அன்றைய நாளின்
சந்தோஷங்கள் வேறு!
அனைவருக்கும்
என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.!!!!
இன்றைய நாளின்
மகிழ்வுகள் வேறு!
ஒருமாதம் முன்னதாகவே, பண்டிகை நாட்களின் வரவுகளும், அதனை கொண்டாடி மகிழ்ந்த சென்ற வருட நினைவுகளும், நம்மை
வந்தடைய, காலில் சக்கரம் இல்லாகுறையாக நாம் பண்டிகையை நோக்கி
ஓட ஆரம்பித்து விடுவோம். ஆனால் அப்போது, இப்போதைய காலக் கட்டத்திலிருந்து, நிறைய மாறுதல்கள்
இருந்தது. (அடுப்பிலிருந்து, உடுப்பு
வரை மாற்றங்கள்தாம்.) அந்த பண்டிகை நாளின் இறுதி நாள் வரை
பணத்திற்கும், சில பல வசதியின்மையின் தட்டுப்பாட்டைப் பற்றி
வீட்டின் பெரியவர்கள் கவலை கொள்வது, நம் கண்களுக்குத்
தெரிந்தாலும், எப்படியாவது சமாளித்து நாளைய பண்டிகையை
நிறைவாக கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை மனம் நிறைய இருக்கும். அதே
மாதிரி பெரியவர்களும், தம் கவலைகளை சிறு சிறு கோபங்களோடு,
நம்மிடையே சற்றே வெளிக் காட்டினாலும், அந்தந்தப்
பண்டிகையன்று நம் மனம் கோணாமல், நமக்கு வேண்டியதை கிடைக்கச்
செய்து, நம்முடன் சேர்ந்து அவர்களும் ஒரு குறைவுமில்லாது
விஷேடங்களை சிறுபிள்ளைகளாக கொண்டாடி மகிழ்வார்கள். வீடு
முழுவதும் உற்றமும் உறவும் சேர்ந்து நிறைய மகிழ்ச்சியலைகள் நிரம்பி வழியும்.
பெரியவர்களின் ஆசிர்வாதங்கள், மரியாதையுடன்
அதனை விரும்பி வேண்டி, அவர்களிடம் பெறும் பரிசுகள் என
புதுமலராக பூத்துக்குலுங்கும் பண்டிகைகள். “மறு வருடம் இதே
தினங்கள் என்று பூக்கும்?” என்ற மலரும் நினைவுகளோடும்,
“சென்ற வருடத்தை விட இந்த முறைச் சிறப்பாக இருந்தது.’! என்ற சந்தோஷமும் மனதை நிரப்ப, “இன்று நிறைவேறாத
சிறுக்குறைகளை வரும் வருடம் அன்றைய தினத்தில் வட்டியும், முதலுமாய்,
அனுபவித்து விடுவோம்”. என்று மனதில்
எதிர்பார்போடும், மறுபடியும் அந்தப் பண்டிகைக்காக
காத்திருப்புக்கள்.! இப்படியாக அன்றைய நாட்கள் மகிழ்வோடு
கழிந்தன.
ஆனால் இன்று எத்தனையோ வசதிகள் இருந்தும், நினைத்தால்,
பெரும்பாலும் கடனோ, உடனோ பட்டு எதையும் வாங்கி
விடலாம் என்ற நம்பிக்கையிருந்தும், காத்திருப்புகள் இல்லை.!
எதிர்பார்ப்புகள் இல்லை! பண்டிகை என்று வந்தால், ஏதோ
கடமைக்காக வரவேற்பது மாதிரி தோன்றுகிறது. விஷேடங்களின்
சிறப்புக்கள் மனதை பாதிக்காத மாதிரி அனைவருமே அமைதியாக “பண்டிகையா?
வரட்டுமே!” என்ற வெகு சதாரணமான மனதுடன் அதை
எதிர் கொள்வது மாதிரி ஒரு தோற்றம் ஏனோ உண்டாகி விட்டது. பண்டிகைகள்
அன்றைய சந்தோஷங்களோடு, விரைந்து வந்து முகம் காட்ட தயக்கம்
கொள்கிற பாவனையோடு, எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டிருக்கிற
மாதிரியான தோற்றத்தை, மாறி வரும் காலங்கள்தான் நிர்ணயத்து
அமைத்து விட்டனவா? என எண்ணத் தோன்றுகிறது.
நல்ல உடையிலிருந்து, நல்ல விதவிதமான உணவுகள் வரை, அவ்வப்போது
போட்டுப் பார்த்து, உண்டு அனுபவிக்கிறோமே! இதை அந்தந்த பண்டிகையில்தான், உடுத்தி, சந்தோஷத்தித்து, சுவைப்பட சுற்றம் ௬டி, உண்டு அனுபவித்து, மகிழ வேண்டுமென்ற கட்டாயம் ஏதும்
இல்லையே! என்பதினாலா? இல்லை,! பண்டிகைகளை
சிறப்புற கொண்டாடிச் சிறப்பித்ததில் அந்த பண்டிகைகள் நிஜமாகவே போரடித்து
விட்டதினாலா? இல்லை.! உற்றார் உறவுகள், காலச்சுழற்சியால்,
வாழ்வை நிலைப்படுத்தும், சுகப்படுத்தும்
சந்தர்பங்களினால், “நீ எனக்கு என்ன முறை வேண்டும்? பார்த்துப் பேசி நாட்களாகி விட்டதல்லவா? யார் என்று
சட்டென்று தெரியவில்லை?” என்று எப்போதோ, என்றோ நடக்கும் ஒரு திருமணத்திலோ, வேறு ஏதோ
விஷேடங்களிலோ, சந்திக்கும் போது மட்டும் பேசிக்கொண்டு,
பின் அது குறித்து அறவே மறந்து விடும் நிலையினாலா? இல்லை! வழிவழியாக
அந்தந்தப் பண்டிகையின் தாத்பரியங்களை, அதன் நிகழ்வுகளின்
கட்டாயத்தை காரண காரியங்களுடன், சொல்லி வழி நடத்துபவர்களை,
நம் பயணங்களுக்கு நடுவிலேயே, அவர்களின் பாதை
மாற்றி, அவர்களை நம் பெரும் வாழ்வின் சுமையெனக் கருதி,
இல்லங்களின் வாசல்களில், இறக்கி விட்டு விட்டு
ஓடும் அவசர வாழ்வினாலா? எதனால் பழைய அனுபவங்கள், மகிழ்வுகள் தவறுகின்றன?
ஆனாலும், இன்றும், அன்றைய பழைய சந்தோஷ
தருணங்களை நினைவு ௬றுவோர்கள், அந்நாளை மறக்க இயலாதவர்கள்
என்றும் இருப்பதால்தான், காலப்போக்கில் வரும் பண்டிகைகள் கால்வீசி
தன்போக்கில் நடை பயின்று வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் சந்தோஷங்களை என் நினைவலைகளில்
தக்க வைத்துக்கொண்டு இதனூடேயே நானும் இன்னமும் எத்தனை ஆண்டுகளாயினும் பழமை மாறாது
பயணிப்பேன்.! என்ற மனப்பான்மையோடு தன் சம்பிரதாயங்களை மாற்றிக் கொள்ளாது நம்மிடையே இயந்திரமாக உலாவி வருகின்றன.
அவற்றுடன் நாமும் இனி வரும் காலங்களில், பழைய
மகிழ்ச்சியோடு, அதனை எப்போதும் மனதில் தேக்கி வைத்தவாறு
அதனுடன் பயணிப்போமா?
என் மனதில் எழுந்ததை பகிர்ந்து கொண்டேனேயன்றி, அன்றைக்கும்,
இன்றைக்கும், அவனியில் மாற்றங்கள் பெரிதும்
ஏதுமில்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும், வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும்,
என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!