Monday, December 31, 2018

வாழ்த்துகளுடன், படித்ததும் பார்வைக்கு....

இப்போதுதான் 2018 ம் ஆண்டின் துவக்கம் மாதிரி இருந்தது.  அதற்குள் இவ்வருட கடைசி மாதத்தில் இருக்கிறோம். காலம் நம்முடன் போட்டி போட்டு கொண்டு ஓடுகிறதா? இல்லை நாம்தான் காலத்தை ஜெயிக்க விடாது செய்ய வேண்டுமென ஓடி ஓடி கண்மூடி திறப்பதற்குள் இறுதி மாதத்தில் விரைவாக வந்து நிற்கிறோமா? புரியவில்லை.... ஆனால் இன்னமும் ஒரு நாளுக்குள், மறுபடி ஒரு புது வருடத்தை சந்திக்கப் போகிறோம். சென்ற வருடத்தில், எவ்வளவு  சந்தோஷங்கள், எத்தனை மகிழ்வுகள், இல்லை,  எத்தனை பிரச்சனைகள், எவ்வளவு கவலைகள் என அனைத்தையும் சமமாகவோ, அல்லது, முறையே நிறையவோ, குறையவோ சந்தித்திருப்போம். அது போல அல்லாமல் இனி வரப் போகும் புது வருடமாகிய  2019 இனிதே பிறந்து எப்பொழுதும் வருட இறுதி மாதம் வரை அனைவருக்கும் மகிழ்வினை மட்டும் அள்ளி அள்ளி தந்து செல்ல வேண்டுமென மனதாற காலத்திடம் வேண்டிக் கொள்கிறேன். 

முந்தைய காலங்கள் என்பது ஒரு வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. சென்ற வருடத்தில் இருந்த செளகரியங்கள் "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அப்படி சேர்ந்து இருந்தவைகள் "அ" வை விடுவித்து விட்டோ, நடை போட்டபடிதான் இருக்கின்றன. இதோ கீழே நான் படிக்க நேர்ந்தவைகளை அனைவரும் உணர்ந்திருக்கலாம். (ஏன் அனைவரும் படித்தேயிருக்கலாம். அப்படி உணராதவர்கள் இனி உணரும் சந்தர்ப்பங்கள் வராது என இவை கூறுகின்றன.)

இந்த விஞ்ஞானமும் வருடத்திற்கு வருடம் முன்னேறிக் கொண்டுதான் உள்ளது. அதன் பயன்பாடும் நமக்கு தேவையாகத்தான் உள்ளது. ( கீழே காணும் இவையும் விஞ்ஞானம் வெற்றி கண்ட வாட்சப் என்ற பயன்பாட்டின் மூலம் வந்து படித்தவைதான்.) ஒன்றுமில்லை.. ஒரு கையடக்க கருவியில் இந்த  மாதிரி விஷயங்களை தொகுத்தோ, இல்லை தனித்தனியாகவோ, வெளியிட்டு பகிர்ந்து மகிழ்கிறோம். இதுவும்  விஞ்ஞான வளர்ச்சியினால்தான் சாத்தியமாகிறது.                                     
                           
                                ஆனால்,

இந்த விஞ்ஞான தரகரின் விபரீத வளர்ச்சியால், சோம்பேறித்"தனம்" என்ற ஒன்று உண்மையான "தனத்தை" விட அதிக செல்வாக்குடன் நம் உடம்பில் வாடகை எதுவும் எதிர்பாராமல் வந்தமர்ந்து குடியேறி விட்டன.  ஆக்கிரமித்து விட்டவைகளை சில சமயம் அகற்ற இயலாமல் தத்தளிக்கிறோம். நம்முடைய பெற்றோரின் சிரமங்களுக்கிடையே வளர்ந்து விட்டு தற்சமயம் சொகுசின் சுகம் புரிந்து விட்ட நாமும் நம்  இளைய தலைமுறையினருக்கு அதே சுகத்தை அது கெடுதல் என புரிந்து கொண்ட பின்னரும்   தக்கவைக்க பாடுபடுகிறோம்.

