Showing posts with label வானம். Show all posts
Showing posts with label வானம். Show all posts

Thursday, July 11, 2024

நாணும் நிலவு.

 நிலா, நிலா. அழகு நிலா.. 




இது மூன்றாம் பிறையில் 

முத்தெனவே முளைத்து வந்த நிலவு.

பொதுவாக மூன்றாம் பிறை

பார்க்கச் சிறந்தது. ஆயினும், 

பார்வையில் படாமல் 

பார்ப்பதரிது என எண்ண வைப்பது. 


மேல் திசை காதல் பார்வையால்

மேக குவியலில் முகம் மறைத்து

மேகங்களுடனே நகர்ந்து, தன் மனது

மோகத்தையும் வெளி காட்டாது

மறுநாள் நாலாம் பிறையில், தன் 

மனதை வெளிப்படுத்த எவ்வித 

தயக்கமின்றி, தடங்களின்றி அது

உற்சாகமாய் உதித்து வருவது

உலகறிந்த விஷயமாகும்.  


இப்படி காணக் கிடைக்காதது அன்று 

இவ்வாறாக கண்களில் பட்டது.

ஆழ் கடலில் உறங்கச் சென்ற 

ஆதவனின்  வெப்பத்தில் 

கசிந்துருகி கனிந்துருகி, அந்த

நீலக்கடலின் நிறம் பெற்று 

நிறம் மாறியதோவென

நினைக்க வைத்த வானம். 


எப்போதும் தன்னிலை உணர்ந்து

தன்னை அரவணைத்துச் செல்லும்

தன் நண்பனான மேகப் 

பொதிகளை  காணாததால் தன்

பொலிவினை சிறைப்பிடித்து

தன் காதலை தங்குதடையின்றி

தக்க வைத்து விட்டார்களே என்ற 

நாணம் கொண்டு நீலவானத்தின்

போர்வைக்குள் மறைந்தெழுந்து

ம(மு)கிழ்ந்திருந்த நிலவு. 




ஆறாம் பிறையில் மாறா காதலுடன் 

முகம் மலர்ந்து, உடல் வளைத்து

நாணும் நிலவும் ஒருவித அழகு. 

நாணம் பெண்களுக்கும் ஒரு அழகு.

அம்புலியும் அழகும் இணைந்த  

அதிசயத்தால் "நிலவு ஒரு 

பெண்ணாகி உலவுகின்ற அழகோ" 

என்ற பாடலும் உதித்ததோ ? 


எத்தனை நிலவு பாடல்கள்.. 

அத்தனையும் நிலவின் 

அசையாத சொத்துக்கள்.

நிலவிருக்கும் வரை நம்

நினைவிலிருந்து நீங்க மறுக்கும் 

நிதர்சனமான வைரங்கள். 



நிலா பாடல்களை நித்தமும் ரசித்து நினைவு கூர்பவருகளுக்கு நிலா சார்பில் எனது வாழ்த்துகளும், நன்றிகளும். 🙏. 

Thursday, December 5, 2019

நான் ரசித்த அழகிய காட்சிகள்.


அழகானர்ள்.













கதிரவனால் களையான வானம்.




 



என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று "வலை" க்குள் வேறு  மேகப் பொதிகளை  தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்ட அழகான வானம்.









"இதற்கு மேல் இடமில்லை. இனியும் பிடி"வாதம்"பிடித்தால் உனக்குத்தான் சேதம்...!" என்று எச்சரிக்கிறதோ இந்த பாத்திரம்.


நீர் ததும்ப ததும்ப இருந்த இந்த தூக்கு வாளியைப் பார்த்ததும், தண்ணீரை லாரியில் கொண்டு வந்து விடும் போது காசு கொடுத்து வாங்கி பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்திய தண்ணீர் கஸ்டங்கள் நினைவுக்கு வரவே அது எச்சரிப்பது போல் ஒரு புகைப்படம்.


பொதுவாக மூன்றாம் பிறை பார்ப்பது நல்லதென்று கூறுவர். (அரிதானதும் கூட..  ஆனால் நாலாம் பிறை நம் கண்களுக்கு பளிச்சென்று தெரியும். (நாலாம் பிறையை பார்த்தால் நாய் படும் பாடு என்பது ஒரு பழமொழி..) இந்த தடவை கார்த்திகை மூன்றாம் பிறையன்று கொஞ்சம் மேகங்கள் கலைந்து, கலைந்து இடம் விலகி "பிறை என்னை சீக்கிரம் படம் எடுத்துக் கொள்" என்றது.

அதுவும் இந்த கார்த்திகை மாதம்  சகோதரி அதிரா அவர்கள்"கார்த்திகைப் பிறை" என்ற பட்டத்தை சுமந்து கொண்டு "கார்த்திகை பிறையை" அடிக்கடி நினைவூட்டவே, அவசரமாக எடுத்த படங்கள் இது.. அன்று அந்த நேரத்தில் இந்த "பிறை" படங்களை நான் வளைத்து வளைத்து எடுக்கும் போது சகோதரி அதிரா அவர்களுக்கு கண்டிப்பாக  "பொறை" ஏறியிருக்கும்..( உண்மைதானே சகோதரி..!)

இதை எழுதி வைத்து மூன்று தினங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஏதோ நேரமின்மைகள் காரணமாக வெளியிடவில்லை. ஆனால், அதற்குள் நான் நினைத்தது போல், அழகிய பிறையாக இருந்தவர், அன்னக்கிளியாக மாறி விட்டார். ஹா. ஹா. ஹா.












"இது ஒரு பொன் மாலைப்பொழுது.."
வானமகள் நாணுகிறாள்..
வேறு உடை பூணுகிறாள்..
வானம் எனக்கொரு போதி மரம்..
நாளும் எனக்கது சேதி தரும்."  என்ற அருமையான பாடல் என் மனதிற்குள் ஓடுகிறது.

ஒரு மாறுதலுக்காக நான் பகிர்ந்த எல்லாவற்றையும் நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
ரசித்த/ரசிக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... 🙏....