Showing posts with label வீட்டின் வழிபாடு. Show all posts
Showing posts with label வீட்டின் வழிபாடு. Show all posts

Saturday, November 5, 2022

துளசி அம்மன் திருக்கல்யாணம்



இன்று துளசி கல்யாணம். இன்று துளசி தேவியை தொழுது  பணிபவர்களுக்கு என்றும் மங்கலம் தரும் நாள். ஸ்ரீ மன்நாராயணரின் பூஜைக்கு அனேக மலர்களுடன் என்றுமே உகந்தது துளசி தளங்கள்தாம்.  அவரை பூஜிக்கும் போது ஒரு துளசி இலை அந்த பூஜைக்குரிய பொருட்களில்  இல்லையென்றாலும் பெருமாளின் பூஜா கைங்கரியங்கள் நிறைவை அடையாது. 

இன்று ஸ்ரீமன்நாராயணன் அன்னை மஹாலக்ஷ்மியின் தங்கையான அன்னை துளசி தேவியை திருமணம் செய்து கொண்டு அவரை தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள். துளசி தேவியின் தவம் பூர்த்தியடைந்த நாள்.பெருமாள்  கோவில்களில் மட்டுமின்றி நம் வீடுகளிலும் நாம் அன்னை துளசியுடன், நாராயணரையும் வழிபட்டு பலன்கள் யாவயையும் பெற வேண்டும். 

இது எல்லோரும் விபரமாக அறிந்ததுதான். அனைவரும் ஒவ்வொரு வருடமும் நியமங்களுடன் பூஜித்தும் வருவதுதான். இருப்பினும் என் பதிவிலும் இன்று அன்னையை பணிவுடன் வணங்கி போற்றும் அருளை அந்த நாராயணன் தந்தமைக்கு அவன் தாளிணையில் பல கோடி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். அவன் அருள் என்றும் நம் அனைவருக்கும் கிடைத்திட சதா சர்வகாலமும் அவனை பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. 

ஸ்ரீ துளசியம்மா ஸ்தோத்திரம். 

ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா

வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே

செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே

தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் 

பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே

பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே

அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே

அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே 

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே

அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே

வன மாலை என்னும் மருவே நமஸ்தே

வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே 

அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து

மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி

முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு

செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து 

பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து

புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு

என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க

மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள் 

மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்

தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன்

அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்

தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன் 

புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன்

கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்

க்ரஹஸ்தர் என்னை பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன் 

முமுஷுகள் என்னை பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன்

கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து

கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி

கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில்

வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்

நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே

அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார்

இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள்

அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால். 

🙏. ஓம்.. தத். ஸத். பிரம்மார்ப்பிதம்.. 🙏. 

அனைவரும் அன்னையின் அன்பான அருள் பெற்று நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக  வாழ்ந்திட அன்னையை இந்த ஸ்லோகம் பாடி நமஸ்கரித்து கொள்கிறேன். 🙏.