முன்பெல்லாம் ஒரு வீடென்றால், அதில் தாய் தந்தை, தந்தையை பெற்ற தாய், தந்தை, தந்தையுடன் பிறந்த அண்ணன், தம்பிகள், அவர்களின் மனைவிகள், அவர்களின் வாரிசுகள் என நிரம்பி வழிந்த குடும்பமாக இருந்தது. இது போக, தாயை சார்ந்தவர்களோ, இல்லை தந்தையின் சகோதரிகளோ , (அவர்கள் குடும்பம் என்ற படகுகளில் ஏறி ஒருங்கிணைந்து பயணிக்கும் போது, விதியினால், துணை இழந்து தடுமாறுபவர்களாக இருக்கும் பட்சத்தில்..) அவ்வப்போதோ, அல்லது நிரந்தரமாகவோ, வந்து இணைந்து இருப்பார்கள். இது அக்கால முறைகளின்படி தாயை சார்ந்தவர்களை விட, தந்தையின் உறவு முறைகளைத்தான் ஊரும், உறவும் ஏதும் சொல்லாமல், ஏற்றுக் கொள்ளும். இதிலும் அக்குடும்பத்தில் ஏகப்பட்ட மனஸ்தாபங்கள் வரலாம், மனச் சஞ்சலங்களும், கருத்து வேறுபாடுகளும், அதனால், சண்டைகளும் வரலாம். ஆனாலும், ஊர் வாய்க்கு அவலாவதை விட மௌனங்கள் சிறந்ததென கருதி, குடும்பத்துடன் அனுசரித்துப் போனவர்கள் பலர். (அனுசரிப்பில் அவஸ்தைப்பட்டு, "போனவர்களும்" பலர்..!:))) )
அதன் பின்னர்தான் காலமாற்றங்கள் அவர்களுக்கு தன் நலத்தையும், அதனால் ஏற்படும் சுகபோகங்களையும் சுட்டிக்காட்டி வளர்த்தது. (இதில் காலங்களின் மேலும் தவறில்லை. மாறி வந்த இளைய தலைமுறைகளின் விருப்பங்கள், ஆசைகள்,சுகங்களின் விதையாக மாறி அங்கு சுயநல விருட்சங்கள் உருவாகின.) குடும்பத்தின் பணத்தேவைகளுக்கு போதிய வருமானம் ஒன்றே வழியென்பதை சுட்டிக் காட்டி, பல பிணக்குகளை குடும்பத்திற்குள் ஏற்படுத்திக் கொள்ளச் செய்தது. இதனால் குடும்பத்தின் பிணக்குகள் முகம் சுணங்கி காட்டி மட்டும் திருப்பாது, ஒரேடியாக பிரியச் செய்து சந்தோஷபட்டுக் கொண்டது.
கூட்டுக் குடும்பங்கள் பொருளாதாரம் , அநாவசியமான பிரச்சனைகள், வேலை மார்க்கங்கள் என பிரிவுக்கு ஒரு காரணங்களை எடுத்துக்கூறி, ஒரு நீதிமன்றம் இல்லாத, ஒரு நீதிபதி இல்லாத வழக்காக தன் பொய்யான "மனசாட்சியை" மட்டும் வைத்துக் கொண்டு வழக்காடி பிரிவை பலப்படுத்தி காலத்தின் வேகத்தில் கரை(பிரி)ந்தும் போயின.
அதுமட்டுமா? நகரங்களின் வளர்ச்சியை கண்டு, பச்சைப் பசேலென்றிருந்த சிறு கிராமங்களும், ஒரளவு நகரமாக மாறி தன்னை அலங்கரிக்க கற்றுக் கொண்டன. கிராமங்களை விட்டு தப்பித்தவறி நகரங்களில் ஒன்றாக வாழ வந்த கூட்டுக்குடும்பங்களும், நாகரீக போக்கின்படி, வாழ ஆசை கொண்டு தனித்தனியாக வாழ்ந்துதான் பார்க்கலாமே என யோசிக்கத் தொடங்கின.
விளைவு கட்டிடங்களின் பெருக்கம் காரணமாக நகர்ப்புறச் சாலைகளும் திணறியது. சாலை வசதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மரங்களின் பரிதாப நிலைக் கண்டு, வானம் தன் போர்வையான மழையை எங்கு போர்த்தலாம் என யோசிப்பதற்குள், மழையாகிய அந்தப் போர்வையே அதன் வசமின்றி ஆங்காங்கே விழுந்து தன்னை காயப்படுத்தி கொண்டன.தன்னால் பிறருக்கு எப்போதுமே பயனுள்ளதாக இருக்கும் தன் செய்கையை மறந்து விட்டு தனக்குத்தானே பெரும் அழிவையும் ஏற்படுத்திக் கொண்டது.
காலம் மேலும் உருண்டோட குடும்பங்கள் அவரவர்களுக்கு "தனி வலையானாலும், ஒரு எலி வளை" (அப்பாடா...! பதிவின் தலைப்புக்குள் ஒரு வழியாக அந்த எலி மாதிரியே நுழைந்தாகி விட்டது.) கண்டிப்பாக அவசியம் என்ற ஸ்திரமான எண்ணத்துடன் பிரிய ஆரம்பித்தனர். வீடுகள் சின்னதானாலும், தங்களின் சுதந்திரத்தை எண்ணி மகிழ்வடைந்தவாறு அந்த சின்ன வளை(வீடு)களில்"எலிகள்"மாதிரியே நடமாடி வளைய வருகின்றனர்.
இனி கூகுளில் நான் ப(பி)டித்த வரி(எலி)கள்.எலி வளை" என்பதற்கு ஆங்கிலத்தில் "rat hole" அல்லது "mouse hole" என்று சொல்லலாம். ஒரு பழமொழியின் பகுதியாக இது வரும்போது, "எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" என்பதற்கு "East or west, home is the best" அல்லது "Every bird must hatch its own eggs" போன்ற சொற்றொடர்கள் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதாவது ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான தனி இடம் வேண்டும் என்பது இதன் பொருள்.
Rat hole / Mouse hole: "எலி வளை" என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு இது.
"East or west, home is the best": "எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" என்ற பழமொழியின் ஆங்கில இணையாக இது கருதப்படுகிறது.
"Every bird must hatch its own eggs": இதுவும் மற்றொரு பொருத்தமான ஆங்கிலப் பழமொழி. இதன் பொருள், ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களை தாங்களே கவனிக்க வேண்டும்.
வசிப்பதற்கான வளைகளைப் பெரும்பாலும் ஆண் எலிகளே அமைக்கின்றன. ஆண் எலிகள் அமைக்கும் வீடுகளை நம்பி வாழ வேண்டியிருப்பதால், பெண் எலிகள் பெரும்பாலும் ஆண் இனத்தைச் சார்ந்தே வாழ்ந்துவிடுகின்றன
எலிகள் வருடத்திற்கு ஐந்து ஈற்றுகள் வரை ஈனும், மேலும் அவை ஒப்பீட்டளவில் குறுகிய கர்ப்ப காலங்களைக் கொண்டிருக்கின்றன, பெரும்பாலான இனங்களுக்கு சுமார் 21 நாட்கள் மட்டுமே ஆகும்.
சராசரியாக, காடுகளில் ஒரு எலி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை வாழும். பெண் எலிகள் பொதுவாக ஆண் எலிகளை விட அதிகமாக வாழ்கின்றன
நன்றி கூகுள்.
இந்த எலிகளிலும், ஆண் எலிகள்தாம் தன் ஆளுமையை பெண் எலிகளிடம் காட்டுமாம்.(அட..! வியப்புத்தான்..!) தன் அடக்கு முறையில் பெண் எலிகள் இருக்கவேண்டும் என விரும்புமாம். இரவில் இவைகளுக்கு கண் பார்வையும், காது கேட்கும் திறனும் அதிகமாக இருக்கும். தன் வழியான பாதையை இரவில் கூட தவற விடாது, இரவானால் புத்திசாலிதனமாக ஒரே பாதையை நினைவில் வைத்தபடி கடந்து சென்று உணவு தேட தொடங்கி விடும்.
என்ன..!! அன்றாடம் அதன் உணவை மட்டும் நாடித் தின்றால் பரவாயில்லை...! அட்டை, பேப்பர் மரச்சாமன்கள், வயர்கள் என பாரபட்சமின்றி, கொரித்து பாழ் பண்ணும் அளவுக்கு மோசமான விலங்கு இந்த எலிகள். அதைச்சொல்லியும் குற்றமில்லை. அதன் பற்களின் வளர்ச்சிகள் இப்படிச் செய்ய அதனை தூண்டுகிறது. எதையாவது கொரித்தால்தான் அதன் பற்கள் நல்ல ஆரோக்கியமாகவும்,மேலும் நீண்டு வளராதும் இருக்குமாம்.
(நாம் சின்ன வயதில் சரியாக சாப்பிடாமல் சாப்பாட்டை கைகளால், அளைந்து கொண்டேயிருந்தால், "என்ன இப்படி எலி மாதிரி கொரிக்கிறாய்..? சரியாக சாப்பிடு. கொஞ்ச நேரத்தில் மீண்டும் பசிக்கிறது என்பாய்..!!" என்று நம் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து திட்டுக்கள் விழும். "இப்போது நல்லா வயிறு முட்ட திங்காதே..! கொஞ்சமாக, கடித்து மென்று சாப்பிடு. அப்போதுதான் உடம்புக்கு ஆரோக்கியமென" ஆயிரம் அட்வைஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.ஒரு விதத்தில் அதுதான் மாபெரும் உண்மையும் கூட." நொறுக்கித் தின்றால் நூறு வயது" என்பதை அக்காலத்தவர்களே சொல்லியுள்ளார்களே ..!! ஆனால், இப்போது நொறுக்கு தீனிகள்தான் அவ்வப்போது உணவாகிப் போகிறது.
அதைப் போல சாதத்தை விட டிபன் வகையறாக்கள்தான் இப்போதைய குழந்தைகளுக்குப் பிடித்தமானதாக ஆகி விட்டது. அதிலும், ஜங்க் ஃபுட்கள் பிரபலமாகிப் போனதில், அதையைத்தான் விரும்புகின்றனர்.
ஆக, அந்தக்காலம் போல சாதம், சாம்பார், காய்கறிகள் ரசம் தயிர் என முறையாக உணவருந்த இப்போது எவருக்கும் பிடிக்கவில்லை. அதை தினமும் தொடர்ந்து செய்யவும் ஒருவருக்கும் மனமில்லை. எலிகளைப் போல சுதந்திரமாக இருக்க விரும்பியே, தங்களுக்கென இப்படி ஒரு "எலிவளைகளை" உண்டாக்கிக் கொள்கிறார்கள்.
அதற்கு தகுந்தாற் போல், படிப்பும், அதற்கேற்ற வேலைகளும் ஒரு சுதந்திரமாகி போனது. வெளிநாடுகளும்,வாழும் நாடாக சகஜமாகிப் போனது. அப்போது குடும்பத்தில் இவ்வாறு பிரிவதற்கு மனமில்லாமல் இருந்தவர்கள், குடும்பத்தில் பிரிவினையை ஏற்க முடியாமல் மன உளைச்சலில் உழன்றவர்கள் காலப்போக்கில், தங்களை பக்குவபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். "உன் வழி எதுவோ அதில் நீ பயணித்து விடு." என பச்சைக்கொடியை இளையதலைமுறைகளும், முதியவர்களும் கைகோர்த்து ஆட்டி காண்பிக்க பிரிவதற்கு எவ்விதத்திலும் தயக்கமில்லாதவர்களாக மனதளவில் மாறி விட்டனர். இனி எலிகளுக்கு இடமில்லாதவாறு மனித "வளைகளான" வீடுகள் அடுக்கடுக்காக உற்பத்தி ஆனதை/ஆவதை எப்படி தடுக்க இயலும்..!
நிஜமான எலி வளை, எலிகளின் நடவடிக்கைகள், தகவல்கள் என என் பதிவுக்கு உதவியது கண்டு பொறாமை கொண்டு மனித எலிகளும் வந்துதவியது அந்த எலிகளுக்கே சற்று ஆச்சர்யத்தை உண்டு பண்ணியிருக்கும்..!!! நன்றி அனைத்து எலிகளுக்கும்.
எலி படத்திற்கும் கூகுளுக்கு நன்றி. .



No comments:
Post a Comment