Monday, December 11, 2023

விழுவதும், எழுவதும் ஒரு வரமேதான்.

அனைவரும் நலமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 

அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான வணக்கங்கள். 

நான் எழுதுவது பதிவும் அல்ல.. ஒரு கடிதம்...அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல... என் உள்ளம்.... (சிவாஜியின் பழைய பாட்டு நினைவுக்கு வருகிறதா? :)))))) ) 

அனைவரும் நலமாக உள்ளீர்களா? ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் இரு(வ)ந்து கொண்டேதான் இருக்கிறதல்லவா? வானிலை மாற்றங்கள் வேறு புயல், வெள்ளமென மிகுந்த சிரமங்களை தந்து விட்டன. உங்கள் அனைவரின் பதிவுகளையும் அவ்வப்போது படித்துக் கொள்கிறேன். உடன் வந்து பதில்கள் தர இயலவில்லை. மன்னிக்கவும் .🙏. 

என் சென்ற பதிவுக்கு உடனடியாக வந்து ஆறுதலாக கருத்துரைகள் தந்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். அதற்கு பாதிக்கு மேல் விரைவாக பதில் கருத்துக்கள் தர இயலவில்லை. அதற்கும் உங்களனைவரின் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். 🙏. நேரம் கிடைக்கும் சமயம் கண்டிப்பாக தருகிறேன். 

அப்போது வேலைகள்....வேலைகள் என நாட் முழுவதும் ஆக்கிரமித்து கொண்டதில் நேரங்கள் பறந்து விட்டன. மகன் குடும்பம் வருகையால், வேலைகள் சரியாக இருந்தன. ஒரே குடும்பமானாலும், அவரவர் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் அடிமைத்தனதிற்கு உடன்பட்டு வீட்டின் பல மாறுதல் வேலைகள் கைகளை கட்டிப் போட்டு சிறைப் பிடித்து விட்டன. பின் வந்த நாட்களில் தீபாவளி சிறப்புகள் என நாட்கள் பறக்க இடையில் எபியில் தீபாவளியன்று அனைவருக்கும் ஒரு வாழ்த்துக்களை பகிர்ந்தேன். (சகோதரர் நெல்லைத் தமிழரின் பதிவு அன்று.)  .மறுநாளிலிருந்து அவ்வப்போது அனைவரின் பதிவுகளை படித்து அனைவருக்கும் கருத்துக்கள் தர வேண்டுமெனவும் அப்போது நிஜமாகவே  நினைத்தேன். 

தீபாவளி நல்லவிதமாக கழிந்த அன்று மாலை அனைவரும் குடும்பத்துடன் வெளியே செல்லலாம் என சென்றோம்.(ஆசைப் பேய் என்னையும் உடன் அழைத்துச் சென்றது.) மல்லேஷ்வரம் பகுதியில் சாலையோர கடைகளையும், மக்கள் வெள்ளத்தையும் கண்டு களித்தபடி செல்லும், போது. ஒரு மேடான பகுதியில், (ஸ்பீடு பிரேக்கர்) கால் இடறி நான் கீழே விழுந்ததில் இடது காலில் நல்ல அடி. இத்தனைக்கும் நான் ஒன்றும் அத்தனை ஸ்பீடாக நடக்கவில்லை.:)))) (இப்படி எத்தனை தடவைதான் விழுந்து  புதையல் எடுக்க வைப்பானோ இறைவன். தெரியவில்லை.) சாலையில் விழுந்த அவமானத்துடன் எழுந்து கால் உதறி அருகிலிருந்த ஒரு கடையின் படிகளில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்து மெள்ள நடந்து எப்படியோ வலி பொறுத்தபடி, சற்று தொலைவில் நிறுத்தியிருந்த காரில் ஏறி வீடு வந்து விட்டேன். இரவு முழுவதும் இடது கால் வலி பின்னியெடுக்க தூங்கவேயில்லை .( தீபாவளி சிவராத்திரியாக மாறி விட்டது. :))))) மறுநாளிலிருந்து  குழந்தைகள் அனைவரிடமும் காட்டிக் கொள்ள இயலாமல், நான் தவித்த தவிப்பை அந்த இறைவன் ஒருவனே அறிவான்.  (அதற்குரிய மாத்திரை மருந்து என் இயல்பான உடல்நலத்திறகு வேறு பக்கவிளைவுகளை தரும் என்பதால் நானோ எப்போதுமே மருத்துவரிடம் செல்ல அஞ்சுகிறவள்.) குழந்தைகள் ஒரு வருட இடைவெளியில் சந்தோஷமாக ஊருக்கு வந்திருக்கும் போது இப்படியாகி விட்டதே என்ற வேதனை மனதை வாட்ட அதன் பின் வந்த நாட்கள் அதே வலியுடனே பறந்தன. அப்படியும் என்னவோ நொண்டியபடி வீட்டு வேலைகள் நடந்தேறின. அதில் அவர்களுடன் இறைவன் ஆணைப்படி நாங்களும் செல்ல வேண்டிய இறைவழிப்பாட்டிற்கான ஊர்களுக்கு (எங்கள் குலதெய்வம் கோவில் உட்பட) செல்ல முடியாததால் அவர்கள் மட்டும் கிளம்பிச் சென்றனர். நான் எப்போதும் போல், வலி நிவாரண தைலங்கள்,வெந்நீர் ஒத்தடமென தந்தபடியும், காலை வலியினால் நொண்டியபடியும் வீட்டில் நடமாட்டமாக கழி(ளி)த்துக் கொண்டிருக்கிறேன். இதில் உங்களனைவரின் பதிவுகளை அதன் பின் தொடர்ச்சியாக படிக்கவும் இயலவில்லை. (வலிகள் மிகுந்த மனது தான் காரணம்.) மன்னிக்கவும். 🙏. 

இப்போது டிசம்பர் 12 வந்தால் ஒரு மாத காலமாகும் அந்த இடது கணுக்கால் வலி வீக்கம் குறைந்து சற்று மட்டுப் பெற்று வருகிறதென்றாலும், இன்னமும் "நான் உள்ளேன் அம்மா" என தினமும் ஆஜர் கூறியபடி உள்ளது. 

இவ்வாறு என்னையும் உடன்  அழைத்துச் செல்ல முடியாததால் மன வருத்தமடைந்திருந்த மகன் மருமகள் இருவரும் அவர்களின் இறை சுற்றுலா திட்டத்தில் இப்போது வேறு ஒரு மாறுதல் பிளான் செய்து இன்னமும் அவர்கள் செல்லாத ஊர்களுக்கு திருச்சியிலிருந்தபடி அழைப்பு விடுத்திருக்கின்றனர்." அப்போது வேண்டாமென தடுத்த இறைவன் இப்போது அவர்கள் வாயிலாக இன்னமும்  விடாமல் அழைக்கிறான். " என்ற எண்ணத்தில் நாங்களும் இங்கு  பிராயணத்திற்கு யத்தனம் செய்கிறோம். இனி அனைத்தும் நல்லவையாக நடந்திட இறைவன் அருள வேண்டும். எப்படி இந்த  பிராயணங்களை சந்தித்து இறைவனை காணப்போகிறேன் என மனது சிறிது  சஞ்சலபட்டாலும், "இறைவன் என்னை அவன் ஆணைப்படி நடத்துவான்" என்ற நம்பிக்கையும்  உள்ளது. 🙏. 

இப்படியாக இந்த வருட ஆரம்பத்தில், வலது காலில் பட்ட  அடியுடன் ஆரம்பித்து, இறுதியிலும் இடது கால் அடியுடன் இந்த ஒரு வருட காலம் நகர்கிறது. கொஞ்ச வருடங்களாக இப்படி கால்களில் அடிபடுவது ஒரு தொடர் கதையாகவம் உள்ளது. வரும் புத்தாண்டிலிருந்தாவது இந்த தொந்தரவுகள் நீங்கிட இறைவன் அருள்வான் என நினைக்கிறேன். நம்புகிறேன். 

இதுவும் உங்கள் அனைவருடனும் பகிரும் ஆசையால் எழுந்த பதிவுதான். மனதிற்கு பிடித்த நட்புகளிடம் மனம் விட்டு பேசினால் ஒரு மனபலம் வருமல்லவா...? 

அனைவருக்குமே. 

தேக பலம் தா.. 

பாத பலம் தா.. 

என்று இறைவனை வேண்டியபடி உள்ளேன். 

"நமோ, நமோ நாராயணா" பாடல் தினமும் மனதில் ஒலித்தபடி உள்ளது. 

அதில் வரும், "நலம், துயர் என்பதெல்லாம் லீலையே ஹரிநாராயணா" என்ற வரிகள் எத்தனை சாஸ்வதமானவை. எனக்குப் பிடித்த பாடல் இது. 

வரும் 24 ம் புத்தாண்டு நல்லபடியாக பிறந்து அனைவரையும் மகிழ்விக்க பிரார்த்தனைகள் செய்கிறேன். 

பி. கு. இதை படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். இந்தப் பதிவிற்கும், தங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் உடனுக்குடன் பதில் தர சற்று தாமதமாகும் எனவும் சொல்லிக் கொள்கிறேன்.(அப்படியே தந்து விட்டால் நல்லது. அனைத்தும் "அவன்" லீலையே..) அதற்கும் சேர்த்து தங்கள் அனைவரின் மன்னிப்பை கோறுகிறேன்🙏. . 

என்னை மறவாத அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் எப்போதும் என் பணிவான நன்றிகள்.

Sunday, November 5, 2023

இடுக்கண் வராததற்காக நகுக. ...

"இடுக்கண் வருங்கால் நகுக.."என்பது ஐயன் வாக்கு. துன்பங்கள் வரும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ( இந்த இடுக்கண்ணினால், உடலை விட உள்ளம் எவ்வளவு ரணமானாலும், அதை சுலபமாக கடத்திக் கொண்டு கடந்து வருவதைத்தான் "சாதாரணம்" என்ற சொல் உணர்த்துகிறது.) ஒரளவு சிரித்த முகத்தோடு (மனபான்மையோடு) இருந்து விட்டால், மனதின் பாரங்கள் நம்மை அதிகமாக அழுத்தாமல் அது பாட்டுக்கு தானாகவே வந்த வழியோடு அகன்று விடும் என்பதே அதன் பொருள். 

