Friday, March 1, 2019

கடத்தலில் வந்த கலவன் சாதம்...

சகோதர,சகோதரிகள்
அனைவருக்கும் வணக்கம். 

வலையுலகில் நிறைய எழுத ஆசை. என் எழுத்தை (எழுத்தை என்பதை விட ஆசையை) இங்குதான் பதிவாக்கி சந்தோஷம் அடைய முடியும். என்னைப் போன்ற கத்துக்குட்டிக்கு ஆதரவாக இருக்கும் நல்லுள்ளங்களுடன் கூடிய பல பெரிய,, திறமையுள்ள பதிவர்கள் கோலோச்சி கொண்டிருக்கும் வலைத்தளத்தில் எழுதி அவர்களின் அன்பான கருத்துக்களையும், வாழ்த்துகளையும் பெறுவதை பெரும் பாக்கியமாக கருதி எழுதும் ஆசையை வளர்த்து வருகிறேன். அவ்வப்போது ஆசைகளை எழுத்தாக்கி பதிவிட்டும் வருகிறேன். என் வலைத்தளம் வந்து படித்து என் பதிவுக்கு மட்டுமல்லாது, கதை, கவிதை என்று நான் எழுதும் அனைத்திற்கும், ஊக்கமும், உற்சாகமும் தந்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்.

சமீப காலமாக பதிவுகள் எழுத பெரிய பெரிய தடைகள் விழுந்து விட்ட என் நிலையை  நானும் விளக்கியுள்ளேன். அப்படியும்  ஏதாவது எழுத வேண்டுமென மனமும் பொழுதும் ஒத்துழைத்த ஒரு நேரத்தில் ஒரு பக்தி பதிவாக இந்த வருடம் முதலில்  ஆரம்பிக்கலாமென, "மனதினுள் கடத்தல்" என ஒரு பதிவு எழுதினேன். அதற்கு கருத்துரை தந்தவர்களுக்கு மிக்க நன்றி.

வந்த கருத்துக்களும், அதற்கு  பதிலாக நான் தந்த கருத்துக்களுமாக  37ஐ தொட்டு கடந்து போய்க் கொண்டிருக்கையில், வேறு ஏதாவது எழுதலாம் என நான்  முயற்சித்து கொண்டிருந்த போது  கண்மூடி திறந்த ஒரு நிமிடத்தில் ( அந்த ஒரு விநாடி ஒரு மயக்கம் கலந்த உறக்கம்.. காரணம் அப்போது பேய்களும் உறங்கி விழும் அர்த்த ராத்திரி.. அப்போதுதான் எனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாமென்று  வழக்கமான கைபேசியில்,  பதிவொன்றை டைப் பண்ணிக் கொண்டிருந்ததில் எப்பேர்பட்ட உறக்கமும் மயக்கம் கலந்துதானே வரும்.. இதிலென்ன ஆச்சரியம்? .) என் "மனதினுள் கடத்தலை" என் விரல்கள் என் மூடித்திறந்த கண்ணெதிரிலேயே  சுலபமாக "கடத்திச்" சென்று விட்டன.

ஒரு வங்கியில் சிரமப்பட்டு சேமித்ததை ஒரு அவசர தேவைக்காக எடுக்கலாம் என செல்பவர்களுக்கு, எடுத்த பணத்தையும், கையோடு கொண்டு சென்ற கொஞ்ச பணத்தையும் சேர்ந்து ஒரு பையில் வைத்து கொண்டவாறு அந்த அவசர தேவையை சுபமாக முடிக்கலாம் என திரும்பும் போது, அதை மொத்தமாக சேர்த்து இழக்கும் போது  எவ்வளவு வருத்தம் வருமோ. .! அந்த வருத்தம் அன்று இரவு என்னையும் தொற்றிக் கொண்டது. ஏனென்றால்,, என் கையிருப்பை விட சேமித்ததை பொக்கிஷமாக கருதியவள் நான்.

இதில் கையோடு வைத்திருந்த பணம் நான் எழுதிய பதிவு. 

சேமித்ததால் வந்த பணம் அன்பான சகோதர,  சகோதரிகள் அனைவரின் கருத்துக்கள். 

இரண்டையும் கோட்டை விட்டவுடன் உறக்கமும், அதனுடன் வந்த மயக்கமும் ஒன்றாகவே கை கோர்த்துக் கொண்டு போயே  போச்சு. மறுநாள் காலை தெரிந்தவர்களிடம்  (என் குழந்தைகள்தான்) காணாமல் போனதை சொல்லி  பத்திரமாக மீட்டு வந்து விடலாம் என்ற நினைப்பில் படுத்தாலும், "கடத்தலை"   அங்கீகரிக்க இயலாமல் "மனதினுள் " பதிவின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு  திசைகளில், நர்த்தனமாடியபடி இருக்க, வந்த கருத்துக்களும் சுதி லயத்தோடு ஒட்டாமல் இசை பாடி  தப்புத்தாளங்கள் போட, தூக்க தேவதைக்கு நித்திரையை மறந்து ஒரே கொண்டாட்டந்தான்...!

அந்த கொண்டாட்டத்தில் ஈடுபடாமலிருக்க, எழுதியதை நினைவில் கொணர்ந்தது மீண்டும் எழுதினால் என்ன?  என்று தோன்றியது. படிக்கும் காலத்தில் எழுதியதை மனனம்  செய்ய  அப்போது ஒத்துப் போன மூளையில், இப்போது புரட்டிப் போட்டு சிந்தித்தாலும், எழுதிய வார்த்தைகள் வரி பிசகாமல் வருவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்ட பின், ஒரளவுக்கு வரிகள் வசப்பட ஆரம்பித்தன. அனைவரின் அன்பான கருத்துக்களையும், அவ்வாறே நான்  முயற்சிக்க,  வீட்டிலுள்ள அனைவரும் அவர்களது பெற்ற வரம் கலையும் நேரத்தில், எனக்கு ஒரு மட்டும் வந்தது.... உ.ற.க்.க.ம்... ஹா. ஹா ஹா. ஹா

பின் காலை "பாதுகாவலர்" துணை கொண்டு  "வலை வீசி" தேடியதில், "கடத்தியதுகள்" மூலைக்கொன்றாக கிடைத்தது . சேமித்ததையும் சேர்த்த பின்  வங்கிக் கணக்கில் போட்டு சேர்க்கிறேன். பாராதவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது வந்த பசி மயக்கத்திற்காக கோவைக்காய் சாதம்.. நான்கு நாட்களாக வெவ்வேறு விதத்தில் உபயோகித்த கோவைக்காய், (அவியல், காரக்கறி, கூட்டு, சாம்பார்) இன்னமும் மிகுதியாக இருந்து கொண்டேயிருந்தது. இன்று என்னை பயன்படுத்த விட்டால், நாளை கண்டிப்பாக ப(கி)ழமாகி விடுவேனுங்கோ..! என்று பயமுறுத்தியபடி மிகவும் கோவத்துடன்  காத்துக் கொண்டிருந்தது. நமக்கே கோவம் வரும் போது, கோவ(வை) க்காய்க்கு வராதா என்ன?

                                   நன்றாக


                                      அலம்பி


எடுத்த கோவக்கார காய்கள். 


வறுப்பதற்கு எடுத்த  ( இல்லை.. இல்லை... வறுத்த பின் எடுத்த என்று மறுத்துக் கூறும் நிலையில் நாங்கள்  இல்லை..  ஏனென்றால் ஏற்கனவே எங்களை வறுத்து எடுத்து விட்டார்களே..) ஒரு ஸ்பூன் க. ப, ஒரு ஸ்பூன் உ. ப, இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை  காரத்திற்கு அவரவர் விருப்பம் போல் மி. வத்தல்  நான் 5,6 எடுத்திருந்தேன். இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலைகள்.


  வறுத்த  பின்னும் அதே போஸில்                        சலிப்பில்லாமல் நாங்கள்தான்..


    பொடிதாக   அரிந்த  இரண்டு  அல்லது            மூன்று  பெரிய  வெங்காயம்..


கோவைக்காய்க்கு கோவம் என்று பாட்டு பாடி விட்டு கண்ணில் நீர் வர பெரிதாக அரிந்து வைத்து இருக்கும் எங்களை "பொடிதாக" என்று  உங்களுக்கு அறிமுக  படுத்துகிறார்கள். நாங்க எப்படி.?  எவ்வளவு கோவம் இருந்தாலும், எங்களைத்தொட்ட வர்களின்  கண்ணுல தண்ணியை வர வைத்து  பார்த்துருவோம்ல்லே.....


அலம்பி எடுத்த கோவைக்காய்களை இருப்பக்கமும் காம்பு நீக்கியபின், கொஞ்சம் பழுத்ததை அது கோவப்பட்டாலும்  பரவாயில்லையென்று ஒதுக்கி விட்டு, மற்ற காய்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டு சுற்றுக்கள் சுற்றி வைத்துக்கொள்ளவும்.


இதுதான் எங்களுக்கு கோவம்..! கவிஞர்கள் பெருமையாக "கொவ்வைப்பழம்" போலும் சிவந்த அதரங்கள் என பெண்களின் உதட்டழகிற்கு  எங்களை உதாரணம் காட்டி விட்டு,  காலப்போக்கில் பெயரையும் "கோவைக்காய்"  என மாற்றிவிட்டு, பழமாகிப் போனால நன்றாக இருக்காது என இப்படி ஒதுக்கி வைத்தால்..... எங்களுக்கு கோபம் வராமல் இருக்குமா? இயல்பாகவே பழம் எங்கள் பெயருடன் ஒட்டிக் கொண்டது. செடியிலிருக்கும் போதும் கிளிகளுக்கு, மற்ற பறவைகளுக்கு பயனாகிறோம். எங்களிடம் இருக்கும் மருத்துவ குணம் உங்களின் "இனிப்பு நோயை" கட்டுப்படுத்தும் திறனுடையது தெரியுமா?


ஒரு வாணலியில் கடுகு, உ. ப தாளித்துக் கொண்டு அரிந்து வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


அது நன்றாக வதங்கி வரும் சமயத்தில்,


துருவிய கோவைக்காயைப்போட்டு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.


வெந்த அதனுடன், வறுத்து வைத்ததை கரகரப்பாக பொடித்து அதனுடன் கலந்து


வாசம் வரும் வரை கலவைகளை திருப்பி விட்டு ஐந்து நிமிடங்களில் அனைத்தும் நன்கு கலந்ததும்,


ஏற்கனவே தயாராக ரெடியாகி  உதிரியாக ஆற வைத்து காத்திருக்கும் சாதத்தை  இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இதனுடன் கலந்து   விடவும்.


கோவைக்காய்  சாதம் தயார். மேல் அலங்காரத்துக்கு மு. ப வேண்டுமானால் (ஒத்துக் கொள்கிறவர்கள். போட்டுக் கொள்ளலாம். ஆனால் போட்டால் அது  மறுப்பேதுமின்றி ஒத்து கொள்ளும். ) பொடித்து வறுத்து போட்டுக்கொள்ளலாம்.


இதற்கு வழக்கம் போல் தயிரில், பச்சை மிளகாய் தேங்காய் அரைத்து விட்டு  கடுகு தாளித்து தொட்டுக்கொள்ளலாம். அதுவும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.


இப்ப நம்ப கோவைக்காய்க்கு  கோவம் தணிந்து சாதத்துடன் நட்புறவாகி விட்ட காரணத்தால் சமரசம் ஆகி இருக்கும்,. இரண்டாவதாக அதன் பயன்களை அவையே "அவை" முன்னால் சமர்ப்பிக்க வேறு வைத்து விட்டேனே.! 


இனி என்ன? தடையேதுமின்றி கோவைக்காய் சாதத்தை சாப்பிடலாம்.!  இல்லையேல், இதுவும் என் உறக்க மயக்கத்தில், என்றேனும், ஒருநாள் ஓடி விடும்.

நன்றி...அனைவருக்கும்.

38 comments:

  1. குட்மார்னிங்,

    நீண்ட நாட்களுக்குப்பின்னான உங்கள் பதிவு மகிழ்ச்சியைத் தருகிறது. வருக, வருக...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீண்ட நாட்களுக்குப் பின் என்னுடைய பதிவு மகிழ்ச்சியை தந்தது குறித்து எனக்கும் சந்தோஷமே...

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கோவக்காய் எனக்குப் பிடிக்காத ஒன்று, என்னதான் மருத்துவ குணம் அதில் இருந்தாலும்! எனக்குதான் நல்லதெல்லாம் பிடிக்காதே!! ஆனாலும் இந்த முறையில் செய்தால் ரசிக்கலாம் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கோவைக்காய் தங்களுக்கும் பிடிக்காத காயா? நீங்கள் சொன்னது அதற்கு கேட்டிருக்கும் பட்சத்தில், கோபித்துக் கொண்டு உங்களுடன் அதுவும் "கா"விட்டிருக்கும். ஹா ஹா ஹா.

      இந்த முறையில், சிறிது கொத்தமல்லி விரைகளும் சேர்த்து வறுத்து செய்து பாருங்கள். இந்தக் காய்க்கு மணம் என்பது தனியாக கிடையாதென்பதால், உடன் சேரும் பொருள்களால் நன்றாக இருக்கும்.

      கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மு ப பற்றி கமெண்ட், மேலும் சில கமெண்டுகள் புன்னகைக்க வைத்தன. காணாமல் போன பதிவை மட்டும் நீங்கள் தேடி எடுக்கவில்லை. உங்கள் உற்சாகத்தையும்தான்! எபிக்கும் எழுதி அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /காணாமல் போன பதிவை மட்டும் நீங்கள் தேடி எடுக்கவில்லை. உங்கள் உற்சாகத்தையும்தான்! /

      காணமல் போன பதிவையும், கமெண்ட்ஸையும் எப்படி இணைப்பது என யாராவது சொல்லித் தருவீர்கள் என நினைத்தேன். எதிரும்பார்த்தேன்.
      உற்சாகத்தை தகெக வைத்துக் கொள்ள முடியவில்லை. தேடிக் கொண்டு வந்தும் சற்று நேரத்தில் வடிந்து ப் போய் விடுகிறது.

      தங்களனைவரின் கமெண்டுகள் தந்த உற்சாகத்தில், எ.பிக்கும் எழுதி அனுப்புகிறேன்.நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பதிவு காணாமல் போனாலும் கண்டெடுத்து மீட்டு விட்டீர்கள். நன்றக உங்கள் உணர்வுகளை எழுதி இருக்கிறீர்கள். நானும் இரவில் அதிகம் தூங்காவிட்டாலும் அதற்காகக் கணினியையோ, மொபைலையோ எடுத்து வைத்துக் கொண்டு வேலை செய்வதில்லை. ஏனோ அது எனக்குச் சரியா வராது! மற்றபடி பலரும் இரவில் தான் பதிவுகள் எழுதுவது, போடுவது, பதில் கொடுப்பது எனச் செய்கின்றனர். மதிய வேளையில் வீட்டு வேலைகளின் சுமை தாங்க முடியாமல் இருப்பார்கள் போலும். உங்களுக்கும் அப்படித் தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? ஊருக்கு போக வேண்டும் என்றீர்களே.! நலமாக பயணம் மேற்கொண்டு நலமுடன் திரும்பி வந்தாயிற்றா? உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது சென்று வந்த பகிர்வு களை உங்கள் பக்கத்தில் நீங்கள் பதிந்தால் படிக்க ஆவலாக உள்ளோம்.

      பதிவை மீட்டுக் கொண்டது என் குழந்தைகளின் உதவியால்தான். இன்னமும் அதை இணைக்க நேரம் வர வேண்டும்.

      ஒழுங்கான உறக்கம் என்பது இரவு பத்திலிருந்து, காலை நான்கு மணி வரைதான். பொதுவாக ஆரோக்கியமான மனிதர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வு போதும். சின்ன குழந்தைகளுக்குத்தான் ஒன்பது மணி நேர உறக்கம் அவசியம். என் குழந்தைகளின் பகுதி நேர வேலை காரணமாக, அவர்கள் வரும் வரை விழித்திருந்து, காத்திருந்து என என் முறையான உறக்கம் எப்போதோ போய் விட்டது. தற்சமயம் பேரக் குழந்தைகளும் பத்து மணிக்கு மேலாக விழித்திருக்கிறார்கள். மதியும், வேலைகள், அவர்களை கவனித்து கொள்ளுதல் என நேரம் சரியாக உள்ளது. மாலை கொஞ்சம் இடைப்பட்ட நேரத்தில் வந்து பதிவுகளை படித்து கருத்துரை இடுவேன். மற்றபடி இரவு பத்துக்கு மேல் என் நேரம். அதிலும் மிகவும் களைப்பாக இருந்தால், உறங்கி விடுவேன். தங்களின் கருத்துகளுக்கும் நன்றிகள். மதியத்திற்கு மேல் வருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கோவைக்காய் சாப்பிடும் நாட்களில் நானும் கோவைக்காய் சாதம் செய்திருக்கேன். ஆனால் கோவைக்காயைத் துருவியதில்லை. மெலிதாக நறுக்கி வதக்கிச் சேர்ப்பேன். மசாலாவும் இப்படி வறுத்து அரைத்துச் சேர்த்ததில்லை. இம்முறையில் மசாலா கத்திரிக்காய் சாதத்துக்கும் நன்றாக இருக்கும். ஒரு நாள் கத்திரிக்காய் சாதம் செய்கையில் இந்த மசாலா வறுத்துப் பொடித்துச் சேர்த்துச் செய்து பார்க்கிறேன். இப்போதெல்லாம் கோவைக்காய் சாப்பிடுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      கோவைக்காய் மெல்லியதாக நறுக்கி குக்கரில் வைத்து வெந்து எடுத்தவுடன், உப்பு, காரப்பொடி, தனியா பொடி சேர்த்து வெங்காயம் வதக்கிக் போட்டு நன்றாக கலந்தவுடன் சாதத்துடன் கலந்தும் சாப்பிட்டுள்ளோம். கொஞ்சம் புது மாதிரியாக இருகட்டுமே என இந்த பாணி. மற்றபடி படுத்துப் போர்த்தினாலும், போர்த்திக் கொண்டு படுத்தாலும், ஒன்றுதான். ஹா ஹா. கத்திரிக்கும் தனியா சேர்த்து வறுத்துப் போடலாம். இதற்கும் சேர்த்திருப்பேன் எனத்தான் எண்ணுகிறேன். மறநெது விட்டது. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அடடா... கோவைக்காய் எனக்கு சுத்தமாகப் பிடிக்காதே... கத்தரிக்காய் போட்டு இதே முறையில் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடாடா.. தங்களுக்கும் கோவைக்காய் பிடிக்காதா? கத்திரிக்காய் எங்கள் வீட்டில் சிலருக்கு அலர்ஜி. அதனால்தான் கோவைக்காய் காரக்கறி அடிக்கடி செய்வதுண்டு. இருப்பினும் இதே முறையில் செய்து (கத்திரிக்காய்) செய்து பார்க்கிறேன் என்றமைக்கு மிக்க நன்றிகள். ஆனாலும் கோவைக்காய்க்கு கண்டிப்பாக அதிக கோவம் வரப்போவதென்னவோ உண்மை. (பின்னே, எல்லோரும் அதை பிடிக்கவில்லை என்று சொன்னால் அதற்கு கோவம் வரமாலிருக்குமா? ஹா ஹா ஹா..)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கோவைக்காய் சட்னி எனக்கு மிகவும் பிடிக்கும்...

    உங்களது செய்முறையையும் செய்து பார்க்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் கோவைக்காய் சட்னி பிடிக்கும் என்பதில் மிகுந்த சந்தோஷம்.
      ஆம், சட்னியாக செய்து சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

      தாங்கள் இந்த முறையில் செய்து பார்க்கிறேன் என்றதற்கும் நன்றிகள்.

      இதற்கு முன் தவறுதலாக டெலிட் ஆன பதிவும், வந்த கருத்துரைகளும் மீண்டும் ஒன்று சேர்ந்து என் பதிவில் இடம் பெறுமா? தங்களுக்கு வழி முறைகள் தெரிந்திருக்கும். சிரமம் பாராமல் சொன்னால் நன்றாக இருக்கும் முடியுமா? நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. ஹை கமலாக்கா தொலைந்து போனவை என்று நினைத்திருந்ததை மிட்டெடுத்துக் கொண்டுவந்துட்டீங்க உங்களையும் சேர்த்து!!!!

    நானும் கோவைக்காய்ச் சாதம் செய்வதுண்டு.ஆனால் துருவிச் செய்வதில்லை. மெலிதாக நீட்டமாகக் கட் செய்து. வறுத்தவற்றைப் பொடித்தும் போட்டுச் செய்திருக்கேன்...சும்மா தாளித்தும் செய்திருக்கேன். நிலக்கடலையை அப்படியே வறுத்தும் போட்டு அல்லது கொஞ்சம்பொடித்துச் செர்த்தும்...மஹாராஷ்ற்றியன் ஸ்டைலில்.

    மஹாராஷ்டிரியன் ஸ்டைலில் கோடாமசாலா கொஞ்சம் சேர்த்தும் செஞ்சுருக்கேன்..அதுவும் சூப்பரா இருக்கும் கமலாக்கா...

    நீங்க சொல்லிருக்கறதிலேயே கொஞ்சம் தனியா சேர்த்து...மிளகாய் வறுத்தும் பொடித்து கத்தரிக்காய் காரக் கறி செய்வோமே அப்படியும் செய்யலாம் சூப்பரா இருக்கும்...

    கறிவேப்பிலை காய்ந்துவிட்டால் அதைப் பொடித்து கையாலேயே நம்பியார் ஸ்டைலில் தேய்த்துப் போடலாம்...கறிவேப்பிலை சாதம் செய்வது போல அதில் கோவைக்காய் நன்றாக வதக்குச் செர்த்து...மாமியாருக்காக வெங்காயம் சேர்க்காமல் இப்படிச் செய்ததுண்டு...

    சூப்பர் ரெசிப்பி கமலாக்கா...சுவையோ சுவை...

    மீண்டும் வந்தமை மகிழ்ச்சி!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொலைந்து போனதுடன் என்னையும் சேர்த்து மீட்டு விட்டேன் என்றால், நான் தினமும் எ. பியில், மற்றைய பதிவில் என தலையை மட்டும் காண்பித்து வருகிறேனே! நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளவேயில்லையா? அப்போ உங்கள் பாணியில் ஒரு கர்....... . ..ர் ஹா ஹா ஹா ஹா.

      உங்கள் ஸ்டைலிலும் கோ.சாதம் நன்றாக இருக்கும். நான் அன்றைய தினம் ஒரு புது மாதிரிக்காகத்தான் துருவிக் சேர்த்தேன்.

      கத்திரிக்காயும் இதே பாணியில் தனியா உடன் வறுத்து சேர்த்து பண்ணியுள்ளேன். இதிலும் போட்டேனோ என்பது கட மறந்து விட்டது. படம் எடுத்தது என்றோ.! பதிவு எழுதியது இப்போது...

      /கறிவேப்பிலை காய்ந்துவிட்டால் அதைப் பொடித்து கையாலேயே நம்பியார் ஸ்டைலில் தேய்த்துப் போடலாம்.../

      ஹா ஹா ஹா ஹா நம்பியார். எம் ஜி ஆர் ஸ்டைலில் எல்லாம் கிச்சனுக்குள் வேலை செய்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்ததும் சிரித்து மாளவில்லை..( கத்தி பறக்கும். உள்ளே சமையல் ரெடியா என கேட்க வருபவர்களும் கத்திப் பறப்பார்கள். ) ஹா ஹா ஹா.

      நான் பதிவிட்டதில் தங்களது மகிழ்ச்சி கண்டு சந்தோஷம் அடைகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கமலாக்கா கைபேசியிலா பதிவை அடித்தீர்கள்!!! என்னால் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது...நான் கைப்பேசியிலிருந்து கமென்ட் போடுவதே மிகவும் கஷ்டப்படுவேன்...கணினிதான் ...

    அது போல ராத்திரி பெரும்பாலும் 9.930ல்க்குள் உறங்கிவிடுவேன். காலை 4 மணிக்கு எழுதல்...சில சமயம் மட்டும் இந்த இரவுத் தூக்கம் 10., 10.30 க்கு மேல் ஆகும்...அது அபூர்வம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆரம்பத்தில் கணினிதான் பயன்படுத்தினேன். லேப்டாப்பும் உபயோகப்படுத்தி இருக்கிறேன். இப்போது இந்த கைபேசியில் ஒருவருடத்துக்கும் மேலாக பதிவுகள், கருத்துக்கள் என உபயோக்கிறேன். சின்னதாக இருப்பதால் கஸ்டமாக உள்ளது. கையில் வைத்துக்கொண்டே உபயோகிப்பதால், குழந்தைகள் தூங்கும் நேரந்தான் பயன்படுத்த முடிகிறது.

      இரவுத்தூக்கமும் அப்படித்தான். அவர்கள் தூங்கும் போதுதான் நமக்கு ஓய்வு. சிலசமயம் அந்த நேரந்தான் பதிவுகளை பார்த்து கருத்திடுகிறேன். என்ன செய்வது? கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கொவ்வை கோவை ஆனது எனக்கு புதிய விடயம்.

    ரசிக்கும்படியான நடை அருமை சகோ.

    எங்கள் வீட்டில் இது பெரும்பாலும் வாங்குவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கொவ்வை பழங்கள், கோவைக்காய் ஆகிவிட்டது. ஹா ஹா.

      80ல் சென்னையில்தான் இந்த காய்கறி கிடைக்கும். நாங்கள் தி. லி வரும் போது இதை அதிசய பொருளாக சுமந்து வருவோம். இப்போதெல்லாம் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறதே.! காய் மார்கெட்டில் இது கண்ணில் படாத இடமேயில்லை.

      தங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. மிகவும் ரசிக்க வைத்த பதிவு.
    காணமல் போனவைகளை மீட்டது மகிழ்ச்சி. பதிவு அருமை.
    இன்று எங்கள் வீட்டில் கோவைக்காய் பொரியல்.
    சடினி செய்வேன் இப்படி வறுத்து அரைத்து போட்டு நிலக்கடலை இல்லாமல். நீங்கள் சொன்ன செய்முறையில் சாதம் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா சகோதரி? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்கள் வீட்டிலும் கோவைக்காய் பொரியலா? மிக்க மகிழ்ச்சி. நானும் கோவைக்காயில் சட்னி செய்வேன். சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும். எந்த முறையில் செய்தாலும், உருவத்திலும், ருசியிலும் சிறிது வேறுபடும். மற்றபடி ஒன்றுதான்.

      தாங்களும் செய்து பார்க்கிறேன் எனச் சொன்னதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. //கடத்தலில் வந்த கலவன் சாதம்..//

    ஆஆஆஆஆ கலவன் என்பது இலங்கைப் பாசையாச்சே.. தமிழ் நாட்டிலும் பாவிப்பீங்களோ? நாங்கள் பேச்சு வழக்கில் பாவிக்க மாட்டோம் ஆனா கலவன் பாடசாலை எனப் பெயர் இருக்கு.. மிக்ஸ்ட் ஸ்கூல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பொதுவாக தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், என்று எல்லாவற்றிற்கும் அதன் பெயரைச் சேர்த்து சொல்வோம். நாங்கள, தி. லி யில் கலவன் சாதம் என்றும் சொல்வது வழக்கம். கலவை சாதம் என்றும் சொல்வோம். இங்கு பெங்களுரில்"சித்ரான்னங்கள்"என்று சொல்கிறார்கள். எல்லாச் சொல்லும் ஒன்றே, புரிந்தால் சரிதானே.!

      "கலவன் பாடசாலை" புது தகவலுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. ஃபோனிலே ரைப் பண்ணுவதென்பது மிகக் கஸ்டமே., அப்படிக் கஸ்டப்பட்டது கண்ணெதிரே காணாமல் போயிட்டால்ல். வரும் வேதனையைச் சொல்லவே தேவையில்லை. நான் போஸ்ட் எல்லாம் எழுதுவதில்லை, ஆனா கொமெண்ட்ஸ் கூடுதலாகப் போடுவேன் ஃபோனிலிருந்து .. வெளியே இருக்கும் தருணங்களில்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கஸ்டப்பட்டது கண்ணெதிரே காணாமல் போயிட்டால்ல். வரும் வேதனையைச் சொல்லவே தேவையில்லை./

      ஆமாம். அதனால்தான் வருத்தமாக இருந்தது. கமென்டஸ் போடலாம். வெளியிலிருந்தும் போனில் நெட் கனெக்ஷன் இருந்தால் கமெண்டுக்கு பயன்படுத்தலாம். ஆனால் பதிவு எழுதும் போது கைதவறுதல் வந்து விட்டால், முன்னதாக எழுதியது போய் விடும். இல்லை பாதி எழுதி டிராப்டில் உள்ளதும் வெளி வந்து விடும். கொஞ்சம் கஸ்டந்தான்! என்ன செய்வது எழுதும் ஆசை எல்லாவற்றையும் சமாளிக்கிறது. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கொவ்வை என்பது பேச்சு வழக்கில் கோவை எக்ஸ்பிரஸ் ஆச்சு:).. காய்களைக் கழுவுறதிலேயே மூன்று படமெடுத்துப் போட்டு நீங்களும் வீரத்தாய்தான்:) என்பதை நிரூபிச்சிட்டீங்க:).. இருப்பினும் கீசாக்காவை அடிக்க முடியாது:) அவ ஒரு இடத்தில இருந்தே ஒம்பேது படமெடுத்துப் போட்டு எங்களைப் பேய்க்காட்டுவா:)).. ஆனா அதிராவை ஆரும் பேய்க்காட்ட முடியாதாக்கும்:) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.! கொவ்வை குமிழ் சிரிப்புதான் கோவை ரயிலில் ஏறி விட்டது.
      காய்களை மூன்று தடவை கழுவுனா, வீரத்தாய் பட்டமா? இந்த முறை நல்லாருக்கே.! வாளெடுத்து எந்தப் போரிலும் ச்ற்ற வேண்டிய அவசியமில்லை.. நன்றி.. நன்றி. ஹா ஹா ஹா ஹா
      பாராட்டுகளுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. //இரண்டு ஈர்க்கு//
    இரண்டு நெட்டு என்போம்..

    ஆஹா கடசிவரை நீங்க சலிக்கவே இல்லை:) ஹா ஹா ஹா ரெண்டு ரெண்டு படமெடுத்துப் போட்டெல்லோ கோவைக்காய் கலவன் செய்திருக்கிறீங்க, ஆனா மிக அருமையான குறிப்பாகவே தெரியுது, கொவ்வைக்காயை அரைத்துப் போடுவது நல்ல ஐடியாத்தான்...

    அடுத்து எந்தக் காயோடு இல்ல பழத்தோடு கோபிச்சுக்கொண்டு போஸ்ட் போடப்போறீங்க?:).

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      "இரண்டு நெட்டு என்போம்."
      இதுவும் கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.

      /ஆஹா கடசிவரை நீங்க சலிக்கவே இல்லை:) ஹா ஹா ஹா ரெண்டு ரெண்டு படமெடுத்துப் போட்டெல்லோ கோவைக்காய் கலவன்
      செய்திருக்கிறீர்கள் /

      ஒரு படம் சரியா வரலைன்னா இன்னுமொரு படம் என எடுத்ததை என்ன செய்ய? எதையும் வேஸ்டாக்க மனம் வரவில்லை.. கோவைக்காயையே வேஸ்டாக்க மனதில்லாமல்தான் சாதத்துடன் கலந்தாகி விட்டது. ஹா ஹா ஹா. நல்ல ஐடியா என்ற பாராட்டுக்கு நன்றி சகோதரி.

      அடுத்து எந்தக்காய் என்னோடு கோபிச்சுகிறதோ அதை போஸ்டாக்கி போட வேண்டியதுதான்.!

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. வெகு இனிமை கமலா ஹரிஹரன்.
    கோவைக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். இதையே உங்கள் மாதிரி,
    அரைத்துப் பொடி சேர்த்து கலந்த சாதம் செய்வது புதுமை.
    மிக நல்ல ரெசிப்பி.
    மிக மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கோவைக்காய் தங்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.

      தாங்களும் இதை செய்து பார்க்கிறேன் எனச் சொன்னதற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகன். தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் எனக்கு மகிழ்வினை யையும்,இன்னமும் ரெசிபிகளை பற்றி எழுத வேண்டுமென்ற ஆர்வத்தையும் கொடுக்கிறது சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. கோவைக்காய் சாதம்...சூப்பரா இருக்கு மா..

    நானும் கோவைகாய் சாப்பிடாத ஆள் தான் ..என்னமோ அது அவ்வளவா பிடிக்கலை சோ செய்றதும் இல்ல..

    உங்க குறிப்பை காணும் போது செஞ்சு பார்க்க தோணுது ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் சகோதரி.! கோவைக்காய் பொதுவாக அனைவருக்கும் பிடிப்பதில்லை. அது ஒரு மணம் இல்லா காய்கறிதான். ஆனால் சமயத்தில் நாம் வாங்கும் போது வாங்கியது எல்லாமே காய்யாகவே அமைந்து விட்டால், (ஒன்று கூட பழுக்காமல்,) சாப்பிடுகிற காரம் போட்டு சுருள வதக்கி (கொஞ்சம் மொறு மொறுவென ஆகவேண்டும்) காரக்கறி யாக பண்ணினால் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்க சான்ஸ் உண்டு. அப்படி சாப்பிட்டு எங்களுக்கும் இந்தக்காய் பிடித்து விட்டது. நீங்களும் செய்து பார்க்கிறேன் எனச் சொன்னதற்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. கோவக்காயில் சாதமா? முதல் முறையாக கேள்விப்படுகிறேன். எனக்கு கோவக்காயை மெலிதாக நீட்ட வாக்கில் நறுக்கி, அதோடு மெலிதாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து செய்யும், காரக்கறி பிடிக்கும். சாதம் செய்து பார்க்கலாம்.
    கோவக்காய் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய காய். என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    ReplyDelete
  19. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நீங்கள் கூறியபடி கோவைக்காய் நீட்டமாக மெலிதாய் நறுக்கி, கார்க்கறி (ரோஸ்டாக) நன்றாக இருக்கும். பருப்பு சாதம், மோர்குழம்பு, என்றவைக்கு இதை தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். நானும் அடிக்கடி செய்வேன்.

    தக்காளி சாதம், கோஸ் சாதம் மாதிரி இதையும் செய்யலாமென, ஒரு வித்தியாசத்திற்கு செய்தேன். நன்றாக இருந்தது. தாங்களும் செய்து பார்க்கிறேன் எனச் சொன்னதற்கு மகிழ்ச்சி.

    ஆமாம். கோவைக்காய் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து எனவும் தெரியும். தங்கள் அன்பான கருத்துகளுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  20. வணக்கம் !

    ஆஹா கோவக்காய் சாதம் கோபிக்காமல் சாப்பிட்ட எல்லோரும் கருத்திட்டு இருக்கிறார்கள் நாமும் சாப்பிடா விட்டாலும் கருத்துக் சொல்வோம்ல !

    நல்லுண வெல்லாம் நலங்கூட்டும் ! நாம்வாழ
    வல்லமை ஊட்டும் வரிந்து !

    சிறப்பான பதிவு கா தூக்கம் கலைந்தாலும் பயனுண்டு ஹா ஹா ஹா

    வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீண்ட நாட்களுக்கு பின் என் பதிவுக்கு தங்கள் வருகை பெருமகிழ்ச்சி தருகிறது. தங்களைப் போன்றோரின் கருத்துரைகள் எனக்கு இன்னமும் எழுதும் ஊக்கத்தை தருகிறது.

      /கோவக்காய் சாதம் கோபிக்காமல் சாப்பிட்ட எல்லோரும் கருத்திட்டு இருக்கிறார்கள் நாமும் சாப்பிடா விட்டாலும் கருத்துக் சொல்வோம்ல !/

      ஏன் அப்படி? நீங்களும், சாப்பிட்டு இல்லை டேஸ்டாவது பார்த்து விட்டு கருத்து சொல்லலாமே..!ஹா.ஹா.ஹா

      நல்ல குறளோடு வந்து அருமையான கருத்தை தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete