Tuesday, September 15, 2020

ஸ்ரீகிருஷ்ண பக்தி.

 முன்னுரை 

இக்கதையை அனைவரும் படித்து அறிந்திருப்பீர்கள். நானும் இதை எத்தனையோ எழுத்தாளர்களின் வர்ணிப்பில் ஆழ்ந்து படித்திருக்கிறேன். அன்றிலிருந்தே என் எழுத்தில் இக்கதையை எழுத நான் ஆசைப்பட்டதை உணர்ந்த கண்ணன் இப்போதாவது என்னை எழுத வைத்து விட அவனும் நினைத்தான் போலும்.. .! சரி.. .இதை  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திக்கு (கோகுலாஷ்டமி) எழுதலாமென நான்,  நினைக்கும் போது அவனே எங்கள் விட்டில் அவன் வந்த கதையை எழுத வைத்து விட்டான்.  போன வாரமும் வந்து முடிந்த ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்திக்குள் எழுதி முடித்து விடலாம் என்று ஆரம்பித்த கதை தடைப்பட்டு அவனருளால் இன்றுதான் முடிவுற்றது. 

ஆரம்பமும், முடிவும் அவனேயாகி நிற்கும் அவன் துணையின்றி, ஒரு துரும்பும் அசையாத போது, நம் வாழ்வில் நடக்கும் கதையின் நகர்வும், நாம்  நிர்ணயக்கும்  ஒவ்வொரு செயலும்,  அவனுடையதல்லவா?அப்படியிருக்கும் போது நம்மை இப்படி  எழுத வைத்துப் பார்ப்பதும், ரசிப்பதும் அவன் பொறுப்புத்தானே...! தவிர இந்த நாள் என்றில்லாமல் என்றுமே அவன் நாள்தானே. ..! ஒவ்வொரு நாளுக்குள்ளும் நின்று நம்மை நகர்த்துபவனின் மாய சக்தியை உணர்வது மட்டுமே நம் கடமை. ....!   பிற அனைத்தும் அவனின் செயல்தானே....!

ஸ்ரீ கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச நந்த கோப குமாராய ஸ்ரீ கோவிந்தாய நமோ நமஃ. 

ஒரு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில். இரவுநேரம் ஸ்ரீமத்பாகவத உபன்யாசம் நடைபெற்று கொண்டிருந்தது. அன்றைய தினம் பாகவதத்தில்  ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும், மாடு மேய்க்க அன்னை யசோதாவிடம் அனுமதி பெற்று, அன்புடன் அன்னை கையால், காலை பலகாரங்களை உண்டபின் ஒரு கானகம் வழியாக மாடுகள் சகிதம் சென்று கொண்டிருப்பதை பாகவதர் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் அணிந்த அணிகலன்கள் அந்த கானகத்தின் இருளையும் போக்கவல்லதாக எப்படி ஜொலிக்கிறது.. . அவர்களுடன் மேனி எழிலுடன் அது எவ்வாறு போட்டியிட்டு ஜெயிக்கப் பார்க்கிறது என்பதை மெய்யுருக தமது பாணியில் சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லி கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஊரில் திருட வந்த ஒரு திருடன் "ஊர்மக்கள் அனைவரும் இங்கு குழுமியுள்ளனர். இப்போதுதான் நான் சென்று திருட முடியும்" என்று  நினைத்தவன். தற்செயலாக அந்த பாலகர்கள் சிறந்த நகை நட்டுக்களுடன் தனியாக கானகத்தில் தினமும்  வருகின்றனர் என்று பாகவதர் வலியுறுத்திக் கூறும்  செய்தியில் கவரப்பட்டு ஒரு நொடி யோசித்தான். 

"இந்த ஊரில் இன்றிரவு முழுவதும் வலை வீசிி தேடும் பொருளை விட அந்த பாலகர்கள் தனியாக வரும் காட்டை இந்த பாகவதர் மூலமாக தெரிந்து கொண்டால், ஒரே நாளில் மிக சிறந்த செல்வந்தனாகி விடலாம்... அடேயப்பா...! எவ்வளவு நகைகளை பட்டியலிட்டு கூறுகிறார். தலையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கீரிடங்கள், காதுகளில் வைர குண்டலங்கள், மார்பில் வைரக்கற்களால் இழைக்கப்பட்ட பொன்னாபரணங்கள், இடுப்பில் ஒட்டியாணம், காலில் பொற்சலங்கைகள், இது போக அந்த சின்னஞ்சிறு பாலகன்  கிருஷ்ணனின் கைகளில் உள்ள தங்கப் புல்லாங்குழல் அத்தனை விலைமதிப்புள்ளதாம்... இத்தனையும் தரித்துக் கொண்டு யாருமில்லாத அத்துவான காடு வழியாக தன்ந்தனியராக"..இது மட்டுமேஅந்த திருடனின் மனதில் மறுபடி மறுபடி ஓடிக் கொண்டேயிருந்தது." அங்கு சென்று அந்த பாலகர்கள் மடக்கி எல்லாவற்றையும் அபகரிக்க எவ்வளவு  நேரமாகப் போகிறது.. . .? அனேகமாக நான் நாளையே பெருஞ் செல்வந்தன் ஆகி விடுவேன்." ஆனந்தமான கற்பனைகளில் அவன் கண்கள் அசர மேற்படி பாகவதர் சொன்னதை அவன் செவி மடுக்கவில்லை. 

ஒரு மட்டும் நள்ளிரவில் அவர் தன் உரை முடித்து, அமர்ந்திருந்த ஊர்மக்கள் கலையத் தொடங்கியதும், தன் வீடு திரும்ப  கோவில் வாசலில் கோவில் நிர்வாகிகள்  அமர்த்தி தந்திருந்த மாட்டு வண்டியில், ஏறுவதற்காக வந்தவரை, "ஐயா. . ஒரு நிமிஷம்.. ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். இப்படி தனியாக வருகிறீர்களா? என்ற திருடனை பார்த்ததும்,  "சரி..! என் பாகவதத்தில் இவனுக்கு ஏதும் சந்தேகம் வந்துள்ளது போலும்"... என்று நினைத்தபடி அவனுடன் சென்றார். 

கோவில் பின்புறம் யாருமில்லாத இடத்திற்கு வந்ததும், "ஐயா..நான் ஒரு திருடன். இன்று தங்கள் பேச்சில் நிறைய நகைகளுடன் வந்த இருபாலகர்களைப் பற்றி கூறினீர்கள்..! அவர்கள் எங்கு எந்த காட்டில் வருகிறார்கள். எனக்கு அடையாளம் காட்டுங்கள். அவர்கள் அணிந்து வரும் நகைகளை நான் கொள்ளையடிக்க வேண்டும். செல்வந்தனாக வேண்டும். வேண்டுமானால அதில் கொஞ்சம் உங்களுக்கும் தருகிறேன்." என்றான் திருடன். 

பாகவதருக்கு அவன் திருடன் என்றதும் ஒரு நிமிடம் உடம்பு வெலவெலத்தது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு,  "அப்பா.. அவர்கள் புராணங்களில் வருகிறவர்கள். கதை மாந்தர்களான கடவுள்கள்.. அவர்களை நாம் நேரில் காண முடியாது.. நான் ஏதோ என் வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி புராண கதைகளை விரிவாகவும், இடையில் என் கற்பனைகளையும்  கலந்து சொல்லி வருகிறேன். இதில் உண்மையாக அவர்களை நான் எப்படி அடையாளம் காட்டுவது? என்று சிறு நகைப்புடன் கூறவும் திருடனுக்கு மிகையான கோபம் எழுந்தது.

"ஐயா. . நான் இப்படி சாந்தமாக கேட்டால் சொல்ல மாட்டீர்கள். அவர்களை காப்பாற்ற நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். என் கோபத்தை இப்போது செயலிலும் காட்டப் போகிறேன். நீங்கள் அவர்கள் வரும் வழியை சொல்லாவிட்டால் இப்போதே உங்களை கொன்று விடுவேன்." என்றபடி தன் இடுப்பில் உள்ள கத்தியை எடுத்து அவர் கழுத்தில் வைத்தான். 

பாகவதருக்கு கத்தியை கண்டதும் பாதி உயிரே போய் விட்டது." அடேய் இருப்பா..! நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? உண்மையிலேயே அவர்கள் கடவுள்கள்.. அவர்களை இந்த மானிடப்பிறவியில் கண்களால் காண முடியாது" என்றெல்லாம் மறுபடியும் அவனுக்கு புத்தி சொல்ல வந்தவர், அவன் கத்தியை தன் கழுத்தில் வைத்து கண்டிப்பாக அழுத்தி விடுவான் என்பதை அவன் விழிகள் சிவந்து கோபமுற்ற பார்வையில் உருளுவதை பார்த்ததும், வாய்க்குள்ளேயே விழுங்கிக் கொண்டார். 

" அப்பா. . என்ன இது? இதற்கெல்லாம் நீ கத்தியை காட்டுவாயா? எனக்கும் அவர்கள் வரும் விபரம் தெரியுமேயன்றி, எந்த காடு என்பது விபரமாக தெரியாது . அது இதோ எதிரில் இருக்கும் இந்த காடாக கூட இருக்கலாம். நீ அங்கு சென்று காத்திரு. ஒரு வேளை அவர்கள் இந்த வழியாக  வந்தாலும் வரலாம்." என்று தட்டுத்தடுமாறி ஒரு சமாளிப்புக்காக சொன்னதும்,  "சரி!.. உன் பேச்சை நம்பி இப்போதே போகிறேன். நாளை காலையில் நீ சொன்ன அந்த கண்ணன் வருவானில்லையா? அப்படி வரவில்லையென்றால், நான் திரும்பவும் இங்குதான் வருவேன். அதற்குள் அவர்கள் எந்த காட்டில் வருவார்கள் என்பதை யாரிடமாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வந்தவுடன் விபரம் சொல்ல ஏதுவாக இருக்கும். இப்போது நீங்கள் போகலாம்.." என்றபடி அவரை விடுவித்தான் திருடன். 

அவனிடமிருந்து தப்பித்த பாகவதருக்கு உடம்பு கைகால்கள் சில்லிட்டு விட்டது." "சே..! திருடனாக மட்டுமில்லாமல், சரியான பைத்தியகாரனாகவும் இருக்கிறான்.என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் என்கிறானே..! கிருஷ்ணரின் நகைகளாம்...! இவன் போய் கொள்ளையடிக்கப் போகிறானாம்...! நாம் வேறு இன்னமும் சில நாட்கள் இங்கு வந்து பாகவதம் செய்ய ஒப்பந்தமாகி உள்ளது. அதை முடித்து விட்டால் அவன் கண்களிலிருந்து தப்பித்து நம் ஊருக்கு சென்று விடலாம். அது வரை இப்படி ஏதாவது சொல்லி தப்பிக்க வேண்டும். கண்ணா.. நீதான் எப்படியாவது என்னை காப்பாற்ற வேண்டும்"என்றெல்லாம் மனதுக்குள் புலம்பிக் கொண்டே தம் இருப்பிடம் போய் சேர்ந்தார். 

அங்கு திருடன் உடனே  அந்த நள்ளிரவிலும் அந்த காட்டிற்குள் பயணித்தான். மறுநாள் விடிந்தவுடன் தனக்கு கிடைக்கப் போகும் செல்வங்களையும், அதற்கு காரணமாக அந்த இரு சிறுவர்களையும் நினைத்தபடி பயமின்றி அந்த காட்டுக்குள் சென்று கொண்டேயிருந்தான் . 

அடர்ந்த காடு.. .. . திருடனுக்கு இருட்டை பற்றி கொஞ்சமும் பயமில்லை.. ஆனால், காட்டு மிருகங்கள் வந்து தாக்கி விடுமென்ற ஒரு சிறு பயத்திற்காக, ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அங்கிருந்து மிக லேசாக புலரும் அதன் வடிவ அடையாளம் கொண்டு கிழக்கு திசை நோக்கி  பார்த்தபடியிருந்தான். அந்த பாகவதரும் கண்ணன் கிழக்கு திசையிலிருந்து வரும் போது எப்போதும் தினமும் உதிக்கும் ஆதவனை விட ஆயிரம் கோடிப் பிரகாசமாக கண்ணன் நடந்து  வருவதாக குறிப்பிட்டிருந்தது நினைவில் நின்றதால் கிழக்கு திசையைத் தவிர அவன் கண்கள் வேறு திசையை நோக்கவில்லை. 

இடையே விடியலில் நேரத்தில் கண்கள் தூக்கத்தில் சிக்கித் தவிக்கும் போது, விழிகளை அழுத்தி கசக்கியபடி, கண்ணனின் நகைகளையும், அவன் உருவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து"இதோ அந்த பாலகன் வரும் நேரம் நெருங்கி விட்டது. அவன் வரவை வழிமேல் விழி வைத்திருந்து பார்க்க வேண்டாமா? அதற்குள் நீ அலுப்பில் அசந்தால் எப்படி. .?" என்று தன் விழிகளை வைதபடி தனககுள் கடிந்து கொண்டான். 

அன்றிரவு நீண்ட நேரம் போனது மாதிரியே உணர்ந்தான். மறுபடி மரத்திலிருந்து இறங்கி, ஏறினான். "என்ன இது? இந்த கண்ணன் நேரத்தில் வந்து விடுவானா.. தெரியவில்லையே? " என தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான். பொழுது விடியும் நேரம் நெருங்குவதறகு அறிகுறியாக புள்ளினங்கள் தத்தம் குரல் இனிமையை வெளிக்காட்டி, தம் காலை வணக்கத்தை இயற்கைக்கு சமர்பிக்க ஆரம்பித்தன.  

சூரியன் இரவின் அணைப்பில் சற்று சேர்ந்திருந்த தன் தேகச்சோம்பலை உதறி  விட்டு தான் போர்த்தியிருந்த இரவு போர்வையை சிறிது விலக்கி பார்த்து விட்டு, இவ்வுலகம் ஒவ்வொரு நாளும், தன் வருகையை ஒரே மாதிரி எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்பதை சந்தோஷமாக உணர்ந்தவனாய், தன் இயல்பான ஒளிக் கிரணங்களை மெல்ல தன்னைச் சுற்றிலும் பாய்ச்சியபடி வான வீதியில் உலா வருவதற்கு ஆரம்ப ஆயுத்தமாக  தன் கால்களை பதிக்க ஆரம்பித்தான். 

"இந்தக் கண்ணன் இன்று தாமதிக்கிறானா? இல்லை, இன்று வர வேண்டாமென நினைத்து விட்டானா? சூரியனை தோற்கடிக்கும் ஒளியுடன் அவனுக்கு முன் இந்த கானகத்தில் கால் பதிப்பான என அந்த பாகவதர் கூறினாரே.. ! ஒரு வேளை அவர் இரலென்றும் பாராமல்,, அவன் வீடு சென்று ஏதாவது எச்சரித்து சொல்லித்தான் அவன் இன்று  வராமல் இருக்கிறானோ. ..! விடிந்ததும் அவன் வரவில்லையென்றால் அவர் இருப்பிடம் சென்று விசாரிக்கும் போது, அவர் மட்டும் அப்படி சொல்லியிருப்பது தெரிய வந்தால், அக்ஷணமே அவரை கொல்லாமல் விடக் கூடாது...! " என்றெல்லாம வாய் விட்டு பல்லை கடித்து புலம்பியபடி கிழக்கு திசையையே உற்றுப் பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் பளபளத்தன. 

அங்கே பாகவதர் சொன்ன மாதிரி ஆயிரம் கோடி பிரகாசமாய் ஒரு ஒளி பிரகாசித்தது. அதைக்கண்டு தன் கிரணங்களை அதட்டி சுருட்டிய மாதிரி சூரியன் தன் ஒளிப்பாய்ச்சலை சற்று மங்கிப் போகச் செய்தான். மீண்டும் சற்று இருளான அந்த இருளில். கண்ணனும், அவன் சகோதரனும் கை கோர்த்தபடி, வந்து கொண்டிருப்பதை அந்த திருடன் கண்டான்.

அந்த பாகவதர் வர்ணித்த மாதிரி அவர்கள் அணிந்திருந்த நகைகள் வேறு மேலும் இருளை விரட்டி ஒளியூட்டின. அந்த திருடன் விழி அசைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்கையில் கண்ணனின் கையிலிருந்த தங்கப் புல்லாங்குழல் என்ற கருவியிருந்து  வந்த இனிய இசை நாதத்தில்  அவன் கண் மூடி மெய் சிலிர்த்து சிறிது நேரம் சமைந்து போனான். "என்ன இது? அவர்கள் வருவதற்குள் மரத்திலிருந்து கீழிறங்கி, பதுங்கியிருந்து தீடிரென அவர்களை வழிமறித்து நகைகளை பறிக்க வேண்டுமென்ற எண்ணமின்றி, முன்பின் தெரியாத, இது வரை கேட்டிராத இந்த இசையில் இப்படி மயங்கி கண்மூடி இருக்கிறோமே" என்று சிறிது நேரத்தில் தன்னிலை உணர்ந்தவனாய் வெட்கி தன் அசட்டுத்தனத்தை புறந்தள்ளி விட்டு மரத்திலிருந்து இறங்க முற்பட்டான். அதற்குள் கண்ணனும், மிக அருகில் வந்து  விடவே, ஆச்சரிமுற்று அவனைப் பார்த்த திருடன் அவனை வழிமறிப்பதை விட்டு விட்டு அவன் அழகிய முகத்தை பார்ப்பதொன்றே தான் வந்த காரியத்தில் ஒன்றென நினைப்புடன் அவனை பார்த்தபடியே நின்றிருந்தான் . 

"என்ன இரவிலிருந்தே எங்களை எதிர்பார்த்தபடி மரத்தில் சிரமமான வாசமோ?" தன்னருகில் வந்தவன் தன்னுருவத்தை கண்டும் சிறிதும் பயமின்றி இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று நினைக்காத திருடன்  சற்று பிரமித்தான். 

ஒருவாறு சமாளித்தபடி, "ஆமாம்.  நீங்கள் யார்? இந்த இருட்டுப் பிரியாத நேரத்தில், இத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டு, தன்னந்தனியராக பெரியவர்களின் துணையில்லாமல், யாரேனும் கள்வர்கள் வருவார்களே என்ற பயம் சிறிதுமின்றி காட்டு வழியே இப்படி வரலாமா? என்று கேட்ட திருடன் தன் குரலிலும், இப்படி ஒரு கனிவு எப்படி வந்தது என ஆச்சரியமடைந்தான். 

"கள்வர்களா ? யார் அவர்கள்? நாங்கள் இதுவரை அவர்களை பார்த்ததேயில்லை. அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தானா. .? ஐயோ. எனக்கு பயமாக இருக்கிறதே. ...!" சற்று பயந்த மாதிரி கண்ணன் நடிக்கவும், திருடனின் மனதில் அளவற்ற பாசம் அவன் மேல்  பிரவாகமாக எழுந்து ஆர்ப்பரித்து பொங்கியது. 

" குழந்தைகளா.. .! பயந்து விடாதீர்கள்.  இவ்வளவு அழகான குழந்தைகளை இத்தனை நகைகள் இட்டு இந்த இருட்டுப்பிரியாத நேரத்தில் அனுப்ப உங்கள் பெற்றோருக்கு எப்படி மனசு வந்ததோ. .? இதோ பாருங்கள்.. நான் சொல்வதை கேட்டு பயந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்தவுடன் உண்மையை மட்டும் சொல்ல வேண்டுமென ஏதோ எனக்குள் தோன்றுகிறது. நான் கூட ஒரு கள்வன்தான். அதுவும் அந்த பாகவதரின் பேச்சைக் கேட்டு உங்களையே வழிமறித்து உங்கள் நகைகளை அபகரிக்க வந்தவன்தான் . .! ஆனால்,, உங்கள் முகத்தைப் பார்த்ததும்  எனக்கு அந்த ஆசையே போய் விட்டது. எப்படியென்றும் தெரியவில்லை...." என்றபடி கண்ணனின் மோவாயை தொட்டவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த உணர்வில் சிலிர்த்துப் போனான். 

நீ கள்வனா...! அப்படியென்றால் இந்த நகைகளெல்லாம் உனக்கு வேண்டுமா? நாங்கள் தர முடியாது என்றால், வலுவில் எங்களை அதட்டி மிரட்டி அதையெல்லாம் அபகரிப்பாயா? கண்ணன் இன்னமும் பயந்தது போல் நடிக்க, "ஐயோ.. அப்பா. . இதென்ன இப்படி கேட்கிறாய்?உங்களைப் போய்  அதட்டி மிரட்டுவேனா? நான் உங்களை பார்ப்பதற்கு முன்பு வரை களவன்தான். .. இப்போதுதான் எனக்கு அந்த எண்ணமே இல்லையே. ..! என்றான் திருடன் பரிதவித்த குரலில். 

கண்ணன் ஒரு புன்முறுவல் பூத்தபடி,  "அப்பாடி... நான் பயந்து விட்டேன். நீ நல்ல திருடன்தான். ஆனால், நீ ஆசைப்பட்டு இங்கு வந்த காரணப்படி, எங்கள் நகைகளை பரிசாக உனக்குத் தருகிறோம். வாங்கிக் கொள்...! என்றான். 

" இல்லையில்லை. .. எனக்கு வேண்டாம். எனக்கு அந்த ஆசையே முற்றிலுமாக போய் விட்டது. உன்னைப் பார்த்துக் கொண்டே இந்த பிறவி முழுவதும் இப்படியே இருந்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், அது சாத்தியமல்லவே ... .! இவ்வளவு அழகான உங்களை கண்ட நொடியிலிருந்து எனக்குள் இத்தனை மாற்றமா? உங்களைப் பெற்றெடுத்த அந்த புண்ணியவான்களுக்கு நீங்கள் குழந்தைகளாக இருக்க வேண்டாமா? பத்திரமாக போய் வாருங்கள். இந்த திருடன் மீது இந்நேரம் உனக்கும் பாசம் வந்திருந்தால் எனக்காக ஒரு உபகாரம் செய்வாயா? "என கண்ணனின் அழகு முகத்தைப் பார்த்தபடி கைக் கூப்பி கெஞ்சினான் அந்த திருடன். 

அவன் கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது. 

" என்ன செய்ய வேண்டுமென்று கூறு.. ! என்னால் முடிந்தால் கண்டிப்பாக அதைச் செய்கிறேன்" கண்ணன் அன்புடன் அவன் கைத் தொடவும், மறுபடி ஒரு மின்சாரம் பாய்ந்தது திருடனின் உடலில். 

ஒரு நொடி பேச மறந்து அந்த தொடுவுணர்வு தந்த இன்பத்தில் திளைத்த திருடன், "அப்பா,  தினமும் நான் இங்கு வந்து விடுகிறேன். நீயும் மறக்காமல், இவ்வழியே வந்து உன் அழகான முகதரிசனத்தை எனக்குத் தருவாயா.  ? அது ஒன்றே எனக்குப் போதும்.. .! உன்னிடம் நான் வேண்டுவதும்  அதுவேதான்..."வேறு எதுவும் எனக்கு வேண்டியதில்லை.. .. எதையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஆசைகளும் இல்லை. ...." மேற்க் கொண்டு பேசவும் முடியாமல், தன்னை கட்டுப்படுத்த தெரியாமல்,  திருடன் உணர்ச்சிவசப்பட்டு குமுறி  குமுறி அழலானான். 

கண்ணன் முகத்தில் மந்தகாசம் இன்னமும், கூடியது. அருகிலிருக்கும் சகோதரனைப் பார்த்து சிறு நகைப்பொன்றை வீசினான். 

" சரி. . உன் விருப்பம் அதுவானால் நானும் உடன்படுகிறேன். ஆனால் தினமும் அல்ல.. உனக்கு வேண்டும் போது, நீ நினைத்தவுடன் வருகிறேன். அதற்கு பிரதி உபகாரமாக நான் தரும் இந்த நகைகளை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீ சொல்வதை நான் கேட்பேன்." என கண்ணன் தன் பேச்சால் திருடனை மடக்கவும், திருடனும், அரைகுறை மனதோடு சம்மதித்தான். 

கண்ணனின், மற்றும் பலராமனின் நகைகள் கை மாறின. தன் மேல் பட்டு அங்க வஸ்திரத்தில், கண்ணன் தலையிலிருந்த கீரிடத்திலிருந்து, காலில் அணிந்திருந்த சலங்கை கொலுசு வரை அனைத்தையும் கழற்றி முடிந்து கொடுத்தான். ஒவ்வொன்றாக அவன் களையும் போது. திருடன் தவித்தான். "வேண்டாமப்பா... .அதை மட்டும்  கழற்றாதே.. இது போதும் எனக்கு... . நீ இவ்வளவு பிடிவாதமாக தருவதினால்தான் இதையெல்லாம் வாங்கியேக் கொள்கிறேன். உன் தரிசனம் வேண்டும் போது கிடைப்பதற்காகத்தான் இதற்கு ஒப்புக் கொண்டேன்." என அவன் உணர்ச்சி வசப்பட்டு கூறுவதை புன்னகையுடன் கேட்டபடி, "பரவாயில்லை.. பெற்றுக் கொள். எங்களிடம் இதைப் போன்று நகைகள் ஏராளமாக உள்ளது. தவிர நீ இன்று ஒன்றுமில்லாமல் வெறும் கையை வீசிக் கொண்டு உன் வீட்டிற்கு சென்றால், உன் உறவுகள் கோபித்து தூஷனை செய்யமாட்டாார்களா? அதனால் நான் விருப்பமாாகத் தருவதை பெற்றுக் கொள்் " என சமாதானபடுத்தியபடி அவன் தந்ததை பெற்றுக் கொண்ட திருடன் கண்ணனை  பிரிய மனமின்றி கண்ணனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர்களை திரும்பித் திரும்பி பார்த்தபடியே அந்த அதிகாலை பொழுதில் அந்த கானகத்தை விட்டு தன் உயிரைப்பிரிந்த ஒரு மனோ பாவத்துடன் வெறும் கூடான தன்னுடலை மட்டும் சுமந்தபடியான உணர்வுடன்  நடந்து சென்றான். 

காலையில் கண் விழித்த பாகவதருக்கு நேற்றிரவு நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. இன்றும் அந்த திருடன் வந்து என்னவெல்லாம் சொல்வானோ? "நேற்று இரவெல்லாம் அந்த கானகத்தில் காத்திருக்க வைத்து விட்டாயே. .! பொய்யா சொல்லுகிறாய்? எங்கே அந்த குழந்தைகள்? அவர்களை நீ எங்கே ஒளித்து வைத்து விட்டாய்?" என்று கையிலிருக்கும் கத்தியை எடுத்து காட்டி எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப் போகிறானோ. ..! நினைப்பு ஒரு பக்கம் நடுக்கத்தை தந்தாலும், மாலை கோவில் உபன்யாசம் சொல்வதற்கு செல்கிற வரை வேறு எங்காவது சென்று  அவன் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென தன்னை வெளியில் செல்ல தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். 

அப்போது வாயிற்கதவை தட்டும் சப்தம் கேட்கவே. "யார் இந்த நேரத்தில்" என்றவாறு கதவை திறந்தவருக்கு உயிரே போனது மாதிரி இருந்தது. யாரை நினைத்தபடி இவ்வளவு நேரம் விசனமடைந்தாரோ, யார் கண்ணில் படாமல் மாலை வரை எங்காவது சென்று விட விருப்பப்பட்டாரோ, அவனை வாசலில் வந்து நிற்கவும் பாகவதருக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. 

" நீயா"என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து தட்டுத்தடுமாறி வருவதற்குள், அவன் "ஐயா..! என்றபடி அவர் காலில் வேரறுந்த மரமாய் விழுந்தான். 

" எழுந்திரப்பா. .என்ன இது.. ? என்னவாயிற்று உனக்கு ..ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்? "என்றபடி அவர் பதற திருடன் எழுந்து," ஐயா. . உங்களால்தான் நான் அவர்களை காண முடிந்தது. ஆகா.. .என்ன ஒரு அழகு.. .! என்ன ஒரு கனிவு. .! ஆகா..  நான் பெற்ற அந்த சுகானுபவத்தை  எப்படி விவரிப்பேன்..! இந்தப் பிறவியில் நான் செய்த பாவங்கள் எல்லாம் அகன்ற மாதிரி, வேறு ஒரு புதுப் பிறவி எடுத்த மாதிரி, அவர்களை தரிசித்த அந்த ஒரு தொடியில். .உணர்ந்தேன். இதோ என் மேனியெங்கும் இப்போதும் எப்படி சிலிர்க்கிறது பாருங்கள். .! இந்த அனுபவம் உங்களால்தான் கிடைத்தது. அதனால்தான் உடனே உங்களை காண நீங்கள் தங்குமிடம் விசாரித்துக் கொண்டு இங்கு வந்து விட்டேன். "அவனின்  பரிதவிப்பான வார்த்தைகளின் பொருள் பாகவதருக்கு இருந்த மனோ நிலையில், அவருக்கு சற்றும் விளங்கவேயில்லை. .

" இருப்பா. .. யாரைக்கண்டாய்? எங்கே கண்டாய்? உணர்ச்சிவசப்படாமல் மெள்ள விபரமாகச் சொல்லு... .! என அவர் கொஞ்சம் பதற்றத்துடனே அவனை ஆசுவாசபடுத்தியதும், "அதான் ஐயா... நீங்கள் நேற்று கோவிலில் எல்லோருக்கும் சொன்னீர்களே. ..  அந்த தங்கமயமான அற்புத குழந்தைகள் ஏராளமான நகைகளுடன் தெய்வீக ஒளியுடன் கானகத்தில் காலை நேரத்தில் தினமும் தவறாது வருவார்கள் எனக் கூறினீர்களே.. ! அவர்களைத்தான் சந்தித்து விட்டு வருகிறேன்.  . அதைப் பற்றித்தான் கூறியும் கொண்டுள்ளேன்." என அவன் விளக்கவும், பாகவதருக்கு ஒரு நொடியில் மூர்ச்சை வரும் போலிருந்தது. 

என்ன உளறுகிறான் இவன்..? கண்ணனை நேரில் கண்டானா? அதுவும் நான் கதையில் சொன்ன அங்க அடையாளங்களுடன். ..அப்படியே கண்ட மாதிரியல்லவா பிதற்றுகிறான். . ஒரு வேளை இரவெல்லாம் விழித்திருந்ததில், வந்த ஏமாற்றம் அவனை இப்படி பேசும் நிலைக்கு கொண்டு வந்து விட்டதோ? இந்த நிலையில் இவன் மேலும் எனக்கு ஏதாவது துன்பங்கள் தருவானோ?" அவருக்கு இன்னமும் பயம் அதிகரித்தது.

