Sunday, September 15, 2024

எதிர்பாராத தருணங்கள்.

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 

கடந்த நான்கைந்து நாட்களாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அதற்கு அனைவரும் மன்னிக்கவும். 

கடந்த புதனன்று எதிர்பாராதபடி எங்களுக்கு ஒரு கோவில் பயணமொன்று அமைந்து விட்டது. திங்கள் மாலை தீடிரென திட்டமிட்டபடி அப்பயணம் புதன் அன்று காலை கிடைத்தது. அது இறைவனின் அற்புத செயல்களில் ஒன்றாகும். அப்பயணம் தந்த அலைச்சல்களில, எனக்கு சிறிது உடல்நலக்குறைவு என்றால், எங்கள் பேத்திக்கு( மகளின் மகள்) வெள்ளி காலையில் இங்கு வந்த பின் நல்ல ஜுரம். பாவம்..! அந்த அலைச்சலில் அவளுக்கும் உடல்நலக் குறைவு வந்து விட்டது. எங்களிடம் கைவசம் இருந்த மருந்துகளை தந்தும், குணம் ஆகாததால், நேற்று மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்த பின் இன்றுதான் எழுந்து அமர்ந்திருக்கிறாள். அந்தக் கவலைகளிலும் என்னால் எப்போதும் வருவது போல் முறையாக வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும். 

ஒரு சிறு குன்றிருக்கும் இடமெல்லாம் ஆட்சி செய்வதும், அருள் புரிவதும் குமரன் என்பது பழங்கூற்று. ஆயினும், அனேக மலைகளும் "அவன்" வாசஸ்தலங்கள்தாம்.அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில மலைகளும், அவன் தந்தைக்கும், மாமனுக்கும் பெயர் பெற்றவையாகும் என்பதும் யாவரும் அறிந்ததே..!  மலைகளின் அழகும், அதன் தரிசனங்களும் நம் மனதிற்கு மகிழ்வூட்டுபவை. ரசிக்க வைப்பவை. அப்படி ரசிக்க வைத்த ஓரிடத்திற்கு செல்லும் வாய்ப்பு தீடிரென சற்றும் எதிர்பாராமல் இறைவன் அருளால் கிடைத்தது. அதற்கு இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள். 🙏. 



இந்த ஒரு மலை அல்ல.... 

இந்த இருமலைகளும் மட்டுமல்ல... 


ஏழு மலைகளும் ஒன்று சேர்ந்து கூடுமிடமாகிய... 


அந்த ஏழுமலையானின் தரிசனம் அவனருளால் கிடைத்தது. 


அந்த ஏழுமலைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டு அவனருளால்,அவன் பாதம் பணிந்து வணங்கி அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சென்று வந்தோம். 

கடந்த புதன், வியாழனுமாகிய இரு தினங்களும் மனதை எவ்வித கவலைகளுமின்றி, நிச்சலமாக இனிமையாக இருக்க வைத்ததும் அவனருளே.. 

இது அவனே அழைத்த எதிர்பாராத பயணம் என்பதினாலும், அவனருள் இல்லையென்றால் எதுவும் நடக்க சாத்தியமில்லை என்ற சத்தியமான  உண்மையாலும், அன்று அவ்வளவு கூட்டத்திலும் பகல் முழுக்க காத்திருந்ததற்கும், பின் எங்களுக்கென்று  தந்த அந்த நேரமாகிய பொழுதினில் இரவு மூன்று மணி நேரம் இடிபட்டு, காத்திருந்ததற்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான தரிசனத்தை தந்தான். 

எனக்கு அவ்விடம் விட்டு அகன்று வர கிஞ்சித்தும் மனமில்லை. அவனுடனே கலந்து விடும் பேராசை பேய்கள்  மனத்துள் வந்து தாண்வமாடின. ஆயினும், "அவன்" என் பிறப்போடு இடட கடமைகளை  முடிக்காது உயிர் பிரிய இந்த உடலுக்கு விருப்ப (உரிமையுமில்லை) மில்லை என்பதினால், மறுநாள் வியாழன் மதியம் தன் மைத்துனர் காளஹஸ்தி நாதரையும் தரிசிக்க வைத்து இரவு பத்திரமாக வீடு திரும்பச் செய்தான். நாராயணா.... இப்பிறப்பில் மட்டுமல்லாது வரும் எப்பிறப்பிலும் உன்னை என்றும் மறவாத வரம் தா..! உன் கருணையே கருணையப்பா. கோவிந்தா..! கோவிந்தா..! 🙏. 🙏. 



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த அன்னமயயா படத்தில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் அன்னமைய்யாவாகவே வாழ்ந்திருப்பார். அவரின் மனமுருகிய நடிப்பில் கண்களில் கண்ணீரையும், இறைவனை நெருங்கி அணுகும் நல்ல கருத்தையும் மனத்துள் தோற்றுவிக்கும் திரைப்படம் இது. எனக்கு மிக மிக (இப்படி எத்தனை மிகப் போட்டாலும் தகும்.) பிடித்தமான திரைப்படம். 

இந்த இறுதி காட்சியில் வரும்  அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க இன்னமும் எத்தனை ஜென்மங்கள் பிறந்திளைக்க வேண்டுமோ ? "விண்டவர் கண்டிலர்.. கண்டவர் விண்டிலர்."என்பது போல இறைவனை கண்ணால் (அகம், புறம்) காண்பதற்கு எத்தனை பிறவிகள்தோறும் எத்தனைமாயிரங்கள் புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ? இதே நினைப்புடன் நானும் இப்பூவுலகில் காத்திருக்கிறேன். அவனும் அதற்கான நம் நேரம் வரும் போது கண்டிப்பாக அதற்கு ஒரு வழி காட்டுவான். 🙏.

அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்றைய நன்நாளில் இப்பதிவை எழுதி பகிரச்செய்த அந்த ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான நமஸ்காரங்களும், நன்றியும். 🙏.

இப்பதிவை படிக்கும், படித்து கருததிடும்  என் அன்பான நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

16 comments:

  1. சிறப்பான தரிசனத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ.

    இந்த காணொளி முன்பும் பார்த்து இருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      தாங்களும் இப்பதிவின் மூலமாக வேங்கடவனின் சிறப்பான தரிசனம் பெற்றுக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. காணொளி பாடலையும் முன்பும் இப்போதும் கேட்டு ரசித்திருப்பதற்கும் மகிழ்ச்சி. தங்கள் உடல்நலத்தை இறைவன் சரி செய்து விடுவார். நானும் தங்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. திருமலை தரிசனம் கண்டு மகிழ்ச்சி. எல்லாம் அவன் செயல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். எல்லாம் அவன் செயல். அவன் அழைத்திராவிட்டால், இங்கிருந்து ஓரடி கூட எடுத்து வைத்திருக்க முடியாது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அருமையான பதிவும், படங்களும், பாடலும் .
    பாலாஜியின் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    நீங்களும், பேத்தியும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    அந்த ஏழுமலையானின் தரிசனம் அவனருளால் கிடைத்தது//

    அவன் அழைத்தால்தான் போக முடியும் என்று சொல்வார்கள்.
    அவனருளால் தரிசனம் செய்து வந்தது மகிழ்ச்சி.

    பகிர்ந்த பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.
    உணர்ச்சிபூர்வமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /அவன் அழைத்தால்தான் போக முடியும் என்று சொல்வார்கள்.
      அவனருளால் தரிசனம் செய்து வந்தது மகிழ்ச்சி./

      ஆம். "அவன்" துணை இல்லாமல் எந்த பிரயாணமும் மேற் கொள்ள இயலாது. என் மகிழ்வு கண்டு தாங்களும் மகிழ்ச்சியடைந்தது கண்டு நானும் சந்தோஷ மடைந்தேன் சகோதரி. மிக்க நன்றி.

      இப்போது எனக்கும் அலுப்பு குறைந்துள்ளது. பேத்திக்கும் ஜுரம் குறைந்துள்ளது. ஆனால், இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாது மிகவும் சோர்ந்து இருக்கிறாள். (அவள் எப்போதுமே சரியாக சாப்பிட பிடிவாதம் செய்வாள். அதிலும் இப்போது ஜுரம் வேறு.) இரண்டொரு நாளில் பழையபடிக்கு வந்து விடுவாள் என நம்புகிறேன். என்னையும், பேத்தியும் அக்கறையாக விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      பதிவை ரசித்தமைக்கும், அருமையான பாடலை கேட்டு மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பேத்திக்கு குணமாகி விட்டதா?  நீங்கள் என்ன எதற்கெடுத்தாலும் 'மன்னிக்கவும், மன்னிக்கவும்' என்று அலுவலகத்தில் பேசுவது போல பேசுகிறீர்கள்? 

    வலைப்பதிவுகளை விட குடும்பமும், ஆரோக்யமும் முக்கியம்தானே?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். இன்று பேத்திக்கு ஜுரம் குறைந்துள்ளது. ஆனால், எதுவும் சாப்பிடாமல், களைப்பாக இருக்கிறாள். இரண்டொரு நாளில் நன்றாக குணமடைந்து விடுவாள் .

      /நீங்கள் என்ன எதற்கெடுத்தாலும் 'மன்னிக்கவும், மன்னிக்கவும்' என்று அலுவலகத்தில் பேசுவது போல பேசுகிறீர்கள்? /

      ஹா ஹா ஹா. ஆமாம் நீங்கள் அனைவரும் எந்த வேலைக்கும் நடுவில் எப்படியோ வந்து கருத்துரைகள் தந்து விடுகிறீர்கள். நானும், சில சமயங்களில் அவ்வாறு வந்து விடுவேனென்றாலும், பல சமயங்களில் கைப்பேசியை கையில் எடுக்க முடியாதபடிக்கு லாக் ஆகி விடுகிறேன். அதனால்தான் உரிமையோடும், சற்றே குற்ற உணர்ச்சியோடும் மன்னிப்பையும் கேட்டு விடுகிறேன். இதில் தவறேதும் இல்லையல்லவா? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. குன்றெல்லாம் குமரன் வாசம்.  'குன்றுவளர் கந்தன் வரும் நேரம் எது கூறிவிடு' ....  சூலமங்கலம் சகோதரிகள் பாடல் நினைவுக்கு வருகிறது. 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்களில் முருகன் மேல் பாடும் இந்தப் பாடல்களும் கேட்டுள்ளேன். மற்றும் தெரிந்த பல தெரியாத பாடல்களையும் தங்கள் வெள்ளி பகிர்வில் கேட்கிறேன். அதற்கு தங்களுக்கு எங்களின் நன்றிகளையும் இத்தருணத்தில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அன்னமய்யா படம் பார்த்ததில்லை. பாடல்கள் இனிமை. கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      அன்னமய்யா படத்தையும் பாடல்களோடு ஒரு முறை நேரம் வாய்க்கும் போது பாருங்கள். உருக்கமான படம். ஆனால், படத்தின் பாடல்களை கேட்டு ரசித்திருப்பதற்கு மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. "திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா ..  .உந்தன் விருப்பம் கூடுமடா..  நீ திறந்திட நினைக்கும் கதவுகள் எல்லாம் தானே திறக்குமடா... என்றும் தர்மம் நிலைக்குமடா"  என்னும் கண்ணதாசன் வரிகளையே உங்கள் பதிவுக்கு பதிலாக்குகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /நீ திறந்திட நினைக்கும் கதவுகள் எல்லாம் தானே திறக்குமடா... என்றும் தர்மம் நிலைக்குமடா" என்னும் கண்ணதாசன் வரிகளையே உங்கள் பதிவுக்கு பதிலாக்குகிறேன்!/

      நன்றி. நன்றி. மிக்க நன்றி.

      ஆம்." திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நிகழும்" நானும் கேள்விபட்டுள்ளேன். பாடலும் அறிவேன். நல்லபடியாக பல திருப்பங்கள் எங்கள் வாழ்வில் மட்டுமல்லாது அனைவரது வாழ்விலும் வரட்டும். அந்த வேங்கடவனின் அருட்பார்வை அனைவரையும் நல்லபடியாக வாழ வைக்கட்டும். நானும் அவ்விதமே மனதாற வேண்டிக் கொள்கிறேன். தங்களது அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. திடீர் பயணம் - மகிழ்ச்சி. பேத்தியின் உடல் நிலை தற்போது சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். பதிவுகள் எங்கேயும் போய்விடப் போவதில்லை. முடிந்த போது படிக்கலாம். உடல் நலம் முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      ஆம். அதுவும் திருப்பதிக்கு தீடீர் பயணம் வாய்த்தது மிகுந்த மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அதைப்பற்றி பேசி, பேசி மகிழ்ந்தோம். தற்சமயம் பேத்திக்கு ஜுரம் குறைந்து விட்டது. அவள் என்றுமே உணவுகளை சரியாக சாப்பிட அடம் பண்ணுவாள். இப்போது ஒரு வார காலமாக சரியாக உணவு இல்லையென்பதால் மிகவும் அசதியாக உள்ளாள். மற்றபடி நலம்.தங்களின் பிஸியான நேரத்திலும், தப்பாது வந்து தரும் தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete