அப்போது தேவர்கள் எடுத்த முடிவின்படி முருகனுக்கு தெய்வயானையை மணம் கொடுக்க கைலாயம் புறப்பட்டுச் சென்ற தேவேந்திரன், முருகனின் தாய் தந்தையரையும் சந்தித்து கலந்து பேசி முறைப்படி, வேதசாஸ்திரபடி,  தெய்வயானையை முருகனுக்கு  தாரை வார்த்துக் கொடுக்க, முருகன்தெய்வயானை திருமணம் மங்களகரமாய், மிகச் சிறப்பாக , விண்ணோர்கள்  மலர் சொறிய, அனைவர்   மனம் மகிழுமாறு, கோலாகலாமாய் நடந்தேறியது.


முருகன் தேவகுல மகள் தெய்வயானையுடன் அனைவரும் மெச்சும்படிக்கு வாழ்ந்து, அனைவருக்கும் அருள்பாலித்து வரும் நாளில், முருகனுடைய பிறப்பில் மூன்று சக்திகளில ( ஞான சக்தி = ஞான வேல், கிரியா சக்தி = தெய்வயானை ,) இரண்டை பெற்று விட்டதையும், மூன்றாவதாக ஒன்று இருப்பதை( இச்சா சக்தி = வள்ளியம்மை ) அவருக்கு நினைவூட்டினார் தேவமுனி நாரதர். புன்முறுவலுடன் அதை ஆமோதித்த முருகனும், அதற்கான நேரம் நெருங்கி விட்டதென்பதை நாரதருக்கு உணர்த்தி விட்டு அந்த சக்தியை அடைவதற்காக, மண்ணுலகத்திலிருக்கும் வள்ளி மலையை அடைந்தார். அங்கே வள்ளி மலையில் வள்ளியம்மை வளர்ந்து அவர்தம் குல வழக்கபடி திணைக் காவல் காத்து வந்தாள். தோழியரோடு புன்செய் நிலங்களை பறவை இனத்திடமிருந்து அறுவடை காலம்வரை பத்திரமாக காக்கும் பணியை வள்ளி நிறைவேற்றி கொண்டிருந்தாள்.முருகன் தன்னை ஒரு வேடனாக உருமாற்றிக் கொண்டு அவள் முன்னே போய்  நின்றவுடன், "இவன் இதுவரை தங்கள் இனத்தில் பார்த்திராத ஒரு இளைஞன். ஆனால் கண்ணோடு கண் நோக்கிய அந்த ஒரு பார்வையாலேயே  தன் மனதையும், உடலையும் தடுமாற வைக்கும் இந்த சுந்தரன் யார்? இவனால் ஏதும் சங்கடங்கள் வந்து விடுமா? 'என்றெல்லாம் தடுமாறிய வள்ளி தன் தோழியை அனுப்பி  "தன் தந்தை மற்றும் உதவியாக வரும் உறவினர்கள் அனைவரும்  தன்னைக் காண வரும் நேரமாகி விட்டதால், அந்த வாலிபனை அங்கிருந்து  விரைந்து அப்பால் சென்று விடும்படி நான் சொன்னேன்". என்று சொல்லி வரச் சொன்னாள்.


தோழி  சென்று தன் தலைவி சொன்னதை சொல்லியதை முருகனிடம் கூறியதும் இளநகை புரிந்தவாறு , "எங்கு செல்வது? உங்கள் தலைவியையும் அழைத்துக் கொண்டு செல்லத்தானே வந்திருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொண்டு என்னுடன் இப்போதே வரத்தயாரா? என்று உன் தலைவியிடம் கேட்டு வந்து சொல்." என்று சற்று மிரட்டும் குரலில் கூறவும் தோழி முருகன் கூறியதை வள்ளியிடம் பதற்றமாக வந்து சொன்னாள். அதைக்கேட்ட வள்ளி சற்று கோபமாக தான் காவல் காக்கும் பரணை.விட்டு இறங்கி வந்து அழகுக்கு அழகான முருகனை பார்த்து, " என்ன பிடிவாதம் செய்கிறாய் ? எம் இனமாயிற்றே என்ற மரியாதையில் உம்மீது இரக்கங்கொண்டு என் தந்தையின் கோபத்திலிருந்து உன்னை தப்பித்துக் கொள்ள  உபாயம் கூறினால், நீர் எம்மை மணக்க தூது அனுப்பிகிறீரோ? "என்று படபடத்தவள் முருகனின் ஆழமான  காதல் பார்வையை சந்திக்க இயலாமல் தலை குனிந்தாள்.  வீரமான தன் தலைவி வந்தவரின் முகத்தைப் பார்த்து பேசாமல், தடுமாறி தலை குனிந்ததோடு தாமரைப்பூவாய் அவள் கன்னம்  சிவப்பதையும் அதரங்கள் வெட்கத்தில் நடுங்குவதையும் தோழி கவனித்து வியந்தாள். தலைவிக்கு உதவும் எண்ணத்தோடு ,  அவள் அருகில் வந்து "வள்ளியம்மை என்னவாயிற்று?"என்று  அவள் கைகளை பிடித்தவள் தூரத்தில் நம்பிராஜன் வேடுவ படையோடு வருவதைக்கண்டதும்,. முருகப்பெருமானைப்பார்த்து சென்றுவிடும்படும்படி வேகமாக கையசைத்து விட்டு வள்ளியை அணைத்தபடி தாம் காவல் காக்கும் பரண் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தாள். முருகனும் அவ்விடத்தற்கு சற்று தொலைவில்  சென்று அவர்கள் வந்து செல்லும் வரை வேறெங்கும் செல்ல மனமின்றி ஒரு வேங்கை மரமாகி உருமாறி நின்றார்.

தாங்கள் வராத இக்குறுகிய நாட்களில்  வளர்ந்திருந்த அம்மரத்தைக் கண்டு வந்த வேடுவ குலம் வியப்பெய்தியது. நம்பிராஜன் தன் மகளுடன் அளவளாவி கொண்டிருந்த போது சில வேடுவர்கள் அவனிடம் வந்து, " புதிதாக தோன்றியிருக்கும் அம்மரத்தினால் ஏதேனும் பாதகங்கள் விளையுமோ என்னவோ! முற்றிலுமாக அந்த மரத்தை வெட்டி அகற்றி விடலாமா?''  என ஆலோசனை கேட்டவே நம்பிராஜன் ஒரு நிமிடம் யோஜித்தான்.அவனும் வரும் போதே மரமொன்று புதிதாக வளர்ந்திருப்பதைக் கண்டான். அதன் விடை புரியாது மகளைக் கண்ட  மகிழ்ச்சியில்  சற்று மறந்திருந்த போது உடன் வந்தவர்கள்  நினைவுபடுத்தவே பதில் கூற யத்தனிக்கும் முன், முருகனருளாளே அவன் வாயினின்று,  "வேண்டாம்! வள்ளிக்கு நல்ல நிழல் தருகிறது. அதனால் அம் மரத்தை ஏதும் செய்ய வேண்டாம்."என்றபடி எழுந்து புறப்பட  ஆயுத்தமானான்.

மறு நாளும்  வேங்கை மரமாகி நி்ன்ற முருகன் வயதான கிழவரை போல உரு மாற்றிக்கொண்டு "வெகு தொலைவிலிருந்து வருகிறேன். கால்கள் பசியினால் துவளுகிறது .மிகவும் பசிக்கிறது" !  என்று வள்ளியிடம் வந்து கேட்கவும்,  வள்ளி தந்த தேனும், தினைமாவையும்  தின்று பசியாறிய பின், தாகத்திற்கு  தண்ணீர் கேட்க சற்று தொலைவிலுள்ள சுனை ஒன்றினுக்கு வள்ளி வழி காண்பித்து, "அங்கு சென்று வேண்டிய மட்டும் நீர் அருந்துங்கள் '. என கூறவும், "இந்த வயதான காலத்தில் என்னை தனியே சுனைக்கெல்லாம் அனுப்புகிறாயே!  நீயும் என்னுடன் துணையாக வரலகாதா? உன் தாத்தாவிற்கு  இந்த உதவி கூட செய்ய  மாட்டாயா? என்று அழமாட்டாத குரலில் கேட்கவும்.,மனமிறங்கிய வள்ளி அவருடன் புறபபட்டாள். சுனை வரை துணையாக வந்தவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்த முருகவேள்அவ்விடம் வந்ததும், அவரை  நீர் அருந்தும்படி பணித்து விட்டு அங்குள்ள ஒர்இடத்தில் அமர்ந்தாள். சுனைக்கு சென்று  நீர் அருந்துவதாக பாவனை செய்து மீண்டும் திரும்பிய கிழவரை்க கண்டதும் , "சரி தாத்தா இனி நான் திரும்பிச் செல்கிறேன்.என்னைக்காணாது என் தோழியர் தேடுவார்கள் . நீங்களும் உங்கள் இருப்பிடத்துக்கு பயணபடுங்கள்.' என்றவாறு எழவும், கிழவராக வந்த முருகன், "மலர் மடந்தே! நான் மட்டும் திரும்பி போவதா? நீ இல்லாமல் இனி எனக்கு வாழ்வேது? என்னை திருமணம் புரிந்து கொள். கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்தே என் இருப்பிடம் ஏகலாம்!"என குறும்புடன் கூறவும், தன் பதட்டத்தை மறைத்துக் கொன்டு வள்ளி கலகலவென சிரித்தாள். தாத்தாவுக்கு ஆசையை பாரேன்!  என மனதுக்குள் நினைத்தபடி, "பெரியவரே! உங்கள் வயதென்ன?  உங்கள் பேத்தி வயதில் இருக்கும் என்னைப் பார்த்து இப்படி பேசலாமா? என் தந்தைக்கு தெரிந்தால் இந்த தள்ளாத வயதில் நீங்கள் பலதுன்பங்களை அனுபவிக்க வேண்டி வரும். உங்கள் வயதுக்கு  மதிப்பு தந்துதான் சில உதவிகள் உங்களுக்கு செய்ய முன் வந்தேன். வருகிறேன் ! என்றபடி வள்ளி நடக்க ஆரம்பிக்க,. முருகனாக வந்த கிழவர் சட்டென அவள் கைகளைப்பிடித்துக் கொண்டார். " பெண்ணே!  நான் விளையாட்டாக கூறவில்லை! உண்மையிலேயே நம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும்.  அது மட்டுமல்ல! நீ இந்தப் பிறவியில் எனக்காகவே பிறந்தவள்! ." என்றபடி  மேலும் விளையாட்டாக அவள் பதட்டத்தை ரசித்தபடி "எனக்கென்ன அப்படி வயதாகி விட்டதென்று நினைத்தாய்?" என்றார்.

வள்ளிக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ஏய் தாத்தா இத்தனை நேரம் உமக்கு மரியாதை கொடுத்து, வயதானவர்தானே!  என என்  தோழிகள் இல்லாத போதும்,  உம்முடன் அவர்கள் துணையின்றி தனியே வந்தது தப்புதான்! உமக்கு புத்தி பேதலித்து  இருக்கிறது. அதை முதலில்   சரி செய்து கொள்ளுங்கள். நான் எங்கள்  இனத்தில் ஒருவரை சந்தித்தேன்.மணந்தால் அவரை மட்டுந்தான் மணந்து கொள்வேன். இல்லையெனில் எமக்கு திருமணமே இந்தப்பிறவியில் இல்லை! என்றபடி அவர் பிடியிலிருந்து கைகளை விடுவித்தபடி நடக்க ஆரம்பித்தாள்.  முருகன் சிரித்தபடி , அழகு மலரே, யார் அவன் எனக்கு போட்டியாக முளைத்துள்ளான் ? சொல்லிவிட்டு போ! அவனை ஜெயித்து விட்டு உன்னை மணமுடித்துக் கொள்கிறேன். " எனகுறும்பாக கூறி அவளை பின் தொடரவும், "அதை உம்மிடம் கூற வேண்டிய அவசியமில்லை", என்று படபடத்த வள்ளி வேகமாக ஓட தலைப்பட்டாள்.


அவள் ஓட்டத்தை கண்டதும்,. முருகன் தன் அண்ணன் கணபதியை மனதுக்குள் நினைக்கவும், மதம் பிடித்த யானையாக  சத்தமாக பீளிரிட்டபடி அட்டகாசமாக அங்குமிங்கும்  ஓடியபடி,   தன் தம்பிக்கு உதவி செய்ய கணபதி  வள்ளியின் முன் தோன்றினார். வள்ளியின் ஓடிக் கொண்டிருந்த கால்கள் அந்த மதம் கொண்ட யானையை கண்டதும் பீதியில் நடுங்கின. ஏற்கனவே பதற்றத்திலிருந்தவள், மூர்ச்சித்து விழாத குறையாக , திரும்பி ஓடி வந்து என்னைக் காப்பாற்றுங்கள் தாத்தா என்று அவர் கைகளைப் பிடித்துக் கொள்ள, துரத்தி வந்த யானையும் மறைந்தது. முருகவேளும் வேடுவ இளைஞனாக மாறினார். வள்ளியும் மகிழ்ச்சியடைந்தாலும், மனதில் குழப்பம் மிக , இது எவ்வாறு சாத்தியம்? என கேட்டாள். முருகனும் அவளின் பூர்வ ஜென்ம கதையை உணர வைத்து, பன்னிருகை வேலவனாக அவள் முன் தோன்றி அருள் பாலித்தார். வள்ளியும் மண்ணுலக பிறவியின் மாயை தெளிந்து, தன் நிலை உணர்ந்தவளாய் தன் மனதுகுகந்த மணவாளனாய், முருகனே தன்னை ஆட் கொள்ள இப்பூலோகத்திற்கு வந்திருப்பதை கண்டு மன மகிழ்வு எய்தினாள்.


"எப்படியாயினும், என்னை வளர்த்தவர்கள் சம்மதமில்லாமல், தங்களுடன் எப்படி வர இயலும் ? என் திணை காவலும் இன்னமும் சிறிது நாட்களில் முடிந்து எங்கள் ஊருக்கு நான் பயணமாவேன். எனவே நீங்கள் வேடுவ வடிவிலேயே அங்கு வந்தால், என் பெற்றோரிடம் நான் உங்களை விரும்புவதை உணர்த்தி அவர்கள் சம்மதத்துடன்  நம் திருமணம் நடக்கட்டும்."  என மண்ணுலக மரபின்படி வள்ளி கூறவும், முருகனும் அவ்வாறே நடக்கட்டுமென கூறி அவளை திணைப் புலத்துக்கு   அனுப்பி வைத்தார். அதன் காவல் முடிந்து தனது கிராமம் திரும்பிய வள்ளி  முருகனின் நினைவாகவே இருந்தாள். அவனை விட்டு பிரிந்திருக்கும் நாட்களை முற்றிலும்  வெறுத்தாள். அவள் தாயாரும், நெருங்கிய தோழியரும் அவள் வாட்டத்தைக் கண்டு கவலையுற, வள்ளியுடன் பேச்சு கொடுத்து பார்த்ததில். காரணம் தெரிய வந்து அது நம்பியின் கவனத்திற்கு சென்றது. என்னதான் வந்தவன் வேடுவ இளைஞனாக இருப்பினும்., முன் பின் அறிமுகமில்லாத அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்க நம்பிராஜன் மறுப்பு தெரிவித்தான். வந்தவர் வேறு எவருமில்லை! இறைவன் முருகவேழ் என்று அவர் பெருமையை மூவுலகும் சுற்றி வரும் நாரதர் வந்து சொல்லியும்  அவன் அதை உணர்ந்தானில்லை.



வள்ளி கூறியபடி ஒருநாள் அவளை  சந்திக்க வந்த முருகப் பெருமான் விபரங்கள் அறிந்து  தோழியின் உதவியோடு வள்ளியை அழைத்துக்  கொண்டு தன்னிருப்பிடம் நோக்கிச் சென்றார். தந்தையின் மறுப்பைக் கேட்டு மனம் தவித்துப்போன வள்ளியும், முருகனி்ன் செயலுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் உடன் சென்றாள். ஆனாலும் அவள் மனதில் பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்வதை குற்றமாகவே கருதினாள். முருகன் தன் மகளை தன்னுடைய விருப்பமின்றி விண்ணுலகம் அழைத்து செல்கிறான்  என்பதை அறிந்ததும் கோபம்கொண்ட நம்பி தன் படைகளோடு கிளம்பி தன் மகளை மீட்டு வர புறப்பட்டான். முருகனும் வள்ளியும் செல்லுமிடமொன்றில் தங்கி அளவளாவி கொண்டிருக்கும் போது வேடுவ படை வந்து தன் தாக்குதலை தொடர கோபம் கொண்ட முருகன் தன் சேவலை அனுப்ப சேவலின் ஒரு கர்ஜனையில் நம்பி உட்பட  அனைத்து வேடுவர்களும்  கீழே விழுந்து மாய்ந்தனர்.. வள்ளியம்மை பார்த்து மனம் பதறி அவர்களை மீண்டும் எழுப்பித் தர முருகனை வேண்டவே, சினம் தணிந்த வேலவன் அவர்களை உயிர்பித்தான். அந்நேரம் தேவர்களும், சிவசக்தி சமேதராய் அவ்விடம் எழுந்தருள,  மனம் திருந்திய நம்பி ராஜன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டபடி தன் மகளின்  மனம் கோணாது தேவர்களும் தாய்தந்தையரும்  வாழ்த்த அவள் விரும்பியபடி முருகனுக்கு வள்ளியை மணம் செய்வித்தான். வள்ளியும்  தன்விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்தாள். முருகனும் வள்ளியை அழைத்து கொண்டு தெய்வயானை இருக்கும் இடத்துக்கு சென்ற போது , அவளும் அகமகிழ்ந்து  தன் சகோதரியை வரவேற்று  அணைத்துக் கொண்டாள். இவ்வாறாக முருகப்பெருமான் விண்ணிலும்  மண்ணிலுமாக இரு சகோதரிகளையும்  தான் அழித்த வாக்குபடி திருமணம் செய்து கொண்டு வள்ளி தெய்வயானை சமேதராய் அனைவருக்கும் அருள் பாலித்து வந்தார்.

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று.
 ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று.
 கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று.
 குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம் ஒன்று.
 மாறுபடு சூரரை  வதைத்த முகம் ஒன்று.
 வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று.
 ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்.
 ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

                                                                  சுபம்.


ஞான பண்டிதன் முருகனின் திருமண வைபவங்களை எழுத வைத்த என் தெய்வம் விநாயகபெருமானுக்கும், என்னப்பன் பன்னிருகை வேலவனுக்கும் என் சிரம் தாழ்த்திய அனந்த கோடி நமஸ்காரங்கள்.

                      இதை படிக்கும் அனைவருக்கும் என் இதய பூர்வமான நன்றிகள்.

         எழுதிய எழுத்தில் கருத்தில் ஏதேனும் தவறுகள் இருக்கலாம்! இருப்பினும்


                                                                           முருகா.....
                                                                     


                           எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன்                                          எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு! பொறுப்பதும் உன் கடன்!                        பெற்றவள் குறமகள் பெற்றவளாமே! பிள்ளை என்று அன்பாய் பிரியம்
                  வைத்து மைந்தன் என் மீது உன் மனமகிழ்ந்தருளி  தஞ்சமென்ற
                                                  அடியார் தழைத்திட அருள் செய்....

                                               சர்வம் சிவார்ப்பணம்..


படங்கள்: நன்றி கூகுள்