Showing posts with label தந்தை. Show all posts
Showing posts with label தந்தை. Show all posts

Friday, January 19, 2018

தந்தையின் தனித்துவம்....




   இவ்வுலகத்தில்  அன்னை, தந்தை எனவும், மாதா  பிதா  எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை ! தந்தை சொல் மிக்க மந்திரமல்லை! என்று தாயை கோவிலாக்கி  தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்)  தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.

அன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும்  சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி  நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை! ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம்  சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்?

சிறுவயது பருவம் கடந்து  வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும்  அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல்,  அப்பா பேச ஆரம்பித்தாலே  அறிவுரையாக ஏதாவது  (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே!  )  சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில்,   எத்தனை அலட்சியங்களை அவருக்கு  பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும்  பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி.! அந்தளவிற்கு  நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.

( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே!  எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு?  என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே!  இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய  பதிவொன்றை நான் படித்தேன். அதனால்  எழுந்ததுவே இந்தப் பதிவு!. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை!. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றிகள்.)

ஆனால், அனைத்து இல்லங்களிலும்,  இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர்  தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து  அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை.!   அவர்களுக்கெல்லாம்  என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்..! நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு  பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம்!. பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும்  நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.

                     படித்தமைக்கு  நன்றிகள்.




படித்து பிடித்தது.....

*அப்பாவிற்கு அழத்தெரியாது!!*
⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்!*
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது!*
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!*
⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்...
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽  *அந்த பைத்தியத்திற்கு*
*அழவும்தெரியாது!*
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்! 
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே  வெளிப்படுத்தி விடுங்கள்!
 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா   
      மரணமோ!
 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
     ஒருவரின் மரணமோ! 
 உங்களை புரட்டி போட்டு!
     அவர் பாசம் புரிந்து!
     அப்பாவை தேடி ஓடிரும்போது!
 வீட்டில் அப்பா...
      சிரித்துக்கொண்டிருக்கலாம்...
      புகைப்படத்தில்!!
*பாவம்_அவருக்குதான்..*
*அழத்தெரியாதே!!*
படித்தேன்!
பகிர்ந்தேன்!!

Sunday, June 15, 2014

அப்பா…


நன்றி கூகிள்...
பெரியப்பா!..” என்று அழைத்தபடி ஓடி வந்து அவர் கைகளை பற்றிக் கொண்டாள் பிரியா.



“வாம்மா! உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்! எப்படி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” அவள் தோளை பற்றி லேசாக அணைத்தபடி, அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார் அவள் பெரியப்பா சேகர்

பெரியம்மா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பு உறவுகள் அவளைச் சுற்றி நலம் விசாரித்து அன்பு கடலில் மூழ்கடித்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

“பிரியா! போய் குளித்து விட்டு சாப்பிட வா! உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் பண்ணியிருக்கேன்! சீக்கிரம் வா! சூடு ஆறிடும்.” என்று அன்பு கட்டளை இட்டபடி பெரியம்மா உள்ளே சென்றாள்.

அண்ணனும் அண்ணியும் “அதேயே சொல்லி விட்டு முக்கியமான  வேலை ஒன்றுக்காக வெளியில் சென்று வந்து விடுகிறோம்” என்று ௬றி அகல, தங்கை “உன் லக்கேஜை உன் அறையில் கொண்டு வைக்கிறேனக்கா!” என்றபடி மாடியேறி சென்றாள்.

“பெரியப்பா! தம்பி இன்னுமா வரவில்லை? என்ற பிரியாவுக்கு, “அவனுக்கு வேலை அதிகமா இருக்கிறதாலே, இன்னைக்கு புறப்பட்டு நாளை காலையிலே வந்துடுவாம்மா! மறுநாள்தானே நிச்சயதார்த்தம்! சரி! நீ போய் குளித்து விட்டு வா! சாப்பிடலாம்! என்ற பெரியப்பாவை கனிவுடன் பார்த்த பிரியா “சரி! இதோ! வந்து விடுகிறேன். நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள். நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்!” என்றபடி தன் அறைக்கு சென்றாள்.

             இரண்டு நாட்களும் வீடு கலகலப்பாக இருந்தது. தன் ஒரே தம்பியின் நிச்சியதார்த்தம், உறவினர் ௬ட்டத்தின் கலகலப்போடு நன்றாக முடிய, அவன் திருமண தேதியும், இரு மாதத்திற்கு பின் முடிவு செய்யபட்ட சந்தோஷத்தில், அவள் தம்பியும், வேலை பார்க்கும் தன் ஊருக்கு திரும்பிச்செல்ல, பிரியாவும் தானும் ஊருக்கு கிளம்ப போவதாக சேகரிடம் சொன்னாள்.

      “கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு பிரியா! அதனாலே நீ இப்ப வந்த மாதிரி வராம பத்து இருபது நாளுக்கு முன்னாடியே புறப்பட்டு வந்து விடு! எனக்கும் முன்பு மாதிரி தனியா எல்லா வேலையும் பண்ண முடியல்லை!” என்று இடையில் வந்து சொல்லிச் சென்ற பெரியம்மாவுக்கு “சரி பெரியம்மா!” என்றவள் “பெரியப்பா! உங்களிடம் கொஞ்சம் தனியா பேசனும்!” என்றவாறே அவரது அறையை நோக்கி நடந்தாள்.

    “அதற்கென்ன! பேசலாம் வா!” என்றபடி தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்ற சேகர், “என்னம்மா பிரியா? நானும் பார்த்தேன்! நீ நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்கறே! என்ன விஷயம்? என்றார்.

   “ பெரியப்பா! நேரடியாக நான் விஷயத்துக்கே வருகிறேன். உங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளோடு என்னையும் என் தம்பியையும் நீங்கள்தான் சிறுவயது முதல் வளர்த்து ஆளாக்கி என்னையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இப்போ என் தம்பிக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்து ஒரு அப்பா அம்மா ஸ்தானத்திலே நின்னு எல்லாம் பண்ணறீங்க! நடுவிலே இந்த ஆளுக்கு இங்கு என்ன பெரியப்பா வேலை? இவர் ஏன் என் திருமணத்திலேயும் கலந்துகிட்டாரு? இப்போ தம்பி நிச்சயத்திலேயும்…. இன்னமும் அவன் கல்யாணத்திலேயும் வந்து அசிங்கபடுத்துவாரா? பெரியப்பா! ஏன் எந்த விஷயத்தையும் அவருக்கும் சொல்லி அவரையும் ௬ப்பிடுறீங்க? என்று கோபமாக படபடத்தாள் பிரியா.   
        “ஏன்னா? அவன் உன் அப்பாம்மா! உன்னை பெற்றவன் அவன்… உங்களுக்கு நடக்கிற நல்லதுகளை பார்க்கிற உரிமை, சந்தோசம், திருப்தி அவனுக்கில்லியா? அதுக்கும் மேலே என் தம்பிக்கு நான் சொல்லி வரவழைக்காமே, இருக்க முடியுமா? சொல்லு!” என்று நிதானமாக ஆரம்பித்த பெரியப்பாவை இடைமறித்தாள் பிரியா.

               “அப்பாவா? அவரை அப்பா என்று அறிந்த நாள் முதல் கொண்டு மனதும் உடம்பும் ௬சுகிறது! பெரியப்பா! காதலிச்சு தன் விருப்படி, தன் பெற்றோர் பேச்சை ௬ட எதிர்த்து, கல்யாணம் செய்துகிட்ட அம்மாவை, கொன்ற கொலைகார பாவின்னு தெரிஞ்ச நாள் முதலாய் இவரும் போய் சேர்ந்திருக்க ௬டாதான்னு மனசு அடிச்சுக்குது, ஜெயில் வாசம் முடிஞ்சு எங்கேயோ கண்காணத இடத்திலே இருந்தவர், ஒருநாள் திடீர்னு எங்க ஞாபகம் வந்து இங்க வந்து, நான்தான் உங்கள் “அப்பான்னு” அறிமுகப்படுத்திண்டு நின்ன அந்த நாளை என்னாலே மறக்கவே முடியாது பெரியப்பா! நம்ம பெரியம்மா அந்த கதையெல்லாம் எங்களுக்கு சொன்ன, அந்த நிமிடத்திலிருந்து, அவரை பார்த்தாலே எங்களுக்கு பிடிக்கல்லே பெரியப்பா! ஆனா, அதுவரைக்கும் எங்களுக்கு எந்த விபரமும் சரியா தெரியாததாலே உங்களைதான் பெரியப்பா நாங்க அப்பா, அம்மாவா நினைச்சு வாழ்ந்துகிட்டு வந்தோம். இப்பவும் உங்களை தவிர வேறு யாரையும்……மனசாலே ௬ட அப்பாவா ஏத்துக்க முடியாது!” என்றபடி கண்கள் கலங்க பேச முடியாது, இன்னமும் சற்றும், கோபம் குறையாத குரலில் தடுமாறினாள் பிரியா. 

  அவள் அருகில் வந்து அன்புடன், அவள் கைபிடித்து கட்டிலில் அமர வைத்த சேகர், “நீங்க எப்பவுமே என் குழந்தைகள்தான், பிரியா! அதுலே எந்த மாற்றமும் கிடையாது! என்றதும் “அப்படியானால், இனி அவரை நீங்க தம்பி கல்யாணத்துக்கு வரச் சொல்லாதீங்க பெரியப்பா! தம்பியும் வருத்தபட்டான். நான்தான் உங்ககிட்டே பேசி உன் கல்யாணத்துக்கு அவரை வராமே தடுக்கறேன்னு, அவனை சமாதானபடுத்தி ஊருக்கு அனுப்பினேன் என்றாள் பிரியா.

         “இந்த கல்யாணத்தை மட்டும் அவன் பார்த்துட்டு அவன் பழையபடி தான் இது வரைக்கும் இருந்த இடத்துக்கே போயிடுவாம்மா! தன் குழந்தைங்க திருமணத்தை பார்க்கற வாய்ப்பை ௬ட அவனுக்கு நான் தராமல் போனால் எப்படி? அவ்வளவு பெரிய பாவத்தை நான் எப்படி செய்வேன்? பெரியப்பா குரல் கம்ம ௬றியதை கேட்டதும் பிரியாவுக்கு ஆத்திரமாக வந்தது.

             “ யார் பாவி? நீங்களா? இல்லை அவரா? அந்த பாவி மேல் ஏன்தான் இப்படி இரக்கம் காட்டுறீங்களோ தெரியல! தம்பி திருமணத்திற்கு அவர் வந்து பார்த்து விட்டு எங்கேயோ போவதற்கு முன், இப்போதே அவர் ஒரேடியாக போய் தொலைந்தால்தான் என்ன? கோபத்தில் வார்த்தைகள் பிரியாவிடமிருந்து வெடித்தன.

            “பிரியா!!!!! சேகர் ஆவேசமாக கத்தினார். பின் ஒரு நிமிடத்தில் சற்று சுதாரித்து கொண்டவராய் அவள் அருகில் வந்து கையை பிடித்தபடி, பிரியா! என் தம்பியை பற்றி உனக்கு தெரியாது! அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்!

பிரியா! உங்களுக்கெல்லாம் தெரியாத உண்மையை நான் இப்போது அவனுக்கு தந்த வாக்குறுதியையும் மீறி சொல்லத்தான் போறேன். இப்போது நீ புரிந்து கொள்ளும் வயதையும் அடைந்து விட்டாய்! உன் பெரியம்மா சொன்னபடி உன் அம்மாவை அவன் கொல்லவில்லை! அவனைதான் கொன்று சிதைத்து விட்டாள் உன் அம்மா. அந்த பழியை அவன் மீது சுமத்தி விட்டு நீங்கள் சின்ன குழந்தைகள்”னு ௬ட இரக்கம் இல்லாமே தாய் பாசத்தையும், உதறி தள்ளி விட்டு தன் சுகந்தான் பெருசா நினைச்சு என் தம்பியை விட்டுட்டு அவ எங்கேயோ போயிட்டா! விபரம் அறிந்து சென்றேன், அங்கே என் தம்பி “அண்ணா. இந்த ரெண்டு பேரையும், உன் குழந்தைகளோடு நல்லபடியா வளர்த்து ஆளாக்கிற சிரமத்தை உன்கிட்டே கொடுக்கறேன். அம்மா இருந்தும், இல்லையென்று ஆகி விட்டது. “அவள் ஓடிப் போனவள்!” என்ற பேரோடு இந்த குழந்தைகள் இங்கு வளர்வதை விட அம்மா இறந்து போயிட்டா! அப்பா எங்கேயோ போயிட்டார்! அதனாலே அப்பா அம்மா இல்லாத குழந்தைகள் இதுங்கற, பரிதாபத்திலேயே வளரட்டும். அதுதான் இவங்க வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் வராமல் இருக்கும். இதை யாரிடமும் சொல்லாதே! எதையாவது சொல்லி சமாளிச்சுக்கோ! இந்த பிரச்சனைகள் முடிஞ்சதும் நான் எங்கேயாவது போய் என்னால் முடிஞ்ச அளவு உழைச்சு உனக்கு பணம் அனுப்புறேன். இந்த குழந்தைகளை காப்பாத்து!” அப்படின்னு என்கிட்டே சத்தியம் வாங்கிட்டு போனான். நானும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன் அம்மாவை, நல்லவளாக்கி, என் தம்பியை கெட்டவனாக்கி, ஊர் வாயை மூடி உங்களை வளர்த்தேன். உன் திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் போது வந்தவன், உங்களை பற்றி கேள்வி பட்டு எவ்வளவு சந்தோசபட்டான் தெரியுமா? “என் குழந்தைகளா இப்படி”ன்னு எவ்வளவு பூரிப்படைந்தான் தெரியுமா? உன் திருமணத்திற்கும் யாரோ ஒருவன் மாதிரிதான் வந்து பார்த்து வாழ்த்திட்டு போனான். எல்லோரின் உதாசீனத்தையும், வெறுப்பையும் பார்த்தவன், உடனே கிளம்பிச் செல்வதாகதான் சொன்னான். நான் தான் “உன் பையனுக்கும் திருமணம் ௬டி வருகிறது. இருந்து பார்த்து விட்டுப் போ!” என்று தடுத்தேன். அவன் கொடுத்த பணத்தில்தான் உன் திருமணத்தை சிறப்பாக செய்தேன். ஒரு சிறந்த அப்பா இடத்திலே இருந்து, மறைமுகமா மறைஞ்சிருந்து, மானசீகமா, நீங்க நல்லா வாழனுன்னு நினைச்சபடி, வாழ்ந்து வந்திருக்கான் என் தம்பி! அவனையா ‘ஒரேடியா’ போகனுன்னு நினைக்கிறே! மனசாற சபிக்கிறே பிரியா! சொல்லு? உணர்ச்சியுடன் கண்களில் நீர் மல்க கேட்டார் சேகர்.

தன் தாயின் தவறை மறைக்க, அதுவும் தங்கள் நலத்துக்காக, தங்களுக்கு அவப்பெயர் ஏதும் வரக்௬டாது என்பதை கருத்தில் கொண்டு, தன் வாழ்வையே தியாகம் செய்தது அப்பாவா? அவரையா இத்தனை நாள் தவறாக புரிந்து வெறுத்தோம்? இதயத்தில் ௬ரிய கத்தி கொண்டு அறுத்தது போல் பிரியாவுக்கு வலித்தது. தன் தாயினால் தன் அப்பா பட்ட துயரங்களை கேட்டதும் விக்கித்து போனவளுக்கு, இத்தனை நாள் தவறான கண்ணோட்டத்தில் தந்தையை நினைத்த தன் செய்கைக்கு மனதும் கனத்ததால் அவள் விழிகளி்ல் கண்ணீர் ஆறாக பயணித்து ஓடியது.

சட்டென்று எழுந்து பெரியப்பாவின் கைகளை பற்றியபடி, “பெரியப்பா இப்பவே, எங்கள் அப்பாவை பார்க்க போவோமா?” எனக்கு உடனே எங்கப்பாவை பார்க்கனும். அவர் காலில் விழுந்து கதறனும் போல இருக்கு!” என்றபடி விம்மி விம்மி அழலானாள் பிரியா.

நன்றி கூகிள்...

 

Friday, May 30, 2014

தந்தைக்கு ஒரு குறுந்தகடு.. (காணொளி)

அன்பு தந்தையே! எங்களிடமிருந்து உங்களையும், எங்கள் ஆருயிர் அன்னையையும்  கால(ன்)ம் பிரித்திருந்தும் உங்கள் இருவரின் அருகாமையையும் நான் எப்போதும் உணர்ந்து கொண்டேதான் இ்ருக்கிறேன். (என்னையும், என் குடும்பத்தை விட்டு கால(ன்)ம் பிரிக்கும் வரை) உங்களைப் பற்றி, உங்களது நல்ல குணங்களை பற்றி என் வாரிசுக்களுக்கு நிறையவே சொல்லி தாத்தா மாதிரி நல்ல குணங்களுடன் இருக்க வேண்டுமென்று, அன்புடன்தான் வளர்த்திருக்கிறேன். அப்படியே அவர்களும் வளர்ந்து வாழ்வில் நல்ல பெயருடன் தன் காலுன்றி நிற்க ஆரம்பித்து விட்டனர். ஆண்டவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையையும் தந்து சிறக்கச் செய்ய வேண்டுமென நான் தினமும் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் உங்களது ஆசிர்வாதத்தை தினமும் எங்கள் அனைவருக்கும் தந்து கொண்டுதான் இருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

             நான் இதற்கு முன் அன்னைக்கு ஒரு மடல் எழுதினேன். அதையும் நீங்கள் பார்த்து படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை நான் ஏன் சொல்கிறேனென்றால், என் அன்னையும் தங்களுடன்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான்! அன்னையும் நீங்களும் ஒருநாள் ௬ட விட்டு பிரியாமல் அன்புடனும், அனுசரணையுடனும்  வாழ்ந்ததை நாங்கள் பார்த்தவர்களாயிற்றே! அன்னையிடம்தான் நீங்கள் எத்துனை பாசமாக இருந்தீர்கள்! அன்னையும் அப்படித்தான்! உங்கள் மேல் உயிராக, உங்கள் சொல் தட்டி நடவாமல், உங்கள் பெருமைக்கு சிறிதளவும் பங்கம் விளைவிக்காது, உங்களின் உயிராக  இருந்தார்கள். மொத்தத்தில் ஒரு சிறந்த ஆதர்சன தம்பதிகளாக நீங்கள் வாழ்ந்தீர்கள்.
                    
             ஆதர்சன தம்பதி என்றதும் எனக்கு அந்தத் திரைப்படம், உங்களுக்கு மிகவும் பிடித்தமான சூரியகாந்தி திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில் நடித்த நடிகர்களின் நிறைவான நடிப்பும் அதில் வரும் “நான் என்றால்,அது அவளும், நானும்” என்ற பாடலும் தங்களை கவர்ந்ததை அடிக்கடி நினைவு ௬ர்ந்து சொல்லிக்  கொண்டேயிருப்பீர்களே! இப்போதும் அந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம், நீங்கள் சொன்னதெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


            அந்த  திரைப்படத்தில், தன் மனைவியுடன் ஏற்பட்ட மனத்தகராறுடன், ஆதர்சன தம்பதிகள் என பாராட்டுக்கள் பெறும் ஒரு விழாவுக்கு தன் மனைவியுடனே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு உட்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் திரு முத்துராமனின் அற்புத முகபாவங்களையும்,  தன் மனைவி  இப்படி யெல்லாம் இருந்தால் நன்றாகவிருக்கும் என்பது போல் தன் மனதின் தாக்கங்களை அவர் பாடும் பாடல் வரிகளில் புலப்படுத்தும் பாங்கையும், அந்த பாடலை திறம்பட எழுதிய கவிஞர் வாலியையும், சிறப்பாக இசையமைத்த திரு. எம்.எஸ்.வி யையும், அந்தப் பாடலை என்றுமே மறக்க இயலாதபடி மிகவும் அருமையாக பாடியிருந்த திரு. எஸ்.பி.பி யையும், நீங்கள் சொல்லி சொல்லி பாராட்டுவதை இன்றும் நான் அருகிலிருந்து கேட்பது போல் அகம் மகிழ்கிறேன். அந்த பாடலை இதோ! உங்களுக்காக குறுந்தகிடில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டு ரசிக்கவும்.




      இந்த “பாடலின்படி உங்கள் அம்மா என்னுடன் வாழ்ந்திருக்கிறாள். பாடலின் வரிகள் எங்களை பார்த்து இயற்றிய மாதிரி எனக்குத் தோன்றும்!” என்று நீங்கள் அம்மாவை புகழும் போது அம்மாவின்  முகத்தில் தோன்றும் பெருமிதம் கலந்த நாணத்தை சொற்களால் என்றுமே விவரிக்க இயலாது. உணமையிலேயே ஆதர்சன தம்பதி பட்டத்தை பெற ௬டியவர்கள் நீங்கள்தாம் என நாங்கள் நினைக்கிறோம். உங்களை பெற்றோராக அடைந்ததில் மகிழ்வும் பெருமையுடன் ௬டிய கர்வமும் அடைகிறோம்.
     
      எங்களுக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால், நீங்களே மறுபடியும் எங்கள் பெற்றோராக அமையும் வாய்ப்பைத் தர வேணடுமென அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, நீங்களும் எங்கிருந்தாலும், எங்கள் நினைவாகவே இருப்பீர்கள் என்பதையும் புரிந்து கொண்டு, இந்த குறுந்தகிடை பதிந்து முடிக்கிறேன். பார்த்த விபரத்தை உங்களால் பகிர்ந்து கொள்ள இயலாவிடினும், விரைவில் கால(னின்)த்தின் உதவியுடன் தங்களிருப்பிடம் வந்து சேர்ந்த பின் பார்த்த விபரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம். 
                                                          அன்புடன் 
 தங்கள் வாரிசு.