Showing posts with label காலத்தின் மாற்றம். Show all posts
Showing posts with label காலத்தின் மாற்றம். Show all posts

Friday, April 17, 2020

காலத்தின் மாற்றம் - 2

 சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் நம் கலாசாரமாகிய எச்சில் பத்து பற்றி உண்மை நிறைந்த விஷயங்களை  மிகவும் அழகாக எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.

நான் ரசித்துப் படித்தேன் என்பதை விட நாங்கள் வாழ்ந்த அந்த காலத்திற்கு சென்றும் வந்தேன். ஆனால், இந்த விஷயங்களில் இருந்த கட்டுப்பாடுகள் நம் முன்னோர்களான  பெற்றோர்களின் வயதான ஒரு கால கட்டத்திலேயே சற்று தளர்வடைந்து விட்டது எனவும் சொல்லலாம். ஏனெனில். கல்வி, கல்விக்கேற்ற பதவி, அதை வகிக்கும் இடங்கள், அந்தந்த இடங்களின் சூழ்நிலைகள், அந்த சூழ்நிலைக்கேற்ப நாகரீகமான வாழ்வுக்கு தேவையான  பணத்தேவைகள், புதுமையை விரும்பும் இளைய தலைமுறை மக்களின் மன மாற்றங்கள், அதனால் சடாரென்று அவர்களால் எடுக்கப்படும்  தீடிர் முடிவுகள், இத்தனையும் நம் சுவையான  பழைய கலாச்சார எழுத்துக்களை  கொண்ட  பல பக்கங்களை வேகமாக புரட்டி, வாழ்க்கைப் புத்தகத்தின் புது பக்கங்கங்களில் தன் நாகரீகம் என்ற மையினால் புதிது புதிதாக எழுத ஆரம்பித்து விட்டன என்பதும் நிதர்சனமான உண்மை.

நிறைய இடங்களில், இன்னமும் பழைய கட்டுப்பாடுகள் கட்டுக்குலையாமல் இருக்கலாம் / இருக்கட்டும். அவர்களின் கட்டுப்பாட்டு  செயல்களுக்கு என் பணிவான வந்தனங்கள். அவைகளை இப்போதைய காலகட்டங்களிலும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அன்பான நன்றிகள்.

நான் இந்த பதிவை எப்போதோ எழுதியது. "காலத்தின் மாற்றம்" என்ற தலைப்பில் பகுதி ஒன்றை மட்டும் வெளியிட்டேன். இரண்டாவதாக எழுதியது டிராப்டிலேயே  தான் வெளியாகும் "காலத்திற்கு" காத்திருந்தபடி தவமியற்றி கொண்டிருந்தது. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை பார்த்ததும் இதை வெளியிடும் ஆசை வந்தது. இதுதான் எதற்கும் ஒரு நல்லபடியான  " நேரம் காலம்" என்பது வர வேண்டும் என நம் பெரியோர்கள்  சொன்னதும்  உண்மையாக  இங்கு பலித்துள்ளது. .

காலத்தின் மாற்றம் 1

இது முதல் பகுதிக்கான சுட்டி. இதை கிளிக்கி  படிப்பவர்களுக்கு முதலில் என் அன்பான வந்தனங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது காலத்தின் மாற்றம். 2.


நான் சென்ற பதிவில் குறிப்பிட்டபடி நாகரீகத்திற்கு ஏற்ற மாதிரி பெண்கள் எப்படி வாழ்வில் மாறுதல்களை சந்தித்து  வந்தார்கள்/வருகிறார்கள். என்பது குறித்து எழுத ஆரம்பித்தேன். 

        நான் கூறியபடி என் பாட்டி காலத்தில் கணவன் உட்பட வீட்டின் பெரிய மனிதர்கள் யார் வந்தாலும், முக்கியமாக ஆண்கள் வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் வீட்டிலுள்ள பெண்கள், குறிப்பாக அந்த குடும்ப தலைவரின் மனைவி, (அல்லது அந்த வீட்டின் மருமகள்கள்) எழுந்து நிற்க வேண்டும். வந்தவர்கள் உடை மாற்றி, தாக சாந்தி செய்து, சிரம பரிகாரம் செய்து, வெளியில் சென்று வந்த விபரங்களை பற்றி (அவர்களுக்கு மனமிருந்தால்,,) அவர்கள் கூறுவதை செவிமடுத்து, அது சாப்பிடும் வேளையானால், அவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்கள் படுத்து உறங்க ஆரம்பித்த பின்தான், இந்த மனைவியானவள். (மருமகள்கள்) தன் வயிற்றில் எழும் பசியை போக்கி, கால் கடுக்க நின்ற கால்களுக்கும் சிறிது ஓய்வை தர வேண்டும். (அதற்குள் ,வேறு வேலைகள் (கட்டளைகள்) வீட்டின் பெரியவர்கள் மூலமாக, முளைத்து, பசியையும் ஓய்வையும் சிறிது நேரம் தள்ளி வைக்கும்.) இல்லையெனில் நன்கு படுத்து உறங்கி கொண்டிருக்கும் நபர் அந்த காலத்தில் மின் விசிறிகள் இல்லாததால், “ஐயோ! இந்த வேர்வையில் தூக்கம் கலைகிறதே! இந்தாடி பெண்ணே! கொஞ்சம் விசிறி கொண்டு வீசி வீடேன்!” என்று கத்த மறுபடியும் கால் கடுக்க நின்றபடி அவர் தலை, முதல் கால் வரை காற்றை பெறச் செய்யும் வைபவத்தை நிகழ்த்த வேண்டும். அவர் அந்த காற்றில் நித்திரை உலகில் மீண்டும் பயணித்த பின்பும் அவர் மறுபடியும் இந்த உலகத்துக்கு எரிச்சலுடன் வந்து விடக் கூடாதேயென்று, மிகுந்த பொறுமையுடன் சேவை செய்து கொண்டிருக்க, வந்த பசி வயிற்றில் இரைச்சலுடன் மோதி, தோல்வியுடன் ஓட, பின் வந்து போன பசிக்கு சிறிது உணவை அளித்து விட்டு பிற வேலைகளை முடித்துக் கொண்டு இந்த மனைவியானவள், (மருமகளானவள்) தன் உடலுக்கு கொடுக்கும் ஓய்வுக்கு நிகராக வேறு ஒரு பொருள் இந்த உலகில் கண்டிப்பாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். என்றெல்லாம், என் பாட்டி தான் வாழ்ந்த வாழ்வை சொன்னதை கேட்டு உங்களுடன் பகிர்ந்த எனக்கே மூச்சு முட்டுகிறதே! பாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்?           
      
        
          அந்த காலத்தில் இளவயதின் தன் அனுபவங்களை சொல்லி வளர்த்ததாலோ, இல்லை, பார்த்து வளர்ந்ததாலோ, என்னவோ! என் அம்மா காலத்திலும். அதே மரியாதையை பெரியவர்களுக்கு தந்து வாழ்ந்து வந்தார்கள். என் தந்தைக்கும் தந்தை வீட்டின் பெரிய உறவுகளுக்கும், என் அம்மாவும் அதே மரியாதையை தந்தார்கள். ஆனால், பாட்டியின் காலத்தை விட சற்று பரவாயில்லை! என்று சொல்ல கேட்கும் எனக்குத்தோன்றும். ஆனாலும், எனக்கு தெரிந்து என் அம்மா என் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடன்தான் நடந்து கொண்டார்கள். எனக்கு விபரம் தெரிந்து என் தந்தை வெளியே சென்று விட்டு வீட்டினுள் நுழைந்ததும், என் அம்மாவுடன் சேர்ந்து என் பாட்டியும் (அம்மாவின் அம்மா) மருமகனுக்காக மரியாதை நிமித்தம் சிரமத்துடன் எழுந்து நிற்பார்கள். (பழக்கதோஷம்! விடுவதற்கு மனம் இடம் தரவில்லை!)  
      
            “அதெல்லாம் ஒன்றும் எழுந்து நிற்க வேண்டாம். மரியாதை மனதிலிருந்தால் போதும்! செய்கையில் தேவையில்லை! என்று என் தந்தை எவ்வளவோ தடுத்தும் கேட்க மாட்டார்கள். இதற்காகவே என் தந்தை வெளியிலிருந்து வரும் போதெல்லாம் சிறிது நேரம் வாசல் திண்ணையில் அமரந்து விட்டுதான் வருவார். (அதற்குள் வீட்டினுள் படுத்துக்கொண்டோ, இல்லை கீழே அமர்ந்து ஏதாவது வேலையிலோ ஈடுபட்டிருக்கும் என் பாட்டி, வாசலில் அமர்ந்திருக்கும் மருமகனை கண்டதும் வருகையை உணர்ந்தவளாய், அவசரப்பட்டு எழுந்து நிற்காமல் நிதானமாக எழுந்திருக்க முயற்சிப்பார்கள் இல்லையா?) இந்த இடத்தில் மாமியாரை தன் அம்மாவாக நினைத்து மதித்த என் தந்தையை நினைக்கும் போது இப்போதும் என் மனம் நெகிழ்கிறது.
            
             இதையெல்லாம் பார்த்து பார்த்து வளர்ந்தலோ, என்னவோ! என்னிடமும் அந்த குணம் திருமணமாகி புகுந்த வீடு சென்ற பின்பு நிறைய வருடங்கள் வரை ஒட்டிக்கொண்டிருந்தது. பெரியவர்களை கண்டதும், எழுந்து நிற்பது, அவர்கள் அருகில் சரிசமமாக அமராதிருப்பது, அவர்கள் உணவு அருந்தும் வரை, நின்று கொண்டே பறிமாறுவது, போன்ற செயல்களை சிரத்தையுடன் செய்து வந்தேன். (“அட! ரொம்பத்தான் தற்பெருமை!” யாரோ சொல்வது காதில் லேசாக விழுவதால், இத்துடன் நிறுத்துகிறேன்.)  காலப்போக்கில் வருடங்கள் உருண்டோட, இயலாமை காரணமாக “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று மனதை தேற்றி மாறக் கற்று கொண்டேன்.    

              அதன் பிறகு வந்த காலங்களில் தங்கள் புகுந்த வீட்டின் பிற உறவுகளுக்கு, எதிரிலேயே தங்கள் கணவனுக்கு இணையாக அமர்ந்து நாலு பேர் முன்பாக தோள் தட்டி பேசி மகிழ்ந்த என் புகுந்த வீட்டின் மற்ற பிற உறவுகளை கண்டு வியந்துதான் போனேன். காலந்தான் எப்படியெல்லாம் மாறி விட்டது? என்று ஆச்சரியப்பட்டு போனேன். (உண்மையைச் சொல்கிறேன்! நாமும் திருமணம் ஆன புதிதில், இப்படியெல்லாம் இல்லாமல் போய் விட்டோமே! என்ற சின்ன தாக்கம் அக்கணம் எனக்குள் வந்து போனதை தடுக்க இயலவில்லை/) என்  கணவரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. என் கணவரும் கொஞ்சம் மரியாதையை எதிர்பார்பவர்தான். “நீ செய்வது சரிதான்!” என்பது போல் பதில் வரும். எதற்கு வம்பு! என்று அமைதியுடனே காலத்தோடு விரைய கற்று கொண்டேன்.
    
             என் காலத்திலேயே கணவரை பேர் சொல்லி அழைக்கும் நாகரீகம் வந்து விட்டது. மரியாதைகள் மங்க ஆரம்பித்து விட்டது. “தலை தட்டுவது மாதிரி எப்படித்தான் கணவன் பெயர் சொல்லி அழைக்கிறார்களோ? நம் காலத்திலெல்லாம் இப்படியா?” என்று என் அம்மாவும், மாமியாரும் சொல்லிச் சொல்லி அங்கலாய்பார்கள். அவர்களின்  நியாயமான வருத்தம் என்னையும் தொற்றிக்கொள்ளும். (உண்மையாகவே சொல்கிறேன்!!!. நம்புவது உங்கள் விருப்பம்.)  

            இப்படியாக என் காலம் கழிந்து கொண்டிருக்க, நம் அடுத்த தலைமுறையின் காலங்கள் உதயமாகி விட்டன/ இவர்களின் கலாசாரத்தை மட்டுந்தான் என்னால் கண்டுணர முடியும் என நினைக்கிறேன். அதன் பிறகு மாறும் பழக்க வழக்கங்கள் எவ்வளவோ! யாருக்குத்தெரியும்? பொதுவாக இப்போதுள்ள ஆண்களும், பெண்களும் காலத்திற்கு தகுந்த மாதிரி, அன்றிலிருந்தே, நிறைய மாறுதலுக்கு தயாராகி விட்டார்கள். 

           காலங்கள் மாற மாற மாறும் கலாசாரத்தையும் ஜீரணித்து கொண்டு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். வேறு வழி? இல்லையென்றால் பிரச்சனைகள் பெரிதாகி ஒருநாள் வெடிக்கும். வெடித்த குப்பைகளின் அசுத்தத்தின் இடையே வாழ்வதை விட, விட்டு கொடுக்கும் சுபாவங்களை, (இதில் யார் விட்டுக் கொடுப்பது? சந்தேகமற நாம்தான்.. ஹா ஹா ஹா. மேலும் நமக்குத்தான் இது தெரியும்...) வளர்த்துக்கொண்டு, அதனிடேயே வாழ்வது பெருமையல்லவா? அந்த காலந்தான் அனைவருக்கும் (என்னையும் சேர்த்துதான்) யோசிக்கும் தன்மையையும் தந்தருள வேண்டும்.

முந்தைய பதிவினையும், இப்போதைய பதிவினையும் படித்தவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏. 

Friday, June 13, 2014

காலத்தின் மாற்றம்..


அந்த காலத்தில் பெண்களுக்கு, கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம். அந்த நிஜமான தெய்வமே நேரில் வந்து நின்று “வேண்டிய வரத்தைக் கேள்! தருகிறேன்!” என்றாலும், கணவன் சற்று கண் அசைத்தால்தான், காரிகை பேச வாய் திறப்பாள். அந்த அளவுக்கு அவளுக்கு பதி மேல் பக்தி! கணவன் நலமே தன் நலமென்று கருதி, தனக்கென்று எந்த விருப்பங்களையும், ஏற்படுத்திக் கொள்ளாமல், தன் கணவனையும் அவ(ர்)ன், வீட்டு உறவுகளையுமே, முறையே, கோவிலின் கருவறை தெய்வமாகவும், பிற பிரகார தெய்வங்களாகவும் நினைத்து வாழ்ந்து வந்தாள். அப்போது அவள் சொல்லும் பேச்சுக்கெல்லாம், பஞ்ச பூதங்களும் (காற்று, நெருப்பு, பூமி, ஆகாயம், மழை) கட்டுப் பட்டது. தெய்வங்களும் அவள் கேட்காமலே, வரங்களை அள்ளி தருவதற்கு தயாராயிருந்தார்கள். இவள்தான்  (கணவனுக்கு தேவையானதை தவிர) தனக்கென்று எதுவுமே கேட்பதில்லை!


          அந்த காலங்கள், காலத்திற்கே போரடித்ததால், சற்று மாற நினைத்ததில், பெண்களும், எண்ணத்தில் சிறிது மாறினார்கள், தங்களுக்கு தேவையானதை, உணர தொடங்கினார்கள். கணவனை தெய்வமாக நினைத்தாலும், தனக்கும் பசி, தாகமென்று ஒன்று ஏற்படுகிறது! என்பதை புரிந்து கொண்டார்கள். நாளாக, நாளாக, கல்விக் கண் எத்திக்கிலும் கண் திறக்க தத்தம் திறமைகளை, ஆணுடன் சேர்ந்து பெண்ணும் உணர தலைப்பட்டாள். கேள்விகளுக்கு, பதில் தெரியாமல், இருந்த நிலை மாறி, பதிலேதும் சொல்லாமல், மெளனித்த நிலை மாறி, பதிலளிக்கும் பக்குவத்திலும், கேள்விகளை தொகுக்கும் திறனிலும், மெள்ள மெள்ள படியேறி வந்தார்கள்.


         அந்த காலம் இன்னும் சிறிது சுற்றி மாறி வந்தமையால் ஆண், பெண் சுதந்திரத்திலும் நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. ஆணுக்கு சரிநிகர் சமானமாக படிப்பிலும், பணியிலும் பெண்கள் தங்களை வளர்த்து கொண்டதால், எப்போதும் வழிபாட்டை மட்டும் கொண்டேயிருக்கும் தன்மையை தவிர்த்து, “வாழ்வில் இனி நானும் ஒரு அங்கம், நாமிருவரும், ஒன்றிணைந்து முடிவெடுத்தால் குடும்பம் எனும் வீட்டையே கோவிலாக்கலாம்!” என்ற மனப்பக்குவத்துடன் பெண்கள் செயலாற்ற துவங்கினார்கள். காலம் களிப்புற்றது!!! தன் விளைவுகள் மனித இனத்துக்கு நன்மைகள் பலவும் செய்கிறதே! என்று இறுமாப்புடன் சற்று கர்வமும் கொண்டது!!!!
                      

                அந்த காலம் தன்னிச்சையாக சிறிது சுழல, காலச் சுழலில் சிக்கிய பெண்களின் மனமும் தன்னிச்சையாக சுழல ஆரம்பித்தன. பெற்றவர்களின் முடிவுக்கு மாறாக, தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வை தேர்ந்தெடுக்கும் துணிவை பெற்றனர். (அது தன்னை பெற்றவர்களின் மனதை துன்பபடுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்த பிறகும்! அது பற்றி சிறிதும் கவலையின்றி!!) அப்படி தேர்ந்தெடுத்த வாழ்வில் சிறிது பிரச்சனை என்றாலும், சிறிதும் விட்டுக் கொடுககாமல், விட்டு கொடுக்கும் எண்ணங்களை, பின்னுக்குத்தள்ளி தன் விருப்பபடி வேறு வாழ்வையும், அல்லது தனித்திருக்கும் வாழ்வையும், தன்னிச்சையாக பிரகடனபடுத்தும் உரிமையையும் பெற்றனர். (அதுவும், தன்னை பெற்றவர்களுக்கு வேதனையையும், நெருங்கிய உறவுகளுக்கு சங்கடங்களையும், தரும் என்பதையும் புரிந்து கொள்ளாமலே!!) சுதந்திரம் தந்த ஊக்கத்தில் மனித தன்மைகள் குறைய தொடங்க, அந்த காலமே, நாமும் சற்று அதிகமாத்தான் சுழன்று விட்டோமோ?என்று கவலை கலந்த,பயத்துடன் வேதனையடைந்திருந்தாலும், ஆச்சரியபடுவதிற்கில்லை! இது யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் தோன்றுகிறது. 


           நான் இங்கு எல்லோரையும் குறிப்படவில்லை! மாறி வரும் சில பெண்களின் மனதை மட்டுந்தான் குறிப்படுகிறேன்.(தவறெனின் வருந்துகிறேன்.)  எங்கள் நெருங்கிய உறவில் நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தால் ஏற்பட்ட மன வேதனையில் இதை எழுதிவிட்டேன். அந்த பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் வேதனையை இன்னமும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை! இருப்பினும் தங்கள் பெண் வாழ்வை தன் விருப்பபடி தேர்ந்தெடுத்தும் அந்த வாழ்வுடன் வாழாமல் இப்படி தனிமையுடன் தனித்திருக்கிறாளே! என்ற கவலையில் அவர்கள் வேதனைபடுவதை காண கஷ்டமாக இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு மாறும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்வை சிறப்புற அமைத்துக் கொண்டால்,அவளை பெற்றவர்களும் மனமகிழ்ச்சியுடன் இருப்பார்கள். முக்கியமாக நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு பாதையில் செல்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை நாகரீகம் மாறி வருவதால் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு மாறியுள்ளது என்பதை நகைச்சுவையுடன் இந்த பதிவில் எழுத ஆரம்பித்து அதுவும் எப்படியோ மாறி விட்டது. அடுத்த பதிவிலாவது அது கை௬டி வர வேண்டும். அதற்கும் அந்த காலந்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். செய்யுமா? பொறுந்திருந்து பார்ப்போம்!!!!!