Friday, April 26, 2019

செல்வங்கள்..


அந்த காலத்தில், பொதுவாக பெரியவர்களை வணங்கும் போதும்., திருமணங்களில் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்தும் போதும், "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.!" என்று வாழ்த்துவது வழக்கம்.  "பதினாறு" என்பது பதினாறு வகையான செல்வங்களை குறிப்பது என்பது நாமெல்லோரும் அறிந்ததே.! இருப்பினும் நகைச்சுவைக்காக அப்பப்பா.. ஒன்றிரண்டையே சமாளிக்க முடியலே.. இதிலே பதினாறு வேறேயா? என்று பதினாறையும் குழந்தைச் செல்வமாக மட்டுமே குறிப்பிட்டு தெரிந்தோ , தெரியாமலேயோ கிண்டல் செய்பவர்கள் வேறு ரகம்.  இதில் தெரிந்து வாழ்த்தியவர்கள் இவர்களின் நகைச்சுவையை ரசிப்பதை தவிர  வேறு  வழியில்லாதவர்களாக ஆகி விடுவார்கள்.

இந்த பதினாறு வகையான செல்வங்களை  ஒரு மனிதனுக்கு அன்புடனே தந்தருள வேண்டுமென ஆதிகடவூரில் வாழ்ந்தருளும்  அன்னை அபிராமி அம்பிகையை வேண்டி அவளருள் பெற்ற அபிராமி பட்டர் இவ்வாறு  உளமுருக பாடியுள்ளார். 


அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)


இந்த பதினாறு செல்வங்களும் ஒருவரது (அது ஆண், பெண் இரு பாலாராகிலும் சரி) வாழ்வில்  அனைத்தும் ஒருசேர கிடைக்கப் பெற்றால், அவரை விட புண்ணியம் செய்தவர்கள் இந்த உலகில் வேறெவரும் இல்லை என்றே கூறலாம்.  ஆனால் மேற்கூறிய அனைத்தும் முற்றிலுமாக அனைவருக்கும் கிடைக்குமா என்றால் அது சந்தேகந்தான்..! 


பொதுவாக அக்காலத்தில், படிப்பறிவு மிகவு‌ம் இருப்பவர்களுக்கு, மேற்கொண்டு படிக்க வசதி (பணம்) இருக்காது. பணமிருப்பவர்களுக்கு கல்வியறிவு சற்று அலட்சியம் காட்டி சென்றுவிடும். அப்படியே இரண்டும் அமைந்தாலும், நோயோ, வேறு வகையான தொந்தரவுகளோ அமைந்து நீண்ட நெடுவாழ்வு  குறைந்து போய் விடும். இல்லை.. நல்லபடியாக திருமணம் நடந்து இல்லறவாழ்வு நன்றாக இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லாது ஆயுள்  முழுக்க கவலைகளை சுமக்க நேரிடும். இப்படி ஒன்றிருக்க ஒன்றில்லாது அமைவதைதான் "விதியின் செயல்" என ஏற்றபடி, காலம் நம்மையும் காலத்தை நாமுமாக கடத்தி  வந்தோம். 


இப்போது காலத்தை நாம் அனுசரித்து போகிறோமா ? இல்லை காலம் நம்முடன் அனுசரிக்கிறதா? புரியவில்லை... ஆயினும் "தனமெனும்" பணம் மட்டும் அதுவும் தெய்வ சங்கல்பமாக ஒரு மனிதரின் வாழ்க்கையில் அமைந்து விட்டால், உலகில் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை வந்துள்ளது. மேலைநாடுகளிலும் சென்று உயர் கல்விகள் பெற தகுந்த வசதிகள் , வாழ்வில் அத்தியாவசிய தேவைகளை, இல்லை, தத்தம் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளும் வசதிகள், எந்த நோய்க்கும் தீர்வாக மருத்துவ வசதிகள், எமனுடன் இயன்ற வரை போராடும் துணிவு, இப்படியான வாழ்வுக்கு பணமிருந்தால் போதுமென்ற நிலை உருவாகி விட்டது. 


அன்னை, தந்தையையும், அன்பையும், தவிர அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று சொல்வார்கள். ஆனாலும் ஒரு உயிரின் முதலும், முடிவும்  என்றுமே "படைத்தவன்"  கையில்தான் உள்ளது என்பதையும் அனைவருமே உணர்ந்துள்ளோம். ஒரு உயிரின் "முடிவின்" நிமிடத்தை "அவன்" எழுதிய பின் அந்த நேரத்தை மாற்றியமைக்க நாம் பணத்தைக் கொண்டு எவ்வளவு பேரங்கள் "அவனுடன்" நடத்தினாலும், நிச்சயம் தோல்வி நமக்குத்தான் என்பதும் நாம் அறிந்ததே... 


இந்த செல்வம் இல்லாதவர்கள், அமையாதவர்கள்.. ஏழைகள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில்  ஒர் ஓரமாக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை  எல்லாவற்றிலும் ஒரு கேள்விக்குறியாக அமைந்தாலும்,  பலருக்கு, மற்றச் செல்வங்கள் ஒரளவு துணையாக நின்று அவர்களது வாழ்வை நகர்த்திக் கொண்டு நகர்கிறது. 


பணத்திற்கு அதிபதியான அன்னை மஹாலக்ஷ்மியும் நிலையாக ஒரிடத்தில் தங்காமல், உலகில் அவரவர்களுடைய பூர்வஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மாறிக்கொண்டேயிருக்கும் தன்மை உடையவள். அதன்படி ஏழை, பணக்காரன் ஆவதும், பணக்காரன் தீடிரென்று நொடித்து  பணவசதிகளை இழப்பதும்,  கர்மாக்களின் கணக்குப்படி நடந்தவாறே உள்ளன. பிறப்பிலிருந்து, இறப்பு வரை கஸ்டஜீவனம்  செய்வதும், இல்லை பிறப்பிலிருந்தே பணத்தில் புரண்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெறுவதும் அவரவர் ஊழ்வினைப் பயனே.! 


ஒரு கதை...

ஒரு முனிவர் சிறுவயதிலிருந்தே சுக போகங்கள்அனைத்தையும் துறந்து பக்தியுடன் காட்டில் தவமியற்றி வரும் போது. அன்னை மஹாலஷ்மியானவள் அவரிடம் சிறிது காலம் தான் தங்கியருள வேண்டிய நிர்பந்தத்தை உணர்த்தி, அவர் வாழ்க்கையோடு உடனிருப்பதாக சொல்லி வந்து நின்றாள். முனிவர் முதலில் மறுத்தாலும், அவளின் கடமையை செய்ய விடாது  தடுப்பது தர்மமகாது என எண்ணி ஒப்புதல் தந்தார். ஆயினும், "அம்மா வரும் போது சொல்லிக் கொண்டு வந்த நீ என்னை விட்டு போகும் போது சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்" என வேண்டுகோளுடன் கூறியதும் அதற்கு மஹாலக்ஷ்மி சம்மதித்து அவருக்கு அருள் புரிய தொடங்கினாள்.

அதை சோதித்து பார்க்க விருப்பம் கொண்ட முனிவர், அந்நாட்டு அரசனின் விருப்பமின்றி  சில செயல்களை அவனுக்கு எதிராக வலுக்கட்டாயமாக செய்யப் போக அன்னையின் அருளினால், அவையனைத்தும்  அரசனுக்கு நலம் பயக்கும் செயல்களாக மாறி முனிவருக்கு பெருமையையும், புகழையும் ஏற்படுத்தி தந்தன.


முனிவரின் அத்தனை தவறான செயல்களையும் உடனிருந்து அரசனுக்கு அனுகூலமாக மாற்றுவித்தவள் அன்னையே.! இதை முனிவரும் உணர்ந்து கொண்டார். சில காலங்களுக்குப்பின் அரசனின் நன்மதிப்பையும், நாட்டு மக்களின் மரியாதையையும் பெற்று அரசனின் விருப்பத்திற்கேற்ப மறுப்பேதும் கூறாது அரண்மனையிலேயே தங்கியிருந்தார் முனிவர்.


ஒரு நாள் முனிவர் தனக்கென்று கிடைத்த அபூர்வ மாங்கனியொன்றை  அதில்  அரண்மனையிலேயே இருக்கும்  அரசனுக்கு எதிரிகள் விஷமேற்றி யிருந்ததை  அறியாமல் அரசனுக்கு தரும் போது, அரசனும் தம் மதிப்பை பெற்ற முனிவர் தந்ததாயிற்றே எனஆர்வத்துடன் அதை உண்ணப் போகும் தறுவாயில், அரண்மனை வைத்தியரால் அந்த உண்மை கண்டுணரப்பட, முனிவரின் மேல் கோபம் கொண்ட அரசனின் மனைவி, அமைச்சர்  ஆகியோர் முனிவரை ஈவிரக்கமின்றி கொல்லும்படி ஆணையிட்டனர். 


அரசன் அதை தடுத்து "எத்தனையோ தடவை தன்னை காத்தவரை கொல்ல வேண்டாம். அவரை காட்டுக்கு அனுப்பி விடுங்கள்"என உத்தரவிடவே மறுநாள் அவரை காவலாளிகள் கடுமையான இழிச்சொற்கள் கூறி, காட்டில் கொண்டு விட்டனர். செல்லும் வழியெங்கும் மக்களும் அவரை தூற்றினார்கள். அவரும்  மாங்கனியை அரசனுக்கு தருவதாக அரசன் இருப்பிடம் நோக்கிச் செல்லும் போது  அன்னை மஹாலக்ஷ்மி அவர் முன் தோன்றி, " குழந்தாய்.! இன்றுடன் உன்னுடனான என் வாசம் முடிந்தது. ஆதலால் நான் உன்னை விட்டு அகலுகிறேன்" என கூறி விட்டு மறைந்ததை நினைவு கூர்ந்தார். 


அன்னையின் துணையினால், தன் வாழ்வில், ஏற்பட்ட மாற்றங்களையும், ஆண்டியாக வாழ்ந்த தான் அரமணை வாசத்தில் வாழ்ந்ததையும், புகழும், பெருமையும், தேடி வந்ததையும், இன்று அவள் அகன்றதால், பழையபடி காட்டிற்கு  இழிசொற்கள் சூழ வந்ததையும் கண்டுணர்ந்த முனிவர், அன்னையின் புகழ் பாடி அவளை தொழுது விட்டு தம் பழைய தவ வாழ்க்கையை எவ்வித சலனமுமின்றி தொடரவாரம்பித்தார். 


இந்தக் கதை அனைவரும் அறிந்ததுதான். அந்த முனிவரைப்போல உன்னதமான உள்ளத் தூய்மையும், எதையும் சமமாக ஏற்கும் மனோபாவமும் சாதாரண மனிதர்களுக்கு கைகூடி வராது. எத்தனைப் பிறப்பெடுத்தாலும் பிறவிகள்தோறும், சிந்தனையும் செயலும் இறைநாமத்தையன்றி வேறெதுவும் வேண்டாத பண்பை அடைந்திருக்க வேண்டும். அத்தகைய பண்பை அடைய ஆசைகளை களைந்தெறியும் கலைகளையும் கற்றிருக்க வேண்டும். இவ்விதமான அசுர சாதனைகளை அம்முனிவர் சென்ற பிறவிகளில் செய்திருந்ததால் அவருக்கு காடு மேடு அனைத்தையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள எளிதில் சாத்தியமாயிற்று. 


"பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. ஆனால்,"காதறுந்த ஊசியும் வாராது கடைகாண் வழிக்கே"என்று உண்மை உணர்ந்து உபதேசித்தார்  பட்டினத்தார். இத்தனைக்கும் அவர்  தன் இளமையிலிருந்தே பணத்திலே  அதிக நாட்டம் கொண்டு இரவு பகலாக உழைத்து பணமீட்டி, பணத்தால் அத்தனை வசதியும் அனுபவித்து, ஒரு காலகட்டத்தில் ஊழ்வினையின் நல்லருளால்  ஞானம் பெற்றவர்.. அவ்வருளும் அனைவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அதற்கும் எத்தனையோ பிறவிகளில் "அவனருளை"  அநேக சிரமங்களிடையே சேகரித்திருக்க வேண்டு்ம். 





இதை குறித்து பகிரும் போது இந்த அருமையான பாடலும் நினைவுக்கு வந்தது. அதையும் பகிர்ந்துள்ளேன்.

மேற்கூறிய இந்த பதினாறு வகையான செல்வங்கள் பெற இன்னும் எத்தனை பிறவியோ? ஆனால் இந்த  பதினாறு வகையான அர்த்தங்களை இந்தப் பிறவியில் படித்துணரலாம் எனத் தோன்றுகிறது. அதை உங்களோடு பகிர்ந்துள்ளேன். நீங்களும் இதை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. எனினும் என் பதிவையும், பதிவோடு இதையும் படிப்பீர்கள் என நம்புகிறேன். 


நன்றியுடன் உங்கள் சகோதரி... 

      -----------------------------------------------
பதினாறு வகையான அர்த்தங்கள். 

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சனைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவீர்கள்.. யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு..? 

9] ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.

10] நீங்கள் சிரித்துப் பாருங்கள்! உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பாருங்கள்; உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
*நம்பிக்கையையே* ஆகும்.

15] அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

Sunday, March 17, 2019

மயிலாக நான் மாற வேண்டும்.


சென்ற வருடம் திருநெல்வேலிக்கு  போகும் போது அகஸ்தியர் அருவிக்கும் சென்றிருந்தோம். வரும் வழியில், பல இயற்கை காட்சிகள், அருமையாக இருந்தது. ஓரிடத்தில் காரை மெதுவாக ஓட்டி வரும் போது ( ஓட்டி வந்தது அண்ணா பையன்தான்.) நாங்கள் வந்த காருக்கு அருகில் தைரியமாக ஒரு மயில் வந்து நலம் விசாரித்தது.(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) ஏதாவது சாப்பிட இருக்கிறதா?எனகேட்கும்  பாவத்தில், காரைச் சுற்றி வந்தது. கைவசம் கொண்டு போன நொறுக்குத்தீனிகள் பையை துழாவினோம். நாங்கள் இயற்கையை ரசித்த போதினில், கண்கள் இமை கொட்டாதிருந்த சமயம் பார்த்து, கையும், வாயும் மட்டும் நட்புறவாக பேசி வைத்த மாதிரி பையை காலி செய்திருந்ததை  கண்கள் அப்போதுதான் பார்த்து அதிர்ச்சியடைந்தது. "நல்லவேளை.!" ( அந்த மயிலுக்குத்தான்)  ஒரு அரை டஜன் முறுக்கு பாக்கெட் மட்டும் சற்று முறுக்கிக்கொண்டு  வாய், கைகள் நட்புறவில் சேராமல் "கா"விட்டு  ஓரத்தில்  ஒளிந்திருக்க கண்டு கண்களுடன் சேர்ந்து மனதும் நிம்மதியடைந்தது.

இவர்கள் ஒன்றும் தராமல் நம்மை வேடிக்கை பார்க்கும் ஜீவன்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்தில் எங்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒருமையில்" வந்த "அம்மயில்" நகரும் முன் நாங்கள் அந்த  முறுக்கை கார் ஜன்னல் கதவை திறந்து வெளியில்  போட சற்று அவநம்பிக்கையுடன் திரும்பிய மயில் அட,.! முறுக்கா...!  இதைக் கொடுக்கத்தான் இவர்களுக்கு இத்தனை முறுக்கா ? என்று இளப்பமாக ஒருதடவை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

அப்போது எடுத்த படங்கள்தான் இவை.


நலமா? என விசாரிக்க வந்த மயில்.


உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்குமாப்பா ...?


அட.! உங்களைத்தான் கேட்கிறேன்.. உங்கள் இதய கதவை... வேண்டாம்.. கார் ஜன்னல் கதவை திறக்க கூட மனமில்லையா உங்களுக்கு?


அட. .! போங்கப்பா.. நீங்களும் உங்க உபசாரமும்.. ஏதோ தேடு தேடென்று தேடுகிறீர்களே ஒழிய ஒன்றும் கை நீட்டி வெளியில் வர மாட்டேங்குது..


நானும் எவ்வளவு நேரந்தான் பொறுமையாயிருப்பது? சரிப்பா.. வரட்டா..! வேறே ஏதாவது வண்டி வந்தா அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்.. அடேடே.! கிளம்புற நேரத்திலே கார் ஜன்னல் கதவு லேசாக திறக்குதே.!


ஒரு மட்டும் ஒரு முறுக்கை ரொம்பவும் முறுக்கிக்காமே எப்படியோ போட்டுட்டாங்கப்பா.. சரி.. சாப்பிட்டு பார்க்கலாம்.


இதைக்கடிக்க கூட முடியலயே.! இதை எங்கேயிருந்து வாங்கிட்டு வந்தாங்களோ.! இதையா இந்த மனுசங்க இவ்வளவு நேரம் தின்னுகிட்டு வந்தாங்க... சுத்தமா ரசனையில்லாத மனுசங்கப்பா...


இது முறுக்கு தானா? வேறு ஏதாவது தந்து நம்மை கடத்தி, கிடத்தி காரிலேயே கொண்டு போயிடுவாங்களா.. ?


இந்தப் பக்கம் வேற நிறைய போட்டிருக்காங்களா? இதைப் பாக்கவேயில்லையே.. .!


இதுவாச்சும் நல்லாயிருக்குமா . ? கொஞ்சம் டவுட்டு வருகிறது. அதான் கேட்கிறேன்...


இல்லை.. அந்தப் பக்கம் ஒன்னு இருக்கே.. அதை சாப்பிடலாமா?


அட...! இங்கேயும் அதே வஸ்துதான் போடறீங்களா? இது எப்படியிருக்குமோ?


என்னவோ.. போங்க.! சுத்தி, சுத்தி வந்ததுக்கு ஒரே "கைசுத்தல்" முறுக்கா போட்டுட்டு கிளம்புறீங்க! இது எங்கிட்டே வரும் போது எத்தனை "கைசுத்தி" வந்திருக்கோ .! சரி.. சரி... நிதானமா சாப்பிட்டுகிறேன். போயிட்டு வாங்க.. ஆனா.. அடுத்த தடவை இந்த முறுக்கை மட்டும் கொண்டு வந்துராதீங்க...! என்ன இருந்தாலும் உணவை கொடுத்ததுக்கு நன்றி.. .! உங்களுக்கும் மட்டுமில்லை.. நம்மையெல்லாம் படைத்தவனுக்குந்தான்..!

இத்தனை மயில் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு போனஸாக இந்த வீடியோ..

எத்தனை அழகாக பறக்கிறது இந்த ண் யில்...



"மயிலாக நான் மாற வேண்டும்.  வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்." என அருமையாக பாடியுள்ள சீர்காழியின் கம்பீரமான வெங்கல குரலுடைய பாடல்  நினைவுக்கு வருகிறது.

இதோ.. போனஸுக்கு ஒரு போனஸாக இந்தப் பாடலும்..... இதையும் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன். 


இந்த வீடியோக்கு மட்டும்... கூகுளுக்கு  நன்றி....

என் பதிவையும், நான் எடுத்த மயிலாரின் படங்களையும். நான் பதித்த வீடியோவையும்,  கூகுளிடமிருந்த பெற்ற சீர்காழியின் பாடல் வீடியோவையும் ரசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

Friday, March 1, 2019

கடத்தலில் வந்த கலவன் சாதம்...

சகோதர,சகோதரிகள்
அனைவருக்கும் வணக்கம். 

வலையுலகில் நிறைய எழுத ஆசை. என் எழுத்தை (எழுத்தை என்பதை விட ஆசையை) இங்குதான் பதிவாக்கி சந்தோஷம் அடைய முடியும். என்னைப் போன்ற கத்துக்குட்டிக்கு ஆதரவாக இருக்கும் நல்லுள்ளங்களுடன் கூடிய பல பெரிய,, திறமையுள்ள பதிவர்கள் கோலோச்சி கொண்டிருக்கும் வலைத்தளத்தில் எழுதி அவர்களின் அன்பான கருத்துக்களையும், வாழ்த்துகளையும் பெறுவதை பெரும் பாக்கியமாக கருதி எழுதும் ஆசையை வளர்த்து வருகிறேன். அவ்வப்போது ஆசைகளை எழுத்தாக்கி பதிவிட்டும் வருகிறேன். என் வலைத்தளம் வந்து படித்து என் பதிவுக்கு மட்டுமல்லாது, கதை, கவிதை என்று நான் எழுதும் அனைத்திற்கும், ஊக்கமும், உற்சாகமும் தந்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்.

சமீப காலமாக பதிவுகள் எழுத பெரிய பெரிய தடைகள் விழுந்து விட்ட என் நிலையை  நானும் விளக்கியுள்ளேன். அப்படியும்  ஏதாவது எழுத வேண்டுமென மனமும் பொழுதும் ஒத்துழைத்த ஒரு நேரத்தில் ஒரு பக்தி பதிவாக இந்த வருடம் முதலில்  ஆரம்பிக்கலாமென, "மனதினுள் கடத்தல்" என ஒரு பதிவு எழுதினேன். அதற்கு கருத்துரை தந்தவர்களுக்கு மிக்க நன்றி.

வந்த கருத்துக்களும், அதற்கு  பதிலாக நான் தந்த கருத்துக்களுமாக  37ஐ தொட்டு கடந்து போய்க் கொண்டிருக்கையில், வேறு ஏதாவது எழுதலாம் என நான்  முயற்சித்து கொண்டிருந்த போது  கண்மூடி திறந்த ஒரு நிமிடத்தில் ( அந்த ஒரு விநாடி ஒரு மயக்கம் கலந்த உறக்கம்.. காரணம் அப்போது பேய்களும் உறங்கி விழும் அர்த்த ராத்திரி.. அப்போதுதான் எனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாமென்று  வழக்கமான கைபேசியில்,  பதிவொன்றை டைப் பண்ணிக் கொண்டிருந்ததில் எப்பேர்பட்ட உறக்கமும் மயக்கம் கலந்துதானே வரும்.. இதிலென்ன ஆச்சரியம்? .) என் "மனதினுள் கடத்தலை" என் விரல்கள் என் மூடித்திறந்த கண்ணெதிரிலேயே  சுலபமாக "கடத்திச்" சென்று விட்டன.

ஒரு வங்கியில் சிரமப்பட்டு சேமித்ததை ஒரு அவசர தேவைக்காக எடுக்கலாம் என செல்பவர்களுக்கு, எடுத்த பணத்தையும், கையோடு கொண்டு சென்ற கொஞ்ச பணத்தையும் சேர்ந்து ஒரு பையில் வைத்து கொண்டவாறு அந்த அவசர தேவையை சுபமாக முடிக்கலாம் என திரும்பும் போது, அதை மொத்தமாக சேர்த்து இழக்கும் போது  எவ்வளவு வருத்தம் வருமோ. .! அந்த வருத்தம் அன்று இரவு என்னையும் தொற்றிக் கொண்டது. ஏனென்றால்,, என் கையிருப்பை விட சேமித்ததை பொக்கிஷமாக கருதியவள் நான்.

இதில் கையோடு வைத்திருந்த பணம் நான் எழுதிய பதிவு. 

சேமித்ததால் வந்த பணம் அன்பான சகோதர,  சகோதரிகள் அனைவரின் கருத்துக்கள். 

இரண்டையும் கோட்டை விட்டவுடன் உறக்கமும், அதனுடன் வந்த மயக்கமும் ஒன்றாகவே கை கோர்த்துக் கொண்டு போயே  போச்சு. மறுநாள் காலை தெரிந்தவர்களிடம்  (என் குழந்தைகள்தான்) காணாமல் போனதை சொல்லி  பத்திரமாக மீட்டு வந்து விடலாம் என்ற நினைப்பில் படுத்தாலும், "கடத்தலை"   அங்கீகரிக்க இயலாமல் "மனதினுள் " பதிவின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு  திசைகளில், நர்த்தனமாடியபடி இருக்க, வந்த கருத்துக்களும் சுதி லயத்தோடு ஒட்டாமல் இசை பாடி  தப்புத்தாளங்கள் போட, தூக்க தேவதைக்கு நித்திரையை மறந்து ஒரே கொண்டாட்டந்தான்...!

அந்த கொண்டாட்டத்தில் ஈடுபடாமலிருக்க, எழுதியதை நினைவில் கொணர்ந்தது மீண்டும் எழுதினால் என்ன?  என்று தோன்றியது. படிக்கும் காலத்தில் எழுதியதை மனனம்  செய்ய  அப்போது ஒத்துப் போன மூளையில், இப்போது புரட்டிப் போட்டு சிந்தித்தாலும், எழுதிய வார்த்தைகள் வரி பிசகாமல் வருவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்ட பின், ஒரளவுக்கு வரிகள் வசப்பட ஆரம்பித்தன. அனைவரின் அன்பான கருத்துக்களையும், அவ்வாறே நான்  முயற்சிக்க,  வீட்டிலுள்ள அனைவரும் அவர்களது பெற்ற வரம் கலையும் நேரத்தில், எனக்கு ஒரு மட்டும் வந்தது.... உ.ற.க்.க.ம்... ஹா. ஹா ஹா. ஹா

பின் காலை "பாதுகாவலர்" துணை கொண்டு  "வலை வீசி" தேடியதில், "கடத்தியதுகள்" மூலைக்கொன்றாக கிடைத்தது . சேமித்ததையும் சேர்த்த பின்  வங்கிக் கணக்கில் போட்டு சேர்க்கிறேன். பாராதவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது வந்த பசி மயக்கத்திற்காக கோவைக்காய் சாதம்.. நான்கு நாட்களாக வெவ்வேறு விதத்தில் உபயோகித்த கோவைக்காய், (அவியல், காரக்கறி, கூட்டு, சாம்பார்) இன்னமும் மிகுதியாக இருந்து கொண்டேயிருந்தது. இன்று என்னை பயன்படுத்த விட்டால், நாளை கண்டிப்பாக ப(கி)ழமாகி விடுவேனுங்கோ..! என்று பயமுறுத்தியபடி மிகவும் கோவத்துடன்  காத்துக் கொண்டிருந்தது. நமக்கே கோவம் வரும் போது, கோவ(வை) க்காய்க்கு வராதா என்ன?

                                   நன்றாக


                                      அலம்பி


எடுத்த கோவக்கார காய்கள். 


வறுப்பதற்கு எடுத்த  ( இல்லை.. இல்லை... வறுத்த பின் எடுத்த என்று மறுத்துக் கூறும் நிலையில் நாங்கள்  இல்லை..  ஏனென்றால் ஏற்கனவே எங்களை வறுத்து எடுத்து விட்டார்களே..) ஒரு ஸ்பூன் க. ப, ஒரு ஸ்பூன் உ. ப, இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை  காரத்திற்கு அவரவர் விருப்பம் போல் மி. வத்தல்  நான் 5,6 எடுத்திருந்தேன். இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலைகள்.


  வறுத்த  பின்னும் அதே போஸில்                        சலிப்பில்லாமல் நாங்கள்தான்..


    பொடிதாக   அரிந்த  இரண்டு  அல்லது            மூன்று  பெரிய  வெங்காயம்..


கோவைக்காய்க்கு கோவம் என்று பாட்டு பாடி விட்டு கண்ணில் நீர் வர பெரிதாக அரிந்து வைத்து இருக்கும் எங்களை "பொடிதாக" என்று  உங்களுக்கு அறிமுக  படுத்துகிறார்கள். நாங்க எப்படி.?  எவ்வளவு கோவம் இருந்தாலும், எங்களைத்தொட்ட வர்களின்  கண்ணுல தண்ணியை வர வைத்து  பார்த்துருவோம்ல்லே.....


அலம்பி எடுத்த கோவைக்காய்களை இருப்பக்கமும் காம்பு நீக்கியபின், கொஞ்சம் பழுத்ததை அது கோவப்பட்டாலும்  பரவாயில்லையென்று ஒதுக்கி விட்டு, மற்ற காய்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டு சுற்றுக்கள் சுற்றி வைத்துக்கொள்ளவும்.


இதுதான் எங்களுக்கு கோவம்..! கவிஞர்கள் பெருமையாக "கொவ்வைப்பழம்" போலும் சிவந்த அதரங்கள் என பெண்களின் உதட்டழகிற்கு  எங்களை உதாரணம் காட்டி விட்டு,  காலப்போக்கில் பெயரையும் "கோவைக்காய்"  என மாற்றிவிட்டு, பழமாகிப் போனால நன்றாக இருக்காது என இப்படி ஒதுக்கி வைத்தால்..... எங்களுக்கு கோபம் வராமல் இருக்குமா? இயல்பாகவே பழம் எங்கள் பெயருடன் ஒட்டிக் கொண்டது. செடியிலிருக்கும் போதும் கிளிகளுக்கு, மற்ற பறவைகளுக்கு பயனாகிறோம். எங்களிடம் இருக்கும் மருத்துவ குணம் உங்களின் "இனிப்பு நோயை" கட்டுப்படுத்தும் திறனுடையது தெரியுமா?


ஒரு வாணலியில் கடுகு, உ. ப தாளித்துக் கொண்டு அரிந்து வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


அது நன்றாக வதங்கி வரும் சமயத்தில்,


துருவிய கோவைக்காயைப்போட்டு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.


வெந்த அதனுடன், வறுத்து வைத்ததை கரகரப்பாக பொடித்து அதனுடன் கலந்து


வாசம் வரும் வரை கலவைகளை திருப்பி விட்டு ஐந்து நிமிடங்களில் அனைத்தும் நன்கு கலந்ததும்,


ஏற்கனவே தயாராக ரெடியாகி  உதிரியாக ஆற வைத்து காத்திருக்கும் சாதத்தை  இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இதனுடன் கலந்து   விடவும்.


கோவைக்காய்  சாதம் தயார். மேல் அலங்காரத்துக்கு மு. ப வேண்டுமானால் (ஒத்துக் கொள்கிறவர்கள். போட்டுக் கொள்ளலாம். ஆனால் போட்டால் அது  மறுப்பேதுமின்றி ஒத்து கொள்ளும். ) பொடித்து வறுத்து போட்டுக்கொள்ளலாம்.


இதற்கு வழக்கம் போல் தயிரில், பச்சை மிளகாய் தேங்காய் அரைத்து விட்டு  கடுகு தாளித்து தொட்டுக்கொள்ளலாம். அதுவும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.


இப்ப நம்ப கோவைக்காய்க்கு  கோவம் தணிந்து சாதத்துடன் நட்புறவாகி விட்ட காரணத்தால் சமரசம் ஆகி இருக்கும்,. இரண்டாவதாக அதன் பயன்களை அவையே "அவை" முன்னால் சமர்ப்பிக்க வேறு வைத்து விட்டேனே.! 


இனி என்ன? தடையேதுமின்றி கோவைக்காய் சாதத்தை சாப்பிடலாம்.!  இல்லையேல், இதுவும் என் உறக்க மயக்கத்தில், என்றேனும், ஒருநாள் ஓடி விடும்.

நன்றி...அனைவருக்கும்.

Wednesday, February 13, 2019

மனதினுள் கடத்தல்.

 
நம்மையும் மீறி ஒரு சக்தி இயங்கி கொண்டிருப்பதை உலகம் தோன்றியதிலிருந்து உணர்ந்து கொண்டுதான் வருகிறோம்.அதை  நமக்கு பிடித்தமான கடவுள்கள் பெயர் சொல்லி அழைப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை தந்து விட்டால். பதிலுக்கு உனக்கு அதை தருகிறேன்.. இதை தருகிறேன்.. என்று வியாபார நோக்கோடு பேச்சு வார்த்தையும் நடத்திக் கொள்கிறோம்.

 ஆனால், உண்மையில் நம்மிடம் எதையும் எதிர் நோக்காத தாயன்பு கொண்டவன் இறைவன். அவன் நம்மிடத்தில் விருப்படுவனவெல்லாம் ஆழமான பக்தி, அசையாத நம்பிக்கை அவ்வளவுதான்.!
மாதா, பிதா, குரு,.தெய்வம்  என்று நாம் வரிசை படுத்துவதில், எல்லாவற்றிலும் அவனே முதன்மையானவனாக ஆகிறான். 

===============================================================================  "தாயினும் சாலப் பரிந்து" என்றவிடத்தில் அவன் தாயினும் மேலாகிறான். 

"அன்னையாகி. தந்தையாகி," என்று சொல்லும் போது அன்னையுடன், தந்தையும் அவனேயாகி நம்மை காக்கும் அனைத்துப் பொறுப்பையும் சுமக்கிறான். 

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்," என்னுமிடத்திலும்  இறைவன் தன்னிருப்பிடத்தை மெய்ப்பிக்கிறான். 
  
"இறுதியில் தெய்வமாக" நின்று  நமக்கு வேண்டியதை நம் பாப புண்ணிய கணக்கோடு நமக்கு பகிர்ந்தளிக்கிறான்
================================================================================ இப்படி நான்கு நிலைகளிலும் நம்முடன் உறவாடுபவனிடம், வியாபார யுக்தியோடு, நாம் செயல்படுவது சரியா? இறைவனை கண் முன் கண்ட பல மஹான்கள் பக்தி மலர் கொண்டு மட்டுமே பூஜித்தார்கள். அந்தந்த பிறவிகளில் அவர்கள் அவ்வாறிருக்க, அதற்கு முந்தைய  பிறவிகளில் எத்தனை நல்ல சத்சங்க பலன்களுடன் தவமியற்றினார்களோ? 

சமய குரவர் நால்வரும், ஆழ்வார்கள் பன்னிருவரும், அறுபத்து மூன்று  நாயன்மார்களும், இன்னமும் அத்தனை மஹான்களும், ஆன்மிகம் கண்ட பல பெரியவர்களும், ஆண்டவனிடம் எதையும் எதிர்பார்க்காமல், பக்தி மட்டும் கொடுத்து பதிலுக்கு  எதையும் வேண்டா நிலையில் அடி பணிந்தார்கள். இவர்களை படித்தாவது இனி வரும் பிறவிகளில் கரை சேரும் எண்ணஙகளை வளர்த்துக் கொள்ளலாம் என்றால்,  அது ஒரு துளியேனும் சாத்தியபடுவதற்கு  ஒரு பொழுதேனும் சம்மதிக்க மறுக்கிறது.  

காரணம்... நம் மனம். 

 நம் மனதில் பரிபூரணமாக குடி கொண்டிருக்கும்  கடவுள் நம் அன்பு கடத்தலில் "உள்கட" ந்து பயணித்து நம்மை பூரணமாக அரவணைத்துக் கொள்வார். . ஆனால்  அவர் கடக்கும் பாதையை செப்பனிடாமல்  சேறும் சகதியுமாக (ஆசா பாசங்கள்) கற்களும், முட்களுமாக (சுயநலம், குரோதங்கள்) வைத்திருக்கிறோமே என எண்ணுகிறேன். இவைகளை சுத்தம் செய்து விட நேரத்தை எதிர் நோக்கும் போது,  மேலும் மேலும், ஆசாபாசங்களை கொண்டு குழைத்தெடுத்த சேறும், சகதியுமாக ஆகிறது மனம்...!! இதையும் இந்தப் பிறவியில்  இறைவன்தானே இவ்வாறு அருளுகிறார் என நினைக்கும் போது, இந்தப் பிறவியிலும்  நல்வழிபடுத்த "அவன்" ஆயத்தம் ஆகவில்லை என்ற அப்பட்டமான உண்மையும் புலப்படுகிறது. 

மஹான்களில் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரின் வாழ்க்கை வரலாறு மிகவும் பிடிக்கும். ஸ்ரீ ராகவேந்திரர்  பற்றை தொலைத்து இறைவனிடம அன்பை மட்டுமே கொடுத்து பதிலுக்கு எதையும் எதிர்நோக்காத  உள்ளத்துடன் அவனுடன் ஐக்கியமானார்.  ராக வேந்திரர் திரைப்படத்தில் வரும் "அழைக்கிறான் மாதவன்" என்ற இந்த பாடல், மனம் கசிந்துருகி கண்ணீரோடு அடிக்கடி கேட்பேன். இந்தப் பாடல் இடம் பெற்ற இப்படத்தில் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்த நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், அவரால் இயன்ற வரை ஸ்ரீ ராகவேந்திரரை நம் கண் முன் கொண்டு வந்து தந்துள்ளார். பாடகர் திரு. யேசுதாஸ் அவர்களின் குரலினிமை, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும், உள்ளத்தை கரைந்துப் போகும்படி செய்கிறது. 



இந்த பாடலில்  வருவது போல் "அவன் அழைக்கின்றான் "என்பதை உணரும் சந்தர்ப்பம்  உண்டாவது எந்த பிறவியிலோ? 
அழைத்தால் வருகிற இயல்புடையவன் ஆண்டவன்.  ஆனால்  வரவேற்று அணைத்துக்கொள்ளும் பக்குவம் வராத போது, அவன் அழைப்பிற்கான நேரத்தையாவது  எதிர் நோக்கி கொண்டிருக்கும் அந்த சமயம் , வாய்ப்பதாவது எப்போதோ

ராகவேந்திரர் இறையோடு ஐக்கியமாகி அருளுகின்ற "மந்திராலயம்" செல்லும் வாய்ப்பு  ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை எவ்விதமான பிரயாண முன்னேற்பாடுமின்றி தீடீரென எங்களுக்கு கிடைத்தது எங்களது பெரும் பாக்கியமே! அதை என் வாழ்வில்  என்றுமே மறக்கவே இயலாது. 


படங்கள் நன்றி கூகுள். 

"
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே". 🙏. 

பின்வரும் கதையை படிக்க நேர்ந்தது எனக்கு இந்த நினைவுகளை மீட்டு இந்த பதிவை உருவாக்க வைத்தது. எனது பதிவையும், நான் படித்த இந்தக் கதையையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 


கடவுளுக்கு பலி.
"""""""""""""""""""""''""""""""'
குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தன. அவ்வப்போது அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான்  ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த குரு, .... "இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்!" என்றான் குயவன்.

"எதற்காக? என்று கேட்டார் குரு."

"பண்டிகை வரப்போகிறதே!  இறைவனுக்கு  பலி கொடுக்கலாமென்று தான்...." என்று இழுத்தான் குயவன்.

"பலியா?" குரு வியப்புடன் வினவினார்.

"ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்."

இதைக் கேட்ட குரு எழுந்தார். தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

"என்ன இது?" என்றான் குயவன் கோபமாக.

"உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு.

" என்ன உளறுகிறீர்கள்?" குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது. "என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா?" என்று ஆத்திரப்பட்டான்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன் ". குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

"நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?"

"நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? " குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை? உன்னிடம் என்ன உண்டு?  அவர் எதை கேட்கிறார்? எதை நீ அளிப்பாய்?

அவன் படைத்த 'உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா?

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணரமுடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.
"அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வாய்"... இப்படி நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்....

இக்கதையில் வருவது போல் இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய ஆசைதான் வேண்டுதலாக மாறி, சமயத்தில் பிறரையும், எப்போதும் நம்மையும் கஸ்டபடுத்துவதாகவே அமைகிறது.

 குருவருள் அனைவருக்கும்  துணையாக  இருக்க ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏. 

Monday, December 31, 2018

வாழ்த்துகளுடன், படித்ததும் பார்வைக்கு....

இப்போதுதான் 2018 ம் ஆண்டின் துவக்கம் மாதிரி இருந்தது.  அதற்குள் இவ்வருட கடைசி மாதத்தில் இருக்கிறோம். காலம் நம்முடன் போட்டி போட்டு கொண்டு ஓடுகிறதா? இல்லை நாம்தான் காலத்தை ஜெயிக்க விடாது செய்ய வேண்டுமென ஓடி ஓடி கண்மூடி திறப்பதற்குள் இறுதி மாதத்தில் விரைவாக வந்து நிற்கிறோமா? புரியவில்லை.... ஆனால் இன்னமும் ஒரு நாளுக்குள், மறுபடி ஒரு புது வருடத்தை சந்திக்கப் போகிறோம். சென்ற வருடத்தில், எவ்வளவு  சந்தோஷங்கள், எத்தனை மகிழ்வுகள், இல்லை,  எத்தனை பிரச்சனைகள், எவ்வளவு கவலைகள் என அனைத்தையும் சமமாகவோ, அல்லது, முறையே நிறையவோ, குறையவோ சந்தித்திருப்போம். அது போல அல்லாமல் இனி வரப் போகும் புது வருடமாகிய  2019 இனிதே பிறந்து எப்பொழுதும் வருட இறுதி மாதம் வரை அனைவருக்கும் மகிழ்வினை மட்டும் அள்ளி அள்ளி தந்து செல்ல வேண்டுமென மனதாற காலத்திடம் வேண்டிக் கொள்கிறேன். 

முந்தைய காலங்கள் என்பது ஒரு வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. சென்ற வருடத்தில் இருந்த செளகரியங்கள் "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அப்படி சேர்ந்து இருந்தவைகள் "அ" வை விடுவித்து விட்டோ, நடை போட்டபடிதான் இருக்கின்றன. இதோ கீழே நான் படிக்க நேர்ந்தவைகளை அனைவரும் உணர்ந்திருக்கலாம். (ஏன் அனைவரும் படித்தேயிருக்கலாம். அப்படி உணராதவர்கள் இனி உணரும் சந்தர்ப்பங்கள் வராது என இவை கூறுகின்றன.)

இந்த விஞ்ஞானமும் வருடத்திற்கு வருடம் முன்னேறிக் கொண்டுதான் உள்ளது. அதன் பயன்பாடும் நமக்கு தேவையாகத்தான் உள்ளது. ( கீழே காணும் இவையும் விஞ்ஞானம் வெற்றி கண்ட வாட்சப் என்ற பயன்பாட்டின் மூலம் வந்து படித்தவைதான்.) ஒன்றுமில்லை.. ஒரு கையடக்க கருவியில் இந்த  மாதிரி விஷயங்களை தொகுத்தோ, இல்லை தனித்தனியாகவோ, வெளியிட்டு பகிர்ந்து மகிழ்கிறோம். இதுவும்  விஞ்ஞான வளர்ச்சியினால்தான் சாத்தியமாகிறது.                                     
                           
                                ஆனால்,

இந்த விஞ்ஞான தரகரின் விபரீத வளர்ச்சியால், சோம்பேறித்"தனம்" என்ற ஒன்று உண்மையான "தனத்தை" விட அதிக செல்வாக்குடன் நம் உடம்பில் வாடகை எதுவும் எதிர்பாராமல் வந்தமர்ந்து குடியேறி விட்டன.  ஆக்கிரமித்து விட்டவைகளை சில சமயம் அகற்ற இயலாமல் தத்தளிக்கிறோம். நம்முடைய பெற்றோரின் சிரமங்களுக்கிடையே வளர்ந்து விட்டு தற்சமயம் சொகுசின் சுகம் புரிந்து விட்ட நாமும் நம்  இளைய தலைமுறையினருக்கு அதே சுகத்தை அது கெடுதல் என புரிந்து கொண்ட பின்னரும்   தக்கவைக்க பாடுபடுகிறோம்.

என்ன இருந்தாலும் உடல் உழைப்பும், அதனால் வரும் இன்பங்களும் இனியதல்லவா.!அந்த உழைப்புகளையும். இன்பங்களையும் முழுதாக நாமும் அனுபவியாமல், நம் சந்ததிகளுக்கும் அது என்னவென்றே தெரியாதபடிக்கு செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.

இந்த மாதிரி வருடங்கள் உருண்டோடி, காலச் சுழற்சியில் மீண்டும் பழைய காலங்கள் ஏற்படலாம்.  அதைக்காண நம்மில் பின்வரும் எந்த தலைமுறை புண்ணியம் செய்திருக்கிறதோ.! அந்த கடவுளுக்கே வெளிச்சம்.. ஆனால் அந்த கடவுளே ஒளி உமிழும் பலவகையான விளக்குகளையும்,  மின்சார மணி எழுப்பும் ஓசைகளையும், தற்சமயம் மெளனமாய் அங்கிகரித்து வருகிறார்.
                   எது எப்படியாயினும் 
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்வான தருணங்களை நிறைய தர வேண்டுமென மனதாற ஆண்டவனிடம்  பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

       வலைத்தள சகோதர, சகோதரிகள்   
  அனைவருக்கும்  இனிதே பிறக்கவிருக்கும்
                           2019 ம் ஆண்டின்
                   புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

படித்ததை பிடித்ததால் பகருகிறேன்.

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

 வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார்.
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

 ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

 ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

 விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

 மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

 உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

 மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

 ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது…

அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டனர்…

 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

 யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

 ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…

அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

இது எல்லாமே உண்மைதானே. ! என எண்ணவும் தோன்றுகிறது