இந்த துன்பங்கள் என்பது பொதுவாகவே சராசரியாக மனிதர்களின் வாழ்வில் வருவது இயற்கைதான். ஒரு மனிதர் இன்பங்களை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்தால், அவர்களுக்கு அவர்களின்  வாழ்வு போரடித்து விடுமென்றுதான், இறைவன் துன்பங்களையும் நடுநடுவே சற்று எட்டிப் பார்க்க வைக்கிறார். இரண்டாவதாக அப்போதுதான் "அவன்" நினைவும் ஒரு மனிதருக்கு இருந்து கொண்டேயிருக்கும் என்ற உறுதியான எண்ணத்தினால்தான். இல்லையெனில், "அவனை"ப்பற்றிய நல்ல சிந்தனைகள் "அவன்" படைத்து உருவாக்கிய மனிதரின் மனதில் உதிக்காமலே போய்விடும் என்னும்படியான அப்பழுக்கில்லாத சுயநலத்தினால், தான் படைத்த மனிதரை  பற்றிய பச்சாதாபத்தினால், ஒரு மனிதருக்குள் நற்சிந்தனைகளை கற்றுத்தர/ மற்றும் தோற்றுவிக்க... (அதில் "அவனே" சிலசமயம் சோர்ந்து தோற்று விடலாம்.:)))).) இப்படியான பல காரணங்களையும் கூறலாம்

ஒரு நல்வழிக்காக நெருங்கிய உறவில் நம் பேச்சை ஒருவர் கேட்கவில்லையெனில், "சாம, தான, பேத தண்டத்தையும் உபயோகித்து விட்டேன்.இன்னமும் அவர் நல்லதிற்காக  நான் பேசுவதை காது கொடுத்து கேட்கவில்லை." என அவரைப்பற்றி முடிவில் அங்கலாய்ப்போம். 

சாம, தான, பேத, தண்டம் என்றால், எனக்கு தெரிந்தவரை ஒரு விளக்கம் சொல்வேன். 

சாம வேதம் இனிமையானது. இறைவனை இனிமையான பல கானங்கள் கொண்டு கூறிப் புகழ்ந்து மயக்குவித்து பாடி நம் வேண்டுதலுக்காக, உள்ளத்தின் மகிழ்வுக்காக ஆராதனை செய்வது. அதைப்போல் நம் சொல் பேச்சை கேட்பதற்காக, எதிராளியை புகழ்ந்து பேசி அவரை நயமாக நம் பேச்சினால் மயக்கி நம் பேச்சை கேட்க வைப்பது. 

தானம் என்றால் நம்மால் இயன்றதைச் வாங்கித் தந்து அந்தப் பிறரை மகிழ்விப்பது. அதன் மூலமாவது அவர் நம் பேச்சுக்கு கட்டுப்படுகிறாரா என சோதிப்பது. 

பேதம் என்றால், நமக்கும் எதிராளிக்கும் இடையே பல அபிப்பிராய பேதங்களை வரவழைத்து அதன் மூலம் நமக்கு அவரை சாதகமாக திசை திருப்ப வைத்து பின் பக்குவமாக பேசி சமரச சமாதானங்களின் மூலம் அவரை நல்வழிப்படுத்துவது.

தண்டம் என்றால் இத்தனைக்கும் நமக்கு வசப்படாதவரை ஒரு அடியாவது (நம் கைகளினாலோ, இல்லை ஒரு கோலினாலோ அடித்து விடுவது, இல்லை அடிப்பது போல் பாவனை செய்வது.) வைத்து விடலாம் என அடிக்கும் நிலைக்குப் போவது. அதிலாவது அவர் திருந்தி நாம் சொல்லும் பல நல்ல வழிகளுக்கு உடன்படுகிறாரா என்று முயற்சிப்பது. அதாவது நம் கோப எண்ணங்கள் இந்த நாலாவது கட்டத்தில் நம்மையும் கேட்காமல், இறுதியில் தன் முடிவுக்கு தலை வணங்கி, நம்முள் உதிப்பது. 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எவ்வளவு செல்வம் இருந்தாலும், அங்கு ஊழ்வினைகளின்பால் எழும் நோய்கள் ஏதுமின்றி உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதும், அதை சார்ந்துள்ள எண்ணங்களும் நன்றாக இருக்கும். 

ஒரு தலைவலி அல்லது காய்ச்சல் வந்தாலே அதன் மூலம் படும்பாடு அது வந்தவர்களுக்குத்தான் தெரியும். அதனால்தான் "தலைவலியும், திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்ற அனுபவ பழமொழி உருவானது என்பதையும் யாவரும் அறிவோம். 

ஒரு காய்ச்சலே அதன் பல விதங்களில மனிதரை அவதிக்குள்ளாக்கும் போது, அம்மை நோய் எத்தனைப்பாடாக படுத்தும் என்பதும் யாவரும் அறிந்ததே...! 

அந்த காலத்தில் ஒரு வீட்டில் ஒருவருக்கு அம்மை நோய் கண்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அம்மனை மனதார வழிபடுவது. "அவள்" பத்திரமாக கருணையுடன்  நோயுற்றவரை விட்டு இறங்கி செல்ல வேண்டுமென பிரார்த்திப்பது. அம்மனின் அடையாளமாக வேப்பிலையை (வீட்டு வாசல் நிலைப்படியில் கொத்தாக வைப்பது முதல்) பக்தியுடன் உபயோகிப்பது, அந்த நேரத்தில், வீட்டிலுள்ள மற்றவர்கள் வேறு எந்த வீட்டுக்கும் செல்லாமல் இருப்பது,. அக்கம் பக்கம் உறவாக இருப்பினும், அவர்கள் வீட்டிலிருக்கும் உணவுகளை அம்மை போட்டவருக்கு கொண்டு வந்து தராமல் இருப்பது, வீட்டில் அம்மை போட்டவர்களுக்கு தலைக்கு தண்ணீர் விடும் வரை நமக்கு நெருங்கிய உறவினர்களுக்கு கூட கடிதம் மூலமாக செய்தியை தெரிவிக்காமல் இருப்பது, தம் வீட்டில் செய்யும் உணவுகளையே கவனத்துடன் எண்ணெய் அதிகம் விடாமல், கடுகு மிளகாய் தாளிக்காமல், காரம், புளிப்பு, உப்பை குறைத்து, பழங்களுடன், காய்கறிகளையும், மற்ற உணவுகளையும், சூடான நிலையில் இல்லாமல், நன்கு ஆறிய பின் அவருக்கு சாப்பிட தருவது, வாசனைகள் நிறைந்த பூக்கள், சோப்பு, முகப்பூச்சுகளை எண்ணெய் போன்றவற்றை வீட்டிலுள்ள மற்றவர்களும் உபயோகிக்காமல், இப்படியெல்லாம் ஒரு விரதம் மாதிரி, கவனத்துடன் இருப்பதென, எத்தனை எத்தனை கண்டிப்புக்கள்... .! இன்னும் "அவள்" மேல் வீட்டிலுள்ளவர்கள் கொள்ளும் ஆயிரம் நம்பிக்கைகளுக்காக  அவரை (அம்மை நோய் கண்டவரை)  அந்த அன்னை கண்டிப்பாக பத்திரமாக  நலமடைய செய்து விடுவாள். 

இப்போது எல்லாவற்றிறகும்,  மருந்து மாத்திரை என வந்து விட்டது போல், இதற்கும் வைத்தியங்கள் என்ற விஞ்ஞான வளர்ச்சி வந்து விட்டது. அவரவர் மன இயல்புபடி காலங்களின் மாறுதல்களுக்கு மக்கள் அடியணிய ஆரம்பித்து விட்டனர். அக்கால சில  திரைப்படங்களில் கூட இந் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி நம்முள் ஒரு தெய்வீக பயபக்தியை ஏற்படுத்தியிருந்தும், விஞ்ஞானம் இயல்பாகவே வென்று விட்டதோ என்ற ஐயம் சிலசமயம் நிறையவே  வருவதை தடுக்கவியலவில்லை. 

என்னடா இவள்..! சம்பந்தமில்லாமல் ஏதேதோ எழுதுகிறாளே என எண்ணம் வருகிறதா?  வேறு ஒன்றுமில்லை...! இந்த கொரோனா வந்து முடிந்த பிறகு, குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் செல்வதில் ஒரு பிணக்கு வந்து விட்டது. ஆனால் அதன் பின் வந்த ஒரு வருடத்தில் குழந்தைகள் பழைய பழக்கத்திற்கு வந்து விட்டனர். சிலர் மனதில் ஏதோ சுணக்கமுடன் பெற்றோருடன்  ஒத்துழைக்க தயங்குகின்றனர். அது நம் வீட்டு குழந்தையாய் இருக்கும் போது நம் மனதுக்கும் தீர்க்க முடியாத ஒரு வேதனைதான். தினம் தினம் ஒரு வகையான  போராட்டந்தான்..!  என்ன செய்வது? "அவன்" தரும் பயன்களை அனுபவிக்கத்தானே இந்தப் பிறவி...! அதில் சிறிதேனும் நன்மை பயக்கும் வண்ணம் மாறுதல்கள் தந்து  விட தினமும் "அவனிடமே" நிறைய பிராத்தனைகள்.. என மூன்று மாதங்களாக நாட்தோறும் க(ந)டந்து வந்த/ வரும்  எங்கள் வாழ்வில், அது  போதாதென்று, இங்கு வந்திருந்த பெரிய மகனுக்கும், அவருக்கு சற்றே குணமாகும் தருணத்தில், அடுத்து மகளுக்கும், அன்றே அவள் மகளுக்குமென அனைவரும் அம்மை நோய்க்கு    (chickenpox), ஆளாகி, அவர்கள் பத்து, பதினைந்து நாட்களாகும் மேலாக  படும் அவஸ்தைகளையும் பாரென்று இறைவன் கட்டளையிட வாழ்வே மாயமென்ற சிந்தனைகள் வலுப்பெற்று தத்தளித்த காலங்கள் இப்போதும் மறக்க முடியாத காலங்கள் ஆகி விட்டன.

இதில் உலகமாதா அன்னை வீட்டில் இருப்பதை கண்டு, வருடந்தோறும் கலகலப்பாக வீடுகள்தோறும் வந்து நம்முடைய உபசரிப்புகளை ஏற்கும் கடவுளார்களாகிய, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ விநாயகர் என இந்த தடவை எவரும் எங்கள் வீட்டிற்கு வரவில்லை.  

இதை நான் உடனே எழுதும் (இதையும் அப்போதே எழுத ஆரம்பித்து இப்போதுதான் முடிக்கிறேன்:))  ) போதிருந்த மன இறுக்கத்திலிருந்து மீண்டு இப்போது இங்கு  (பதிவுலகிற்கு) வந்தபின் சற்றே குறைந்துள்ளதெனினும், இன்னமும் இயல்பாக இருக்க, இயல்பாக எப்போதும் போல் நீ.. ண்.. ட கருத்துரைகளுடன் அனைவரின் பதிவுகளுக்கும் உடனே வர இயலவில்லை. (அப்படியும் நீண்ட கருத்துக்களுடன் வரத்தானே செய்கிறீர்கள் என நீங்கள் அனைவரும் மனம் அலுத்தபடி நினைக்கலாம். :))) மன்னித்துக் கொள்ளுங்கள். அது என் மாற்ற முடியாத ஒரு பழக்க தோஷமாகி விட்டது.) இதில் எழுதி வைத்து இன்னமும் முடிக்காமல் இருக்கும் பல பதிவுகளும், எழுத நினைத்திருந்த பல பதிவுகளாகிய எழுத்துக்களும், என்னுடனேயே தங்கி விட்டன./ தங்கி கொண்டிருக்கின்றன. ஆனால், குறிப்பாகச் சொன்னால் படிக்கும் அந்த "இடுக்கண்"களிலிருந்து நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலமாக தப்பி விட்டீர்கள்தானே:))) அதனால்தான் இந்தப் பதிவுக்கு இந்த  தலைப்பு..:)))) 

இருப்பினும், இந்த மாதிரி எப்பவாவது நானும் வருவேன் எனவும் . (அனைவரின் சிரிப்பிற்கும் இடையூறாக) சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால், பதிவுலக நட்புகளிடம் இப்படி மனம் விட்டு பேசினால், அதற்கிணையானது வேறு ஒன்றுமில்லை அல்லவா? வலையுலகில் இப்படிபட்ட சிறப்பான நட்புகளை தந்ததற்கே நான் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.🙏. 

நடுவில் எல்லோருக்கும் வீட்டு விஷேடங்கள் (கிருஷ்ண ஜெயந்தி, to சரஸ்வதி பூஜை) என வந்து கொண்டிருந்ததால், இதையும்  படிக்கும் சூழ்நிலை உண்டாக்கி யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாமென்று நினைத்தேன்.(அதற்குள் தீபாவளி விரைவில் வர யத்தனமாகி கொண்டிருக்கிறது.) அதனால் நீண்ட மாதங்கள் கழித்து வெளியிட்டிருக்கும்  இந்த என் பதிவை (சொ.க, சோ. க) பொறுமையுடன் படிக்கும் உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Sunday, June 11, 2023

மெய்யுருக வைக்கும் கானங்கள்.

அன்னமய்யா என்ற திரைப்படத்தில் வெங்கடேச பெருமாளின் நித்திய திருக்கல்யாணத்தை வர்ணித்தும், ஊஞ்சலில் பெருமாளை வைத்தும் பாடிய இப்பாடல் மனதை கவரும் ஒன்று. நடிகர் நாகார்ஜுன் அப்படியே அந்த அன்னமாச்சார்யா கதாபாத்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்திருப்பார். அவரின் நடிப்பில் இந்தப் படத்தை பன்முறை நான் பார்த்து விட்டேன். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இனிக்கும் தேன். இதில் இறையருள் பெற்ற அன்னமாச்சார்யா அவர்கள் இயற்றிய கீர்த்தனைகள் பலவும் இடம் பெற்றுள்ளது. பாடகர் எஸ். பி. பி அவர்களின் இனிய கம்பீரமான குரல் அந்தப் பாடல்களுக்கு நல்ல வளமாக இருந்து இனிய தேனின் சுவைகளை அதிகரிக்கச் செய்கிறது. சிறந்த நடிப்பு, இனிமையான பாடல்கள் என இப்படத்தில் அனைவருக்குமே ஸ்ரீமன்நாராயணன் பக்தியை ஒரு வரமாகவே தந்திருக்கிறார். 🙏. 

ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ.🙏 .


இந்த அன்னமய்யா  தெலுங்கு படம் அன்னமாச்சார்யா  என்று தமிழிலும் வந்துள்ளது. அதே பாடல் தமிழிலும் மெய்யுருக வைக்கிறது. இதையும் கேட்டு ரசிக்கலாம். 


அதே போல் ஹதிராம் என்ற பெருமாளின் பிரியமான பக்தரை வைத்து எடுக்கப்பட்ட ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் நம் மெய்யுருகச் செய்யும் வண்ணம் வந்த ஒரு திரைப்படம். இதிலும் நடிகர் நாகார்ஜுன் தம் நல்ல தெய்வீகமான நடிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம் தந்துள்ளார். பாடல்கள் இதிலும் மெய்யுருகும் வண்ணம்தான். இந்தப்பாடலும் வெங்கடேச பெருமாளின் நித்ய கல்யாணத்தை தானே முதலில் நடத்தி வைக்கும் விதமாக காட்டியுள்ளது. இது எஸ். பி. பியின் மகன் எஸ். பி. சரண் அவரது இனிய குரலில் பாடியுள்ளார். அப்பாவின் குரலுடன்  ஒத்துப் போகிற மாதிரியான இவரது குரலும் எனக்குப் பிடிக்கும். இரண்டுமே கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். 🙏. 

இதே படமே தமிழிலும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் வந்துள்ளது. கீழே உள்ள இந்தப்பாடல தமிழ் பாட்டு . இதுவும் எஸ். பி சரண் அவர்கள்தான் இனிமையாக பாடியுள்ளார். இதையும் பக்திபூர்வமாக கேட்டு ரசிக்கலாம். 

நீங்களும் இந்தப்பாடல்களை அனேக முறைகள் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இங்கும் கேட்டு மகிழ வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 🙏. அனைவருக்கும் நன்றி🙏.

ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ. 🙏. 

Wednesday, May 10, 2023

வாழையும், சேனையும்.

பொங்கலுடன் எரிசேரி. 

நம் நாட்டில் சிறந்த முக்கனிகளில் இந்த வாழைப்பழமும் ஒன்று. பொதுவாக வாழை மரம்  சம்பந்தபட்ட அனைத்தும்  அதன் பயன்பாடுகளில அனைவருக்கும் உடம்பிற்கு பல நல்லதையும் செய்யும். ஒவ்வாதவர்களுக்கு சில உபாதைகளுக்கான பாதையையும் காட்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாயுதொந்தரவு உள்ளவர்களுக்கும், இனிப்பு தடை செய்யப்பட்டவர்களுக்கும் முறையே வாழைக்காய், பழம் முதலியவை சில தொந்தரவுகளைத் தரும். 

ஒவ்வொரு வீட்டின், அல்லது கோவிலின் அனேக விஷேட தினங்களில் இந்த வாழை மரந்தான் அனைவரையும் வரவேற்கும் நல்ல மனதுடன் வாசலில் கட்டப்பட்டு அதன் சிறப்பை பறைசாற்றிக் கொள்ளும் பெருமையை பெற்றது. 

வாழைப்பழம் கனிகளில் சிறந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது.  எக்காலத்திலும் தடங்கலின்றி கிடைப்பதால், இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனங்களில் இக்கனி முதலிடம் பெறும் பாக்கியத்தை பெற்றது. 

வாழைக்காய் வகையில் கறி, கூட்டு, புளிச்ச கூட்டு, வறுவல் துவையல் பொடிமாஸ் எனப்படும் கறி போன்றவற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தவிரவும் வாழை இலையில் சாப்பிட்டு பழகியவர்கள் அதை விட சிறந்த தட்டுகளில் பரிமாறினாலும், இவையெல்லாம்  இதற்கிணையாக (வாழை இலைக்கு இணையாக) வருமா என்று கூறுவார்கள். அந்தளவிற்கு இலையில் சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் கூடுதல் சுவை பெறும். 

வாழைப்பூ அதன் இயல்பான துவர்ப்பு சுகர் அதிகம் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்து. தாராளமாக  இதை மதிய  உணவுடன் கறி, கூட்டு, பருப்புசிலி, வடை, அடை என செய்து சாப்பிடலாம். இதுவும் சில சமயங்களில் அதனுடன் சேரும் பொருட்களால் வாயு தொந்தரவை சிலருக்கு ஏற்படுத்தும். (எதுவுமே, அமிர்தமேயானாலும், அளவுக்கு மிஞ்சினால் அது விஷந்தானே...! . 

வாழைத்தண்டிலும் அது போல் சிறந்த பலன்கள் உள்ளது. அதிலேயும் கறி, கூட்டு, உசிலி, அவியல் தோசை என அனேக விதமான உணவு வகைகள் செய்து சாப்பிட உடம்பிற்கு நல்லதைச் செய்யும் தன்மை கொண்டது. இப்படி வாழை மரத்தை நுனி முதல் அடி வரை நமக்கு பயனுள்ளதாக அமையுமாறு இறைவன் அதை தோற்றுவித்துள்ளான்

இன்று வாழைக்காயுடன், காய்கறிகளில் ஒன்றான சேனைக் கிழங்கையும் (அந்த காலத்தில் மன்னர் ஆட்சியில் பலம் கொண்ட ஒரு படை என்பது. சேனை, படைக்கு தலைமை தாங்குபவர் சேனாதிபதி என்ற பெயர்களைப் போலவே இதற்கு யார் முதலில் சேனைக்கிழங்கு என்ற பெயர் வைத்தார்களோ தெரியவில்லை..) சேர்த்து செய்யும் உணவாகிய எரிசேரி. ( இதற்கும் இந்தப் பெயரை யார் வைத்தார்களோ?) இது மலையாள கரையோரம் அன்றிலிருந்து இன்றுவரை உலா வந்த / வரும் சிறப்பு உணவுகளில் ஒன்று. . 

வாழைக்காயைப் போல இந்த சேனைக் கிழங்கிலும் பல நன்மைகள் உண்டு. இந்த இரண்டையும் சேர்த்து சமைக்கும் போது அது ஒரு ருசி. இதிலும் (சேனைக்கிழங்கிலும்) கறி, கூட்டு, சாம்பார், பிட்லை, வறுவல் என விதவிதமாக செய்யலாம். அவியலில் இவை இரண்டும் (வாழை, சேனை காய்கள்) எவ்வித மனவேறுபாடின்றி சேர்ந்து கொள்ளும். 

வாழைக்காய் எளிதில் வெந்து விடும். மாறாக சேனைக்கிழங்கு சில சமயம் அடம் பிடிக்கும். குக்கரில் வைத்தால் கூட அதன் மனது  சிலசமயம் கல் மனதாகவே இருக்கும். சில சமயம் வெறும் கடாயில் அரிந்து போட்டு வேக வைத்தாலும், வெந்து விடும். பொதுவாக கொஞ்சம் சிகப்பு கலர் கலந்து இருக்கும் சேனைகள் இந்த மாதிரி அடம் பிடிக்கும். அதனால் வெள்ளை மனதுடையவையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். சமயத்தில் அது நன்றாகவே வெந்து எரிசேரியில் சேரும் போது  உருதெரியாமல் கலந்தும் விடும். 

இப்படி குழைந்து வெந்து விடும் சேனைக்கிழங்கு மசியல் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கு (இதை மட்டும் வைத்து செய்யும் சேனை மசியல்) மசியல் புளி விட்டும், இல்லை இறுதியில் எலுமிச்சைபழம் சேர்த்தும் பண்ணலாம். சாதத்துடன் கலந்து சாப்பிட அதன் ருசி நன்றாக இருக்கும். ஓரிரு சுட்ட அப்பளங்களை இதன் தொட்டுகையாக இருக்கடடும் என இது முழுமனதுடன் சம்மதித்து விடும். (இப்போது இங்கு சில சாமான் மால்களில் இந்தச் சேனைக் கிழங்கை தோல் நீக்கி  துண்டுகளாக்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.) 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்கள். 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் கடுகு மட்டும் தாளித்து கொட்டியுள்ளேன். 


இது குக்கரில் சமர்த்தாய் வெந்து காத்திருக்கும் சேனைக்கிழங்கு துண்டங்கள். 


இது வறுத்து அரைக்க காத்திருக்கும் மசாலா சாமான்கள். 

இது எரிசேரி. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்கள் பண்ணும் போது எடுத்தவை.  ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் குழப்புமோ என்னவோ? இது பண்ணும் போது தொடர்ச்சியாக எடுத்த நிறைய புகைப்படங்கள் பழைய கைப்பேசியிலிருந்து மாற்றும் போது காணமல் போய் விட்டது. 

முதலில் சேனைக் கிழங்கின் தன்மையை பொறுத்து அதை கொஞ்சம் பெரிதான துண்டங்களாக்கி குக்கரிலோ தனியாகவோ வேக வைத்துக் கொள்ளவும். பின் வாழைக்காயை அதே அளவு பெரிய துண்டுகளாக்கி தனியே வேக வைத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். 

ஒரு கடாயில் அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி சிவப்பு மிளகாய், ஒரு ஸ்பூன்  தனியா, உ. ப, க. ப ஒவ்வொரு ஸ்பூன் இவற்றுடன் மிளகு ஒரு ஸ்பூன் என எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் அரை மூடி துருவிக் கொண்டு அதையும் கொஞ்சம் வாசனை வருமளவிற்கு வறுத்துக் கொண்டு நன்கு ஆறியதும், கொஞ்சம் கறிவேப்பிலையையும்  கடாயில் அதனுடன் சேர்த்து  வறுத்து உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைத்து அந்த விழுதை வேக வைத்திருக்கும் காய்களுடன் சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு கொதிக்க விட்டு, (இதற்கு மேல் தேங்காய் அதிகம் சேர்த்தால் பாதகமில்லை என்பவர்கள் இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பூவை நன்கு வறுத்து இறுதியில் அதனுடன்  சேர்த்துக் கொள்ளலாம்.) (அப்போது இந்த எரிசேரி நல்ல மணம் பெறும். ஹா ஹா. ) கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து இறுதியில் ஒன்று சேர கொதித்து வருகையில், மூன்று பெரிய ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கிவிடலாம். இப்போது இதன் வாசனை கண்டிப்பாக உடனே நம்மை உணவருந்த அழைக்கும். 


இது மஞ்சள் தூள் சேர்த்த பொங்கலுடன் வறுத்த சாமான்களை சேர்த்த படம். 

மதியமோ, இல்லை, பசிக்கும் போதோ வெறும்  சாதம் மட்டும் வைத்தால், மீதமிருக்கும் இந்த எரிசேரி ஒரு கை கொடுக்கும் என்பதால், எப்போதும் எங்கள் வீட்டில் இந்த பொங்கலுக்கு உடன் துணையாக வரும் சட்னிகள், சாம்பார், உ. வடை முதலியவை மறுபேச்சின்றி  சத்தமின்றி ஒதுங்கிக் கொண்டன. (ஆனால், எப்போதும் அதன் துணையாக வருபவை அன்று பற்களை கடித்தபடி பழி வாங்கும் மன நிலையில் உள்ளதென்பதும் எனக்கு புரிந்தது. :))) 

பி. கு. இன்னமும் இவை இரண்டின் நன்மைகள் (அதுதான் காய்கள் இரண்டின் நன்மைகள் ஏ முதலான விட்டமின், உடலிலுள்ள குறைகளை போக்கி நிறைகளை அதிகரிக்கச் செய்வது..) பற்றிய குறிப்பை இதனுடன் இணைக்க சேகரித்தேன். ஆனால், ஆகா.. ஒன்றுமில்லாத இந்தப் பதிவு இவ்வளவு நீ.. ள.. மா.. என்று பதிவின் நீளம் கருதி ஒருவரும் பொறுமையுடன் படிக்க வில்லையென்றால் என்ன செய்வதென்று அது எதையும்  இணைக்கவில்லை

இப்படி எத்தனைதான் நன்மை குறித்த குறிப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும், பயன்படுத்தும் அவரவர் உடல் நிலைக்கேற்றபடிதான் அவைகளும் நம்முடன் ஒத்துழைக்கும் இல்லையா..? 

அறு(சு)வைப் பதிவை படிக்கப் போகும் அனைவருக்கும் அன்பான நன்றிகள். 🙏.

Wednesday, May 3, 2023

சந்தேகம்+கோடு=சந்தோஷ கேடு

அந்த அடர்ந்த அமானுஷ்யம் மனதுக்குள் எப்போதாவது சற்று  லேசான திகிலை உண்டாக்கியது. ஆனால் அதை விட மனதின் வெறுமை திடமாக இருந்ததில், இவையெல்லாம் வெகு  சாதாரணம்.... இதையெல்லாம்  வென்று விடலாமெனவும் ஒரு பட்சி உள்ளுக்குள் கூவி விட்டு சென்றது.

"என்ன சொல்லி விட்டாள் இவள்....! என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க எப்படி இவளுக்கு மனது வந்தது.? புலம்பி புலம்பி அலுத்துப் போன வார்த்தைகள் மறுபடி மறுபடி ஒரு குழந்தை ஊஞ்சலில் ஏறுவது போல ஆடி விட்டு,ஆட்டி விட்டு சென்றது. 

வீட்டிற்கு திரும்பிச் செல்லவே பிடிக்கவில்லை. என்ன இருக்கிறது அந்த  வீட்டில்...? ஒவ்வொரு கல்லையும், மண்ணையும் பார்த்துப் பார்த்து கட்டும் போது இருந்த மகிழ்ச்சி கோட்டை ,.. தனக்காக ஒருத்தி வந்து அந்த வீட்டை தான் நேசித்தது போல் தன்னையும் நேசித்து, தன்னை கலகலப்பாக்குவாள் என்ற மனக்கோட்டை இடிந்து விழுந்து பல வருடங்களாகி விட்டது. 

நண்பனின் மனைவி என்ற அறிமுகத்தில் எப்போதோ திருமணத்திற்கு முன் மாலினியிடம்  ஒரு சொந்த சகோதரி போல் பேசி பழகி அவர்களுக்கு உதவிகள் செய்த  அந்த பழைய விஷயங்களை  இவளிடம் ஒளிவு மறைவில்லாமல், ஒரு குழந்தையின் மனத்தோடு சொன்னதிலிருந்து இவளிடந்தான் என்னவொரு மாற்றங்கள்....! 

முதலில் அதைப்பற்றி சகஜமாக வார்த்தைகளை துவக்கி கேலி செய்து பேசியவள்  நாளாவட்டத்தில், "அதுதான் உண்மை போலும்....! அதனால்தான் தன்னிடம் இவன் இன்னமும் நெருங்கி உரையாட கூட தவிர்ப்பதாகவும்," இன்னமும் என்னென்னவோ பேசக் கூடாத வார்த்தைகள் அவள் நாவிலிருந்து வந்து விழுந்ததும் இவன் தினமும் தவித்துப் போனான் என்பது உண்மை. 

தன்னை சந்தேகத்துடன் அவள் கூர்மையான கத்தி கொண்டு  கிளறுவது தினமும் ஒரு  வாடிக்கையானதில், அவளிடம் முன்பிருந்த நெருக்கத்தை இவனால் காட்ட இயலவில்லை என்பதை இவன் அவளுக்கு புரிய வைத்து விளக்கும் போதெல்லாம் சந்தேக கோடுகள் அவளிடமிருந்து குறுக்கும் நெடுக்குமாக இவனுக்கும், அவளுக்குமிடையே நிறைய விழுந்து அவளை  முகம் கூட பார்க்க முடியாமல், பிடிக்காமல் மறைக்கவே தொடங்கின.. 

அலுவலக விடுமுறை நாட்களில் மனம் அமைதியுற இந்த அமானுஷ்யம் இவனுக்கு தேவையாக இருக்கவே அடிக்கடி இங்கு வரலானான். இந்த மலைப்பாங்கான இடத்துக்கு வரும் போதெல்லாம் இவன் ஏதோ மனதுக்குப் பிடித்தமான இடத்திற்கு வந்ததைப் போன்று உணர்ந்தான். காரணங்களை கூறி மனம் விட்டு பேசவும் இவனுக்கு சுற்று வட்டாரத்தில் அதிக நட்புகளில்லை. அப்படியே பேசினாலும், இவனிடமிருக்கும் ஒரு சுணக்கத்தை காரணம் காட்டி இவனை தவிர்க்கும் ஆழமில்லாத, வேரில்லாத நட்புகள். 

பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்த நிலையில் நெருங்கிய  உறவுகளும் சத்தமின்றி  ஒதுங்கிப் போய் இருந்ததினால், மனைவியின் உறவை மட்டுமே பெரிதாக நினைத்து திருமணம் செய்த நாள் முதலாய் வாழ்ந்தும், மனதின் நிறைந்திருந்த உண்மை நிலையை அன்றொரு நாள் அவள் அழுத்தி கேட்ட விதத்தில் இவன் புலப்படுத்தியதில், வாழ்க்கை இப்படி  திசைமாறிப் போனது. 

நினைவலைகளுக்குள் இறுக்கமாக இருந்தவனை இளங்காற்று கொஞ்சம் சிலுசிலுப்பாக்கியது. தன்னிலை உணர்ந்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டான். யாருமில்லாத அந்த தனிமை, அந்த ஒரு அத்துவான இடம் எதுவும் மனதில் படியவில்லை. பொதுவாக அந்த இடம் எவருமே நீண்ட நேரம் வந்தமர்ந்து விட தயங்கும் மனப்பான்மையை தருவதுதான். சுற்றிலும் சறுக்கலான ஏற்றமுடனும் சில இடங்களில் இறங்கி பள்ளத்தாக்கை நோக்கி ஓடும் இந்த மலை பிரதேச முகடுகளில் லேசாக காற்று தழுவும் போது கூட ஒரு அதிர்வுடன் கூடிய சத்தத்தை உண்டாக்கியது. 

காற்றின் அலாதி தன்மையே அதுதான். இதமாக மென்மையாக பூக்களை மட்டுமில்லாது மனித மேனியையும் வருடுகிற மாதிரி தழுவும் காற்று  தீடிரென ஒரு உத்வேகம் பெறும் போது அதன் நிலை மறந்து ஆரவாரத்துடன் பல சத்தங்களை தர ஆரம்பித்து விடும். 

பல சமயங்களில் வரண்ட மண் துகள்கள், மரத்திலிருந்து வயதான காரணத்தால் உதிர்ந்து கீழே விழுந்த வருத்தத்தில் சருகான இலைகள் என எல்லாவற்றையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பும். அப்போது ஏற்படும் அதன் ஆனந்த சிரிப்பு சத்தம் ஒரு வகை. 

மின்னலும், மழையும் கூடவே உடன் வரும் நண்பர்களாக சேர்ந்து வரும் போது கைத்தட்டி ஆரவாரமாக அவைகளை வரவேற்கும் குதூகுல மனநிலையிலான ஒரு சத்தம். 

இதையெல்லாம்  பொதுவாக சிந்தித்து  ரசிக்கும் மனநிலை இவனுக்கு இப்போது குறைந்தே போய் விட்டது. 

இன்று அவன் இங்கு வந்து நிறைய நேரம் ஆகி விட்டதை லேசான இருட்டு, தன் வழக்கமான போர்வை போர்த்துக் கொண்டு வந்து கூறியது. சற்று தள்ளியிருந்த மரங்களின் கிளைகளில், பட்சிகள் தாங்கள் ஓய்வெடுக்க வந்து விட்டதை உணர்த்தும் சப்தங்களை அதே காற்றுடன் கரைய விட்டு மாறி மாறி தந்த களைப்பில் அடங்கிப்போக ஆரம்பித்து கொண்டிருந்தன. 

இவன் மெதுவாக எழுந்து காலணிகளை காலில் மாட்டிக் கொண்டு நடக்க முயற்சிக்கும் போது யாரோ கால்களை அழுந்த பற்றியிருப்பது போன்று தோன்றியது. இத்தனை நேரமாக முழங்கால்களை கட்டியபடியும், மடித்தும், தொங்க விட்டபடியும் சற்று உயர்ந்திருந்த அந்த பாறை போன்ற இடத்தில் அமர்ந்திருந்ததின் விளைவுதான்  என்ற எண்ணத்தில் கால்களை ஒரு முறை மடக்கி நீட்டிய பின் நடக்க ஆரம்பித்தான்

வேறுவழி.....! மனதிற்கு  பிடிக்கவில்லையென்றாலும், வீட்டை தோக்கித்தான் நடக்க வேண்டும். 

இன்னமும் தாமதமானால், ஊரைக்கூட்டி அதற்கு ஒரு காரணத்தையும் கூறி விடுவாள். பிறகு இன்றிரவும் தூக்கமில்லாமல்தான் அவமானத்துடன் கழிக்க வேண்டும். 

எத்தனை இரவுகள் இப்படித்தான் கழிகின்றன. என்றுதான் எந்த ஒரு இரவுதான், நிம்மதியான உறக்கம் வந்து வாழ்க்கையை சந்தோஷமடைய வைக்கப் போகிறதோ?.... மன வேதனையில் சரிவான அந்த இடத்தின் நடப்பதால் வரும் சிரமங்கள் அவன் மனதில் பதியவில்லை. 

நடக்க ஆரம்பித்த சில அடிகளுக்கு ஒருமுறை கால்களில் அந்த அதிர்வு வந்து வந்து மறைந்தது. கால்களை சற்று உலுக்கி அடியெடுத்து வைத்ததில் பெரிய கனமான கல் ஒன்று உருண்டு, பள்ளம் நோக்கி பாய்ந்து அந்த மலைபிரதேச இடுக்குகளில் நிம்மதியாக உறங்கப் போயிற்று. 

தன்னை யாரோ பின் தொடர்வது போன்ற இனம் புரியாத ஒரு பிரமை அடிக்கடி அவனை  பின்னால் திரும்பி பார்க்க வைத்தது. சுற்றி வர ஒருவருமில்லை. இந்தப்பகுதியில் அவ்வளவாக யார் வரப்போகிறார்கள். இன்னமும் சற்று சறுக்கல் பாதையில் காலை ஊன்றி கவனத்துடன் நடந்து, அந்த மலைப் பகுதியை கடந்து விட்டால், சாலை வந்து விடும். அதில் இறங்கி அரைமணி தூரம் நடந்தால் அவன் வீடுதான்.

 வீடா அது...!  அவனைப் பொறுத்த வரை அந்த வீடு ஒரு இடுகாடுதான்.. மனம் வீட்டிற்கு செல்ல வெறுப்பை காட்டியதில் ,  உடம்பு  நடக்கையில் சிறிது தள்ளாடியது. மீண்டும் பாதங்களின் அழுத்தலில் அவன் நின்றான். 

"அண்ணா....  யாரோ அழைக்கிறார்கள். இவன் மெள்ள திரும்பி பார்க்க எங்கும்  ஒருவருமில்லை.காற்று படபடவென வேகம் எடுத்த மகிழ்வில் தன் கடமையை செய்ய, அந்த காற்றில் கலந்து ஏதோ ஒரு வாசனை மூக்கை நெருடி விட்டு அகன்றது. இப்படிப்பட்ட தனிமையின் வீண் பயங்களை இவனின் வாழ்க்கையின் வெறுப்புக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதை இவன் உணர்ந்து ரொம்ப நாட்களாகி விட்டன. இல்லாவிட்டால் இந்த தனிமை அடிக்கடி அவனுக்கு உகந்ததாக அமையுமா....? 

அண்ணா... நான்தான்.. என்னை தெரியவில்லையா? மீண்டும் ஒரு குரல் அழுத்தமாக மென்மையாக பிடரியில் மோதுகிற மாதிரி ஒலிக்கும் போது இவன் சாலையை அடைந்து விட்டான். யாராவது ஆரம்ப  மலைச்சரிவின் அந்த பக்கம்  வேறு யாருடனாவது பேசுகிறார்கள் போலும்....!! அதை சுத்தமாக அறிந்து கொள்ளும் ஆவலிலும் அவன் மனம் ஈடுபடவில்லை. 

வீடு வந்து, மனைவியின் வழக்கமான உபசரிப்பில் குளிர்ந்த போது இரவு மணி பத்ததை தொட்டிருந்தது. களைப்பு கண்களை மூடச்சொல்லி தழுவினாலும், ஒரு சில மணி நேரத்திற்குத்தான் இந்த தழுவல் நீடிக்கும் என்பதை அவன் உணர்ந்ததிருந்தும் படுக்கையில் விழுந்தான்...

வந்த வாரம் வழக்கமான அலுவலக வேலைகளில் மனத்தை செலுத்த நகர்ந்து முடிந்தது. இப்படியேதான் பொழுதுகள் பறக்கின்றன. 

தினமும் வேலைக்கும், வேலை முடிந்து வீட்டிற்கும்  என்று செல்வதே ஒரு கடமையாகப் போய் விட்டது. மற்ற பொழுதுகள் மெளனமாக புத்தகங்களை படிப்பதில் கழித்தாலும் மனத்தை அதில் முழு ஈடுபாட்டுடன் செலுத்த முடியாதபடிக்கு அவளின் சந்தேக கணைகள் துளைக்க ஆரம்பித்து விடும். அதற்கு இப்படி கிளம்பி காலாற நடந்தவுடன் கால்கள் கொண்டு சேர்க்குமிடம் அந்த பெரிய மலைதான். அங்குதான் தனக்கு வேண்டிய  நிம்மதி உள்ளதாக அவன் மனம் சொல்லும். நிர்மலமான அந்த இடத்தில் மனதில் பாரங்கள் அப்போதைக்கு சற்று குறைவதாக அவன் உணர்ந்தான். 

"என்ன இன்னைக்கு பொழுதுக்கு எங்கே கிளம்பீட்டீங்க? வழக்கமான சுடுசொல் தகித்தது. 

" சுசி.. இன்றாவது வழக்கத்தை மாற்றி பேசு. இன்று நாம் எங்கேயாவது வெளியில் போகலாமா சொல்... உனக்கு பிடித்தமான இடத்திற்கு நான் உன்னுடன் வருகிறேன். நான் எங்கும் தனியாக போகவில்லை.. இன்று என்னுடன் வெளியில் வருகிறாயா?" தயங்கி தயங்கி கேட்டான் அவன். 

"நான் எதற்கு? அப்படியே நான் வந்தாலும், அவளுடன் சென்ற அந்த இன்பமான நாட்களைப் போல் வருமா உங்களுக்கு..!!!" 

" ஐயோ.. மறுபடி ஏன் இப்படி பேசி வதைக்கிறாய்..? அது பழைய கதை. அப்போதும் அவள் என்னுடன் மட்டும் எங்கும் தனியாக வந்ததில்லை. நண்பனுடன், அவனும் நானுமாக கடைகளுக்கு போகும் போதுதான் வருவாள். மேலும் அவளை நான் என் தங்கையாகவே நினைத்துப் பழகினேன். எத்தனை தடவை இதை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... " வறண்ட குரலில் லேசான அழுகையும் கலந்து வெளி வர பார்த்தது. 

" இதை நான் நம்ப வேண்டுமாக்கும்....!! அந்த கடிதமே ஒரு அத்தாட்சியாக உங்களை காட்டித் தருகிறதே ..! 

"அது எப்போதோ அவர்கள் இந்த ஊரை விட்டு சென்றவுடன் எழுதியது. அதை வைத்து நீ என்னென்னவோ மனம் போன போக்குபடி பேசுகிறாய்... " அவனை முடிக்க கூட விடாமல் அவள் சீறினாள்

" ஆமா.. அதனால்தான் அதை இத்தனை நாட்களாக  பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்களா ? அப்படி என்ன ஒரு கரிசனம் அவளுக்கு உங்கள் மேல்.. ". 

" நீ அத்தனையுமே தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாய்.. சுசி.!! அவள் ஏதோ தன் மனக்குறையை என்னை தன் அண்ணனாக நினைத்து கடிதத்தில்  கூறியிருக்கிறாள்.மேலும் நம் திருமணத்திற்கு முன்பு கூட அவர்களை சந்திக்க நான் போகவேயில்லை. நம் திருமணத்திற்கு கூட அவர்களின் மாற்றிப் போன முகவரி  தெரியாத காரணத்தால் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்கு உள்ளார்கள் என்று கூட இதுவரை எனக்குத் தெரியாது. அறிந்து கொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை. அப்போது என்றோ அவள் எழுதிய இந்த கடிதம் கூட இப்போது உன் கைகளில் என் துணிகளுடன் சேர்ந்துதான் உனக்கு கிடைத்திருக்கிறது. 

"அதுதான் பொக்கிஷமாக நினைச்சு துணிமணிக்குள் வைத்து காப்பாற்றி வருகிறீர்களோ..." நக்கலான  குரலில் கூறி அவள் விம்மினாள். 

"இல்லை.. சுசி. இது என் கையில் கிடைத்திருந்தால் நான் எப்போதோ கிழித்தெறிந்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். அதற்கு மாறாக...." அவனை முடிக்க விடாமல் அவள் அழுகையை நிறுத்தி விட்டு உறுமினாள். 

" அதான்...! என் கையில் கிடைச்சதாலே ஐயாவுக்கு தன் குட்டு அவ்வளவும் வெளிப்பட்டு இப்போ ரொம்ப திண்டாட்டமாக இருக்கா...? "" 

சே..! என்ன பெண் நீ..! இவ்வளவு சொல்லியும் நம்பாமல்... கோபமும் வருத்தமும் ஒரு சேர அவன் வீட்டை விட்டு  வெளியேறினான். . 

அந்த மலை ஏற்றம் இன்று மன வருத்தத்தினால் கொஞ்சும் கடினமாக தெரிந்தது. 

என்ன இவள்..? என்ன சொல்லியும் நம்பாமல் ஏதேதோ பேசி அவளையும் வருத்தத்துள்ளாக்கிக் கொண்டு நம்மையும் வருத்தப்பட வைக்கிறாள்.. அந்த கடிதம் அவள் கையில் ஏன்தான் சிக்கியதோ....? அதிலும் அந்தப்  பெண் மாலினி அப்படி என்னதான் எழுதி விட்டாள்.? வந்து சேர்ந்த விபரங்களை எழுதியவள். "இப்போதெல்லாம் தன் கணவன் அங்கிருந்த போது இருந்ததை போன்று அன்பாக இல்லையென்றும், அங்கு உங்களுடன் நட்பாக, பேசி பழகிய வாழ்வை போல இப்போது இல்லையென்றும் வருத்தப்பட்டு எழுதியிருந்தாள்..."

இவனும் "அது நண்பன் புதிதாக சேர்ந்த வேலை மும்மரத்தின் அலுப்பாக இருக்குமெனவும், சமயங்களில், ஏதோ விளையாட்டுக்காக அவன்  அப்படி செய்திருப்பான் கூடிய விரைவில் எல்லாம் சரியாகி விடுமெனவும் பதில் கடிதம் எழுதி போட்டானே..!!! இதையெல்லாம்  ஒரு பிரமாதமாக எடுத்துக் கொள்ள இவளால் எப்படி முடிகிறது... ? 

அதன் பின் நண்பனிடமிருந்தும், அவளிடமிருந்தும் எந்த ஒரு விசாரிப்புகளும் கடிதமும் வராத நிலையில், வாழ்க்கை ஓட, இடையில் ஒரு சில சுற்றங்கள் வலிய வந்து  இவன் திருமண ஆயுத்தங்களை ஆரம்பிக்கவும்  இவன் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்ததில் அவர்களை மறந்தே போனான் என்று கூட சொல்லலாம். 

திருமணத்திற்கு முன் அதிர்ஷ்டவசமாக வீடு அமையும் யோகமும் வரவே, அனைவரும் மனைவி வரும் வேளை நல்ல வேளை எனக்கூறி அவர்களை இவன் நினைவிலிருந்து அழித்தே விட்டனர். 

ஆரம்ப வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டிருந்த வேளையில், இவன் உண்மையை சொல்லி, இப்போது எங்கிருந்தோ இந்த கடிதமும் அவள் கையில் வந்து சேரவே இவனின் துரதிரஷ்டம் ஆரம்பமானது. 

மனதில் எழுந்த வெறுப்பு வானின் சூழலை கவனிக்க விடவில்லை. 

காற்று சற்று பலமாகி வானுடன் கலந்து கீழிறங்கும் மழை மேகங்களை சந்தோஷத்தோடு  வரவேற்கச் சென்றது. மழைத் தூறல்கள் ஒன்று, இரண்டு மூன்று என்ற எண்ணிக்கையை வரிசைப்படுத்தி, தான் கற்ற கணக்கை ஒப்புவிக்க தயாராயின. 

மழைத்துளிகள் விழுந்த வேகத்தில் இவன் லேசாக கவனம் கலைந்து இடத்தை விட்டு  எழுந்தான். 

மறுபடி வீடு செல்ல விருப்பமில்லை. எனினும் வேறு எங்குதான் செல்வது?  கால்கள் ஒரு சரிவில் சற்றே நிலை தடுமாறி சறுக்கின. 

"அண்ணா.... இவ்வளவு வேதனையை சுமந்து கொண்டு எப்படி வீட்டிற்கு  செல்லப்போகிறீர்கள்? என்னுடன் வந்து விடுங்கள். அடுத்தப் பிறவியில் நீங்களும், நானும் நிஜமாகவே ஒருதாய் வயிற்றில் பிறந்து நம் சகோதர பாசத்தை அனைவருக்கும் உணர்த்துவோம்.."!!!! 

சற்று அதிகரித்த காற்றுடன் மெல்லிய இதமான குரல் தனக்கு ஆறுதலாக  காதருகே வந்து உரசியது. 

 "யார்? யார்... பேசுவது?  இவன் சற்று பதட்டத்துடன் சுற்று முற்றும் பார்த்தான். சுறறி வர யாருமேயில்லை. 

மழையினால் சீக்கிரமாகவே இருட்டு போர்வையை போர்த்திக் கொண்ட வானம் "இன்றாவது நிம்மதியாக சீக்கிரமே உறங்கப்போகிறேன்.. இல்லையென்றால் இந்த நட்சத்திரங்கள் உரிமையுடன் கதவை தட்டிக் கொண்டு வந்து இரவெல்லாம் கதைப் பேச துவங்கி விடும். "  என்றபடி வேறு எதிர்பார்ப்பில்லாமல் படுத்துறங்கப் போய் விட்டது. 

யாருமில்லாத அந்த அத்வானத்தில், கீழ் குரலில் அந்தப் பேச்சும் தன் பிரமையாகத்தான் இருக்குமென நினைத்தபடி ஒரு வேகம் கொண்டு  அவன் அவசரமாக முன்னேறினான்

" மழை சுதந்திரமாக தன் ராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்ட எக்களிப்புடன்  காற்றுடன் சேர்ந்து கொண்டாடலாமா என கைதட்டி ஆரவரித்தது." 

"அண்ணா.. வேற்றூருக்கு சென்ற பின உங்கள் நண்பரும் இதே சந்தேகத்தோடு என்னை தினமும் வாட்டி எடுத்ததில் உங்களிடம் சொல்லி, ஆறுதல் பெற நான் இங்கு வந்த வேளையில் உங்கள் திருமணம். அவரிடம் எதையும் சொல்லிக் கொள்ளாமல் வந்த நான் உங்களிடம் அதுவும் புது மனைவியுடன் இருக்கும் உங்களிடம் எப்படி சொல்வதென்ற சலனத்தில் இருந்த போது, எனக்கு இந்த மலையில்தான் விடுதலை கிடைத்தது. அன்று உங்களிடம் சொல்லும் நேரத்திற்காக காத்திருக்க எண்ணி பொழுதை கழிக்க இதில் ஏறியதில் என் வாழ்வையே இந்த மலை விழுங்கி கொண்டது. ஒரு விதத்தில் எனக்கு அது நல்லதுதான் என எண்ணினேன். இப்போது நீங்களும் என் இடத்தில்..!!!  தினமும் நீங்கள் படும் வேதனையை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. என்னால்தான் உங்களுக்கும் இப்படி ஒரு கஸ்டமான வாழ்வு. என்னுடனேயே வந்து விடுங்கள் அண்ணா..!! இப்போது நானிருக்கும் இடந்தான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. அடுத்தப் பிறவியில் நாம்  ஒன்றாக பிறப்போம் . அப்போது எப்படி இவர்கள்  நம்மை சந்தேகப்படுவார்கள்...!! பார்க்கலாம்..? 

தன் மனதுதான் கற்பனையாக ஏதேதோ நினைத்துப் பேசுகிறது என இவனுக்குத் அசட்டுத்தனமாக தோன்றினாலும், இல்லையில்லை...... தன்னைச்சுற்றி, தன்னருகேயே வந்து  நிஜமாகவே யாரோ பேசுவது போல தோன்றியதாலும் இவன் நடந்த வேகம் சற்று தடைப்பட்டது. கால்களை மேலும் ஒரு அடி எடுத்து வைக்க முடியாதபடிக்கு மீண்டும் கால்களில் ஒரு அழுத்தம். 

மழை பெரிதாக வலுப்பதற்குள் மெள்ள இறங்கி அந்த சாலையை அடைந்து விடலாம் என்ற  ஒரு இனம் புரியாத படப்படப்பில் அடுத்த அடிக்காக வேகமாக கால் வைத்தவன் அடுத்த அடி வைக்க முடியாதபடிக்கு சறுக்கி உயரமான அந்த இடத்திலிருந்து பாறைகளின்  இடைவெளிகளில வழியே தீடிரென எதிர்பாராத வண்ணம் குடுகுடுவென உருண்டு ஒரு அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான். 

நிம்மதியில்லா மனதுடன் இத்தனை நாள் நரகத்தில் இருப்பதைப் போல உயிர் வாழ்ந்த இவனை சந்திக்க வேண்டி அங்கே காத்திருந்த ஓர்  உயிர் இவனை அன்பாக சகோதர பாசத்தோடு வரவேற்றது. 

கதை நிறைவுற்றது... 

இன்றைய பதிவாக ஒரு கதை.இதை ஒரே நேரத்தில் தந்து விட்டால்,படிக்கும் போது  சுவாரஸ்யத்திற்கு பங்கம் வராமல், நன்றாக இருக்குமென மொத்தமாக பகிர்ந்து விட்டேன். பிரித்து தந்தால் இரு பாகமாக தந்திருக்கலாம். நீளமாக உள்ளதென கதையை முழுதுமாக படிக்காமல் இருந்து விடாதீர்கள். உங்கள் அனைவரது ஊக்கமே எனது ஆக்கம். 

எனக்கு அவ்வளவாக கதைகளை, அதுவும் சுவாரஸ்யமாக எழுத வராது. ஆனால், ஆரம்பம் முதல்  (பதினேழு வயது முதல்) எழுதும் ஆர்வம் காரணமாக  கதைகளை இப்படி எழுதி பிதற்றுவது பிடித்தமாகிப் போனது. நடுவில் திருமண வாழ்க்கை, குடும்ப சூழ்நிலைகள் எழுதுவதை ஒத்தி வைத்தது. புதிதாக வலைத்தளம் ஆரம்பித்திலிருந்து இப்படி என்னுள் கருவாக உதிக்கும் கதைகளை அசட்டுத்தனமான என்  எழுத்துக்களால்  வடிக்கிறேன். அதுவும் இப்போது இருக்கும் நேரத்தில் கைப்பேசியிலேயே கொஞ்ச கொஞ்சமாக எழுதி வருகிறேன். என் கதைகள் அச்சு எழுத்துக்களில் வர வேண்டுமென்பதும் என் நீண்ட நாளைய  விருப்பம். அது எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை. பார்க்கலாம்..! 

வலைத்தள உறவுகள் நான் எழுதும் கதைகளை படித்துப் பார்த்து அவர்களின் கருத்துக்களை சொல்வதே இப்போதைய மனமகிழ்வாக உள்ளது. என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் என் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எப்போதும் என் அன்பான நன்றிகள். 🙏

Sunday, April 30, 2023

மரங்களின் ஆற்றாமை.

ஒத்தையடிப் பாதை மாறி 

ஓரங்கட்டும்  வாகனங்களை சாடி. 

ஊர்ந்து செல்லும் வழிகளை தவிர்த்து

ஊரெங்கும் சடுதியில் கடக்க

நாலு வழிச் சாலை போட்டாச்சு


மனம் போல் மரணித்தவரை

மனம் இல்லையெனினும்

சாலை வழி நடந்து சென்று

நாலு பேர் சுமக்கும் 

ஒரு நியதியும்

நாளடைவில் நின்று போயாச்சு. .


காத வழி பாதைதானே என்ற

கால் நடையான பயணத்தில்

காத தூரமும் கடக்க சோம்பலானதால்

கால்நடைகள் ஊறுதல் பெற்றதோடு, 

கார்களோடு உறவு கொள்வது   

கண்டபடிக்கு அமோகமுமாயாச்சு


மகிழ்வூந்து என்ற பெயரோடு,

மனம் நிறைவுறாது தவிக்கும்

அதன் மகிழ்வுக்கென அதற்கேற்ற 

அனேக பெயர்களையும் சூட்டியாச்சு


எங்களால் இயலாதது இவ்வுலகில் 

எதுவுமே இல்லையென 

மார்தட்டி மமதை கொள்ளும்

மனித வர்க்கமாக மாறியாச்சு.


இவர்களின் இறுமாப்புக்கு

இன்னல்கள் பலதையும்

இவர்கள் வாழ்வினது 

வசதிகளின் பெருக்கத்திற்கு  நாம்

வாழும் வாழ்வையும்  இழந்தாச்சு


அலட்சியமாய் வெட்டப்படும் நம்

அங்கஹீன வலிகளின்,

அவஸ்தையை உணராத

அன்பில்லா மாந்தர் என்றாயாச்சு


எம்மோடு ஒப்பிட்டு பேசவும் இனி, 

எந்தவொரு ஈரமில்லை எம் நெஞ்சில் 

எனினும் உங்களுடன் எம் வாழ்வு

என்று சபித்து விட்ட இறைவனுக்காக 

எந்த ஒரு மனகிலேசமுமின்றி

வாழும் முறையையும் கற்றாச்சு. 


எங்களின் நல்மனம் மனிதருக்கு

எந்நாளும் இனி வரவும் 

எள்ளளவும் வாய்ப்பில்லை என்ற

மரங்களின் முணுமுணுத்தலுக்கு

மறு பேச்சில்லை  என ஆகியாச்சு

.

சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் சாலை வசதிகளுக்காக இயற்கையை அழிப்பது குறித்து  அருமையாய் எழுதி இன்று அவர் பதிவில் பகிர்ந்ததை படித்துப் போது, மனம் நொந்த மரமொன்று கூறுவதாக சொல்லப்படும்  இக்கவி என் மனத்துள் உருவாகியது. எழுத வேண்டாமென மனது எவ்வளவோ தடுத்தும் எழுதிதான் பார்க்கலாமே என என் கவிதை படைக்கும் ஆசை ஆற்றாமையுடன்  கூறியது. அதனால் மரங்களின் ஆற்றாமை என்ற தலைப்பையே வைத்தேன். இது எப்படி உள்ளதென கூறுங்கள். கருத்துரைக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏. 

Friday, April 28, 2023

பகல் கனவு.




ரவாரமிட்டபடி 

அங்குமிங்கும் 

ஆடி ஓடிய, அணில்கள் 

காணாமல் போயின!

காகங்களின் கரையல் சப்தம்,

கார் முகிலின் இடியோசையில், 

கரைந்தே போயின! 


 மற்ற பறவைகளின் 

பலவிதமான ஒலிகளும், 

பறந்தே போயின! 

பிறநில வாழ்

விலங்கினங்களும் 

விரக்தியுடன் இந்த

வில்லங்கத்தில் மாட்டாமல் 

ஒதுங்கி போயின!

காரணம் என்ன வெனில், இது,

கார்காலத்தின் ஆர்பாட்டந்தான்.


மழை! மழை! மழை!

எங்கும் மழை!

எத்திக்கும் மழை!

மழையரசி 

மகிழ்ச்சிப்பெருக்கில் தன்

மனந்துள்ள கொட்டித் தீர்த்தாள்.

மேள தாளத்துடன் 

ஆனந்தம் பொங்க

மேக வீதியில் வலம் 

வந்தபடியிருந்தாள்.


இதுகாறும் 

இவ்வுலக மாந்தர்க்கு

கடமையின் கருத்தை 

செவ்வனே விளக்கி வந்த

கதிரவனும் அரசியின் 

கட்டளைக்கு பணிந்து

மூன்று நாட்களாய் தன்,

முகம் காட்டாது

முடங்கிச் சென்ற வண்ணம் 

இருந்தான்.


மழை வேண்டி. 

இந்த மண்ணில்

பல வேள்விகளும்,

வேண்டுதல்களும் செய்த

மண்ணில் வாழ்

மக்களுக்கும், 

மழையரசியின்  

மட்டற்ற  சீற்றம் கண்டு,

மனதில் பக்தியோடு 

பயமும் உதித்தது.


பூமித் தாய்க்கு 

வேதனையையும்,

புவிவாழ் உயிர்களுக்கு 

சோதனையையும்,

மேலும் தரவிரும்பாத 

அன்னை தன்,

மேக குழந்தைகளை 

அதட்டி, அடக்கி,

துள்ளித் திரிந்த

மழை கற்றைகளை

தூறலாக போகும்படிச் செய்தாள்.


துளிகள் விழுந்த வேகத்தில்,

துள்ளி கண் திறந்தான் 

அந்த விவசாயி,


சுற்றிலும் பார்வையை 

சுழற்றி ஓட விட்டான்,

சுடும் நெருப்பாய்

சுட்டெரித்து கொண்டிருந்தான் 

சூரியன்.

மழைக்கு மாறாக

மாதவம் செய்தபடி

மனங்களித்து

மகிழ்ந்திருந்தான்


அக்குடிலின் வாயிலில்

குத்துகாலிட்டபடி

அமர்ந்தந்த 

நிலையிலும்,

இத்தனை உறக்கமா?

நீட்டி படுத்து நிம்மதியாக உறங்கி

நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது, 


இது

பகல் பட்டினியால்,

பரிதவித்து வந்த உறக்கம்,

பஞ்சடைந்த கண்கள்

பாவப்பட்டு மூடிக் கொண்டதால் 

வந்த மயக்கம்.

அந்த நித்திரையிலும் ஒரு

அற்புத கனவு!!! ஆனந்த கனவு.!!

இந்த மழை கனவு!!! 


இந்த பகல் கனவை

பார்த்த மனக்கண்களின்

மகிழ்ச்சியில் வந்தது இந்த

நீர்த் துளிகள் ! ஆனந்த 

கண்ணீர் துளிகள் !


பார்வை பட்ட இடமெல்லாம், .

பழுதடைந்த வயல் நிலங்களும், 

பயனற்ற கலப்பைகளும், 

பரந்த அப்பகுதியையே

பாழடைந்த சோலையாக்கின

எட்டாத கனவுடன், 

ஒட்டிய வயிறுடன், 

கண்களில் பசி சுமந்த

மக்களையும், கண்ட போது

கலக்கமடைந்தது 

அவன் மனது. 


இனி, இந்நிலை தொடர்ந்தால், 

பசியினால், பரிதவிக்கும்

மாந்தர் மட்டுமில்லாது,

அணில்களும் ஆடி ஓடாது!

காகங்களும் கரையாது!

பறவைகளும் பாடாது ! ஏனைய

ஜீவராசிகளும் தன் 

ஜீவனை இழந்து விடும் !


இறைவா! 

இவைகளுக்காகவாவது இந்த

பகல் கனவை

லிக்க வைத்து விடு... 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இது எப்போதோ பதிவுலகம் வந்த துவக்கததில் எழுதி அவ்வளவாக பார்வையை பெறாதது. சிறந்த பதிவர் சகோதரர் திரு. வை. கோபலகிருஷ்ணன் அவர்கள் மட்டுமே வந்து நன்றாக உள்ளதாக நவின்று விட்டுச் சென்றார். அவருக்கு இன்றும் என் மனமார்ந்த நன்றி. 

பொதுவாக கவிதைகள் நீளமானல் யார் கருத்திலும் நிலைபெறாது எனத் தெரியும். இங்கு கவியரசர்கள் (சகோதரர், துரைசெல்வராஜ் அவர்கள், சகோதரர் ஸ்ரீராம் அவர்கள்) இயற்றும் அற்புதமான கவிதைகளுக்கு முன் இதை கவிதை  எனச் சொல்லவும் நாணுகிறேன்.  இருப்பினும் எனக்குத் தெரிந்த வரிகளை மடக்கிப் போட்டு எப்போதோ ஈந்த இந்தக் ...... யை இப்போது ஒரளவிற்காகவாவது ரசிப்பீர்கள் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் பதிவாக்கி  காத்திருக்கிறேன்.  பார்வையிடும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

Saturday, April 22, 2023

கடலைக்காய் திருவிழா. .

ஓம் கணபதியே நமஃ. 

ஓம் நமசிவாய நம ஓம். 

வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே 

இது பசவன்குடி புல்டெம்பிள் நந்திகேஸ்வரர், தொட்ட கணபதி ஆலயம் குறித்த பகிர்வு. இந்த வருடம் பிறந்தது முதல் என்னால் வலையுலகிற்கு இயல்பாக வர முடியாத நிலைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வருடத்திலும் எப்போதும் போல் ஏதாவது பதிவுகள் கொஞ்சமாகவேனும் எழுத வேண்டுமென  எண்ணியிருந்தேன். அது கைகூடவில்லை. ஏனெனில் இறைவனின் விருப்பந்தானே எப்போதும் நம்மை அசைக்கும் கருவி. இருப்பினும்  இன்று என்னை எழுத வைத்த அந்த இறைவனுக்கு என் மனம் நிறைந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். 

என் நட்புகளாகிய நீங்களும்  வலையுலகில் பதிவெனும் எழுத்துகளோடு என் வரவை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

சகோதரி கோமதி அரசு அவர்கள் என்னை ஏதாவது பதிவு எழுதச் சொல்லி இரண்டு மூன்று முறை வலியுறுத்தி கூறி விட்டார்கள். அவர்களின் அன்புக்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன்.(நன்றி சகோதரி. உங்களின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள்தான் மீண்டும் என் கைகளில் பதிவெனும் ஓலையில் எழுத  எழுத்தாணியை கொண்டு தந்துள்ளது.) 

எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும். 

இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. 

பாதையெல்லாம் மாறிவரும். பயணம் முடிந்து விடும். 

மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து விடும். 

இந்த திரைப்பட பாடல் வரிகள் எனக்கு மிக, மிக பிடிததமானவை. ஏனோ இதையும் இங்கு குறிப்பிடவும் விருப்பம் கொண்டு பதிந்து விட்டேன். 

நல்லதாக இனி எழுதும் பதிவுகளின் மூலமாக இப்போதுதான் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலில் வந்துள்ளேன். ஆனாலும் என்னை தினமும் மறவாத உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு. 🙏. 

இந்த பசவன்குடி கோவிலுக்கு முன்பு இங்கு வந்த புதிதில் அடிக்கடி சென்றுள்ளோம். (அந்த இடத்திற்கு இரண்டு கி. மீ தொலைவிலேயே அப்போது நாங்கள் இருந்ததினால், அடிக்கடி கால் நடையாகவே நடந்து சென்று விட்டு வந்து விடுவோம்.) இப்போது இன்னமும் தொலைவில் எங்கள் ஜாகை அமைந்து விட்டபடியால், ஓலாவில் எப்போதாவது பயணித்து தொட்ட கணபதியையும், நந்திகேஸ்வரையும் தரிசித்து விட்டு வருகிறோம். நடுவில் தொற்று காரணமாக இரண்டு மூன்று வருடம் எங்குமே செல்லவில்லை. அருகிலேயே ஒரு பெரிய பூங்கா இருப்பதால், மகன், மகளின் குழந்தைகளுக்கு ஓடி விளையாட ஒரு இடமும் கிடைத்த மாதிரி இருக்குமென்பதால் இந்த மாதிரி அந்த இடத்திற்கு அன்று விஜயம். 



இது தொட்ட கணபதி ஆலயம். 



அருள் தரும் பெரிய பிள்ளையார். ஒரே பாறையில் உருவாகி பெரிதான உருவத்துடன் அருள் புரியும் இவரை கோவில் வாசலிலிருந்தே அழகாய் சேவிக்கலாம். விநாயகரே எளிமையானவர். அதிலும் இவரை சந்திப்பதும் மிக எளிது. அடிக்கடி வெண்ணெய் காப்புடன் இவரது பிரதியோக தரிசனம் அனைவரும் கிடைக்கும். 



இதுதான் அழகிய பெரிய உயரமான நந்திகேஸ்வரர். பெங்களூரை நிர்மானித்த  நிறுவனர் கெம்பே கவுடாவால் 1537 ம் ஆண்டில், 4.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் நீளமுமாக ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட கம்பீரமான  சிலை. 

விநாயகரை வழிபட்டு விட்டு சற்றே உயரமான பாறை மேல் படிகளின்
மூலமாக ஏறினால் இவரை தரிசிக்கலாம். எல்லா சிவன் கோவிலிலும் நந்தி தேவர் சிவனை வணங்கியபடி அவரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.இங்கு எம்பெருமானையும், தன்னையும் வணங்கப்போகும் மக்களை வரவேற்றபடி அவர் திருக்கோலம் கொண்டுள்ளார். கோவிலுக்குள் நுழைந்ததும் கம்பீரமாக காட்சி தரும் நந்திதேவரை வணங்கிய பின் அவரை சுற்றி வலம் வரும் போது, சர்வேஷ்வரன் லிங்க வடிவில் சிறியதாக அருள் காட்சி தருகிறார். நந்தியின் பின்பக்கமாக அமர்ந்திருந்து தன் வாகனமான நந்தி தேவருக்கு முதலில் தனிச்சிறப்பை தந்து, அவரை மக்கள் முதலில் ஆராதிப்பதைக் கண்டு, அதில் ஆனந்தம் அடைந்து அருள் பாலிக்கிறார்

இங்கு நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடர்ந்து மூன்று, நான்கு நாட்களாக நடக்கும். அப்போது மக்கள் கூட்டம் எப்போதும் சாலைகளில் நடக்கக் கூட இயலாமல் இருக்கும். போக்குவரத்து பேருந்துகளும் இடம் மாற்றி சுற்றிச் செல்லுமென கேள்வி. 

முன்பு, (கிட்டத்தட்ட 300,400 வருடங்களுக்கு முன்பு) பெங்களூரின் அக்கம்பக்கம் உள்ள கிராம விவசாயிகளின் ஆதாரமான கடலைத்தோட்டத்தின்  விளைச்சல்களை தொடர்ந்து ஒரு காளை மாடு சேதமாக்கியதில், விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்ததினால், இந்த நந்தி தேவருக்கு ஒவ்வொரு  வருடமும் நிலக்கடலை அறுவடையானதும், தங்கள் வண்டிகளில் கொண்டு வநது படைத்து விட்டு, மக்களுக்கும் குறைந்த விலைகளில் போணி செய்து வியாபாரம் செய்வதாய் வேண்டிய பின், அந்தக் காளையினால் பயிர்கள் சேதமின்றி வளர்ந்து விவசாயிகள் தங்கள்  கவலைகளிலிருந்து மீண்டு நல்ல நிலையை அடைந்தார்களாம். அதிலிருந்து இந்த முறை பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறதாம்.  இதை இங்கு வந்த பின் கேள்விபட்டுள்ளேன். ஆனால், அந்த சமயத்தில் அங்கு சென்றதில்லை. 

இது இப்போது நந்திகேஷ்வரரை தரிசிக்க பெரிய விநாயகரை வணங்கி விட்டு மேலே ஏறும் போது பக்கவாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தத்ரூபமாக கடலைக்காய் திருவிழாவை காட்டும் அழகிய சிலைகள். முன்பெல்லாம் நாங்கள் சென்றபோது  இல்லை. இப்போது புதிதாக அமைத்திருக்கிறார்கள் போலும். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்த வண்ணம் சென்றோம் . இதைக்குறித்து எனக்கு தெரிந்த தகவல்களோடு, இதையும்  இங்கு பகிர்ந்துள்ளேன். 





















என்ன.. சகோதர, சகோதரிகளே, படங்களை ரசித்தீர்களா? அப்படியே அங்குள்ள பிரபலமான உணவகத்திற்கு  சென்று மசால் தோசைகள்  உண்பதற்காக வழக்கப்படி பெயர் கொடுத்து, உணவகத்திற்கு  வெளியே நிறைய நேரம் காத்திருந்த பின் எங்கள் இருக்கை கிடைத்ததும் உள்ளே சென்று தோசையை சாப்பிட்டு வீடு  வந்தோம். ஆனால் ஆரம்பத்தில் நாங்கள் இங்கு வந்ததும் சென்று சாப்பிட்ட அந்த ருசி நிறையவே மிஸ்ஸிங். தினசரி எல்லாம் மாறும் போது இது மட்டும் மாறாதிருக்க இயலுமா?ஆனால் விலை மட்டும் ஏற்றம். பதிவை ரசித்து கருத்திடப் போகும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏.