Showing posts with label பாலாஜியின் தரிசனம். மலைகளின் நாயகன். பயணம்.. Show all posts
Showing posts with label பாலாஜியின் தரிசனம். மலைகளின் நாயகன். பயணம்.. Show all posts

Sunday, September 15, 2024

எதிர்பாராத தருணங்கள்.

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 

கடந்த நான்கைந்து நாட்களாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அதற்கு அனைவரும் மன்னிக்கவும். 

கடந்த புதனன்று எதிர்பாராதபடி எங்களுக்கு ஒரு கோவில் பயணமொன்று அமைந்து விட்டது. திங்கள் மாலை தீடிரென திட்டமிட்டபடி அப்பயணம் புதன் அன்று காலை கிடைத்தது. அது இறைவனின் அற்புத செயல்களில் ஒன்றாகும். அப்பயணம் தந்த அலைச்சல்களில, எனக்கு சிறிது உடல்நலக்குறைவு என்றால், எங்கள் பேத்திக்கு( மகளின் மகள்) வெள்ளி காலையில் இங்கு வந்த பின் நல்ல ஜுரம். பாவம்..! அந்த அலைச்சலில் அவளுக்கும் உடல்நலக் குறைவு வந்து விட்டது. எங்களிடம் கைவசம் இருந்த மருந்துகளை தந்தும், குணம் ஆகாததால், நேற்று மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்த பின் இன்றுதான் எழுந்து அமர்ந்திருக்கிறாள். அந்தக் கவலைகளிலும் என்னால் எப்போதும் வருவது போல் முறையாக வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும். 

ஒரு சிறு குன்றிருக்கும் இடமெல்லாம் ஆட்சி செய்வதும், அருள் புரிவதும் குமரன் என்பது பழங்கூற்று. ஆயினும், அனேக மலைகளும் "அவன்" வாசஸ்தலங்கள்தாம்.அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில மலைகளும், அவன் தந்தைக்கும், மாமனுக்கும் பெயர் பெற்றவையாகும் என்பதும் யாவரும் அறிந்ததே..!  மலைகளின் அழகும், அதன் தரிசனங்களும் நம் மனதிற்கு மகிழ்வூட்டுபவை. ரசிக்க வைப்பவை. அப்படி ரசிக்க வைத்த ஓரிடத்திற்கு செல்லும் வாய்ப்பு தீடிரென சற்றும் எதிர்பாராமல் இறைவன் அருளால் கிடைத்தது. அதற்கு இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள். 🙏. 



இந்த ஒரு மலை அல்ல.... 

இந்த இருமலைகளும் மட்டுமல்ல... 


ஏழு மலைகளும் ஒன்று சேர்ந்து கூடுமிடமாகிய... 


அந்த ஏழுமலையானின் தரிசனம் அவனருளால் கிடைத்தது. 


அந்த ஏழுமலைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டு அவனருளால்,அவன் பாதம் பணிந்து வணங்கி அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சென்று வந்தோம். 

கடந்த புதன், வியாழனுமாகிய இரு தினங்களும் மனதை எவ்வித கவலைகளுமின்றி, நிச்சலமாக இனிமையாக இருக்க வைத்ததும் அவனருளே.. 

இது அவனே அழைத்த எதிர்பாராத பயணம் என்பதினாலும், அவனருள் இல்லையென்றால் எதுவும் நடக்க சாத்தியமில்லை என்ற சத்தியமான  உண்மையாலும், அன்று அவ்வளவு கூட்டத்திலும் பகல் முழுக்க காத்திருந்ததற்கும், பின் எங்களுக்கென்று  தந்த அந்த நேரமாகிய பொழுதினில் இரவு மூன்று மணி நேரம் இடிபட்டு, காத்திருந்ததற்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான தரிசனத்தை தந்தான். 

எனக்கு அவ்விடம் விட்டு அகன்று வர கிஞ்சித்தும் மனமில்லை. அவனுடனே கலந்து விடும் பேராசை பேய்கள்  மனத்துள் வந்து தாண்வமாடின. ஆயினும், "அவன்" என் பிறப்போடு இடட கடமைகளை  முடிக்காது உயிர் பிரிய இந்த உடலுக்கு விருப்ப (உரிமையுமில்லை) மில்லை என்பதினால், மறுநாள் வியாழன் மதியம் தன் மைத்துனர் காளஹஸ்தி நாதரையும் தரிசிக்க வைத்து இரவு பத்திரமாக வீடு திரும்பச் செய்தான். நாராயணா.... இப்பிறப்பில் மட்டுமல்லாது வரும் எப்பிறப்பிலும் உன்னை என்றும் மறவாத வரம் தா..! உன் கருணையே கருணையப்பா. கோவிந்தா..! கோவிந்தா..! 🙏. 🙏. 



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த அன்னமயயா படத்தில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் அன்னமைய்யாவாகவே வாழ்ந்திருப்பார். அவரின் மனமுருகிய நடிப்பில் கண்களில் கண்ணீரையும், இறைவனை நெருங்கி அணுகும் நல்ல கருத்தையும் மனத்துள் தோற்றுவிக்கும் திரைப்படம் இது. எனக்கு மிக மிக (இப்படி எத்தனை மிகப் போட்டாலும் தகும்.) பிடித்தமான திரைப்படம். 

இந்த இறுதி காட்சியில் வரும்  அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க இன்னமும் எத்தனை ஜென்மங்கள் பிறந்திளைக்க வேண்டுமோ ? "விண்டவர் கண்டிலர்.. கண்டவர் விண்டிலர்."என்பது போல இறைவனை கண்ணால் (அகம், புறம்) காண்பதற்கு எத்தனை பிறவிகள்தோறும் எத்தனைமாயிரங்கள் புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ? இதே நினைப்புடன் நானும் இப்பூவுலகில் காத்திருக்கிறேன். அவனும் அதற்கான நம் நேரம் வரும் போது கண்டிப்பாக அதற்கு ஒரு வழி காட்டுவான். 🙏.

அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்றைய நன்நாளில் இப்பதிவை எழுதி பகிரச்செய்த அந்த ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான நமஸ்காரங்களும், நன்றியும். 🙏.

இப்பதிவை படிக்கும், படித்து கருததிடும்  என் அன்பான நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.