" அப்பா... நீ சாட்சாத் அந்த பகவான் கண்ணனையா கண்டாய்?  கொஞ்சம் தெளிந்து யோசித்துப் பேசப்பா.. அவர்கள் கடவுள்கள்.. அவர்களை நீ எப்படி நேரில் காண முடியும். .?  அவர் பயத்துடன் வார்த்தைகளை உகுக்கவும், "ஐயா.. .நீங்கள் நம்ப மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். அதனால்தான் அவன் விரும்பி எனக்குத் தந்த அவனுடைய அணிகலன்களை உங்களுக்கு காண்பிக்க, எனக்கு விருப்பமில்லாத போதும் அவனிடமிருந்து பெற்று வந்தேன். அதையெல்லாம் பார்த்தாவது என் கண்களை நம்புங்கள். ." என்றபடி தன் கையில் வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து, அதில் கண்ணன் தன் பட்டு பீதாம்பரத்தில் கட்டித்தந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவன் நகைகளை எடுத்து பரப்பி வைத்தான். 

பாகவதருக்கு இப்போது தன் கண்களை நம்ப முடியவில்லை. அவர் தினமும், அவர் வாழ்நாளில் இதுவரை ஆயிரம் முறைக்கும் மேல், எந்த நகைகளை பற்றி விஸ்தாரமாக விவரித்து  பாகவத பிரவசனம் செய்தாரோ அந்த நகைகள் கண்முன்னாடி ஜொலித்தன.  வைரங்கள், ரத்தினங்கள் பதித்த கீரீடம், ஒட்டியாணம் முதற்கொண்டு கண்ணனின் அங்கம் தழுவும் நகைகள், கூடவே கண்ணனின் புல்லாங்குழல், பாதச்சலங்கைகள்.... அவரால் நம்பவே முடியவில்லை. .ஒரு நிமிடத்திற்கு மேலாக அவர் இந்த உலகில் இல்லாமல்  இருந்த அனுபவத்தை உணர்ந்தார்.

 "ஐயா.  .. இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?" திருடனின் கேள்வியில் மறுபடி இந்த உலகத்துக்குள் வந்தவர், சற்று சுதாரித்து கொண்டு, "நான் இத்தனை வருடமாக அவனையே நினைத்து,, அவனுடனே வாழ்ந்து, அவன் நாமாவையே ஸ்மரித்து, அவனைப் பற்றியே எப்போதும் பேசி, அவன் புகழைப்பாடி வாழ்நாளை கழித்து வருகிறேன். எனக்கு ஒரு வேளையாவது  காட்சியளிக்காதவன் ஒரு இரவில், உனக்கு எப்படி காட்சி தந்து தன் நகைகளையும் கழற்றித் தந்தான்?  என்னால் இன்னமும் உன்னை நம்ப இயலவில்லை. நீ எங்கிருந்து இந்த நகைகளை, நான் அவனைப்பற்றி சொன்ன கதைகளுக்கேற்ப கொண்டு வந்தாய் என எனக்கு மேலும்  சந்தேகம் வருகிறது. ..!"என அவர் முடிக்கவும் திருடனுக்கு சற்று கோபம் வந்தது. 

" ஐயா...! நான் நேற்று வரை பயங்கர திருடன்தான். எந்த ஒரு பொய்ச் சொல்ல அஞ்சியதில்லை. சமயம் வரும் போது பிறரை தாக்கி, காயப்படுத்த சங்கட பட்டதேயில்லை.... அப்போது அவர்கள் துன்பத்தைக் கண்டு பரிதவிக்கவும்,  ஈவு இரக்கம் காட்டி, அவர்களை  விட்டு விடவும் செய்ததில்லை. ஏனென்றால் என் தொழில் திருட்டுத்தான்...அதில் இதெல்லாம் பார்த்தால் எனக்கு லாபமில்லை. எந்த வித பயனுமில்லை..! அதனால்தான் நீங்கள் சொன்னவுடன் அந்த குழந்தைகளைப் பிடித்து, அவர்கள் நகைகளை அபகரித்து பெரும் லாபமடையத்தான் ஆவலுடன் உங்களிடம் வழி விசாரித்துக் சென்றேன். இன்று அதிகாலை வரை எனக்கு அந்த எண்ணம் ஒன்றுதான். ...! ஆனால் அந்த மாயக்குழந்தைகளை பார்த்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. என் மனதையே, அதில் இருந்த திருட்டுத்தனத்தையே  அவர்கள் கொள்ளையடித்து விட்டார்கள். இப்போது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு அமைதி மட்டுந்தான் என் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த மனதை உங்களிடம் காட்டிச் செல்லவே நான் இங்கு வந்தேன். 

நாளை மறுபடி அவர்களை சந்தித்து இந்த நகைகளையெல்லாம் அவர்களிடமே தந்து விட்டு, ," நான் எப்போதும் அவர்களுடன் இருக்கும்படி ஒரு உபாயம் சொல்லுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்ளப் போகிறேன். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லையென்றால் அங்கேயே அவர்கள் கண்முன்னால் என் உயிரையும் மாய்த்துக் கொள்ளுவேன். அதைக்கண்டு அவர்கள் மனம் மாறினாலும் சரி..! இலலை. .இதோடு என் இந்தப் பிறவி முடிந்து போனாலும் சரி. .! அவ்வளவுதான்....! நான் போய் வருகிறேன் ஐயா... எனக்குள் இந்த அனுபவம் வந்ததற்கு நீங்களும் ஒரு காரணம்...உங்களுக்கு என் நன்றி.. " என்றபடி அவன் புறப்படலானான்.  

பாகவதர் தான் பிரசங்கம் கேட்டதைக் போன்ற உணர்வையடைந்தார்." அப்பா. ..என்னை மன்னித்து விடு. உன்னை சந்தேகப்பட்டது தப்புதான்.. என்னையும் உன்னுடன் அழைத்துச்செல். நானும் இந்தப்பிறவியில் நான் அன்றாடம் வழிபடும் கண்ணனை தரிசித்த பேறையடைகிறேன். மறுக்காமல் நானும் உன்னுடன் வருவதற்கு சம்மதித்து அழைத்துச் செல்கிறாயா...." என்று அன்புடன் கெஞ்சிக் சொல்லவும் அன்று இரவு அவரையும் அழைத்துப் போவதாக திருடன் வாக்குரைத்தான். 

மறுநாள் வெள்ளி முளைக்கும் நேரம். கானகத்தில் அதே இடத்தில் திருடனுடன் பாகவதரும் காத்திருக்க, திருடனின் மனமெல்லாம் " குழந்தைகளா. . நேற்று சொன்னது போல் இன்று நீங்கள் எனக்கு தரிசனம் தர விரைவில் வந்து விடுங்கள். உங்களை பார்க்காத ஒவ்வொரு நொடியும்  நான் அனலில் இட்ட புழுவாக துடிக்கிறேன். இந்த பாகவதர் வேறு இன்று காலை நான் எத்தனை முறைச் சொல்லியும், என்னை நம்பவில்லை.  இப்போதும் என்னை சோதனை செய்வதற்காகத்தான் என்னுடன் வந்திருக்கிறாரா என்றும்  தெரியவில்லை... ஆனாலும், எனக்கு உங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது. இதோ. .! உங்கள் நகைகளை உங்களிடம் தரவே வந்திருக்கிறேன். எனக்கு இந்த நகைகள் வேண்டாம். என் குடும்பம் வேண்டாம். உங்களின் அருகாமை மட்டும் எப்போதும் வேண்டும். அதுவே நான் உங்களிடம் வேண்டுவது...  அதை மட்டும் இன்று வந்து எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள்.. . " என்று கண்ணனை நினைத்தவாறு இருந்தது. 

பாகவதரின் மனமோ," இவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் புறக்கணிக்கவும் இயலவில்லை. நேற்று மாதிரியே கண்ணன் இன்றும் நான் நினைத்தவுடன் இங்கு வருவான் எனறு இவன் கூறுகிறான். இவனிடம் உள்ள நகைகளெல்லாம் கண்ணனின் நகைகளாக நாம் வர்ணனையில் படித்தது போல் இருக்கிறது. ஆனால், கடவுள் அவதாரமாகிய கண்ணன், நான் நித்தமும் துதித்து வணங்கி வரும் எம்பெருமான், இப்போது இந்த திருடனுக்கு ஒரே இரவில் காட்சி தந்திருக்கிறான் என்பதை நம்பவும் கஸ்டமாக இருக்கிறது. ம்.  . ம்.  பார்க்கலாம். இன்னமும் கொஞ்ச நேரத்தில் இவன் சாயம் வெளுத்து விடுமே.. .! " என்று மனதுக்குள்  புலம்பியபடி இருந்தது. 

பறவைகளின் சலசலப்பில் கதிரவன் கண் விழித்து விட்டான் கிழக்கு திசை இருளை தன்னிடமிருந்து அன்றைய இரவு வரை பிரித்து வைக்க ஆசைப்படுவதாய், இருட்டுடன் பேசி வாக்கு வாதம் செய்வதைக் கண்டதும், சமாதானபடுத்த பகலவன் தான் வருவதாக பறவைகள் மூலம் தூது அனுப்பினான். 

திருடனின் கண்கள் கண்ணனை காண ஆவலாய் பரபரத்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கிலிருந்து ஜோதி ரூபத்திற்கிடையே அழகே ஒர் வடிவம் எடுத்தது போல், அண்ணனும் தம்பியுமாக பேசிக் கொண்டே  கைக்கோர்த்தபடி வந்து  கொண்டிருப்பதை திருடன் கண்டான்..திருடனுக்கு மறுபடி நேற்று போல், உடம்பெல்லாம் சிலிர்த்தது. கண்ணன் தன் புல்லாங்குழலில் இனிய நாதத்தைப்  பரப்ப அந்த ஓசைகேட்ட புள்ளினங்கள், ஆதவன் தமக்கிட்ட  தூதை மறந்து அவன் கானத்திற்கேற்ப தம் இறகுகளை அசைத்தபடி வான வீதியில், வலம் வந்தன. 

கண்ணன் இசைத்த இசையில் கள்ளுண்டவனை போல் திருடனும் மெய் மறந்தான். சட்டென அருகிலிருக்கும் பாகவதரின் நினைவு வர, "ஐயா. .! .இதோ நான் வேண்டியபடி குழந்தைகள் வந்து விட்டனர். எத்தனை அழகு..! இவர்களை பார்ப்பதை விடவா இந்த உலகில் வேறு இன்பம்.. ? என்னை நம்ப மாட்டேன் என்றீர்களே...! இதோ நீங்களும் அவர்கள் வரும் அழகை ஆசைதீர பார்த்து மகிழுங்கள். அவன் இசையென்ற கானம் பாடி உலகை மயக்கியவாறு வரும அழகை கண் குளிர கண்டு களியுங்கள். அருகில் வந்ததும் குழந்தைகளின் அழகையும், அவர்களின் அமிர்தம் போன்ற பேச்சையும் கண்டு, கேட்டு பருகுங்கள்... " திருடன் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தவாறு கூறினான். 

பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கு கண்ணன் வருகிறான்? எப்போதும் போல் பொழுது புலர்வதற்கு கிழக்கு திசை ஆயததமாகிக் கொண்டிருப்பதை தவிர்த்து அவர் கண்களுக்கு அவன் காட்டிய அத்திசையில் ஒன்றும் புலப்படவில்லை. பறவையினங்கள் அன்றாடம்  வழக்கப்படி, தம்  இசைத் திறமையை உலகிற்கு பறைச்சாற்றியபடி சுற்றி வருவதை தவிர்த்து வேறு எந்த கானமும்  அவர் காதை தழுவவில்லை. 

அதற்குள் கண்ணன் அவர்கள் அருகில் வந்து விட்டான்." என்னப்பா.. ..! இன்று மறுபடியும் உடனே வந்து எனக்காக காத்திருக்கிறாய் ? நேற்று தந்த நகைகள் போதாதா? இந்தா. . .! இன்று நீ அழைத்தவுடன், உனக்காக இன்னமும் நிறைய நகைகளோடு வந்திருக்கிறோம். வேண்டியதைப் பெற்றுக்கொள்..  ."  கண்ணனின் குறும்புடன் பேசியதைக்  கேட்டதும் திருடன் மனம் பதறினான். 

"குழந்தைகளே... ! உங்களை காணவே இன்று  அழைத்தேன். நீங்கள் இல்லாமல் என்னால் இனி வாழ்வே முடியாது. இந்த நகைகள் யாருக்கு வேண்டும்.? நேற்று உங்களை பார்த்த நொடியிலேயே அந்த ஆசைகள் போய் விட்டதே. .!  நேற்றே உன் விருப்பத்தினால்தான் நகைகளை எடுத்துச் சென்றேன். அதுவும் உன்னை அடையாளம் காண்பித்த இந்த பாகவதருக்கு அதை காண்பித்து அவருக்கு நன்றி கூறத்தான்.எடுத்துச் சென்றேன்.  இதோ. . ..! அந்த நகைகளையும் திருப்பி கொண்டு வந்திருக்கிறேன். வாங்கிக் கொள். எனக்கு இந்த பிறவி முழுக்க உன்னழகை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை மட்டும் தந்து விடு. . அது போதும்..!" கண்ணின் சின்னக்கைப்பற்றி அவன் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு அழுதான்..

யாருடனோ பேசுவது போல், தனக்குத் தானே அவன் பேசிக் கொள்வதையும், அழுவதையும் கண்ட பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் மனம் பேதலித்து விட்டதா? என தாம் சந்தேகப்பட்டது சரியோவென தோன்றியது.

உடனே பாகவதர் திருடனை நோக்கி, "என்னப்பா யாருடன் பேசுகிறாய்? அப்போது குழந்தைகளின் அழகைப் பருகச் சொன்னாய்.  .! இப்போது பித்துப் பிடித்தவன் போல் தானாகவே பேசிக் கொண்டிருக்கிறாயே.. .! இங்கு உன்னையும், என்னையும் தவிர வேறு யாரும் இல்லையே. ..! என்று வினவவும், கண்ணனும்  பலராமனும் கலகலவென சிரித்தனர். 

"ஐயா. .. இதோ கண்ணெதிரே நிற்கும் இந்த அழகு தெய்வங்களை உங்களால் காண முடியவில்லையோ ?. என் கண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்னீர்களே ... உங்கள் கண்ணன் உங்களெதிரே நின்று பேசுவதை உங்களால் பார்க்க முடியவில்லையா... ? ஆச்சரியமாக உள்ளதே...! என்ற திருடன் கண்ணனைப் பார்த்து, "குழந்தைகளே....! எதற்காக உங்களுக்கு இந்த நாடகம்.? என் பார்வைக்கு  தெரியும் நீங்கள் தினமும் உங்களைப் பாடி, பூஜித்து வரும் இவர் பார்வைக்கு தென்படாமல், இருப்பது ஏன்? நேற்று உங்களை கண்டதை நம்பாத இவரை இன்று உங்களை காணச் செய்வதாக கூறி அழைத்து வந்திருக்கிறேன். அவரை பாவம் ஏமாற்றலாமா.?  அவரால்தானே எனக்கு இந்த மாற்றம் கிடைத்தது. நீ அவர் கண்களுக்கும்  கண்டிப்பாக தெரிய வேண்டும்.. "  திருடனின் கனிவான பேச்சு கண்ணனை புன்னகையுடன் பேச வைத்தது. 

அவர் தினமும் என்னை நினைப்பவர்தான். ஆனால் உன் ஒருநாள்  நம்பிக்கைதான் அதை விட சிறந்ததாக என்னை இங்கு அழைத்து வந்து உன்னால் என்னைக் காண வைத்தது. என்னைப்பற்றி சிறிதும் அறியாத  நீ  நான் இருப்பதை நம்பி என்னையே அன்று முழுவதும் நினைத்து, நான் இங்கு வருவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தாய்....! அந்த நம்பிக்கைதான் உனது ஆன்ம பலம்... அவரை அதே நம்பும் உணர்வோடு உன் கரங்களை பிடித்துக் கொள்ளச் சொல். ...!நீயும் என் கரத்தைப் பிடித்துக் கொள். அப்போது அவர் கண்களுக்கும் நான் தெரிவேன்.." என்றதும்," ஐயா.. இதோ நம் அருகில் நிற்கும் குழந்தைகளை காண முடியவில்லையா?  என் கையைப்பிடித்து கொள்ளுங்கள்..."என்று சொன்னவுடன் பாகவதர் அவன் கையைப் பிடிக்க, திருடன் மெய் சிலிர்க்க கண்ணனைத் தொட, பாகவதருக்கு கண்ணனின் திவ்ய ரூபம்  புலப்பட்டது. அவனின் அழகிய வதனத்தில் மதிமயங்கிய அவரும் திக்குமுக்காடினார். கூடவே" கண்ணா, இத்தனை நாள் நான் உன்னை வணங்கி வந்ததின் முழுப்பலன் கிடைத்து விட்டது. ஆனால் ஒரே ஒரு வருத்தம். உன் மகிமையை உணராத இந்த திருடனுக்கு ஒரே நாளில் தரிசனம் தந்த நீ எனக்கு மட்டும்  இத்தனை சோதனைக்களுக்குப் பிறகு  அதுவும் இவன் கைகளைப் பிடித்ததால்தான் காட்சி என வைத்திருக்கிறாய்...! அது மட்டும் ஏன் என  விளக்குவாயா ? என பக்தியுடன் கண்ணீர் மல்க கேட்டார். 

"பாகவதரே.  உம்மையும் நானறிவேன். உமது பக்தியின் பெருக்கையும் நான் உணர்வேன். நீங்கள் நாள்தோறும் என்னைத் துதித்து, பூஜைகள் செய்து. என்னைக்குறித்து மக்களுக்கு உபன்யாசங்கள் செய்து வழிபட்டு வருவதையும் அறிவேன். ஆனால் என்றேனும், ஒரு நாள் நான் உம்மெதிரே வருவேன் என என் மீது நம்பிக்கை வைத்தீரா?நீங்கள் தந்த வர்ணிப்பில் அந்த நம்பிக்கை அவனுக்கு வந்தது. அந்த நம்பிக்கையின் சக்திக்கு நான் கட்டுப்பட்டேன். அவ்வளவுதான். .! இதுதான் அவனின் ஆன்ம பூஜை. .என் மீது அன்பு செலுத்திய உங்கள் இருவருக்கும் நிச்சயமாக நற்கதி இப்போதே நான் தந்தேன். அவரவர்கள் வினைப்பயன் முடிந்ததும் என்னை வந்தடையுங்கள்... அதுவரை இந்த மானிடப்பிறவியின் கடமைகளை முடித்து, பிறவி முடியும் வரை என்னை கண நேரமும் மறவாதபடி நினைத்துக் கொண்டேயிருக்கும் வரத்தை அருள்கிறேன் .. " என்றபடி புன்னகையுடன் கூறிய மாயக் கண்ணன்  நொடியில் மறைந்தான். கண்ணனின் விளக்கத்தில், பக்தியின் இரு வேறு பிரிவுகள் பாகவதருக்கும், திருடனுக்கும் விளங்கின. அவனுடன் கூடிக் களிக்கும் நாளை நினைத்தபடி, வரும் நாட்களை அவனை நினைத்து அவனுடனான பக்தி மார்க்கத்தில் பிணைத்திருந்து, அவன் அழைக்கும் வரை அவன் சொல்படி அவரவர் கடமையை ஆற்றி இருக்க வேண்டி, பக்தி உணர்வுகளில் முழ்கியபடி அக்கானகத்தை விட்டு தத்தம் இல்லம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். 

இக்கதையின் மூலம் ஆன்ம பக்தியை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணரின் சேவடிகளை நினைத்தபடி நாமும் அவன் ஒருநாள் வந்து நம்மை கடைத்தேற்றி அழைத்துச் செல்வான் என நம்பிக்கை கொண்டு, அவனிட்ட கட்டளைப்படி வாழவும்  அவனருள் பூரணமாக கிடைக்க வேண்டுமென அவன் பாதங்களை பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன். . . ...

சற்றே நெடிய கதையாயினும், இக்கதையை அன்புடன் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Friday, August 28, 2020

காக்கும் கடவுள்..

 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா.

இது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்  வசிக்கும் அனைவரிடமும்  பணம் வசூலித்து  சென்ற வருடம் கொண்டாடிய பிள்ளையார் சதுர்த்திவிழா.  பிள்ளையார் சதுர்த்தி முடிந்த ஒரு வாரத்தில்,  ஒரு ஞாயறன்று, (அன்றுதான் அனைவரது வீட்டிலும் எல்லோரும் அலுவலகம், பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருப்பார்கள்.) காலை பூஜையுடன் ஆரம்பித்து, அன்று மாலை நடைபெற்ற சிலை கரைப்பு வரை அனைவருக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடுநடுவில் நடத்தி, (பெரியவர்களுக்கு என்று  சில நிகழ்ச்சிகள். . சின்னவர்களுக்கு என்று தனியாக ) மிக  சின்ன குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ்  ஸ்லோகம் சொல்வது, என பங்கேற்க வைத்து  இறுதியில் ஓவியம், கலர் வரைபவர்களுக்கென்று ஊக்கமளித்து, இறுதியில்  அனைவருக்கும் பரிசு தந்து ஒரே உற்சாகமாக அன்றைய நாளை கொண்டாடினோம்.  


இதில் எங்கள் வீட்டு சின்னக் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் தங்கள் ஓவிய திறமையை காட்டிய  சில படங்கள்.. உங்கள் பார்வைக்காக..! 








இத்தனையிருந்தும் அன்று மதிய உணவு இல்லாமலா?  மதிய உணவாக இதெல்லாம்.. . இன்னும் சில அயிட்டங்கள் தட்டில் இடமில்லாததால்,( வயிற்றிலும்)  வாங்கிக் கொள்ளவில்லை. . 



அனைவரும்  சாப்பிட்டான பின்  இந்த ஓவிய போட்டிகள்.. . பெரிய குழந்தைகள் பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்து பிள்ளையாரை  அழகாக வரைந்தனர்


இது சென்ற தடவையே பகிர வேண்டுமென படங்கள் எடுத்து வைத்திருந்தேன். வழக்கப்படி எழுத இயலாமல், இந்த வருடம் ஸ்ரீ விநாயகர் ஆக்ஞையால், எழுத முடிகிறது. எல்லாம் அவன் செயல்.. அவனன்றி ஒர் அணுவும் அசையாது அல்லவா. ..!

இந்த தடவை இந்த மாதிரி கொண்டாட்டம் இந்த தொற்றினால் இல்லாமல் போய் விட்டது.  அவரவர்கள் வீட்டில் சத்தமின்றி பிள்ளையார் போய் அமர்ந்து தனக்கு தேவையான பூஜைகளைப் பெற்றுக் கொண்டு  அமைதியாக சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

எங்கள் வீட்டிலும் தனியாக பிள்ளையார் சிலை வாங்கவில்லை. வீட்டில், பூஜையறையில், என் மாமியார் காலத்திலிருந்து இருந்து வரும் கற்சிலை விநாயகர்தான்  இந்த தடவை நாங்கள் செய்த பூஜைகளை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். 

இவர்தான் அது... 


இந்த தடவை இவரை சிறப்பான பூஜைக்காக வரவேற்க காலை வாசலில் போட்ட இளசும்  பழசுமான கோலம். 


நாங்கள் செய்த பூஜைகளை ஏற்றபடி இன்முகத்துடன் அமர்ந்திருக்கும் அவர். 


அவருக்காக தயாராகி கொண்டிருந்த  அவருக்கு மிகவும் பிடித்தமான, நமக்கும் மிகவும் பிடித்தமான பிரசாதம். 

 
பஞ்ச பூதங்களும் இணைந்து பூரணத்துவம் பெற்று அழகான அகிலமாய்  உருவானதைப்போல வெல்லம், தேங்காய், இருவகை பருப்புகள். ஏலக்காய் ஆகிய ஐந்தினால் இணைந்து திரண்ட வெல்லப்பூரணம்... .  


அண்டமெல்லாவற்றையும் தன் வயிறேனும் பேழைக்குள் அடக்கியபடி, அவைகளுக்கு தீங்கெதுவும்  வராமல் காத்து ரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்தும் உருவகத்துடன், விநாயகரின் அரும்பெரும் கருணையை காட்டும் விதமாய் பூரணத்தை தன்னுள்ளே அடக்கியபடி காட்சியளிக்கும் கொழுக்கட்டைகள். 


வீட்டில் சின்ன குழந்தைகள் இருப்பதால் அவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் என்பதால், என்னால் இயன்ற வரை கூடவே கொஞ்சம் நைவேத்தியமாக, புளியிட்ட அவல். உளுந்து வடை, கொண்டைக்கடலை சுண்டல், மகாநேவேத்தியம், பருப்பு என செய்தேன். கூடவே சாம்பார் வைக்க நினைத்து, மணியாகி விடவே, அதை மதியத்திற்கு ஒத்தி வைத்து விட்டு அவசரத்திற்கு குலதெய்வ சிற்றுண்டியும் நைவேத்தியத்தில் அன்று இடம் பிடித்தது. பிள்ளையார். "இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல்  ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 


ன்னும் அவருக்கு புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், எள்ளோதரை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், ஆமைவடை என்னும் பருப்பு வடை, நான் செய்துள்ள தேங்காய் பூரண கொழுக்கட்டையுடன், காரக் கொழுக்கட்டை எள்ளு இனிப்பு கொழுக்கட்டை, லட்டு. பாயாசம், போன்ற இனிப்புகள் எல்லாம் செய்து அவரை உண்ண வைக்க எனக்கு ஆசைதான். "முன்பு இந்த மாதிரி நிறைய வகைகள் செய்து கொண்டிருந்தேன். இப்போது இயலவில்லை.... எனவே இதையெல்லாம் மானசீகமாக உனக்கு நைவேத்தியத்தில் இணைத்து அர்ப்பணிக்கிறேன்." என நான் மானசீகமாக அவரிடம் பேசியதை அவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டி நான் செய்து வைத்த சிற்றுண்டிகளை சுவைக்க ஆரம்பித்தார். 

இவ்விதமாக இந்த தடவை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளினால் விநாயக சதுர்த்தி வைபவம் நல்லபடியாக நடைப்பெற்றது. ஒவ்வொன்றிக்கும் ஒரு தூண்டுகோலை தந்து நம்மை ஊக்குவிப்பவன் இறைவன். விநாயக சதுர்த்திக்கு முன்பே சென்ற வருட பழையதை எழுதி பின் இந்த வருடம் வீட்டில் கொண்டாடிய  விநாயக சதுர்த்தி பதிவையும் இணைக்க வேண்டுமென ஆரம்பித்து எழுத நேரமில்லாமல் பாதியில் எழுதி  வைத்திருந்த என்னை சகோதரர் நெல்லைத் தமிழன் வடிவில் விநாயகர் வந்து இன்று என்னை முழுவதுமாக  எழுத வைத்தார். "பிள்ளையார் பதிவை எழுதவில்லையா?" என்று கேட்டு நான்  எழுதி முடிக்க ஊக்கப்படுத்திய  விநாயகருக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் மனம் நிறைந்த  நன்றிகள்.🙏 . 🙏. 

சற்றே பெரிய பதிவாகி போன இதைப்படித்து கருத்திடும் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், என் பணிவான நன்றிகள். 🙏. 🙏. 

ஸ்ரீ விநாயகப்பெருமானின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க அவர் பாதம் பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும். 

Monday, August 17, 2020

கண்ணன் கேட்ட பதிவு.

 கிருஷ்ணாய நமஃ.. 

"அநேகமாக எல்லோருமே கிருஷ்ண ஜெயந்தி பதிவை போட்டு விட்டார்கள். நீதான் தாமதம்.."  தினமும் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் குற்றம் சொல்வது போல் ஒரு பார்வை  பார்க்கிறார்.

"கிருஷ்ணா என்னை மன்னித்து விடு.. ஏதேதோ காரணங்களால் தாமதம்.. உனக்கு தெரியாதா? என்னுள் இருந்து  எல்லாவற்றையும் நடத்தி வைப்பவனே நீதானே..!" பதிலாக என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய், " சரி. .! சரி...! நான் சொல்வதை எனக்கே திருப்பியா?ஏதோ மனிதர்களாகிய உங்களுக்கு  புத்தி சொல்லப் போக  என்னவோ, எல்லாவற்றிலும் என் பேச்சை மீறாத  மாதிரியும், கிருணார்ப்பணம் என்று ஒரு சொல் சொல்லி கழற்றி  விடுகிற மாதிரி ஒரு பாவனை....!" கிருஷ்ணர் மீண்டும் ஒரு குறும்பு பார்வையுடன் தொடர்ந்தார். 

" பகவானே...! என்ன இது அபச்சாரம்.. !  உன் பேச்சை மதிக்கிற மாதிரி ஒரு பாவனையா...! உன்னைத்தானே சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டே இந்த மானிடப் பிறவியில் உழலுகிறோம்.  எந்த ஒரு கெட்ட செயலையும், நல்ல செயலையும் உன்னை நினைத்து கிருணார்ப்பணம் என்று சொல்லி உன்னிடம் ஒப்படைத்தால், முறையே  அது பன்படங்காக பெருகி, பாவ புண்ணியங்கள் எங்களையே வந்து சாரும் என்பது நீ அறியாததா? அப்படித்தானே இந்த அர்ப்பணிப்பு  அந்நாளிலிருந்து உதயமாகி வந்தது..." நான் படபடவென உணர்ச்சியில் தத்தளித்து மன்னிப்பு கேட்பதை ரசித்தபடி கண்ணன் மீண்டும் குறும்புடன் முறுவலித்தான். 

" பார்த்தாயா...!  மறுபடி நான் சொன்னதையே என்னிடம் பிரசிங்கித்து கொண்டு...!  ஆக மொத்தம் எனக்கு ஒன்று புரிந்து விட்டது.."என்றார். மீண்டும் அதே குறும்பு... 

"என்ன கண்ணா.... என்றவளிடம், குருவுக்கு மிஞ்சிய சீடர்களாய்... நீங்கள் என்னை விட நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். சரி. . ! நான் போய் வருகிறேன். நீ என்னை உன் நட்புகளுக்கு பார்வையாக்குகிறாயா என்பதை நான் மீண்டும் பார்க்க வருவதற்குள் என் அடுத்த பிறந்த நாள் வந்து விடும் போலிருக்கிறது." என்றவர்  கண்களில் அதே சிரிப்பு. 

சரி.. இன்று கிருஷ்ணருக்காகவேனும்  எப்படியாவது பதிவை  பகிர வேண்டுமென உடனே மெனக்கெட்டு எழுத ஆரம்பித்து விட்டேன். அதுவும் இன்று முதன் முதலாக மாறி வைத்திருக்கும் பிளாக்கர். முதலில்  வந்திருக்கும் மாறுதலில் அவனைத் தொழுது எழுதுவதே ஒரு  நல்ல செயல்தானே..! என்ன சொல்கிறீர்கள்...! 


தன் அழகான பாதங்களை பதித்து  மெள்ள மெள்ள  வீட்டினுள்ளே  நடந்து வந்த கிருஷ்ணர். 

பூஜையறைக்கு வந்தவர் அலங்கரித்து வைத்திருந்த  தன்னுருவை கண்டதும் தன்னுள்ளே தானே ஐக்கியமாக்கி கொண்டபடி பூஜைகளை ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்த படசணங்கள் எங்கே என்றபடி ஒரு பார்வை... 


" அட... இவ்வளவுதானா..! முன்பெல்லாம் நிறைய இருக்குமே என நான் குறை கூற மாட்டேன். நீ அன்புடன் அழைத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அவல் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... சந்தேகமாயிருந்தால் ருக்மணியிடம் கேட்டுப்பார்." அதே.. அதே . . சிரிப்புடன் என் மனதை கொள்ளையடிக்கும் குறும்புக்கார கிருஷ்ணர்..

இப்போதுதான் திருப்தியாக உள்ளது.  நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்."  என்கிறான் அதே சிரிப்புடன் அந்த  யசோதை பாலகன்.


அவனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் அப்போது எழுந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சிதானே...! அவன் நம் அனைவரின் மகிழ்விலுந்தான் இருக்கிறான் என்பதை அவனே சொன்ன பின் அதுதானே உண்மை.... என்றும் சாஸ்வதம்... 

ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ... 

எனதருமை சகோதர, சகோதரிகளுக்கும் ஸ்ரீ கண்ணனுடன் சேர்ந்து இந்தப்பதிவு பிடித்திருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கும் பிடித்து படித்தப் பின் கருத்திட வருபவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 🙏. 🙏. 🙏. 

Monday, July 27, 2020

எனக்குமா...! இந்த தந்தையர் தினம்.. .


வணக்கம் நட்புறவுகளே...
தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து  விட்டது.  ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம்  வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ..இது மனிதர்களாகிய நமக்கு மட்டுமில்லை.... மற்ற ஜீவராசிகளுக்கும் அது ஒரளவு வளரும் வரை அன்னை தந்தையின் அக்கறை  கலந்த கண்காணிப்பான பாசம் அத்தியாவசியமாகிறது.

முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து தன் இனங்களை காப்பாற்றி காக்கும் பாசமுள்ள   பறவையினங்களும், குட்டிகளை சுமந்து  ஈன்று பிரியத்துடன் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்களுக்கும்,  தன் பாசத்தை  அவைகள் ஒரளவு வளரும் வரை தனது வளர்ப்புகளுக்கு தரும் வகையில்தான் இறைவன் அவைகளுக்கும் சிலவற்றை உணர்ந்தறியும் பகுத்தறிவையும்  அமைத்து வைத்திருக்கிறான் இதில் அயராது தன் இணையுடன் பாடுபடும் அந்த தந்தை இனங்களுக்கும் அப்படி ஒரு பாசப்பங்குகள்  உண்டெனில் அவைகளுக்கும் தந்தையர் தினமென்ற ஒன்றில்  ஒர் தனிச்சிறப்பு உண்டல்லவா.. ? இப்படியெல்லாம் கீழுள்ள சிட்டுக்குருவிகள் என்னை யோசிக்க வைத்தது.

இந்த சின்னஞ்சிறிய பறவைக்குத்தான் என்ன சுறுசுறுப்பு, கடமை உணர்ச்சி. காலை நேரத்தில், முந்திய  இரவே பேசி வைத்து கொண்டதை போன்று வேறு எந்த நோக்கமுமின்றி, நேராக கூட்டமாக வளர்ந்திருக்கும் தாவரங்களுக்கிடையே  அடையாளம் கண்டு அங்கு சென்று  தன் சின்னஞ்சிறு அலகால் பறிப்பதும், (அது ஏதோ புல் வகையை சேர்ந்த மாதிரி இருக்கிறது .)  மீண்டும் பறந்து வந்து கூடு கட்டும் இடத்திற்கு வந்து சேர்வதுமாக என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..

அதுவும் ஒரு பறவை வந்ததும், மற்றொரு  பறவை அதற்கெனவே காத்திருந்த மாதிரி விருட்டென்று பறந்து அந்த புல் பறித்து வர வேகமாக பறந்து செல்கிறது. அது வந்ததும் இதுவும் அப்படியே....காத்திருந்தது போல.. ! இப்படியே தொடர்ந்து மணிக்கணக்கில்... நடுவில் சிறிதேனும் அயர்ச்சியோ. சோம்பலோ காட்டவில்லை.  அதற்கு பசியே எடுத்தாலும்  அதற்கு கூட நேரம் ஒதுக்காது போலிருக்கிறது என இவைகள்  விடுவிடுவென எங்கோ மேல் மாடியில் கூடு கட்டும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நான் எண்ணி வியந்து கொண்டேன்.


"அப்பாடா.. நம் சிறு அலகிலிருந்து இது எங்காவது நழுவி விடுமோ என்ற பயம் போக்குவதற்காகவே இந்த ஜன்னல் கம்பி கிடைத்திருக்கிறது. கொஞ்சம் நேரம் இதில் அமர்ந்து விட்டு செல்லலாம். ஆண்டவா..! இதை கொண்டு போய் எனது வீட்டிற்கு பக்க பலமாக அமைக்க  சேர்க்கும் வரை, இது என் அலகிலிருந்து நழுவி விடாமல் இருக்கச் செய்து விடு. என்று பிரார்த்திக்கிறதோ... " இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி.


" இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனாலும் எத்தனை தடவை இந்த கம்பியில் வந்து வந்து அமர்வது? இன்னும் கொஞ்ச தூரந்தானே.. ! இது எப்போதையும் விட கொஞ்சம் பளுவாகத்தான் இருக்கிறது..! கஸ்டப்படாமல் ஒரு செயலை முடிக்க இயலுமா.. ? இருந்தாலும் ஒரு எம்பில் எழுந்து பறந்து விடலாம். இதோ.. முயற்சித்தே விடுகிறேன்..!" என்கிறதோ இந்த சின்னச் சிட்டு.


" இவர்களுக்கென்ன ஜாலியாக  பிற மனிதர்களின் உதவியுடன் வீடு கட்டிக் கொண்டு வெய்யில், மழை, குளிர் என்ற சீதோஷ்ண நிலை பற்றியெல்லாம், கவலையில்லாமல் உள்ளேயே  சகல வசதியும் செய்து கொண்டு அவர்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். எங்கள்  குழந்தைகளை வளர்ப்பதற்கு வீடு கட்ட எங்கள் இருவரைத் தவிர வேறு  யாரையும் உதவிக்கு  அழைக்காது நாங்களே சிரமபட்டாலும், படைத்தவனின் கருணையெனும் உதவியை நினைத்து ஆனந்தம் அடைந்தபடி, வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறோம். அவ்வளவுதான்.. ! அவரவர் விதிப் பயன்களை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.. "என்ற தத்துவங்களில் சிறிது நேரம் லயித்து செலவிடுகிறதோ..? இந்த சிங்கார சின்னச்சிட்டு.


" என்னத்தான் தத்துவங்களை நான் உதிர்த்தாலும், எங்களுக்கும் சபலங்கள் உண்டு. சண்டை சச்சரவுகள் உண்டு. அதையும் மீறி இந்த அன்பு, பாசம் எங்களுக்குள்ளும் உண்டு. அதுவும் உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு அடைக்கலமாய் இடம் கொடுப்பதால், உங்களிடம் நன்றியும் உண்டு. இந்த நன்றியுணர்வை எங்களுக்கு தந்த அந்த ஆண்டவனுக்கும் நன்றி. இன்னமும் கடமை முடியவில்லை வரட்டுமா? எனக்காக அவள் காத்திருப்பாள்.." என்றபடி பறந்து செல்ல தயாரானது அந்த சின்னக்குருவி.


இந்த சிட்டுக்குருவிகளை பார்த்து புகைப்படங்கள் எடுத்து வருடமாகி விட்டது. படங்களை பதித்து பதிவாக எழுததான் இத்தனை தாமதமாகி விட்டது. இதைப்பற்றி பதிவாக  எழுத நினைக்கும் போதெல்லாம், எனக்கு சகோதரி  "கோமதி அரசு அவர்களின்" நினைவுதான் வரும். அவர்களும் இப்படித்தான் பறவைகளைப்பற்றி ஏதாவது அபிமானமாய் பதிவுகளை எழுதிக் கொண்டேயிருப்பார் என நான் நினைக்கும் பொழுதெல்லாம் அவரும் "ஜன்னல் வழியே" என பறவைகளைப் பற்றி  நிறைய பதிவுகள் எழுதிவிட்டார். "பறவைகளின் பாச மலரான" அவருக்கும் அந்தப் பறவைகளின் நன்றியோடு என் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு கவிதை (அதற்கு கவிதை என்றுதான் நான் பெயர் வைத்துள்ளேன்.) அவ்வாறு இல்லையென்றால் இந்த குருவிகளும், என்னை மன்னித்து விடட்டும். 


சிட்டுக்குருவி கவிதை.... 

சின்னஞ்சிறு உன் தேகம் கண்டு
சிட்டுக்குருவி என ஆனாயோ..இல்லை, 
சிட்டென பறக்கும் உன் திறன் கொண்டு
சிகரமாய் உன் பெயர் அதுவானதோ. .. 
இன்றும் விருட்டென்று நீஅங்குமிங்கும் 
பயந்தும், பாய்ந்தும் செல்லும் அழகில்
பட்டான உன்  மேனியழகு கண்டு
பரவசமாகுது என் உள்ளம். 

சிறுமி நான்  உனைக் கண்ட நாளதில்

"சிட்டான உன்னைப்போல் அதுவும் ஓர்
சிட்டு என்பதால், அதன் பெயர்
சிட்டுக்குருவி" என்ற என் தாயின் 
சின்ன அறிமுகம்... உன்னுடனான  
சிறந்த நட்பாய் விரிந்தது. உன்
சின்னஞ்சிறிய அலகால் நான் இடும்
சிறு உணவுப் பருக்கைகளை நீ 
சிதறாமல் கொத்தும் அழகை
சிறிது நேரமாவது தினமும்  நான் 
சிந்தையொன்றி பார்த்துவந்தது என்
சிறு வயது நினைவிலிருந்து இன்னும் 
சிறிதேனும் விலகவில்லை. 

நடுவில் நான் உன்னைத் தேடிய

நல்லதோர் நாட்களில், நீ என்னை
நாடி வந்து பசியாற இயலாமல், 
என் பட்டிண வாசங்கள் உன்னை
என் பார்வையில் படாமல்
எங்கோ பதுக்கி வைத்திருந்தது.

கூடு கட்டி குடித்தனம் அமைக்க இந்த

கூச்சல் நகரம் உனக்கு தோதில்லை 
போலுமென என் மனதை தேற்றிய 
போதினிலே, காலப்பொழுதுகள்
பழுதாகி அமைந்த காரணத்தால், 
போலிகள் இல்லாத ஓர் இடம் தேடி,
"போய் வருகிறேன்"எனவும் சொல்லாது
உன்னினங்கள் கிளம்பி போய் விட்டதை
உன்னிப்பாய் கவனித்து கேட்டதில் ,
உயிர் போன வேதனை என்னுள்ளே ... 
உள்ளம் துடிக்க எழுந்ததை
உளமார நீ உணர்வாயா .. ! என்  
உள்ளங்கவர்ந்த சிட்டுக்குருவியே..! 

ஆண்டுகள் பலவும் கடந்த பின்பு, 

ஆறுதல் பெற்று நாங்கள் இன்புற 
மீண்டு வந்த உன்னைக் கண்டதுமே 
மற்றுமோர் பிறவி எடுத்து வந்த 
மட்டற்ற மகிழ்வு இன்று எங்கள் 
மனதினில்  இடம் பிடித்து அமர்கிறது. 

காக்கை. குருவி எங்கள் இனமென

களிப்புடன் நல் பாடல் தந்த கவி
பாரதியின் சொல் வாக்கை மீறி, இனி நீ 
வேற்றிசை  சென்றே வாழ்ந்திடும்
பிற வேறெந்த எண்ணங்களும் 
பின்னாளில் கொள்ள  வேண்டாம். 
பார் உள்ளளவும் உன் பேர் சொல்லி, 
பாசமுள்ள பறவைகள் இதுவென்று  
இனி வளரும் எங்கள் சந்ததிக்கும்  
பிரித்துணர்த்தி காட்டிப் பழக்கும் 
பேறொன்றை மட்டும்,  அந்த 
பாரதியின் நினைவாக நீ. . , பெரும்
பரிசெனவே எங்களுக்கு தந்து விடு...! 

சிறப்பு பிராத்தனைகள்....
ஏதோ எனக்கு தெரிந்த உரைநடை கவிதை என்ற பெயரில்,  சில  பல வார்த்தைகளை வரிசையாக கோர்த்து வடித்துள்ளேன். இதில் யாரும் நெற்றிக்கண் என்ற ஒன்றை  திறவாமல், அப்படியே திறந்தாலும், இதிலுள்ள குற்றங்களை மட்டும் சத்தமின்றி பொசுக்கி, குறைகளை உருவாக்கியவரை சுட்டெரிக்காமல் ,காத்தருள வேண்டுமாயும் எல்லாம் வல்ல சிவபெருமானையும் கூடவே நக்கீரரையும் மனமுருக வேண்டிக் கொள்கிறேன். நன்றி. 
🙏. 😀😁😀😁. 🙏. 

Thursday, June 18, 2020

இதுவும் ஓர் நோய்தான்..

பசி என்பது உலகத்திலேயே ஒரு கொடுமையான நோய்... எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு அந்தந்த நோய்களை  குணப்படுத்தி விடலாம்./விட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பசி நோய்க்கு வயிறார இரு வேளையாவது உணவளித்தால்தான் அது குணமாகும். இல்லையென்றால், அறிவு மழுங்கும். அவ்வாறான அறிவின் சறுக்கல்களில், தீய குணங்கள் பலதும் உற்பத்தியாகும். அது  பசியாற சிறிதேனும் திருடத்தூண்டி, அந்த திருட்டை மறைக்க பொய் எனும் பாலம் அமைத்து அதில் நடக்க வைத்து, இடையில் பெருங் கொள்ளைகளை அநாயசமாக செய்ய வைத்து, சமயத்தில் கொலைக்கும் வழி வகுக்கும். இதில் இந்தப் பசியை போக்கும் மருந்தாகிய  செல்வம் வெவ்வேறு அராஜக முறையில் வந்த பின் கூட அப்போதைக்கு பசியெனும் நோய் தன்னை அகற்றிக் கொண்டு அம்மனிதருக்குள் பஞ்சமாபாதகங்கள் எனும் தீயகுணங்கள் அபரிமிதமாக பெருகி தாண்டவமாடுவதை பார்த்து ரசிக்கும். 

பசி வந்திட பத்தும் பறக்கும். . என்றார் ஔவை பிராட்டி. 


அதென்ன...? பத்தும் என்றால், கீழுள்ள இவைகள்தான்... ! 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

விளக்கம்:-
ஒரு மனிதருக்கு பசியெனும் நோய் தோன்றி அது தீர்க்கப்படாமல் போகும் போது, அவர் அந்த கடும் நோயினால், அவதிப்படும் போது அவரிடத்தில் உள்ள சிறந்த குணங்களாக கருதப்படும்  அனைத்தும் கண்காணாமல் போய்விடும். இதைத்தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்றார் ஔவை பிராட்டியார். 

அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பசியின் மயக்கத்தில் பறந்து போகும்.

மேலே குறிப்பிட்டபடி பசி நோயினால், ஒரு மனிதருக்கு இவை அனைத்தும் காணாமல் போனபின் பசிக்கும் தருணங்கள் வந்தாலும், வந்த பசியை அலட்சியம் செய்து. அறிவு மழுங்களின் காரணமாக மனிதருடன் நட்பாகியிருக்கும் தீய எண்ணங்கள் முன்னே வந்து  நின்று, அதன் வழியே நடக்க வைக்கும். 

இத்துடன் இல்லாமை, இயலாமை போன்ற ஆமைகள் புகுந்த இடத்தில்  இந்த வறுமையும் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்து கொண்டு விடும்.  வறுமை எனும் நோய்க்கும், இந்த பசி நோயும் ஒர் இணைபிரியாத ஆத்மார்த்தமான நண்பன். ஆகவே இரண்டும் சேர்ந்து நட்புறவாகி இருக்கும் இடத்தில் மனிதர்கள் அது தீரும் மட்டும் சிரமபடுகிறார்கள். 

எப்போதுமே ஒரு பக்கத்திற்கு மறுபக்கம்  என்ற ஒன்று இருப்பதைப் போன்று, மேற்சொன்ன  மாதிரி தீய எண்ணங்கள் உருவாகும் வாய்ப்புக்கு எதிரிடையாக பிறப்பிலேயே நல்ல குணங்களோடு பிறந்திருப்பவர்கள் வறுமையையும்  ஏழ்மையையும் பொறுமையாக தாங்கி  கொண்டு போவதுடன்,  பிறரிடம்  அதை வெளிக்காட்டாமலும் இருப்பார்கள். அவர்களுக்கு இறைவனே நல்ல தீர்வு ஒன்றை நல்ல சமயத்தில் மறக்காமல் தருவான். 

 இதற்கேற்ற மாதிரி "தோழனோடும் ஏழமை பேசேல்.."என்றொரு பழமொழியும் உண்டு. நம்மோடு நெருங்கி பழகும் நட்பாக அயலார் இருந்தால் கூட, நம் ஏழ்மையைக்கூறி அவரை வருத்தவோ, தானும் வருந்தவோ கூடாது என்பார்கள். "செழிப்பை  அவசியமின்றி வெளிக் காட்டினால் அது பிறரை நோகடிக்கும் அகம்பாவம்.. ஏழ்மையை  அடிக்கடி வெளிப்படுத்தினால் அது பிறரால் நோகும் அவமானம்." என்பதும் எந்நாளும்  மாற்ற இயலாத வார்த்தைகள்தானே..! 

பொறுமை காத்து ஏழ்மையில் வாடும்  இவர்களுக்காக இறைவன்  மனித வடிவில் கண்டிப்பாக வந்து உதவி செய்வான். . ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் " உள்கட" ந்து இருக்கத்தான் செய்கிறான். ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ளும் போது, "அவன்"அந்த மனிதர்களின் மனதிலிருந்து வெளிப்படுகிறான். அதைதான் நாம்" மனித நேயம் "என்றும், "மனிதாபிமானம்" எனவும் சொல்கிறோம்

கீழுள்ள இந்தக் கதையை (இல்லை, கதை மாதிரி)  உள்ளதை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் தோன்றியது. 
 
படித்ததில் பிடித்தது .... 

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில், ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதித் தொங்க விடப் பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப் படித்தேன். 

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. 


எனக்கும் பொழுது போகவில்லை, அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "அந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனா ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு".


அங்கே ஓர் சிறிய கீத்துக் கொட்டகை. ஒரு நாள் மழைக்குக் கூடத் தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும், தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும்,


யாருப்பா நீ?


அம்மா, நான் இந்த வழியா வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 


தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சதுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறாங்க... 

அந்த கடிதம் நான் எழுதல தம்பி. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 

. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன். 

"தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்தக் கடிதத்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு.." என்று அறிவுரைத்தாள் அந்தத் தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தைக் கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டு தான் இருப்பார். ஆனாலும் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். *நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்*


மனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம்.


"அண்ணே இந்த விலாசம் எங்கேன்னு சொல்ல முடியுமா? கீழே 50 ரூபாய் கிடந்தது. அந்த அம்மாகிட்டக் குடுக்கணும். வழி சொல்றீங்களா?"


*மனித நேயம் செத்துப் போனது என்று யார் சொன்னது??? இன்னும் சாகவில்லை.


இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் மனித நேயம்!!

உண்மைதானே..! செல்வங்கள் என்றொரு தலைப்பில் நான் அன்றோர் பதிவு எழுதும் போது, அதற்கு நல்லதொரு கருத்துக்கள் தந்த  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள்"பசி வந்திட பத்தும் பறக்கும் " என்பது பற்றி எழுதுங்கள் என தன்  ஊக்க கருத்தையும்  சொன்னார். நேரம் வாய்த்தால் எழுதுகிறேன் என நானும் அவர்களின் கருத்துக்கு  பதில் சொல்லியிருந்தேன். 

அது போல் அந்த நேரம் வாய்த்ததோ  என்னவோ, இந்த" படித்ததில் பிடித்தது" எனக்கு வாட்சப்பில் வந்ததும், ஒரு மனிதரின் பசி எவ்வளவு கொடுமையானது, அதுவும் இப்போதுள்ள "இந்த கால கட்டத்தில்" எனத் தோன்றவே இந்தப்பதிவை எழுதினேன். இந்த வாட்சப் கதையை  அனேகமாக அனைவரும் படித்திருக்கலாம்.  இருப்பினும் என் பதிவிலும் படித்து அந்த வயதான பெண்மணிக்குள் அத்தனை ஏழ்மையிலும் இருக்கும்  நல்ல உள்ளத்தையும், அவருக்கு உதவும் நல்ல உள்ளங்களையும் மனதாற போற்றுவோம். சரிதானே..! 

அன்புடன் இந்தப் பதிவை படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏 .