Sunday, August 21, 2022

ராஜாதி ராஜ மார்த்தாண்ட ....ராஜ கம்பீர.....

 முள்ளங்கி கோதுமை பரோட்டா..

இந்த முள்ளங்கி காய் நீர்சக்தி நிறைந்தது. இதில் நிறைய விட்டமின்களாக.  ஏ. பி. சி. இ. கே போன்ற விட்டமின்ககள் உள்ளது. மேலும், உடலுக்கு தேவையான நல்ல பயனுள்ள  பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், கால்சியம், இரும்பு சக்தி, போன்ற பலவகையான சக்தி தருபவைகளுமான தன்மையை கொண்டது இந்த வெள்ளை முள்ளங்கி காய். 

அனீமியாவை தடுக்கும். அதே போல் சீறுநீரக தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனைகளையும் குறைக்கும். கல்லீரலை சுத்தப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதிக இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை இவைகளை கட்டுப்படுத்தும் குணமுடையவை. இதை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், செரிமான பிரச்சனைகளும் வராமல் இருக்கும். 

இத்தனை மருத்துவ குணங்களை உடைய இந்த முள்ளங்கி, து.பருப்புடன் சேர்ந்து சாம்பாராகவும் பரிமளிக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பொரியலாகவும் மாறி ஒத்துழைக்கும். சாதத்தில் கலந்து சாப்பிட காரத் துவையலாவும், மற்றும் ஜுஸாக செய்து அருந்தவும் சம்மதிக்கும். எப்படி செய்தாலும் உடலுக்கு நன்மைகளைத் தரும் காய் இது. இதனுடன் கிடைக்கும் முள்ளங்கி கீரையையும் பல விதங்களில் சமையல் செய்து சாப்பிடலாம். அதை வைத்து பொரித்த கீரைகூட்டாக செய்து சாதத்துடன் கலந்து உண்டால் அதன் ருசியும்  மணமும் வெகுவாகவே நம்மை கவரும். முள்ளங்கி கீரையை வைத்து  பொரியலும் செய்யலாம். இந்த முள்ளங்கியை வைத்து நான் கோதுமை பரோட்டாவாக செய்துள்ளேன். 

இத்துடன் என நான் மேலும் ஆரம்பிக்கும் முன்  "ப்ளீஸ், ப்ளீஸ்.. உன்னைப் போல் நானும்/ நாங்களும் கொஞ்சம் வாசகர்களுடன் கதைக்கிறோமே. .. எனக்கும் ஆசையாக உள்ளது... " என அந்த முள்ளங்கி கெஞ்சி கேட்டு கொண்டதினால், அவைகளுக்கு முடிந்த வரை வாய்ப்பு தர நான் சரியென சம்மதித்து ஒதுங்கி கொண்டேன். 


"சரி. .ரொம்ப சந்தோஷம்... முள்ளங்கி பரோட்டோவிற்காக கலந்து வைத்த கோதுமை மாவாகிய நான். ." என முதலில் நான் கலந்து வைத்த கோ. மா,அது வரை எங்கள் பேச்சுக்களை கவனித்தபடி அமைதியாக இருந்த நிலை மாறி அவசரமாக ஆரம்பித்ததும், அதனை சற்றே கோபமாக முறைத்தது முதலில்் ஆரம்பித்த முள்ளங்கி. "நானே அவர்களிடம் கெஞ்சி கொஞ்சம் நேரம் பேச முதலில் வந்துள்ளேன். அதற்குள் உனக்கு என்ன அவசரம்.. ?" என முள்ளங்கி "முள்" போன்ற தன் வார்த்தைகளை கொண்டு  தாக்குதல் நடத்த ஆரம்பித்ததும், எதிர்ப்பை தாங்க முடியாத கோ. மா மெளனமாக மறுபடி தன்  "கோமா" நிலைக்கே போய் விட்டது. 


" முள்ளங்கியாகிய என்னை நன்றாக அலம்பிய பின் லேசாக சற்று நிறம் மாறியுள்ள பகுதிகளை மட்டும் நீக்கியதும் சிறு துண்டுகளாக இப்படி அரிந்து வைத்திருக்கிறார்கள். ." 


"இதே போல்  வெங்காயத்தையும் நன்கு அலம்பி பின் தோல் நீக்கிய பின்  ஒரளவு பொடிதாக நறுக்கி வைத்துக் கொண்ட படம் இது. "நல்ல வேளை.....வெங்காயம் தன்னால் பிறரை என்றும் அழ வைத்த வருத்தத்தில் இருந்ததினால், நானும் உங்களோடு பேசுவேன்.. என்று கோ. மாவைப் போல் போட்டிக்கு வரவில்லை." மகிழ்வோடு முள்ளங்கி சத்தமாகவே முணுமுணுத்து கொண்ட அந்த சிறிய இடைவெளியில்,... 


"நறுக்கிய முள்ளங்கியுடன் அவரவர் காரத்திற்கு தகுந்தாற் போல் ஒன்றிரண்டு பச்சை மிளகாயும் எடுத்துக் கொள்ளவும். நான் அதிக காரம் வேண்டாம் என்பதற்காக ஒன்றை மட்டும் எடுத்துள்ளேன்." என நான் மறதியில் இயல்பாக ரெசிபியை பற்றி ஆரம்பிக்கவும், முள்ளங்கிக்கு வந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல.... சரி.. சரி.. ஸாரி,..   ஸாரி. . என நான் பல தடவை கேட்ட பின்தான் அது மிக்ஸி எனும் ராட்டினத்தில்  ஜாலியாக ஏற சம்மதித்தது. 



" என்னுடன் துணையாக பச்சை நிற மிளகாயையும் சேர்த்து  மிக்ஸி ராட்டினத்தில்  பல சுற்றுகள் சுற்றி வர இவர்கள் செய்த ஏற்பாட்டினால் என் கோபம் சற்று சாந்தமாகியது. ஆனாலும், எப்படியும் அடுத்து பேச வரவிருக்கும் கடுகார் என்னை சற்றேனும் பேசவே விட மாட்டார் என்பதும் நான் அறிந்ததே....என்ன செய்வது? அவர் என்னை விட சற்று அதிக கோபக்காரர் எனப்பெயர் வாங்கியவர்." 


"ஒரு கடாயில் சிறிது சமையல் எண்ணெய்யுடன் ஒன்று சேர்த்த கடுகாகிய நான். ...இங்கு ஒன்றை குறிப்பிடுகிறேன். நான் இல்லாவிட்டால், எந்த ஒரு சமையல் வகையும் வாசனை மிகுந்ததாகவே மாறாது என்ற பெருமை எனக்குண்டு... ஆனால், அதைப் பற்றி  இவர்கள் கொஞ்சமும் புரிந்து கொள்ளாது நான்" படபடக்கும் , கோபக்காரன். .." என்ற பட்டத்தை மட்டும் சுலபமாக தந்து விட்டனர். இது நியாயமா என வாசகர்களாகிய நீங்களே சற்று யோசிக்கவும். "


" இங்கேயும் நான்தான்.... இன்னமும்  நான் பெருமையோடு படபடவென்ற என் குண இயல்பை காண்பிப்பதற்காக பொறுமையோடு நான் காத்திருக்கும் போது என்னை கேட்காமலே இவர்கள் எடுத்த மற்றொரு கிளிக்." 


" என் கோபம் சற்று தணிந்த பின்  உ. பாவையும்  என்னுடன் சேர்த்தால்தான், சற்று வெட்கப்படும் அளவுக்கு மட்டும் அது முகம் சிவக்குமாம்.. ( ஏனென்றால் அது  உ. பாவை இல்லையா?:))))  ) இல்லையென்றால் என் கோபத்தை சமாளிக்க இயலாமல் அது அப்படியே முகம் வாடி கருகிப் போய் விடுமாம்.:))" 


 " மற்றவர்களை  அழ வைத்து விட்டோமே என முகஞ்சுணுங்கியபடி மகா வருத்தத்துடன் அமர்ந்திருந்த என்னையும், "அந்த இருவரையும் கொஞ்சம் சமரசம் செய்து வை. " என இவர்கள் கேட்டுக் கொண்டதால், காத்திருந்த அந்த இருவருடன் நானும் அந்த அறுசுவை களத்தில் இறங்கினேன்." 


" எப்போதும் தற்பெருமை பேசும் இந்த கடுகாரை விட நான் நிஜமாகிலும் வாசமானவர் என்பதை அந்த கடுகாரே ஒத்துக் கொள்ளும் நிலை வந்த போது, இத்தனை நேரம் மெளனமாக இருந்த முள்ளங்கியார்  "என்ன நான் இருப்பதை சற்றும் மறந்து விட்டீர்களா? என என் அருகில் வந்து விட, நான் விட்டுத் தருவதில் உள்ள மென்மையை உணர்ந்தபடி, மெளனமாகி விட வேண்டிய கட்டாயத்திலும், நான் உங்களை வேண்டுமென்றே அழ வைக்கவில்லை......பெருமைக்காக சொல்லவில்லை.. என் இயல்பே அப்படித்தான்.. புரிந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளையும் உங்கள் முன் வைத்தபடி ஒதுங்குகிறேன். வேறு வழி....?" 

 
இப்போது "முள்ளங்கியாகிய நான்  ராட்டினத்தில் ஆசை தீர சுற்றிய மகிழ்வோடு இவர்களுடன் சரி சமமாக கலந்து விட்டேன். எப்படியிருந்தாலும் என் பெயர்தான் இறுதி வரை நிலைத்து நிற்கப் போகிறது எனத்தெரியாமல் இவர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். சரி. . சரி ஏதோ அறியா பிள்ளைகள். .பேசி விட்டு போகட்டும்.பொறுத்துக் கொண்டு இனி நான் சொல்வதை மட்டும் கேளுங்கள். ... என விண்ணப்பிக்கிறேன். என்ன சரிதானே. ...?"  


" அதன் பின் நான் இப்படியே என்றும் வெளுத்த கலராக இருப்பதை விரும்பாத இவர்கள் மஞ்சள் , மற்றும் மிளகாய் பொடியின் சிகப்பு , தனியாவின் தனித்துவமான கலர், போன்ற கலர்களோடு, மற்றும் என் கலரை ஒத்த உப்பின் கலர் இவைகளினால் என்னை அலங்கரித்து அழகு பார்த்தனர். உண்மையிலேயே இவர்கள் என்னுடன்  இணைத்த கலர்களில் என்னைக் கண்டு நானே மயங்கித்தான் போய் விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்". 


" இதோ.   நீங்களே சந்தேகமற ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து ரசியுங்கள்." 


"என்ன.   நான் சொல்வது சரிதானே. ... ஒவ்வொரு கலரும் சேரச் சேர நான் அழகில் எப்படி ஜொலிக்கக் போகிறேன் என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?" 


இதோ... முத்தாய்ப்பாக ஒரு டச்சப். அலங்காரம் முடிந்தவுடன் வாசமான நறுமணம் பூசுவது போல ஒரு இளஞ்சிவப்பு கலருடன் மீண்டும் ஒரு இணைப்பு. இதைக்கூட இவர்கள் ஏதோ நான் அறியாத மொழியில் எழுதியிருக்கிறார்கள். பாருங்கள்..."


"இப்போது நான் அமர அந்த கோ. மாவை "கோமா" தூக்கத்திலிருந்து எப்படியோ சுறுசுறுப்பாக எழுப்பி சிம்மாசனமாக இருந்து உதவ ஆணைப் பிறப்பித்தார்கள்." 


" அதுவும்  மெளனமாக விரிந்து பரந்து குறிப்பிட்ட அதன் எல்லைக்குள் அழகிய ஒரு சிம்மாசனமாக ஆயிற்று. பின்னே.. .. அழகான என்னை தாங்கிக் கொள்ள  அது கொடுத்து வைத்திருக்க வேண்டுமே..." 


" இதோ... ராஜாதிராஜாவாக நான் அமர்ந்து விட்டேன். இந்த ராஜ்ஜியத்தில் விரிந்து பரந்து எத்திக்கும் என் கொடியை நாட்டப் போகிறேன். "


" இதோ.. படிப்படியாக இவர்களால் என் ஆட்சியில் சில நல்ல மாற்றங்களோடு... "


என் கொற்றக்கொடியின் நிழலில்,  ..


மாற்றங்கள் பல கண்டு. .. 


ராஜ்ஜியம் முழுவதும் நல்லாட்சி விரிந்து பரவி.. ..


இந்த செங்கோலின் உதவியுடன் சிறப்பான ஆட்சியில்... 


எப்படி முழு நிலவின் பூரணத்துவத்தோடு. . 
 

பொங்கிப்
பூரித்து. . .


பூரித்த.. .


மகிழ்வில். ... 


மேலும் அழகு சேர்க்க நெய் எனும் திரவயத்துடனான  முகப்பூச்சுடன் மினுக்காக அடுக்கடுக்காக வந்த... 


"பெருமைகளில் முகம் சிவக்கும்படியான ஆட்சியாக அமைந்து விட்டது பாருங்கள். .. இப்போதுதான் என் மனதுக்குள் ஒரு மகிழ்வான, நிறைவான புளகாங்கிதம் வருகிறது. .இது நியாந்தானே... "" 
 

இந்த நல்ல கூட்டணி ஆட்சியை நீங்களும்  மனதாற வாழ்த்தி மகிழுங்களேன்.  உங்களின் நல்ல அன்பிற்கு எந்நாளும் எங்கள் நன்றிகள். 🙏.

இனி நான் மேற்கொண்டு சொல்ல என்ன இருக்கிறது? இதற்கு மேலும் ஏதாவது கூறி  விவரித்தால், வீடு தேடி வந்து எனக்கு மட்டும் அடி விழும் வாய்ப்புள்ளது என்பதால் 😀😀 அதி பொறுமையாக இதுவரை எங்களுரையை கேட்டு புரிந்து கொண்டு வாழ்த்தியமைக்கு 👍👍நானும் நன்றி கூறி விலகுகிறேன்...:)🙏.

பி. கு. .(இன்னும் அதுவேறேயா? என இதையும் 😇😇😇 களுடன்  படிக்கும் அனைவரும் 🤔 யுடன் முணுமுணுப்பது கொஞ்சம் லேசாக காதிலும் விழுகிறது.:)))) ) 

இன்று எ. பியில் சகோதரி கீதாரெங்கன் ரோஜாகூட்டத்திற்கு நடுவே காத்திருந்த புறாவைப்பற்றிச் சொன்னதை படித்ததும், என் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் முள்ளங்கியைப் பற்றிய நினைவு வந்து விட்டது. 

தவிரவும் என் கைப்பேசி வேறு கொஞ்ச நாட்களாக என்னிடம் பிணக்கு காட்டி மகிழ்கிறது. அதன் மூடுக்கு தகுந்தாற் போல்  நான் அனைவரின் பதிவுக்கு சென்று படித்து கருத்துக்கள் தந்து, என் பதிவில் என் புராணங்களையும் வெளியிட்டு, அதற்கு வரும் (வந்தால்) கருத்துகளுக்கு பதிலளித்து மகிழும் வாய்ப்பையும் அவ்வப்போது முடக்கி இன்பம் காண்கிறது. எப்பவுமே எனக்கு நடக்க நடக்க நாராயணன் செயல்தான். வேறு என்ன செய்வது.? 

இது எ. பிக்கு அனுப்பலாமென்றால் இவ்வளவு பெரிதாக நீட்டி முழக்கியதை அனுப்ப கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இரண்டாவதாக, இந்த ரெசிபியை அன்றொருநாள் சகோதரி பானுமதி அவர்கள் எ. பியில் பகிர்ந்த நினைவு....அதனால் என் பதிவுகளை அன்புடன் படிக்கும் என் அபிமான சகோதர சகோதரிகளுக்காக இங்கேயே இதை பகிர்ந்து விட்டேன். நன்றி. 🙏. 

30 comments:

  1. இதோ வந்து விட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      வாங்க. வாங்க. பதிவுக்கு வந்த தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அன்றாடம் நாம் பயன்படுத்தும் காய் கனிகள் எல்லாவற்றுக்கும் உயிரும் உணர்வும் உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.. தாங்கள் ஒருபடி மேலே போய் உரையாடுவதைப் போல பதிவு செய்திருக்கின்றீர்கள்..

    அருமை.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம் ... அதற்கும் உயிரும், உணர்வும் இல்லாவிட்டால் எப்படி வளரும்.? அதனால்தான் வளராத மனமொடிந்த செடி, கொடி, மரங்களிடம் அன்பாக நாலு வார்த்தை தினமும் பேசினால், அதன் பயனை அது பிரதிபலன் எதிர்பாராமல் தானாகவே தருமென சொல்வார்கள். என்றும் உண்மைதான் அதன் சாசுவதமான உணர்வுகள். அதனை விரும்பி நாம் சமைத்தாலும், சாப்பிட்டாலும் நம் உடலுக்கும் தீங்கேதும் தாராமல் அதன் பலனை கர்ம சிரத்தையாய் தருமல்லவா? அப்படித்தானே நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். நம்புகிறோம்.

      தங்களது கருத்துக்கும், பாராட்டுதலுக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. காய் கனிகள் அனைத்தையும் நமக்கு அளிக்கும் தேவி சாகம்பரி எனப்படுவாள்..

    விவசாயி விதை போடுகின்றார்.. விளைகின்றது..
    காசு கொடுக்கின்றோம்.. கடைக்காரர் கொடுக்கின்றார் என்பதல்ல வாதம்..

    விதை போட்டாலும் விளைதல் வேண்டுமே.. காசு கொடுத்தாலும் கையில் கிடைக்க வேண்டுமே..

    காய் கனிகளை உண்ணும் போது சாகம்பரி தேவியை மனதார நினைத்து இறைவனை வணங்க வேண்டும் என்பர் ஆன்றோர்..

    காய் கனிகளை சிரத்தையுடன் சமைப்பதும் சமைக்கப்பட்ட உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதுமே சாகம்பரி தேவிக்கான உபாசனை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /காய் கனிகள் அனைத்தையும் நமக்கு அளிக்கும் தேவி சாகம்பரி எனப்படுவாள்/

      தகவலுக்கு நன்றி. உண்ணும் உணவை தரும் தேவியை அன்னபூரணேஸ்வரி என்றுதானே சொல்வோம்.

      /காய் கனிகளை சிரத்தையுடன் சமைப்பதும் சமைக்கப்பட்ட உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதுமே சாகம்பரி தேவிக்கான உபாசனை./

      ஆமாம் உண்மைதான்.. ஆகாரம் அனைத்தையும் நமக்குத் தரும் தேவியை இப்படித்தான் மனதில் எண்ணி உபாசனை செய்ய வேண்டும். நல்லதொரு தகவல் கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. சாகம்பரி தேவி பற்றிய தகவலை இப்போதுதான் அறிகிறேன். - 4

      Delete
  4. அடுத்த பிறப்பினை எடுக்கும் ஆன்மாக்கள் மழையுடன் மண்ணில் கலந்து காய்கனிகளில் ஊடுருவி நம்முடலில் உயிரணு வடிவாகி தங்குகின்றன.. காலம் கூடி வரும் போது கருவாகி உயிராகின்றன என்பதும் ஆன்றோர் அறிந்து சொல்லியிருப்பது..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். தங்கள் கருத்து உண்மைதான்... மழையாகி, பயிராகி நம்முடலில் கலந்து ஜனனம் எடுக்கின்றனர் என்று பெரியவர்கள் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன். வான் வெளியில் நட்சத்திரங்கள் நகர்ந்து சென்று பூமியில் விழும் போதும் நம் முன்னோர்களின் காத்திருக்கும் ஒரு பிறவியாக எங்கள் பாட்டி இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தங்கள் நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. மிக அருமையான உரையாடல்.
    முள்ளங்கியின் நன்மைகளை கூறியது அருமை.
    முள்ளங்கி கோதுமை பரோட்டா நன்றாக இருக்கிறது.
    செய்முறையை சொன்ன விதம் அருமை.
    //இதோ... முத்தாய்ப்பாக ஒரு டச்சப். அலங்காரம் முடிந்தவுடன் வாசமான நறுமணம் பூசுவது போல ஒரு இளஞ்சிவப்பு கலருடன் மீண்டும் ஒரு இணைப்பு. இதைக்கூட இவர்கள் ஏதோ நான் அறியாத மொழியில் எழுதியிருக்கிறார்கள். பாருங்கள்..."//

    படிபடியாக அலங்காரம் செய்து கொண்டது சூப்பர்.
    இளஞ்சிவப்பு கலர் அழகுதான்.

    உங்களுடன் கைபேசி பிணக்கு நீங்கி நட்புடன் இருக்க வாழ்த்துகள்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நீங்கள் தந்த கருத்துக்கள் மன மகிழ்வை தருகின்றன.

      /உங்களுடன் கைபேசி பிணக்கு நீங்கி நட்புடன் இருக்க வாழ்த்துகள்./

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இப்போது ஏதோ ஒத்துழைக்கிறது. தீடிரென யாரிடமிருந்தாவது கால், மெஜேஸ் என வந்து விட்டால், அப்போதுதான் ஏற்றிய அத்தனை சார்ஜையும் கரைத்துக் கொண்டு ஸ்விஸ் ஆப் ஆகி விடுகிறது. போனை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். இதனால்தான் எனக்கு எல்லோரின் பதிவுகளுக்கும் உடனுக்குடன் வர இயலவில்லை. தாமதமாகிறது. தீடிரென நன்றாக உள்ளது. இப்போது கடவுள் புண்ணியத்தில் பதில் கருத்துக்கள் தர ஒத்துழைத்து வருகிறது. தங்கள் கருத்துக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. துரை அண்ணா கூட முள்ளங்கிச் சட்னி செய்முறை எபியில் திங்க பதிவில் சொல்லியிருந்தார். செம டேஸ்ட் அதுவும். சப்பாத்தி, சாதம் எல்லாவற்றிற்கும் பொருந்தி போகும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆமாம் . அவரின் பகிர்வாக எ. பியில் நானும் படித்திருக்கிறேன். நானும் அடிக்கடி முள்ளங்கி துவையல் செய்வேன். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஆமாம் காய்களுக்கும் உண்டு சக்தி. எனர்ஜி என்று சொல்வார்களே அது சக்திதானே! அதனால்தானே பொங்கல் கொண்டாடுகிறோம். சூரிய ஒளியின் சக்தியை தண்ணீரின் சக்தியை என்று தன்னுள் எடுத்துக்கொண்டு அந்தச் சக்தியை நமக்கும் தருகின்றனவே! இயற்கையின் படைப்பு! சக்தி நிறைந்தவையே. அழகான உரையாடல் பொருந்திப் போகிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்தும் உண்மைதான்.. காய்களின் தேவைகள் அதிகரிப்பதற்காகத்தான் பொங்கலன்று சூரிய பகவானுக்கு அவருக்கு நன்றிக்கடனாக காய்களுடன் அனேக விருந்து செய்து சமர்பிக்கிறோம். வெய்யில் மழையில் ஜீவன் பெறும் காய்கறிகள் நமக்கும் ஊட்டத்தையும், சக்தியையும் தருகிறது.

      தங்களது அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. சரியான பெயர் ஷாகாம்பரி
    ஸ்ரீ ஷாகாம்பரி தேவியானவள் சாக்ஷாத் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபம். 
    மஹா விஷ்ணுவின் உத்தரவின் பேரில் ஷாகாம்பரி தேவி தெய்வீக மலையாகிய திருக்கயிலாயத்தில் சுயம்புவாகத் தோன்றினாள்..
    கீரைகள் காய்கள் பழங்கள் இவற்றுக்கு இவளே அதிபதி..
    ஷாகாம்பரி தேவியின் திருமேனியில் ஆயிரம் கண்கள்.. இதனால் சதாக்ஷி எனும் பெயரும் உண்டு..
    .
    நன்றி: விக்கி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் மீள் வருகை தந்து மஹாலக்ஷ்மியின் மறு அவதாரமாக விளங்கும் ஷாகாம்பரி தேவியின் சிறப்புக்களைப் பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி. விபரங்கள் அறிந்து கொண்டேன். ஏனைய தகவல்களுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கனகதாரா ஸ்தோத்திரத்தில் சாகம்பரி எனும் பெயர் வழங்கி வரும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அப்படியா? மேலும் விளக்கமாக தந்த தகவல்களுக்கும் மிக்க நன்றி. விபரங்கள் அறிந்து கொண்டேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. எழுதிய விதத்தை மிகவும் ரசித்தேன்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

      தங்கள் கருத்துக்கும், பாராட்டுதலுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. இந்தப் பதிவை நான் மிஸ் செய்திருக்கிறேன்!  
    முள்ளங்கி காயாக மட்டுமே சமைத்திருக்கிறோம்.  கீறி உபயோகித்ததில்லை.  அதுவும் சாம்பார், பொரியல் மட்டும்!  அம்மா முள்ளங்கி நறுக்கும்போது  சில வில்லைகளை வாங்கி உப்பில் தோய்த்து சாப்பிடுவதைப் பார்த்து நானும் செய்திருக்கிறேன்!  நிறைய சாப்பிட்டு விட்டால் நாக்கு ஒரு மாதிரி ஆகி சுவையே தெரியாமல் போய்விடும்! - 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் சொல்வது போல் நானும் இந்தக்காய் கொண்டு பொரியல் சாம்பார் மட்டுந்தான் செய்திருக்கிறேன்.இன்றுதான் ஒரு வித்தியாசமாக இந்த முள்ளங்கி சப்பாத்தி செய்தேன். உடன் நிறைய போட்டோக்கள் எடுத்ததும், இப்போது பகிர்ந்து விட்டேன்.

      ஆம்.. பச்சை காய்கறிகள் நிறைய சாப்பிட முடியாது. ஆனால் சிலர் அதையே உணவாக ஒரு பொழுது எடுத்துக் கொள்வார்கள். அவர்களின் பக்குவத்தை பாராட்ட வேண்டும்.

      நானும் மிக மிக தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. உரையாடல் சுவாரஸ்யம்தான் என்றாலும் எது எதனோடு கலக்கிறது என்பது மனதில் பதியாமல் போகிறது!  அல்லது நான்தான் எங்கோ கவனமாக படிக்கிறேனோ...  வெங்காயத்தை நீங்கள் மிக்சியில் சேர்த்து சுற்றவில்லைதானே? - 2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      ஓ.. இதன் உரையாடல் புரியவில்லையா? பதிவு படங்கள் மிக நீளமாக சென்றதினால் புரியவில்லை போலும். வெங்காயத்தை மிக்ஸியில் முள்ளங்கியோடு சேர்த்து போடவில்லையே... தனியாகத்தானே வதங்கி கொண்டுள்ளது. படத்தில் தெரிகிறதே..

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. எபியில் திங்க பதிவு ஷார்ட்டேஜ்தான்.  ஆனால் என்ன, துரை செல்வராஜூ ஸார் சொல்வது போல எபிக்கு அனுப்பினால் வெளியாக கொஞ்சம் தாமதமாகும்!  இங்கு உடனே வெளியாகி விட்டது!  முள்ளங்கி ஸ்டப்ட் பரோட்டா ஜம்மென்று பூரித்து வந்திருப்பபது சிறப்பு.  பார்த்ததும் சுவைக்கும் ஆவல் வருகிறது. - 3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். எபிக்கும் நான் சில தடவைகள் சமையல் பதிவுகள் அனுப்பியுள்ளேனே.. எனக்கு முன் அனுப்பியவர்களின் ரெசிபிகளின் வெளீயீட்டுக்காக காத்திருப்பது இயல்புதானே.. இதில் என்ன தவறுள்ளது? ஆனாலும் இந்த முள்ளங்கி சப்பாத்தி ஏற்கனவே நிறைய பேர் எபியில் வெளியிட்டு விட்டார்களே என்ற எண்ணத்தில் இங்கு பகிர்ந்தேன். வேறு ஒன்றும் இல்லை.

      பரோட்டா நன்றாக வந்திருப்பதாக சொன்னதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றி

      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. தங்களது கருத்துக்கள் வரும் போது என் கைப்பேசி மாற்றத்தினால் என்னால் உடன் பதிலளிக்க இயலாது போய் விட்டது. . இன்று ஏதோ இப்படி பழையதை பார்த்தவுடன் உடன் பதில் தருகிறேன். தாமதத்திற்கு அனைவரும் மன்னிக்கவும். 🙏.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. சொல்லிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது.

    இப்படி எல்லா காய்கறிகளும் பேசினால் அவைகளை நறுக்கி குழம்பு வைக்க மனசு வராதே....

    ஒரு வாரமாக தங்களை பதிவுகளில் காணோமே என்று தேடி வந்தபோது தங்களது பதிவைக் கண்டேன்.

    ReplyDelete
  15. முள்ளங்கி பரோட்டா நன்றாக வந்திருக்கு.

    எழுத்து ரசிக்கும்படி இருந்தது.

    பரோட்டா செய்த நேரத்தைவிட படங்கள் எடுக்க அதிக நேரம் ஆயிருக்கும் போலிருக்கே ஹாஹாஹா

    ReplyDelete
  16. முள்ளங்கி பராந்தா நானும் அடிக்கடி பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் முள்ளங்கியை நறுக்கி அரைதெல்லாம் பண்ணினதில்லை. துருவிக் கொள்ளுவேன். அதிலேயே வெங்காயம், ப.மி./கொம/.மி.பொ/ம/பொ.த.பொ/ உப்பு தேவையானால் கரம் மசாலா சேர்த்துக் கொண்டு நன்கு வதக்கிக் கொண்டு மற்றவை உங்கள் படத்தில் உள்ளபடி. தொட்டுக்கத் தயிரில் கலந்த வெங்காயம் அல்லது காரட்/அல்லது தக்காளி.வெள்ளரிக்காய் ஏதேனும் ஒன்றில்

    ReplyDelete