Showing posts with label பக்தி பதிவு. விநாயகர் சதுர்த்தி விழா. Show all posts
Showing posts with label பக்தி பதிவு. விநாயகர் சதுர்த்தி விழா. Show all posts

Friday, September 6, 2024

விநாயகர் அருள்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். 


ஸ்ரீவிநாயகப் பெருமானே சரணமப்பா. சரணம்.
 🙏. 

1) கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.🙏. 

இதன் பொருள். 

யானை முகத்தை கொண்டவரும், பூத கணங்களால் வணங்கப்படுபவருமான, விளாம்பழம், நாவற்பழங்களின் மீது விருப்பமுடையவருமான, உமை பாலகனும், நமக்கு வரும் இன்னல்களை தீர்க்க வல்லவருமான நம் கணபதி நாதரின் திருவடிகளை வணங்குவோம்.🙏. 

2) மூஷிக-வாகன மோதக-ஹஸ்த

காமர-கர்ண விலம்பித-ஸூத்ரா |

வாமன-ரூப மஹேஸ்வர-புத்ர

விக்ன-விநாயக பாத நமஸ்தே ||🙏. 

இதன் பொருள்:

எலி வாகனத்துடன் கையில் வைத்திருக்கும் மோதகப் பிரியராகவும்,  பெரிய விசிறி போன்ற காதுகளுடனும், மற்றும் நீண்ட புனித நூலை அணிந்திருப்பவரும், வாமனரைப்போல உயரம் குறைவாக இருப்பவரும். மற்றும் ஸ்ரீ மகேஸ்வரரின் மகனுமாகியவரும், தனது பக்தர்களின் தடைகளை உணர்ந்து அதை  நீக்கும் வல்லமையுடையவருமான ஸ்ரீ விக்ன விநாயகரின் பாதங்களை வணங்கிக் கொள்வோம். ஸ்ரீ விக்ன விநாயகருக்கு அனேக கோடி நமஸ்காரம். 🙏. 

3) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா! 🙏. 

இதன் பொருள்.

நாம் அனைவரும் தெய்வமாக வழிபடும் (கோமாதா) பசுவின் பாலும், சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற தேனீக்களால் தேர்ந்தெடுப்பட்டு சேர்த்த நல்ல தேனும், சுவையான கரும்புகளின் கனிச்சாற்றைக் கொண்டு நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை காய்ச்சி எடுத்த பாகும், அதற்கு தோதாக அதனுடன் சேர்க்கப்படும் அரிசி, பருப்பு வகைகளும் கலந்து உனக்குப் பிடித்தமான பல இனிப்புகளை செய்து நான் உனக்குத் தருவேன்.

அழகெல்லாம் ஒரு சேர நிறைந்தவரும், மதிநுட்பம் மிகுந்த யானையின் முகத்தைக் கொண்ட எம்பெருமானே, நீ அதற்குப் பதிலாக மூவகையான சங்கத்தமிழ் எனும் அமிழ்தத்தை எனக்குப் பரிசாக தருவாயா? . 


பிரபல பாடகர் சீர்காழி அவர்களின் பக்திப் பாடல்களை மெய்யுருகி கேட்டால், நம் கண் முன் இறைவனே வந்து நிற்பது போல் உணர்வோம் . அந்த அளவிற்கு  அமைந்தது அவரின் குரல் வளம். 🙏 அது அவருக்கு அந்த ஆண்டவன் தந்த வரப்பிரசாதம். 🙏 இந்தப் பாடலும் இன்றைய நல்ல நாளில், நமக்கு பக்தி பரவசமூட்டும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் கேட்டு மகிழ்ந்து விநாயகபெருமான் நம் கண் முன் வருவதை உணர்ந்து  தரிசிப்போம் 🙏

விநாயகர் குறித்து என் அறிவுக்கு எட்டிய விதத்தில் தந்திருக்கும் இப்பதிவை ரசிக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

நன்றி கூகுளுக்கும்.