Sunday, January 31, 2021

பொங்கல் திருநாள்....



இது பொங்கல் மலர் மின்னூலுக்காக தயாரானது என் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இன்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் ஏகப்பட்ட டிபன் வகையறாவை போட்டு அசத்தி உள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கும் இதை என் தளத்தில் போட வேண்டுமென்ற ஆசையுடன் ஆவலும் எழுந்தது. 

பொங்கல் மலர் மின்னூலில் அனைவரது படைப்புகளையும் எனக்கு முழுமையாக தடையில்லா நெட்வொர்க் வந்தவுடன் படிக்க வேண்டும். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மலரை அருமையாக தொகுத்து தயாரித்த சகோதரர் கெளதமன் அவர்கள், மற்றும் எ. பி ஆசிரிய பெருமக்களுக்கு எனது அன்பான நன்றிகள். 

பொங்கல் மின்னூலை என்னைத்தவிர அனைவரும் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதை இங்கும் பார்வையிட்டு படிப்பவர்களுக்கும் என பணிவான நன்றிகள். 🙏. 

அனைவருக்கும்
  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள் அனைவருக்கும் நன்மைகளை கொண்டு வரட்டும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது முதுமொழி. அதன்படி உலகத்தை தன்  விருப்பப்படி ஒருவருட காலமாக அசைத்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கொடிய  தொற்று நோய் முற்றிலும் அகன்று, மக்கள் இயல்புடனும், நலமுடனும் வாழ இறைவன் நல்ல வழியை இந்நாளிலிருந்து  தர வேண்டுமாய் அனைவரும் மனமாற பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

இந் நன்நாளில் கண்களுக்கும், வயிற்றிக்குமாய் ஒரு சிறு விருந்து. இவ்விரண்டும் நிறைந்தால், மனதும் ஆனந்தமான நிறைவடையும் அல்லவா? 

காக்கும் கடவுள் கணேசனை மனமுருக  முதலில் அழைப்போம். . தூக்கிய துதிக்கையே துணை நமக்கு என நம்புவோருக்கு, அவனருள் கண்டிப்பாக என்றும் உண்டு. 🙏.🙏. 


அடுத்து செங்கதிரும்... 

முழுமதியும்...... 

சேர்ந்தணைந்த சுந்தரனின் அருளும் கண்டிப்பாக நம் வாழ்வில் வளம் சேர்க்கும். 🙏.🙏. 

பிறகு மலர்ந்து மணம் வீசி வரும் பொங்கல் திருநாளை,  மங்களகரமான கோலங்கள் இட்டு பசும் மஞ்சளோடு வரவேற்கலாம்.. 




முதலில் இனிப்பான பால் கொழுக்கட்டைகள்.  

பச்சரிசி மாவை வென்னீர் சேர்த்து வேக வைத்துக் கொண்டு, சிறு உருண்டைகளாக செய்து, ஆவியில் வைத்து ஒரளவு வேக வைத்துக் கொண்டு, பால், மற்றும் கொஞ்சம் தேங்காய் பாலுடன், சேர்த்து மீண்டும் கொஞ்சம் கொதிக்க வைத்ததும்,வேண்டிய வெல்லமும் சேர்த்து, அந்த வெல்ல  வாசனை போகுமளவிற்கு (வெல்லம் முழுமையாக கரைந்தால் அதுதான் அடையாளம்)  கொதிக்க வைத்துக் கொண்டு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால், இனிப்பான பால் கொழுக்கட்டைகள் தயார். 


அடுத்து இனிப்பான சேமியா கேசரி, மற்றும் உருளை கிழங்கு போண்டா. 

சேமியாவை தேவைக்கேற்ப எடுத்து வறுத்துக் கொண்டு, அத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, அத்துடன் ஒரிரு சிட்டிகை கேசரி பவுடரையும் சேர்த்து பின், வேக வைத்துக் கொண்டு, சர்க்கரை ஒன்றரை பங்கு அதனுடன் சேர்த்து நெய் விட்டு அடி பிடிக்காமல் கிளறி ஏலக்காயும் சேர்த்த பின்  மு. பருப்பு, உலர்ந்த திராட்சைகளை நெய்யில் வறுத்து போட்டு இறக்கினால், சுவையான சேமியா கேசரி பார்க்கவே அழகாக இருக்கும். 

உ. கி நான்கைந்து வேக வைத்துக் கொண்டு, தோல் நீக்கிய பின், பொடிதாக அரிந்த வெங்காயம், ப. மிளகாய் இவற்றை எண்ணெய்யுடன் வதக்கி, அத்துடன் உதிர்த்த உ. கி சேர்த்து, உப்பு, காரப்பொடி கலந்து நன்கு வதக்கி, ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 

கடலைமாவையும், அரிசி மாவையும், பஜ்ஜி மாவுபோல கலந்து வைத்துக்கொண்டு, அந்த உ. கி உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால், உகி போண்டா தயார். கூடவே தேங்காய் சட்னியும் செய்து சுடசுடப் பரிமாறலாம்... 


அடுத்து இலையில் பரிமாற சேப்பங்கிழங்கு கறி, ரோஸ்டாக வேண்டுமென்றால் இப்படிச் செய்யலாம். 

சேப்பங்கிழங்கு மண் போக நன்றாக அலம்பி குக்கரில் வேக வைத்து எடுத்து நன்கு ஆறியதும், தோல் நீக்கி ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்..கடலை மாவை, கொஞ்சம் அரிசிமாவுடன் கலந்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்துடன் பஜ்ஜி மாவு மாதிரி கரைத்துக் கொண்டு, அதில் சேப்பங்கிழங்கு துண்டுகளை முக்கி எடுத்து அடுப்பில் காயும் எண்ணெய்யில்
பொரித்தெடுத்தால் நன்றாக ரோஸ்டாக கரகரவென்ற சுவையுடன் வரும். எண்ணெய் அதிகம் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் கடாயில், கொஞ்சம் எண்ணெயில் முக்கி எடுத்த மாவுடன் கிழங்குகளை ஒன்றிரண்டாகப் போட்டு சிறு தீயில் வைத்திருந்து அடிக்கடி திருப்பி கொடுத்து கரகரப்பாக எடுக்கலாம். பொறுமையுடன் இதை அனைத்தையும் முடிக்க கொஞ்சம் நேரமாகும்.




அடுத்தாக இலையில் பரிமாற இரண்டாவது கறியாக புடலங்காய் உசிலி செய்யலாம். 

குருவி புடலங்காய் இரண்டோ, மூன்றோ வாங்கி நன்கு அலம்பிய பின் பொடிதாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். து. ப அரை டம்ளர், க. ப இரண்டு, மூன்று பெரிய ஸ்பூனாக சேர்த்து அலம்பி ஊற வைத்தபின், அத்துடன் சிகப்பு மிளகாய், ப. மிளகாய், உப்பு  பெருங்காயம் கறிவேப்பிலை சேர்ந்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு அதை இட்லி தட்டுக்களில் வேக வைத்து உதிர்த்த பின், கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு. உ. ப தாளித்து உதிர்ந்த பருப்புக் கலவையை  நன்கு உதிர்த்துக் பிரட்டி கொண்டு அத்துடன் வெந்த புடலங்காய்களைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி எடுத்தால் அருமையான புடலங்காய் உசிலி தயார். 
 

த்துடன்  வாழைப்பூ வடையும் செய்தால் இரண்டு இனிப்புடன் நான்கு காரம். 

வாழைப்பூவை  கள்ளன் ஆய்ந்து நன்கு அலம்பி வைத்துக் கொள்ளவும். , ஏற்கனவே ஊற வைத்த, அரை கிளாஸ் பச்சரிசியை, உப்பு, மி. வத்தல், ஒன்றிரண்டு பச்சை மிளகாயுடன் கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஊற வைத்த ஒரு கிளாஸ்( இது மொத்தமாக கலந்த கலவை) நான்கு பருப்பு வகைகளையும்,(அதாவது உ. ப, து. ப, க. ப, பா. பருப்பு வகைகளையும்) அரைத்துக் கொண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் அலம்பி வைத்திருக்கும் வாழைப்பூவையும் அரைத்தெடுத்து கொண்டு, அனைத்தையும் கலந்த பின் சிறுவடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.

பொங்கலன்று,  வழக்கமான இனிப்பான சர்க்கரை பொங்கலுடன், வெண் பொங்கலும் தயாரித்து கொண்டு, அதனுடன் மேற்கூறிய வகைகளையும் செய்து வைத்துக் கொண்டு பொங்கும் மங்கலம் எங்கும்  தங்குக என வேண்டியபடி, இறைவனுக்கு படைத்த பின் அனைவரும் உண்டு மகிழலாம். 

பொங்கலன்று இத்தனை ஐயிட்டங்களா...? எனத் திகைக்க வேண்டாம். சாதரணமாக அன்று மதிய சாப்பாடாக சர்க்கரை பொங்கல், வடை, அப்பளம்,  இரண்டு கறி, கூட்டு, தயிர் பச்சடி, ரசமென சாப்பிடுவது அன்றைய நாள் தொட்டு  இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கம். ( இப்போது அந்த பழக்க வழக்கங்கள் மங்கி வருகிறது. செய்யவும் நேரமில்லை. சாப்பிடவும் முடியவில்லை.) அதனால்தான் கிராமங்களில், பொங்கலன்று "பால் பொங்கியாச்சா.. வயிறு வீங்கியாச்சா.. " என்று கேட்பதும் ஒரு வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக காய்கறிகளை வைத்தே இப்படி செய்யலாம் (இந்த ஒவ்வொன்றையும் இப்படி  செய்ய அன்றைய தினம் நேரம் கிடைப்பதும் அரிதுதான்) என இப்படி இத்தனை சமையல் தினுசுகளை பதிவிட்டேன். 

இன்னமும் என் விருப்ப இனிப்பான மைசூர் பாகையும் படங்களுடன் செய்முறையாக இதனுடன் இணைக்க மறந்து விட்டேன். அதையும் இணைக்கலாமென்றால்..... (ஆகா.. இதென்ன எல்லோரும் எங்கே ஓடுகிறீர்கள்...! ஹா.ஹா.ஹா சும்மா ஒரு  பேச்சுக்குத்தான் சொன்னேன்.  இல்லை.. .இல்லை.... இவ்வளவே அதிகம். மேலும் இரு இனிப்புக்களே, அன்றைய விஷேட தின இனிப்பான சர்க்கரைப் பொங்கலுடன் போதுமென்று நினைக்கிறீர்களா..! சரி. சரி.. 👍👍.) 

பி. கு... அன்றைய தினம்  உத்தராயண புண்ணியகாலம் என்பதினால், வடை, போண்டா போன்றவற்றிக்கு  வெங்காயம் தவிர்ப்பவர்கள் அதை தவிர்த்து செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் சில  எண்ணெய்  பலகாரங்கள் எப்போதோ எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டிக்காக தயாரித்தது. அந்தப் படங்கள், விவரணைகளுடன்  இந்தப் பொங்கல் சிறப்பு(சிறப்பிதழு)டன் "நானும் வருவேன்" என பிடிவாதமாக வந்து சேர்ந்து கொண்டது. சரி.. போனால் போகிறதென தவிர்க்க முடியாமல், நானும் அவைகளையும் சேர்த்து பகிர்ந்து கொண்டேன்.

 இரண்டாவதாக நாம் வாழும் இந்த மண்ணுக்கு நன்றி சொல்லும் விதமாய் மண்ணுக்கு மேல் விளையும், பயிர்கள்,  செடி, கொடிகள் நமக்குத் தரும் காய்கறிகள், பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் கரும்பு, பூக்கள்  பழம், வெற்றிலைப்பாக்கு, மஞ்சள் இலைகொத்துகள், மாவிலை, வேப்பிலை, வாழையிலை, போன்றவற்றிக்கு முக்கியத்துவம் தருவது போல், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகளான கிழங்கு வகைகளையும் பிரியத்துடன்  இன்றைய தினம் (பொங்கலன்றும், அதன் மறுநாளும், )  உணவில் சேர்ப்பதை அவசியமாகவும். வழக்கமாகவும் கருதுவோம்.  எனவேதான் இதன் பேச்சுக்களுக்கு மதிப்பளித்தேன்.   ("எங்களை வைத்துதான் இந்தப் பதிவே....அதை மறந்து விடாதே... ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதே.. ...! போதும்.. போதும்..!! உன் பிர(பரி)தாபம் .. " என்று  அவைகள் கொஞ்சம் மெதுவாக இல்லாமல், சத்தமாகவே  கோபத்துடன் முணுமுணுப்பது என் காதுகளில் மட்டுந்தானா ? இல்லை, உங்களுக்குமா ? ஆனால், உங்களுக்கு அது ஏற்கனவே  கேட்டிருக்கும் எனவும் ஐயமுற நினைக்(நம்பு)கிறேன்.😀😁 😁. )  

 எப்படியிருந்தாலும் இந்தப் பதிவு,  சிறப்பாக 👌உள்ளதாவென உங்களிடமிருந்து அன்புடனான  👏👏 தட்டல் கருத்துக்களை எப்போதும் போல் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி.... கமலா ஹரிஹரன். 

அனைவருக்கும் மீண்டும் நன்றியுடன் கூடிய என் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🙏. 🙏. 


40 comments:

  1. பொங்கலோ பொங்கல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கும், வாழ்த்து தெரிவித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஆஹா முதல் வடை எனக்கு தான்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. உங்களுக்குத்தான் அனைத்து சிற்றுண்டிகளும். . மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பதிவை அழகாக தொகுத்து தந்த விதம் அருமைம்மா இந்த பதிவில் குறை ஒன்று சொல்ல வேண்டுமென்றால் புள்ளையாரை முதல் படமாக போட்டு ஆரம்பித்து இருக்கலாம் என்பது மட்டும்தான்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பதிவை அழகாக தொகுத்து தந்த விதம் அருமைம்மா/

      பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      இந்தப் பதிவின் ஆரம்பத்தில் என்று பார்க்கப் போனால், பிள்ளையார் படம் வருகிற மாதிரிதான் அமைத்திருக்கிறேன்.ஆனால் பதிவுக்கும் முன்னதாக முதலில் அந்த மலர்களின் வண்ண நிறத்திற்காக இயற்கையின் அழகில் லயித்து அதை பதிந்து விட்டேன். குறையை சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றிகள். இனி அந்த குறைகள் வராதபடிக்கு பார்த்துக் கொள்கிறேன். உங்களின் ஊக்கம் மிகுந்த கருத்துரைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பால் கொழுக்கட்டை, உருளைக் கிழங்கு போண்டா, சேப்பங்கிழங்கு ரோஸ்ட், சேமியா கேசரி, பத்தாத்தறகு வாழைப்பூ வடை... அனைத்தும் அருமையாக இருந்தன. செய்துபார்க்கவும் தூண்டுகின்றன.

    புடலை பருப்புசிலி அவ்வப்போது செய்வதுதான். குட்டிப் புடலைக்கு குருவி புடலை என்ற பெயர் இருப்பது இன்றுதான் தெரியும்.

    பெங்களூர் வந்த பிறகு ஒரு தடவைதான் நீள புடலை வாங்கினேன். இங்கெல்லாம் கிடைப்பதில்லை.

    ஒரே நாளில் வாழைப்பூ வடை, பருப்புசிலி, கிழங்கு வகையெல்லாம் எப்படி ருசிக்கும்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எல்லாவற்றையும் பாராட்டி செய்து பார்க்கும் ஆவல் வருகிறது என சொன்னதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இது நாமனைவரும் நமது இல்லங்களில் அடிக்கடி செய்து,உற்றார் உறவினர்களுடன் உண்டு மகிழ்வதுதானே..! அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் விருந்தாளிகள் வந்து கொண்டேயிருப்பார்கள். சாதரண டிபனை விட இந்த மாதிரி தினுசாக பண்ணச் சொல்லி என் கணவரிடம் இருந்து மட்டுமில்லாமல்,வந்த விருந்தாளிகளும் அன்பான கட்டளை இடுவார்கள். செய்து பழக்கமாகி விட்டது.

      நீளமான புடலையை ஸ்னேக் என்னும் போது சின்னதை குருவி என்று சொல்லலாமே ..!ஹா. ஹா. நம்மூரில் (நெல்லை) குருவி புடலங்காய் என்றுதான் சொல்லுவோம். அந்த பழக்கத்தில் எழுதி விட்டேன். இந்த நீளமான புடலங்காய் உடைந்து, உடைந்து சீக்கிரமாகவே அழுகியும் போய் விடும். முழுவதையும் ஒரே நாளில் சமைக்க வேண்டுமென்றால், சாப்பிடவும் ஆட்கள் வேண்டும். (திரைப்படங்களில் காய்கறி வாங்கி வரும் நாயகர்கள், காமெடியர்கள் அதை தோளில் தொங்க விட்டுக் கொண்டு வராமல் ஒரு ஷாட்டே கிடையாது.) சென்னையில், திருமங்கலத்தில் இருக்கும் போது பெரியது நிறைய கிடைத்தது. துண்டாக்கி நிறுத்து தருவார்கள். இங்கு இதுதான் (குருவி) நிறைய கண்ணில் படுகிறது. ஆனால் இரண்டுக்கும் ருசி நிறைய வேறுபடுகிறது.

      /ஒரே நாளில் வாழைப்பூ வடை, பருப்புசிலி, கிழங்கு வகையெல்லாம் எப்படி ருசிக்கும்?/

      காய்கறிகளை சேர்த்து இப்படி செய்யலாமென்றுதான் சொன்னேனே தவிர செய்வதும். சாப்பிடவும் இயலாத காரியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறேனே ... போகியிலிருந்து ஆரம்பித்து பொங்கலாக வரும் மூன்று நாட்கள் இப்படி விதவிதமாக செய்யலாம். முன்பெல்லாம் எங்கள் வீட்டில், போகியன்று தவறாது போளி செய்வோம்.. இப்போது செய்ய, சாப்பிட முடியவில்லை.மற்றும் போளி ஒரு கனவாகவே போய் விட்டது. அதையும் ஒரு நாள் செய்ய வேண்டும். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. சிறப்பாக வந்திருக்கிறது.  மின்நிலா  பொங்கல் மலருக்கு படைப்பு அனுப்பியதற்கும் நன்றி.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மின்நிலா மலருக்காக பதிவை தயார் செய்ததை எண்ணி, மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தாங்களும் அதை அன்புடன் ஏற்று, பொங்கல் மலரில் வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஊக்கங்களே எப்போதும் எனது ஆக்கங்களுக்கு அடித்தளங்கள்.. இங்கும் வந்து தந்த அன்பான கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மின் நிலா பொங்கல் மலரிலும் பார்த்தேன், படித்தேன் ரசித்தேன். ஆனால் இத்தனையையும் ஒரே நாளில் செய்து சாப்பிடுவது என்பது கஷ்டம். அதிலும் உசிலியும், வடையும், போண்டோவும் ஒரே நாளில். சேமியா கேசரி இங்கே அடிக்கடி பண்ண முடிவதில்லை. அத்தனை பிடிக்கலை. ஆனால் எனக்குப் பிடிக்கும். உ.கி. போண்டாவில் நாங்க வெங்காயம் சேர்க்காமலேயே பண்ணுகிறோம். பொதுவாகவே இப்போல்லாம் வெங்காயத்தை அதிகம் தவிர்த்தாலும் எப்போ உ.கி. போண்டா பண்ணினாலும் வெங்காயம் சேர்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் மின்நிலாவில் இந்தப்பதிவை பார்த்து, படித்து ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி. நான் இன்னமும் மின் நிலா பார்க்கவில்லை. வந்த அன்று பொங்கல் வேலைகளில் நேரம் கிடைக்கவில்லை. மறுநாளே எனக்கு இணைய தொடர்பு முழுவதும் நின்று போனதில் படிக்க முடியவில்லை.

      ஆமாம்..ஒரே நாளில் அனைத்தையும் செய்து சாப்பிடுவதென்பது இயலாத காரியம். நான் அவ்வப்போது செய்ததை தொகுத்து ஒரு பதிவாக்கி இந்தப் பொங்கலுடன் இணைத்தேன். பொங்கலன்று இரு வேளை சர்க்கரைப் பொங்கலையே சாப்பிட முடியாது திணறும் போது, விதவிதமான இனிப்புகளை எப்படி சாப்பிடுவது.? ஆனாலும், வெறும் வடைக்கு பதிலாக காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடலாம் என எழுதினேன். மேலும், சிறு கிழங்கு, சேப்பங்கிழங்கு உ. கி, கொடியில் காய்க்கும் சிகப்பு பூசணி, புடலங்காய் என ஏதோவொன்றை அன்றைய தினம் சமையலில் சேர்ப்பது நம் வாடிக்கைதானே...

      வெங்காயம் சேர்க்காமல் உ.கி போண்டா செய்யலாம். ஆனால் அதை வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடாமல் இருந்து விட்டால் என்ன செய்வது என்றுதான் அதையும் சேர்ப்பது. நீங்கள் அவ்வாறு செய்வதை நானும் என் பங்குக்கு வரவேற்கிறேன்.வெங்காய ருசியின் தாக்கம் இல்லாமல், உ.கியின் மணம் மட்டும் நன்றாக இருக்குமில்லையா? பார்க்கலாம்... ஒரு தடவை அப்படி செய்து விட்டால் ஆயிற்று. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. எல்லாமே பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் ருசியிலும் நன்றாக இருக்கும் எனத் தெரிகிறது. பொங்கல் மலரில் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கண்ணாலேயே பார்த்து ருசி அறிந்து தந்த பாராட்டுகளுக்கு நன்றி. தங்கள் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அன்பு கமலாமா,
    ஒரே மாஜிக் போல பதிவு வந்து குதித்திருக்கிறதே.
    நானும் இன்னும் முழுமையாகப் பொங்கல் மலர்
    படிக்கவில்லை.
    அதீத குளிரும், முதுகு வலியும் சேர்ந்து அதிக நேரம்
    ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை.

    அற்புதமான பொங்கள் நாள். ஆனால்
    இவ்வளவு செய்தால் வயிறு தாங்குமா. ஹாஹாஹா.

    மிகப் பிடித்தது சேப்பங்கிழங்கு வறுவலும்,
    பால் கொழுக்கட்டையும் தான்.

    அபாரமாகப் பதிவிட்டு இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. நானும் இன்னமும் பொங்கல் மலர் படிக்க முடியவில்லை.. இன்றுதான் எங்களுக்கு wi-fi கனெக்ஷன் கிடைத்துள்ளது.இனி நெட்வொர்க் பிரச்சனை நல்லபடியாக இருக்குமென நினைக்கிறேன்.

      /இவ்வளவு செய்தால் வயிறு தாங்குமா/

      ஹா.ஹா.ஹா. அவ்வளவும் ஒரே நாளில் செய்ய முடியுமா? சாப்பிடத்தான் முடியுமா? நான் ஏதோ ஏற்கனவே பதிந்து வைத்ததை சேர்த்து போட்டேன்.

      நீங்களும் இங்கு வந்து படித்து தந்த கருத்துக்களுக்கும் பாராட்டுக்ளுக்கும் மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. படங்கள் மாறும் வேகம் கொஞ்சம் கண்ணைக் கட்டுகிறது.
    சேமியா கேசரி செய்முறை
    இன்னும் அனைத்து செய்முறைகள் பிரமிப்பூட்டுகின்றன.
    very well done dear Kamala.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /படங்கள் மாறும் வேகம் கொஞ்சம் கண்ணைக் கட்டுகிறது. /

      எப்போதும் போல் பகிர்ந்தால் பதிவு மிக நீளமாகி விடுமென இந்த முறை மகள்தான் கற்று தந்தார். அவருக்கும் நன்றிகள். அனைத்தையும் ரசித்து கருத்திட்டிருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. உ.கி போண்டா எப்பொழுதுமே மிகப் பிடிக்கும்.
    கீதா சாம்பசிவம் நேற்று அசத்தினார் என்றால்
    இன்று நீங்கள் அசத்தி விட்டீர்கள்!!!!
    எபி உணவு விடுதியே ஆரம்பித்து விடலாம்
    போலிருக்கிறது!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கீதா சாம்பசிவம் நேற்று அசத்தினார் என்றால்
      இன்று நீங்கள் அசத்தி விட்டீர்கள்/

      அவரை விட நான் அசத்த முடியுமா? அவர் சமையலில் எவ்வளவு திறமைசாலி. இருப்பினும் அவரோடு என்னை ஒப்பிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் கருத்துக்கள் அனைத்தும் என்னை உற்சாகப்டுத்தின.

      இந்த நெட்வொர்க் பிரச்சனையில் உங்களனைவருக்கும் பதிலளிக்க இந்த தடவை மிகவும் தாமதமாகி விட்டது. அனைவரும் என்னை மன்னிக்கவும். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. படங்களை புதுமையாக தொகுத்த விதம் அருமே சகோ வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து படங்களையும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி. என் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. இங்கயும் படங்களை (செய்முறை படங்கள்) அருமையா தொகுத்திருக்கின்றீர்கள். பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அங்கேயும் இப்படித்தான் தந்திருந்தேன். அதில் இப்படி பிரசுரிக்க இயலவில்லையோ என்னமோ, இணைத்த இப்படங்கள் சாதாரணமாக வந்திருந்தன. என் பதிவாகையால் நான் அங்கு தந்தபடியே இங்கு வந்திருக்கிறது போலும். படங்களின் தொகுப்பை பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. அருமையான பதிவு பொங்கல் மலருக்கு சிறப்பான பதிவு.
    காணொளி வேகமாக செல்வது அருமை.
    படங்கள் எல்லாம் மிக அருமையாக எடுத்து இருக்கிறீர்கள், கோலம் பலகாரங்கள் செய்முறை எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

    பாராட்டுக்கள், கை தட்டல்கள் , வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து, அனைத்தையும் ரசித்து மனமுவந்து தந்த பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.காணொளி படங்கள் வேகமாக செல்வதை ரசித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி.

      உங்களின் கைதட்டல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. என் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. ஆகா...! மாறும் படங்களுடன் பதிவு வெகு சிறப்பு... மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து சிறப்பு என பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
      இப்போதுதான் எங்கள் வீட்டில் நெட் பிரச்சனை சரியாகி உள்ளது. தொடர்ந்து எந்த பிரச்சனையும் தராமல் நலமாக இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. ஆஹா எத்தனை எத்தனை உணவு வகைகள். பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆஹா..நீங்களும் சமையலில் ஒரு நளசக்கரவர்த்திதானே.. இருப்பினும், உங்களின் அருமையான பாராட்டுக்கள் என்னை மகிழ வைக்கிறது. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.. என தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. முதல் படம் கப்பன் பார்க் ல் உள்ள மரம் ..அந்த இடமும், மரமும் ரொம்ப அழகா இருக்கும் கமலா அக்கா ..

    பொங்கல் மலர் மின்னூல் ..இனி தான் தேடி படிக்க வேண்டும் அக்கா ..போன மாதம் எங்கள் ப்லோக் க்கு சரியாக செல்ல இயலாததால் இந்நூல் பற்றி ஏதும் அறியவில்லை ...


    ஒவ்வொரு சமையல் குறிப்பும் , படங்களும் மிக அருமை அக்கா ரசித்து வாசித்தேன் ...





    ReplyDelete
    Replies
    1. இந்த மரம் வேற இடத்தில் கூட இருந்து இருக்கலாம் ..ஆனால் எனக்கு டக்குன்னு நான் பார்த்த மரமும் , இடமும் நியாபகம் வந்தது ...

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இது கப்பன் பார்க் மரம் போல உள்ளதா? ஆமாம் இதைப்போல் நானும் ஒரு தடவை அங்கு சென்ற போது நிறைய வகையான மரங்களையும், மலர்களையும் பார்த்துள்ளேன். இது என் மகன் வெளிநாட்டில் இருக்கும் போது எனக்கு அனுப்பி வைத்த படம். அழகாக இருக்கவே இதைப் பகிர்ந்தேன்.

      தங்கள் பாராட்டுக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.நானும் மின்னூல் இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. நெட் தடங்கல் காரணமாக உங்களுக்கு உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. அதனால் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. அசத்தலான சமையல் குறிப்புகளும் வித்தியாசமான படத்தொகுப்புகளுமாக பதிவு அருமை.. அருமை..

    பொங்கும் மங்கலம்
    என்றென்றும் தங்குக..
    எங்கெங்கும் தங்குக...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் அன்பான வருகை தந்து பதிவை சிலாகித்து, நல்லதொரு கருத்துக்கள் தந்தை கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் வேலை பளுவிலும், என் தனம் வந்து அருமையான கருத்துக்கள் கூறியதற்கு மிக்க நன்றி. எனக்குதான் பதிலளிக்க மிகவும் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. சமையல் குறிப்புகளை பொங்கல் மலரிலும் படித்தேன். படங்களும், விளக்கங்களும் அருமை. 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நீங்கள் எ. பி பொங்கல் மலரில் என் பதிவை ஏற்கனவே படித்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இங்கும் வந்து பாராட்டுகள் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. ஆஹா நான் ரொம்ப லேட்டூஊஊ.. பட்சணங்கள் மிக அழகு + அருமை. அது சரி சூடு அதிகமோ?:) பாத்திரத்தோடு ஆடுகிறதே:)).. ஹா ஹா ஹா ஸ்லைட் ஷோவைச் சொன்னேன்.. நன்றாக இருக்குது, கொஞ்சம் ஸ்பீட்டைக் குறைச்சு மெதுவாக ஓட விட்டிருக்கலாம்...

    அத்தனையும் அருமை.. பால் கொழுக்கட்டை ஏன் கொழுக்கட்டைபோல இல்லாமல் .. பொங்கல் போல இருக்குது?...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      நலமா? எப்படி இருக்கிறீர்கள்? உங்களை கொஞ்ச நாட்களாய் வலைப்பக்கம் காணவே இல்லையே.. உங்கள் வலைத்தளத்தில் பதிவுகள் ஏதும் தரவில்லையே? வேலைகள் அதிகமா? இன்று நீங்கள் என் தளம் வந்து கருத்து தெரிவித்திருப்பதை கண்டதும் மகிழ்வாக உள்ளது.

      தங்கள் வேலைகளின் அழுத்தத்தில் நினைவாக என் தளம் வந்து பதிவை ரசித்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      /அது சரி சூடு அதிகமோ?:) பாத்திரத்தோடு ஆடுகிறதே:))../

      ஹா.ஹா.ஹா. ஆமாம்.. இந்த தடவை கொஞ்சம் கூடுதலாகவே படங்கள் மின்னல் வேகத்தில் தோன்றி மறைகின்றன. ஒருவேளை தாங்கள் சொல்லியபடி சூட்டினால் இருக்குமோ?...:))

      அத்தனையும் அருமை என்ற உங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      /பால் கொழுக்கட்டை ஏன் கொழுக்கட்டைபோல இல்லாமல் .. பொங்கல் போல இருக்குது?.../

      பொங்கல் போல் காட்சி தருகிறதா? ஹா.ஹா.ஹா. எங்கள் வீட்டில் அதை செய்த அன்று பால் கொழுக்கட்டைகளாக சாப்பிட்டோமே.. ஒரு வேளை எ. பியின் பொங்கல் மலருக்கு அனுப்பி வைத்ததும் பொங்கலாக மாறி விட்டது போலும்.:)) உங்கள் பக்கத்தில் விரைவில் புதுப்புது பதிவுகளை எதிர்பார்க்கிறேன். தங்களுடைய அன்பான கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete