Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, October 25, 2022

சிவகாமியின் பந்தம் 4 ம் இறுதிப்பகுதி.

 இந்தக் கதையின்  3 ம் பகுதியின் சுட்டி. அதற்கு முந்தைய பகுதிகளான பகுதிகளான 2ஆம், 1ஆம் பகுதிகளின் சுட்டி. 

அக்கா.. நான் இப்போ நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீ உடன் பிறந்த எங்களுக்காக உன் வாழ்க்கையே விட்டுத் தந்திருக்கிறாய்..! அப்பாவின் முடிவையும், அதனால் நீ பட்ட கஷ்டங்களையும் எனக்கு ஒரளவு விபரம் தெரிந்த பிறகு அம்மா இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள்.....! முதலில் நீ, நான் என் விருப்பத்தை சொன்னவுடன்  இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு என்ன காரணம் என எனக்குத் தெரியாது. ஆனால், அதன் பின் நான் ஊரிலில்லாத போது இவள் வீட்டுக்கு சென்று பேசி, நீ கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டதற்கு காரணம் மட்டும் இவளாலேயே  தெரிய வந்தது. அதனால் நீ விரும்பிய நடராஜன் மாமாவின்  சொந்த  மகளல்ல இவள்....! ஒரு விபத்தில் உயிரிழந்த தன் அக்காவின் மகளான இவளை  உன்னைப் போலவே  அவரும் தன் சொந்த  மகளாக  நினைத்துக் கொண்டு திருமணமே செய்து கொள்ளாமல் வளர்த்து வருகிறார் என்ற உண்மை தெரிந்ததும், நீ உன் முடிவை மாற்றிக் கொண்டாய். .! அப்படித்தானே..... அக்கா.. !  கணேசன் பேச பேச சிவகாமி  அதிர்ந்தாள். .

சற்று சுதாரித்தபடி, "சரி..!! சரி..!! எப்படியோ எல்லாவற்றையும் தெரிந்து  வைத்திருக்கிறாயே. ஆமாம்.. எல்லாமே உண்மைதான். . .!!! நான் முதலில் மறுத்ததற்கு அதுதான் காரணம்...! உன் மனைவி தன் தந்தையெனக் கூறி நடராஜனின் போட்டோவை உன்னுடன் வந்த அன்று காண்பித்ததும், என் மனதே சரியில்லை.. . ...! என் பழைய கால வாழ்வின் நினைவுகளோடு சம்பந்தப்பட்டவரின் மகள் என்பதால், மீண்டும் அவரை எப்படி சந்திப்பது, எப்படி பேசுவது என்றுதான் முதலில்  உன் திருமணத்திற்கு தடை சொன்னேன். ஆனால்,.. ..!! என்றவளை அவசரமாக இடைமறித்தான் கணேஷ். 

 "அதுதான் இப்போ உண்மைகள் எல்லாம்  தெரிய வந்துடுச்சே அக்கா....!!  நடராஜ மாமா இவளின் சொந்த அப்பா இல்லை. .! அவரின் அக்கா பெண்தான் இவள் என்ற உண்மை உனக்கு மட்டுமில்லாமல், எங்களுக்கும் தெரிய வந்துடுச்சே.. .!! நீ இத்தனை காலம் எங்களுக்காக உன் திருமணத்தை ஒதுக்கிய மாதிரி, அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை காப்பதே கடமையென வாழ்ந்து வந்துள்ளார் என்பதை அறிந்த பின், நீங்கள் இருவரும் இனியாவது  திருமணம் செய்து கொண்டு  எங்களுக்காக சேர்ந்து வாழலாம் இல்லையா? அதைத்தான் நான் தரும் பரிசென்று உனக்கு கூறி, உன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம் என நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தை உன்னிடம் இன்று கூறி சம்மதம் பெறவும்  நினைத்தோம். ..!" என்றபடி தன் மனைவியை பார்த்தான் கணேசன்.

கணநேரம் மௌளனமாக இருந்த சிவகாமி," தம்பி உனக்கு இன்று திருமணம் உன் விருப்பப்படி நடந்தற்கே நம் அம்மாதான் காரணம் தெரியுமா?  நான் இல்லை.. " என்றவள் அன்று அம்மாவின் கடிதத்தை படித்த விபரங்களையும், நடராஜனின் கடிதத்தை சேர்த்து வைத்து படித்து புரிந்து கொண்டதையும், அதன் பின்னும்  ஆயிரம் தயக்கங்களுடன், நடராஜனை சந்தித்துப் பேசி," நம் தயக்கங்களுக்காக நம் குழந்தைகளின் வாழ்க்கையை பலியிட வேண்டாமென கலந்தாலோசித்து தீர்மானித்து அவர்களின் திருமணத்திற்கு நாள் குறித்ததையும்" விளக்கமாக கூறக்கூற கணேசன் ஆச்சரியமாக கேட்டபடியிருந்தான்.

"அக்கா.  .. எவ்வளவு நடந்திருக்கு.!!!!.நீ ஒன்றுமே கூறவில்லையே. .?  சரி.. . அப்பவும்  நீ சொன்ன பிரகாரம் அவர் சிவகாமி இல்லாத நடராஜனாகத்தானே உன்னை  மறுபடி சந்தித்திருக்கிறார். அப்போதும் உன் மனம் சஞ்சலத்திலிருந்து விடுபடவில்லையா? எங்களுக்காகவாவது நீயும், அவரும் உங்கள் வயதின் காரணத்தை ஒரு பொருட்டாக கூறாது அவரை திருமணம் செய்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கலாம் இல்லையா? "கணேசன் குரலில் ஆர்வம் மேலிட கேட்டான். 

தம்பி.. இது என்றுமே சாத்தியமில்லையடா... மேலும்,," என்று பேச ஆரம்பித்த அக்காவை பேச விடாமல்  தடைசெய்தபடி "அக்கா.. நீ கொஞ்சம் உன்னை, உன் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு எனக்காக யோசனை செய். உன் வாழ்வில் உன் விருப்பத்தை நம் அப்பா வேண்டாமென மறுத்த அந்த நிகழ்வுக்குப் பின் உனக்காக எதுவும் விருப்பப்படாமல், எங்களுக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறாய்..!! உன் வாழ்க்கையே இதுவரை ஒரு தவமாக கழிந்திருக்கிறது . இப்போது அந்த தவத்தின் பலன் கைமேல் கிடைக்கும் போது ஏன் வேண்டாமென மறுக்கிறே...!" என்றபடி  அவள் கைகளைப்பற்றி கெஞ்சாத குறையாக கூறினான் கணேசன். 

" தம்பி.  .. நீ இன்னமும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என எனக்கு இப்போது தோன்றுகிறது. தவமாக வாழ்வை கழித்து விட்டேன் என்று கூறுகிறாய்...! அப்படி பார்த்தால் அந்த தவத்திற்கு பலனை எதிர்பார்த்தா அந்த தவத்தை மேற்கொண்டேன்.. . இல்லையே...! ஒருவர் தான் செய்யும் தவத்திற்கு பிரதிபலனாக எந்தவொரு பலனையும் எதிர்பாராது தவத்தை மேற்கொள்வதுதான் அந்த தவத்திற்கே ஒரு சிறப்பு தெரியுமா? 

அன்று அவரை அவர் கடிதத்தில் எழுதியிருந்தபடி சந்திக்கும் போது உண்மையிலேயே எனக்கும் ரொம்ப பெருமையாகத்தான்  இருந்தது. அவருக்கும் அது மனதுக்குள் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பது அவரின் முக பாவத்திலும், பேச்சிலும் உணர்ந்து கொண்டேன். ஆனால், நாங்கள் மணம் செய்து கொள்ளாமல் ஒருவரின் நினைவுகளுடனே வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டோம். இறைவன் எங்களுக்காக  அளித்த செல்வங்களாக உங்கள் இருவரையும் ஏற்று வளர்த்து ஆளாக்கி விட்டோம் என்ற சந்தோஷத்தை தவிர்த்து, அவரிடமோ, என்னிடமோ வேறு எந்த உணர்ச்சிகளும் அன்று இடம் பெறவில்லை. அதனால் இத்தனை நாள் நாங்கள் மனதால் வாழ்ந்த வாழ்க்கைக்கு திருமணம் என்ற முடிச்சிட்டு கொச்சைப்படுத்த நாங்கள் இருவருமே விரும்பவில்லை..! இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு....!!!! இனி எங்கள் சந்தோஷம் உங்களிருவரின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மட்டுந்தான்..!! 

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்வை கண்குளிர கண்டு நாங்களும் சந்தோஷம் அடைவது மட்டுந்தான் மிகுதி இருக்கும் எங்கள் வாழ்வின் சந்தோஷமும். எங்கள் பந்தமும் உங்கள் இருவருடன் மட்டுந்தான்...! !! இதை அன்றே நாங்கள் தெளிவாக பேசி முடித்து விட்டோம். இனி இதைப்பற்றி வேறு எதுவும் பேசி என்னை துன்புறுத்தாதே. .!!! "  சற்று உணர்ச்சிவசப்பட்டவளாக சிவகாமி கூறி நிறுத்தினாள். 

அவளின் அழுத்தமான பேச்சின் முடிவு அவர்கள் இருவரையும் சற்றே திகைக்க வைத்தது. வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும், கவனமான அக்கறையுடனும், அழுத்தமான பொறுப்புணர்வுடனும் முடிவு எடுக்கும் தன் அக்கா ஒரு தெய்வப் பிறவியாக கணேசனின் கலங்கிய கண்களுக்கு தெரிந்தாள். அவர்களிடையே நிலவிய சிறிய மெளனம் அவளின் மன உறுதியை அங்கு ஆழமாக உழுத பெருமையில் சந்தோஷிப்பது போல் தோன்றியது. 

" அக்கா. ..! உன் மனதை புரிந்து கொள்ளாது என்னென்னவோ பேசி விட்டேன். என்னை மன்னித்து விடு..! நீங்கள் இருவரும் மனமொத்து எடுத்த முடிவு என்னை ஆச்சரியபடுத்துகிறது  இனி வரும் உன் வாழ்வில் உனக்கு  துணையாக நாங்கள் இருவரும் எப்போதுமே  உன்னுடன் இணைந்திருப்போம். இது சத்தியம் அக்கா... " என்று விழி கலங்கியபடி கூறிய கணேசனை  தானும் கலங்கிய விழிகளுடன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவர்களின் அன்பான பந்தம் புரிந்த மன நிறைவில், சிவகாமியின் தோளோடு தானும் அணைத்தாற் போல நின்றபடி கண்ணீர் உகுத்தாள் கணேசனின் மனைவி. 

அங்கே அவர்களின் இடையே உள்ள வாழ்வின் பந்தங்கள் புரிந்த நிம்மதியில் புகைப்படத்திலிருக்கும் தங்கள் அம்மா தான் பெற்ற செல்வங்களின் நல்ல மனதினை கண்டு நீடூழி வாழ ஆசிர்வதிப்பதை உணர்ந்தாள் சிவகாமி.

கதை நிறைவுற்றது.

இக்கதையை என்னுடன் தொடர்ந்து வந்து 4 பகுதிகள்தோறும் வாசித்து என் எழுத்துகளுக்கு பக்கபலமாக நல்ல கருத்துக்களை தந்த என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 

Saturday, October 22, 2022

சிவகாமியின் பந்தம் 3 ம் பகுதி.

இது இந்தக்கதையின் கடந்த முதல், இரண்டாம் பகுதியின் சுட்டிகள். 

1. ஆம் பகுதி சுட்டி

2. ஆம் பகுதி சுட்டி

ஆயிற்று... கணேசன் ஊரிலிருந்து அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய  மூன்றாம் நாள் மாலை அவன் இரவு சாப்பாட்டை முடித்தவுடன், "தம்பி உன்கிட்டே ஒன்னு சொல்லனுன்னு  நீ  ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே சொன்னேனே...  மறந்துட்டியா?" என்றபடி சிவகாமி ஹாலில் சோபாவில் அவனருகே வந்தமரவும். "ஆமாக்கா.... நினைவிருக்கு.  என்ன விஷயம்னு சொல்லு..! " என்றபடி  சோபாவில் சாய்வாக  அமர்ந்திருந்த கணேசன் சற்று நிமிர்ந்து எழுந்து அமர்ந்தான் ஆர்வமாக. 

"தம்பி.. உனக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்துட்டேன்.. என்று மகிழ்ச்சியான சிரிப்புடன் சொன்ன  சிவகாமி அவன் முகம் நொடியில் மாறுவதை கவனித்தவளாய், " என்ன பெண் யார் என இப்பவே சொல்லவா? இல்லை நாளைக் காலையிலேயே நிதானமா தெரிஞ்சுகிறயா?" என்று மறுபடியும் முகம் மலர சிரித்தபடி கேட்டாள். 

ஒரு நொடியில் தன் முக பாவத்தை சட்டென மாற்றிக் கொண்டவனாய், "இல்லையில்லை இப்பவே சொல்லேன்க்கா..." என்றான். ஆனால்  குரலில் அவ்வளவு சுரத்தில்லாதவனாக..! 

" சரி.. இப்போதே சொல்லவா? என்று புன்னகையுடன் சற்று இடைவெளி விட்ட பின் "வேறு யார்? எல்லாம் நீ பார்த்து வைத்திருக்கும் பெண்தான்....!! இப்ப உனக்கு சந்தோஷந்தானே.. .! " சிவகாமி இப்படி அவனையே ஒரு கேள்வி கேட்டதும், அவனுக்கு கால்களுக்கு அடியில் தரை நழுவுவது போல் ஒரு கணம் அதிர்ச்சி உண்டாக்கியது. 

"அக்கா. . என்னக்கா சொல்கிறாய்? என்னால் இதை நம்பவே முடியவில்லையே...!! எப்படி இந்த அதிசயம் இந்த ஒரு வாரத்தில், நடந்தது. .? அவன் வார்த்தைகள் தடுமாறியபடி சில விநாடிகள் கழிந்த பின்பாக திகைப்புடன் கேட்டவாறு விரைவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் . அவன் முகம் அளவு கடந்த சந்தோஷத்தில் விகசிப்பதை கண்டதும் சிவகாமியின் உள்ளமும் பூரித்தது. 

தம்பி.. உன் விருப்பத்தை நான் என்றாவது மீறி சொல்லியிருக்கிறேனா ? நீயுந்தான் என் பேச்சை எப்போதாவது மீறி நடந்திருக்கிறாயா? என்னவோ எனக்கு அன்று அப்படி தோன்றியது. பின் நீ இப்போது ஊருக்கு சென்றிருந்த போது யோசித்து பார்க்கையில், உன் மனநிலையை உணராது, வேறு பெண்ணை உனக்கு மணமுடித்தால், நீ வாழ்நாள் முழுக்க எவ்வளவு மன வேதனையடையோ எனத் தோன்றியது. அதனால்தான் உடனே அவளை நீ விருப்பப்பட்ட பெண்ணை உன் அலுவலகம் சென்று சந்தித்து, என் சம்மதத்தை கூறி. உடனேயே அவள் தந்தையையும், குடும்பத்தாரையும் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி அவர்களின் முடிவையும் சந்தோஷத்துடன் வாங்கி வந்து விட்டேன். நீ ஊரிலிருந்து உன் வேலைகள் முடிந்து திரும்பியதும் கூறலாமென உனக்கு கைப்பேசியில் கூடச் சொல்லவில்லை. என் வருங்கால மருமகளிடமும் "நானே இதைப்பற்றி அவனிடம் முதலில் கூறுகிறேன்.நீ அப்புறமாகச் சொல்லு.. " என கேட்டு சம்மதம் வாங்கி வந்திருந்தேன்.  போதுமா? விளக்கம்.....!!"என்று ஒரே மூச்சுடன் முடித்த அக்காவின் கைகளை அப்படியே இறுக பற்றியவாறு சந்தோஷம் தாங்க முடியாமல் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் கணேசன். 

"அக்கா..! உனக்குத்தான் என் மீது எவ்வளவு பாசம். இனி எத்தனைப் பிறவி எடுத்தாலும் உன் மகனாகவோ, மகளாவோ மட்டுமே பிறக்க வேண்டும்..!" என அவன் மனம் மானசீகமாக இறைவனை வேண்டும் போது அவன் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடியது. 

தம்பியின் தலையை தடவியவாறு அவன் மனதுடன்  பூத்திருந்த சந்தோஷத்தை புரிந்து கொண்ட சிவகாமியின் மனதும் ஏதும் பேச முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருந்தது. 

திருமணமண்டபம்  கலகலப்பாக இருந்தது. தன் தம்பியை திருமணக் கோலத்தில் பார்த்து சந்தோஷமடைந்திருந்த சிவகாமி சின்னப் பெண்ணாக மாறி அங்குமிங்கும் சென்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்றபடியும்  வந்தவர்களை நலம் விசாரித்தபடியும் ஓடிக் கொண்டிருந்தாள். 

"அக்கா. . நான் எப்படியிருக்கேன். .? இந்த உடையில் நன்றாக இருக்கிறேனா? " என்று முகம் மலர்ந்த புன்சிரிப்புடன் கண்ணால் கேட்டுக் கொண்டிருந்த தம்பி உற்றார் உறவினர் ஆசிர்வாதங்களுடன் திருமணம் முடிந்தவுடன் மணமக்களாக  தங்கள் வீட்டுக்குத் திரும்பியதும், அம்மாவின் படத்திற்கு முன்பாக வணங்கி அவளிடம் ஆசிர்வாதம் பெற்ற பின், தன் மனைவியுடன் தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற போது சிவகாமிக்கு உடலெல்லாம்  புல்லரித்தது. தன் உழைப்பால், தன் வாஞ்சைக்கு கட்டுப்பட்டு வளர்த்த தன் வளர்ப்பு மகனை தூக்கி நிறுத்தி கைகளால் அவன் முகம் வருடி திருஷ்டி கழித்து அணைத்துக் கொண்டாள். எதுவும் பேசாத நிலையில், பேச முடியாத தவிப்பில் அங்கு வார்த்தைகளுக்கு மௌனம் ஒரு திரை போட்டது. ஒரு நிமிடம் விழி நீரை கட்டுப்படுத்தி, அவன் மனைவியையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். 

"தம்பி. . .நீ நூறு வயது  உன் மனைவியுடன் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டுமடா... . !" என மனதாற வாழ்த்தியவள்,  "அம்மா இருந்திருந்தால் இப்போ எவ்வளவு சந்தோஷபட்டிருப்பாள்...! அவளுக்கு பார்க்க கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே...! ஆனால்,அவள் கனவுகளை நான் எப்படியோ நிறைவேற்றி விட்டேன்..! என்றவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினாள். 

"அக்கா.... அதுதான் அம்மாவுக்கு அம்மாவாக  அன்பாக இருந்து என்னை இந்தளவுக்கு நல்ல நிலைக்கு வளர்த்திருக்கிறாயே..! !மேலும் என் விருப்பமாக நான் மனதாற விரும்பியவளையும் எனக்கு வாழ்க்கைத் துணையாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறாய்...! இதற்கெல்லாம் இதை விட உன் அன்புக்கு பிரதியுபகாரமாக  நான் உனக்கு  என்னச் செய்யப் போகிறேன் எனத் தெரியவிலலை . ஆனாலும் இப்படி என்னை பார்த்துப்பார்த்து  வளர்த்திருக்கும் உனக்கு நான் இப்போது ஒரு சின்ன பரிசு தரப்போகிறேன். ஆனால், நீ அதை  மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக ஏற்றுக் கொள்வாயா? " அன்புடன பேசிய கணேசன் முகத்தில் ஒரு கெஞ்சுதல் பாவம் ஒலிப்பதை கண்டவள் "அப்படி என்னடா உன் அன்பு பரிசு.? என்றாள் வியப்பாக சிவகாமி.

தொடர்ந்து வரும். 

Friday, October 21, 2022

சிவகாமியின் பந்தம். 2 ம் பகுதி.

இது சென்ற முதல்  பகுதியின் சுட்டி

அக்கா.. எப்படி இருக்கிறாய்? இன்று கிளம்ப வேண்டியவன் கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகிறது. என் அலுவலக வேலைகள் முடிந்ததும், உடனே கிளம்பி வந்து விடுகிறேன். .இன்னமும் ஒரு நாளைககு மேலேயே ஆகும் போலிருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கோக்கா. " தம்பியின் குரல் வருத்தத்தில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் மறுநாள் பகலில் கைபேசியில் வந்தது. 

" அப்படியா? சரிடா.. இருந்து பார்த்து முடித்து விட்டு வா.! ! வேளைக்கு சாப்பிடு. வேலை இருக்குனு வயித்தை காயப்போடாதே...! எனக்கு ஒன்றும் சங்கடமில்லை. நீ நிம்மதியா வேலைகளை முடிச்சிட்டு வா...! என்றவள் அவன் தன்னிடம் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி கண் கலங்கினாள்..

"சின்ன வயதிலிருந்தே அவன் விருப்பபட்டதை வாங்கித் தந்து அவனை கண் கலங்கி முகம் சுளிக்காமல், பார்த்துக் கொண்ட நான் இப்போது ஒரேடியாக அவன் விருப்பத்தை மறுக்கிறோனோ. .... " மனசு தேவையில்லாமல் அலைபாய்ந்தது. 

மதியம் ஒரு மன மாற்றத்திற்காக அம்மாவின் பீரோவை சரி செய்யும் வேலையில் இறங்கினாள். அதை அவ்வப்போது சுத்தம் செய்து அவர்கள் உபயோகப்படுத்திய கொண்டாலும், தாயின் மறைவுக்குப் பின் அம்மா உபயோகப்படுத்திய துணிகள் அடங்கிய சில பெட்டிகளை நினைவாக இருக்கட்டுமென அதை எடுக்கவேயில்லை. இன்று அதை உதறி மடித்து வைத்தால் அம்மாவின் நினைவில் நேரத்தை கடத்தி விடலாம் என ஆரம்பித்தவள் ஒரு புடவையை எடுத்து உதறிய போது உள்ளிருந்து பழைய டைரி ஒன்று விழுந்ததை கண்டு அதை எடுத்துப் பிரித்தாள். 

"அம்மாவுக்கு எழுதும் பழக்கம் இருந்து பார்த்ததில்லையே" என்ற வினாவுடன் எடுத்துப் பிரித்தவளுக்கு ஒரு பக்கத்தில் ஒரு கடிதம் பல விதத்தில் கிழிந்து காணப்பட்ட நிலையில் ஒரு கவருக்குள் சுருண்டு மடங்கியிருந்ததை கண்டாள். டைரியில் அந்தப் பக்கத்தில், அம்மாவின் சற்றே கோணாலான எழுத்துக்கள். 

அன்புள்ள சிவகாமி... 

இதை நீ எப்போ பார்ப்பேனு எனக்குத் தெரியாது. நீ பார்த்த பையன் உன் அப்பாவை பார்த்து தன் விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்க வந்த போது உன் அப்பா அவரை அசிங்கமாக பேசி அவமானபடுத்தி அனுப்பி விட்டார். அதைக்கூட உன்னிடம் சொன்னேன். உடனே அப்பாவின் தீடிரென்ற பிரிவின் மனக்கஷ்டத்திலே இன்னொன்றை நான் கூறவில்லை. அதுக்காக இந்த அம்மாவை மன்னிச்சுடு. 

அன்னைக்கு வந்துட்டு போன ஒரு வாரத்திலேயே அவர் மீண்டும் ஒருநாள் வந்து அப்பாகிட்டே ரொம்ப நேரம் பேசினாரு. அப்பாவும் பழைய கோபத்தோடுதான் அவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் போகும் போது உன் கிட்டே ஒரு கடிதாசியை மட்டும் கொடுக்கச் சொல்லி கொடுத்திட்டு போனார். அவர் தலை மறைஞ்சவுடனே அப்பா அந்த லெட்டரை கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு கோபமா வெளியே போயிட்டார். நான் அதை எடுத்து பத்திரப்படுத்தி உன்கிட்டே சமயம் பார்த்து கொடுக்க வச்சிருந்தேன். அதுக்குள்ளே உங்க அப்பா மரணமும், அடுக்கடுக்கா என்னென்வோ நடந்து போச்சு.. இப்ப இந்த புடவையை பிரிச்சதும் இந்த லெட்டரும் அந்த சம்பவமும் நினைவுக்கு வந்தது. உன்கிட்டே நேரடியா இதை தர இப்பவும் எனக்கு தைரியமில்லை. . இதை நீயா ஒரு நாள் பிரிச்சு பாத்துக்கோன்னு இந்த லெட்டரோடு என் கடிதாசியையும் எழுதி வைக்கிறேன். நீ. இதை பார்க்கும் போது என்னை மன்னிசுடும்மா.... 

சிவகாமிக்கு அம்மாவின் கடிதம் கண்களில் மளமளவென்று நீரை வரவழைத்தது. அப்பாவிடம் பேசிய நடராஜன் என்ன கடிதமென்றாலும் அதை என்னிடம் தந்திருக்கலாமில்லையா? அப்பாவிடம் அவன் பேசினதைப் பற்றி கூட தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அம்மா சொல்லித்தான் அறிந்து கொண்டாள். போகட்டும்....!!!! அப்பாவிடம் தைரியமாக பேசி அவர் மனக்குறைகள் போக்கி சம்மதம் வாங்கி விடலாம் என்றிருந்தவளுக்கு அப்பாவின் மரணம் சவுக்கடியைத்தான் தந்தது. அதன் பின் நடராஜனை பற்றிய திருமண நினைவுகளையும், ஒரு பள்ளி மாணவியாய், தான் அறியாமல் எழுதியதை ரப்பரால் அழிப்பதை போன்று அழித்து மனதோடு உதறி விட்டாள். 

"என்னை மணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதமா? என கண்ணியமாக கேட்ட நடராஜனின் உருவம் மட்டும் தன் மனதிலிருந்து அழியாததால், அப்பாவின் மறைவுக்குப் பின், தங்கைகளின் திருமணத்திற்குப் பின் தன் அம்மா எத்தனையோ நாட்கள் தன்னிடம் தன் திருமணத்தைப்பற்றி வலியுறுத்தும் போதும் அவள் அதை நிராகரித்து இருக்கிறாள். 

அம்மா.. எனக்கு இனி திருமண பந்தமே வேண்டாம். தம்பிதான் நான் பெறாத பிள்ளை. அவன் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவனுக்கு திருமணம் நடத்தி, அவன் வாரிசுகளை கொஞ்சி மகிழ்வதுதான் எனக்கு சந்தோஷம் தரும். அதை பார்க்கும் நாட்களுக்காக நீயும் என்னுடன் காத்திரு..!! இப்போதைக்கு நீயும், தம்பியுந்தான் நான் பாதுகாக்க வேண்டிய என் இரு கண்கள்....! இப்போதைக்கு அதை தவிர வேறு ஏதும் பேசாதே.. .! என கண்டிப்பான உறுதியுடன் சொல்லும் போது அம்மாவின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்து ஓடும். 

நினைவுகளின் சுமையில் ஆழமான மூச்சு வெளிப்பட்டது சிவகாமிக்கு. மெல்ல அந்த கடித துணுக்களை சேர்த்தெடுத்து வேறு ஒரு காகிதத்தில் பரப்பி சேர்த்து வைத்து படிக்கும் ஆவல் வந்தது. இதற்காகவே இன்று தம்பியை தன்னிடமிருந்து இறைவன் பிரித்து வைத்து வேடிக்கை செய்கிறானோ எனவும் தோன்றியது. 

தன் திட்டப்படி வேறு காகிதத்தில் நிறைய நேரங்களுக்குப்பின் கிழிந்த காகித துணுக்குகளை ஒன்று சேர்த்து வைத்து உருவாக்கிய கடிதத்தை ஒரு வழியாக படிக்க ஆரம்பித்தாள். 

அன்புள்ள சிவகாமிக்கு 

நான் எவ்வளவோ முயன்றும் உங்கள் தந்தை நம் திருமணத்திற்கு மறுத்து விட்டார். மற்றவர்கள் போல் அவர் உத்தரவு இல்லாமல் நாம் திருமணம் செய்து கொள்வது அந்த பந்தத்திற்கே இழுக்கு. ஆகவே காத்திருப்போம். உங்களால் உங்கள் குடும்ப சூழலால் அது முடியவில்லையென்றாலும், மற்றபடி இதற்கு முடிவேதும் கிடைக்கவில்லையென்றாலும், நான் இப்படியேதான் இருப்பேன். . உங்களைப் போல் என் குடும்பம் என்ற பந்தங்களும் என்னுடன் பிணைந்து சுற்றுவதால், என் காத்திருப்பு வேதனைகளும் எனக்கு பெரிதாக தெரியாது. உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வேலையை விட்டு அகலுகிறேன். நம் சந்திப்புகள் தொடர்ந்து இருந்தால், உங்கள் மனம் வேதனையுறும். அதன் விளைவுகள் உங்கள் குடும்பத்தில் எதிரொலிக்கும் என்பதால், வேறு ஊரில் வேலை தேடி போகிறேன். என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்கும் போதும் இந்த நடராஜன் சிவகாமி இல்லாத பழைய நடராஜனாகத்தான் இருப்பான். அது நிச்சயம். ...! ஏன். சத்தியமும் கூட... 

இப்படிக்கு

உங்கள் நடராஜன். 

தடுமாறியபடி கடிதத்தை படித்து முடித்ததும், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் சிவகாமி. தன் வாழ்வின் திசை திரும்பல்கள் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை நினைத்து வேதனைபடுவதா. .. வியப்படைவதா... எனத் தெரியாமல் அப்படியே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாள். 

தொடர்ந்து வரும்.

Wednesday, October 12, 2022

சிவகாமியின் பந்தம்.

 சிவகாமி அமைதியாய் இருந்தாள்.

"என்ன காரணம் அக்கா..? முதல்லே நான் சொல்றதை மறுக்காமே ஒப்புக் கொண்ட நீ... . இப்போ அவளை பார்த்து விட்டு வந்த பிறகு இப்படி இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றியே....!!! " கணேசன் அவளை ஆயிரம் தடவை விழிகளாலும், பத்துக்கு மேற்பட்ட முறை வாயினாலும் கேட்டு விட்டான்.

சிவகாமி பதிலேதும் கூறவில்லை." இது சரிவரும்"னு எனக்கு தோணலைடா.. தம்பி.. உனக்கு"னு பிறந்தவளை கண்டிப்பா உனக்கு முன்னாடி அந்த ஆண்டவன் கொண்டு நிறுத்துவார். நான் உன் விருப்பங்களை என்றாவது தடை பண்ணியிருக்கேனா ? தயவு செய்து இப்ப ... இந்த விஷயத்திலே என்னை புரிஞ்சுக்கோ...!!! " இது அவனுடன் அவன் விரும்பிய பெண்ணை மறுப்பேதும் சொல்லாமல் சென்று பார்த்து விட்டு வந்த நாளில் அவள் கூறியது. இன்றைய வரைக்கும் அந்த பதில்தான் அவள் அழுத்தந்திருத்தமாக கூறிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலும் இதேதான் அழியாமல் எழுதி ஒட்டியிருந்தது . 

இரு தினங்களில் அவன் அலுவலக வேலையாக வெளியூருக்கு கிளம்பும் போது" "தம்பி.. என்னை தப்பா புரிஞ்சுக்காதே. ..! தவறான பாதைகள் உன் வாழ்வில் வந்துட கூடாது. நான் நமக்கு தெரிஞ்ச உறவுகளில் சொல்லி சீக்கிரமா வேறு ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். உன்னை கல்யாண கோலத்திலே பார்க்க இந்த தாய் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கேன்டா ....! அதை மறந்துடாதே..! அக்காவின் கண்களில் நீர் கசிவை கண்டதும் கணேசன் மனம் பதறியது.... 

"அக்கா. .. உன்னைப்பத்தி தெரியாதா? எனனை அம்மாவுக்கும் மேலாக இருந்து வளர்த்திருக்கே....!!! உன் பேச்சில் என்னைக்குமே ஒரு அர்த்தம் இருக்கும்.. நான் உன்னைப் போல் எப்போதுமே திருமணமொன்றை செய்து கொள்ளாமல் கூட இருப்பேனே ஒழிய, அவளையே நினைத்துக் கொண்டு தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டேன். அதுவும் உன்னை நிர்க்கதியாக விட்டு விட்டு.. ..!! நீயிருக்கிற வரை நானும் உனக்காக இருப்பேன்... என்னை நம்பு..!!" என்றவனை உணர்ச்சி மிகுதியில் கண்ணில் கசிந்து தேங்கிய நீர் வடிய அவன் தோள் தொட்டு அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவன் சென்ற மறுதினம் தனிமை உறுத்தவே சிவகாமிக்கு மனதின் இத்தனை நாள் பாரங்களின் சுமைகள் பெரிதாக தெரிந்தன அன்றிரவு உறக்கம் வராததால், தன் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்கள் வேறு நினைவுகளில் வந்து சிறிதளவு வந்த உறக்கத்தையும் விழுங்க முயற்சிக்க நிம்மதியான நித்திரையை இழந்து அவதியுற்றாள்..

குடும்பத்தின் பெரிய மகளாக பிறந்த சிவகாமி அத்தனை பொறுப்புகளையும் உணர்ந்தவளாக வளர்ந்திருந்தாள். தனக்குப்பின் இடைவெளிகள் மிகவும் உடைய இரு தங்கைகள், இறுதியில் ஒரு கடைக்குட்டியாக ஒரு தம்பி......!!!! தம்பி அம்மாவுக்கு பிறக்கும் போது அம்மா பிரசவத்திற்கு அம்மாவுக்கு கூடமாட உதவியாய் இருந்தவளே சிவகாமிதான். அவளின் பொறுப்புள்ள குணத்தை கண்டு பாராட்டாத உறவுகளே இல்லை. 

படித்து முடித்து நல்லதோர் பள்ளி ஆசிரியையாக அவள் பணியில் அமர்ந்ததை பார்த்ததும் அவள் அம்மாவுக்கு பெருமை பிடிபடவில்லை. சட்டென தன் மகளுக்கு ஒரு திருமணம் செய்வித்து அவள் வாழ்க்கையில் வரும் வசந்தங்களை பார்க்க எல்லா தாயைப் போன்று அவளும் ஆசைப் பட்டாள். 

தன் கணவனுக்கு அந்த எண்ணம் சிறிதும் இல்லையென தெரிந்து கொண்ட போது அவளின் கவலைகள் ஆரம்பமாகியது. உறவுகளிலும் அவளை மணம் முடிக்க வந்தவர்களையும் ஏதேதோ பேசி தடுத்தார் அவள் கணவர்.

அதன் காரணம் தெரியாமலும், அவரை எதிர்த்து பேச தெரியாமலும் திண்டாடிய அந்த தாய்க்கு. சிவகாமி தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் நல்ல பண்பான குணமுள்ள நடராஜனை தான்்விரும்புவதாகவும், அப்பாவிடம் பேசி தங்கள் திருமணத்திற்கு அம்மா எப்படியாவது சம்மதம் வாங்கித்தர வேண்டுமென ஒருநாள் தனிமையிலிருக்கும் போது தன்னிடம் கூறியது வயிற்றில் பால் வார்த்தது போன்று இருந்தது. 

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு சிவகாமி.... நானே இதுபற்றி உன்கிட்டே பேசனும்'னு இருந்தேன். சாதரணமா ஒரு பொண்ணு தன் அம்மாகிட்ட இதுபோல தன் விருப்பத்தைப் பத்தி சொன்னா, உடனே கோபந்தான் படுவா...!!! ஆனா நான் சந்தோஷ படறேன்...!! ஏன்னா, உன் அப்பா ஏனோ உன்னை சீக்கிரம் திருமணம் செஞ்சு வைக்க விருப்பமே இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறார். என் பேச்சையும் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கிறார். தம்பியும் இப்பதான் பள்ளியில் படிச்சுகிட்டிருக்கான். அவன் வளர்ந்து இவர் சுமையை எப்போதான் வாங்கிப்பான் என்பதை போன்று பேசுறார். நீயும் எதையும் கண்டுக்காமல் தினமும் வேலைக்கு செல்வதே கடமையென இருக்கே... உனக்கு அப்பறம் இரு தங்கைகளுக்கும், பண்ண வேண்டுமே ..!! எப்படியென என யோசிக்கிறாரோ என்னவோ தெரியல்ல...!! இல்லை உன் சம்பாத்தியத்தை அவர் இழக்க விரும்பல்லையோ என என் மனசு கிடந்து தவிக்குது...! நீ இன்னைக்கு சொன்ன விஷயத்தை அவர்கிட்டேயே எப்படியாவது நாளைக்கே வலியுறுத்தி சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் செஞ்சிடலாம். எல்லா பொண்களை போலவும், நீயும் நல்லா வாழ வேண்டும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லையம்மா. .." அம்மா தன் இயல்பு நிலை மாறி மனக் கலக்கங்களை இறக்கி வைத்த சோர்வில் அழ ஆரம்பித்தாள். 

" அம்மா... அப்பாவை பத்தியும், அவரோட பயங்களை பத்தியும் எனக்கு தெரியுமம்மா.. நான் இந்த குடும்பத்துக்கு மூத்த மகனா இருந்து எல்லா பொறுப்பையும் சுமப்பேன். ஏன்னா எனக்கும் அந்த ஆசை இருக்கு....என் கடமையிலிருந்து நான் தவறவே மாட்டேன். நான் சொன்ன அவரும் இதுக்கெல்லாம் தடை ஏதும் சொல்லாதவரம்மா... அவருக்கு அவர் அப்பா இவருடைய சின்ன வயசிலே தவறிப்போயிட்டதாலே அக்கா, தங்கைன்னு குடும்ப பொறுப்புக்கள் இருக்கு... அதனாலே நீ தைரியமா அப்பாகிட்டே பேசு... என் திருமணத்துக்கு பின்னும் நான் இதே மாதிரி நம்ம குடும்பத்தை காப்பாத்துவேன். தம்பியை படிக்க வச்சி, அவனை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். என் பெரிய பையன் மாதிரி அவனை பாத்துக்குவேன். தங்கைகளுக்கும் படிப்பு முடிஞ்சதும், அவங்களுக்கு தகுந்த வாழ்க்கை வரும் போது நான் நிச்சயம் உங்க கூட இருப்பேன்ம்மா. அதைப்பற்றியும் அப்பாகிட்டே கூறி அவரை தைரியப்படுத்து.....!!! " சிவகாமி பேச. பேச அவள் தாய் இன்னமும் கண்ணீர் சிந்தினாள். 

எந்த நேரத்தில் அவள் அப்படிச் சொன்னாளோ, அவள் தந்தை அடுத்து வந்த சில மாதங்களில்,," நீயே குடும்பத்தை பார்த்துக்க....!!!!" என்பது போல், இவ்வுலக பந்தங்களை விட்டு விலகினார். அதற்குள் ஒருநாள் தன் மனைவி மூலமாக இவள் காதலிப்பதை தெரிந்து கொண்ட தந்தை உக்கிரமாக மறுத்ததோடு இல்லாமல், அதன் விபரம் தெரிந்து வீடு தேடி வந்து சுமூகமாக பேச வந்த நடராஜனை மிகவும் அவமானபடுத்தியும் அனுப்பினார். நடராஜனும் அவளிடம் ஏதும் கூறாமல் பள்ளி வேலையை விட்டு விலகியதை தந்தை மறைவு தந்த அதிர்ச்சியில் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கண்ணெதிரே தன் உயிரை விட பெரிதான நான்கு ஜீவன்களின் நிராதரவான நிலை ஒன்றே அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. 

தந்தையின் மறைவுக்குப் பின் இவளின் பொறுப்புக்கள் கூடியதில், மனதின் நிம்மதிக்காக காதலை தியாகம் செய்து விட்டு,பள்ளியையும் மாற்றிக் கொண்டு இங்கு வந்து விட்டாள். தங்கைகளின் படிப்பு, உத்தியோகம், திருமணங்கள்,, தம்பியின் படிப்பு, என்ற வாழ்வின் சுழற்சியில்,, நடராஜனின் நினைவுகள் புதைந்து கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து போயின. . மிகுந்த மனவருத்தத்தில் இருந்த தாயும், தம்பியின் கைகளை பிடித்து இவளிடம் ஒப்படைத்து இவளின் நிலை குறித்து வருத்தபட்டவளாய் ஒருநாள் அவளும் இவளுக்கு இன்னமும் சிரமம் கொடுக்க வேண்டாமென மறைந்தாள். 

அம்மாவும் ஒரு நாள் தீடிரென மறைந்தப் பின் தம்பி மேல் வைத்திருந்த பாசம் இன்னமும் இறுகியது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பதை கண்டதும் தன் உழைப்புக்கு பலன் தெரிந்தது. இதைக்காண இப்போது தாயும், தந்தையும் இல்லையே என்ற வருத்தம் தோன்றியதின் இடையே, "இதைக்காண முடியாதோ?" என்ற அச்சம் அப்பாவுக்கு ஏனோ எழுந்ததை குறித்து அம்மா உயிருடன் இருக்கும் போது அடிக்கடி அதைச் சொல்லி வருத்தப்பட்டதும், நினைவுக்கு வந்தது. இப்போது தம்பி தான் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாக கூறியதும் தடையேதும் சொல்லாமல், அவனுடன் வந்து அந்தப் பெண்ணை சந்திக்க ஒத்துக் கொண்டாள். அந்த உணவகத்தில் காஃபி அருந்தி கொண்டே. அவளுடன் பேசிய போது, "இவள் தன் தம்பிற்கேற்ற நல்ல மனைவிதான்.." எனத் தோன்றியது. அவளிடம் மனம் விட்டு அதை சொல்லி விடலாம் என்று நினைத்த போது, அவள் தன் குடும்ப  புகைப்படத்தை தன் கை பேசியில் யதேச்சையாக காட்டியதும் மனம் மாறி போனாள். அங்கிருந்து கிளம்பும் இறுதி வரை சற்று இறுக்கமான மன நிலையில் இருந்தவள், வீடு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை "தம்பி... உனக்கு அந்தப் பெண் வேண்டாம்டா..... " என்பதுதான். 

நினைவுகள் தந்த  இறுக்கம் குறைந்து அவள் நித்திரையை தொட்ட போது மணி நான்கை தாண்டியிருந்தது. 

தொடர்ந்து வரும்.

கதைக்கு ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு எப்போதும் என் நன்றி. 🙏. 

Thursday, July 28, 2022

சம்(மின்)சாரம்

 காலையிலிருந்தே இனம் புரியாத ஏதோ ஒரு கவலையில் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி சற்று குறைந்துள்ளது போல் தோன்றியது பவானிக்கு.  இன்று  கணவரின் பிறந்த நாளுக்காக அவரது அலுவலக நட்புகள் மாலையில் விருந்தினர்களாக வருகை... . தடபுடலான உபசாரங்கள்.. முதல் நாள் இரவே  கணவனுடன் சேர்ந்தமர்ந்து வரும் விருந்தாளிகளுக்கென கலந்தாலோசித்த விதவிதமான உணவு பட்டியல்கள்...  சரியென்று அத்தனையும், அதற்கும் மேலாகவும் செய்ய உற்சாகமாக ஒப்புதல்  அளித்தப் பின்,.... இப்படி அதையெல்லாம் தவிர்த்து  பின்வாங்குவது சற்றேனும் முறையில்லையே என்று மனசாட்சியுடன் தர்ம போராட்டம்.... இப்படியாக காலை பத்து மணி முதற் கொண்டு மனதுக்குள்  இயலாமையால் எழுந்த கோப ஆறு வடிகால் ஏதுமின்றி பொங்கி, பொங்கி பெருகிக் கொண்டிருந்தது.

நேரம் தன் பாட்டுக்கு இறக்கையை விரித்த வானம்பாடியாக கொஞ்சமும் கவலையின்றி பறந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கதவை திறந்து வெளி வாசலில் சென்று நின்று "இதெல்லாம் மாலை கணவரின் அலுவல நண்பர்கள் விருந்துக்கு வரும் முன்பு முறையாக செய்து முடிக்க தன்னால் முடியுமா. .?" என சுற்றும் முற்றும் பார்த்தபடி யோசிக்கும் போதே மனதில் எழுந்த கவலை காரணமாக மறுபடி சீறிய கோப ஆறு தன் வெள்ள விபரீதத்தை பெருக்க செய்தது.

வாசல் கதவை சாத்தி விட்டு சமையலறை வந்தவள், ஒரு முடிவோடு சமயலறை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அந்த பொருட்களை நகர்த்த கொஞ்சம் சிரமபட்டாலும், கடினத்தைப் பாராமல் இழுத்து வைத்துக் கொண்டாள். வேறு வழியில்லை... இப்போதைக்கு தன் மனதின் கோபங்களை, இயலாமைகளை தணித்துக் கொள்ள இதுவும்  ஒரு சிறந்த செயல்தான் என அவள் மனம் மறுபடி, மறுபடி வலியுறுத்தியது. 

மாலை.... அவசரமான ஒரு இயந்திரமாக தன் உடம்பை வருத்திக் கொண்டதின் பலனாக முதல் நாளிரவு பட்டியல் போட்ட உணவு வகைகள் மலர்ச்சியுடன் ஒன்று கூடி சமயலறை மேடையில் புன்னகைத்து கொண்டிருந்தன. சப்பாத்தி, பூரிி அதற்கேற்ற தன் ஜோடிகளுடன், சில கலவன் சாதங்கள், வடை, பஜ்ஜி  போன்ற பலகாரங்களும், மற்றும் அவற்றின் இணையாகிய பல சட்னிகள் யாவும் இனிப்பான போளி, மற்றும் விதவிதமான கொழுக்கட்டைகளுடன் விருந்துக்கு தாங்கள் தயாராகிய கதைகளை இணக்கமாக பேசியபடியிருந்தன.  மாலையானதும், கணவருடனும், மற்றும் அதற்குப் பின்னரும், ஒவ்வொருவராக வந்த நட்பு விருந்தாளிகள் முன்னறைக்  கூடத்தை தங்கள் பேச்சினால் கலகலப்பாக்கி கொண்டிருந்தனர். 

"என்ன பவானி... எல்லாம் தயாரா?" என்றபடி தங்கள் அறைக்குள் முகம் கழுவி தன்னை கொஞ்சம் தெம்பாக்கி கொண்டிருந்த  மனைவியை நெருங்கிய அவள் கணவனுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் அவளின் அசாத்திய களைப்பு புரிந்தது. 

"என்னாச்சு.. முடியல்லையா?" ஆதரவாக கேட்டவனிடம், "ஒன்றுமில்லை.. வாருங்கள்.  எல்லோருக்கும் இலை போட்டு  பரிமாறுகிறேன்..." என்றபடி ஒரு மலர்ச்சிப் புன்னகை கூட தராது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவானி. 

"எப்போதும் விதவிதமாக சமைக்கும் எண்ணங்களில் ஆர்வமாக கலகலப்பாக இருக்கும் அவள் இன்று உற்சாகமில்லாமல் இருப்பதேன்? . நேற்று என்னை கேட்காமலே கூட விதவிதமாக பாரம்பரிய பட்டியல்களை சிலவற்றை அவளே தேர்ந்தெடுத்தாளே.... சிலவற்றிக்கு இது கடினமானது என நான் சொல்லியும், கேட்காமல், எனக்கு இது மிகவும் சுலபமென வாதிட்டு அதை செய்யவதற்கு ஒப்புக் கொண்டாளே ...  இன்று எதற்காக இந்த சோர்வு.. ஒரு வேளை என் வறுப்புறுத்தலில், யாருடைய துணையுமின்றி, எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட பொழுதுக்குள் செய்ய வேண்டியதாகி விட்டதே என்ற  சிறு கோபத்தில், எழுந்த இயல்பான வருத்தமாக இருக்குமோ...? " என்றெல்லாம்  மனதுக்குள் நினைத்தபடி நண்பர்களை உணவு உண்ணும் அறைக்கு அழைத்து வர தங்கள் அறையிலிருந்து அவனும் வெளியேறினான். 

அனைவரும் வானளாவ புகழ்ந்ததில், பவானிக்கு கொஞ்சம் சோர்வகன்று கூடுதலான முகக்களையும் வந்திருப்பதை புரிந்து கொண்டான் அவள் கணவன்." இதேப் போல் மற்றுமொரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ என அந்த நாட்களையும்  இப்போதே குறித்து வைத்தபடி.... " அவர்கள் அனைவரும் விடை பெற்றதும், திருப்தியான முகப்பாவத்துடன் கூடத்தில் அமர்ந்திருந்த பவானியின் அருகே  வந்தமர்ந்தான் அவள் கணவன். 

"பவானி... இன்று உன் கைப்பக்குவம்  போல் எங்கும் ருசித்ததில்லை என என் நண்பர்கள் அனைவரும் கூறியதை கேட்டாயல்லவா? நிஜமாகவே  நீ செய்யும் பக்குவங்களில் எப்போதையும் விட இன்று எல்லாமே மிக சரியாகவும், ருசியாகவும் அமைந்திருந்தது. அது எப்படியென கேட்க வேண்டுமென்று நானே நினைத்தேன்... அது சரி......  எல்லாமே நன்றாக, ருசியாக வந்திருக்க வேண்டுமேயென்ற கவலையில் உன் உடல்/ மனச்சோர்வு அகன்று, கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ச்சியெனும் போனஸை இப்போதாவது பெற்ற மாதிரி இருக்கிறதா? அவர்களது பாராட்டுக்கள் என்னையும் பெருமை கொள்ள வைக்கிறது. எனக்கும் இப்படியொரு சமையல் வித்தகியான சம்சாரம் என் வாழ்க்கைத் துணையாக கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். வா.. இப்போதும் மணியாகவில்லை. காலையில்தான் நமக்கு நேரமில்லை. எனக்கு அலுவலகத்தில் உள்ள கெடுபிடியால் விடுமுறையும் எடுக்க இயலவில்லை. நல்ல திருப்தியான மனதுடன் சந்தோஷமாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். வா.. புறப்படு "என்றான். 

"உண்மைதான்.... காலையில் நீங்கள் அலுவலம் சென்ற பின், என் மனதில் ஏற்பட்ட கோப வெள்ளத்தில் கரையேற முடியாமல் திண்டாடினேன். இன்றைய தினத்தில் பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நம் ஏரியா முழுக்க கிடைக்காமலே போன அந்த  மின்சாரத்திற்காக நானும் அதற்கு நன்றி கூறி, இப்போது உங்களுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். என்னைக்குமே" பழையது என்றுமே தங்கந்தான்"என்ற பழமொழிப்படி, நான் சென்று எனக்கு உதவிய அவைகளையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி விட்டு, "உங்களை இனி தினமும் விடாமல் நான் அங்கிகரித்துக் கொள்ளப் போகிறேன் என சொல்லி, அவைகளையும்  மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டு வருகிறேன்...." என்றபடி பழைய சுறுசுறுப்புடன் சமையல் அறைக்குள் புகுந்தாள் பவானி. 

பாதி புரிந்த பாவனையிலும், மீதி பாதியை யோசித்தபடியும் அமர்ந்திருந்தான் அவள் கணவன். 

கதை முடிந்தது. 

பி. கு... .." என்னடா இது... உங்களை சுருக்கச் சொன்னால், இப்படி ஒரேடியாகவா...? என்று வியக்கும் (வியப்பாரா?:)))   ) சகோதரர் நெல்லைத் தமிழரின் கருத்துக்காகவா இப்படி... ." (ஹா.ஹா.ஹா) என எண்ணாமல் இந்த சிறு கதை உங்களுக்கும் பிடித்ததாவென்று நீங்கள் அனைவரும் கருத்துரையில் கூறினால், நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பேன். மகிழ்ச்சி வெள்ளமாவதும், சிறு ஓடையாகி வடிந்து போவதும் உங்கள் அனைவரின் அன்பான தட்டச்சில்தான் உள்ளது. கருத்துச் சொல்லப் போகும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏. 

Sunday, January 23, 2022

முரண்பாடுகள் .

எப்போதும் இந்த சண்டைதானா ....? வர வர இதற்கு ஒரு முடிவு காணவே இயலவில்லையே.. ?" காலையில் எழுந்ததுமே மனம் புழுங்கியபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் தேன்மொழி.

கண்ணாடியில் தன் முகம்  பார்த்துக் கொண்டிருந்த முத்தரசனின் மனமும் இதே யோசனையுடன் கூடிய  வேதனையில்தான் இருந்தது. 

"அழகாய் அதிலும் அருமையாய்  இருந்த அந்த இளமை காலம் இனி வரவே வராதோ...?"  என ஒரு நொடி தோன்றியதும் , கண்ணாடியில் தன் முகம் பார்க்கப் பிடிக்காமல், மனது வெறுப்பில் சுடு தணலில் நின்ற மாதிரி சுணங்கி கொண்டது. 

"என்ன பேசாமல் காலையிலிருந்து இப்படியே கண்ணாடியை பார்த்தபடி இருந்தால்,  பொழுதுக்கென்று சாப்பிடும் வயிற்று பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டாமா?சமைத்து வைத்ததெல்லாம் ஆறி அவலாக வேறு போகிறது...." முணுமுணுப்பது போல் சொன்னாலும், தேன்மொழியின்  பேச்சு  மாறி சற்றே கோபக் கூக்குரலாய் கேட்டது முத்தரசனின் காதுகளில். 

"என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? தினசரி நானுந்தான் நாள் தவறாது உழைக்கிறேன். நம் உடம்பு  சிறிதளவாவது பலமாக இருக்க உன் வாயையும் நீ சிறிது கட்டிக் கொள்ள வேண்டும்...! காலையிலேயே இப்படி நாவுக்கு ருசிக்க செய்ததை சாப்பிடுவதா? அது மட்டுமின்றி பிறகு வேண்டுமென்றே என்னையும், வசை பாடும் வார்த்தைகளால் தோண்டித் துருவி ஆயிரம் ரணமாக்கி, நீயும் உன்னை வீணில் காயப்படுத்தி கொள்கிறாய்.... பிறகு  எதுவுமே அடிக்கடி முடியவில்லையே என்ற புலம்பல் வேறு..! " கொஞ்சம் கோபம் வரப்பார்த்தது முத்தரசனின் வார்த்தைகளில். 

" ஆமாம்... என்னவோ... உன்னைத்தான் நான் எப்போதும் குறை சொல்வதாய்  நீயாக கற்பனைச் செய்து கொள்கிறாய்...! எனக்கென்று வரும் என் வேதனைகளை நான் வேறு யாரிடம் புலம்பி தீர்த்துக் கொள்வதாம்....? " தேன்மொழியின் வார்த்தைகளில் சற்று வேகம் தெறித்ததும், முத்தரசன் வேறு வழியின்றி அடங்கிப் போக ஆரம்பித்தான். 

பதிலுக்குப் பேசப்பேச இப்போதெல்லாம் அது வீண் சண்டையில்தான் முடிகிறது. இறுதியில் வேதனையும் வருத்தமுந்தான் முத்தரசனுக்கு பரிசாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

  "சரி.. சரி நம்மிருவருக்குள் இப்போதே சண்டை வேண்டாம். இப்போதைக்கு உன்  வாயாற வேண்டியதை  திருப்தியாக  நீ உண்டு கொள். என்னை மட்டும் தொந்தரவு செய்யாதே...! "

" எப்படி நீயும் என் அருகில் இருக்கும் போது உன்னை மட்டும் விட்டு, விட்டு நான் எப்படி எனக்கு வேண்டியதை சாப்பிடவாம்....? அதுதான் எனக்கும் உனக்கும் கட்டிப் போட்ட வாழ்நாள் பந்தமென்ற ஒன்று இருக்கிறதே...! என்றாள் கடுப்பான தேன்மொழி. 

" அதை நினைத்துத்தான் எனக்கும்  எப்போதும் சங்கடமாக உள்ளது. அன்பான உறவாகவும் இருக்க முடியவில்லை. சட்டென உதறி விட்டும் போகவும்  முடியவில்லை. " அவனின் பதிலாக வார்த்தைகளின் முணுமுணுப்பை கேட்டதும், 

"என்ன சொல்கிறாய் ? சரியாக கேட்கவில்லை. ஏன் இப்படி பல்லை கடித்துக் கொண்டு பேசுவது போல் பேசுகிறாய்..? சொல்வதை சத்தமாகத்தான் சொல்லேன். ..! " என  தேன் மொழி புலுபுலுவென பிடித்துக் கொண்டாள். 

" ஒன்றுமில்லை... ஏதோ என் மனக்குறையை சொன்னேன்... சரி வா.. இருப்பதை, வாய்க்கு ருசிப்பதை சாப்பிடலாம். .. ! என்றபடி, கண்ணாடியை விட்டு நகர முற்பட்டான் . 

"ஆமாம்... இந்தக் மனக்குறைவுக்கொன்றும் தினசரி குறைவில்லை." முகம் வளைத்து சுற்றி முணங்கி கொண்டாள் தேன்மொழி. 

இரவு. ... வீட்டில் அனைவரும் படுக்கையை விரித்து துயல துவங்கி விட்டனர். அமைதியான  அந்த பொழுதில், தேன்மொழி அவன்  உள்ளத்தின் வேதனை முனகல் கண்டு மறுபடி ஆரம்பித்தாள்.  "என்னவாயிற்று? ஏன் இப்படி அமைதியாக தூங்காமல், என்னையும் படுத்துகிறாய் ?" 

"ஒன்றுமில்லை..  காலை, மதிய உணவுகள் கொஞ்சம் ஒத்துக்கல்லை.." 

"ஏன் நன்றாய்தானே இருந்தது. அதில் என்ன பிரச்சனை உனக்கு....? என் நாவுக்கு எல்லாமே சுவையாகத்தான் இருந்தது... எனக்காக எதையும் விட்டுத் தந்துப் போகும் சுபாவம் உனக்கு இப்போதெல்லாம் வருவதேயில்லை..." என்றவள் தன் மனதில் அதன் ருசியை நினைத்தபடி அதில் திளைத்தாள்.  

"என்னையும் சாப்பிட வேண்டுமென்று தொந்தரவு செய்கிறாய்.... உன் ருசி வேறு..... உன் ரசனை வேறு.... உன் ஆரோக்கியமும் வேறு.... உன்னளவுக்கு என்னால் ஒத்துப் போக முடியுமா . என்பதை யோசிக்கவே மாட்டேன் என்கிறாய்...!" என்றான் சிறிது வலி தந்த கடுகடுப்புடன். 

"சரி... சரி.. பேசிப் பேசி உள்ளே அமைதியாய் தூங்கும் நம் குழந்தை மெளனமொழியை எழுப்பி விடாதே.  .. உன்னால் எனக்கும் அவளுக்கும்  இப்போதெல்லாம் தினமும் ஏதோவொரு  பிரச்சனை.... அவள் சின்னவள்தானே என்ற அலட்சியம் உனக்கு என்றுமே அதிகம்.... பேசாமல் வலிகளை பொறுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்...!! நாளைக் காலையில் உன் பிரச்சனை எல்லாம்  சரியாகி விடும்..... " என்று உணவின் ருசியோடு ஒன்றியிருந்த தன் நினைவுகளை  கெடுத்து விட்டானே  என்ற கோபம் தலைக்கேற கடுகடுத்தாள் அவள். 

" ஏன் இப்படி கோபப்படுகிறாய்.. ? உனக்கு கொஞ்சமும் ஆறுதலாக பேசத் தெரியாதா? நீ இப்படி இப்போதெல்லாம், தினமும் வெறுப்போடு  பேசியே என் நிம்மதி போய் விட்டது. நம் இளமை கால  ஆரம்பத்தில், நான் பிறரிடம் பேசும் போதெல்லாம்  அடக்கவொடுக்கமாய் என் பின்னால் நின்றபடி அவரவருக்கு தக்கபடி பதில் சொல்வாய்....! அப்போது எனக்குப் பெருமையாயிருக்கும்....ஆனால், வரவர உன் பேச்சுகளில், என் உறவையே விரும்பாதவள் போல் அவ்வப்போது என்னையே ஒதுக்குகிறாய்...!  நான் என்ன சொன்னாலும், என் செயல்களில் ஏதோவோரு குற்றம் காணுகிறாய்..   காரணம்...! இப்போது கொஞ்ச நாட்களாக நான் உன் கண்களுக்கு  முன்பு இருந்ததை விட  அழகற்றவனாகி விட்டேன். இல்லையா..? அதனால்தான் இப்படி.. என்னை அவமதிக்கிறாய்.. இல்லையா... " படபடவென்று சொன்ன அவன் வார்த்தை அழுத்தங்களில், அவன் மனவலி, உடல் வலி இன்னமும் அதிகமானது அவனுக்கு தெரிந்தது. 

" இதற்குத்தான் எவ்வளவு  அழகாக இருந்தாலும், ஆரோக்கியமாகவும்  இருக்க வேண்டுமென்பது.... புரிகிறதா..? அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில், அப்போது என்னைப்பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் எல்லோரிடமும் வலிய போய் சிரித்து, சிரித்துப் பேசினாய்..... அப்போது எனக்கு எப்படி வலித்திருக்கும்....?" அவளின் பழைய நினைவை அவன் மீட்டெடுத்து தந்த நினைவலைகளுக்குள் வந்து கோபமாய் சிடுசிடுத்தாள். 

" ஆமாம்.. ஆரோக்கியதிற்கு என்ன குறைச்சல்... உன்னுடன் வந்து வாழ ஆரம்பித்த போது, எனக்கு உன்னை விட ஒரு வயது குறைவு வேறு...!!!! ஆனால், அதற்காக நீயோ, நானோ அன்று குறையேதும் பட்டுக் கொள்ளவில்லை. அழகான திடமான ஆரோக்கியத்துடன்தான்  நம் ஆரம்பகால உறவு தொடர்ந்தது.. . அப்போதெல்லாம்  உன்னுடன் நான் ஒற்றுமையாக வாழவில்லையா?  நம் ஒற்றுமையை பார்த்து நம் குடும்ப உறவுகளும், நம்மை சுற்றியுள்ளவர்களும் புகழவில்லையா? எல்லாம் இத்தனை காலம் நல்லபடியாகத்தான் போயிற்று. ...! ஏதோ.. என் போதாத நேரம்....!! இப்போதெல்லாம்  உன்னிடம் அன்பை இழந்து வெறும் வசவுகளை மட்டுந்தான்  கேட்க வேண்டுமென்ற சாபங்கள் பெற்று வந்து விட்டேன்  போலும்.....!!!!"அவன் தனக்கும் கோபம் எப்போதேனும் இப்படி வருமென நிரூபித்தான்.

" சரி... இப்போது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்..? உனக்கு என்னுடன் வாழ பிடிக்கவில்லையென்றால், அன்றைக்கு நம் உறவுகள்  சொல்லியபடி,  உன் விருப்பப்படி பிரிந்து என்னை விட்டு வாழ வகை செய்து கொள்... அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை...." அவள் சட்டென்று சற்று விட்டேத்தியாக கூறியதும் அவன் ஒரு நிமிடம் தன்  வலி மறந்து அதிர்ந்துப் போனான். 

" என்ன இப்படி பட்டென்று  சொல்லி விட்டாய்.... .? இதுதான் இத்தனை நாள் நாம் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாது சேர்ந்து வாழ்ந்தற்கு அடையாளமா.. .? அதை நினைவில் கொண்டு நீ இத்தனை நாள், வாழ்க்கையில், உன் கோபங்களுக்கிடையே  எத்தனையோ தடவைகள் மரியாதை குறைவாக என்னை அதட்டி பேசிய  போதெல்லாம் கூட நான் இப்படி வருத்தப்பட்டதில்லையே. .. இன்று என்னை கொஞ்சமும் அன்பின்றி, உன் விருப்பப்படி பிரிந்து போவதானால் போ.. என்கிறாயே....நான் விரும்பி வேண்டும் விருப்பமா இது..? " அவன் குரல் உடைந்து அழாத குரலில் குமுறினான். 

" பின்னே என்ன செய்வதாம் ? எப்படியும் ஆயுசு பரியந்தம் நாம் இணையாக சேர்ந்து வாழப் போவதில்லை....இதுவரை நாம், நீ சொல்கிறபடி, ஒற்றுமையுடனும், பிறர் கண்டு பொறாமைபடும்படிக்கும் நல்லபடியாக வாழ்ந்தாகி விட்டோம். எனக்கு மட்டும் உன்னைப் பிரிய ஆசையா? இல்லை, நீ இல்லாமல் சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்தாயா.... ? நானும் நிலை குலைந்துதான் போவேன்.. நீயும் முன்னைப் போலில்லாமல், என்னையும், நான் சங்கடமில்லாமல் உண்டு உடுப்பதையும் எப்போதும் குறை கூறிக் கொண்டேயிருக்கிறாய்.... நான் பிறப்பிலிருந்தே இறைவன் எனக்களித்த என் கடமையைத்தான் செய்கிறேன்.  உனக்கு என்னுடன் இருந்து ஒத்துழைத்து வாழ முடியாவிடில், அல்லது, விருப்பமில்லாவிட்டால், இல்லை, உன் வலிகளும், உன் ஆசைகளுந்தான்  பெரிதாக தோன்றும் போது, நம் குடும்ப உறவுகள் சொல்படி கேட்டு அவர்களின்  குடும்ப மருத்துவரை சென்று பார்த்து நாம்  நிரந்தரமாக பிரிவதற்கு ஏற்பாடு செய்து கொள்... என்றேன்...  நான் கூறுவது சரியா, தவறா. . என நீயே இன்று இரவு முழுவதும் விழித்திருந்து யோசித்துப் பார்த்துக் கொள்.." என்று மடமடவென முடிவெடுத்தது போல  பேசிய தேன்மொழி" எனக்கு தூக்கம் வருகிறது.. . .." என்றபடி மெளனமானாள். 

ஒரு நிமிடம் தெறிக்கும் வலிகளையும் பொருட்படுத்தாது திகைத்து நின்றான் முத்தரசன். 

" இவள் பேசுவதும் நியாந்தானே.....!!  உலகில்  வாழும் அனைவரைப் போலவும் தனியாகத்தான் பிறந்தோம்.... தனியாகத்தான் பிரியப் போகிறோம்....உறவுகள் என்றும் நிரந்தரமல்ல.. ..!!! இடையில் வரும் உறவுகளால் பிரிவையும், பாசத்தையும் அதையும் தங்கள் சுயநலங்களுக்காக காட்ட முடியுமே தவிர்த்து நம் தலைவிதியை அவர்களால்  மாற்ற முடியுமோ...? " என்ற வேதாந்த தத்துவத்தில் ஆழ்ந்த முத்தரசன் "கோபத்துடன் பேசினாலும் அவள் பேச்சில் வெளிப்பட்ட உண்மையை உணர்ந்தவனாய், "இனி தன் வலிகளை பெரிதுபடுத்தி, இல்லை, தன் உயிரே கூட போனாலும், அவள் விருப்பத்திற்கு தடைகளை போடக் கூடாதென்ற" உறுதியை எடுத்தபடி, நாளைப் பொழுதில் விடியும் நல்லதொரு விடியலை எதிர்பார்த்து வேறு வழியில்லாமல் வலியுடன் தூங்க முயற்சித்தான். 

வணக்கம் சகோதர சகோதரிகளே. ..

கதையை புரிந்து கொள்ள முடிந்ததோ ..? ஒன்றுமில்லை....!! இப்படி வலிகளுடன் வேதாந்தமும், தத்துவங்களும் சேர்ந்து  இணைந்து நம் மனதில் தோன்றி விட்டால், நம்மால் பொறுக்க  முடியாத வலிகளைக் கூட ஒரளவு பொறுத்தபடி சமாளித்து விடலாம் என்பது என்னை ஆண்டு வரும்  தற்போதைய  காலமாகிய இந்த "பல்லவர்களின் ஆட்சியில்" நான் பெறும்/பெற்று வரும் கீதோபதேசங்கள். அதன்படி  தூங்காத இரவுகளில்,  என் கற்பனை குதிரையுடன் கடிவாளம் ஏதுமின்றி பயணித்ததில் சேர்ந்து  எழுந்த கதை   இவை. ..  .:))  புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். புரிந்து படித்ததற்கு சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றிகள். 🙏. 

இது போன வருடமே என் ப(ல்)ல தொந்தரவுகளின் காரணத்தால் பிறந்த கதை. இந்த கதையை படிக்கும் பொறுமை அப்போது அனைவருக்கும் இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகள் இருந்து கொண்டேதான் இருந்தன. சரி.. நாமும் இதைப் படிக்கச் சொல்லி தொந்தரவு தர வேண்டாமென இதை தூக்கி கிடப்பில் போட்டு விட்டேன். இப்போது மறுபடியும் பத்து நாட்களாக என்னை மிகவும் இந்த கதையின் விஷயங்கள் தொந்தரவிப்பதால், எங்கோ மறைவில்  கிடந்த  இந்தக்கதையை  அது நினைக்க வைத்து விட்டது. :)))) 

இடுக்கண் வருங்கால் நகைத்துதானே ஆக வேண்டும். அதுவும் நட்புகளோடு சொல்லி மனம் விட்டு சிரிக்கும் போது  வலி தரும் வேதனைகள் குறைந்து விடும் அல்லவா...!! ஆனால் இப்போதும் உங்கள் அனைவருக்கும் தொந்தரவு தருவதற்கு பொறுத்துக் கொள்ளவும். அதெல்லாம் ஒன்றுமில்லையென ஆர்வத்துடன் படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள் . 🙏. 

Friday, October 4, 2019

அன்பு மலரும் போது...

இதுவும் நான் என் பதினேழில், பிதற்றியதுதான். இத்தனை நாளாக வெளியிடவில்லை. இந்தக் கதையின் சம்பவங்களை இப்போதுள்ள காலகட்டத்திற்கு யாராலும் ஏற்றுக் கொள்ள இயலுமா? என வந்த சந்தேகங்களின் காரணங்கள் வெளியிட தாமதித்ததுவா எனத் தெரியவில்லை. ஆனால் தற்சமய காலங்கள் இதன் போக்கை மாற்றி எழுத அனுமதித்தாலும், எனக்கு என்னவோ என் டைரியிலிருந்து சில பக்கங்களை புரட்டி, கிழித்து ஒளித்து திசை மாற்றிப்போட மனது ஒப்பவில்லை. 

இப்பொழுது அந்த எழுத்துக்களை அப்படியே பதிக்கும் போது   எழுதிய "அன்றைய தினங்களில்"  இந்தக் கதைக்கான சிந்தனைகளின் சுவையை சுவாசித்த என் மனம் "இன்று" அந்த மலரும் நினைவுகளையும் சுவைத்து ரசிக்கிறது. அது தவறா? இல்லை சரியா? என்பதை உணர்ந்து படிக்கும் நீங்கள் என் சந்தேகங்களைப் தெளிவாக்குவீர்கள் என சந்தேகமற நம்புகிறேன். கதையை
படிப்பதற்கு என் நன்றிகளும்... 

அன்புடன், 
உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன். 



சுமியின் கண்கள் கூடத்து அறையில் இருந்த பெரிய கடிகாரத்தில் தவழ்ந்தன. ஆயிற்று, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது உற்ற தோழி நளினியின் கழுத்தில் மாங்கல்யம் என்ற மலர் மலர்ந்து விடும். அந்த மலர் வாடிவிடாமல் என்றும் மணம் வீசிக்கொண்டே இருக்கவேண்டுமென இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்து கொண்டாள் சுமி.

ஒரு மணி நேரத்தில் "ஒருவருக்கு" சொந்தமாகிவிடும் நளினி நாளை இந்த நேரத்தில் "அந்த ஒருவரின்" வீட்டில் இருப்பாள். அதன் பின்பு சுமிக்கு இந்த வீட்டில், ஏன், இந்த உலகத்திலேயே "அன்பு" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. தெரியாமல் போய்விடும்.

இதோ! நளினி வருகிறாள். கழுத்து நிறைய நகைகளும் பட்டு சேலையும் மின்ன அவள் நடந்து வருவது  அழகுக்கே சவால் விடுவது போல் இருந்தது சுமிக்கு.

"சுமி" என்றபடி நளினி ஓடி வந்து சுமியை தழுவிகொண்டாள்.

ஓ! நாளையிலிருந்து இவள் அன்பில் திளைக்க  முடியாது. இன்று மட்டும்தான்! இனி எப்போதோ? சுமியின் கண்கள் மழை மேகங்களாக மாறுகின்றது.

"நளி, என்ன இது? அங்கே உன்னை எல்லோரும் தேட போறா, நீ இங்க வந்து உக்காந்திருக்கியேமா.."

"சுமி, பிறந்ததிலிருந்து என்னோட சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துகிட்ட நீ இப்ப மட்டும் வரமாட்டேங்கிறியே இது நியாயமா?" நளினி குரல் தழுதழுக்க கேட்டாள்.

"நளி இத்தன வருஷமா நீ என்ன புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா? இந்த சமூகத்திலிருந்து, அதாவது ....இந்த ஜனங்களோட உள்ளத்திலிருந்து நான் விலக்கபட்டுடேன் நளி. இனிமே இவங்க மத்தியிலே வந்து என்னால உட்கார முடியாது. என்னோட வாழ்க்கைங்கிற பாலிலே இந்த  "ஊனமிங்கற " உப்பு விழுந்துடுச்சு நளி. அது இனிமே சுத்தமான தயிராகாவும், சுவையான மோராகவும் வெண்ணையாகவும் நெய்யாகவும் மாறமுடியாது. பழைய பாலாகவும் லாயிக்கியில்லை. இப்ப புரியுதாமா நான் ஏன் உன்னுடைய திருமணத்துக்கு வரலைன்னு" என்று கேட்டு விட்டு விரக்தியுடன் சிரித்தாள் சுமி.

நளியின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

"சுமி! ஐ'ம் சாரி! நான் உன்னோட மனசை புண்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடு!"

"நோ நளி! நோ.. அப்படியெல்லாம் சொல்லாதே!"

"சுமி! இங்கேயே உங்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன்" என்றபடி நளினி சுமி தடுப்பதற்குள் அவள் காலடியில் சரிந்து விட்டாள்.

பதறிபோய் அவளை தூக்கி அமர்த்திய சுமி, "நளி! உனக்கு எந்த ஒரு குறையும் வரக்கூடாது.. நீ நீடூழி வாழனும். அதோட ஒரு வேண்டுகோள் நளி! நீ எங்கே இருந்தாலும், என்னைக்கும், ஐ மீன் ...... ஐ மீன் என் உடலிலிருந்து உயிர் வெளியேறும் வரை நீ என்மீது  செலுத்தும் அன்பு மாறவே கூடாது நளி" கடைசி வார்த்தைகளை தழுதழுத்தபடி கூறினாள்.

"சுமி! இதை நீ சொல்லனுமா?"

" நளினா"! என்ற குரல் சிவபூஜையில் கரடிபோல், அந்த அன்பு சுவரின் நடுவில் விரிசில் கண்டது போல் எழுந்தது.

"நீ இங்கேயா வந்திருக்கிறே! உன்னை எங்கெல்லாம் தேடறது. மணமேடையிலே உட்காரவேண்டியவ இந்த நொண்டிகிட்டே வந்து உட்காந்திருக்கியா?" கோபமாக கேட்டாள் நளியின் தாய்.

"அம்மா" மகள் பார்வையில் தெறித்த உக்கிரத்தில் தாய் மகளை பார்த்து "வா" என்றவாறு மேற்கொண்டு ஏதும் பேசாது அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"சுமி! எனக்காக அம்மாவை.........."

"நளி! இந்த ஊனம் எனக்கு ஏற்பட்ட நாளிலிருந்து இந்த மாதிரி சொல்றவங்களுக்காக நீ மன்னிப்பு கேட்டுகிட்டு தான் இருக்கே.. ஆனா! என் இதயம் எல்லாத்தையும் தாங்கி தாங்கி பழகிப்போச்சு. நீ போயிட்டு வாம்மா" என்றாள் சுமி.

கண்களை துடைத்தபடி நடந்தாள் நளினி.

"ஏய்! நொண்டிக் கழுதை! சமையலறைக்கு வந்து கொட்டிக்கிட்டு போயேன். பெரிய மகாராணி! கையிலே கொண்டு வந்து தட்டை வைக்கனுமாக்கும்," சித்தியின் குரல் பன்னிரண்டு மணி வெயில் மாதிரி தகித்தது.

"சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் மகாராணி தான். இதோபார் என்னுடைய சிம்மாசனம்." என்று சிரித்தபடி கூறியவாறே தன் சக்கர நாற்காலியை தட்டி காண்பித்தாள் சுமி.

"கால் இல்லைன்னாலும் வாயாவது இருக்கே", முகத்தை நொடித்தவாறு உள்ளே சென்றாள் அலமேலு.

எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது. இவர்களுக்கு இதயமே இல்லையா! அந்த இதயத்திலே இருக்கும் அன்பெனும் ஊற்று அடைத்துப் போய் விட்டதா? அதை எப்படி அடைத்தார்கள்!

இதயத்திலிருக்கும் காயத்தை ஆற்ற முயற்சி செய்யாவிட்டாலும் போகிறது. அதை இப்படியா கிளறி விட வேண்டும்.

"அம்மா" என்றபடி வேதனையுடன் நிமிர்ந்தாள் சுமி.

"அம்மா"... அந்த அம்மா மட்டும் இப்போது இருந்திருந்தால் சுமியின் கால்களாகவே மாறியிருப்பாள்.

அந்த பாக்கியந்தான் அவள் செய்யவில்லையே! செய்திருந்தால் ஏழாவது வயதில் பெற்ற தாயைபறிகொடுத்து விட்டு ஒரு மாத விஷக்காய்ச்சலின் விளைவால் இந்த நிலைக்கு வந்து இப்படியெல்லாம் எல்லோரிடமும் பட வேண்டியதிருக்காதே.!!

பக்கத்து வீட்டில் இருக்கும் நளினி மட்டும் சுமியின் உலகத்தில் இருந்திடாவிட்டால் அவள் இந்த உலகைவிட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். பிறந்ததிலிருந்து இருவருக்குமிடையில் இறுகிய பாசம் அந்த எமனால் கூட பிரிக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

சுமியின் தந்தையை சொல்லிக் குற்றமில்லை. மந்திரவாதியின் கையிலிருக்கும் மந்திரகோல் மாதிரி சித்தியின் கையில் அகப்பட்டுக்கொண்டு திணறுகிறார்.

ஏதோ இவளுக்கென்று செய்யும் கடமைகளில் தந்தை சற்று கண்டிப்பு காட்டுவதால், அச்சமயங்களில் சித்தியும் ஏதும் குற்றம் குறை சொல்லாது வாளாதிருக்கிறாள்  அவளுக்கு தனக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போய் நாளாகி விட்டதாலும், தன்னிடம் வெறுப்புடன் கூடிய அன்பையும், தந்தையின் கண்டிப்பிற்காக அவ்வப்போது காட்டுகிறாள் என்பது சுமி அறிந்ததுதான்.!!

 இவளின் தேவைகளை சமயத்தில் அறிந்து அவள் செய்வதால், சித்தியின் "சுள்"ளென்ற பேச்சுக்கள் சிலசமயத்தில் வெப்பமாய் தகிப்பதை இவளாகவே சமாதான நீருற்றி அணைத்துக் கொள்வாள்.

தன் வாழ்க்கையில், அறிவு சார்ந்த விஷயங்களுக்கும், அன்புக்கும் நளினி ஒருத்திதான் கடவுள் தனக்காக கொடுத்திரும் வரம் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கையில் தைரியமாக  இருந்த சுமிக்கு அவளின் பிரிவு கொஞ்சம் வேதனையை தந்தது.

தனக்கென்று இறைவன் அளவிட்டு கொடுத்திருப்பதை பெற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். வேண்டாம் என்று மறுத்தாலும், வருவதிலுள்ள அளவீடுகள் கூட்டிக் குறையப் போவதில்லை என்ற தத்துவ எண்ணங்கள்  அவளுக்கு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனதையும்  தாராளமாக தந்திருந்தது.

ஏதோ யோசனையில் இருந்தவள் சித்தியிடமிருந்து மீண்டும் ஒரு சத்தம் வரவே, ஒரு பெருமூச்சுடன் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு போனாள்.

"அலமேலு! சுமித்ராவுக்கும் கல்யாணத்தை எப்போ நடத்த போறே?" வாசலில் எதிர் வீட்டுகாரி சித்தியிடம் அக்கறையுடன் விசாரிப்பது துல்லியமாக சுமியின் காதில் விழுந்தது.

"ஆமாம்! அது ஒன்னுதான் அவளுக்கு கொறைச்சல்! எவன் வந்து இந்த நொண்டியை கட்டிக்கப் போறான்?"

ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்ப்பட்டது சுமிக்கு.

மறுநிமிடம் சற்று வாய்விட்டு சிரித்துகொண்டாள் சுமி. நொண்டி,.. நொண்டி, நொண்டி.. ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் இந்த வார்த்தையையும் உபயோகிக்க தவறுவதில்லை சித்தி. சொல்லிவிட்டு போகட்டுமே! இல்லாததையா சொல்லுகிறாள்? உண்மையை தானே சொல்லுகிறாள் உண்மைக்கு ஏன் வருத்தப்படவேண்டும்.

காலமும், இளமையும் போட்டி போட்டுகொண்டு பறந்தது. காலம் சுமியின் தலையில் ஆங்காங்கே சில வெள்ளிக் கம்பிகளை உண்டாக்கி இருந்தது. இளமை அவளது அழகிய முகத்தில் சற்று முதிர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கடந்த நான்கைந்து மாதங்களாக நளினியிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவள் திருமணமாகி சென்றதிலிருந்து சுமிக்கு வாரம் இருமுறை கடிதம் எழுதிக்கொண்டு இருந்தாள். நாளாக நாளாக அவளது கடிதம் வருவதும் அரிதாகிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்றதடவை அவளிடமிருந்து வந்த கடிதத்தில் அவள் தாயாகும் விபரம் குறித்து எழுதி இருந்தது சுமிக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது. திருமணத்திற்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து அவள் தாயாகும் பேறு பெற்றிருப்பதால் அவளின் நலம் குறித்து சுமியும் அடிக்கடி விசாரித்து வந்தாள். ஆனால் தற்சமயம் அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததாலும், அவளைப்பற்றி விசாரித்துக்கொள்ள இயலாமல் அருகிலிருந்த அவளது பெற்றோர்களும் அவளுக்கு திருமணமான ஓரு வருடத்திலேயே, வேறு ஊருக்கு குடி பெயர்ந்து விட்டதாலும்,  வேறு எவரிடமும் எதுவும் கேட்கமுடியாமல் தோழியின் நினைவை மௌனத்திலேயே கரைத்து வந்தாள் சுமி.

வாசல் கதவை தட்டும் ஓசை கேட்டது.

"வெளியில் சென்றிருந்த சித்திதான் வந்துவிட்டாளோ?"

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போய் கதவை திறந்தாள் சுமி.

உள்ளே நுழைந்த நளினியின் கணவன் மகேந்திரனை பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும், திகைத்துப் போனாள்  சுமி.

"வாருங்கள், எதிர்பார்க்கவே இல்லை.. நலந்தானே? அமருங்கள்.. வார்த்தைகள் சமந்தமில்லாமல் குளறி குளறி வெளிவந்தன சுமிக்கு.

"என் நளி சௌக்கியந்தானே?"

அவன் அவளை மெளனமாக ஏறிட்டு நோக்கிய விதம் அவளை என்னமோ செய்தது.

"நளினி நம்மையெல்லாம் மோசம் பண்ணிவிட்டு நிம்மதியாக போய் சேர்ந்து விட்டாள் சுமித்ரா!"

என்ன? அதிர்ச்சியில் கண்கள் நிலைகுத்த முன்னால் சாய்ந்தவளை தாங்கி பிடித்துக் கொண்டான் மகேந்திரன்.

"சற்று அமைதிபடுத்திக் கொள் சுமி!"

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சுமி.

"சுமி" அதேகனிவு! "அவள் மட்டுமே அழைக்கும் சொல்!" கண்ணீர் அணை உடைந்து சிதறியது.

"நீங்கள் ஏன் எனக்கு தெரியபடுத்தவேயில்லை?" விம்மலுக்கிடையிலும் கோபத்துடன் எழுந்தது சுமியின் குரல்.

"என்னை மன்னித்துவிடு சுமித்ரா! மூன்று மாததிற்கு முன்பு ஒரு புதிய ஜீவனை இந்த உலகத்திற்கு தந்துவிட்டு அவள் இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டாள். இறப்பதற்கு இரண்டு நாள்முன்பு இந்த கடிதத்தை என்னிடம் கொடுத்து, "என்றைக்கு உன்னிடம் இதை நான் சேர்பிக்கிறேனோ, அன்றுதான் தான் இறந்ததைப் பற்றியும் கூற வேண்டுமென்று நிபந்தனை போட்டாள்". என்ன செய்வது? அவள் கட்டளைப்படிதான் என்னால் நடக்க முடிந்தது." என்றபடி கடிதத்தை சுமியிடம் கொடுத்தான் மகேந்திரன்.

சுமியின் கைகள் கடிதத்தை பிரித்தன; கண்கள் படித்தன.

"என் ஆருயிர் தோழி சுமிக்கு,

இதுவே நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். ஏனோ, இந்த தடவை நான் பிழைக்கமாட்டேனென்று என் உள்ளத்தில் ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. என் அன்பு சுமி.... என் திருமண நாளன்று நீ சொன்னது நினைவு இருக்கிறதா? என் வாழ்க்கைங்கிற பாலிலே ஊனமிங்கிற உப்புகல் விழுந்து திரிந்து போய்விட்டது. அதை இனி சாக்கடையில் தான் கொட்ட வேண்டுமென்று சொன்னாய்.!! ஆனால் அது என் சுமியின் வாழ்க்கை.! அந்த வாழ்க்கைப் பால் திரிந்தே போயிருந்தாலும் சரி, அதை நான் உபயோகபடுத்தி கொள்வேனே தவிர சாக்கடையில் கொட்டவிடமாட்டேன். புரியவில்லையா சுமி?

என் குழந்தைக்கு என் ஸ்தானத்தில் நீ வர வேண்டும். நீண்ட நேர விவாதத்திற்கு பின், அவரிடம் சம்மதம் வாங்கி விட்டேன். நீயும் சம்மதிப்பாய் என்று எனக்குத் தெரியும். என் தோழியை எனக்கு தெரியாதா? இதை நீ செய்தால்தான் என் ஆத்மா சாந்தியடையும்."

இப்படிக்கு
உங்களை என் மாறா அன்புடன் வாழ்த்திக் கொண்டிருக்கும்,
உன் "நளி".   


கடிதத்தை படித்துவிட்டு கதறியழுதாள் சுமி...

"சுமி! இந்த மனிதர்கள் இதயத்தில்தான் அன்புங்கிற மலர் மலருகிறது. அந்த மலர் சில சமயங்களில் தியாக கனியாக கனிந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி நளி. ஆனால் ஒவ்வொருவர் மனதிலே அந்த மலர் மலராமல் வெறும் மரமாகவே மாறிடறாங்க," குரலடைக்க கூறினான் மகேந்திரன்.

"உண்மைதான்! அன்னிக்கு ஒருநாள் நா அவக்கிட்ட ஒருவேண்டுகோள் விடுத்தேன். இப்போ அவ ஒரு பெரிய தியாகத்தை செஞ்சிட்டு என்கிட்டேயே......". முடிக்க முடியாது விம்மினாள் சுமி.

"சுமி! அவளே போனபிறகு எனக்கு இன்னொரு கல்யாணம் அவசியமே யில்லை. ஆனாலும் அவளோட ஆத்ம திருப்திக்காகத்தான் சம்மதிச்சேன். அவ கட்டளைக்காகத்தான் தலை வணங்குகிறேன். நா கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே சுமி! என்னை மணக்க உனக்கு சம்மதந்தானே!" உணர்ச்சியற்ற குரலில் கேட்டு கொண்டே அவள் எதிரே தன் கரத்தை நீட்டினான் மகேந்திரன்.

அவன் கண்களில் தெரிந்த வெறுமை அவளை அவன் சொன்னது உண்மை என நம்ப வைத்தது....

"என் நளினியின் திருபதிக்காக நான் என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கேன்" என்ற சுமி தன் சம்மதத்தை தெரிவிக்கும் பாவனையில் அவன் கைகளில் தன் கையை பதித்தாள்.

அங்கே அன்பு மலர் மலர்வது கண்டு மேலேயிருந்து அந்த தியாகக்கனி நிறைவுடன் சிரித்தது.

நிறைந்தது. 

Wednesday, August 14, 2019

மன மாற்றம்.

விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்டாள். நானும் ஒரு வ (வீ) ம்பில் சரியென சம்மதம் தந்து விட்டேன்.

வம்பென்றால் அது  இதுதான்....
"பூ... இது என்ன பொல்லாத வேலையா? வீடு பெருக்கி, துடைத்து பாத்திரங்களை சுத்தம் செய்வது இதெல்லாம் ஒரு கடுமையான வேலையா? இதற்கு இத்தனை பில்டப்பா உனக்கு? என்னமோ நீ ஒருத்திதான் இதை நித்ய கர்மாவாக செய்கிற மாதிரியும், நாங்கெல்லாம் ஏதோ உன் செயலுக்கு ஏதோ அபகீர்த்தி பண்ற மாதிரியும் என்ன ஒரு அலட்டல் உனக்கு..! இது பொல்லாத வேலையா? இதை சாக்கிட்டு எத்தனை நாள் எங்களுக்கு பண்ண வேண்டிய (காலை வக்கணையாய், வாய்க்கு ருசியாய் பண்ற டிபனை)  வேலைகளை ஒத்தி வைச்சோ, இல்லை நிராகரித்தோ, இருந்திருக்கிறாய் ! இதுதான் வம்புக்கு முதல் படிகளும், அதற்கு ஏற்றிச்சென்ற மேற்படி படிகளும்.

 வீட்டு வேலைகளுக்கு  உபகாரத்துக்கென்று  ஒரு ஆள் கூட வைத்துக் கொள்ளாமல், திருமணமாகி பதினைந்து வருடங்களாக, பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகளையும், வாய்க்கு ருசியாக குக்கரில் சாதம் என்ற வஸ்துவை கூட சமைக்கத் தெரியாமல், அதட்டி உருட்டி (அன்பாகத்தான்)   "வெளியில் சென்று வேலை பார்த்து குடும்பத்தை நிமிர்த்துவது மட்டுந்தான் என் வேலை"  என்ற கண்டிப்போடும், "மற்றபடி குடும்பத்தை நீதான் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று" (ஐஸ்) வைத்து ஒப்பேற்றி வரும் என்னையும், சமாளித்து வாழ்ந்து வருபவள் விசாலாட்சி என்ற என்னருமை மனைவி விசாலி.

திடீரென ஒரு நாள் அவளுடைய இயலாமையை சுட்டிக் காட்டி அவள் அக்கம்பக்கம் தோழிகள் உபதேசங்கள் செய்ததையும்,( அதை அவளே அவள் வாயால் சொன்ன வாக்குமூலங்கள்தான்.! இல்லையென்றால் எனக்கு எப்படி தெரியும்?) ஒரு துணையாளை வைத்துக்கொள்ள சிபாரிசு செய்ததையும் சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

 சில வீட்டு தோழிகள் இந்த மாதிரி துணையாளை வைத்துக் கொள்வது விட நம் துணைவனையே அவ் வேலைகளுக்கு "பக்கபலமாக" வைத்துக் கொண்டால், பணத்துக்கு பணமும் மிச்சம்.. நம்முடைய சுமைகளும் குறைந்து கூன் விழும் முதுகை நிமிர்த்தி காப்பாற்றலாம் என திருவாய் மொழிந்தருள , அதுவும் அன்றைய கூட்டத்தில் பலத்த கைதட்டல்களுக்கு நடுவே  "பரிந்துரை பேச்சாக" வந்ததாம். (இதுவும் அவள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. இதைச் சொல்வதில் தன்  கணவர் உஷாராகி விட்டால் என்ன செய்வது என்ற பயமில்லாமல், வெகுளி மனப்பான்மையில் அதையும் மறைக்காமல் சொன்ன இவளை இந்த விஷயத்தில்  பாராட்டியே ஆக வேண்டும்.)

ஆக இந்த விஷயங்கள் பொழுது போகாத ஒரு நேரம், பொழுதை போக்க வைத்த பேச்சுகளாக மாறி எங்களுக்குள் அலசபட்டதின் காரணமாக ஒரு துணையாளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது.

அந்த துணையாளைப்பற்றி ஒரு மாதகாலம்  விசாலியால்  கூறப்பட்ட புகழுரைகள்  நாளடைவில் "பெளர்ணமி தினத்திற்கு பின்வரும் நாட்களாய்" ஆகிப்போனதின் காரணம், அந்த துணையாளின் கவனகுறைவுகளும், அவர் எடுத்த சம்பளம் பிடித்தமில்லாத விடுமுறைகளுந்தான்.

அதன்பின் பக்கத்து வீட்டு தோழிகளின் துணையாளர்கள் ஷிப்டு முறையில் வந்து தோற்றுப் போயினர். அதன் காரணமும், "உன்னுடைய அதீதமான சுத்த கெடுபிடிகள்தான்" என" பழகிய வட்டாரங்கள்" எச்சரித்துப் பேசியதில் சற்று எரிச்சலாகி போனாள் விசாலி. . அந்த எரிச்சல்கள் என் மீது அடிக்கடி "அர்ச்சுனன் அம்பாக" பாய மேற்கூறிய வம்புக்கு  அது விதைகளாகின.

வருடக்கணக்காக ஒரே வேலைகளை கடமையாக செய்தும் அசராத விசாலி, ஆறுமாதம் பணி விலக்கி  பணி மாற்றி உழைத்ததில் கொடி மாதிரி இருந்தவள் கொஞ்சம் வளர்ந்த "கொடிக் காயாய்" ஆனதில், அக்கம்பக்கம் விசாரிப்புகள் பலமாகி அவளிடம் இதுவரை இல்லாத பிணிகள் தஞ்சமாக வந்து அடைக்கலம் தேடியதோடு, தனக்கு  "பேர்கிடைத்த சந்தோஷத்திலே," மருத்துவரை சந்திக்க மனம் குளிர பயணித்தன.

இப்படியாக நாட்கள் நகர்ந்து பார்த்து தோல்வியுற்றதில், அந்த ஒரு "வம்பு நாள்" எனக்கு சோதனையாக அமைந்தது. அதுதான் விசாலி என்னிடம் நாம் இருவருமாக ஒருநாள விட்டு ஒருநாள் வேலைகளை பங்காக்கிக் கொள்ள வேண்டுமென " ஒப்பந்த தாள்" இல்லாமலே, முடிவாக்கிய நாள்.

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து என் கடமைகளை  துடைப்பத்தின் துணையுடன் கைப்பிடித்தேன். பெருக்கி,  துடைத்து, அவள் சமையல், டிபனை முடித்துப் போட்ட பாத்திரங்களையும்., அதற்கு முன்பே எனக்காக காத்திருந்த பாத்திரங்களையும் கழுவி முடித்து நிமிரும் போது, மணி ஒன்பதை காட்டியது.

இடையிடையே விசாலியின் "கரெக்ஷன் குரல்" வேறு இரண்டு மூன்று முறை நான்   செய்த வேலையை "இம்போஸிஷன்"  செய்ய வைத்தது.  பழக்கமில்லாத வேலையை செய்ததில் என் முதுகும் அறையிலிருந்த பீரோ கண்ணாடியை பார்த்து தாண்டிய போதெல்லாம் ஒன்பதை நினைவூட்டியது.

என் மகன்கள் பள்ளிக்கு கிளம்பும் அத்தனை அவசரத்திலும், என்னை நமுட்டு சிரிப்புடன் பார்த்து கடப்பதாக தோன்றியது. அப்போதெல்லாம் வேர்த்து விறுவிறுத்த  முகத்தை சிரிப்பால் துடைத்தபடி "அப்பா எப்படி? சுறுசுறுப்பாக வேலைகளை முடிக்கிறேனா ? " என்று "பரீட்சை முடிவு" எதுவும் எதிர்பார்க்காத "பிரி. கே. ஜி குழந்தை" மாதிரி கேட்டாலும், "நீங்களும் இப்படி மாட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லையடா" என மனதுக்குள் (ஒரு சந்தோஷத்துடன்) சொல்லிக் கொண்டேன். ஆக ஒன்பதரைக்குள் நான் அவசரமாக ரெடியாகி ஆபீஸ் கிளம்பும் போது, விசாலி அன்றைய வேலைகளை முடித்து விட்ட "திருப்தியோடு" எனக்கு  விடை கொடுத்தாள்.

ஒரு மாதம் வரை இப்படி ஒடியது. அவள்  முறை வரும் போது, என் வேலையாக காய்கள் நறுக்குவது, குக்கர் எப்படி ஒழுங்காக வைப்பது, தோசை, இட்லி வார்ப்பது என சின்ன சின்ன வேலைகளும் கொஞ்ச கொஞ்சமாக என் வசமாகிப் போனதில் நான் இப்போது பாதி "குடும்ப பொறுப்பாளானாக" பதிவி உயர்வு பெற்றேன்.

இத்தனை நாள் விசாலி அவளே செய்து வந்த வேலைகளின் கடினங்கள் புரிய ஆரம்பித்தன. பாவம். .! எனக்காகத்தானே அவள் "எள்ளத்தைனை" வேலைகளை கூட என்னிடம் தராது அவளே பார்த்து, பார்த்து செய்திருக்கிறாள் என்ற பச்சாதாபம் மனதுள் பொங்கிய பிரவாகமாக  ஆர்பரித்தெழுந்தது. ஆனால் வீட்டின் வேலைகளுக்கிடையே அலுவலகத்து கெடுபடிகளும் சேர்ந்து என்னைக் கொஞ்சம் களைப்படைய வைத்ததென்னவோ உண்மை. அடிக்கடி இப்படி  களைப்படையும் காரணத்தை மருத்துவரிடம் சென்று விசாரிக்கும்  எண்ணமும் எனக்கு அடிக்கடி எற்பட்டது.  இருந்தாலும் "பச்சாதாப அலைகளின்" விளைவாய் விசாலியிடம் ஒன்றும் காண்பிக்காது நான் இருந்ததில் மாதங்கள் கடந்து குழந்தைகளில் பெரியவன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்து விட்டான்.

"என்னங்க மணி எட்டு.. இப்படி தூங்கறீங்க? இன்னைக்கு சன்டே குழந்தைகளுடன் எங்கேயாவது போயிட்டு வரலாமா?" சியாமளா அசந்து தூங்கிய கணவனை எழுப்பினாள். 

எழுந்து நீண்ட சோம்பலொன்றை விட்டபடி மீண்டும் படுத்தான் தியாகு.  "ஆமாம் எங்கே போறது? தீபாவளி வேறு நெருங்கியாச்சு... அந்தச் செலவெல்லாம் இருக்கு. நீ என்னவோ இன்னைக்கு வீடெல்லாம் க்ளீன் பண்ணுன்னு  வேறு சொல்லிகிட்டிருந்தே! அது தவிர இப்படி எங்கே போனாலும் காசு செலவுதான்... என்றான் முணுமுணுப்பாக. 

"அதெல்லாம் இருக்கட்டும்! அடுத்தவாரந்தானே பண்டிகை. அதுக்குள்ளே வீடு சுத்தம் செஞ்சிட்டு போச்சு! இன்னொன்னு ! பக்கத்து வீட்டுக்கு  இப்பத்தான் புதுசா வந்திருக்கிற உதவியாளரை இங்கேயும் நம்ப வீட்டுக்கும் வந்து வேலைக்கு ஒத்துக்க ஏற்பாடு பண்ணிடலாமா ? ..." 

நீயா? அனாவசியமா பணம் செலவழிக்க உனக்குப் பிடிக்காதே. ! செலவை மிச்சபடுத்தனும்தானே,யார் சொல்லியும் கேக்காம  நீயும் நானும் இந்த வேலையெல்லாம் செய்றோம். இன்னைக்கு எனக்குன்னு ஒரு வேலை வேறே இருக்கு.. அது சரி.! உனக்குள்ளே எப்படி இந்த தீடீர் மாற்றம்?" என்றான் தியாகு சற்று கேலியாக. 

ஆமாம்..நான் கொஞ்சம் ஆரம்பத்திலிருந்தே சிக்கனந்தான்... அதனாலே நம்ப வீட்டு வேலையே நாமளே பண்ணிட்டா அந்த பணம் வேறு எதுக்காவது பயன்படுமேன்னு யோசிப்பேன். ஒரு விதத்துல அதுவும்  கஞ்சதனந்தான்னு இப்ப உணர்ந்திட்டேன். 

எப்போதும் போல நீங்க எழுதுற கதையெல்லாம் வெளியிடுற பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்க நம்ப வீட்டு கதையையே கிண்டலும், கேலியுமாக பேர் மாத்தி கொஞ்சம் கருவும் மாத்தி எழுதி  ஒரு கதையை உருவாக்கி வைச்சதை நேற்று யதேச்சையா  நான் படிச்சுட்டேன். முடிவா நீங்க அதிலே ஏதாவது காமெடிங்கிற பேர்லே விபரீதமா சொல்லி கதையை சோகமயமா  மாத்துறதுக்குள்ளே உண்மையிலேயே நான் என் முடிவை மாத்திகிடனும்னு தோணிச்சு. இனி  சிக்கனமாக இருக்க வேண்டியதுதான்.  ஆனா அநாவசியமா கஞ்சத்தனம் பார்க்க கூடாதுன்னு முடிவு எடுத்திட்டேன். இந்த வாரம் நான் அவங்ககிட்ட பேசி வீட்டு வேலைகளுக்கு உதவியா  ஏற்பாடு செய்துடுறேன். இனி உங்களுக்கு, மட்டுமில்லை எனக்கும் கொஞ்சம் வேலை பளு குறையும். எழுந்திருங்க....! குழந்தைகளையும் ரெடி பண்றேன்... இன்னைக்கு நாமெல்லாம்  எங்கேயாவது ஜாலியா போயிட்டு, அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு வரலாம்.! " என்றபடி எழுந்த தன் மனைவியை ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தான் தியாகு . 

சிக்கனமாக இருக்க வேண்டுமென வார்த்தைக்கு வார்த்தை உபதேசித்து, தன்னையும் வருத்திக் கொண்டு, என்னையும் வேலைகள் வாங்கி, பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்த  தன் மனைவி தான் எழுதியதை பார்த்ததும் திருந்தி விட்டாள் என்பது ஆச்சரியப்பட வைத்தது.

அறைக்கு வெளியில் சென்றவள் மறுபடி உள்ளே வந்து, "நீங்க எனக்கு நல்லபடியா வேணும். கதையிலே உங்க உடம்பு படுத்துற மாதிரி இருக்கிறதை திருத்தி எழுதிடுங்க.. கதை முடிவுலே ஏதாவது அசுபமா மட்டும்  எழுதிராதீங்க. அதை என்னாலே தாங்கவே முடியாது... என் சிக்கன எண்ணத்தாலே நீங்க எவ்வளவு சொல்லியும் கூட மாட ஒத்தாசைக்கு ஆள் வைத்துக் கொள்ளாது இருக்கும் என் போக்கையும் பொறுத்துக் கொண்டு, நீங்க ஒருநாளைப்போல  ஆபீஸும் போய்கிட்டு, வீட்டிலேயும் தினமும்  எனக்கு உதவிகிட்டும்  வர்றீங்க. ஆனா, உங்க அசெளகரியத்தை நான் ஒருநாளும் புரிஞ்சுக்காமே இருந்திட்டேன்.  உங்களுக்கு, உங்க உடம்புக்கு கதையிலே வருகிற மாதிரி ஏதாவது பிரச்சனையென்றால், என்னாலே......என்னாலே.. ." என்றபடி  பேச முடியாமல் கண்ணீர் வழிய உணர்ச்சி வசபட்டவளை, "என்மீது உனக்கு இவ்வளவு பாசமா? என்று மனதுள் கொஞ்சமில்லாமல் நிறையவே பெருமைபட்டவனாய் எழுந்தவன்  பிரியமுடன் அவளின் கைப்பற்றி கட்டிலில் தன்னருகே  அமர்த்திக் கொண்டான் தியாகு. 
                             நிறைந்தது. 

அனைவருக்கும் 
சுதந்திரதினதி
நல்வாழ்த்துகள்.🙏.













     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
                              நன்றி கூகிள்.. 

Friday, June 22, 2018

போலி

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த லதா ஆளுயர நிலை கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்து கொண்டிருந்தாள். லைட் நீல நிறத்தைக் கொண்ட புடவையும், அதே நிறத்தில் பிளவுசும் அவளை அழகு தேவதையாக்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மோகன் தன் அருகில் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் வர்ணிப்பான். அந்த நினைப்பு அவள் உள்ளத்தில் எழுந்ததுமே, அவளது அழகிய அதரங்களில் ஒரு புன்னகை நெழிந்தோடியது.

"லதா" என்ற குரலைக் கேட்டதும் இனிய கனவுகளில் உலாவி கொண்டிருந்தவள் "பொத்"தென்று கீழே விழுந்து விட்டதை போன்று உணர்ந்தாள்.

சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கு தன் அம்மா அன்னபூரணி கையில் பால் டம்பளருடன் நிற்பதை கண்டதும் " என்ன அம்மா ?" என்றாள் சற்றே சிடுசிடுப்புடன்.

"லதா, உனக்கு பரீட்சை முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?" என்று கேட்டாள் அன்னபூரணி.

"மூன்று...." மொட்டையாக பதில் வந்தது
லதாவிடம் இருந்து. 

தன் அழகை பூரணமாக ரசித்து திருப்தி அடைவதற்குள் அம்மா குறுக்கிட்டு விட்டாளே என்ற எரிச்சல் அவளுக்கு.

"லதா, உனக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விட்டவுடன், உன் திருமணத்தை முடித்து விடவேண்டும், என்கிறார் உன் அப்பா. அதற்கேற்றாற்போல், வரன்கள் வேறு வந்து கொண்டிருக்கின்றன. 

நேற்று கூட ஒரு வரன் வந்திருக்கிறது... இதோ, பையனின் போட்டோவை அனுப்பி இருக்கிறார்கள். உனக்கு பிடித்து இருக்கிறதா என்று பார்..."

அன்னபூரணி நீட்டிய போட்டோவை வாங்காமல், ஜன்னல் அருகே போய் நின்றவள், வெளியே தெரியும் நீல நிற வானத்தையே சற்று நேரம் மெளனமாக வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். 

பிறகு, "எனக்கு இப்போது திருமணம் வேண்டாமம்மா... நான் இன்னும் மேலே படிக்க போகிறேன். இதை நீ தான் அப்பாவிடம் சொல்லி அப்பாவின் சம்மதத்தை வாங்கி தரவேண்டும்.." அவள் குரல் கெஞ்சியது.

"இதையெல்லாம், நீயே உன் அப்பாவிடம் சொல்லிக்கொள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நாங்கள் பார்க்கும் பையனைத்தானே  நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்.." என்ற அன்னபூரணியின் குரலில் சற்று கண்டிப்பு ஒலித்தது.

ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த லதா திரும்பி, அன்னபூரணியை உற்று பார்த்தாள். பின் "நீங்களெல்லாம், உங்கள் பெற்றோர் பார்த்த பையனையே திருமணம் செய்து கொண்டு என்ன பயன் கண்டு விட்டீர்கள்?" என்று எகத்தாளமாக கேட்டாள்.

 அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அன்னபூரணி திணறிகொண்டிருந்த போதே, மேஜை மீதிருந்த புத்தகங்களை அள்ளி கொண்டு, "நான் கல்லூரிக்கு சென்று வருகிறேன்.." என்ற சொல்லையும் உதிர்த்து விட்டு சிட்டென பறந்தாள்.

திகைத்துபோய் நின்று கொண்டிருந்த அன்னபூரணிக்கு தன் மகள் கேட்ட கேள்வியும் சரியெனவே பட்டது. 

ஆம், அவள் செல்வநாயகத்தை திருமணம் செய்து கொள்ளும் போது  சற்று பயந்த சுபாவத்தில்தான் இருந்தாள். அதற்கேற்றாற்போல்  அவரும் எப்போதும் பணம் பணம் என்றே தன் பிஸினஸ் ஒன்றே குறியாக இருந்து  செல்வநாயகம் பெயருக்கேற்றாற்போல் செல்வத்தின் நாயகராகவே விளங்கினார். பணம் இருந்தது அவரிடம்.. ஆனால் எப்போதும் தன்மையாக பேசும் குணம் இருந்ததா?

மூர்க்க தனமாக மனைவியிடமும், மகளிடமும் சில வேளைகளில் சத்தம் போடுவார். ஒரே மகள் என்றதால் , அவளுக்கு சில சமயங்களில் , சுதந்திரம் தருவார். சில சமயங்களில், கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல்  பேசிவிடுவார். நிலையற்றது அவரது மனம். அதனால் அவரிடம் மனைவி மகள் வேலைக்காரர்கள் எல்லோருமே எப்படி பேசுவது என்பது தெரியாமல் நடுநடுங்குவார்கள். பாம்பா, பழுதா என அறிய முடியாத ஒரு குணம். 

அவர் அவ்வாறு என்னிடம் நடந்து கொள்வதால் தான் லதா அப்படி கேட்கிறாள். ஆனால் குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அன்பையும், தன் மீதும், தன் ஒரே மகளான இவள் மீதும் அவருக்கு இருக்கும் பாசத்தையும், இவளுக்கு எப்படி புரிய வைத்து தன் வழிக்கு கொண்டு வருவது என்று நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்து மாடிப்படிகளில் இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தாள் அன்னபூரணி.

கல்லூரியிலிருந்து கலகலவென சிரித்து பேசியபடி வெளியேறி கொண்டிருந்த மாணவிகளின் கும்பலிலிருந்து  வெளிப்பட்ட  லதா தங்கள் வீட்டு கார் வந்திருக்கிறதா என்று சுற்று முற்று பார்த்தாள்.

"அம்மா! கார் அங்கே இருக்கு போவோமுங்களா?" குரல் வந்த திசையில் திரும்பினாள் லதா .

"அடடே!! சண்முகம், நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நான் உங்களைத்தான் தேடி  கொண்டிருக்கிறேன். அப்போதே வந்து விட்டீர்களா?" என்றாள் லதா .

"இல்லையம்மா, நான் இப்பொழுது தான் வந்தேன். காரை எடுக்கட்டுமா?" என்றார் டிரைவர் சண்முகம்.

"இல்லை சண்முகம், எனக்கு பிரைவேட் கிளாஸ் இருக்கிறது. அதனால் நீங்கள் காரை விட்டுவிட்டு வீட்டிக்கு போங்கள். கிளாஸ் முடிந்ததும் நானே காரை எடுத்துவருகிறேன்."

"வேண்டாம் அம்மா.. அய்யா சத்தம் போடுவார்.. நீங்க முடிச்சிட்டு வாங்க, நான் அதுவரைக்கும் கார்ல காத்துக்கிட்டு இருக்கேன்."

"வேண்டாம் டிரைவர், நீங்கள் புறபடுங்கள், எனக்கு கிளாஸ் முடிய வெகு நேரம் ஆகும். நீங்கள் அப்பாவின் ஆபீசுக்கு பெரிய காரை எடுத்துக்கொண்டு போக வேண்டாமா."

ஒரு மட்டும் போக மனமில்லாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்த டிரைவரை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்ட லதா , அவர் தலை மறைந்ததும் காரை ஸ்டார்ட் செய்தாள். 

கார் "பீச்"சை நோக்கி விரைந்தது. காரை ஓட்டி சென்ற லதாவின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. காலையில் தான் அவ்வாறு அம்மாவிடம் பேசியிருக்க கூடாதோ! பாவம்.. அம்மாவின் மனம் எவ்வளவு வருத்த பட்டிருக்கும்.

"மோகன் நாளைதானே என்னை சந்திப்பதாக கூறியிருக்கிறார். நாளை சந்திக்கும் போது அவரிடம் தனக்கு பையன் பார்ப்பதை கூறி அவரை சீக்கிரமாக பெண் கேட்க வரச்சொல்ல வேண்டும்." 

கார் கடற்கரையை அடைந்ததும் அதிலிருந்து இறங்கினாள் லதா . 

கடற்கரையில் அவ்வளவாக கூட்டமில்லை. காரை பூட்டி விட்டு கடலை நோக்கி நடந்தாள். கதிரவனின் கிரணங்கள் அவளது பொன்னிற உடலின் மீது பிரகாசித்து அவளது அழகை அதிகபடுத்தியது. 

அவளும் மோகனும், கடற்கரைக்கு வந்தால் ஒரு படகின் மறைவில் தான் அமருவார்கள். அந்த திசையை நோக்கி கண்களை செலுத்தியவள் அங்கு மோகன் இருப்பதை கண்டு ஒரு கணம் மகிழ்ச்சி அடைந்தாள்.

<மோகன்..> என்று அழைக்க நாவெடுத்தவள், அடக்கி கொண்டாள். அவன் அருகில் ஒருபெண் நெருக்கமாக மிக---மிக----நெருக்கமாக அமர்ந்திருப்பதை கண்டு, மெதுவாக அவர்கள் அறியாமல் கவனிக்காமல், அவர்கள் அமர்ந்திருந்த படகின் மறுபக்கத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உரையாடலை உன்னிப்பாக கேட்கத்தொடங்கினாள் லதா .

"நான்சொல்வதை நம்பு.. உண்மையாக நான் அந்த லதாவை நேசிக்கவேயில்லை " என்றான் மோகன்.

"அவளையே சுற்றிகொண்டிருந்து, விட்டு அவளை காதலிக்கவில்லை என்றால் எந்த குருடனும் நம்ப மாட்டான்.." என்றாள் அவள் கோபத்துடன். 

"ஸில்லி, உனக்கு எத்தனை தடவை சொல்வது... எப்படி சொல்வது என்றே எனக்கு புரியவில்லை, நானும் நீயும் வருடகணக்கில் நேசிப்பது அவளுக்கு தெரியாது... நான் அவளைத்தான் உயிருக்குயிராக காதலிப்பதாக, நம்பிக்கொண்டிருக்கிறாள், அந்த பைத்தியகாரப் பெண்... நான் அவளிடம் இருக்கும் பணத்தைத்தான் "லவ்" பண்ணுகிறேன். 

அவளும், நான் கேட்கும் போதெல்லாம், பணமும் நகையுமாக எப்படியாவது கொண்டு வந்து தந்து கொண்டிருக்கிறாள். நாம் இருவரும் இருக்கும் இந்த ஏழ்மை நிலைக்கு, அவள் தரும் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் அவளிடம் இருந்து, ஒருபெரிய தொகையாக கறக்க ஒருதிட்டம் வைத்திருக்கிறேன்.. 

அந்தபணத்தை கறந்தவுடன் நாம் இந்த ஊரை விட்டு வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம்.." என்றான் மோகன்.

"உண்மையாகவா!!! அந்த பெண்ணை அப்படி ஏமாற்றுவது தப்பில்லையா??" அந்தபெண்ணின் குரலில் சற்று பயம் தொணித்தது...

"ஏய்! விட்டால், நீயே அவளிடம் சென்று சொல்லி விடுவாய் போலிருக்கிறதே... அவளை நானா ஏமாறச்சொன்னேன்??? அவளுடைய பணத்திமிர் அவளைஏமாறச்சொல்கிறது." அந்த கயவன் தன் காதலியை சமாதானபடுத்த ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்...

லதாவின் தலையில் ஒருபெரிய பாராங்கல்லை தூக்கிப்போட்ட உணர்ச்சியுடன் சிறிதுநேரம் கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். 

கடல்அலைகளை போல அவள் மனமும் கொந்தளித்தது. மீண்டும் அவர்கள் அறியாமல் எப்படியோ காரை வந்தடைந்தாள்.  காரை திறந்து உள்ளே அமர்ந்தவள், இத்தனை நேரம் நெஞ்சில் குமுறி கொண்டிருந்த உணர்ச்சிகளை கண்களின் வழியே கொட்டித்தீர்த்தாள்.

தன்னை உயிருக்குயிராக அவன் காதலிப்பதாக சொன்னதல்லாம் வாயளவே.. <<தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஆபீஸில் ஒருவரிடம் கடன், பணமுடையில் என்னசெய்வதென்று தெரியவில்லை>> என்று அவன் உள்ளம் உருக பேசி தவித்த போது அவளும் இரக்கபட்டு, தன் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பணமும் நகையுமாக அவன் கையில் தாரை வார்த்தெல்லாம் வீண்.

இந்த லட்சணத்தில் எனக்கு பணத்திமிராம்... வெறுப்புடன் பல்லை கடித்தவள், "நல்லவேளை, இப்பொழுதாவது இவன் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கடவுள் ஒருநேரத்தை ஏற்படுத்தி கொடுத்தாரே," என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் காரை கிளப்பினாள்...

தனிமையாக சிறிது நேரம் இருக்க வந்தவளுக்கு, அந்த தனிமையில் இனிமை  கிடைக்கவில்லை... உள்ளத்தின் வெப்பத்தை போக்க குளிர்காற்றை நாடி வந்தவளுக்கு, அந்த வெப்பம் பன்மடங்கு பெருகியதுதான் மிச்சம்...

காலையில் அம்மாவிடம் இதைப்பற்றி கூறலாமா என ஒரு நிமிடம் யோசித்தவள், "மோகனை நாளை சந்தித்து அவனிடம் அவன் தாய் தந்தையரை விட்டு பெண் கேட்டு வரச் சொன்ன பின் தன் தீர்க்கமான முடிவை சொன்னால், தன் பெற்றோர் வேறு வழியின்றி ஒத்து கொள்வார்கள்" என்ற நம்பிக்கையில் அம்மாவை கடிவது போல் பேசி விட்டு வந்து விட்டாள்.

இப்போது பீரோவில் இருக்கும் பணமும் கொஞ்சம் நகைகளும் காணவில்லையே என்ற பேச்சு வருவதற்குள் "அம்மாவிடம் எப்படியாவது உண்மையை விளக்கி கூறி அப்பாவின் காது வரைக்கும் போகாமல் எப்படி காப்பாறறுவது".. என்ற கவலை மிக தீவிரமாக அவளைப் பற்றிக் கொண்டது. மனசு அலை பாய எப்படியோ காரை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். 

வீட்டை வந்தடைந்தவள், காரை வாசலில் நிறுத்தி விட்டு மாடிக்கு தன்னறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டவள், இயல்பாக இருப்பதை அம்மாவிடம் காட்டிக் கொள்வதற்காகவும், மனஅமைதிக்காகவும் ரேடியோவை திருப்பினாள்..

<<<ஆல்இண்டியரேடியோ... சென்னை வானொலி நிலையம்... திரைகானம்.. முதலில் பட்டாம்பூச்சி என்ற படத்தில்..
டி.எம் செளந்தரராஜன்... எஸ் ஜானகி...>>> அறிவிப்பாளரின் குரலை தொடர்ந்து பாடல் ஒலிபரப்பானது.

" எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி,
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி,"

பட்டென்று ரேடியோவை மூடினாள் லதா.

அப்போது காப்பி எடுத்து கொண்டு உள்ளே நுழைந்த அன்னபூரணியை கண்டதும் லதா வின் கண்கள் கலங்கின.

காலையில் அம்மாவை எடுத்தெறிந்து பேசியதிற்க்குத்தான் கடவுள் தண்டனை கொடுத்து விட்டாரோ!!! காப்பியை மேஜை மேல் வைத்து விட்டு "கிளாஸ், முடிந்ததா லதா, டிரைவர் வந்து சொன்னார்.." என்று கேட்டவாறே அங்கிருந்து நகரமுற்பட்ட அன்னபூரணியை தடுத்து நிறுத்தியது லதாவின் குரல்.

"அம்மா, என்னை மன்னித்துவிடு, காலையில் உன் மனம் புண்படும்படியாக பேசி விட்டேன் உங்கள் விருப்பப்படியே நேற்று பார்த்த அந்த பையனையே கல்யாணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் அப்பாவிடமும் நீயே சொல்லிவிடு."

அன்னபூரணி மகிழ்ச்சியுடன் மகளை நோக்கினாள்  "உண்மையாகவா சொல்கிறாய், லதா ? "ஆமாம்! அம்மா, உண்மையாகத்தான் சொல்லுகிறேன்."
மகளின் உறுதியான குரலில் தாய் மிகவும் சந்தோஷமடைந்தாள், 

அவளுக்கு தெரியுமா தன் மகள் காதல் என்பது ஒரு போலி வாழ்க்கை, பொழுதுபோக்கு என்பதை புரிந்துகொண்டு விட்டாள் என்று......

<<<பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ....  
அவர் மற்றவையும் பார்ப்பதினால் நன்மை அல்லவோ.......>>>> 

அந்த பாட்டு எங்கேயோ பாடிக் கொண்டிருந்தது..........
================================================================================
இதுவும் 1976- ல் எழுதியதுதான். அந்த காலகட்டத்தின் நடவடிக்கைகள் பாவனைகள் இவைகளை கருத்தில் கொண்டு எழுதியது. மேலும் கதைகள் என்ற ஒன்று எழுத வேண்டுமென ஆர்வத்துடன் மட்டுமே கவனம் செலுத்தி எழுதப்பட்டவை. இதில் குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். 

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். 

Friday, June 1, 2018

கன்னி, ஆனால் தாய் - பகுதி 2

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை தீடிரென்று வீறிட்டு அழுதது. எதற்குமே கலங்காத நிர்மலா நளினாவின் சோகத்தை சுமந்த பாரத்தில் சற்று கண்கள் கலங்க அவசரமாக குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் ஆறுதல் அடைந்த குழந்தை மறுபடி கண்மூடி உறங்க ஆரம்பித்தது. கைகளில் மெய்மறந்து உறங்கி கொண்டிருந்த ஷீலாவை மெல்ல தொட்டிலில் படுக்க வைத்தாள் நிர்மலா. 


"இந்த குழந்தையை விட்டு செல்லவதற்கு எப்படி நளினாவுக்கு மனது வந்தது.... அவள் வாழ்க்கையை பற்றி சமயம் வரும்போது தெரிந்து கொண்டு அவள் மனதை பக்குவமாய் மாற்றி நல்லதோரு வாழ்வை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றுதானே நினைத்து கொண்டிருந்தேன் .பாவிப்பெண்... அதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டாளே...." நிர்மலாவின் மனம் பரிதவித்தது...


கடற்கரை .....
"சேகர்! ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டுமென்றீர்களே!" என்று கேட்டவாறு தோளிலிருந்த ஷீலாவை இறக்கி விட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள் நிர்மலா.

அவளை ஏறிட்டு பார்த்து விட்டு குழந்தையை பார்த்த சேகர் "குழந்தை" என்று இழுத்தான்.

அவனது தயக்கத்தை புரிந்து கொண்ட நிர்மலா, "கவலைபடாதீர்கள்! நாம் பேசுவது அவளுக்கு ஒன்றும் புரியாது," என்றாள் புன்னகையுடன்.

"நம் காதலைப்பற்றி, இத்தனை நாள் பழக்கத்துடன் நம் காத்திருந்தலைப் பற்றி என் வீட்டில் விளக்கமாக கூறினேன் நிர்மலா. கொஞ்ச நேர தயக்கத்திற்கு பின் சம்மதம் தந்து விட்டார்கள். ஆனால்..."

"ஆனால்"?

"வீட்டுக்கு மருமகள் வரும் போதே தாத்தா, பாட்டியாக அவர்களுக்கு பிடிக்கவில்லை, அதாவது..." எப்படிசொல்வது என்று தயங்கினான் சேகர்.

"புரிகிறது, சேகர்.." அவனை கையமர்த்தினாள் நிர்மலா.

"என்னைப் பற்றி எல்லாவற்றையும் கூறிவிட்டீர்களா சேகர்? அதாவது நான் இவளுக்கு தாயாகவேண்டிய சூழ்நிலையைப்பற்றி...."

" எல்லாவற்றையும் கூறிவிட்டேன் நிர்மலா!"

பேச்சுக்கள் அங்கு தடையாக, அவரவர் சிந்தனைகள் சற்று மேலோங்க, சிறிது நேரம் மௌனம் நிலவியது இருவரிடமும்.

"சரி சேகர்! நான் கிளம்புகிறேன், ஷீலா பாவம் பசியோடிருக்கிறாள்! காத்திருப்பதுதான் நாம் பழகிய ஒன்றாயிற்றே.... அடுத்த முறை  ஒரு முடிவான பதிலை கேட்டு வந்து சொல்லுங்கள்" என்று நிர்மலா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு நடந்தாள்.

"நளினா வீட்டைவிட்டு போய் இரண்டு வருடங்கள் ஓடி மறைந்து விட்டது. இதுவரை அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. இனி எப்போதோ?

பேதைப்பெண்! என்னோடு இருந்திருந்தால் என்னக்கு பாரமாக இருக்குமென்று போய் விட்டாள். இப்போது மட்டும்... நான்கு வருடமாக நேசித்து வருபவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் குறுக்கீடாக நிற்கிறதே அவள் குழந்தை."

சட்டென்று உள்ளத்தில் உதயமான இந்த எண்ணத்தால் வெட்கினாள் நிர்மலா.
"சே! என்னமடத்தனம்: பிஞ்சுபோன்ற முகம், மலரைப் போன்ற மென்மையான இதயம், தன்னையே தாயென்று நினைத்து அன்பு முழுவதையும் தனக்கே வாரி வழங்கும் இந்த குழந்தை, இவளைப் போயா குறுக்கீடு என்று நினைத்தோம்!"

சாட்டையால் அடித்தது போல் வலித்தது இதயம்....... 

கண்களில் நீர் நிரண்டது. தன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த குழந்தையை இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டாள் நிர்மலா.

"யாராலும் என்னை இவளிடமிருந்து பிரிக்க முடியாது என்றுமே.. என் வாழ்நாள் உள்ளளவும் ஏன் நளினாவே  வந்து என் குழந்தை என்று உரிமை கொண்டாடினாலும், நான்தான் இவளுக்கு தாய்.. அதில் எள்ளளவும் மாற்றமில்லை " என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நிர்மலா. 


அந்தளவிற்கு பாசக்கயிறு தங்கள் இருவரையும் பிணைத்திருப்பதை அவளால் உணர முடிந்தது. 


ரு  வாரகாலம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கழிந்தது.

வார இறுதியில் மறுபடியும் அதே கடற்கரையில் சேகருக்காக காத்திருந்தாள் நிர்மலா. 
குழந்தை அவள் அருகே மணலில் விளையாடிக்கொண்டிருந்தது.

தூரத்தில் அவளை தேடிக்கொண்டு சேகர் வந்து கொண்டிருப்பதை கண்ட நிர்மலா கையசைத்து தான் இருக்குமிடத்தை அவனுக்கு உணர்த்தினாள்.

அவளை பார்த்த மகிழ்ச்சியில் அவள் அருகில் வந்தமர்ந்தான் சேகர்.

"சேகர், இப்போதாவது உங்கள் பெற்றோர்களின் முடிவான பதிலை கேட்டு விட்டீர்களா? என்ன சொல்கிறார்கள்?" என்று ஆர்வமான குரலில் நேரடியாகவே ஆரம்பித்தாள் நிர்மலா.

"கேட்பதென்ன, கெஞ்சி பார்த்துவிட்டேன் நிர்மலா.. அவர்கள் முடிவிலிருந்து விலக மறுக்கிறார்கள்." தயக்கமான குரலில் சேகர் றினான்.

"சேகர், உங்கள் பதில்?  நீங்களுமா என்னை சந்தேகிக்கிறீர்கள்?" சற்று தழுதழுத்த குரலில் கேட்டாள் நிர்மலா.

"சே! சே! சத்தியமாக இல்லை நிர்மலா, இந்த நான்காண்டு கால பழக்கத்தில் உன்னைப்பற்றி எனக்குதெரியாதா? நளினாவை நான் பார்த்து பேசாவிட்டாலும் நீ அவளைப்பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு உன்னுடன் நானும் அவளுக்காக இரக்கப் படவில்லையா, அவளுக்கு ஒரு புதுவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு, அதற்கு பிறகு நம் காதலை அவளிடம் சொல்லி நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீ சொன்னதை ஆமோதித்து, நான் இத்தனை காலம் காத்திருக்கவில்லையா? இருந்தாலும்..... நீ...." தயக்கத்துடன் நிறுத்தினான் சேகர்.

"சொல்லுங்கள் சேகர், எதையோ சொல்ல வந்தீர்களே.." என்ற நிர்மலா அவன் கண்களை உற்றுநோக்கினாள்.

"நீ தவறாக நினைக்காதே, நிர்மலா. என்  பெற்றோர்கள் மட்டுமில்லை, நானும்.... என் மனைவி வீட்டுக்கு வரும் போதே ஒரு குழந்தையோடு வருவதை விரும்பவில்லை...." சற்று  தயங்கியவாறு படபடத்த குரலில் கூறினான் சேகர்.

திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா.

"ஒரு அருமையான யோஜனை கூறுகிறேன் நிர்மலா, பேசாமல் ஷீலாவை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடு. அதற்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். நம் திருமணத்திற்கு பிறகும், நீ அவளை அடிக்கடி சென்று பார்த்து விட்டு வரலாம். அதற்கு நான் தடையொன்றும் சொல்ல மாட்டேன். இது உறுதி! என் பெற்றோர்களிடமும் இந்த விபரத்தை விளக்கி கூறி, அவர்கள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறேன்... என்ன சொல்கிறாய்?" அவனது அவசர பேச்சில் அவளை எப்படியாவது இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற வெறி மட்டுமே இருப்பதை புரிந்து கொண்டாள் நிர்மலா.

சிறிது நேரம் மெளனம் நீடித்தது இருவரிடமும்...

எதுவும் உணராத குழந்தை இருவரையும் பார்த்து தன் மழலை மொழியில் எதையோ கூறி விட்டு, முகம் மலர சிரித்து, நிர்மலாவின் மடியில் ஏறி அமர்ந்து அவள் கழுத்தை இறுககட்டிக்கொண்டது.

நிர்மலாவும் அவளை அன்புடன் அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சட்டென்று உறுதியான முகத்துடன் அவ்விடத்திலிருந்து எழுந்த நிர்மலா, தன் புடவையில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை தட்டியவாறு மடியிலிருந்து இறக்கி விட்ட குழந்தையை எடுத்து தோளில் சாற்றிக் கொண்டாள்.

"மிஸ்டர் சேகர், சாதாரணமான மனிதர்கள் கணக்கில் இத்தனை சீக்கிரம் நீங்கள் சேர்ந்து விடுவீர்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை எவ்வளவோ உயர்ந்த மனிதர் என்றுதான் இந்த நான்காண்டு கால பழக்கத்தில் நினைத்திருந்தேன்.

என்னையே நம்பி என்னிடம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் நளினாவின் குழந்தையை, என் அன்பு சகோதரி குழந்தையை, ஏன்.... நான் பெறாமல் வளர்த்து வரும் என் வளர்ப்பு மகளை நான் உங்கள் அரிய யோஜனையின்படி நான் கைவிட தயாரில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றாவது ஒருநாள் அவள் நல்ல நிலமையில் வந்து என்னை சந்திப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு கண்டிப்பாக இருக்கிறது.  அவள் நம்பிக்கையை குலைக்க எனக்கு இஸ்டமில்லை.

நீங்கள் உங்கள் விருப்பபடி உங்கள் பெற்றோர்க்கு பிடித்தமான பெண்ணை மணந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்,  எனக்கு எந்த ஆட்சேபனையும்  இல்லை.... அல்லது, என்னை புரிந்து கொண்டு, என்னையும், என் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள என்று மனமுவந்து முன்வருகிறீர்களோ, அன்று அந்த நாளில் நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.

அதுவரைக்கும் அது எத்தனை ஆண்டு காலமானலும்சரி... காத்திருப்பேன்..  ஏனென்றால், நான் உங்களை  மனமாற நேசித்திருக்கிறேன். இப்போதும் நீங்கள் குழந்தையை அநாதையாக விட்டு விடுமாறு சொல்லும் யோஜனையை தவிர்த்து, உங்களிடமிருக்கும் பிற நல்ல குணங்களுக்காக, இத்தனை நாள் நாம் பழகிய கண்ணியமான நட்புக்காக உங்களை நேசிக்கிறேன்.

தவிர என்றோ உங்களையே  என் கணவராகவும்  என் மனதில்  வரித்து விட்டேன். மனதில் அமர்ந்திருக்கும் ஒருவரை தூக்கி எறிந்து விட்டு மற்றொருவரை மணந்து கொள்ள எனக்கு தெரியாது.  என்னால் முடியவும் முடியாது,  நான் வருகிறேன்."

சொற்களை சிந்திய வேகத்தில் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலையும் எதிர்பாராமல்  நடந்து சென்றாள் நிர்மலா.

அவளின் நிதானமான பேச்சில், உறுதியுடன் கூறிய முடிவில், மேற்கொண்டு என்ன பேசுவது  என்று தெரியாமல், தடுத்து நிறுத்தவும் தோன்றாது, திரும்பியும் பாராது செல்லும் அவளையே திகைப்புடன் பார்த்தவாறு, அமர்ந்திருந்தான் சேகர்.



முற்றும்.

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.

பகுதி: 1