Friday, December 31, 2021

வேண்டுதலும், வாழ்த்துகளும்.

என் அன்பான  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் நாளை உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் 2022ம் ஆண்டில் நம் இன்னல்கள் அகற்றி, எவ்வித தொந்தரவுகளற்ற வாழ்வை ஒவ்வொரு நாளும்  அந்த இறைவன் தந்திட வேண்டுமாய் பக்தியுடன் அவன் தாழ் பற்றி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.  

பொதுவாக வாழ்க்கை என்பது இரு தண்டவாள கம்பிகளில் பயணிக்கும் ஒரு ரயில் வண்டியை போன்றது. இதில் அத்தண்டவாள கம்பிகளைப் போல  இந்த இன்பம், துன்பம் இரண்டும் நம் வாழ்வில்  சமமாக வரலாம். இல்லை, ஒன்று சற்று மேலோங்கி, மற்றது கீழிறங்கி நம் மனதை சலனப்படுத்தியோ / சந்தோஷபடுத்தியோ/சங்கடப்படுத்தியோ/காயப்படுத்தியோ மறைந்திருந்து வேடிக்கைப் பார்க்கலாம். எதுவாக இருப்பினும் நம் பயணத்தில் கவனம் செலுத்தி, நம் பயணத்தின் பொறுப்பாளரிடம் (கடவுள்)  முழு நம்பிக்கை வைத்து  பயணத்தை தொடர்தோமானால், சுமூகமாக இந்தப் பயணம் தன் திசை நோக்கி நகரும். 

நமக்கென்று நிர்ணயத்ததை "அவன்" இந்த பயணத்தில் கண்டிப்பாக தரத்தான் வேண்டும். நாமும் அதன் விதிகளின்படி எவ்வித மாற்றங்களுமின்றி அதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நாம்  ஒரு பிறவியாக இந்த உலகில் தோன்றும் முன்னே கண்களுக்கு தெரியாத எழுத்து வடிவிலிருக்கும் ஆரம்ப "விதி" களுக்கு முன் "அவனுக்கும்", நமக்குமாக எழுந்த ஒரு உடன்படிக்கை. இந்த ஒப்பந்தத்தை எவராலும் மீற முடியாது. ஆனால், ஒவ்வொருரின் மனதிலும்  பரமாத்மாவாக  ஜீவாத்மாவுடன்  அமர்ந்திருக்கும் "அவனிடம்" நம் நிறைகளை/குறைகளைச் சொல்லி சந்தோஷமோ/ வருத்தமோ அடையக் கூடிய உரிமையை மட்டும் "அவன்" பரிபூரமானமாக நமக்கு தந்துள்ளான்.அதன்படி யாவும் நலமாக, யாவரும் நலமாக இருக்க அந்த விதியின் துணையுடன், "அவன்" துணையும் நமக்கு  வேண்டுமென்ற  பிரார்த்தனையை மட்டும் தினமும்  வைத்துக் கொண்டேயிருக்கலாம். மற்றது "அவனருள்." "அவன்" விருப்பம்.  "அவன்" உரிமை.      

      சர்வம் கிருஷ்ணார்ப்பணம்... 

இது இன்ப, துன்பங்கள் கலந்த நம் வாழ்க்கை மாதிரி, இரு பொருட்கள் கலந்த, அனைவரும் அறிந்த ஒரு இனிப்புதான். அனைவரும் தத்தம் வீடுகளில் அடிக்கடிச்  செய்து உண்டு மகிழ்ந்த ஒரு பதார்த்தந்தான்.... ஆயினும், எப்போதோ நான் செய்த இந்த இனிப்பின் துணைபோடு, இப்போது வரும் வருடத்தை நாம் வரவேற்போமா? நன்றி. 🙏. 

மாலாடு.. 


உடைத்த கடலை அல்லது பொட்டுக்கடலை ஒரு கிண்ணம் (ஒன்றரை டம்ளர்) அளவு. 


ஜீனி  அதே டம்ளரில் முக்கால் அளவு. இதுவே போதும். ஆனால், இன்னமும் தித்திப்பாக வேண்டுமென்பவர்கள் ஒரு டம்ளர் நிறைய என்ற அளவோடு எடுத்துக் கொள்ளலாம். 


முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மிருதுவாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் பொடி செய்த ஏலக்காய் தூளையும் சேர்த்து பொடித்து கொள்ள வேண்டும். 


பின் ஜீனியையும் அதேப் போல் மிருதுவாக பொடித்துக் கொள்ளவும். 


இது நெய்யில் வறுத்து சேர்க்க முந்திரி பருப்பு. மற்றும் உலர்ந்த திராட்சை உடைத்தது. 


முதலில் கடாயை அடுப்பிலேற்றி, தணிந்த அளவு அடுப்பை பற்ற வைத்து, அந்த சூட்டில் கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். 


பின்  அத்துடன் உலர்ந்த திராட்சையையும்  போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். 


பின் அதே கடாயில் இரண்டு  குழி கரண்டி அளவு நெய்யை உருக வைத்து லேசாக புகை வரும்படி காய்ச்சிக் கொள்ளவும்.
 

பொடி செய்த உடைத்த கடலை, ஜீனியையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துப் போட்டு கலந்து வைத்து கொள்ளவும். அத்துடன் உருக வைத்த  நெய்யையும் வறுத்து வைத்திருக்கும் முந்திிரி,  திராட்சையையும் கலந்து கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருக்கும் போதே எல்லாவற்றையும் கைகளால் கலந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்


கை பொறுக்கும்  அளவிற்கு சூடு இருப்பதால் மாலாடு உருண்டை வடிவத்திற்கு அழகாக வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் உருண்டை சரியான அமைப்பில் வரவில்லை எனத் தோன்றினால், அதற்கு மேலும் நெய் தேவைப்படும் பட்சத்தில் ஓரிரு ஸ்பூன் நெய்யை சூடாக்கி சேர்த்துக் கொள்ளலாம். 


சற்று அழுத்தம் கொடுத்து பிடிக்கும் போது உடையாமல் சேர்ந்து வரும். 


பிடித்து வைத்த ஒரு மாலாடு உருண்டை. 


இது மொத்த மாவையும்  அதே சூடோடு பிடித்து வைக்கப்பட்ட பல மாலாடு உருண்டைகள். 


நீங்களும் இந்த புத்தாண்டில் இனிமை சேர்க்க இனிப்பு அளவோடு இருக்கும் இந்த மாலாடு என்ற இனிப்பை எடுத்துக் கொள்ளலாமே ...! அன்புடன் எடுத்து சாப்பிட்டு பார்த்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். . 🙏.. 

Friday, December 10, 2021

சாலையும், ஞானமும்.

 


1.) குடியிருப்பு  வசதிகளாக

குடியேற இருப்பிடங்கள்

குறைவற இருப்பினும், 

மக்கள் எவரும் 

பாதையாகவேனும்

பாவித்து பயணிக்காத 

சாலையின் வெறுமை

மனதிலும் வெறுப்பேற்றி

மடியாமல் நடை போடுகிறது.. ... 

###################################

2.) சாலை  வெறுமை  என்ற 

இந்த கண்ணாடியில்

மனதில் கலந்து விட்ட

வேதனைகளின் கனத்த  

பிம்பங்கள் ஏனோ 

பிரதி தினமும் இங்கு

பிழையின்றி பிரதிபலிக்கின்றன.... 

###################################

3.) கெளதம புத்தருக்கு  

போதி மரத்தடியில்

ஞானம் கற்பித்து 

தனக்கு இணையாக்கிய 

இறைவன் மனமிறங்கி

இந்த சாலை சூன்யத்தில்

சற்றே அஞ்ஞானமகற்றி 

அந்த ஞானமென்ற

சூட்சுமத்தை  நமக்கும் 

பட்சமாக கற்பித்தால்,

புத்தரின் பாதத்தில் 

அவரை விரும்பியபடி 

வீற்றிருக்கும் ஒரிரு

தூசி துகள்களில், 

ஒரு துகளுக்கு கண்டிப்பாக

நாமும் இணையாகலாம்.....

###################################

4.) மரங்கள் அடர்ந்திருந்த போது 

மக்களுக்கு நிழலாக, 

மண்ணிற்கு அரவணைப்பாக, 

மலர்களுக்கு பிறப்பிடமாக, 

மகிழ்வின் கீதமிசைத்து கொண்டு  

தன் மனதின் இனிமையோடு 

அதன் அவசர மடிவையும் 

அதி விரைவிலேயே 

சந்திக்காது இருந்திருக்கும். 

ஆனால், தனித்துவமான

வீடுகளின்  உதயத்திற்காக, 

விதி செய்யும் சதிக்காக, 

மட்டற்ற மரங்களை பலி தந்தும், 

மக்களின் வேண்டுதல்கள்

பரிபூரணமாகாத அதிருப்தியிலும்

பிற பட்டுப்போன  மரங்களும் 

பார்த்துப் பதறாத 

பரவச பார்வையிலும். 

பூத்துக் குலுங்கும் ஏனைய

மற்ற மரங்களும் மண்ணோடு

மண்ணாக இங்கு மடிந்து 

மக்கிப் போயிருக்கின்றன..... 

###################################

இதற்கு முன் இங்கு வந்த போது கட்டுமானங்கள் இல்லாத இந்த வெறும்  இடங்களில், சாலைகளில்  பறவைகளும், கால்நடைகளுமாக பறந்து / நடந்து  மகிழ்ந்திருந்ததை  ரசித்திருக்கிறேன். ஒரு வருட இடைவெளிக்குப் பின் நிறைய கட்டிடங்கள் இங்கு முளைத்திருந்த போதும், இந்த வெறிச்சென்ற சாலையை கண்டதும் என் கைப் பேசியில் படமெடுத்து விட்டேன். படத்தை எடுத்துப் பார்த்ததும் நாலு வரி எழுத வேண்டுமென என்னுள் உதயமான வார்த்தைகள் அந்த கட்டிடங்களின் சிமிண்ட் கற்களைப் போல சேர்ந்தெழுந்து வரிசையாக நின்று கொண்டன.  படம் குறித்த கவிதையை போலான (இந்த இடத்தில் சிறப்பான வார்த்தைகளுடன் சரளமாக கவிதைகளை புனையும் சகோதரர்கள் ஸ்ரீ ராம் அவர்களும், துரைசெல்வராஜ் அவர்களும் என் ஒழுங்கற்ற வார்த்தை கோர்வைகளுக்கு  மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.) வரிகள் உங்களுக்கும் ஏதோ  பிடித்திருக்குமென நினைக்கிறேன். படித்து கருத்திடும் நட்புறவுகளுக்கு என் பணிவான நன்றிகள்.. 🙏.

 இதை எழுதி வைத்து விட்டேனே தவிர  பல மாதங்களாக வெளியிடும் எண்ணமே வரவில்லை. ஆனால் எ. பியில் சென்ற வெள்ளியன்று  பகிர்ந்த  பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கர்ணன் படப்பாடல் என் மன நிலையை மாற்றி விட்டது.  

"என்னையே சரண் என்று நீ முழுமையாக நம்பி விட்டால், உன்னுடையது என இந்த உலகில் எதுவுமில்லை" என்ற கீதாசாரம் மிகுந்த அந்த பாடலில், மன்னரும் நானே மக்களும் நானே. . மரம் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...துணிந்து நில் தர்மம் வாழ... என்ற வரிகளினாலும்,  காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... என்று தன் கடமையைை செய்ய அர்ஜுனனுக்கு போதிக்கப்படும்  இறுதி வரிகளினாலும்  இந்தப் பதிவு  தைரியமாக இன்று அரங்கேறுகிறது. "இன்றிருப்பார் நாளையில்லை" என்ற ஞான விளக்கங்களும் பக்க வாத்தியங்களாக உடனிருந்து இதை அரங்கேற செய்துள்ளது. எல்லாம் அவன் செயல். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 🙏.