Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

Tuesday, September 15, 2020

ஸ்ரீகிருஷ்ண பக்தி.

 முன்னுரை 

இக்கதையை அனைவரும் படித்து அறிந்திருப்பீர்கள். நானும் இதை எத்தனையோ எழுத்தாளர்களின் வர்ணிப்பில் ஆழ்ந்து படித்திருக்கிறேன். அன்றிலிருந்தே என் எழுத்தில் இக்கதையை எழுத நான் ஆசைப்பட்டதை உணர்ந்த கண்ணன் இப்போதாவது என்னை எழுத வைத்து விட அவனும் நினைத்தான் போலும்.. .! சரி.. .இதை  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திக்கு (கோகுலாஷ்டமி) எழுதலாமென நான்,  நினைக்கும் போது அவனே எங்கள் விட்டில் அவன் வந்த கதையை எழுத வைத்து விட்டான்.  போன வாரமும் வந்து முடிந்த ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்திக்குள் எழுதி முடித்து விடலாம் என்று ஆரம்பித்த கதை தடைப்பட்டு அவனருளால் இன்றுதான் முடிவுற்றது. 

ஆரம்பமும், முடிவும் அவனேயாகி நிற்கும் அவன் துணையின்றி, ஒரு துரும்பும் அசையாத போது, நம் வாழ்வில் நடக்கும் கதையின் நகர்வும், நாம்  நிர்ணயக்கும்  ஒவ்வொரு செயலும்,  அவனுடையதல்லவா?அப்படியிருக்கும் போது நம்மை இப்படி  எழுத வைத்துப் பார்ப்பதும், ரசிப்பதும் அவன் பொறுப்புத்தானே...! தவிர இந்த நாள் என்றில்லாமல் என்றுமே அவன் நாள்தானே. ..! ஒவ்வொரு நாளுக்குள்ளும் நின்று நம்மை நகர்த்துபவனின் மாய சக்தியை உணர்வது மட்டுமே நம் கடமை. ....!   பிற அனைத்தும் அவனின் செயல்தானே....!

ஸ்ரீ கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச நந்த கோப குமாராய ஸ்ரீ கோவிந்தாய நமோ நமஃ. 

ஒரு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில். இரவுநேரம் ஸ்ரீமத்பாகவத உபன்யாசம் நடைபெற்று கொண்டிருந்தது. அன்றைய தினம் பாகவதத்தில்  ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும், மாடு மேய்க்க அன்னை யசோதாவிடம் அனுமதி பெற்று, அன்புடன் அன்னை கையால், காலை பலகாரங்களை உண்டபின் ஒரு கானகம் வழியாக மாடுகள் சகிதம் சென்று கொண்டிருப்பதை பாகவதர் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் அணிந்த அணிகலன்கள் அந்த கானகத்தின் இருளையும் போக்கவல்லதாக எப்படி ஜொலிக்கிறது.. . அவர்களுடன் மேனி எழிலுடன் அது எவ்வாறு போட்டியிட்டு ஜெயிக்கப் பார்க்கிறது என்பதை மெய்யுருக தமது பாணியில் சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லி கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஊரில் திருட வந்த ஒரு திருடன் "ஊர்மக்கள் அனைவரும் இங்கு குழுமியுள்ளனர். இப்போதுதான் நான் சென்று திருட முடியும்" என்று  நினைத்தவன். தற்செயலாக அந்த பாலகர்கள் சிறந்த நகை நட்டுக்களுடன் தனியாக கானகத்தில் தினமும்  வருகின்றனர் என்று பாகவதர் வலியுறுத்திக் கூறும்  செய்தியில் கவரப்பட்டு ஒரு நொடி யோசித்தான். 

"இந்த ஊரில் இன்றிரவு முழுவதும் வலை வீசிி தேடும் பொருளை விட அந்த பாலகர்கள் தனியாக வரும் காட்டை இந்த பாகவதர் மூலமாக தெரிந்து கொண்டால், ஒரே நாளில் மிக சிறந்த செல்வந்தனாகி விடலாம்... அடேயப்பா...! எவ்வளவு நகைகளை பட்டியலிட்டு கூறுகிறார். தலையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கீரிடங்கள், காதுகளில் வைர குண்டலங்கள், மார்பில் வைரக்கற்களால் இழைக்கப்பட்ட பொன்னாபரணங்கள், இடுப்பில் ஒட்டியாணம், காலில் பொற்சலங்கைகள், இது போக அந்த சின்னஞ்சிறு பாலகன்  கிருஷ்ணனின் கைகளில் உள்ள தங்கப் புல்லாங்குழல் அத்தனை விலைமதிப்புள்ளதாம்... இத்தனையும் தரித்துக் கொண்டு யாருமில்லாத அத்துவான காடு வழியாக தன்ந்தனியராக"..இது மட்டுமேஅந்த திருடனின் மனதில் மறுபடி மறுபடி ஓடிக் கொண்டேயிருந்தது." அங்கு சென்று அந்த பாலகர்கள் மடக்கி எல்லாவற்றையும் அபகரிக்க எவ்வளவு  நேரமாகப் போகிறது.. . .? அனேகமாக நான் நாளையே பெருஞ் செல்வந்தன் ஆகி விடுவேன்." ஆனந்தமான கற்பனைகளில் அவன் கண்கள் அசர மேற்படி பாகவதர் சொன்னதை அவன் செவி மடுக்கவில்லை. 

ஒரு மட்டும் நள்ளிரவில் அவர் தன் உரை முடித்து, அமர்ந்திருந்த ஊர்மக்கள் கலையத் தொடங்கியதும், தன் வீடு திரும்ப  கோவில் வாசலில் கோவில் நிர்வாகிகள்  அமர்த்தி தந்திருந்த மாட்டு வண்டியில், ஏறுவதற்காக வந்தவரை, "ஐயா. . ஒரு நிமிஷம்.. ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். இப்படி தனியாக வருகிறீர்களா? என்ற திருடனை பார்த்ததும்,  "சரி..! என் பாகவதத்தில் இவனுக்கு ஏதும் சந்தேகம் வந்துள்ளது போலும்"... என்று நினைத்தபடி அவனுடன் சென்றார். 

கோவில் பின்புறம் யாருமில்லாத இடத்திற்கு வந்ததும், "ஐயா..நான் ஒரு திருடன். இன்று தங்கள் பேச்சில் நிறைய நகைகளுடன் வந்த இருபாலகர்களைப் பற்றி கூறினீர்கள்..! அவர்கள் எங்கு எந்த காட்டில் வருகிறார்கள். எனக்கு அடையாளம் காட்டுங்கள். அவர்கள் அணிந்து வரும் நகைகளை நான் கொள்ளையடிக்க வேண்டும். செல்வந்தனாக வேண்டும். வேண்டுமானால அதில் கொஞ்சம் உங்களுக்கும் தருகிறேன்." என்றான் திருடன். 

பாகவதருக்கு அவன் திருடன் என்றதும் ஒரு நிமிடம் உடம்பு வெலவெலத்தது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு,  "அப்பா.. அவர்கள் புராணங்களில் வருகிறவர்கள். கதை மாந்தர்களான கடவுள்கள்.. அவர்களை நாம் நேரில் காண முடியாது.. நான் ஏதோ என் வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி புராண கதைகளை விரிவாகவும், இடையில் என் கற்பனைகளையும்  கலந்து சொல்லி வருகிறேன். இதில் உண்மையாக அவர்களை நான் எப்படி அடையாளம் காட்டுவது? என்று சிறு நகைப்புடன் கூறவும் திருடனுக்கு மிகையான கோபம் எழுந்தது.

"ஐயா. . நான் இப்படி சாந்தமாக கேட்டால் சொல்ல மாட்டீர்கள். அவர்களை காப்பாற்ற நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். என் கோபத்தை இப்போது செயலிலும் காட்டப் போகிறேன். நீங்கள் அவர்கள் வரும் வழியை சொல்லாவிட்டால் இப்போதே உங்களை கொன்று விடுவேன்." என்றபடி தன் இடுப்பில் உள்ள கத்தியை எடுத்து அவர் கழுத்தில் வைத்தான். 

பாகவதருக்கு கத்தியை கண்டதும் பாதி உயிரே போய் விட்டது." அடேய் இருப்பா..! நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? உண்மையிலேயே அவர்கள் கடவுள்கள்.. அவர்களை இந்த மானிடப்பிறவியில் கண்களால் காண முடியாது" என்றெல்லாம் மறுபடியும் அவனுக்கு புத்தி சொல்ல வந்தவர், அவன் கத்தியை தன் கழுத்தில் வைத்து கண்டிப்பாக அழுத்தி விடுவான் என்பதை அவன் விழிகள் சிவந்து கோபமுற்ற பார்வையில் உருளுவதை பார்த்ததும், வாய்க்குள்ளேயே விழுங்கிக் கொண்டார். 

" அப்பா. . என்ன இது? இதற்கெல்லாம் நீ கத்தியை காட்டுவாயா? எனக்கும் அவர்கள் வரும் விபரம் தெரியுமேயன்றி, எந்த காடு என்பது விபரமாக தெரியாது . அது இதோ எதிரில் இருக்கும் இந்த காடாக கூட இருக்கலாம். நீ அங்கு சென்று காத்திரு. ஒரு வேளை அவர்கள் இந்த வழியாக  வந்தாலும் வரலாம்." என்று தட்டுத்தடுமாறி ஒரு சமாளிப்புக்காக சொன்னதும்,  "சரி!.. உன் பேச்சை நம்பி இப்போதே போகிறேன். நாளை காலையில் நீ சொன்ன அந்த கண்ணன் வருவானில்லையா? அப்படி வரவில்லையென்றால், நான் திரும்பவும் இங்குதான் வருவேன். அதற்குள் அவர்கள் எந்த காட்டில் வருவார்கள் என்பதை யாரிடமாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வந்தவுடன் விபரம் சொல்ல ஏதுவாக இருக்கும். இப்போது நீங்கள் போகலாம்.." என்றபடி அவரை விடுவித்தான் திருடன். 

அவனிடமிருந்து தப்பித்த பாகவதருக்கு உடம்பு கைகால்கள் சில்லிட்டு விட்டது." "சே..! திருடனாக மட்டுமில்லாமல், சரியான பைத்தியகாரனாகவும் இருக்கிறான்.என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் என்கிறானே..! கிருஷ்ணரின் நகைகளாம்...! இவன் போய் கொள்ளையடிக்கப் போகிறானாம்...! நாம் வேறு இன்னமும் சில நாட்கள் இங்கு வந்து பாகவதம் செய்ய ஒப்பந்தமாகி உள்ளது. அதை முடித்து விட்டால் அவன் கண்களிலிருந்து தப்பித்து நம் ஊருக்கு சென்று விடலாம். அது வரை இப்படி ஏதாவது சொல்லி தப்பிக்க வேண்டும். கண்ணா.. நீதான் எப்படியாவது என்னை காப்பாற்ற வேண்டும்"என்றெல்லாம் மனதுக்குள் புலம்பிக் கொண்டே தம் இருப்பிடம் போய் சேர்ந்தார். 

அங்கு திருடன் உடனே  அந்த நள்ளிரவிலும் அந்த காட்டிற்குள் பயணித்தான். மறுநாள் விடிந்தவுடன் தனக்கு கிடைக்கப் போகும் செல்வங்களையும், அதற்கு காரணமாக அந்த இரு சிறுவர்களையும் நினைத்தபடி பயமின்றி அந்த காட்டுக்குள் சென்று கொண்டேயிருந்தான் . 

அடர்ந்த காடு.. .. . திருடனுக்கு இருட்டை பற்றி கொஞ்சமும் பயமில்லை.. ஆனால், காட்டு மிருகங்கள் வந்து தாக்கி விடுமென்ற ஒரு சிறு பயத்திற்காக, ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அங்கிருந்து மிக லேசாக புலரும் அதன் வடிவ அடையாளம் கொண்டு கிழக்கு திசை நோக்கி  பார்த்தபடியிருந்தான். அந்த பாகவதரும் கண்ணன் கிழக்கு திசையிலிருந்து வரும் போது எப்போதும் தினமும் உதிக்கும் ஆதவனை விட ஆயிரம் கோடிப் பிரகாசமாக கண்ணன் நடந்து  வருவதாக குறிப்பிட்டிருந்தது நினைவில் நின்றதால் கிழக்கு திசையைத் தவிர அவன் கண்கள் வேறு திசையை நோக்கவில்லை. 

இடையே விடியலில் நேரத்தில் கண்கள் தூக்கத்தில் சிக்கித் தவிக்கும் போது, விழிகளை அழுத்தி கசக்கியபடி, கண்ணனின் நகைகளையும், அவன் உருவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து"இதோ அந்த பாலகன் வரும் நேரம் நெருங்கி விட்டது. அவன் வரவை வழிமேல் விழி வைத்திருந்து பார்க்க வேண்டாமா? அதற்குள் நீ அலுப்பில் அசந்தால் எப்படி. .?" என்று தன் விழிகளை வைதபடி தனககுள் கடிந்து கொண்டான். 

அன்றிரவு நீண்ட நேரம் போனது மாதிரியே உணர்ந்தான். மறுபடி மரத்திலிருந்து இறங்கி, ஏறினான். "என்ன இது? இந்த கண்ணன் நேரத்தில் வந்து விடுவானா.. தெரியவில்லையே? " என தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான். பொழுது விடியும் நேரம் நெருங்குவதறகு அறிகுறியாக புள்ளினங்கள் தத்தம் குரல் இனிமையை வெளிக்காட்டி, தம் காலை வணக்கத்தை இயற்கைக்கு சமர்பிக்க ஆரம்பித்தன.  

சூரியன் இரவின் அணைப்பில் சற்று சேர்ந்திருந்த தன் தேகச்சோம்பலை உதறி  விட்டு தான் போர்த்தியிருந்த இரவு போர்வையை சிறிது விலக்கி பார்த்து விட்டு, இவ்வுலகம் ஒவ்வொரு நாளும், தன் வருகையை ஒரே மாதிரி எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்பதை சந்தோஷமாக உணர்ந்தவனாய், தன் இயல்பான ஒளிக் கிரணங்களை மெல்ல தன்னைச் சுற்றிலும் பாய்ச்சியபடி வான வீதியில் உலா வருவதற்கு ஆரம்ப ஆயுத்தமாக  தன் கால்களை பதிக்க ஆரம்பித்தான். 

"இந்தக் கண்ணன் இன்று தாமதிக்கிறானா? இல்லை, இன்று வர வேண்டாமென நினைத்து விட்டானா? சூரியனை தோற்கடிக்கும் ஒளியுடன் அவனுக்கு முன் இந்த கானகத்தில் கால் பதிப்பான என அந்த பாகவதர் கூறினாரே.. ! ஒரு வேளை அவர் இரலென்றும் பாராமல்,, அவன் வீடு சென்று ஏதாவது எச்சரித்து சொல்லித்தான் அவன் இன்று  வராமல் இருக்கிறானோ. ..! விடிந்ததும் அவன் வரவில்லையென்றால் அவர் இருப்பிடம் சென்று விசாரிக்கும் போது, அவர் மட்டும் அப்படி சொல்லியிருப்பது தெரிய வந்தால், அக்ஷணமே அவரை கொல்லாமல் விடக் கூடாது...! " என்றெல்லாம வாய் விட்டு பல்லை கடித்து புலம்பியபடி கிழக்கு திசையையே உற்றுப் பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் பளபளத்தன. 

அங்கே பாகவதர் சொன்ன மாதிரி ஆயிரம் கோடி பிரகாசமாய் ஒரு ஒளி பிரகாசித்தது. அதைக்கண்டு தன் கிரணங்களை அதட்டி சுருட்டிய மாதிரி சூரியன் தன் ஒளிப்பாய்ச்சலை சற்று மங்கிப் போகச் செய்தான். மீண்டும் சற்று இருளான அந்த இருளில். கண்ணனும், அவன் சகோதரனும் கை கோர்த்தபடி, வந்து கொண்டிருப்பதை அந்த திருடன் கண்டான்.

அந்த பாகவதர் வர்ணித்த மாதிரி அவர்கள் அணிந்திருந்த நகைகள் வேறு மேலும் இருளை விரட்டி ஒளியூட்டின. அந்த திருடன் விழி அசைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்கையில் கண்ணனின் கையிலிருந்த தங்கப் புல்லாங்குழல் என்ற கருவியிருந்து  வந்த இனிய இசை நாதத்தில்  அவன் கண் மூடி மெய் சிலிர்த்து சிறிது நேரம் சமைந்து போனான். "என்ன இது? அவர்கள் வருவதற்குள் மரத்திலிருந்து கீழிறங்கி, பதுங்கியிருந்து தீடிரென அவர்களை வழிமறித்து நகைகளை பறிக்க வேண்டுமென்ற எண்ணமின்றி, முன்பின் தெரியாத, இது வரை கேட்டிராத இந்த இசையில் இப்படி மயங்கி கண்மூடி இருக்கிறோமே" என்று சிறிது நேரத்தில் தன்னிலை உணர்ந்தவனாய் வெட்கி தன் அசட்டுத்தனத்தை புறந்தள்ளி விட்டு மரத்திலிருந்து இறங்க முற்பட்டான். அதற்குள் கண்ணனும், மிக அருகில் வந்து  விடவே, ஆச்சரிமுற்று அவனைப் பார்த்த திருடன் அவனை வழிமறிப்பதை விட்டு விட்டு அவன் அழகிய முகத்தை பார்ப்பதொன்றே தான் வந்த காரியத்தில் ஒன்றென நினைப்புடன் அவனை பார்த்தபடியே நின்றிருந்தான் . 

"என்ன இரவிலிருந்தே எங்களை எதிர்பார்த்தபடி மரத்தில் சிரமமான வாசமோ?" தன்னருகில் வந்தவன் தன்னுருவத்தை கண்டும் சிறிதும் பயமின்றி இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று நினைக்காத திருடன்  சற்று பிரமித்தான். 

ஒருவாறு சமாளித்தபடி, "ஆமாம்.  நீங்கள் யார்? இந்த இருட்டுப் பிரியாத நேரத்தில், இத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டு, தன்னந்தனியராக பெரியவர்களின் துணையில்லாமல், யாரேனும் கள்வர்கள் வருவார்களே என்ற பயம் சிறிதுமின்றி காட்டு வழியே இப்படி வரலாமா? என்று கேட்ட திருடன் தன் குரலிலும், இப்படி ஒரு கனிவு எப்படி வந்தது என ஆச்சரியமடைந்தான். 

"கள்வர்களா ? யார் அவர்கள்? நாங்கள் இதுவரை அவர்களை பார்த்ததேயில்லை. அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தானா. .? ஐயோ. எனக்கு பயமாக இருக்கிறதே. ...!" சற்று பயந்த மாதிரி கண்ணன் நடிக்கவும், திருடனின் மனதில் அளவற்ற பாசம் அவன் மேல்  பிரவாகமாக எழுந்து ஆர்ப்பரித்து பொங்கியது. 

" குழந்தைகளா.. .! பயந்து விடாதீர்கள்.  இவ்வளவு அழகான குழந்தைகளை இத்தனை நகைகள் இட்டு இந்த இருட்டுப்பிரியாத நேரத்தில் அனுப்ப உங்கள் பெற்றோருக்கு எப்படி மனசு வந்ததோ. .? இதோ பாருங்கள்.. நான் சொல்வதை கேட்டு பயந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்தவுடன் உண்மையை மட்டும் சொல்ல வேண்டுமென ஏதோ எனக்குள் தோன்றுகிறது. நான் கூட ஒரு கள்வன்தான். அதுவும் அந்த பாகவதரின் பேச்சைக் கேட்டு உங்களையே வழிமறித்து உங்கள் நகைகளை அபகரிக்க வந்தவன்தான் . .! ஆனால்,, உங்கள் முகத்தைப் பார்த்ததும்  எனக்கு அந்த ஆசையே போய் விட்டது. எப்படியென்றும் தெரியவில்லை...." என்றபடி கண்ணனின் மோவாயை தொட்டவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த உணர்வில் சிலிர்த்துப் போனான். 

நீ கள்வனா...! அப்படியென்றால் இந்த நகைகளெல்லாம் உனக்கு வேண்டுமா? நாங்கள் தர முடியாது என்றால், வலுவில் எங்களை அதட்டி மிரட்டி அதையெல்லாம் அபகரிப்பாயா? கண்ணன் இன்னமும் பயந்தது போல் நடிக்க, "ஐயோ.. அப்பா. . இதென்ன இப்படி கேட்கிறாய்?உங்களைப் போய்  அதட்டி மிரட்டுவேனா? நான் உங்களை பார்ப்பதற்கு முன்பு வரை களவன்தான். .. இப்போதுதான் எனக்கு அந்த எண்ணமே இல்லையே. ..! என்றான் திருடன் பரிதவித்த குரலில். 

கண்ணன் ஒரு புன்முறுவல் பூத்தபடி,  "அப்பாடி... நான் பயந்து விட்டேன். நீ நல்ல திருடன்தான். ஆனால், நீ ஆசைப்பட்டு இங்கு வந்த காரணப்படி, எங்கள் நகைகளை பரிசாக உனக்குத் தருகிறோம். வாங்கிக் கொள்...! என்றான். 

" இல்லையில்லை. .. எனக்கு வேண்டாம். எனக்கு அந்த ஆசையே முற்றிலுமாக போய் விட்டது. உன்னைப் பார்த்துக் கொண்டே இந்த பிறவி முழுவதும் இப்படியே இருந்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், அது சாத்தியமல்லவே ... .! இவ்வளவு அழகான உங்களை கண்ட நொடியிலிருந்து எனக்குள் இத்தனை மாற்றமா? உங்களைப் பெற்றெடுத்த அந்த புண்ணியவான்களுக்கு நீங்கள் குழந்தைகளாக இருக்க வேண்டாமா? பத்திரமாக போய் வாருங்கள். இந்த திருடன் மீது இந்நேரம் உனக்கும் பாசம் வந்திருந்தால் எனக்காக ஒரு உபகாரம் செய்வாயா? "என கண்ணனின் அழகு முகத்தைப் பார்த்தபடி கைக் கூப்பி கெஞ்சினான் அந்த திருடன். 

அவன் கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது. 

" என்ன செய்ய வேண்டுமென்று கூறு.. ! என்னால் முடிந்தால் கண்டிப்பாக அதைச் செய்கிறேன்" கண்ணன் அன்புடன் அவன் கைத் தொடவும், மறுபடி ஒரு மின்சாரம் பாய்ந்தது திருடனின் உடலில். 

ஒரு நொடி பேச மறந்து அந்த தொடுவுணர்வு தந்த இன்பத்தில் திளைத்த திருடன், "அப்பா,  தினமும் நான் இங்கு வந்து விடுகிறேன். நீயும் மறக்காமல், இவ்வழியே வந்து உன் அழகான முகதரிசனத்தை எனக்குத் தருவாயா.  ? அது ஒன்றே எனக்குப் போதும்.. .! உன்னிடம் நான் வேண்டுவதும்  அதுவேதான்..."வேறு எதுவும் எனக்கு வேண்டியதில்லை.. .. எதையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஆசைகளும் இல்லை. ...." மேற்க் கொண்டு பேசவும் முடியாமல், தன்னை கட்டுப்படுத்த தெரியாமல்,  திருடன் உணர்ச்சிவசப்பட்டு குமுறி  குமுறி அழலானான். 

கண்ணன் முகத்தில் மந்தகாசம் இன்னமும், கூடியது. அருகிலிருக்கும் சகோதரனைப் பார்த்து சிறு நகைப்பொன்றை வீசினான். 

" சரி. . உன் விருப்பம் அதுவானால் நானும் உடன்படுகிறேன். ஆனால் தினமும் அல்ல.. உனக்கு வேண்டும் போது, நீ நினைத்தவுடன் வருகிறேன். அதற்கு பிரதி உபகாரமாக நான் தரும் இந்த நகைகளை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீ சொல்வதை நான் கேட்பேன்." என கண்ணன் தன் பேச்சால் திருடனை மடக்கவும், திருடனும், அரைகுறை மனதோடு சம்மதித்தான். 

கண்ணனின், மற்றும் பலராமனின் நகைகள் கை மாறின. தன் மேல் பட்டு அங்க வஸ்திரத்தில், கண்ணன் தலையிலிருந்த கீரிடத்திலிருந்து, காலில் அணிந்திருந்த சலங்கை கொலுசு வரை அனைத்தையும் கழற்றி முடிந்து கொடுத்தான். ஒவ்வொன்றாக அவன் களையும் போது. திருடன் தவித்தான். "வேண்டாமப்பா... .அதை மட்டும்  கழற்றாதே.. இது போதும் எனக்கு... . நீ இவ்வளவு பிடிவாதமாக தருவதினால்தான் இதையெல்லாம் வாங்கியேக் கொள்கிறேன். உன் தரிசனம் வேண்டும் போது கிடைப்பதற்காகத்தான் இதற்கு ஒப்புக் கொண்டேன்." என அவன் உணர்ச்சி வசப்பட்டு கூறுவதை புன்னகையுடன் கேட்டபடி, "பரவாயில்லை.. பெற்றுக் கொள். எங்களிடம் இதைப் போன்று நகைகள் ஏராளமாக உள்ளது. தவிர நீ இன்று ஒன்றுமில்லாமல் வெறும் கையை வீசிக் கொண்டு உன் வீட்டிற்கு சென்றால், உன் உறவுகள் கோபித்து தூஷனை செய்யமாட்டாார்களா? அதனால் நான் விருப்பமாாகத் தருவதை பெற்றுக் கொள்் " என சமாதானபடுத்தியபடி அவன் தந்ததை பெற்றுக் கொண்ட திருடன் கண்ணனை  பிரிய மனமின்றி கண்ணனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர்களை திரும்பித் திரும்பி பார்த்தபடியே அந்த அதிகாலை பொழுதில் அந்த கானகத்தை விட்டு தன் உயிரைப்பிரிந்த ஒரு மனோ பாவத்துடன் வெறும் கூடான தன்னுடலை மட்டும் சுமந்தபடியான உணர்வுடன்  நடந்து சென்றான். 

காலையில் கண் விழித்த பாகவதருக்கு நேற்றிரவு நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. இன்றும் அந்த திருடன் வந்து என்னவெல்லாம் சொல்வானோ? "நேற்று இரவெல்லாம் அந்த கானகத்தில் காத்திருக்க வைத்து விட்டாயே. .! பொய்யா சொல்லுகிறாய்? எங்கே அந்த குழந்தைகள்? அவர்களை நீ எங்கே ஒளித்து வைத்து விட்டாய்?" என்று கையிலிருக்கும் கத்தியை எடுத்து காட்டி எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப் போகிறானோ. ..! நினைப்பு ஒரு பக்கம் நடுக்கத்தை தந்தாலும், மாலை கோவில் உபன்யாசம் சொல்வதற்கு செல்கிற வரை வேறு எங்காவது சென்று  அவன் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென தன்னை வெளியில் செல்ல தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். 

அப்போது வாயிற்கதவை தட்டும் சப்தம் கேட்கவே. "யார் இந்த நேரத்தில்" என்றவாறு கதவை திறந்தவருக்கு உயிரே போனது மாதிரி இருந்தது. யாரை நினைத்தபடி இவ்வளவு நேரம் விசனமடைந்தாரோ, யார் கண்ணில் படாமல் மாலை வரை எங்காவது சென்று விட விருப்பப்பட்டாரோ, அவனை வாசலில் வந்து நிற்கவும் பாகவதருக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. 

" நீயா"என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து தட்டுத்தடுமாறி வருவதற்குள், அவன் "ஐயா..! என்றபடி அவர் காலில் வேரறுந்த மரமாய் விழுந்தான். 

" எழுந்திரப்பா. .என்ன இது.. ? என்னவாயிற்று உனக்கு ..ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்? "என்றபடி அவர் பதற திருடன் எழுந்து," ஐயா. . உங்களால்தான் நான் அவர்களை காண முடிந்தது. ஆகா.. .என்ன ஒரு அழகு.. .! என்ன ஒரு கனிவு. .! ஆகா..  நான் பெற்ற அந்த சுகானுபவத்தை  எப்படி விவரிப்பேன்..! இந்தப் பிறவியில் நான் செய்த பாவங்கள் எல்லாம் அகன்ற மாதிரி, வேறு ஒரு புதுப் பிறவி எடுத்த மாதிரி, அவர்களை தரிசித்த அந்த ஒரு தொடியில். .உணர்ந்தேன். இதோ என் மேனியெங்கும் இப்போதும் எப்படி சிலிர்க்கிறது பாருங்கள். .! இந்த அனுபவம் உங்களால்தான் கிடைத்தது. அதனால்தான் உடனே உங்களை காண நீங்கள் தங்குமிடம் விசாரித்துக் கொண்டு இங்கு வந்து விட்டேன். "அவனின்  பரிதவிப்பான வார்த்தைகளின் பொருள் பாகவதருக்கு இருந்த மனோ நிலையில், அவருக்கு சற்றும் விளங்கவேயில்லை. .

" இருப்பா. .. யாரைக்கண்டாய்? எங்கே கண்டாய்? உணர்ச்சிவசப்படாமல் மெள்ள விபரமாகச் சொல்லு... .! என அவர் கொஞ்சம் பதற்றத்துடனே அவனை ஆசுவாசபடுத்தியதும், "அதான் ஐயா... நீங்கள் நேற்று கோவிலில் எல்லோருக்கும் சொன்னீர்களே. ..  அந்த தங்கமயமான அற்புத குழந்தைகள் ஏராளமான நகைகளுடன் தெய்வீக ஒளியுடன் கானகத்தில் காலை நேரத்தில் தினமும் தவறாது வருவார்கள் எனக் கூறினீர்களே.. ! அவர்களைத்தான் சந்தித்து விட்டு வருகிறேன்.  . அதைப் பற்றித்தான் கூறியும் கொண்டுள்ளேன்." என அவன் விளக்கவும், பாகவதருக்கு ஒரு நொடியில் மூர்ச்சை வரும் போலிருந்தது. 

என்ன உளறுகிறான் இவன்..? கண்ணனை நேரில் கண்டானா? அதுவும் நான் கதையில் சொன்ன அங்க அடையாளங்களுடன். ..அப்படியே கண்ட மாதிரியல்லவா பிதற்றுகிறான். . ஒரு வேளை இரவெல்லாம் விழித்திருந்ததில், வந்த ஏமாற்றம் அவனை இப்படி பேசும் நிலைக்கு கொண்டு வந்து விட்டதோ? இந்த நிலையில் இவன் மேலும் எனக்கு ஏதாவது துன்பங்கள் தருவானோ?" அவருக்கு இன்னமும் பயம் அதிகரித்தது.

" அப்பா... நீ சாட்சாத் அந்த பகவான் கண்ணனையா கண்டாய்?  கொஞ்சம் தெளிந்து யோசித்துப் பேசப்பா.. அவர்கள் கடவுள்கள்.. அவர்களை நீ எப்படி நேரில் காண முடியும். .?  அவர் பயத்துடன் வார்த்தைகளை உகுக்கவும், "ஐயா.. .நீங்கள் நம்ப மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். அதனால்தான் அவன் விரும்பி எனக்குத் தந்த அவனுடைய அணிகலன்களை உங்களுக்கு காண்பிக்க, எனக்கு விருப்பமில்லாத போதும் அவனிடமிருந்து பெற்று வந்தேன். அதையெல்லாம் பார்த்தாவது என் கண்களை நம்புங்கள். ." என்றபடி தன் கையில் வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து, அதில் கண்ணன் தன் பட்டு பீதாம்பரத்தில் கட்டித்தந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவன் நகைகளை எடுத்து பரப்பி வைத்தான். 

பாகவதருக்கு இப்போது தன் கண்களை நம்ப முடியவில்லை. அவர் தினமும், அவர் வாழ்நாளில் இதுவரை ஆயிரம் முறைக்கும் மேல், எந்த நகைகளை பற்றி விஸ்தாரமாக விவரித்து  பாகவத பிரவசனம் செய்தாரோ அந்த நகைகள் கண்முன்னாடி ஜொலித்தன.  வைரங்கள், ரத்தினங்கள் பதித்த கீரீடம், ஒட்டியாணம் முதற்கொண்டு கண்ணனின் அங்கம் தழுவும் நகைகள், கூடவே கண்ணனின் புல்லாங்குழல், பாதச்சலங்கைகள்.... அவரால் நம்பவே முடியவில்லை. .ஒரு நிமிடத்திற்கு மேலாக அவர் இந்த உலகில் இல்லாமல்  இருந்த அனுபவத்தை உணர்ந்தார்.

 "ஐயா.  .. இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?" திருடனின் கேள்வியில் மறுபடி இந்த உலகத்துக்குள் வந்தவர், சற்று சுதாரித்து கொண்டு, "நான் இத்தனை வருடமாக அவனையே நினைத்து,, அவனுடனே வாழ்ந்து, அவன் நாமாவையே ஸ்மரித்து, அவனைப் பற்றியே எப்போதும் பேசி, அவன் புகழைப்பாடி வாழ்நாளை கழித்து வருகிறேன். எனக்கு ஒரு வேளையாவது  காட்சியளிக்காதவன் ஒரு இரவில், உனக்கு எப்படி காட்சி தந்து தன் நகைகளையும் கழற்றித் தந்தான்?  என்னால் இன்னமும் உன்னை நம்ப இயலவில்லை. நீ எங்கிருந்து இந்த நகைகளை, நான் அவனைப்பற்றி சொன்ன கதைகளுக்கேற்ப கொண்டு வந்தாய் என எனக்கு மேலும்  சந்தேகம் வருகிறது. ..!"என அவர் முடிக்கவும் திருடனுக்கு சற்று கோபம் வந்தது. 

" ஐயா...! நான் நேற்று வரை பயங்கர திருடன்தான். எந்த ஒரு பொய்ச் சொல்ல அஞ்சியதில்லை. சமயம் வரும் போது பிறரை தாக்கி, காயப்படுத்த சங்கட பட்டதேயில்லை.... அப்போது அவர்கள் துன்பத்தைக் கண்டு பரிதவிக்கவும்,  ஈவு இரக்கம் காட்டி, அவர்களை  விட்டு விடவும் செய்ததில்லை. ஏனென்றால் என் தொழில் திருட்டுத்தான்...அதில் இதெல்லாம் பார்த்தால் எனக்கு லாபமில்லை. எந்த வித பயனுமில்லை..! அதனால்தான் நீங்கள் சொன்னவுடன் அந்த குழந்தைகளைப் பிடித்து, அவர்கள் நகைகளை அபகரித்து பெரும் லாபமடையத்தான் ஆவலுடன் உங்களிடம் வழி விசாரித்துக் சென்றேன். இன்று அதிகாலை வரை எனக்கு அந்த எண்ணம் ஒன்றுதான். ...! ஆனால் அந்த மாயக்குழந்தைகளை பார்த்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. என் மனதையே, அதில் இருந்த திருட்டுத்தனத்தையே  அவர்கள் கொள்ளையடித்து விட்டார்கள். இப்போது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு அமைதி மட்டுந்தான் என் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த மனதை உங்களிடம் காட்டிச் செல்லவே நான் இங்கு வந்தேன். 

நாளை மறுபடி அவர்களை சந்தித்து இந்த நகைகளையெல்லாம் அவர்களிடமே தந்து விட்டு, ," நான் எப்போதும் அவர்களுடன் இருக்கும்படி ஒரு உபாயம் சொல்லுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்ளப் போகிறேன். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லையென்றால் அங்கேயே அவர்கள் கண்முன்னால் என் உயிரையும் மாய்த்துக் கொள்ளுவேன். அதைக்கண்டு அவர்கள் மனம் மாறினாலும் சரி..! இலலை. .இதோடு என் இந்தப் பிறவி முடிந்து போனாலும் சரி. .! அவ்வளவுதான்....! நான் போய் வருகிறேன் ஐயா... எனக்குள் இந்த அனுபவம் வந்ததற்கு நீங்களும் ஒரு காரணம்...உங்களுக்கு என் நன்றி.. " என்றபடி அவன் புறப்படலானான்.  

பாகவதர் தான் பிரசங்கம் கேட்டதைக் போன்ற உணர்வையடைந்தார்." அப்பா. ..என்னை மன்னித்து விடு. உன்னை சந்தேகப்பட்டது தப்புதான்.. என்னையும் உன்னுடன் அழைத்துச்செல். நானும் இந்தப்பிறவியில் நான் அன்றாடம் வழிபடும் கண்ணனை தரிசித்த பேறையடைகிறேன். மறுக்காமல் நானும் உன்னுடன் வருவதற்கு சம்மதித்து அழைத்துச் செல்கிறாயா...." என்று அன்புடன் கெஞ்சிக் சொல்லவும் அன்று இரவு அவரையும் அழைத்துப் போவதாக திருடன் வாக்குரைத்தான். 

மறுநாள் வெள்ளி முளைக்கும் நேரம். கானகத்தில் அதே இடத்தில் திருடனுடன் பாகவதரும் காத்திருக்க, திருடனின் மனமெல்லாம் " குழந்தைகளா. . நேற்று சொன்னது போல் இன்று நீங்கள் எனக்கு தரிசனம் தர விரைவில் வந்து விடுங்கள். உங்களை பார்க்காத ஒவ்வொரு நொடியும்  நான் அனலில் இட்ட புழுவாக துடிக்கிறேன். இந்த பாகவதர் வேறு இன்று காலை நான் எத்தனை முறைச் சொல்லியும், என்னை நம்பவில்லை.  இப்போதும் என்னை சோதனை செய்வதற்காகத்தான் என்னுடன் வந்திருக்கிறாரா என்றும்  தெரியவில்லை... ஆனாலும், எனக்கு உங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது. இதோ. .! உங்கள் நகைகளை உங்களிடம் தரவே வந்திருக்கிறேன். எனக்கு இந்த நகைகள் வேண்டாம். என் குடும்பம் வேண்டாம். உங்களின் அருகாமை மட்டும் எப்போதும் வேண்டும். அதுவே நான் உங்களிடம் வேண்டுவது...  அதை மட்டும் இன்று வந்து எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள்.. . " என்று கண்ணனை நினைத்தவாறு இருந்தது. 

பாகவதரின் மனமோ," இவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் புறக்கணிக்கவும் இயலவில்லை. நேற்று மாதிரியே கண்ணன் இன்றும் நான் நினைத்தவுடன் இங்கு வருவான் எனறு இவன் கூறுகிறான். இவனிடம் உள்ள நகைகளெல்லாம் கண்ணனின் நகைகளாக நாம் வர்ணனையில் படித்தது போல் இருக்கிறது. ஆனால், கடவுள் அவதாரமாகிய கண்ணன், நான் நித்தமும் துதித்து வணங்கி வரும் எம்பெருமான், இப்போது இந்த திருடனுக்கு ஒரே இரவில் காட்சி தந்திருக்கிறான் என்பதை நம்பவும் கஸ்டமாக இருக்கிறது. ம்.  . ம்.  பார்க்கலாம். இன்னமும் கொஞ்ச நேரத்தில் இவன் சாயம் வெளுத்து விடுமே.. .! " என்று மனதுக்குள்  புலம்பியபடி இருந்தது. 

பறவைகளின் சலசலப்பில் கதிரவன் கண் விழித்து விட்டான் கிழக்கு திசை இருளை தன்னிடமிருந்து அன்றைய இரவு வரை பிரித்து வைக்க ஆசைப்படுவதாய், இருட்டுடன் பேசி வாக்கு வாதம் செய்வதைக் கண்டதும், சமாதானபடுத்த பகலவன் தான் வருவதாக பறவைகள் மூலம் தூது அனுப்பினான். 

திருடனின் கண்கள் கண்ணனை காண ஆவலாய் பரபரத்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கிலிருந்து ஜோதி ரூபத்திற்கிடையே அழகே ஒர் வடிவம் எடுத்தது போல், அண்ணனும் தம்பியுமாக பேசிக் கொண்டே  கைக்கோர்த்தபடி வந்து  கொண்டிருப்பதை திருடன் கண்டான்..திருடனுக்கு மறுபடி நேற்று போல், உடம்பெல்லாம் சிலிர்த்தது. கண்ணன் தன் புல்லாங்குழலில் இனிய நாதத்தைப்  பரப்ப அந்த ஓசைகேட்ட புள்ளினங்கள், ஆதவன் தமக்கிட்ட  தூதை மறந்து அவன் கானத்திற்கேற்ப தம் இறகுகளை அசைத்தபடி வான வீதியில், வலம் வந்தன. 

கண்ணன் இசைத்த இசையில் கள்ளுண்டவனை போல் திருடனும் மெய் மறந்தான். சட்டென அருகிலிருக்கும் பாகவதரின் நினைவு வர, "ஐயா. .! .இதோ நான் வேண்டியபடி குழந்தைகள் வந்து விட்டனர். எத்தனை அழகு..! இவர்களை பார்ப்பதை விடவா இந்த உலகில் வேறு இன்பம்.. ? என்னை நம்ப மாட்டேன் என்றீர்களே...! இதோ நீங்களும் அவர்கள் வரும் அழகை ஆசைதீர பார்த்து மகிழுங்கள். அவன் இசையென்ற கானம் பாடி உலகை மயக்கியவாறு வரும அழகை கண் குளிர கண்டு களியுங்கள். அருகில் வந்ததும் குழந்தைகளின் அழகையும், அவர்களின் அமிர்தம் போன்ற பேச்சையும் கண்டு, கேட்டு பருகுங்கள்... " திருடன் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தவாறு கூறினான். 

பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கு கண்ணன் வருகிறான்? எப்போதும் போல் பொழுது புலர்வதற்கு கிழக்கு திசை ஆயததமாகிக் கொண்டிருப்பதை தவிர்த்து அவர் கண்களுக்கு அவன் காட்டிய அத்திசையில் ஒன்றும் புலப்படவில்லை. பறவையினங்கள் அன்றாடம்  வழக்கப்படி, தம்  இசைத் திறமையை உலகிற்கு பறைச்சாற்றியபடி சுற்றி வருவதை தவிர்த்து வேறு எந்த கானமும்  அவர் காதை தழுவவில்லை. 

அதற்குள் கண்ணன் அவர்கள் அருகில் வந்து விட்டான்." என்னப்பா.. ..! இன்று மறுபடியும் உடனே வந்து எனக்காக காத்திருக்கிறாய் ? நேற்று தந்த நகைகள் போதாதா? இந்தா. . .! இன்று நீ அழைத்தவுடன், உனக்காக இன்னமும் நிறைய நகைகளோடு வந்திருக்கிறோம். வேண்டியதைப் பெற்றுக்கொள்..  ."  கண்ணனின் குறும்புடன் பேசியதைக்  கேட்டதும் திருடன் மனம் பதறினான். 

"குழந்தைகளே... ! உங்களை காணவே இன்று  அழைத்தேன். நீங்கள் இல்லாமல் என்னால் இனி வாழ்வே முடியாது. இந்த நகைகள் யாருக்கு வேண்டும்.? நேற்று உங்களை பார்த்த நொடியிலேயே அந்த ஆசைகள் போய் விட்டதே. .!  நேற்றே உன் விருப்பத்தினால்தான் நகைகளை எடுத்துச் சென்றேன். அதுவும் உன்னை அடையாளம் காண்பித்த இந்த பாகவதருக்கு அதை காண்பித்து அவருக்கு நன்றி கூறத்தான்.எடுத்துச் சென்றேன்.  இதோ. . ..! அந்த நகைகளையும் திருப்பி கொண்டு வந்திருக்கிறேன். வாங்கிக் கொள். எனக்கு இந்த பிறவி முழுக்க உன்னழகை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை மட்டும் தந்து விடு. . அது போதும்..!" கண்ணின் சின்னக்கைப்பற்றி அவன் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு அழுதான்..

யாருடனோ பேசுவது போல், தனக்குத் தானே அவன் பேசிக் கொள்வதையும், அழுவதையும் கண்ட பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் மனம் பேதலித்து விட்டதா? என தாம் சந்தேகப்பட்டது சரியோவென தோன்றியது.

உடனே பாகவதர் திருடனை நோக்கி, "என்னப்பா யாருடன் பேசுகிறாய்? அப்போது குழந்தைகளின் அழகைப் பருகச் சொன்னாய்.  .! இப்போது பித்துப் பிடித்தவன் போல் தானாகவே பேசிக் கொண்டிருக்கிறாயே.. .! இங்கு உன்னையும், என்னையும் தவிர வேறு யாரும் இல்லையே. ..! என்று வினவவும், கண்ணனும்  பலராமனும் கலகலவென சிரித்தனர். 

"ஐயா. .. இதோ கண்ணெதிரே நிற்கும் இந்த அழகு தெய்வங்களை உங்களால் காண முடியவில்லையோ ?. என் கண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்னீர்களே ... உங்கள் கண்ணன் உங்களெதிரே நின்று பேசுவதை உங்களால் பார்க்க முடியவில்லையா... ? ஆச்சரியமாக உள்ளதே...! என்ற திருடன் கண்ணனைப் பார்த்து, "குழந்தைகளே....! எதற்காக உங்களுக்கு இந்த நாடகம்.? என் பார்வைக்கு  தெரியும் நீங்கள் தினமும் உங்களைப் பாடி, பூஜித்து வரும் இவர் பார்வைக்கு தென்படாமல், இருப்பது ஏன்? நேற்று உங்களை கண்டதை நம்பாத இவரை இன்று உங்களை காணச் செய்வதாக கூறி அழைத்து வந்திருக்கிறேன். அவரை பாவம் ஏமாற்றலாமா.?  அவரால்தானே எனக்கு இந்த மாற்றம் கிடைத்தது. நீ அவர் கண்களுக்கும்  கண்டிப்பாக தெரிய வேண்டும்.. "  திருடனின் கனிவான பேச்சு கண்ணனை புன்னகையுடன் பேச வைத்தது. 

அவர் தினமும் என்னை நினைப்பவர்தான். ஆனால் உன் ஒருநாள்  நம்பிக்கைதான் அதை விட சிறந்ததாக என்னை இங்கு அழைத்து வந்து உன்னால் என்னைக் காண வைத்தது. என்னைப்பற்றி சிறிதும் அறியாத  நீ  நான் இருப்பதை நம்பி என்னையே அன்று முழுவதும் நினைத்து, நான் இங்கு வருவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தாய்....! அந்த நம்பிக்கைதான் உனது ஆன்ம பலம்... அவரை அதே நம்பும் உணர்வோடு உன் கரங்களை பிடித்துக் கொள்ளச் சொல். ...!நீயும் என் கரத்தைப் பிடித்துக் கொள். அப்போது அவர் கண்களுக்கும் நான் தெரிவேன்.." என்றதும்," ஐயா.. இதோ நம் அருகில் நிற்கும் குழந்தைகளை காண முடியவில்லையா?  என் கையைப்பிடித்து கொள்ளுங்கள்..."என்று சொன்னவுடன் பாகவதர் அவன் கையைப் பிடிக்க, திருடன் மெய் சிலிர்க்க கண்ணனைத் தொட, பாகவதருக்கு கண்ணனின் திவ்ய ரூபம்  புலப்பட்டது. அவனின் அழகிய வதனத்தில் மதிமயங்கிய அவரும் திக்குமுக்காடினார். கூடவே" கண்ணா, இத்தனை நாள் நான் உன்னை வணங்கி வந்ததின் முழுப்பலன் கிடைத்து விட்டது. ஆனால் ஒரே ஒரு வருத்தம். உன் மகிமையை உணராத இந்த திருடனுக்கு ஒரே நாளில் தரிசனம் தந்த நீ எனக்கு மட்டும்  இத்தனை சோதனைக்களுக்குப் பிறகு  அதுவும் இவன் கைகளைப் பிடித்ததால்தான் காட்சி என வைத்திருக்கிறாய்...! அது மட்டும் ஏன் என  விளக்குவாயா ? என பக்தியுடன் கண்ணீர் மல்க கேட்டார். 

"பாகவதரே.  உம்மையும் நானறிவேன். உமது பக்தியின் பெருக்கையும் நான் உணர்வேன். நீங்கள் நாள்தோறும் என்னைத் துதித்து, பூஜைகள் செய்து. என்னைக்குறித்து மக்களுக்கு உபன்யாசங்கள் செய்து வழிபட்டு வருவதையும் அறிவேன். ஆனால் என்றேனும், ஒரு நாள் நான் உம்மெதிரே வருவேன் என என் மீது நம்பிக்கை வைத்தீரா?நீங்கள் தந்த வர்ணிப்பில் அந்த நம்பிக்கை அவனுக்கு வந்தது. அந்த நம்பிக்கையின் சக்திக்கு நான் கட்டுப்பட்டேன். அவ்வளவுதான். .! இதுதான் அவனின் ஆன்ம பூஜை. .என் மீது அன்பு செலுத்திய உங்கள் இருவருக்கும் நிச்சயமாக நற்கதி இப்போதே நான் தந்தேன். அவரவர்கள் வினைப்பயன் முடிந்ததும் என்னை வந்தடையுங்கள்... அதுவரை இந்த மானிடப்பிறவியின் கடமைகளை முடித்து, பிறவி முடியும் வரை என்னை கண நேரமும் மறவாதபடி நினைத்துக் கொண்டேயிருக்கும் வரத்தை அருள்கிறேன் .. " என்றபடி புன்னகையுடன் கூறிய மாயக் கண்ணன்  நொடியில் மறைந்தான். கண்ணனின் விளக்கத்தில், பக்தியின் இரு வேறு பிரிவுகள் பாகவதருக்கும், திருடனுக்கும் விளங்கின. அவனுடன் கூடிக் களிக்கும் நாளை நினைத்தபடி, வரும் நாட்களை அவனை நினைத்து அவனுடனான பக்தி மார்க்கத்தில் பிணைத்திருந்து, அவன் அழைக்கும் வரை அவன் சொல்படி அவரவர் கடமையை ஆற்றி இருக்க வேண்டி, பக்தி உணர்வுகளில் முழ்கியபடி அக்கானகத்தை விட்டு தத்தம் இல்லம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். 

இக்கதையின் மூலம் ஆன்ம பக்தியை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணரின் சேவடிகளை நினைத்தபடி நாமும் அவன் ஒருநாள் வந்து நம்மை கடைத்தேற்றி அழைத்துச் செல்வான் என நம்பிக்கை கொண்டு, அவனிட்ட கட்டளைப்படி வாழவும்  அவனருள் பூரணமாக கிடைக்க வேண்டுமென அவன் பாதங்களை பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன். . . ...

சற்றே நெடிய கதையாயினும், இக்கதையை அன்புடன் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Monday, August 17, 2020

கண்ணன் கேட்ட பதிவு.

 கிருஷ்ணாய நமஃ.. 

"அநேகமாக எல்லோருமே கிருஷ்ண ஜெயந்தி பதிவை போட்டு விட்டார்கள். நீதான் தாமதம்.."  தினமும் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் குற்றம் சொல்வது போல் ஒரு பார்வை  பார்க்கிறார்.

"கிருஷ்ணா என்னை மன்னித்து விடு.. ஏதேதோ காரணங்களால் தாமதம்.. உனக்கு தெரியாதா? என்னுள் இருந்து  எல்லாவற்றையும் நடத்தி வைப்பவனே நீதானே..!" பதிலாக என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய், " சரி. .! சரி...! நான் சொல்வதை எனக்கே திருப்பியா?ஏதோ மனிதர்களாகிய உங்களுக்கு  புத்தி சொல்லப் போக  என்னவோ, எல்லாவற்றிலும் என் பேச்சை மீறாத  மாதிரியும், கிருணார்ப்பணம் என்று ஒரு சொல் சொல்லி கழற்றி  விடுகிற மாதிரி ஒரு பாவனை....!" கிருஷ்ணர் மீண்டும் ஒரு குறும்பு பார்வையுடன் தொடர்ந்தார். 

" பகவானே...! என்ன இது அபச்சாரம்.. !  உன் பேச்சை மதிக்கிற மாதிரி ஒரு பாவனையா...! உன்னைத்தானே சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டே இந்த மானிடப் பிறவியில் உழலுகிறோம்.  எந்த ஒரு கெட்ட செயலையும், நல்ல செயலையும் உன்னை நினைத்து கிருணார்ப்பணம் என்று சொல்லி உன்னிடம் ஒப்படைத்தால், முறையே  அது பன்படங்காக பெருகி, பாவ புண்ணியங்கள் எங்களையே வந்து சாரும் என்பது நீ அறியாததா? அப்படித்தானே இந்த அர்ப்பணிப்பு  அந்நாளிலிருந்து உதயமாகி வந்தது..." நான் படபடவென உணர்ச்சியில் தத்தளித்து மன்னிப்பு கேட்பதை ரசித்தபடி கண்ணன் மீண்டும் குறும்புடன் முறுவலித்தான். 

" பார்த்தாயா...!  மறுபடி நான் சொன்னதையே என்னிடம் பிரசிங்கித்து கொண்டு...!  ஆக மொத்தம் எனக்கு ஒன்று புரிந்து விட்டது.."என்றார். மீண்டும் அதே குறும்பு... 

"என்ன கண்ணா.... என்றவளிடம், குருவுக்கு மிஞ்சிய சீடர்களாய்... நீங்கள் என்னை விட நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். சரி. . ! நான் போய் வருகிறேன். நீ என்னை உன் நட்புகளுக்கு பார்வையாக்குகிறாயா என்பதை நான் மீண்டும் பார்க்க வருவதற்குள் என் அடுத்த பிறந்த நாள் வந்து விடும் போலிருக்கிறது." என்றவர்  கண்களில் அதே சிரிப்பு. 

சரி.. இன்று கிருஷ்ணருக்காகவேனும்  எப்படியாவது பதிவை  பகிர வேண்டுமென உடனே மெனக்கெட்டு எழுத ஆரம்பித்து விட்டேன். அதுவும் இன்று முதன் முதலாக மாறி வைத்திருக்கும் பிளாக்கர். முதலில்  வந்திருக்கும் மாறுதலில் அவனைத் தொழுது எழுதுவதே ஒரு  நல்ல செயல்தானே..! என்ன சொல்கிறீர்கள்...! 


தன் அழகான பாதங்களை பதித்து  மெள்ள மெள்ள  வீட்டினுள்ளே  நடந்து வந்த கிருஷ்ணர். 

பூஜையறைக்கு வந்தவர் அலங்கரித்து வைத்திருந்த  தன்னுருவை கண்டதும் தன்னுள்ளே தானே ஐக்கியமாக்கி கொண்டபடி பூஜைகளை ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்த படசணங்கள் எங்கே என்றபடி ஒரு பார்வை... 


" அட... இவ்வளவுதானா..! முன்பெல்லாம் நிறைய இருக்குமே என நான் குறை கூற மாட்டேன். நீ அன்புடன் அழைத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அவல் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... சந்தேகமாயிருந்தால் ருக்மணியிடம் கேட்டுப்பார்." அதே.. அதே . . சிரிப்புடன் என் மனதை கொள்ளையடிக்கும் குறும்புக்கார கிருஷ்ணர்..

இப்போதுதான் திருப்தியாக உள்ளது.  நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்."  என்கிறான் அதே சிரிப்புடன் அந்த  யசோதை பாலகன்.


அவனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் அப்போது எழுந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சிதானே...! அவன் நம் அனைவரின் மகிழ்விலுந்தான் இருக்கிறான் என்பதை அவனே சொன்ன பின் அதுதானே உண்மை.... என்றும் சாஸ்வதம்... 

ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ... 

எனதருமை சகோதர, சகோதரிகளுக்கும் ஸ்ரீ கண்ணனுடன் சேர்ந்து இந்தப்பதிவு பிடித்திருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கும் பிடித்து படித்தப் பின் கருத்திட வருபவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 🙏. 🙏. 🙏. 

Tuesday, June 25, 2019

கதம்ப புகைப்படங்கள்..

சூரியனின் விண்ணப்பம்.... 


மழை வருது.. மழை வருது... குடை கொண்டு வா..! வெண்மேகமே..


இதோ.. இதோ.. நீ சொல்லி நான் மறுத்திருக்கிறேனா? காற்றுக்கும் தூது சொல்லி விரைவுபடுத்தி விட்டு குடையுடன் வருகிறேன். ஆனால், அதற்குள் மழை மேகங்களின் அன்பு பிடிக்குள் காணாமல் போய் விடாதே.!


 அட..! நீ சொன்னவுடனே மழை மேகமும்  என்னுடன் உடனே ஆஜர் ஆகி விட்டதே.! ஐயோ பாவம்.! இந்த குருவியாரும் நனைந்திட போறாரே.! " குருவியாரே, மழை வருவதற்குள் பத்திரமான இடத்தை தேடு  போ.. போ.. உம் சீக்கரம்.."


மழை, மழை...எங்கும் சூழ்ந்த மழை.! சூரியனின் கட்டளைப்படி அவனுக்காக குடை கொண்டு வந்து தந்தாலும், கரு மேகங்களுடன் நானும் ஐக்கியமானதில், குடைகள் கை தவறி காற்றுடன் கலக்கின்றனவே.! என்ன செய்வேன்?


மழை வருவதை எச்சரித்து விட்டுப்போன வெண்மேகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் உன்னை எங்கே தேடுவேன்? மழை வந்தால், எங்களுக்கும் சந்தோஷந்தான்.! நீ சொன்னவுடனே விரைவாக வந்த மழைக்கு ஒதுங்க எங்களுக்கு இப்போதைக்கு இந்த வீட்டு கம்பிகள்தான் அடைக்கலம்.


வரும் மழைக்கு குடை பிடிக்க வேண்டி சூரியன் வெண் மேகத்தை கேட்டான். வந்த மழை  பெய்து முடிக்கும் வரை எங்களை விரட்டாதே இருக்கும் இவ்வீட்டவர்களின்  கொடை மனந்தான் எங்களுக்கு குடை.


மழை வந்ததும்,  ஓட்டை குடை கொண்டு வந்து தந்த வெண்மேகங்களும், கரு மேகங்களாக மாறி, குடையும் பலவீனமாகி தாங்காது  காற்றரசன் கொண்டு போனதும் நல்லதற்கே..! கழுவிய பித்தளை தாம்பாளமாய் எப்படி ஜொலிக்கிறேன். இந்த ஆறும் அதற்கு சாட்சி. .!( அட.! நீங்களும்  அதனிடம் கேட்டுத்தான் பாருங்களேன்..!)


மழை பெய்தாலும், பெய்து நின்றாலும்,  இரவில் எங்களுக்கும்  ஒடுங்கிக் கொள்ள குருவி விட்டுச் சென்ற இந்த ஜன்னல் கம்பிகள்தான்.


ஏய்.! இந்த இருட்டிலே என்னை தனியா விட்டுட்டு எங்கே போனாய்? எனக்கு பயமாயிருக்கிறது என்பது ஒரு பக்கமிருந்தாலும், உனக்குத்தான் இருட்டிலே தனியா போக கொஞ்சமாவது தைரியமிருக்கா?


ஹப்பாடா.! ஒரு வழியா வந்திட்டியா? இப்ப இந்த இருட்டிலே நாம் இருவர்தான் ஒருவருக்கொருவர் துணை. நாளை காலை மழையின் விடாப்பிடியான பிடியில் மறைந்திருக்கும் சூரியன் களைப்புத்தீர வெளி வந்ததும், நீ யாரோ.! நான் யாரோன்னு பறந்து போயிடுவோமோ...! அப்படி போக மாட்டோம்னுதான் நம்புகிறேன். நாளையும் என்னுடன் துணையாக இருப்பாயா ?

மலர்களின் ரசனை...


வானம் நமக்கு தோழன்.. காற்றும், மழையும் நண்பன். காற்றில் பொன்னூஞ்சல் ஆடி இலை மெத்தை தேடி நாம் வந்த வேளை இது..!


ஆகா.. இந்த பாட்டை  முன்பே எங்கேயோ.....எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.!  சரி.! சரி.! எங்கே கேட்டாலும், அந்த வானமும், காற்றும். மழையுந்தான் நமக்கும் தோழன், நண்பன் எல்லாமும்.. நாமும் அந்த பெருசின் உடன் பிறப்புகள்தானே! இதோ இந்தப் பாட்டையும் கொஞ்சம் கேளு...


மலர்களிலே பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்.


பச்சை நிறம் அவன் திருமேனி....


பவள நிறம் அவன் செவ்விதழே....


மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்....


வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்....


மலர்களிலே பல மணம் கண்டேன்.  திரு மாலவன் கருணை மனம் கண்டேன். 


பாடல் எல்லாவற்றையும் கேட்டாயா? என்னவொரு ரசனை இந்த மலர்களுக்கு. நாம்தான் கொஞ்சமும் எவ்வித ரசனையுமின்றி நெடிதுயர்ந்து வளர்வதிலேயே கவனமாக இருந்து விட்டோமோ ?


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... நம்மை படைத்தவன் சொல்கிற கடமையைதான் செய்கிறோம். சூரியன் தன் பாதுகாப்புக்கு "குடை கொண்டு வா" எனச் சொல்வதற்கு காரணமாயிருந்த மழையையே நாம்தான் தோற்றுவிக்கிறோம். அந்த பெருமையொன்றே  நமக்கு போதாதா? மேலும் நம்மிடையே மலர்களையும், காய் கனிகளையும் உண்டாக்கும், மரங்கள் இல்லையா? யாருக்கு எது கிடைக்கிறதோ அது தப்பாமல் அவர்களுக்கு கிடைக்கும்.


 உண்மையான பேச்சு.! இப்படி பூங்காவில்,


கண்களுக்கு விருந்தாக, சோர்வுறும் ஒரு மனதிற்கு இதமளிக்கும் விதமாக,


பார்க்க வரும் அனைவருக்கும், பார்வையாளர்களாக நாங்கள் வளர்ந்து நிற்கவில்லையா ?


பூவும், காயுமாக பலனளிக்கும் விதமாக நாங்களில்லையா? ஒவ்வொருவருக்கும் ரசனைகள் மாறுபடும். இந்த உலகத்தில் நம்மை ரசிப்பவர்களும் இருக்கிறீர்கள். அந்த திருப்தி போதும் நமக்கு...




ஆவ்... என்ன விவாதமிங்கே.! பொல்லாத ரசிப்புக்கு பெயர் போனவர்கள் இவர்கள்... காட்டின் ராஜாவாக கவலைகள் ஏதுமின்றி உலாத்திய  என்னை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து  இந்த சிறு இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். கூண்டுக்குள் நடமாடும் இவர்களை நான் கூட்டின் வெளியிலிருந்து பார்ப்பதாக அவ்வப்போது கற்பனை செய்து கொள்கிறேன். இல்லையென்றால், என் ஒரு உறுமலுக்கு இவர்கள் அந்த கூண்டிலிருந்து வெளியே ஓடி விடுவார்கள். எங்கே...!.!.! கூண்டை திறந்து ஒரு நடை உள்ளை வந்து என்னைத் தொட்டு, என்னுடன் பேசி ரசிக்கத் சொல்லுங்கள் பார்க்கலாம்.... தினமும் ஓராயிரம் பார்வைகளை சந்திக்கிறேன். ஒன்றிலும் ரசிப்புத் தன்மையே இல்லை....



அதென்னவோஉண்மைதான்..  நான் நடந்து வரும்போதெல்லாம் என்னைப் பார்த்து, என் நடையை பார்த்து ரசிக்காது, கையிலிருக்கும் சின்ன ஒளிப் பெட்டியை இயக்கி, அதில் என்னை அவர்களுடன் இணைத்துக் கொள்வதிலேயே நாட்டமாக இருக்கிறார்கள். என்னவோ போ. ! இந்த நடையில் கால் ஓய்ந்ததும் படுக்க இடம் போட வேண்டியதுதான்!....

ஆங்காங்கே எடுத்த படங்களை இணைத்து ஒரு கதம்பமாய்... ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏

Sunday, September 2, 2018

ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நாள்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா.

கணங்களுக்கு முதன்மையானவனே...
விக்கினங்களை களைபவனே...
விநாயகப் பெருமானே.. எனை என்றும்
காக்கும் கணேசா..! நல்லெழுத்துக்களை அறியவும், பதியவும் உன் துணை
வேண்டினேன். தப்பாமல் தந்தருள்வாய்
வேலனுக்கு சோதரனே....


ஓம் கார வடிவே கணேசா.!
எங்கள் உள்ளத்தில் ஓம் என ஓதினோம் நேசா.!
யேசுதாஸின் இனிமையான குரலில் என் இஷ்ட தெய்வத்தின் மீது எனக்குப் பிடித்த இனிமையான பாடலொன்றை கேட்கலாமா?


பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே கண்ணா...


அந்த பரவசங்களுக்கு நடுவே உன்  கோகுலத்தில், உன்னருகில் விளையாடும் ஒரு சிறிய பிறப்பாக நானும் பிறந்திருக்க கூடாதாவென என் பாழும் மனம் நினைக்கிறது கிருஷ்ணா..  அப்போதேனும் உன்னை தொட்டு தொடர்ந்து பால்யகால விளையாட்டில் பங்கேற்று சந்தோஷமடைந்திருப்பேனே தாமோதரா...


பிஞ்சு விரல்களால், நீ வெண்ணை உண்பதே அழகு. உன் அழகுக்கு அழகு செய்யும் ஆபரணங்கள்  இடையே ஒரு சிறு கல்லாக நான் இருக்க கூடாதாவென என் மனம் ஏங்குகிறது கண்ணா? .அப்போதேனும் உன் அழகை அருகிலிருந்து கண்டு களித்திருப்பேனே  கேசவா...


ஒரு விரலால்  வெண்ணை உண்ணும்  போது ,பிற விரல்களில் வடியும் வெண்ணையுடன் உன் அழகை காணும் போது, உருகும் வெண்ணையின் நிலையில் என் மனமும் தவிக்கிறது  அந்த வெண்ணெய் ஒரு துளியில் எங்கேனும் ஒரிடத்தில் நானும் சங்கமித்து இருக்க கூடாதா நாராயணா ...

தானே வந்து தவழ்ந்த நிலையில், நிரம்பி வழியும் பாலமுதை கை நிறைய சிந்திச் சிதறி எடுத்துண்ணும் கோலம் காண தேவாதி தேவர்களும் வந்து பார்க்கும் காட்சியை கண்டு உண்ண மறந்து கை ஊன்றிய நிலையில் திரும்பி நோக்கி அதிசயக்கிறாயோ? அந்த பாலமுதம் கடையும் மத்தாக நான் இருந்திருக்க கூடாதா கிருஷ்ணா ? அந்த சமயத்தில் கடையும் பொழுதில் கடைக் கண்ணால் உன் அழகை தரிசித்திருப்பேனே த்ரிவிக்கரமா.... 


சின்னஞ்சிறு விரல்களால் நீ உண்டது போறாது என அன்பின் மிகுதியில், உன் தாய்  ஊட்டி விடுவதை ஆனந்தமாக உண்ணும் கிருஷ்ணா... அதற்கு உன் தாயாகிய யசோதைக்கு கள்ளம் கபடமற்ற உன் உள்ளத்தையே பரிசாக்கி கொடுக்க  நினைக்கிறாயோ? அந்த  பொழுதில் உன் தாய்  விரலில் அணிந்திருக்கும் கணையாளியின் ஒரு உலோகமாக நான் பிறந்திருந்திருக்க கூடாதா யசோதை கிருஷ்ணா? அப்போது உன்னை ஸ்பரிசித்து மன மகிழ்ந்திருப்பேனே நரசிம்மா....


என்ன தவம் செய்தாய் யசோதா....பரம் பொருளை உன் மகனாக அடைவதற்கு.. உன் மடியமர்ந்து உண்ட களைப்போ உன் மகனுக்கு.. அதனால்தான் உன் அணைப்பில் ஆசுவாசபடுத்திக் கொள்கிறனோ ? உன் தழுவலில் அவனும், நீயும் மெய்மறந்த அழகை, நீ அமர்ந்திருக்கும் மர சிம்மாசனத்தில் ஒரு பலகையாக இருந்திருந்தாலும், உங்கள் அன்புள்ளங்களை தரிசித்திருப்பேனே பத்மநாபா.....


அன்பு தாயின் கைகளால் வெண்ணையை உண்டு மகிழ்ந்த நீ பதிலாக அவ்வெண்ணை ஈந்த பசுவினத்தை மகிழ்விக்க  உன் இதழ்கள்  தந்த இசையமுதை அவை செவி குளிர மனம் நிறைய பருகச் சொல்லி அளிக்கின்றனையோ? அதன் மேல் சாய்ந்து நீ கானம் இசைத்த போது உனை சுற்றி மலர்ந்திருக்கும் மலரிடையே ஒரு மலராக நானும் மலர்ந்திருக்க கூடாதோ மணிவண்ணா? அப்போதாவது உன் மலர் முகம் கண்டு மகிழ்ந்திருப்பேனே புருஷோத்தமா....


உன் அருகாமையில் "ஆ" வினங்களை கட்டுண்டு நிற்க வைத்த மாதவா... அவைகள் முந்தைய பிறவியில் செய்த மாபெரும் புண்ணியந்தான் உன்னை அங்கு கொண்டு சேர்த்ததுவோ மதுசூதனா... அந்த "ஆ"வினங்களின் கொம்புகளில் கட்டிய சிறு மணியாகவாவது என்னை நீ உருவாக் கியிருக்க கூடாதா? அப்போதாவது உன்னை கண்டு அகமகிழ்ந்திருப்பேனே கோவிந்தா.......


உனது கான மழைதான் ராதையின் சுவாசம். அதனால்தான் அவள் உன்னுடனே பிரிக்க முடியாதபடி ராதா கிருஷ்ணனாக வாசமாகி சங்கமித்து விட்டாள். வண்ணமய ஆடைகள் அணிந்து அவளுடன் பாடிக் களித்திருந்த போது, அந்த பட்டாடையின் ஒரு நூலாகவேனும் நான் பிறப்பெய்திருக்க கூடாதா ராதே கிருஷ்ணா? அந்த சமயத்தில்  உங்களிருவரையும் கண்டு ஆனந்தித்து பரவசமாகியிருப்பேனே வாமனா.....


உன்னையே நினைக்கும் அனைத்து உள்ளங்களிலும் நீ ஒருவனே குடியிருப்பாய்.  உன் புல்லாங்குழல் இசையில் மயங்கியதால் தன்னிலை மறந்த நிலையில் கோபிகா ஸ்திரிகளின்  மெய் மறந்த கோலம்... உன் அருகிலிருக்கும் மரத்தின் ஒரு இலையாகவேனும் நான் பிறவி எடுத்திருக்கலாகாதா அநிருத்தா?அப்போதாவது உன்னை தரிசித்திருப்பேனே உபேந்திரா.....


பொன்னும், பொருளும் எனக்கு இணையாகுமோ? அன்புக்கு மட்டுமே என்றும் நான் ஐக்கியமானவன். ஒரு சின்னஞ்சிறு துளசி இதழுக்கு முன் அந்த பொருள்கள் எல்லாம் வீண். ஆடம்பரம் நிலைக்காதது என அந்த நிமிடம் உணர்த்திய அச்சுதா... அந்த துளசியின் அடி மண்ணில் ஒருசிறு துகள்களாக நான் ஜனித்திருக்க கூடாதா?  அந்த சமயத்திலாவது  உன்னை கண்டுகந்திருப்பேனே  ஜனார்த்தனா..


நீதான் பரம் பொருள். உன்னை புரிந்தவர்களுக்கு மட்டும்.... உன்னையே உளமாற சரனென அண்டியவர்களை நீ என்றும் உன் கைகளில் தரித்திருக்கும் சங்கு சக்கரம் போல் கை விட்டதில்லை. உன் மணிமுடியில்  ஆடும் முத்துச்சரத்தின் ஒரு முத்தாக நான் அலங்கரிக்கப்பட்டு இருக்க கூடாதா பரந்தாமா? அந்த நிலையில் உனைக் கண்டு அகமகிழ்ந்திருப்பேனே சங்கர்ஷணா....


ஒரு மனிதனாக செய்ய வேண்டிய செயல்களில், பலன்களை எதிர்பாராது கடமையை மட்டும் செய்து முடிக்க உன் பார்த்திபனுக்கு  அன்பாக கட்டளையிட்ட பரந்தாமா ! அன்றேனும் ரத  கஜ, துரக பாதாதிகளில், ஓருயிராக படைத்திருக்க கூடாதா? இத்தனை சமயங்களிலும்  எந்த விதத்திலும் உன்னை தரிசிக்க இயலாமல் செய்து விட்ட என் ஊழ் வினையகற்றி  என்னை உன் பார்த்திபன் நிலையில் நீ பிறந்த பொன்னாளான இன்றேனும் இப்போதாவது  அனுகிரஹித்து விடு தீன தயாளா.!


      கோவிந்தா   🎆   கோபாலா
      ஹரே ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமுவந்த கிருஷ்ண ஜயந்தி நல் வாழ்த்துகள்.

Saturday, February 17, 2018

நற்குணங்கள் . 3 கர்வமில்லா மனது.




இறைவன் மனிதருக்கு அளித்திருக்கும் பகுத்தறிவுகளில் ஒன்று புத்திசாலித்தனம். இதை மனிதர்கள் எதற்கும் மிகவும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டாலும், இயல்பாகவே மனிதருடன் தங்கியிருக்கும் வஞ்கசம், சூழ்ச்சி பொறாமை கோபம் என்ற கெட்ட இயல்புகள் சற்று மிகுதியாக தலையெடுக்கும் நேரம் இந்த புத்திசாலித்தனம் காணாமல் போய் அவர்கள் பாதி விலங்காகி விடுகிறார்கள், சிறிது நேரத்திலோ , சில நாட்களிலோ இத்தகைய துர்குணங்கள் விலகி சாதரணமான பின்,” ஐயோ! பொறாமையில்கோபத்தில். இப்படி கண்மண் தெரியாமல் நடந்து கொண்டு விட்டோமே! என்று வருந்தும் அந்த நேரம் அந்த புத்திசாலித்தனம் மனிதரிடம் மறுபடி சரணடைந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் செய்த பிழை எத்தனை இன்னல்களை பிறருக்குள் விதைத்து அறுவடை செய்து விட்டிருக்கும். அதன் பலன்களை அனுபவித்தவர்கள் வாழ்வும், மனமும் எவ்வளவு துன்பங்களை சுமந்திருக்கும் என்பதனை தீயகுணங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துவிட்டு, இறைவன் தந்த பகுத்தறிவை  மட்டும்  பயன்படுத்தி சிந்தித்தால் புரியும்.

அதே போல் அந்த திறமை (புத்திசாலித்தனம்) நம்மிடம் நிறைய உள்ளது. அதனால் நம்மை போன்றவர்கள் எவருமில்லை என ஆணவப் படும் போதும் கர்வமென்ற அந்த குணம் அளவுக்கதிகமாக மனதில் இடம் பிடித்து திறமையென வளர்ந்திருக்கும் அந்த விருட்சத்தின் வேர்களை சுலபமாய் தின்று நம்மை வேரில்லா மரமாக்கி பலமில்லா மனிதனாக கீழே சாய்க்கிறது. அதனால் நம்மால் முடிந்த அளவு அந்த கர்வமற்ற மனதை நமதாக்கிக் கொண்டால் செல்லும் இடமெல்லாம் நம்முள் நிறைந்திருக்கும் புத்திசாலிதனமெனும் ஆற்றலை பயன்படுத்தி நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை தினம் ஒரு வெற்றியாக்கி  வாழலாம் இல்லையா.? இதனால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் எல்லாவித பெருமைகளும் நம்மை கேட்காமலேயே  குவியும், ஒரே ஒரு கெட்டதை நீக்கினால் பல நல்ல குணங்களும் பல நல்ல விசயங்களும் நம்மைச் சுற்றியபடியே  நடமாடிக் கொண்டிருக்கும் அல்லவா.?

ஒரு கதை..

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் போரின் வெற்றிக்காக சிவபெருமானை வேண்டி தவமிருந்து பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக தவம் செய்ய வேண்டி காட்டுக்கு புறப்பட்டான். போகும் வழியில் தன் ரதத்திலிருந்தபடியே காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டே ராமேசுவரம் சென்றடைந்தான். அங்கு கடலில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தன்கடமைகளை முடித்துக் கொண்டவனாய் அங்கிருந்து கிளம்பும் போது அருகிலிருந்த மலையில், ராம பக்த ஹனுமான் ராம, ராம, என்னும் பெயரை பயபக்தியுடன் உச்சரித்த வண்ணம்  தவம் செய்து கொண்டிருந்ததைக்கண்டு அருகில் சென்றுஏய் கிழக் குரங்கே! நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்.? என்றான் அலட்சியமாக.

ஹனுமான் தன் நிலை கலைந்து, அர்சுனனை ஏறிட்டு பார்த்து, அமைதியுடன், “அப்பா, என் பெயர் ஆஞ்சனேயன்! நான் வாயு புத்திரன்.  கடலில்  கற்களாலேயே பாலம் அமைத்து இராவணனை வென்ற என் அய்யன் ஸ்ரீராமனின் அடிமை.!  என்றான் அன்போடு.
இப்படி ராமனை பெருமையாக அறிமுகப்படுத்தியதை கேட்ட அர்சுனன் கேலியான குரலில்,  உன் ராமன் கற்களாலேயே பாலம் அமைத்ததற்கு பதிலாக தன் முயற்சியினால் வில்லினால் பாலம் அமைத்து சேதுவை கடந்திருக்கலாமே!  அவரும் என்னைப் போல் வில் வித்தையில் சிறந்தவர் இல்லையா.? என்றான் கர்வம் கலந்த ஏளனமான குரலில்.

தன்னை அவமானமாக என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்ளும் குணமுடைய அனுமனுக்கு தன்னுயிர் ராமனை கேலியாக பேசியது  கோபத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் பொறுமையாக, வில்லினால் உண்டாக்கும் அம்பு பாலங்கள் என்னைப் போன்ற குரங்கினங்கள் ஏறிச் சென்று சேதுவை கடப்பதற்குள் அவை கடலில் மூழ்கி விடும்,. அதனால் என்னய்யன் ராமசந்திர பிரபு கற்களாலேயே பாலம் அமைத்தார். நீ என்ன என் ராமபிரானை விட சிறந்த வில் வித்தை கற்றவனா?என்றான் சற்றே கோபமாகஅனுமன்.

அர்சுனனின் கர்வம் ௬டியது. சிரித்துக் கொண்டே, “நான் யார் தெரியுமா? வில்லுக்கு விஜயன் என பெயர் எடுத்தவன். நன்றாக வில் வித்தை கற்றவன் தான் நினைக்கும் வண்ணம் எதையும் செய்து முடிக்கும் திறமை இல்லையென்றால் அவன் வில்வித்தை கற்றதலினால் என்ன பயன்? சரி! இப்போது பார்கிறாயா? இந்த கடலில் உன் பார்வை படவே வில்லினை தொடுத்து அம்புகளினால் ஒரு பாலம் அமைக்கிறேன். எங்கே, உன் பலம் கொண்டு குதித்தோ, ஆடியோ அதை உடைந்தெறிந்து விடு பார்க்கலாம்.! என்றான் கர்வமாக.

அனுமனும் இளநகையுடன், “நீ அம்புகளினால் கட்டும் பாலத்தில் நான் ஏறி நின்றதுமே உடைந்து நொறுங்கி விட்டால் என்ன செய்வாய்? ஏன் என் கால் கட்டை விரலால் அழுத்தியதுமே உன் பாலம் நீரில் மூழ்கி விடுமே.! அப்போது என்ன செய்வாய்?” என்றான்.

அப்படி நான் கட்டும் பாலத்தை நீ உடைத்து விட்டால், நான் அடுத்த நொடி இதே இடத்தில் அக்கினியை வளர்த்து , அக்கினிப் பிரேவசம் செய்து என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். இது சத்தியம். அவ்வாறே அம்பு பாலம் கடலில் மூழ்காமலிருந்தால், பதிலுக்கு பந்தயமாக நீ என்ன செய்வாய் சொல். !’ என்றான் அர்சுனன்

அர்ஜுனா, நீ உருவாக்கும் அம்பு பாலத்தை என் கால் கட்டை விரலினால் கடலில் மூழ்கச் செய்வேன். அப்படி நடக்க வில்லையென்றால், உன் ரதத்தின் கொடியிலிருந்து கொண்டு போரில் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன். இதுவும் உறுதி!” என்றான் அனுமன்.

அனுமன் எதிர்பார்த்ததை விட அழகான பாலத்தை கட்டுவேன் என மனதில் உறுதி பூண்ட அர்ஜுனன், தன் காண்டிபம் என்ற வில்லினை ஏந்தி அம்புகளை சரமாரியாகத் தொடுத்து எழில்மிக்க ஒருபாலத்தை உருவாக்கினான். பின் பெருமையுடன் அனுமனை நோக்கி, இப்போது இப் பாலத்தின் உறுதியை நீ எப்படி வே்டுமானாலும் பரிட்சித்துப் பார்த்துக் கொள். எனறான் கர்வமான  குரலில்.

அனுமன் தன் மனதில் ராமனை நமஸ்கரித்தபடி, “ராமா, நான் என்றும் உன் அடிமை.! இனி உன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும்.” என்றவாறு, ராம, ராம, என்று ஸ்மரித்தவாறு, கடலில் நூறு யோசனை தூரம் அர்ஜுனன் கட்டியிருந்த பாலத்தின் ஒரு நுனியை தன் கால் கட்டை விரலால் லேசாக ஒரு அழுத்து அழுத்தினார். அவர் அப்படிச் செய்ய வேண்டுமென காத்திருந்த மாதிரி  அந்த அம்புகளால் ஆன பாலlpம். பொலபொலவென உதிர்ந்து கடலுக்குள் போயின.

அதைப் பார்த்த வீராதி வீரனான அர்ஜுனனுக்கு அவமானத்தால் எண் சாண் உடம்பும் கூனிக்குறுக, திகைத்து மனம் சோர்ந்தான். சபதத்தின்படி அவன் தான் இறக்க நேரிடுமே என கவலையுறவில்லை!. பாசுபத அஸ்திரத்தை பெற வேண்டி தவம் செய்ய புறப்பட்டுச் சென்ற தன்னைக் காணாது தன் சகோதரர்கள் தேடி அலைவார்களே. !என்னுடைய இந்த முடிவை யார் சென்று அவர்களுக்கு தெரிவிப்பார்கள்?  ஐயோ! வந்த இடத்தில் தன் செருக்கினால். இப்படி ஒரு சம்பவம் நிகழ தான் காரணமாகி விட்டோமே.! என்றெல்லாம் நினைத்து வேதனையுற்றான்.

இந்த ஆணவம் என்பது ஒருமனிதனை இப்படித்தான் சீரழித்து விடும். ஒரு மனிதன்  எவ்வளவு புத்திசாலிதனமாக, பலவானாக, மேதையாக, போற்றப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதிக கர்வமும் செருக்கும் அவனுக்கு வரும் சமயம், அவன் அறிந்த நல்லவிஷயங்களை, அவனுடைய சமயோசித்த அறிவை முடக்கி அவன் கண்களுக்கு மாயத்திரையிட்டு, அவன் அறியாமலே அவன் வாழ்வை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டுச் செல்லும். இதுதான் இந்த கர்வத்தின் உண்மை ஸ்வரூபம். எந்நாளும் இது சாத்தியமில்லை எனினும் கர்வம் தலை ஏறாமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை அர்ஜுனன் மாமனிதன். இறைவனின் அன்பை, அருகாமையை பெற்றவன். அவன் கதியே இவ்வாறெனில், சராசரி மனிதர்களின் நிலை நினைத்துக் ௬ட பார்க்கமுடியவில்லை.

அர்ஜுனன் தன் சபதபடி அக்னியை மூட்டி அக்னிப் பிரேவசத்திற்கு சித்தமானான். அனுமனும் மனம் இரக்கமுற்றவனாய், வேண்டாமென எத்தனையோ ௬றி தடுக்கப் பார்த்தான். அர்ஜுனன் தன் கடைசி நிமிடத்தில் தன் நணபனும், வழிகாட்டியுமான கிருஷ்ணனை நினைத்தபடி, இப்படி ஆகுமென்று நான் சிறிதும் நினைக்கவில்லையே.! இனி நீதான் என் சகோதரர்களை முன்னின்று காத்தருள வேண்டும் என்று மனமுருக நினைத்தபடி அக்னியை வலம் வரும் சமயம், அந்த மாயக்கிருஷ்ணன் தன்னுருவை மாற்றிக்கொண்டு ஒரு பிரம்மசாரி வேடத்தில் அங்கு தோன்றி யார் அது? அர்ஜுனன் மாதிரி தெரிகிறதே.! ஏனப்பா உனக்கு என்ன பிரச்சனை.! ஏன் அக்னி பிரேவசம் செய்யதுணிகிறாய்? என்று ஒனறுமறியாதவர் போல் வினவ, அர்ஜுனனும், ஆதரவாக கேட்ட அவரிடம் நடந்ததை விவரித்தான்.

கிருஷ்ணனும், முகபாவத்தை பாவமாக வைத்துக் கொண்டபடி, “ஐயோ.! அர்ஜுனாஉன் நிலைமை இப்படி ஆகி விட்டதே.! ஆனால் யாருமில்லாத இடத்தில் நீஙகளிருவரும் நடத்திய போட்டியில் ஒரு நியாயம் இல்லையே.! போட்டி என்றால் ஒரு நடுவர் இருந்து அவர் கண்காணித்து தீர்ப்பு  சொன்னாலன்றோ, அது போட்டியாகும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் நடுவராக இருக்கிறேன். மறுபடி போட்டியை நடத்துங்கள். யாருக்கு வெற்றி தோல்வியென நான் முடிவு ௬றுகிறேன். எனவும், அவர் சொல்லுக்கு மறுத்து ௬ற இயலாது, அவருக்கு கட்டுண்டவர்களாக இருவரும் மறுபடி போட்டிக்கு ஒப்புக்கொண்டனர்.

இந்த முறை கண்ணனை மனதினில் நினைத்துக்கொண்டு அர்ஜுனன் அம்புகளை  கொண்டு பாலத்தை அழகுடன்  விரைவாக கட்டி முடிக்க, சென்ற தடவை பெற்ற வெற்றிக்களிப்பில், தன்னால் முடியாதது என்ன இருக்கிறது ? என்பது போல், அனுமன் கால் பெருவிரலினால் பாலத்தின் மீது அழுத்த , பலன் ஏதுமின்றி பாலம் உடையாது போகவே, பாலத்தின் மீது ஏறி நின்று குதித்தும் தன் பலம் கொண்ட கைகளினால் ஆட்டியும் பார்த்து பின் தன் தோல்வியை ஒப்புக் கொண்ட மனதினராய் கீழிறங்கினார்.

அப்போது பிரம்மசாரியாக வந்த  கிருஷ்ணன் தன்னுருவை கிருஷ்ணனாகவே மாற்றிக்கொண்டு , "அர்சுனா நீ  முதல் முறை என்னை நினைக்காது உன் முபற்சியினால்  மட்டும் வென்று  விடலாம்  என்றுஎண்ணினாய் உன்னுள்ளிருந்து உன்னை ஆட்டுவிப்பவன் ""நான்'' என்பதை  நீ மறந்ததினால் திறமையுடன் உன் வில்லிருந்து அம்புகள் புறப்பட்டு  பாலத்தைச் சிறப்பாக கட்டியும், தோல்வியைத் தழுவினாய்!  அதே சமயம்  மறுமுறை நீ என் மீது வைத்த நமபிக்கையினால்,  என்னை நம்பி நீ உருவாக்கிய பாலத்தை அனுமனால் அசைக்கக் கூட இயலாமல் செய்து விட்டது. உன் சிறிது நேர கர்வம் உன் உயிருக்கே  பங்கம் விளைவிக்கக்கூடிய செயலாகி விட்டது பார்த்தாயா பார்த்திபா''  என அன்புடன் கேட்கவும், " உண்மைதான் பரந்தாமா! கணநேரம் என் செருக்கு கூடியதால்  நடக்க கூடாததெல்லாம் நடந்து விட்டது. என்னை மன்னித்தருளுங்கள் மாதவா!'' என அர்ஜுனன் மனப்பூர்வமாக மண்டியிட்டு வணங்கினான். 


தோல்வியால் துவண்டிருந்த அனுமானை நோக்கிய கிருஷ்ணன் புன்னைகைத்தபடி அனுமனின் அருகில் சென்று  அவர் தோள்களை பற்றி அணைத்தவாறு ," ஆஞ்சனேயா! இன்னுமா நீ என்னை அறியவில்லை! நான்தான் உன் ராமன்!" என்றபடி ராமராக வில் ஏந்திய கோலத்தில் காட்சி தரவும், "அண்ணலே" என்றபடி அனுமன் அவர் கால்களில் விழுந்தார்.

அவரை தூக்கி நிறுத்திய கிருஷணன்," ஆஞ்சனேயா! திரேதா யுகத்தில் என் அவதாரம் முடிவற்ற நிலையில் நீ என்னிடம் கேட்டாய் !"பிரபோ ! நெஞ்சிலேயே சுமந்து கொண்டிருக்கும் தங்களை மறுபடி எப்போது காண்பேன்!? அந்த பாக்கியம் என்று நடக்கும்? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி வருந்தினாய் ! மறுபடி அதர்மம் தலைதூக்கும் பொழுதில் துவாபர யுகத்தில் கண்ணனாக பிறப்பேன். அப்போது ஒரு சந்தர்பத்தில் எனனை தரிசிக்கும் பாக்கியம் உளக்கு கிடைக்கும் என உன்னிடம் கூறினேன் நினைவிருக்கிறதா ? அர்சுனன் கட்டிய பாலத்தை தகர்த்தெறியும் போது நீ என்னிடம் உன் செய்கையின் பொறுப்பை ஒப்படைத்தாய். அதனால் உன் கால் விரல் பட்டதுமே பாலம் பொலபொலவென உதிர்ந்து போனது. மறுமுறை உன் செய்கையை மட்டும் நினைத்தபடி என்னை மறந்தததினால், உன் பலம் அவ்விடத்தில் செயலற்று போயிற்று. உன் பலமே நான்தான். நான் அனைத்துமானவன் சகல உயிர்களுக்குள்ளும் நான் அடக்கமானவன். நானே ராமன். நானே கிருஷணனுமாவேன். என்ற கிருஷ்ணன் மாறி மாறி இரு அவதாரங்களையும் மெய்பித்து காட்சி தந்திட, அனுமனும் அர்சுனனும் போற்றித் தொழுதனர்.

அனுமனும் மஹா பாரத போரில் தன் வாக்கின்படி அர்சுனனின் தேரில் இருந்த கொடியில் இருந்தபடி அவனுக்கு உதவிகள் புரிந்து போரில் ஜெயமடைய வைத்தார். அனுமன் கொடியில் இருந்தால் அர்சுனனுக்கு வீழ்ச்சியடையா வெற்றிகள் தேடி வருமென்பதற்காகவே, கிருஷனன் நடத்திய நாடகங்களில் இதுவும் ஒன்று... அனுமன் கொடியில் இருந்ததினால், அனுமன் கொடியுடையவன் என்ற பேரும் புகழும் பெற்றான் அர்சுனன்.

இவ்வாறு சிறு கர்வத்தினால்,. இறையம்சம் பெற்றவருக்கும். இறைவனுக்கு நெருக்கமானவருக்குமே திறமைகள் இருந்தும் செய்யும் செயல்களில் தடுமாற்றங்கள் நிகழ்ந்த போது, சாதாரண  மனிதர்களாகிய நாம் கர்வமோ. ஆணவமோ அடைந்தால் என்ன ஆகும் என்பதை  உணர வேண்டும் . எனவே எபபோதும் தன்னடக்கத்துடன்  பணியாற்ற இறைவன் பூரண நல்லாசிகளை நமக்கு எந்நாளும் வழங்க வேண்டும்.
ஒருபோதும் படைத்தவனை மறவா பக்குவத்தை பெறுவோமாக.......