Friday, August 28, 2020

காக்கும் கடவுள்..

 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா.

இது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்  வசிக்கும் அனைவரிடமும்  பணம் வசூலித்து  சென்ற வருடம் கொண்டாடிய பிள்ளையார் சதுர்த்திவிழா.  பிள்ளையார் சதுர்த்தி முடிந்த ஒரு வாரத்தில்,  ஒரு ஞாயறன்று, (அன்றுதான் அனைவரது வீட்டிலும் எல்லோரும் அலுவலகம், பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருப்பார்கள்.) காலை பூஜையுடன் ஆரம்பித்து, அன்று மாலை நடைபெற்ற சிலை கரைப்பு வரை அனைவருக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடுநடுவில் நடத்தி, (பெரியவர்களுக்கு என்று  சில நிகழ்ச்சிகள். . சின்னவர்களுக்கு என்று தனியாக ) மிக  சின்ன குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ்  ஸ்லோகம் சொல்வது, என பங்கேற்க வைத்து  இறுதியில் ஓவியம், கலர் வரைபவர்களுக்கென்று ஊக்கமளித்து, இறுதியில்  அனைவருக்கும் பரிசு தந்து ஒரே உற்சாகமாக அன்றைய நாளை கொண்டாடினோம்.  


இதில் எங்கள் வீட்டு சின்னக் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் தங்கள் ஓவிய திறமையை காட்டிய  சில படங்கள்.. உங்கள் பார்வைக்காக..! 








இத்தனையிருந்தும் அன்று மதிய உணவு இல்லாமலா?  மதிய உணவாக இதெல்லாம்.. . இன்னும் சில அயிட்டங்கள் தட்டில் இடமில்லாததால்,( வயிற்றிலும்)  வாங்கிக் கொள்ளவில்லை. . 



அனைவரும்  சாப்பிட்டான பின்  இந்த ஓவிய போட்டிகள்.. . பெரிய குழந்தைகள் பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்து பிள்ளையாரை  அழகாக வரைந்தனர்


இது சென்ற தடவையே பகிர வேண்டுமென படங்கள் எடுத்து வைத்திருந்தேன். வழக்கப்படி எழுத இயலாமல், இந்த வருடம் ஸ்ரீ விநாயகர் ஆக்ஞையால், எழுத முடிகிறது. எல்லாம் அவன் செயல்.. அவனன்றி ஒர் அணுவும் அசையாது அல்லவா. ..!

இந்த தடவை இந்த மாதிரி கொண்டாட்டம் இந்த தொற்றினால் இல்லாமல் போய் விட்டது.  அவரவர்கள் வீட்டில் சத்தமின்றி பிள்ளையார் போய் அமர்ந்து தனக்கு தேவையான பூஜைகளைப் பெற்றுக் கொண்டு  அமைதியாக சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

எங்கள் வீட்டிலும் தனியாக பிள்ளையார் சிலை வாங்கவில்லை. வீட்டில், பூஜையறையில், என் மாமியார் காலத்திலிருந்து இருந்து வரும் கற்சிலை விநாயகர்தான்  இந்த தடவை நாங்கள் செய்த பூஜைகளை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். 

இவர்தான் அது... 


இந்த தடவை இவரை சிறப்பான பூஜைக்காக வரவேற்க காலை வாசலில் போட்ட இளசும்  பழசுமான கோலம். 


நாங்கள் செய்த பூஜைகளை ஏற்றபடி இன்முகத்துடன் அமர்ந்திருக்கும் அவர். 


அவருக்காக தயாராகி கொண்டிருந்த  அவருக்கு மிகவும் பிடித்தமான, நமக்கும் மிகவும் பிடித்தமான பிரசாதம். 

 
பஞ்ச பூதங்களும் இணைந்து பூரணத்துவம் பெற்று அழகான அகிலமாய்  உருவானதைப்போல வெல்லம், தேங்காய், இருவகை பருப்புகள். ஏலக்காய் ஆகிய ஐந்தினால் இணைந்து திரண்ட வெல்லப்பூரணம்... .  


அண்டமெல்லாவற்றையும் தன் வயிறேனும் பேழைக்குள் அடக்கியபடி, அவைகளுக்கு தீங்கெதுவும்  வராமல் காத்து ரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்தும் உருவகத்துடன், விநாயகரின் அரும்பெரும் கருணையை காட்டும் விதமாய் பூரணத்தை தன்னுள்ளே அடக்கியபடி காட்சியளிக்கும் கொழுக்கட்டைகள். 


வீட்டில் சின்ன குழந்தைகள் இருப்பதால் அவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் என்பதால், என்னால் இயன்ற வரை கூடவே கொஞ்சம் நைவேத்தியமாக, புளியிட்ட அவல். உளுந்து வடை, கொண்டைக்கடலை சுண்டல், மகாநேவேத்தியம், பருப்பு என செய்தேன். கூடவே சாம்பார் வைக்க நினைத்து, மணியாகி விடவே, அதை மதியத்திற்கு ஒத்தி வைத்து விட்டு அவசரத்திற்கு குலதெய்வ சிற்றுண்டியும் நைவேத்தியத்தில் அன்று இடம் பிடித்தது. பிள்ளையார். "இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல்  ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 


ன்னும் அவருக்கு புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், எள்ளோதரை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், ஆமைவடை என்னும் பருப்பு வடை, நான் செய்துள்ள தேங்காய் பூரண கொழுக்கட்டையுடன், காரக் கொழுக்கட்டை எள்ளு இனிப்பு கொழுக்கட்டை, லட்டு. பாயாசம், போன்ற இனிப்புகள் எல்லாம் செய்து அவரை உண்ண வைக்க எனக்கு ஆசைதான். "முன்பு இந்த மாதிரி நிறைய வகைகள் செய்து கொண்டிருந்தேன். இப்போது இயலவில்லை.... எனவே இதையெல்லாம் மானசீகமாக உனக்கு நைவேத்தியத்தில் இணைத்து அர்ப்பணிக்கிறேன்." என நான் மானசீகமாக அவரிடம் பேசியதை அவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டி நான் செய்து வைத்த சிற்றுண்டிகளை சுவைக்க ஆரம்பித்தார். 

இவ்விதமாக இந்த தடவை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளினால் விநாயக சதுர்த்தி வைபவம் நல்லபடியாக நடைப்பெற்றது. ஒவ்வொன்றிக்கும் ஒரு தூண்டுகோலை தந்து நம்மை ஊக்குவிப்பவன் இறைவன். விநாயக சதுர்த்திக்கு முன்பே சென்ற வருட பழையதை எழுதி பின் இந்த வருடம் வீட்டில் கொண்டாடிய  விநாயக சதுர்த்தி பதிவையும் இணைக்க வேண்டுமென ஆரம்பித்து எழுத நேரமில்லாமல் பாதியில் எழுதி  வைத்திருந்த என்னை சகோதரர் நெல்லைத் தமிழன் வடிவில் விநாயகர் வந்து இன்று என்னை முழுவதுமாக  எழுத வைத்தார். "பிள்ளையார் பதிவை எழுதவில்லையா?" என்று கேட்டு நான்  எழுதி முடிக்க ஊக்கப்படுத்திய  விநாயகருக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் மனம் நிறைந்த  நன்றிகள்.🙏 . 🙏. 

சற்றே பெரிய பதிவாகி போன இதைப்படித்து கருத்திடும் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், என் பணிவான நன்றிகள். 🙏. 🙏. 

ஸ்ரீ விநாயகப்பெருமானின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க அவர் பாதம் பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும். 

Monday, August 17, 2020

கண்ணன் கேட்ட பதிவு.

 கிருஷ்ணாய நமஃ.. 

"அநேகமாக எல்லோருமே கிருஷ்ண ஜெயந்தி பதிவை போட்டு விட்டார்கள். நீதான் தாமதம்.."  தினமும் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் குற்றம் சொல்வது போல் ஒரு பார்வை  பார்க்கிறார்.

"கிருஷ்ணா என்னை மன்னித்து விடு.. ஏதேதோ காரணங்களால் தாமதம்.. உனக்கு தெரியாதா? என்னுள் இருந்து  எல்லாவற்றையும் நடத்தி வைப்பவனே நீதானே..!" பதிலாக என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய், " சரி. .! சரி...! நான் சொல்வதை எனக்கே திருப்பியா?ஏதோ மனிதர்களாகிய உங்களுக்கு  புத்தி சொல்லப் போக  என்னவோ, எல்லாவற்றிலும் என் பேச்சை மீறாத  மாதிரியும், கிருணார்ப்பணம் என்று ஒரு சொல் சொல்லி கழற்றி  விடுகிற மாதிரி ஒரு பாவனை....!" கிருஷ்ணர் மீண்டும் ஒரு குறும்பு பார்வையுடன் தொடர்ந்தார். 

" பகவானே...! என்ன இது அபச்சாரம்.. !  உன் பேச்சை மதிக்கிற மாதிரி ஒரு பாவனையா...! உன்னைத்தானே சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டே இந்த மானிடப் பிறவியில் உழலுகிறோம்.  எந்த ஒரு கெட்ட செயலையும், நல்ல செயலையும் உன்னை நினைத்து கிருணார்ப்பணம் என்று சொல்லி உன்னிடம் ஒப்படைத்தால், முறையே  அது பன்படங்காக பெருகி, பாவ புண்ணியங்கள் எங்களையே வந்து சாரும் என்பது நீ அறியாததா? அப்படித்தானே இந்த அர்ப்பணிப்பு  அந்நாளிலிருந்து உதயமாகி வந்தது..." நான் படபடவென உணர்ச்சியில் தத்தளித்து மன்னிப்பு கேட்பதை ரசித்தபடி கண்ணன் மீண்டும் குறும்புடன் முறுவலித்தான். 

" பார்த்தாயா...!  மறுபடி நான் சொன்னதையே என்னிடம் பிரசிங்கித்து கொண்டு...!  ஆக மொத்தம் எனக்கு ஒன்று புரிந்து விட்டது.."என்றார். மீண்டும் அதே குறும்பு... 

"என்ன கண்ணா.... என்றவளிடம், குருவுக்கு மிஞ்சிய சீடர்களாய்... நீங்கள் என்னை விட நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். சரி. . ! நான் போய் வருகிறேன். நீ என்னை உன் நட்புகளுக்கு பார்வையாக்குகிறாயா என்பதை நான் மீண்டும் பார்க்க வருவதற்குள் என் அடுத்த பிறந்த நாள் வந்து விடும் போலிருக்கிறது." என்றவர்  கண்களில் அதே சிரிப்பு. 

சரி.. இன்று கிருஷ்ணருக்காகவேனும்  எப்படியாவது பதிவை  பகிர வேண்டுமென உடனே மெனக்கெட்டு எழுத ஆரம்பித்து விட்டேன். அதுவும் இன்று முதன் முதலாக மாறி வைத்திருக்கும் பிளாக்கர். முதலில்  வந்திருக்கும் மாறுதலில் அவனைத் தொழுது எழுதுவதே ஒரு  நல்ல செயல்தானே..! என்ன சொல்கிறீர்கள்...! 


தன் அழகான பாதங்களை பதித்து  மெள்ள மெள்ள  வீட்டினுள்ளே  நடந்து வந்த கிருஷ்ணர். 

பூஜையறைக்கு வந்தவர் அலங்கரித்து வைத்திருந்த  தன்னுருவை கண்டதும் தன்னுள்ளே தானே ஐக்கியமாக்கி கொண்டபடி பூஜைகளை ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்த படசணங்கள் எங்கே என்றபடி ஒரு பார்வை... 


" அட... இவ்வளவுதானா..! முன்பெல்லாம் நிறைய இருக்குமே என நான் குறை கூற மாட்டேன். நீ அன்புடன் அழைத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அவல் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... சந்தேகமாயிருந்தால் ருக்மணியிடம் கேட்டுப்பார்." அதே.. அதே . . சிரிப்புடன் என் மனதை கொள்ளையடிக்கும் குறும்புக்கார கிருஷ்ணர்..

இப்போதுதான் திருப்தியாக உள்ளது.  நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்."  என்கிறான் அதே சிரிப்புடன் அந்த  யசோதை பாலகன்.


அவனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் அப்போது எழுந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சிதானே...! அவன் நம் அனைவரின் மகிழ்விலுந்தான் இருக்கிறான் என்பதை அவனே சொன்ன பின் அதுதானே உண்மை.... என்றும் சாஸ்வதம்... 

ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ... 

எனதருமை சகோதர, சகோதரிகளுக்கும் ஸ்ரீ கண்ணனுடன் சேர்ந்து இந்தப்பதிவு பிடித்திருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கும் பிடித்து படித்தப் பின் கருத்திட வருபவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 🙏. 🙏. 🙏. 

Monday, July 27, 2020

எனக்குமா...! இந்த தந்தையர் தினம்.. .


வணக்கம் நட்புறவுகளே...
தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து  விட்டது.  ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம்  வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ..இது மனிதர்களாகிய நமக்கு மட்டுமில்லை.... மற்ற ஜீவராசிகளுக்கும் அது ஒரளவு வளரும் வரை அன்னை தந்தையின் அக்கறை  கலந்த கண்காணிப்பான பாசம் அத்தியாவசியமாகிறது.

முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து தன் இனங்களை காப்பாற்றி காக்கும் பாசமுள்ள   பறவையினங்களும், குட்டிகளை சுமந்து  ஈன்று பிரியத்துடன் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்களுக்கும்,  தன் பாசத்தை  அவைகள் ஒரளவு வளரும் வரை தனது வளர்ப்புகளுக்கு தரும் வகையில்தான் இறைவன் அவைகளுக்கும் சிலவற்றை உணர்ந்தறியும் பகுத்தறிவையும்  அமைத்து வைத்திருக்கிறான் இதில் அயராது தன் இணையுடன் பாடுபடும் அந்த தந்தை இனங்களுக்கும் அப்படி ஒரு பாசப்பங்குகள்  உண்டெனில் அவைகளுக்கும் தந்தையர் தினமென்ற ஒன்றில்  ஒர் தனிச்சிறப்பு உண்டல்லவா.. ? இப்படியெல்லாம் கீழுள்ள சிட்டுக்குருவிகள் என்னை யோசிக்க வைத்தது.

இந்த சின்னஞ்சிறிய பறவைக்குத்தான் என்ன சுறுசுறுப்பு, கடமை உணர்ச்சி. காலை நேரத்தில், முந்திய  இரவே பேசி வைத்து கொண்டதை போன்று வேறு எந்த நோக்கமுமின்றி, நேராக கூட்டமாக வளர்ந்திருக்கும் தாவரங்களுக்கிடையே  அடையாளம் கண்டு அங்கு சென்று  தன் சின்னஞ்சிறு அலகால் பறிப்பதும், (அது ஏதோ புல் வகையை சேர்ந்த மாதிரி இருக்கிறது .)  மீண்டும் பறந்து வந்து கூடு கட்டும் இடத்திற்கு வந்து சேர்வதுமாக என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..

அதுவும் ஒரு பறவை வந்ததும், மற்றொரு  பறவை அதற்கெனவே காத்திருந்த மாதிரி விருட்டென்று பறந்து அந்த புல் பறித்து வர வேகமாக பறந்து செல்கிறது. அது வந்ததும் இதுவும் அப்படியே....காத்திருந்தது போல.. ! இப்படியே தொடர்ந்து மணிக்கணக்கில்... நடுவில் சிறிதேனும் அயர்ச்சியோ. சோம்பலோ காட்டவில்லை.  அதற்கு பசியே எடுத்தாலும்  அதற்கு கூட நேரம் ஒதுக்காது போலிருக்கிறது என இவைகள்  விடுவிடுவென எங்கோ மேல் மாடியில் கூடு கட்டும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நான் எண்ணி வியந்து கொண்டேன்.


"அப்பாடா.. நம் சிறு அலகிலிருந்து இது எங்காவது நழுவி விடுமோ என்ற பயம் போக்குவதற்காகவே இந்த ஜன்னல் கம்பி கிடைத்திருக்கிறது. கொஞ்சம் நேரம் இதில் அமர்ந்து விட்டு செல்லலாம். ஆண்டவா..! இதை கொண்டு போய் எனது வீட்டிற்கு பக்க பலமாக அமைக்க  சேர்க்கும் வரை, இது என் அலகிலிருந்து நழுவி விடாமல் இருக்கச் செய்து விடு. என்று பிரார்த்திக்கிறதோ... " இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி.


" இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனாலும் எத்தனை தடவை இந்த கம்பியில் வந்து வந்து அமர்வது? இன்னும் கொஞ்ச தூரந்தானே.. ! இது எப்போதையும் விட கொஞ்சம் பளுவாகத்தான் இருக்கிறது..! கஸ்டப்படாமல் ஒரு செயலை முடிக்க இயலுமா.. ? இருந்தாலும் ஒரு எம்பில் எழுந்து பறந்து விடலாம். இதோ.. முயற்சித்தே விடுகிறேன்..!" என்கிறதோ இந்த சின்னச் சிட்டு.


" இவர்களுக்கென்ன ஜாலியாக  பிற மனிதர்களின் உதவியுடன் வீடு கட்டிக் கொண்டு வெய்யில், மழை, குளிர் என்ற சீதோஷ்ண நிலை பற்றியெல்லாம், கவலையில்லாமல் உள்ளேயே  சகல வசதியும் செய்து கொண்டு அவர்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். எங்கள்  குழந்தைகளை வளர்ப்பதற்கு வீடு கட்ட எங்கள் இருவரைத் தவிர வேறு  யாரையும் உதவிக்கு  அழைக்காது நாங்களே சிரமபட்டாலும், படைத்தவனின் கருணையெனும் உதவியை நினைத்து ஆனந்தம் அடைந்தபடி, வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறோம். அவ்வளவுதான்.. ! அவரவர் விதிப் பயன்களை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.. "என்ற தத்துவங்களில் சிறிது நேரம் லயித்து செலவிடுகிறதோ..? இந்த சிங்கார சின்னச்சிட்டு.


" என்னத்தான் தத்துவங்களை நான் உதிர்த்தாலும், எங்களுக்கும் சபலங்கள் உண்டு. சண்டை சச்சரவுகள் உண்டு. அதையும் மீறி இந்த அன்பு, பாசம் எங்களுக்குள்ளும் உண்டு. அதுவும் உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு அடைக்கலமாய் இடம் கொடுப்பதால், உங்களிடம் நன்றியும் உண்டு. இந்த நன்றியுணர்வை எங்களுக்கு தந்த அந்த ஆண்டவனுக்கும் நன்றி. இன்னமும் கடமை முடியவில்லை வரட்டுமா? எனக்காக அவள் காத்திருப்பாள்.." என்றபடி பறந்து செல்ல தயாரானது அந்த சின்னக்குருவி.


இந்த சிட்டுக்குருவிகளை பார்த்து புகைப்படங்கள் எடுத்து வருடமாகி விட்டது. படங்களை பதித்து பதிவாக எழுததான் இத்தனை தாமதமாகி விட்டது. இதைப்பற்றி பதிவாக  எழுத நினைக்கும் போதெல்லாம், எனக்கு சகோதரி  "கோமதி அரசு அவர்களின்" நினைவுதான் வரும். அவர்களும் இப்படித்தான் பறவைகளைப்பற்றி ஏதாவது அபிமானமாய் பதிவுகளை எழுதிக் கொண்டேயிருப்பார் என நான் நினைக்கும் பொழுதெல்லாம் அவரும் "ஜன்னல் வழியே" என பறவைகளைப் பற்றி  நிறைய பதிவுகள் எழுதிவிட்டார். "பறவைகளின் பாச மலரான" அவருக்கும் அந்தப் பறவைகளின் நன்றியோடு என் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு கவிதை (அதற்கு கவிதை என்றுதான் நான் பெயர் வைத்துள்ளேன்.) அவ்வாறு இல்லையென்றால் இந்த குருவிகளும், என்னை மன்னித்து விடட்டும். 


சிட்டுக்குருவி கவிதை.... 

சின்னஞ்சிறு உன் தேகம் கண்டு
சிட்டுக்குருவி என ஆனாயோ..இல்லை, 
சிட்டென பறக்கும் உன் திறன் கொண்டு
சிகரமாய் உன் பெயர் அதுவானதோ. .. 
இன்றும் விருட்டென்று நீஅங்குமிங்கும் 
பயந்தும், பாய்ந்தும் செல்லும் அழகில்
பட்டான உன்  மேனியழகு கண்டு
பரவசமாகுது என் உள்ளம். 

சிறுமி நான்  உனைக் கண்ட நாளதில்

"சிட்டான உன்னைப்போல் அதுவும் ஓர்
சிட்டு என்பதால், அதன் பெயர்
சிட்டுக்குருவி" என்ற என் தாயின் 
சின்ன அறிமுகம்... உன்னுடனான  
சிறந்த நட்பாய் விரிந்தது. உன்
சின்னஞ்சிறிய அலகால் நான் இடும்
சிறு உணவுப் பருக்கைகளை நீ 
சிதறாமல் கொத்தும் அழகை
சிறிது நேரமாவது தினமும்  நான் 
சிந்தையொன்றி பார்த்துவந்தது என்
சிறு வயது நினைவிலிருந்து இன்னும் 
சிறிதேனும் விலகவில்லை. 

நடுவில் நான் உன்னைத் தேடிய

நல்லதோர் நாட்களில், நீ என்னை
நாடி வந்து பசியாற இயலாமல், 
என் பட்டிண வாசங்கள் உன்னை
என் பார்வையில் படாமல்
எங்கோ பதுக்கி வைத்திருந்தது.

கூடு கட்டி குடித்தனம் அமைக்க இந்த

கூச்சல் நகரம் உனக்கு தோதில்லை 
போலுமென என் மனதை தேற்றிய 
போதினிலே, காலப்பொழுதுகள்
பழுதாகி அமைந்த காரணத்தால், 
போலிகள் இல்லாத ஓர் இடம் தேடி,
"போய் வருகிறேன்"எனவும் சொல்லாது
உன்னினங்கள் கிளம்பி போய் விட்டதை
உன்னிப்பாய் கவனித்து கேட்டதில் ,
உயிர் போன வேதனை என்னுள்ளே ... 
உள்ளம் துடிக்க எழுந்ததை
உளமார நீ உணர்வாயா .. ! என்  
உள்ளங்கவர்ந்த சிட்டுக்குருவியே..! 

ஆண்டுகள் பலவும் கடந்த பின்பு, 

ஆறுதல் பெற்று நாங்கள் இன்புற 
மீண்டு வந்த உன்னைக் கண்டதுமே 
மற்றுமோர் பிறவி எடுத்து வந்த 
மட்டற்ற மகிழ்வு இன்று எங்கள் 
மனதினில்  இடம் பிடித்து அமர்கிறது. 

காக்கை. குருவி எங்கள் இனமென

களிப்புடன் நல் பாடல் தந்த கவி
பாரதியின் சொல் வாக்கை மீறி, இனி நீ 
வேற்றிசை  சென்றே வாழ்ந்திடும்
பிற வேறெந்த எண்ணங்களும் 
பின்னாளில் கொள்ள  வேண்டாம். 
பார் உள்ளளவும் உன் பேர் சொல்லி, 
பாசமுள்ள பறவைகள் இதுவென்று  
இனி வளரும் எங்கள் சந்ததிக்கும்  
பிரித்துணர்த்தி காட்டிப் பழக்கும் 
பேறொன்றை மட்டும்,  அந்த 
பாரதியின் நினைவாக நீ. . , பெரும்
பரிசெனவே எங்களுக்கு தந்து விடு...! 

சிறப்பு பிராத்தனைகள்....
ஏதோ எனக்கு தெரிந்த உரைநடை கவிதை என்ற பெயரில்,  சில  பல வார்த்தைகளை வரிசையாக கோர்த்து வடித்துள்ளேன். இதில் யாரும் நெற்றிக்கண் என்ற ஒன்றை  திறவாமல், அப்படியே திறந்தாலும், இதிலுள்ள குற்றங்களை மட்டும் சத்தமின்றி பொசுக்கி, குறைகளை உருவாக்கியவரை சுட்டெரிக்காமல் ,காத்தருள வேண்டுமாயும் எல்லாம் வல்ல சிவபெருமானையும் கூடவே நக்கீரரையும் மனமுருக வேண்டிக் கொள்கிறேன். நன்றி. 
🙏. 😀😁😀😁. 🙏. 

Thursday, June 18, 2020

இதுவும் ஓர் நோய்தான்..

பசி என்பது உலகத்திலேயே ஒரு கொடுமையான நோய்... எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு அந்தந்த நோய்களை  குணப்படுத்தி விடலாம்./விட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பசி நோய்க்கு வயிறார இரு வேளையாவது உணவளித்தால்தான் அது குணமாகும். இல்லையென்றால், அறிவு மழுங்கும். அவ்வாறான அறிவின் சறுக்கல்களில், தீய குணங்கள் பலதும் உற்பத்தியாகும். அது  பசியாற சிறிதேனும் திருடத்தூண்டி, அந்த திருட்டை மறைக்க பொய் எனும் பாலம் அமைத்து அதில் நடக்க வைத்து, இடையில் பெருங் கொள்ளைகளை அநாயசமாக செய்ய வைத்து, சமயத்தில் கொலைக்கும் வழி வகுக்கும். இதில் இந்தப் பசியை போக்கும் மருந்தாகிய  செல்வம் வெவ்வேறு அராஜக முறையில் வந்த பின் கூட அப்போதைக்கு பசியெனும் நோய் தன்னை அகற்றிக் கொண்டு அம்மனிதருக்குள் பஞ்சமாபாதகங்கள் எனும் தீயகுணங்கள் அபரிமிதமாக பெருகி தாண்டவமாடுவதை பார்த்து ரசிக்கும். 

பசி வந்திட பத்தும் பறக்கும். . என்றார் ஔவை பிராட்டி. 


அதென்ன...? பத்தும் என்றால், கீழுள்ள இவைகள்தான்... ! 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

விளக்கம்:-
ஒரு மனிதருக்கு பசியெனும் நோய் தோன்றி அது தீர்க்கப்படாமல் போகும் போது, அவர் அந்த கடும் நோயினால், அவதிப்படும் போது அவரிடத்தில் உள்ள சிறந்த குணங்களாக கருதப்படும்  அனைத்தும் கண்காணாமல் போய்விடும். இதைத்தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்றார் ஔவை பிராட்டியார். 

அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பசியின் மயக்கத்தில் பறந்து போகும்.

மேலே குறிப்பிட்டபடி பசி நோயினால், ஒரு மனிதருக்கு இவை அனைத்தும் காணாமல் போனபின் பசிக்கும் தருணங்கள் வந்தாலும், வந்த பசியை அலட்சியம் செய்து. அறிவு மழுங்களின் காரணமாக மனிதருடன் நட்பாகியிருக்கும் தீய எண்ணங்கள் முன்னே வந்து  நின்று, அதன் வழியே நடக்க வைக்கும். 

இத்துடன் இல்லாமை, இயலாமை போன்ற ஆமைகள் புகுந்த இடத்தில்  இந்த வறுமையும் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்து கொண்டு விடும்.  வறுமை எனும் நோய்க்கும், இந்த பசி நோயும் ஒர் இணைபிரியாத ஆத்மார்த்தமான நண்பன். ஆகவே இரண்டும் சேர்ந்து நட்புறவாகி இருக்கும் இடத்தில் மனிதர்கள் அது தீரும் மட்டும் சிரமபடுகிறார்கள். 

எப்போதுமே ஒரு பக்கத்திற்கு மறுபக்கம்  என்ற ஒன்று இருப்பதைப் போன்று, மேற்சொன்ன  மாதிரி தீய எண்ணங்கள் உருவாகும் வாய்ப்புக்கு எதிரிடையாக பிறப்பிலேயே நல்ல குணங்களோடு பிறந்திருப்பவர்கள் வறுமையையும்  ஏழ்மையையும் பொறுமையாக தாங்கி  கொண்டு போவதுடன்,  பிறரிடம்  அதை வெளிக்காட்டாமலும் இருப்பார்கள். அவர்களுக்கு இறைவனே நல்ல தீர்வு ஒன்றை நல்ல சமயத்தில் மறக்காமல் தருவான். 

 இதற்கேற்ற மாதிரி "தோழனோடும் ஏழமை பேசேல்.."என்றொரு பழமொழியும் உண்டு. நம்மோடு நெருங்கி பழகும் நட்பாக அயலார் இருந்தால் கூட, நம் ஏழ்மையைக்கூறி அவரை வருத்தவோ, தானும் வருந்தவோ கூடாது என்பார்கள். "செழிப்பை  அவசியமின்றி வெளிக் காட்டினால் அது பிறரை நோகடிக்கும் அகம்பாவம்.. ஏழ்மையை  அடிக்கடி வெளிப்படுத்தினால் அது பிறரால் நோகும் அவமானம்." என்பதும் எந்நாளும்  மாற்ற இயலாத வார்த்தைகள்தானே..! 

பொறுமை காத்து ஏழ்மையில் வாடும்  இவர்களுக்காக இறைவன்  மனித வடிவில் கண்டிப்பாக வந்து உதவி செய்வான். . ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் " உள்கட" ந்து இருக்கத்தான் செய்கிறான். ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ளும் போது, "அவன்"அந்த மனிதர்களின் மனதிலிருந்து வெளிப்படுகிறான். அதைதான் நாம்" மனித நேயம் "என்றும், "மனிதாபிமானம்" எனவும் சொல்கிறோம்

கீழுள்ள இந்தக் கதையை (இல்லை, கதை மாதிரி)  உள்ளதை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் தோன்றியது. 
 
படித்ததில் பிடித்தது .... 

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில், ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதித் தொங்க விடப் பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப் படித்தேன். 

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. 


எனக்கும் பொழுது போகவில்லை, அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "அந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனா ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு".


அங்கே ஓர் சிறிய கீத்துக் கொட்டகை. ஒரு நாள் மழைக்குக் கூடத் தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும், தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும்,


யாருப்பா நீ?


அம்மா, நான் இந்த வழியா வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 


தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சதுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறாங்க... 

அந்த கடிதம் நான் எழுதல தம்பி. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 

. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன். 

"தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்தக் கடிதத்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு.." என்று அறிவுரைத்தாள் அந்தத் தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தைக் கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டு தான் இருப்பார். ஆனாலும் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். *நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்*


மனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம்.


"அண்ணே இந்த விலாசம் எங்கேன்னு சொல்ல முடியுமா? கீழே 50 ரூபாய் கிடந்தது. அந்த அம்மாகிட்டக் குடுக்கணும். வழி சொல்றீங்களா?"


*மனித நேயம் செத்துப் போனது என்று யார் சொன்னது??? இன்னும் சாகவில்லை.


இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் மனித நேயம்!!

உண்மைதானே..! செல்வங்கள் என்றொரு தலைப்பில் நான் அன்றோர் பதிவு எழுதும் போது, அதற்கு நல்லதொரு கருத்துக்கள் தந்த  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள்"பசி வந்திட பத்தும் பறக்கும் " என்பது பற்றி எழுதுங்கள் என தன்  ஊக்க கருத்தையும்  சொன்னார். நேரம் வாய்த்தால் எழுதுகிறேன் என நானும் அவர்களின் கருத்துக்கு  பதில் சொல்லியிருந்தேன். 

அது போல் அந்த நேரம் வாய்த்ததோ  என்னவோ, இந்த" படித்ததில் பிடித்தது" எனக்கு வாட்சப்பில் வந்ததும், ஒரு மனிதரின் பசி எவ்வளவு கொடுமையானது, அதுவும் இப்போதுள்ள "இந்த கால கட்டத்தில்" எனத் தோன்றவே இந்தப்பதிவை எழுதினேன். இந்த வாட்சப் கதையை  அனேகமாக அனைவரும் படித்திருக்கலாம்.  இருப்பினும் என் பதிவிலும் படித்து அந்த வயதான பெண்மணிக்குள் அத்தனை ஏழ்மையிலும் இருக்கும்  நல்ல உள்ளத்தையும், அவருக்கு உதவும் நல்ல உள்ளங்களையும் மனதாற போற்றுவோம். சரிதானே..! 

அன்புடன் இந்தப் பதிவை படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏 . 

Wednesday, May 27, 2020

சாதிப்பதும் ஒரு சந்தோஷமே..

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்..! ஆமாம்..! இதிலென்ன அதிசயம்? என நீங்களும் நினைக்கலாம்.  ஆனால்" அந்த கோஸ் என்னை எத்தனை விதமாக  அந்த கால முனிவர்கள் மாதிரி, என் சம்மதம் எதுவுமின்றி உன் சாபங்களினால் உருமாற்றி, உனக்கு சாதகமாக பயன்படுத்தி மகிழ்ந்திருக்கிறாய்.... உன்னை வேறு விதமாக  உனக்கு முக்கியத்துவம் தந்து டிபன் மாதிரி செய்யட்டுமா? என இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் கேட்டது நினைவில் இருக்கிறது.. ஆனால், எப்போதும் மதிய சாதத்தின் துணைக்கு மட்டுமே என்னை தூதாக  அனுப்புகிறாய்..!" என்று  அதன் முறை வரும் போது முணுமுணுத்து முகம் சுளித்தது..

சரி..  அது ஏதாவது கோபத்தின் மிகுதியில் சாபங்களை பதிலுக்கு மாறி தந்து விட்டால், சிரமமாகி விடுமேயென அன்றைய தினம் அதன் ஆசையை நிறைவேற்றினேன்.

இட்லி அரிசியை ஒரு டம்ளர் களைந்து ஊறவைத்து, பின் தனியாக து. பருப்பு  க. பருப்பு உ. பருப்பு மூன்றையும் அரைடம்ளர் வீதம்  ஒன்றாக களைந்து ஊற வைத்தேன். நான்கு மணிநேரம் ஊறிய அரிசியுடன்  உப்பு, மி. வத்தல், பெருங்காயம் சேர்த்து அடைக்கு அரைக்கிற மாதிரி  கெட்டியாக அரைத்துக் கொண்டேன்.பருப்பு கவலையையும் கெட்டியாக மிக நைசாக அரைக்காமல், அரைத்து அத்துடன் கலந்து வைத்துக் கொண்டேன்.



கோஸிடம் நெருங்கி (கோஸை சமாதானபடுத்தி "இன்று நீதான் மெயின் ரோல், கவலைப்படாதே. உன் விருப்பப்படி இன்று நீ காலை டிபனுக்கு தயாராக்க படுவாய்.. உனக்கு மகிழ்ச்சிதானே ..!! இன்றிலிருந்து  உன் புகழ் ஓங்கிச் செழிக்கட்டும்." .  என்ற வீர வசனம் பேசி வாளை, இல்லையில்லை கத்தியை கையில் எடுத்தேன்.) அதன் வீர பிரதாபங்களை மேலும் சொல்லவும், அதுவும் மகிழ்ச்சியாக சம்மதித்தது.



அப்புறமென்ன.. பொடிதாக நறுக்கிய கோஸை நன்கு கழுவி வடிகட்டியில் ஒரு நிமிடம் இரு..! என சொல்லி விட்டு, ஒரு கடாயில், கடுகு உ. ப தாளித்து விட்டு அதனுடன் கோஸுடன் நறுக்கி வைத்த இரண்டு பெ.ரிய வெங்காயத்தை வதக்கிக் கொண்டு, அதை தனியாக  எடுத்து வைத்தப்பின் கோஸை போட்டு உப்ப், மஞ்சள் தூளும் சேர்த்துப் போட்டு, அது  நன்றாக வேகும் தருவாயில், வதக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்துப் போட்டு இரண்டையும் "ஊர் வம்பு பேசி சற்று நேரம் மகிழ்ந்திருக்கிறீர்களா?" என கேட்டதும், அவைகளும் மகிழ்வுடன் சம்மதித்தன.




அதன் பின் அரைத்து வைத்திருக்கும் மாவில் கொஞசம் எடுத்து, நன்கு ஆய்ந்து அலம்பி போட்ட கொத்தமல்லி தழைகளையும் போட்டு ஒரு திருப்பு திருப்பி  அரைத்தமாவுடன் கலக்கிய பின் மாவை  இட்லி தட்டுக்களில் பரப்பி குக்கரில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். கொத்தமல்லி தழைகளை பொடிதாக நறுக்கியும் மாவில் கலக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் சாப்பிடும் போது அதையெல்லாம்  அகற்றிய ஆக வேண்டுமென அடம் செய்வதால்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை. முக்கால்வாசி அனைத்திலும் அரைத்தே கலக்கி விடுகிறேன்.எங்கள் வீட்டின்  பெரிய குழந்தைகளுக்கும் இதுதான் மிகவும் பிடித்துள்ளது.




ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், வேக வைத்த இட்லிகளை உதிர்த்து விட்டு, மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்றாக உதிர்ந்து உப்புமா மாதிரி வந்ததும். ஏற்கனவே வம்பு பேசிஅரட்டை அடித்துக் கொண்டிருக்கும் கோஸ், வெங்காய ஜோடிகளை "உப்புமா கலவையில் சேர்ந்து  கோஸ் உப்புமா என்ற தனிப்பெயருடன் மிளிர வருகிறீர்களா"? எனக் கேட்டதும் அவைகள் சம்மதிக்கவே அதையும் அந்த அரிசி பருப்பு உப்புமாவுடன் , கலந்து விட கோஸின் முகத்தில் தனி பெருமிதம் ஒன்று தெரிந்து என்னை கவர்ந்தது.


இது நம்மை கவரும், என்னுடன் பேசி ஜெயித்த கோஸின் முகப்பெருமிதத்தை நன்கு கவனிப்பதற்காக...!


நிச்சயமாக இது உங்களையும் கவரத்தான் போகிறது என்பது தெரிந்த உண்மை..

உண்மை என்றதும், அந்த   உண்மை  "கோஸ் டிபனான உண்மை கதையை சொல்லாமல், சாட்சிக்கு மட்டும் என்னை அழைக்கிறாயா" என கேட்டு முறைத்தது. 

சரி.. சரி.. முறைக்காதே..! 
" சொல்லத்தான் போகிறேன்.  சொல்லத்தான் எழுதினேன். 
வாயிருந்தும்  உண்மைதனை
சொல்லாமல் இருப்பேனா..! ஆகா.. 
சொல்லத்தான் போகிறேன்.. 
என நான் ராகம் போட்டு இழுக்கவும்,

போதும்.. நிறுத்து..! இன்று வெள்ளி யில்லை...நாளை வெள்ளி முளைக்கும் முன், கோஸின் பெருமையையும் கூடவே உன் பிரதாபத்தையும்  பிரகடனபடுத்தும் வழியைப்பார்..! என்றபடி முறைத்துக் கொண்டிருந்த உண்மை சற்று கோபம் தணிந்து நான் உண்மையை கூறப்போகும் மகிழ்வில் விடைப் பெற்று அகன்றது.

அது வேறொன்றுமில்லை..! இது எ.பியில் (இரண்டு வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்.)" திங்க"ப் பதிவில் அதன் ஆசிரியர் சகோதரர் கெளதமன் அவர்களின் மருமகள் செய்து பதிவிட்ட பதிவு இந்த கோஸ் உப்புமா. 

இதைப் பார்த்துதான் நான் அடிக்கடி கோஸிடம் சொன்னதை அது  நினைவில் வைத்துக் கொண்டு இந்த தடவை என்னை வறுப்புறுத்தி தான் "டிபனான பெருமையை" அடைந்தது.

கோஸின் பெரும் ஆவலை தணித்து வைக்க உதவிய எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள் அனைவருக்கும், கெளதமன் சகோதரர் அவர்களின் மருமகளுக்கும் எனது, மற்றும் கோஸின் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏.

கோஸை அதன் விருப்பபடி இன்று இப்படி வடிவமைத்து காட்டியமைக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அத்துடன் சேர்த்து  என் சுய பிரதாபத்தையும், இங்கு கொஞ்சம் அளக்கலாமென நான் நினைத்ததை உண்மை எப்படியோ கண்டுபிடித்து சொல்லி விட்டது.

இது என்னுடைய இரண்டாவது சதம்.. முதல் சதத்தை சுலபமாக அடித்து விட நிறைய சந்தர்ப்பத்தை தந்த இறைவன் நான் இரண்டாவதை அடித்து முடிக்க அவ்வளவாக தக்கத் தருணங்களை தராது இத்தனை நாளை நிதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். போகட்டும்..!

இது குறித்து எனக்கு எந்த வருத்தமோ, மகிழ்வோ இல்லை. இருப்பினும் ஆட்டத்தில்  தொடர்ந்து நின்று ஆடவைத்து சாதிக்க வைத்தமைக்கு அந்த ஆண்டவனுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
ஆனாலும், இரண்டு வருடங்களாக கணினி வசதி இல்லாமல், கைப்பேசி மூலமாக, பதிவுலகில் நவரச சுவைகளையும் அழகாய் பகிர்ந்து வரும் அனைவருக்கிடையில், எந்தவொரு சுவையும் இல்லாது ஏதோ எனக்குள் தோன்றியதை எழுதி வரும் எனக்கு நிறைய நட்புறவுகளை "அவன்" பரிசாக தந்தமைக்கு முன், என் இரண்டாவது சதத்தின் காலதாமதம் எனக்கொரு பொருட்டாகவே தோன்றவில்லை. எனினும் இந்தப் பதிவின் மூலம் அதை வெளிப்படுத்தும் போதில்,  அந்த இறைவனுக்கும், அவன் தந்த பரிசான நட்புறவுகளுக்கும் என் பணிவான நன்றியையும், அன்பையும் அந்த கோஸின் பெருமித மனப்பான்மையுடனும், கூடவே மனமார்ந்த மகிழ்வுடனும் சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி அன்பான சகோதர சகோதரிகளே....! நன்றி. 🙏.