என்ன இருந்தாலும் உடல் உழைப்பும், அதனால் வரும் இன்பங்களும் இனியதல்லவா.!அந்த உழைப்புகளையும். இன்பங்களையும் முழுதாக நாமும் அனுபவியாமல், நம் சந்ததிகளுக்கும் அது என்னவென்றே தெரியாதபடிக்கு செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.

இந்த மாதிரி வருடங்கள் உருண்டோடி, காலச் சுழற்சியில் மீண்டும் பழைய காலங்கள் ஏற்படலாம்.  அதைக்காண நம்மில் பின்வரும் எந்த தலைமுறை புண்ணியம் செய்திருக்கிறதோ.! அந்த கடவுளுக்கே வெளிச்சம்.. ஆனால் அந்த கடவுளே ஒளி உமிழும் பலவகையான விளக்குகளையும்,  மின்சார மணி எழுப்பும் ஓசைகளையும், தற்சமயம் மெளனமாய் அங்கிகரித்து வருகிறார்.
                   எது எப்படியாயினும் 
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்வான தருணங்களை நிறைய தர வேண்டுமென மனதாற ஆண்டவனிடம்  பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

       வலைத்தள சகோதர, சகோதரிகள்   
  அனைவருக்கும்  இனிதே பிறக்கவிருக்கும்
                           2019 ம் ஆண்டின்
                   புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

படித்ததை பிடித்ததால் பகருகிறேன்.

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

 வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார்.
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

 ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

 ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

 விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

 மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

 உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

 மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

 ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது…

அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டனர்…

 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

 யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

 ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…

அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

இது எல்லாமே உண்மைதானே. ! என எண்ணவும் தோன்றுகிறது

43 comments:

  1. காலத்தின் சம்பவங்கள் நம்மையும் நனைத்துவிட்டு அதைப்பற்றி நினைக்கவிட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றன. காலத்தைப் பிடிக்க முடியாது. ஓரளவு பின்னால் தொடரலாம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான். காலத்தை ஓடிப்பிடிக்க இயலாது ஏனெனில் அதன் பிடியில் நாம் சிக்குண்டு கிடக்கிறோம். அதனுடன் தான் எப்போதும் நம் வாசம். மூன்று வகையான கால கட்டங்களில், சம்பவங்களின் பாதிப்பால், அதை விட்டு விலகி அதனுடன் ஓடிக் கொண்டிருப்பதாக பிரமை கொள்கிறோம். அவ்வளவுதான்.. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. 90க்கு முன், 70க்கு முன், 50 க்கு முன் என்று பிறந்தவர்கள் அசைபோட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை முன்னேற்றம் என்பதா? இழப்பு என்பதா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      நமக்கும் முன், நம் பெற்றோர்கள் சொல்லக் கேட்டு, அதற்கும் முன் என நிறைய விஷயங்கள் அசை போடும் போது வியப்பாகத்தான் உள்ளது. ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி, இரண்டிலுமே நன்மை, தீமை உள்ளதாகத்தான் தெரிகிறது. பொதுவாகவே நிலையற்றதுதானே மனித மனம். அது மட்டுமல்ல.. எதற்கும் ஆசை கொள்ளும் மனித சுபாவம். அதை எந்த கால கட்டத்திலும் மாற்ற முடியாது. முன்னேற்றம், இழப்பு என்பதை விதி தீர்மானிக்கும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், மலர இருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மனமுவந்து சொல்லிக் கொள்கிறேன்.

      தாங்கள் மனம் நிறைந்து நல்கிய வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இனிய காலை வணக்கம் கமலாக்கா..

    இதோ வாசித்துவிட்டு வருகிறேன்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இனிய மாலை வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      ஓரெழுத்து வித்தியாசத்தில் உங்களை மறுபடி தளத்தில் சந்திக்கிறேன்.
      ஹா ஹா ஹா
      வாங்க.. வாங்க.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கமலாக்கா மாற்றங்கள் ஒன்றே மாறாதது...இனி வரும் இளைய தலைமுறையினர் இப்போதைய வருடங்களை அவர்கள் தலைமுறைக்குச் சொல்லுவார்களோ..?!!! நாங்கல்லாம் அந்தக் காலத்துல என்று?! ஹா ஹா ஹா..

    விஞ்ஞான வளர்ச்சி தேவையாகத்தான் இருக்கிறது. அதை தேவைக்கு எடுத்துக் கொண்டு தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து வாழ்ந்தால் வாழ்க்கை சுகமானதே....என்றாலும் பல பழைய நினைவுகள் மனதைச் சந்தோஷப்படுத்துகிறதுதான்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /விஞ்ஞான வளர்ச்சி தேவையாகத்தான் இருக்கிறது. அதை தேவைக்கு எடுத்துக் கொண்டு தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து வாழ்ந்தால் வாழ்க்கை சுகமானதே....என்றாலும் பல பழைய நினைவுகள் மனதைச் சந்தோஷப்படுத்துகிறதுதான்../.

      உண்மைதான்.. சரியாக சொன்னீர்கள் நானும் அதேயே வலியுறுத்துகிறேன். பழயவைகளை பார்த்தால். கேட்டால், அனுபவித்தது நினைவுக்கு வந்து மனதை சந்தோஷமடையச் செய்கிறது. கருத்துக்கு நன்றிகள்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வணக்கம் சகோ
    இதைப்படித்த பிறகு எனக்கு சிரிப்பு வரவில்லை வருத்தமே உண்டானது.

    எவ்வளவு விடயங்களை நாம் இழந்து விட்டோம் ?

    இன்று சிரிப்புகூட செயற்கை ஆகிவிட்டது நம்மை நாமே மாற்றிக்கொண்டு காலம் மாறிவிட்டது என்று பொய் சொல்கிறோம்.

    மீண்டும் தங்களது தளம் அடுத்த வருடமே வருவேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      ஆம்.. நிறைய விஷயங்களை இழந்து விட்டோம் எத் தோன்றுகிறது.

      /இன்று சிரிப்புகூட செயற்கை ஆகிவிட்டது நம்மை நாமே மாற்றிக்கொண்டு காலம் மாறிவிட்டது என்று பொய் சொல்கிறோம்./

      ஒருவரைப் பார்த்து ஒருவர் என நம்மை நாமேதான் மாற்றிக்கொண்டு விட்டோம். செயற்கை சிரிப்பு மட்டுமல்ல.! செயற்கை சுவாசம் வரை மாறுதல்களை உண்டாக்கி விட்டோம். காலம் தன் போக்கில் நம்மையும் சுமந்து கொண்டு சென்று கொண்டேயுள்ளது.

      /மீண்டும் தங்களது தளம் அடுத்த வருடமே வருவேன் நன்றி./

      தங்கள் நகைச்சுவையை காலையிலேயே பார்த்து ரசித்து விட்டேன். பதிலுக்கு "நானும் அடுத்த வருடந்தான் பதிவு போடுவேன் என்று சொல்லலாம்" என்று நினைத்துக்கொண்டிருந்தேன். "வேலை மும்மரத்தில்,உண்மையிலேயே நானும் அடுத்த வருடந்தான் வந்த கமெண்ட்ஸ்க்கு பதிலே சொல்லுவோமா என ஆகிவிட்டது." நல்லவேளை.. இந்த வருடமே, இப்போதாவது வேலைகளை முடித்து வந்து கமென்ட்ஸுக்கு பதில் தர முடிந்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…//

    ஹையோ நாங்க பெரும்பாலும் நடைதான்...அதுவும் அந்த முக்காமைல் கதைகள் ஏராளம்...

    ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…//

    யெஸ் ஆசிரியர்கள் பலர் மென்டராகவும் இருந்திருக்காங்க..சில ஆசிரியர்களுக்கு எங்கள் வகுப்பில் ஃபேன் களப்பே இருக்கும். நடிகர் நடிகைகளுக்குக் கூட பிடித்தாலும் குழு எல்லாம் அவ்வளவாகக் கிடையாது....ஆனால் ஆசிரியர்களுக்கு உண்டு. அன்று யார் அந்த ஆசிரியய்ருக்கு முதலில் வணக்கம் சொன்னது...அந்த ஆசிரியர் யாரிடம் அதிகம் பேசினார் என்றெல்லாம் கூட உண்டு....ஹா ஹா ஹா

    பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…//

    ஆம்...ஆனால் என் வீட்டில் பாட்டியின் ஆட்சி என்பதால் நாங்கள் குறிப்பாகப் பெண் குழந்தைகள் தெருவில் விளையாட அனுமதி கிடையாது. நான் அப்பாவீட்டுப் பாட்டியிடம் இருந்த வரை கிட்டிம்புல் எல்லாம் விளையாடியிருக்கேன்...ஆண்குழந்தைகளோடு சேர்ந்து...இப்போது இங்கு பங்க்ளூரில் நான் இருப்பது புறநகர் என்பதாலோ எனன்வோ எங்கள் தெருவில் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள்...

    மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…//

    ஆம் இவை மிஸ்ஸிங்க் என்றாலும் இப்போது கிடைக்கும் பூக்களை வைத்து இப்போதும் சில சமயங்களில் எங்கள் வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு (நோட் இட்...பருவ வயதல்ல....12 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு) செய்து வராங்க...

    எங்கள் ஊரில் இருந்தவரை ஆடி மாசம் என்றால் தாழம்பூ வைத்து சடை பின்னுவது வழக்கம்...நானும் பின்னியிருக்கிறேன்...இப்போது தாழம்பூ எல்லாம் கிடைப்பதில்லை என்றே தெரிகிறது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      சென்ற வருடத்திய பதிவின் கருத்துக்கு இந்த வருடம் பதில் தருகிறேன். முதலில் அதற்கு மன்னிக்கவும்.

      தாங்கள் சொன்ன கருத்துகள் சரியே. அப்போது இந்த மாதிரி ஸ்கூல் வேன்கள் வரவில்லை. நடந்துதான் சென்றோம். என் குழந்தைகளும், நீண்ட தொலைவில் அமைந்திருந்த பள்ளிகளுக்கு நடந்துதான் சென்றார்கள். ஒவ்வொருவருடைய எட்டாம் வகுப்பு வரை நானும் அவர்களுடன் துணையாக சென்றிருக்கிறேன். (ஓடியிருக்கிறேன் என்று கூடச் சொல்லலாம்.)
      அப்போதுதான் எனக்கும் நடைபயிற்சி தடையில்லாமல் கிடைத்தபடி இருந்தது.

      ஆசிரியர்கள் மீது மதிப்பும், மரியாதை கலந்த பயமும் இருந்தது.அதனால் பணிவும் குறைவில்லாமல் இருந்தது.

      எங்கள் அம்மா வீட்டிலும், வெளியில் சென்று விளையாட நிறைய தடைகள்.
      இருப்பினும் அந்த கால நினைவுகள் இனியதாகத்தான் இருந்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    2. இப்பல்லாம் கொஞ்சம் புறநகர், கிராமங்களில் கொஞ்சம் பழைய கிராமம் இந்த மாதிரி இடங்களில்தான் தலை வாரி சடை போட்டு பூச் சூடி இதெல்லாம்.. முக்கால்வாசி, விரித்து ஒரு கிளிப் செருகுகிறார்கள். இல்லையென்றால் விரித்து காற்றில் பறக்க விட்டபடி...ஹா ஹா.

      /எங்கள் ஊரில் இருந்தவரை ஆடி மாசம் என்றால் தாழம்பூ வைத்து சடை பின்னுவது வழக்கம்...நானும் பின்னியிருக்கிறேன்...இப்போது தாழம்பூ எல்லாம் கிடைப்பதில்லை என்றே தெரிகிறது.../

      எங்கள் அம்மாவும் எனக்கு தாழம்பூ வைத்து, தைத்து பல பூக்கள் (மல்லி, மாதுளம்பூ செவ்வந்தி) வைத்து பின்னி சடையுடன் தைத்து அலங்காரங்கள் செய்து இருக்கிறார்கள். அப்போது நேரமே நிறைய இருந்தது. பகல் பொழுது கூட நீண்ட பொழுதாக ஊர்ந்து செல்லும். அது ஒரு கனா காலம். இப்போதும் தாழம்பூ கிடைக்கும். ஆனால் வாசமில்லா மலராகத்தான்.. தங்களது அனுபவ கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன் ..

      Delete
  8. எங்கள் வீட்டில் எப்போதும் மஞ்சப் பைதான்...இப்பவும்...பைகளின் கலர்தான் மாறியிருக்கே தவிர எப்போதும் துணிப்பைதன்...என் அப்பா எப்பவும் வீட்டில் துணிப்பைதான் வைத்து பயன்படுத்துவார் எங்கு சென்றாலும் பை எடுத்துச் செல்வார். அந்தப் பழக்கம் என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது. வீட்டில் கிஃப்டாக வந்த அழகான பைகள் ஜூட் பைகள், கித்தான் பைகள் என்று ஏராளமாக இருக்கு...எங்கு சென்றாலும் செல்லும் இடத்தைப் பொருத்து பைகளை எடுத்துச் செல்லும் வழக்கம்...கண்டிப்பாக நாம் இதை இப்போதும் எப்போதும் பின்பற்றலாம்....ப்ளாஸ்டிக்கைத் தவிர்க்கலாம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /எங்கள் வீட்டில் எப்போதும் மஞ்சப் பைதான்...இப்பவும்...பைகளின் கலர்தான் மாறியிருக்கே தவிர எப்போதும் துணிப்பைதன்...என் அப்பா எப்பவும் வீட்டில் துணிப்பைதான் வைத்து பயன்படுத்துவார் எங்கு சென்றாலும் பை எடுத்துச் செல்வார். அந்தப் பழக்கம் என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது/

      ஆமாம் உண்மைதான் சகோதரி. எங்கள் வீட்டிலும் எப்போதும் அந்தப் பழக்கந்தான். நாங்களும் அப்படித்தான் பயன்படுத்தினர். நம் இளைய தலைமுறை காலத்தில் மஞ்சள் பை கேவலமாக பட்டது. ஜவுளி கடை நகைக்கடை எங்குமே அந்தப் பை தவிர்க்கப்பட்டு விதவிதமான பிளாஸ்டிக் பைகள் வர ஆரம்பித்து விட்டது. இப்போது பிளாஸ்டிக் உபயோகம் அனைவரும் தீங்கென உணருவதால், அதை தவிர்த்து, துணிப்பைகளுக்கு மாறலாம். தங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், சற்று நேரத்தில் மலர இருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மனமுவந்து சொல்லிக் கொள்கிறேன்.

      தாங்கள் மனம் நிறைந்து சொல்லிய புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. // இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம் //

    ஆகா...!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      // இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம் //

      /ஆகா...! /

      தங்களின் மனம் கவர்ந்த இந்த வரிகளைத் தான் நானும் மிகவும் ரசித்துப் படித்தேன். கருத்துக்கு நன்றி சகோதரரே.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      தங்களின் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. மலரும் நினைவுகள் திரும்பி பார்க்க வைத்தது.
    மாற்றங்கள் எல்லா வற்றையும் உதறி தள்ள முடியவில்லை.
    சில மாற்றங்கள் வேண்டி இருக்கிறது.
    நடை குறைந்து விட்டதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
    உங்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும் நம் நண்பர்களுக்கும் ஆங்க்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்களுக்கும் என் பதிவு மலரும் நினைவுகளை திரும்பி பார்க்க வைத்ததா சகோதரி.? மிக்க மகிழ்ச்சி.

      உண்மைதான்.. எல்லாவற்றையும் வேண்டாம் எனவும் சொல்ல முடிவதில்லை.. வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாததை தவிர்க்க முயற்சிக்கலாம். அவ்வளவுதான்..

      நடை குறைந்ததில்தான் ஏகப்பட்ட உடல் மாற்றங்களை, அசௌகரியங்களை சந்திக்கிறோம். கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி. அது போல்
      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. // "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அப்படி சேர்ந்து இருந்தவைகள் "அ" வை விடுவித்து விட்டோ, நடை போட்டபடிதான் இருக்கின்றன.//

    ஆமா ஆமா.. அ எண்டால் அதிரா:).. நீங்க கரீட்டாத்தான் சொல்லியிருக்கிறீங்க:). அதிராவை சேர்க்குது அல்லது உதையுது காலம் ஹா ஹா ஹா:)..

    எனக்குப் புரிஞ்சது எல்லோருக்கும் புரிய வாணாமோ?:) அதனாலதான் தெளிவு படுத்தினேன்:).. நான் “அ” க்கு சொன்னேன்:).

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எனக்குப் புரிஞ்சது எல்லோருக்கும் புரிய வாணாமோ?:) அதனாலதான் தெளிவு படுத்தினேன்:).. நான் “அ” க்கு சொன்னேன்:)./

      ஆமாம்.. இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.. "அ" என்றால் அதிரா தான். எங்கே நீங்கள் இந்த பதிவுக்கு வராமல் இருந்திட்டா உங்களை (இந்த பதிவுக்கு மட்டும்) மிஸ் பண்ணிடுவோமோன்னு பயந்தேன். வந்துட்டீங்க..சந்தோஷம் .வாங்க... வாங்க..நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. //1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!//
    வெரி சோரி மீ பிறந்தது 2002:)..
    2018-2002 = சுவீட் 16:).

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சிஸ்டர்

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      ஸ்வீட் 16 ஆ..ஐயோ.. இனிமேல் நான் எந்த முறை வைத்து தங்களை அழைப்பது எனத் தெரியவில்லையே..! தேவுடா... ஹா ஹா ஹா ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. எதையும் தவற விட்டிடாமல் அனைத்தையும் அழகாகக் கோர்த்துச் சொல்லியிருக்கிறீங்க.. நினைக்கவே இனிக்கிறது.... இதுக்கு முந்தின காலமாக்கும்.. குளம் ஆறுகளுக்குப் பெண்கள் போய்க் குளித்து வருவார்கள்... அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது.

    வருங்காலத்தில் இப்படி புளொக்கில் கும்மி போடுவது இல்லாமல் போகலாம்.. அப்போ இதை நினைத்து ஏங்கி எங்காவது வேற்றுக் கிரகத்தில் சொல்லும் நிலைமையும் வரலாம்.. கால மாற்றம்:).

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி (வேறு எப்படி அழைப்பதோ)

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    ஆமாம். தாங்கள் சொல்வது உண்மைதான். காலம் மாறிக்கொண்டேதான் வருகிறது. அதற்கும் முந்திய கால ஸ்டைல்கள் வேறு வடிவத்தில், உருவத்தில் மாறி வருகிறது. மாற்றங்களை பொறுத்தான் போக வேண்டும். வேறு வழியில்லை.

    /வருங்காலத்தில் இப்படி புளொக்கில் கும்மி போடுவது இல்லாமல் போகலாம்.. அப்போ இதை நினைத்து ஏங்கி எங்காவது வேற்றுக் கிரகத்தில் சொல்லும் நிலைமையும் வரலாம்.. கால மாற்றம்:)./

    ஹா ஹா ஹா ஹா. உண்மைதான். நாங்கள்தான் கும்மி அடிப்பது மாறிய கவலையில் நொந்து போயிருப்போம். ஆனால், உங்களுக்கு கவலையில்லை. நீங்கள்தான் என்றுமே ஸ்வீட் சிக்ஸ்டீன்தான். ஹா ஹா ஹா ஹா. அப்போது உள்ள கால மாற்றத்துக்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டு இருந்து விடலாம். இல்லையா? தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா...

    நீங்க தொகுத்த செய்திகள் அனைத்தும் அருமை மா..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      தங்களுடைய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      தொகுத்தவைகள் அருமை என்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி.
      நானும் தங்கள் தளம் வருகிறேன். நடுவில் நிறைய நாட்கள் விடுபட்டு போனதற்கு வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள். இழந்தவை நிறைய. இப்போதைய இளம்பெண்கள், பத்துப் பனிரண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் யாருமே தலையில் பூ வைத்துக் கொள்ளுவதில்லை. மதுரையில் நான் சிறுமியாக இருந்த காலத்தில் வீட்டுக்கு வீடு லக்ஷம் மல்லிகை கொடுப்பார்கள். அதை வாங்கித் தொடுத்துத் தலையில் வைச்சுக்கவே நேரம் போதாது. அதுவும் மல்லிகைப் பூ மட்டும் இல்லை. கூடவே கனகாம்பரமும் சேர்த்து வைச்சுப்பேன். எல்லோருமே வைச்சுப்போம்! இப்போக் கல்யாணங்களில் கூட மணப்பெண் அலங்காரத்தில் வாசனையற்ற செயற்கைப் பூக்கள்! (

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி. தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றெல்லாம் இல்லை சகோதரி. முதல் மாதத்திற்குள் வாழ்த்து தெரிவிக்கும் ஒவ்வொரு நொடியும் புதிதுதான்.

      எங்கள் அம்மா எனக்கு ஜடையில், தைத்து விட்ட மல்லிகை, மாதுளை, தாழம்பூ, செவ்வந்தி பூக்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் போட்டோ எடுத்ததெல்லாம் கிடையாது. இரு கண்ணாடியை முன்னும் பின்னுமாக வைத்து என்னைப் பார்த்து ரசிக்க செய்து விட்டு அவர்களும் பெருமையோடு கண்டு களிப்பார்கள். அவ்வளவுதான். அந்த நினைவுகள் மனக் கேமராவில் பதிவாகி மனதோடு இருக்கின்றன. கனகாம்பரம் கூட முந்தி மாதிரி புத்தம் புதுசா பொலிவோடு இல்லை. தங்களின் மலர்ந்த நினைவுகளுக்கும் மகிழ்ச்சி.

      /இப்போக் கல்யாணங்களில் கூட மணப்பெண் அலங்காரத்தில் வாசனையற்ற செயற்கைப் பூக்கள்! (/

      உண்மை.. அந்த காலத்தில் கல்யாணங்களில் பூக்களின் வாசனையே திருமணம் நடைபெறும் இடத்தை நிரப்பிய வண்ணம் இருக்கும். கல்யாணத்தில் மணப்பெண்ணுக்கு சாஸ்திரத்திற்கு பூவைத்து விடுகிறார்கள் என்றால், சுற்றமென நிறைந்திருக்கும் பெண்களும் நாகரீக உடைகளுக்கு தகுந்த மாதிரி தலை நிறைய பூக்களை விரும்புவதில்லை. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. எல்லாவற்றுக்கும் மேல் அப்போதெல்லாம் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் மறுநாள் வரை கெடாமல் இருந்தது, இப்போது மதிய சாதத்தில் நீர் ஊற்றினால் கூட இரவில் கெட்டுப் போகிறது. அதோடு தமிழ்நாட்டு அரிசி ரகங்களே பார்க்கவும் முடிவதில்லை. கடைகளில் கிடைப்பது கர்நாடகா பொன்னி அல்லது ஆந்திரா அரிசி தான்! :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எல்லாவற்றுக்கும் மேல் அப்போதெல்லாம் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் மறுநாள் வரை கெடாமல் இருந்தது, இப்போது மதிய சாதத்தில் நீர் ஊற்றினால் கூட இரவில் கெட்டுப் போகிறது/

      உண்மைதான் சகோதரி. இங்கு ஏதோ பருவ நிலை சற்று குளிராக இருப்பதினால் மதிய சாதத்திற்கு நீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. மதுரை (திருமங்கலம்) வெயிலுக்கு அப்படித்தான் காலை சாதமே இரவு ஒரு மாதிரி ஆகி விடும். நம் அம்மா காலத்தில் விறகடுப்பில், வெங்கலப்பானையில் வடித்த சாதம் (கார்த்திகை சம்பா.. இப்போ இருக்கோ இல்லையோ!) மறுநாள் காலை (நீருற்றிய பிறகுதான்) தேவாமிருதமாக இருக்கும். அந்த சாதத்திற்கு ஈடு இணை கிடையாது. இந்த பொன்னி வகையறாக்கள் எங்கும் கிடைக்கிறது. இங்கும் பொன்னிதான். நிறைய மாற்றங்கள்.. நாமும் மாற்றத்திறகேற்றபடி மாறிக் கொண்டுதான் உள்ளோம். கருத்துகளுக்கு நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. அழகான நினைவலைகள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்கள் வரவு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தங்களை
      போன்றோரின் வரவும், ஊக்க்மிகு கருத்துரைகளும் என் எழுதும் ஆர்வத்தை தக்க வைக்கின்றன. அருமையான நினைவலைகள் என தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. நீங்கள் புத்தாண்டை வரவேற்றதை மிகவும் தாமதமாக படித்து பின்னூட்டமிடுகிறேன். மன்னிக்கவும். பொங்கலே வந்து விட்டது. நீங்கள் நினைப்பது போலவே எனக்கும் பழைய விஷயங்கள் திரும்ப வருமோ என்று தோன்றும். அப்போது நீர் நிலைகள் தூய்மை அடைந்து, சுற்றுச் சூழல் மாசு இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா? நல்லதை நினைக்கலாம். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.



    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      தாமதமாக வந்து படித்தமைக்கு வருந்த வேண்டாம் சகோதரி. தங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வந்து படித்து கருத்துக்கள் கூறுங்கள். தங்கள் அன்பான பதில்களைதான் நான் என்றும் அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

      புது வருட வாழ்த்துக்களுக்கு பதிலளிக்க வந்து பொங்கலே வந்து விட்டது என்றீர்கள். நான் அதற்கு பதில் தருவதற்குள் பொங்கல் பண்டிகையும் நிறைவடைந்து சென்று விட்டது. என் தாமதத்திற்கும் வருந்துகிறேன். பதிவு குறித்த தங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. நலம் தானே, மறுபடியும் 5,6 நாட்களாகக் காணோமே? கீழே விழுந்து பாதம் வீங்கினதில் ஏதேனும் பிரச்னையா? நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் மீயும் கேட்க நினைச்சு இங்கு வந்தேன், கீசாக்கா கேட்டு விட்டா.. கமலாக்கா நலம்தானே? நலமறிய ஆவல்... தை பிறந்தால் வழி பிறக்கும்.. தைரியமாக எதிர்கொள்ளுங்கோ எந்த வலியையும்...

      Delete
    2. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

      நலமா? தங்கள் வருகைக்கும். அன்பான நலம் விசாரிப்புக்கும் நன்றி. நான் நலமாகத்தான் உள்ளேன். கால் வீக்கம் தொடர்ந்து இத்தனை நாளாக வலியையும் தந்து உபத்திரவபடுத்திக் கொண்டுதான் இருந்தது. இப்போது ஒரு வாரமாக சற்று வீக்கம் வற்றி வலி குறைந்துள்ளது. ஆனால் என் மருமகளுக்கு தீடீரென உடல் நலமில்லாமல் போனதினால் குழந்தைகளை கவனிப்பதில் கூடுதல் வேலைகளும் வந்ததினால் என்னால் வலை பக்கமே வர இயலவில்லை. தற்சமயம் அவளும் குணமடைந்து வருகிறாள். கொஞ்ச நாளில் வலைத்தள சுற்றுலாவிற்கு வந்து விடுவேன். இன்றுதான் தங்கள் வினாவிற்கு பதில் தர முடிந்தது. மன்னிக்கவும். தங்கள் ஆறுதலான நலம் விசாரிப்புக்கு மிகவும் நன்றி. தாங்கள் என்னை வலைத்தளத்தில் காணாது தேடி என் தளம் வந்து கேட்டது எனக்கு மன மகிழ்வை தந்தது. தங்கள் அன்புக்கு பதிலாக மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதை தவிர்த்து வேறு என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      தாங்களும் என்னை வலைத்தளத்தில் காணாது தேடி என் தளம் வந்து என் நலம் விசாரித்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி. மேலே சகோதரி கீதா அவர்களுக்கு காரணங்கள் பற்றி விவரித்துள்ளேன்.

      என் மருமகளுக்கு உடல் நலமில்லாமல் சென்றதினால், அதிக கவனிப்பின் காரணமாக (வீட்டு வேலைகளோடு, குழந்தைகளை கவனிக்கும் வேலை) வலை உலா வர இயலவில்லை. தற்சமயம் அவளும் குனமடைந்து விட்டாள். என் வலிகளும் என்னை விட்டு போக மனமில்லாமல் போய் கொண்டிருக்கின்றன. ஆனாலும் தங்களுடைய தைரியமான எண்ணங்கள் என் மனதிலும் தைரியத்தையும் மகிழ்வையும் தருகின்றன. என்னைத் தேடி வந்து விசாரித்தமையே என்னை உற்சாகம் கொள்ளச் செய்கிறது. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. விரைவில் பதிவுகளில் சந்திப்போம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete