மணிக் கொழுக்கட்டை.
இந்த மாவு உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் போல் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
இனி இனிப்பு கொழுக்கட்டை.
நல்ல பெரிய தேங்காயாக( சற்று முதிர்ந்தது..அப்போதுதான் பூரணம் நன்றாக இருக்கும்.) ஒன்றை உடைத்து பொடிதாக துருவி வைத்துக்கொள்ளவும். 200 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் க. பருப்பு இரண்டையும் எடுத்துக்கொண்டு ( அடுப்பை பற்றவைத்துக்கொண்டு) வெறும் கடாயில் சற்று பொன்னிறமாக வறுத்து பின் நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு ( மண்டை வெல்லமாக இருந்தால் பெரிய சைசில் ஒரு உருண்டை அளவு போதும்! இந்தப் பக்குவத்திற்கு சரியாக இருக்கும். ) கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டிக்கொள்ளவும். பிறகு கடாயில் வடி கட்டிய வெல்லத்துடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும். தேங்காய் பூவும் வெல்லமும் சேர்ந்து வரும் சமயம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பாசி பருப்பு பொடியை சிறிதுசிறிதாக அதனுடன் கலந்து கிண்டி கெட்டியாகும் தருணத்தில் ஏலப்பொடி சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேறு பாத்திரத்தில் ரெடியான வெல்லப் பூரணத்தை மாற்றிக் கொள்ளவும். பாசிப் பருப்புக்கு பதிலாக கடலைப் பருப்பை மட்டும் வறுத்து பொடி செய்தும் பூரணம் செய்யலாம். அல்லது பாதி பாதி அளவாக இரு பருப்பையும் எடுத்துக் கொண்டு தனித்தனியே வறுத்து பொடி செய்து போடலாம். இந்த கலவையும் ருசி நன்றாகவிருக்கும். நான் முக்கால்வாசி இந்த முறையில் செய்வேன். சில பேர் பருப்புகள் எதுவும் கலக்காமல் வெறும் தேங்காய் பூரணம் மட்டும் செய்வார்கள். போளிக்கு பூரணம் செய்வது போல் கடலைப் பருப்பை வறுத்து ஊற வைத்து அரைத்து தேங்காய் வெல்லப் பூரணத்துடன் கலந்தும் கொழுக்கட்டைகள் செய்யலாம். இப்படியான நாலு விதங்களில் நமக்கு எது சௌகரியபடுகிறதோ அவ்விதம் செய்து கொள்ளலாம்.
இத்தனை விதங்களில் உண்டான இனிப்பு பூரணத்தை ஆறியதும் இவ்விதமாக தனிதனியே தட்டில் உருட்டி வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை மேல்மாவையும் பூரணத்தையும் ஒருசேர தொட்டு செய்தால் கொழுக்கட்டைகள் ஒழுங்கான வடிவத்தில் வராது சிறிது அடம்பிடிக்கும்.
ஒரு கிலோ பச்சரிசி எடுத்து சுத்தப்படுத்தி மாவரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து மாவாக்கி அதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அரிசியை நன்கு கழுவி வடிகட்டிய பின் அரைமணி நேரம் ஈரத்துணியில் பரப்பி ஆற வைத்த பின்னர் மிக்ஸியிலேயே மாவாக்கி கொள்ளலாம். வீட்டில் விசேடங்களுக்கு ஸ்வாமி நேவேத்தியங்களுக்கு இப்படித்தான் நான் மாவு தயாரித்துக் கொள்வேன்.அல்லது தண்ணீரில் ஊற வைத்த ப. அரிசியை மிருதுவாக அரைத்து அந்த விழுதில் சற்றே நீர்க்க தண்ணீர் கலந்து கடாயில் கிண்டியும் தயாரித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தயாரான மாவை ஒரு பங்குக்கு ஒன்றரை என்னும் அளவு விகிதத்தில் தண்ணீருடன் சிறிதளவு பொடிஉப்பையும் கலந்து கரைத்துக் கொள்ளவும். பின் அடி கனமான கடாய் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அந்த மாவு கரைசலை விட்டு கெட்டியாக கிண்டிக் கொள்ளலாம்.