Saturday, April 11, 2020

துணைகள்.

கத்திரிக்கா...பச்சை கத்திரிக்கா...

இந்த கத்திரிக்காய் சில பேருக்கு உயிரை விட பிரதானமானது. அப்படி  உயிரைக்கூட சமயத்தில் துச்சமாக கருதி துணிச்சலாக இருப்பவர்களிடம்," நீ இன்று சாப்பிட வர தாமதாமாகும்னு சொன்னியா. .! அதனாலே இன்று செய்த கத்திரிக்காய் கறி தீடிரென வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு போட்டு தீர்ந்து விட்டது.. கொஞ்சந்தான் இருக்கு.. உனக்கு ரொம்ப பிடிக்குமென்று தெரியும். நாளை மறுபடி இதே மாதிரி செய்கிறேன். அப்போது வேண்டியதை போட்டுக்கோ" என்று வீட்டுக்குள் வந்து சாப்பாட்டறையில் அமர்ந்தவுடன் அவர்களின் அம்மாவோ, இல்லை வீட்டிலுள்ளவர்களோ பாசத்துடன் சொன்னாலும், மனம் கேட்காது வருத்தத்தில் தளர்வடைந்து விடும்.

நாளை வரை காத்திருக்க பொறுமை இல்லாமையா? இல்லை நாளை மறுபடியும் இந்த கத்திரிக்காய் சமையலில் இடம் பெறுமா என்ற சந்தேகமா? இரண்டில் ஏதோவொன்று  அவர்களின் மனவுறுதியை குலைத்து, தளர்வடைய செய்யும் வல்லமை கொண்டது இந்த கத்திரிக்காய்.

இந்தளவிற்கு இந்த கத்திரிக்காயின் பிரதாபங்களை நிறுத்தி என் செய்முறையை பார்ப்போமா?
அன்று நான் என்னிடமிருந்த நீளமான பச்சை கத்திரியையும், சதாரண வயலட் கத்திரியையும் சேர்த்து களமிறக்கினேன். இரண்டையும் நன்கு கழுவி வட்ட வட்ட துண்டுகளாக ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டேன். ஒரு பெரிய கோலி அளவு புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்தெடுத்த நீரையும், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான உப்பும் கலந்து அதில் கத்திரிக்காய் துண்டுகளை ஊற வைத்தேன் .


கடந்த வியாழக்கிழமை எங்கள் ப்ளாக்கில் மோர்/தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள "எது பொருத்தம்" என்ற  விவாதம், இல்லையில்லை.. "எது சூப்பர் என்ற கருத்துக்கள்... ஆகா..! என்னப் பொருத்தம்.. நமக்குள் இந்தப் பொருத்தம்" என்று அழகிய பாட்டு பாடியப்படி ஓடிக் கொண்டிருப்பதை, கேட்டு மகிழ்ந்து  போனஸாக இருக்கட்டுமென இன்னொரு படமும் "இடையில் நானும்" என்றபடி கூடவே வந்து விட்டது. இவை இரண்டும் இரட்டை குழந்தைகளாம்... எங்களைப் பிரிக்கக்கூடாது என ஒரே சண்டை வேறு .! வேறு வழியின்றி இரண்டாகப் போட்டு விட்டேன்." (ஒரு படத்தையே எத்தனை முறை?" என முறைப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்...🙏. கூப்பி கேட்டுக் கொள்கிறேன். ஹா.ஹா.ஹா.)


மூன்று ஸ்பூன் கொத்தமல்லி விரைகள், ஒரு ஸ்பூன் தலா, க. ப, உ. ப, து. ப (மூன்று பருப்புகளையும் ) என ஒரே அளவு எடுத்துக் கொண்ட பின், வேண்டிய சிகப்பு, மிளகாய் அவரவர் காரத்திற்கு தகுந்தாற்போல்  எடுத்த அத்தனையும் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்தெடுத்துக் கொண்டேன். பின் அதை ஒரளவு கரகரப்பாக அரைத்து அந்த பொடியையும் அந்த புளி ஜலத்தில் ஊறிக் கொண்டிருக்கும் கத்திரிக்காயுடன் பிசறி ஊற வைத்தேன்.




ஒரு அரைமணி நேரம் அத்தனையும் சேர்ந்து ஊறியதும், கடாயில் கொஞ்சம் ந. எண்ணெய் ஊற்றி கடுகு, உ. ப தாளித்து கொண்டு அதில் இந்த கத்திரிக்காய்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்தபடி காய்களை பிரட்டி கொடுத்தால், சிறிது நேரத்தில் பிரவுன் கலருக்கு மாறும். அப்போது பெருங்காய பொடி சேர்த்து இன்னமும எண்ணெய் விட்டு நன்றாக திருப்பி கொடுத்தபடி இருக்க சற்று மொறு, மொறு கத்திரிக்காய் கறி ரெடி.


இது எப்போதோ எழுதி, கொஞ்சம் முடிக்காமல் இருந்து விட்டேன்.  எ. பியில் அன்றைய தினம்  மோர் சாதப்பதிவை பார்த்ததும், கூடக்குறைய சேர்த்து / குறைத்து நேற்றைய  அதற்கு துணையாக என் பதிவில். வைத்து அலங்கரிக்க விரும்பினேன். அது  "நான் மட்டும் தனியாகவா ? அதுவும் இந்த "அமைதி நிலைமையில்"  என்னை மட்டும் போய்   ஆர்ப்பரிக்க சொல்கிறாயா?" என சற்று கோபத்துடன் படபடக்க,  சரி..! சரி..! கோபப்படாதே..! என அதை ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி விட்டு, அன்று  எங்கள் வீட்டில் இரவு "அதே வெறும் மோர் சாதத்திற்கு" தொட்டுக் கொள்ள  செய்த குடமிளகாய் கறியையும் உடன் அனுப்ப முடிவு செய்தேன்.


குடமிளகாய் 2, வெங்காயம், பெரிதாக 1 என் கணக்கில் எடுத்து கொஞ்சம் நீளவாக்கில் நறுக்கி, கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணேய் விட்டு கடுகு  உ. ப தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கியவுடன், குடமிளகாயையும், சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கூடவே இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவையும் அதன் மேல் பூ மாதிரி தெளித்து ஒன்று போல் கலந்த பின் கொஞ்சம் சமையல் எண்ணெய் தாராளமாக விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை தட்டு போட்டு மூடி வைத்தேன். அவ்வப்போது திறந்து ஒரு பிரட்டலில் நன்கு வெந்து கறி மிகவும் அழகாக ஒன்று சேர்ந்து வந்தது.


சரி.. இரண்டையும் ஒன்று சேர்த்து வெற்றித் திலகமிட்டு "நல்லபடியாக போய் வாருங்கள்" என அனுப்பி வைக்கும் நேரத்தில், மழை. காற்று தன் என்ற நண்பர்களின் துணையோடு, நெட் என்ற பகைவன் (எனக்கு அவன் எப்போதும் நண்பனாயினும், அப்போதைக்கு என் பதிவை முழுமையாக்க ஒத்துழையாமல் தடை செய்தவன் பகைவன்தானே.. ! ஹா.ஹா.ஹா.  ) வந்து அனுப்ப தடை விதித்து  விட்டான். சரி..! போகட்டும் மறுநாள் கடமைகள் முடிந்த கையோடு அனுப்ப அமர்ந்தால், அதே நேரம்... அதே பகைவன்.... அதற்கும் மறுநாளாகிய  நேற்று மதியம் வாழைத்தண்டை ஏதாவது செய்து விட்டு  பதிவை முடித்து விடுவோம் என்று ஆரம்பித்த போது, "குடமிளகாயோடு உங்கள் வீட்டுக்கு நானுந்தானே வந்தேன்...! என்னை மட்டும் அவர்களோடு அனுப்ப உனக்கு என்ன  தயக்கம்?" என பரிதாபமாக கேட்டதில், அதை உருமாற்றி  வடிவமத்த "வாழைத்தண்டு குனுக்கையும்" அதன் முக மலர்ச்சி ஒத்துழைக்க ஒரு படமெடுத்து இவர்களுடன் இணைத்து விட்டேன்.


இப்படியாக எ. பியின் அல்லது  "எங்கள் குடும்பத்தின்" மோர் சாதத்திற்கு இணையாக கிளம்பி வந்திருக்கும் இவர்களை வாழ்த்தி பாராட்டுக்கள் தருவீர்கள் என நம்பிக்கையில், இன்று அதேநேரம் பகைவன் வருவதற்குள் என் பதிவுக்கு இவர்களை அனுப்பி விட்டேன். பாராட்டுக்கள் அளிக்கும் அனைவருக்கும் என்னுடையது மட்டுமின்றி இவர்கள் சார்பிலும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

இப்படி👌என்றா, இல்லை இப்படியா👍. இல்லை அதற்கும் ஒருபடி மேலாகவே இப்படியா👏. எவ்வாறாயினும்🙏 இப்படி ஆர்வம் மேலிட காத்திருக்கிறேன். 

35 comments:

  1. வாழைத்தண்டில் குணுக்கா? அறியாதது. குடமிளகாய்க் கறி நிறையப் பண்ணி இருக்கேன். ஆனால் கடலைமாவு, அரிசி மாவெல்லாம் சேர்த்ததில்லை. அதென்னமோ கறியோடு சேராமல் தனியாக கட்டி கட்டியாக வரும்னு எனக்குப் பிடிப்பதில்லை. கத்திரிக்காய்க் கறி இம்முறையில் ஆனால் வட்டமாக வெட்டாமல் நீளவாக்கில் நறுக்கிப் பண்ணி இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது உடனடியான வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      எனக்குத்தான் உடன் பதிலளிக்க தாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும்.

      குடமிளகாய், வெண்டைக்காய் இவற்றில் சிறிது மாவுகளை சேர்க்கும் போது வித்தியாசமாகத்தான் நீங்கள் சொல்வது போல்தான் இருக்கும். ஆனால் அன்று குடமிளகாய் பஜ்ஜிக்கு வீட்டில் நேயர் விருப்பம். அதனால்தான் இரவு நேரம் அதிக எண்ணெய் கூடாது என்ற எண்ணத்தில் இந்த மாவை காயுடன் கலந்து பஜ்ஜி சுவையில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இத்தகைய கறி உருவானது.

      கத்திரிக்காய் கறி அனைவரும் பொதுவாக வீட்டில் செய்துதானே.. ! அதுவும் சற்று வித்தியாசமாக வட்டமாக நறுக்கியுள்ளேன்.அவ்வளவுதான்..! மூன்று பருப்புகளுடன் பச்சரிசி ஊற வைத்து, பெருங்காயம், உப்பு காரத்துடன் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொண்டு, வாழைத்தண்டையும் சுத்தபடுத்தி, நார் எடுத்து மிக்ஸியில் அரைத்து சேர்த்து குணுக்காக்கி விட்டேன். மிச்ச மாவு நேற்று அடையாகியது. ஏதோ நாட்களை இப்படியாக தள்ளிக் கொண்டிருக்கிறோம். தங்களது அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஆனாலும் நீங்கள் சுவையாக எழுதுகிறீர்கள். வர்ணனை எல்லாம் பிரமாதம். இன்னிக்குச் சீக்கிரம் படுக்கப் போகாமல் கணினியில் உட்கார்ந்ததால் உங்கள் பதிவைப் பார்த்து விட்டேன். சுவையான கறியோடு சுவையான எழுத்தும் கூட. எல்லாம் கூட்டணி அமைத்துக் கொண்டு உங்களிடம் விளையாடுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தூங்காமல் உடனடியாக தந்த கருத்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      தங்களின் அன்பான பாராட்டுக்கள் மனதிற்கு சந்தோஷம் அளிக்கின்றன. ஆனால் உங்கள் அனைவரையும் வைத்துப் பார்க்கும் போது எழுத்துத் திறமை எனக்கு மிகவும் குறைவுதான்.

      பொது அறிவிலும், இறைநிலையிலும், நாட்டு நடப்பு விஷயங்களிலும் நிறைய விஷயங்களை கிரஹிப்பதை உடனுக்குடன் நீங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதைப் பார்த்து நான் மிகவும் வியந்திருக்கிறேன். அத்தகைய அறிவு என் விஷயத்தில் பூஜ்யந்தான்.
      உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் எனக்கு நிறைய இருக்கிறது.

      தங்களின் பாராட்டுகளுக்கு மீண்டும் என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. புது வகையாக இருக்கிறது சகோ

    இறுதியில் படங்களோடு எழுதிய வாக்கியங்கள் ரசிக்க வைத்தன...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து, அதிலும் இறுதியில் எழுதியிருக்கும் வாசகங்களை குறிப்பாக ரசித்து நன்றாக உள்ளதென மனம் திறந்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சுவையான ரெஸிப்பி சுவையான எழுத்தில்.. கத்தரிக்காய்க் பறியில் புளி போடாமல், காய் வெந்தவுடன் கரகரப்பாக இரைத்த அந்தக் கலவையைத் தூவி சேர்த்து செய்திருக்கிறோம். இது சற்றே வித்தியாசம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சில கத்திரிக்காய்களில் காறல் தன்மை அதிகமாக இருக்கும். அவற்றிற்கு முதலிலேயே புளி ஜலம் தெளித்து விட்டால் காறல் மட்டுப்படும். நானும் சமயத்தில் புளி இல்லாது வெறும் காரம் உப்பு போட்டு பிரட்டியிருக்கிறேன். வறுத்த கார வகையாறாக்களும் சேர்த்துள்ளேன் . இது ஒரு வித்தியாசமாய் இருக்கட்டுமென இப்படி. இன்னும் வேறு ஒரு மாடலில் பண்ண நினைத்தேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. குடைமிளகாய் வெங.காயக் கறியும் செய்திருக்கிறேன். வெங்காயத்தை குடைமிளகாயின் சைஸுக்காக வேண்டி தாள் தாளாய் பிரித்துச் சேர்த்திருக்கிறேன்! அதே போல உருளைக் கிழங்கையும் குடை மிளகாயையும் ஜோடி சேர்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்களும் இந்த மாதிரி ரெசிபி செய்திருப்பது அறிந்து மகிழ்ந்தேன். குட மிளகாயை எப்படி கட் செய்தீர்கள் அதே மாதிரி வெங்காயத்தையும் கட் செய்து அசத்தியிருக்கிறீர்கள். நீங்கள் உருளையையும். குட மிளகாயையும் சேர்த்து பண்ணியது போல் நானும் முயற்சிக்கிறேன். நான் குடமிளகாய் சாதத்திற்கு, காரட், உ. கி, வெங்காயம் அனைத்தையும் கலந்து செய்திருக்கிறேன். தங்கள் செய்முறையும் நன்றாக உள்ளது. தங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. சுவையான குறிப்புகள் ..

    கத்தரி கண்ணை பறிக்குது ...புளி தண்ணில ஊறவிட்டு ..மசாலா சேர்த்து வதக்கல் ஆஹா ஆஹா அட்டகாசம் ..

    குடை மிளகாய் கூவி கூவி அழைக்குது ...

    இரண்டு முறையும் புதுசு ...செஞ்சு பார்க்கும் போது படத்தோடு பதிவிடுகிறேன் கமலா அக்கா ....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      நான் கொஞ்சம் தாமதமாக பதில் தருவதற்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      தங்கள் கருத்து மகிழ்வூட்டுகிறது. தாங்களும் இதுபோல் செய்து பார்த்து பதிவிடுகிறேன் என்றமைக்கு மிக்க சந்தோஷம். தங்கள் பதிவையும் காண ஆவலோடு இருக்கிறேன். தங்களின் அன்பான நல்லதொரு கருத்துக்களுக்கும் ஊக்குவிக்கும்படி எழுதிய பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. புதிதாக இருக்கிறது... செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      நான் கொஞ்சம் தாமதமாக பதில் தருவதற்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்

      தாங்களும் இது போல் செய்து பார்க்கிறேன் என்றதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. வண்ணமயமான சமையல். கத்திரிக்காய் இறுதி வரை
    நம்முடன் வரவேண்டும். அவ்வளவு ஆசை அதன் மேல்.
    நறுவிசான
    விளக்கம் மெருகு கூட்டுகிறது.பிரமாதம் கமலாமா.
    குடமிளகாய் கறியமுதும், சரிசமாமாக ஜொலிக்கிறது
    வாழத்தண்டு குணுக்கும் என்னைத் தெரியுமான்னு கேக்கறது. அதை எப்படிச் செய்வது என்று சொல்லவில்லையே.
    சொல்கிறேர்களா.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நான் தங்களுக்கு மிகவும் தாமதமாக பதில் தருவதற்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      உங்களுக்கு கத்திரிக்காய் என்றால் உயிரா? மகிழ்ச்சி சகோதரி. என் மாமியாருக்கு தினம்தினம் கத்திரிக்காயில் விதம்விதமாக சமைத்துப் போட்டாலும் அலுக்காமல் சாப்பிடுவார். அந்தளவுக்கு கத்திரிக்காய் ரசிகை அவர். அவருக்கு செய்து போட்டு எனக்கும் கத்திரிக்காய் ரொம்ப பிடித்து விட்டது.

      தங்கள் அன்பான ஊக்கமிகும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி

      வாழைத்தண்டை சதாரண குனுக்கு போடும் மாவில்,( நான் மூன்று பருப்பும். பச்சரியும் ஊற வைத்து பெருங்காயம், உப்பு, காரத்திற்கு,ப. மி, சி மி வேண்டியதும் போட்டு கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொண்டேன்.) கலந்துதான் செய்தேன். மாவை அரைத்ததும் அதனுடன் சுத்தப்படுத்திய நார் எடுத்த வாழைத்தண்டு, ஒரு பெரிய வெங்காயம் கறிவேப்பிலை முதலிய வற்றையும் அரைத்து கலந்து குணுக்கு செய்தேன். அதையும் பதிவில் பகிர நினைத்தேன். பதிவு நீளமாக விடுமேயென விட்டு விட்டேன். தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்கம் அனைவருக்கும்

    பதிவை படித்ததும் உடன் வந்து கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் என மனம் நிறைந்த பணிவான நன்றிகள். பதிவை பதிவில் போட்டதும் இங்கு சாப்பாட்டு கடை ஆரம்பம் ஆகிவிட்டது. சாதம் வைத்து, சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஊட்டி, பிற வேலைகள் முடித்து இதோ..! இப்போது வந்து பார்த்ததும் எனக்கு உங்கள் அனைவரின் அன்பான கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றன என் மீது நீங்கள் அனைவரும் வைத்திருக்கும் அன்பிற்கு நான் எவ்வாறு நன்றிக்கடன் செலுத்தப் போகிறேன் எனத் தெரியவில்லை. நாளைக்காலை விடிந்ததும் அனைவருக்கும் தனித்தனியாக பதில் தருகிறேன். அது வரை பொறுத்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மறுபடியும் உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. கத்தரி கரேமது மிக அருமை. இந்த முறையில் விரைவில் செய்துபார்க்கிறேன்.

    குடமிளகய் கறி - எனக்குப் பிடிக்கும்னு தோணலை. (நான் புதிய புதிய உணவை சுவைத்துப்பார்க்க மாட்டேன். ஹா ஹா. எப்போப் பார்த்தாலும் ஒரே செட் உணவா என்பாள் என் மனைவி).

    குனுக்கு - நான் அடிக்கடி செய்வேன். வாழைத்தண்டை அரைத்துவிட்டதில்லை (அப்போ இன்னும் நீர்க்க இருக்குமே.. வாழைத் தண்டு தண்ணீரை எடுத்துவிட்டால் சத்து போயிடுமே). மாவு ரொம்பவே அரைத்துவிட்டதுபோலத் தெரிகிறது. கர கர வென இருந்ததா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கத்தரி கரேமது மிக அருமை. இந்த முறையில் விரைவில் செய்துபார்க்கிறேன்./

      பாராட்டிற்கு மிக்க நன்றி. சமயத்தில் கத்திரி காறல் உள்ளதாக இருக்கும் அதனால் புளி ஜலத்தில் ஊற வைத்தால் காலும் குறைந்து கறுத்தும் போகாமல் இருக்கும். நீங்களும் செய்து பார்க்கிறேன் எனச் சொன்னதற்கு மகிழ்ச்சி அடைந்தேன்.

      குடமிளகாய் வாசனை உங்களுக்கு பிடிக்காதோ? சிலருக்கு அதை சாம்பார் வைத்தாலும் பிடிக்காது என்பார்கள். நான் சாம்பார், ரசம், குடமிளகாய் கலவன் சாதம் எல்லாம் செய்வேன்.

      வாழைத்தண்டு அரைத்து விடும் போது நீர் விட்டுக்கொள்ளும். அதனால்தான் பருப்பு அரிசியை அரைக்கும் போது கெட்டியாக அரைத்துக் கொண்டேன்.அரிசியுடன் இதை அரைக்கும் போது கொஞ்சம் கெட்டியாகவே இருந்தது. வாழைத்தண்டு பொடிதாக நறுக்கிப்போட்டும் குனுக்கு செய்யலாம். இங்கு குழந்தைகள் இந்த தண்டை சாப்பிட விரும்பாததால்.அரைத்தே விட்டேன். அதற்காகவே கொஞ்சம் நைசாக அரைத்து பண்ணினேன்.கூடவே ஒரு பெரிய வெங்காயத்தையும் அரைத்தேன். கரகரப்பாகத்தான் இருந்தது. நீங்கள் பருப்பை கரகரப்பாக அரைத்துக் கொண்டால் இன்னும் குனுக்கு கரகரவென்று வரும். தங்களின் அன்பான கருத்துரை களுக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அனைத்தும் புதுமை. அழகு.
    செய்முறை சொல்லிய விதம் மிக அருமை.
    வாழைதண்டு குனுக்கு எனக்கு பார்க்க அப்பம் போல் இருந்தது அதன் கலர். மைதா, அரிசி மாவு, கோதுமை மாவில் செய்யும் அப்பம், அரிசி மாவு மைதா பழம் போட்டு பிசைந்து செய்யும் நெய் அப்பம் போல் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அனைத்தும் நன்றாக உள்ளது என்று பாராட்டியமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      உங்களுக்கு அப்பம் போல் இருந்ததா? அது போடப் போட கொஞ்சம் தளர்வாக மாவு ஆனது. இரண்டாவதாக எல்லோருக்கும் சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள போட்டு காலியாகி கொண்டே இருந்தது. அங்கும் இங்கும் ஓடி பரிமாறி அதன் பின் கடைசியாக போட்டதை படம் எடுக்கும் போது கொஞ்சம் சிவந்து போய் விட்டது. அதன்பின் குனுக்கு போதுமென நிறுத்தி மறுநாள் மாவை அடையாக வார்த்து விட்டேன்.

      ஆம்.. சகோதரி கோதுமை மாவில் செய்யும் அப்பமும் இந்த கலரில் தான் இருக்கும் நீங்கள் அப்பம் என்றதும் எனக்கும் அப்பம் செய்யும் ஆசையும் வந்து விட்டது. ஹா.ஹா.ஹா. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. பச்சைக் கத்திரிக்காய், வெள்ளைக் கத்திரிக்காய் என் மாமனாருக்கு மிகவும் பிடிக்கும் எங்கு பார்த்தாலும் வாங்கி வந்து விடுவார்கள்.
    நாங்கள் காரல் அடிக்கும் சில கத்திரிக்காய்கள், அதற்கு மட்டும் புளி சேர்ப்போம். அதை புளிக்கூட்டு செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பச்சைக் கத்திரிக்காய், வெள்ளைக் கத்திரிக்காய் என் மாமனாருக்கு மிகவும் பிடிக்கும் எங்கு பார்த்தாலும் வாங்கி வந்து விடுவார்கள்./

      ஓ.. அப்படியா? ரொம்ப சந்தோஷம். அந்த காலத்திலிருந்து கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் எவருமிலையே.. எங்கள் மாமியாருக்கும் கத்திரிக்காய் என்றால் அதிக இஷ்டம்.

      நீங்கள் சொல்வது போல். காறல் அதிகம் உள்ள காய்களில் புளி விட்டு வறுத்த தேங்காய், தனியா, மி. வத்தல், பருப்பு, வெந்தயம் என அனைத்தையும் வறுத்தரைத்த கத்திரிக்காய் பிட்லை மாதிரி செய்து விடுவேன். கத்திரியில் விதவிதமாக ச்ச செய்யலாம். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. //இந்த கத்திரிக்காய் சில பேருக்கு உயிரை விட பிரதானமானது. //
    உண்மைதான், சிலருக்கு சில உணவுகளில் பைத்தியம்போல இருப்பார்கள், ஆனா நான் யோசித்துப் பார்ப்பேன் அடிக்கடி, எனக்கு அப்படி பைத்தியமான உணவென எதுவுமே இல்லை, எதைத்தந்தாலும் சாப்பிடுவேன், என்ன சிலது கொஞ்சம் அதிகம் பிடிக்கும், சிலது பெரிசாக பிடிக்காது, ஆனா அனைத்தையும் சாப்பிடுவேன்.

    //இரண்டில் ஏதோவொன்று அவர்களின் மனவுறுதியை குலைத்து, தளர்வடைய செய்யும் வல்லமை கொண்டது இந்த கத்திரிக்காய்.//
    எப்பவோ ரொம்பப் பாதிக்கப் பட்டிருக்கிறீங்கள் போலும்... ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைத்தான் எதிர்பார்திருந்தேன். நீங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
      எழுதும் போது அனைவருக்கும் பொதுவாக அப்படி எழுதினேனே தவிர எனக்கும் இதுதான் அதிகம் பிடிக்கும், இது பிடிக்கவே பிடிக்காது என்பதெல்லாம் கிடையாது.. நானும் உங்களைப் போலத்தான்...!

      /எப்பவோ ரொம்பப் பாதிக்கப் பட்டிருக்கிறீங்கள் போலும்... ஹா ஹா ஹா../

      ஹா.ஹா.ஹா. பாதிப்பின் தாக்கம் அதிகம் தெரிகிறதோ? ஆமாம் எங்கள் வீட்டில் கத்திரிக்காய் ஒத்துக் கொள்ளாதவர்களுக்காக இப்போது அந்தக் காயை பல மாதங்களாக நானும் தவிர்க்கிறேன்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. //அன்று நான் என்னிடமிருந்த நீளமான பச்சை கத்திரியையும், சதாரண வயலட் கத்திரியையும் சேர்த்து களமிறக்கினேன்//
    கலப்புத் திருமணம் பண்ணி வச்சுப் பெருமைப்படுறீங்க:))

    //இன்னமும எண்ணெய் விட்டு நன்றாக திருப்பி கொடுத்தபடி இருக்க சற்று மொறு, மொறு கத்திரிக்காய் கறி ரெடி.//
    சூப்பராக இருக்குது, செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கலப்புத் திருமணம் பண்ணி வச்சுப் பெருமைப்படுறீங்க:))/

      ஹா.ஹா.ஹா. ஓ. இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? எப்படியோ அவங்களும் (அந்த கத்திரிகளும் நடுவில் கத்திரியை போடாமல்) சந்தோஷபட்டுகிட்டா சரிதான்...! என்ன சொல்றாங்க..:)

      கத்திரிக்காய் கறி நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு ரொம்ப சந்தோஷம். செய்து பார்க்குறேன் என்றதற்கும் மிக்க மகிழ்ச்சி.
      எனக்குத்தான் பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. ஆஹா குடைமிளகாய்க் கறியும் வித்தியாசமான முறையில் செய்திருக்கிறீங்க.. செய்து பார்க்கப் போகிறேன்.

    வாழைத்தண்டில் குனுக்கோ? வாழைத்தண்டை அரைச்சு உழுந்தும் சேர்த்துப் பொரிச்சீங்களோ?,, வாழைத்தண்டு எண்ணெய் பட்டாலே கரைந்து காணாமல் போய் விடுமே..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      குடமிளகாய் கறி வித்தியாசமாக உள்ளதென கூறி அதையும் செய்து பார்க்கும் தங்களுக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன்.

      வாழைத்தண்டுடன் உளுந்து மட்டுமல்ல..அதுவும், துவரம்பருப்ப. கடலைப்பருப்பு மூனறையும் ஒரே அளவாக போட்டு அத்துடன் பச்சரியையும் இரண்டு பங்காக ஊற வைத்து அரைத்தெடுத்தேன். இதில் வாழைத்தண்டு பொடிதாக அரிந்தும் சேர்க்கலாம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. கமலாக்கா ஹா ஹா ஹா காய்களோடு உங்கள் எழுத்துகளும் சேர்ந்து ஜாலிப்படுத்துகின்றன. இல்லேனா காய்கள் கமலாக்காவிடம் கோபித்துக் கொண்டுவிடும். மத்ததுக்கெல்லாம் இத்தனை அருமையாயா எழுதற எங்களை மட்டும் அழகா இருக்க அப்படினு எழுத மாட்டீங்களோன்னு கேட்டு ஹா ஹா

    கமலாக்கா கத்தரிக்காய் பொரியல் இதே பொடி போட்டு புளி கரைத்து தெளித்துச் செய்வதுண்டு.

    வட்டமாகவோ நீளமாகவோ கட் செய்து. ஊற வைத்ததில்லை ஆனால் தாளித்து வதக்கும் போது புளி நீர் தெளித்து தெளித்து இதே பொடி போட்டு..

    குடை மிளகாய் வெங்காயம் கடலைமாவு அரிசி மாவு இது நான் பங்களூரில் இருந்த என் சித்தியிடம் கற்றது. நன்றாக இருக்கும்.

    வாழைத்தண்டு குனுக்கு இது வரை செய்ததில்லை. புதிதுதான். எபியில் வருமோ? வா கு?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இல்லேனா காய்கள் கமலாக்காவிடம் கோபித்துக் கொண்டுவிடும். மத்ததுக்கெல்லாம் இத்தனை அருமையாயா எழுதற எங்களை மட்டும் அழகா இருக்க அப்படினு எழுத மாட்டீங்களோன்னு கேட்டு ஹா ஹா/

      ஹா.ஹா.ஹா. நன்றி, நன்றி சகோதரி. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. ஆமாம்..அத்துடன் காய்கறிகளின் மனதையும் புரிந்து கொண்ட தங்களுக்கு மிக்க நன்றி.

      தாங்களும் இதுபோல் ஏற்கனவே செய்து சுவைத்திருப்பதற்கு மகிழ்ச்சி.

      வாழைத்தண்டு குனுக்கு சாதாரண குனுக்கைப்போலத்தான்... மீண்டும் ஒரு முறை வாழைத்தண்டு என்னிடம் வரும் போது அதை குனுக்காக்கி படங்களுடன் எ. பிக்கு அனுப்பி விடுகிறேன். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. மூன்று வித குறிப்புகள் - அனைத்துமே நன்று.

    பொதுவாக இரண்டு வகை கத்திரிக்காய் சேர்த்து செய்ததில்லை. கடலைமாவு, அரிசிமாவு சேர்த்து வெண்டைக்காய் மொறுமொறுவென செய்வதுண்டு.

    வாழைத்தண்டில் குணுக்கு! ஆஹா புதிய ஐடியா.

    அனைத்து குறிப்புகளும் சிறப்பு. குடைமிளகாய் இங்கே செய்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /வாழைத்தண்டில் குணுக்கு! ஆஹா புதிய ஐடியா. /

      வாழைத்தண்டில் பிறவற்றை (பொரியல், கூட்டு) செய்தால் குழந்தைகள் விரும்பவில்லை என்பதால் இந்த குணுக்கு ஐடியா . அனைத்தும் சிறப்பானவை எனக் கூறி ரசித்தமைக்கு மீண்டும் என் நன்றிகள். தங்கள் கருத்தை கவனியாததால் பதிலளிக்க தாமதமாகி விட்டது வருந்துகிறேன். கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. கத்தரிக்காய்,குடமிளகாய் செய்வதுண்டு வாழைத்தண்டு குணுக்கு புதியது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கத்திரியும் குடமிளகாயும் அனைவரும் விதவிதமாக செய்து சுவைப்பதுதான். இதே பாணியில் நீங்களும் செய்வது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அது போல் வாழைத்தண்டு வைத்து கறி. கூட்டு எனவும் அனைவரும் செய்வதுதான். நான் இங்கு சின்ன குழந்தைகள் இதை (உடம்புக்கு நல்ல தாயினும்) சாப்பிட அடம் பிடிப்பார்களேயென அதையும் சேர்த்து அரைத்து குணுக்காக்கி விட்டேன் அவர்களும் விருப்பத்துடன் சாப்பிட்டு விட்டார்கள். அப்போதே என் குழந்தைகளுக்கே இப்படித்தான் செய்து கொடுப்பேன். தங்கள் கருத்தை கவனியாததால் பதிலளிக்க தாமதமாகி விட்டது வருந்துகிறேன். கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete