Wednesday, May 1, 2019

உழைப்பாளர் தினம் – சிறுகதை 1)

வலையுலக  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது
அனைத்து நாடுகளிலும் பல் வேறு இயக்கங்கள் தோன்றி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க பெரும்பாடுபட்டது

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போரட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

நன்றி விக்கிப்பீடியா.... 

இன்றும் ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு இனத்தின் நிலை.. ஆனாலும் உழைப்புக்கு உதாரணமாய் சுட்டிக் காட்டப்படுபவர்கள்..  இது பழைய பதிவெனினும், இன்றைய தினத்திற்கானது. அதனால் மீண்டும் ஒருமுறை அனைவரின் பார்வைக்காகவும், சில திருத்தங்களுடன் பகிர்கிறேன். இதை "மீண்டும் ஒருமுறையா" என சோர்வில்லாமல் படிக்கும் அனைவருக்கும்  மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உழைப்பின் கதை... 

"என்னங்க  இன்னைக்கு  பாட்டுக்கு உழைக்கப் போகலையாவாசலில் சோர்வாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து கேட்டாள் மனைவி. 

     உம்ம்ம்... போகணும். என்னவோ காலையிலேயே சோம்பலா இருக்கு! இன்றைக்கு என்னவோ உழைப்பாளர் தினமாம்! என்றவனை இடைமறித்த அவன் மனைவி அப்படியெல்லாம் நாம இருந்தா எப்படிநம்ப வயிற்றுப் பாட்டுக்கு எங்க போறதுதினமும் சுறுசுறுப்பா அங்கே இங்கே அலஞ்சா தானே நமக்கு வேண்டியது கிடைக்கும் என்று கனிவுடன் உபதேசித்தாள் மனைவி.

     "உம்ம்ம்... புரியுது அந்த காலத்திலேயே இருந்து நாம ஓடியாடி வேலை செஞ்சவங்கதானே! (பெருமூச்சுடன்) ம்ம்..இதோ கிளம்பறேன். நீ புள்ளைங்களை பாத்துக்கோ.! "என்றபடி கிளம்ப எத்தனித்தான் அவன்.

   " பாத்து போயிட்டு வாங்க! வழியிலே ஓரமாவே நடந்து போயிட்டு வாங்க! இப்ப நீங்க புறப்பட்டு போன தான் பொழுது போறதுக்குள்ள வீடு திரும்ப முடியும். வானம் வேற கறுத்து கிடக்கு! இந்த மழை வேற வந்துடாமே இருக்கனும்.!" என்று அவன் மேல் அக்கறையுடன் பேசினாள் அவள்.

    "மழையாஅது எங்கே இப்பெல்லாம் ஒழுங்கா பெய்யுதுஅந்த காலமெல்லாம் போயாச்சு! இப்பெல்லாம் முந்தி மாதிரி எதுவுமில்லை! இந்தோபார்..! ஏதோ புயல் வந்து ஊரெல்லாம் ஒரே மழைவரப் போகுதூன்னு என அன்னைக்கு  பேசிகிட்டாங்க.! இப்ப இரண்டு நாளா அதுவும் இல்லைன்னு வேறே சொல்றாங்க.! ஒன்னும் புரியலே போ.! 

நமக்கும் ஒரு இடத்திலேயும் ஒழுங்கா முந்தி மாதிரி உழைக்க முடியலே! நேத்திக்கு ௯ட ஒரு இடத்துலேஅரிசி பருப்புன்னு மூட்டை மூட்டையா சாமான்களைஏத்திகிட்டும்இறக்கிட்டும் இருந்தாங்க! சரி! நமக்கு ஏதாவது உழைப்புக்கு ஒரு வேலை இருக்குமான்னு போனேன். அங்கிருந்த எல்லாரும் விரட்ட மிதி படாத குறையாக ஓடி வந்துட்டேன். அதேமாதிரி அவங்கவங்க வீட்டிலேயும் அவங்களுக்கு பிடிச்ச வேலைகாரங்களை வச்சுகிட்டு சுத்தபத்தமா இருக்கனும்’னு விரும்புறாங்க! நம்ம தேவையை புரிஞ்கிட்டு  நம்ப உழைப்புக்கேத்த மாதிரி நாம செய்ற வேலையை எங்கே மதிக்கிறாங்க? என்றான் சலிப்புடன் அவன்.

   "புள்ளைங்களும் பாவம்! நேத்து அப்பா என்ன கொண்டு வந்திருக்காருனு ஆசையா கேட்டதுங்க! வீட்லே ஒரு குந்துமணி அரிசி ௯ட இல்லைன்னு நான் எப்படி சொல்ல முடியும்நேத்து சின்னவன் ரொம்ப பசிக்கிதுன்னு என் காலை சுத்தி சுத்தி வந்தான். உங்களையும் காணமா! அதனாலே அவனுக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழிபண்ணலாம்னு போயி அலைஞ்சதுதான் மிச்சம்...." என தன் அனுபவத்தை சோகத்துடன் ௯றினாள் அவள்.

  " அப்படியெல்லாம் சின்னபுள்ளைங்கள தனியா வீட்டுல விட்டுட்டு போவாதே.! உனக்கும் முந்தி மாதிரி இப்பெல்லாம் முடியலை! அப்படியிருக்கும் போது ஏன் வெளியில போற? நான் போய் என்னாலே ஆனதை வீட்டுக்கு கொண்டு வரேனில்லியா? "அவன் சற்று கோபமாக கேட்டான்.

   "இல்லே! நேத்து புள்ள ரொம்ப பசின்னு சொன்னதினாலே தான் போனேன். இல்லாட்டி நீங்க தினமும் சம்பாரிச்சு கொண்டு வர்றது நமக்கு வயித்துக்கும்பாடுக்கும் சரியாதானே போறது! மத்தபடி முந்தி மாதிரி நாளைக்குனு எங்கே வச்சுக்க முடியுது? ம்ம்... நீங்க இப்படி சிரமபடுறதை பாக்கும் போதுதான் எனக்கு மனசு தாங்கல!" என்று அவனை சமாதான படுத்தியவள், “ஆமாம் அப்பவே என்னமோ சொல்ல வந்தீங்களே?” என்று ஞாபகபடுத்தினாள்.

  " ஆமாம்! அதாவது இன்றைக்கு உழைப்பாளர் தினமாம்! நேத்திக்கு வேலைய தேட போகும் போது நாலுபேர் சொல்லிகிட்டிருந்தது காதிலே விழுந்திச்சு! அந்தகாலத்துலே, "உழைப்புக்குன்னா இவர்கள்தான்னு" நம்மளை சுட்டிக்காட்டி பேசிட்டு இன்னைக்கு அவங்களை அவங்களே பெருமைபடுத்திக்கிறாங்க! ஏன் நாமெல்லாம் உழைக்கிற வர்க்கம் இல்லையா? எப்படியோ போகட்டும்! இந்த மட்டுக்காவது, எங்கோ ஒரு இடத்துல, எப்பவாச்சுமாவது  உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் ஒரு உதாரணமா நம்மளை காட்டாறாங்களே!!


""இப்படி ஒரு தினத்தை வச்சு கொண்டாடுறாங்களே! அன்னிக்காவது நமக்கெல்லாம் ஒரு இனிப்பு, ஹும்.. ஹும்.. வேண்டாம்மா, ஒரு சின்னமிட்டாயாவது கொடுக்கலாம்ன்னு அவங்களுக்கு தோண்றதா? போகட்டும்! அவங்க நல்லா வாழ்ந்துட்டு போகட்டும்! நாமதான் அன்னியிலேருந்து இன்னைய வரைக்கும், உதைபட்டும் மிதிபட்டும் சாவறோம். ஒருநாள் வெளியிலே போயிட்டு வர்றதுக்குள்ளே அன்னைக்கு உசிரு நம்மகிட்டே இருக்குமான்னு தெரியலே! நம்ம பொழைப்பு அப்படி! படைச்சவன் அவங்களையும் நம்மளையும் அப்படி படைச்சிட்டான்! இரண்டாவது நாம் வாங்கி வந்த வரம் ( இதைச் சுட்டினால், இதன் இரண்டாவது கதையும்  இத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை காணலாம்.) அப்படி! சரி! நான் புறப்படறேன். நீ பத்திரமா இருந்துக்கோ!! "என்றபடி மனைவியிடம் விடைபெற்று வெளியில் வந்தவன் அருகிலிருக்கும் ஒரு  வீட்டின் கதவு  மூடியிருப்பினும், படிகளின் ஒரமாக உள்நுழைந்து தனக்கும், தன் குடும்பத்துக்கும் உணவு தேடுவதற்கான வேலையை கவனிக்க வேண்டி , உழைப்பாளியான அந்த கடமை தவறாத கணவனான அந்த எறும்பினம் அந்த வீட்டினுள் மெள்ள பயணித்தது.

நாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2)


கதையினுள் உட்கதை

"கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் நம்மினம் மட்டும் உருவத்தில் மாறுபட்டவையாக இருப்பதினால் எவ்வளவு திறமையுடன் ஓடி ஆடி திரிந்தாலும் மற்ற பிறவிகளின் காலுக்கடியில் மிதிபட்டும் அடிபட்டும் சீக்கரமாக முடிவை சந்தித்து கொண்டிருக்கின்றன..ஏன் இப்படி?" என்ற அந்த கவலையில் உண்ண பிடிக்காமல், உறக்கம் வராமல் தவித்தார் அவ்வினத்தின் தலைவர்.

ஒரு நாள் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர உலகில் உள்ள தன் மொத்த இனத்தையும் கூட்டமாக கூட்டி வைத்துக்கொண்டு அந்த தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

" நண்பர்களே! இன்று நம் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குக்கெல்லாம் புரியும் என நினைக்கிறன். நம்மையெல்லாம் படைத்த கடவுள்  நம்மை படைக்கும் போது, நமக்கு வேண்டும் போது அவரிடம் நமக்கு வேண்டிய வரத்தை  வாங்கிக் கொள்ளலாமென கூறியிருந்தார். அதன்படி அரக்கர்களும், மிருகங்களும், தேவர்களும், மனிதர்களும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர். அதனால் நாமும் நமக்கு சாதகமாக சாகா வரத்தை பெற்று விட்டால் எக்காலத்திலும் நாம் சந்தோஷமாய் இருக்கலாம். உங்களுடைய கருத்து என்ன?"

இவ்வாறு தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து துணிச்சலான குரல் வந்தது. “நீங்கள் சொல்வது உண்மைதான் தலைவரே! அந்த மாதிரி ஒரு வரத்தை பெற்று விட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது" என்ற தைரியமான குரலை பார்த்த தலைவர், ""அப்படியானால், நம்மில் யார் சென்று வரம் பெற்று வருவது என்று தீர்மானியுங்கள்"! என்றவுடன், அந்த துணிச்சல் குரலுக்குடையவரை தவிர்த்து மற்றவர்கள்  தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாக பட்டியலிட்டு ௯றி விலக ஆரம்பித்தனர். 

தலைவர் யோசித்தார்! முதலில் வந்த குரலுக்குரியவரையே பக்குவமாக பேசி கடவுளிடம் வரம் கேட்க அனுப்பி வைத்தாலொழிய இந்த பிரச்சனை தீராது என்பதை புரிந்து கொண்டவராய்....

இதோ பார்! நீதான் மிகவும் தைரியமாயிருக்கிறாய்! இந்த வேலைக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரி வர மாட்டார்கள்! நீ இதை முடித்து வந்தால் நம் இனம் உன்னை என்றும் நன்றியுடன் போற்றிக் கொண்டிருக்கும்! என்றதும், "வெறும் நன்றிதானா?" என்று மறுபடியும்  அந்த குரல் மறுபடி எகத்தாளமாக கேட்க, "சரி நீ என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று பதிலுக்கு தலைவர் சொன்னதும், "நான் திரும்பி வந்ததும் உங்கள் இடத்தை தருவீர்களா?" என்று கேட்டதும் ஒரு நிமிடம் மெளனமானார் தலைவர்.

தன் இனங்களின் நன்மைக்காக தன் பதவியை தியாகம் செய்வது ஒரு சாதாரணசெயல்! இதனால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது! இந்த செயலினால் தன் பேரும் புகழும் பன்மடங்கு பெருகும் என்பதை புரிந்து கொண்டவராய், “சரி! நீ போய் சாதித்து வா! வந்தவுடன் மேடையின்றி, ௯ட்டமின்றி, தேர்வின்றி நீதான் நம்மினத்திற்கு தலைவன்! போதுமா?” என்று உறுதியளித்தார் தலைவர்.

"சரி!" என்று சந்தோசமாக கடவுளின் இருப்பிடத்திற்கு கிளம்பிய அந்த தைரியமான குரலுக்குரியவருடன் அவர் உற்ற நண்பனும் "நானும் வருவேன்" என ஒட்டிக் கொண்டு புறப்பட்ட, "சரி போனால் போகிறதென்று அவரையும் அழைத்துச் சென்ற அந்த தைரியவான் தன் முறை வந்ததும் கடவுளை சந்தித்தார்.

என்ன வேண்டும்? என்ற கடவளிடம், தங்கள் குறைகளை தைரியமாக எடுத்துரைத்தப்பின் வேண்டிய வரத்தை கேட்கும் முன் தைரியமான குரலின் நண்பன் முந்தி கொண்டபடி, “அண்ணே! அண்ணே! இதை மட்டும் நான் கேட்கிறேன் அண்ணே! என்று கெஞ்சி ௯த்தாட, அந்த தைரியவானும், "சரி! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அதே மாதிரி கேட்பாயா? என்று அகங்காரத்துடன் கேட்ட பின் , "சரி! ஒழுங்காக கூறி வரத்தை பெற்றுக் கொண்டு வா! நான் வெளியில் காத்திருக்கிறேன்." என்றபடி வெளியில் வந்து அமர்ந்து கொண்டார். .

சற்று நேரம் கழித்து வெளியில் வந்த நண்பனிடம் "முடிந்ததா? கடவுள் வரம் தந்து விட்டாரா? நான் சொன்னபடி கேட்டாயா? எப்படிகேட்டாய்? ஒருமுறை சொல்! பார்க்கலாம்! என்ற குரலுக்குரியவரிடம் அவர் நண்பன் தான் கேட்ட வரத்தை சொன்னதை கேட்டதும் அவரின் குரலே எழும்பவில்லை!

அடபாவி! “நாங்கள் கடித்து அனைவரும் சாக வேண்டும்! முக்கியமாக மனிதர்கள்!” என்றல்லவா கேட்கச்சொன்னேன். “நீ நாங்கள் கடித்தவுடன் சாக வேண்டுமென” மொட்டையாக கேட்டு வரத்தையும் பெற்று வந்திருக்கிறாயே! பாவி! பாவி! என்று துரத்தி துரத்தி நண்பனை அடிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்றபடி கடவுள் எட்டி பார்க்க, “கடவுளே! என் நண்பனுக்கு மறதி அதிகம் அதனால் மாற்றிக் கேட்டு விட்டார். தயவு செய்து மன்னித்து வரத்தை நான் கேட்பது போல் தாருங்கள்!” என்று வரம் பெற வந்தவர்  பல முறை வேண்டியும் அதை ஏற்காத கடவுள், “அவ்வளவுதான்! கொடுத்த வரத்தை மாற்ற முடியாது! இனி உங்கள் விதிப்படிதான் நடக்கும் அந்த மனித இனத்துடன்தான் நீங்கள் காலங்காலமாய் வாழ்ந்து, சாவையும்,சந்திப்பீர்கள்!” என்று கடுமையாக ௯றி விட்டு மறைந்து விட்டார்.

வரம் கேட்டு வந்த தன் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதே,!!! என்று நொந்தபடி நண்பனுடன் வந்த அந்த தைரியவான் தலைவரின் காலில் விழுந்து கதறியபடி “நாம் இப்போதாவது சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்தோம், சாகா வரம் கேட்கப்போய் அதிலும் மனிதர்களை கடித்து சாகடிக்கும் வரத்தை கேட்கப்போய் அவர்களை கடித்தவுடன் நாம் இறக்கும் வரத்தை பெற்று வந்திருக்கிறோம்! அது மட்டுமின்றி அவர்களுடனே காலங்காலமாய் வாழ்ந்து இறக்கும் வரமும் கிடைத்துள்ளது, நம்மினத்திற்கு நல்லது செய்கிறோம் என செருக்குடன் சென்ற நான் என் நிலை உணராமல், பேராசையுடன் செயலாற்றியதில் , நம்மினமே சாபம் அடையும்படி ஆகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். ” என்றபடி அரற்றி அழுத அந்த எறும்பினம் துக்கம் தாங்காமல் உயிரை விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.




நன்றி கூகிள்.

Friday, April 26, 2019

செல்வங்கள்..


அந்த காலத்தில், பொதுவாக பெரியவர்களை வணங்கும் போதும்., திருமணங்களில் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்தும் போதும், "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.!" என்று வாழ்த்துவது வழக்கம்.  "பதினாறு" என்பது பதினாறு வகையான செல்வங்களை குறிப்பது என்பது நாமெல்லோரும் அறிந்ததே.! இருப்பினும் நகைச்சுவைக்காக அப்பப்பா.. ஒன்றிரண்டையே சமாளிக்க முடியலே.. இதிலே பதினாறு வேறேயா? என்று பதினாறையும் குழந்தைச் செல்வமாக மட்டுமே குறிப்பிட்டு தெரிந்தோ , தெரியாமலேயோ கிண்டல் செய்பவர்கள் வேறு ரகம்.  இதில் தெரிந்து வாழ்த்தியவர்கள் இவர்களின் நகைச்சுவையை ரசிப்பதை தவிர  வேறு  வழியில்லாதவர்களாக ஆகி விடுவார்கள்.

இந்த பதினாறு வகையான செல்வங்களை  ஒரு மனிதனுக்கு அன்புடனே தந்தருள வேண்டுமென ஆதிகடவூரில் வாழ்ந்தருளும்  அன்னை அபிராமி அம்பிகையை வேண்டி அவளருள் பெற்ற அபிராமி பட்டர் இவ்வாறு  உளமுருக பாடியுள்ளார். 


அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)


இந்த பதினாறு செல்வங்களும் ஒருவரது (அது ஆண், பெண் இரு பாலாராகிலும் சரி) வாழ்வில்  அனைத்தும் ஒருசேர கிடைக்கப் பெற்றால், அவரை விட புண்ணியம் செய்தவர்கள் இந்த உலகில் வேறெவரும் இல்லை என்றே கூறலாம்.  ஆனால் மேற்கூறிய அனைத்தும் முற்றிலுமாக அனைவருக்கும் கிடைக்குமா என்றால் அது சந்தேகந்தான்..! 


பொதுவாக அக்காலத்தில், படிப்பறிவு மிகவு‌ம் இருப்பவர்களுக்கு, மேற்கொண்டு படிக்க வசதி (பணம்) இருக்காது. பணமிருப்பவர்களுக்கு கல்வியறிவு சற்று அலட்சியம் காட்டி சென்றுவிடும். அப்படியே இரண்டும் அமைந்தாலும், நோயோ, வேறு வகையான தொந்தரவுகளோ அமைந்து நீண்ட நெடுவாழ்வு  குறைந்து போய் விடும். இல்லை.. நல்லபடியாக திருமணம் நடந்து இல்லறவாழ்வு நன்றாக இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லாது ஆயுள்  முழுக்க கவலைகளை சுமக்க நேரிடும். இப்படி ஒன்றிருக்க ஒன்றில்லாது அமைவதைதான் "விதியின் செயல்" என ஏற்றபடி, காலம் நம்மையும் காலத்தை நாமுமாக கடத்தி  வந்தோம். 


இப்போது காலத்தை நாம் அனுசரித்து போகிறோமா ? இல்லை காலம் நம்முடன் அனுசரிக்கிறதா? புரியவில்லை... ஆயினும் "தனமெனும்" பணம் மட்டும் அதுவும் தெய்வ சங்கல்பமாக ஒரு மனிதரின் வாழ்க்கையில் அமைந்து விட்டால், உலகில் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை வந்துள்ளது. மேலைநாடுகளிலும் சென்று உயர் கல்விகள் பெற தகுந்த வசதிகள் , வாழ்வில் அத்தியாவசிய தேவைகளை, இல்லை, தத்தம் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளும் வசதிகள், எந்த நோய்க்கும் தீர்வாக மருத்துவ வசதிகள், எமனுடன் இயன்ற வரை போராடும் துணிவு, இப்படியான வாழ்வுக்கு பணமிருந்தால் போதுமென்ற நிலை உருவாகி விட்டது. 


அன்னை, தந்தையையும், அன்பையும், தவிர அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று சொல்வார்கள். ஆனாலும் ஒரு உயிரின் முதலும், முடிவும்  என்றுமே "படைத்தவன்"  கையில்தான் உள்ளது என்பதையும் அனைவருமே உணர்ந்துள்ளோம். ஒரு உயிரின் "முடிவின்" நிமிடத்தை "அவன்" எழுதிய பின் அந்த நேரத்தை மாற்றியமைக்க நாம் பணத்தைக் கொண்டு எவ்வளவு பேரங்கள் "அவனுடன்" நடத்தினாலும், நிச்சயம் தோல்வி நமக்குத்தான் என்பதும் நாம் அறிந்ததே... 


இந்த செல்வம் இல்லாதவர்கள், அமையாதவர்கள்.. ஏழைகள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில்  ஒர் ஓரமாக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை  எல்லாவற்றிலும் ஒரு கேள்விக்குறியாக அமைந்தாலும்,  பலருக்கு, மற்றச் செல்வங்கள் ஒரளவு துணையாக நின்று அவர்களது வாழ்வை நகர்த்திக் கொண்டு நகர்கிறது. 


பணத்திற்கு அதிபதியான அன்னை மஹாலக்ஷ்மியும் நிலையாக ஒரிடத்தில் தங்காமல், உலகில் அவரவர்களுடைய பூர்வஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மாறிக்கொண்டேயிருக்கும் தன்மை உடையவள். அதன்படி ஏழை, பணக்காரன் ஆவதும், பணக்காரன் தீடிரென்று நொடித்து  பணவசதிகளை இழப்பதும்,  கர்மாக்களின் கணக்குப்படி நடந்தவாறே உள்ளன. பிறப்பிலிருந்து, இறப்பு வரை கஸ்டஜீவனம்  செய்வதும், இல்லை பிறப்பிலிருந்தே பணத்தில் புரண்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெறுவதும் அவரவர் ஊழ்வினைப் பயனே.! 


ஒரு கதை...

ஒரு முனிவர் சிறுவயதிலிருந்தே சுக போகங்கள்அனைத்தையும் துறந்து பக்தியுடன் காட்டில் தவமியற்றி வரும் போது. அன்னை மஹாலஷ்மியானவள் அவரிடம் சிறிது காலம் தான் தங்கியருள வேண்டிய நிர்பந்தத்தை உணர்த்தி, அவர் வாழ்க்கையோடு உடனிருப்பதாக சொல்லி வந்து நின்றாள். முனிவர் முதலில் மறுத்தாலும், அவளின் கடமையை செய்ய விடாது  தடுப்பது தர்மமகாது என எண்ணி ஒப்புதல் தந்தார். ஆயினும், "அம்மா வரும் போது சொல்லிக் கொண்டு வந்த நீ என்னை விட்டு போகும் போது சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்" என வேண்டுகோளுடன் கூறியதும் அதற்கு மஹாலக்ஷ்மி சம்மதித்து அவருக்கு அருள் புரிய தொடங்கினாள்.

அதை சோதித்து பார்க்க விருப்பம் கொண்ட முனிவர், அந்நாட்டு அரசனின் விருப்பமின்றி  சில செயல்களை அவனுக்கு எதிராக வலுக்கட்டாயமாக செய்யப் போக அன்னையின் அருளினால், அவையனைத்தும்  அரசனுக்கு நலம் பயக்கும் செயல்களாக மாறி முனிவருக்கு பெருமையையும், புகழையும் ஏற்படுத்தி தந்தன.


முனிவரின் அத்தனை தவறான செயல்களையும் உடனிருந்து அரசனுக்கு அனுகூலமாக மாற்றுவித்தவள் அன்னையே.! இதை முனிவரும் உணர்ந்து கொண்டார். சில காலங்களுக்குப்பின் அரசனின் நன்மதிப்பையும், நாட்டு மக்களின் மரியாதையையும் பெற்று அரசனின் விருப்பத்திற்கேற்ப மறுப்பேதும் கூறாது அரண்மனையிலேயே தங்கியிருந்தார் முனிவர்.


ஒரு நாள் முனிவர் தனக்கென்று கிடைத்த அபூர்வ மாங்கனியொன்றை  அதில்  அரண்மனையிலேயே இருக்கும்  அரசனுக்கு எதிரிகள் விஷமேற்றி யிருந்ததை  அறியாமல் அரசனுக்கு தரும் போது, அரசனும் தம் மதிப்பை பெற்ற முனிவர் தந்ததாயிற்றே எனஆர்வத்துடன் அதை உண்ணப் போகும் தறுவாயில், அரண்மனை வைத்தியரால் அந்த உண்மை கண்டுணரப்பட, முனிவரின் மேல் கோபம் கொண்ட அரசனின் மனைவி, அமைச்சர்  ஆகியோர் முனிவரை ஈவிரக்கமின்றி கொல்லும்படி ஆணையிட்டனர். 


அரசன் அதை தடுத்து "எத்தனையோ தடவை தன்னை காத்தவரை கொல்ல வேண்டாம். அவரை காட்டுக்கு அனுப்பி விடுங்கள்"என உத்தரவிடவே மறுநாள் அவரை காவலாளிகள் கடுமையான இழிச்சொற்கள் கூறி, காட்டில் கொண்டு விட்டனர். செல்லும் வழியெங்கும் மக்களும் அவரை தூற்றினார்கள். அவரும்  மாங்கனியை அரசனுக்கு தருவதாக அரசன் இருப்பிடம் நோக்கிச் செல்லும் போது  அன்னை மஹாலக்ஷ்மி அவர் முன் தோன்றி, " குழந்தாய்.! இன்றுடன் உன்னுடனான என் வாசம் முடிந்தது. ஆதலால் நான் உன்னை விட்டு அகலுகிறேன்" என கூறி விட்டு மறைந்ததை நினைவு கூர்ந்தார். 


அன்னையின் துணையினால், தன் வாழ்வில், ஏற்பட்ட மாற்றங்களையும், ஆண்டியாக வாழ்ந்த தான் அரமணை வாசத்தில் வாழ்ந்ததையும், புகழும், பெருமையும், தேடி வந்ததையும், இன்று அவள் அகன்றதால், பழையபடி காட்டிற்கு  இழிசொற்கள் சூழ வந்ததையும் கண்டுணர்ந்த முனிவர், அன்னையின் புகழ் பாடி அவளை தொழுது விட்டு தம் பழைய தவ வாழ்க்கையை எவ்வித சலனமுமின்றி தொடரவாரம்பித்தார். 


இந்தக் கதை அனைவரும் அறிந்ததுதான். அந்த முனிவரைப்போல உன்னதமான உள்ளத் தூய்மையும், எதையும் சமமாக ஏற்கும் மனோபாவமும் சாதாரண மனிதர்களுக்கு கைகூடி வராது. எத்தனைப் பிறப்பெடுத்தாலும் பிறவிகள்தோறும், சிந்தனையும் செயலும் இறைநாமத்தையன்றி வேறெதுவும் வேண்டாத பண்பை அடைந்திருக்க வேண்டும். அத்தகைய பண்பை அடைய ஆசைகளை களைந்தெறியும் கலைகளையும் கற்றிருக்க வேண்டும். இவ்விதமான அசுர சாதனைகளை அம்முனிவர் சென்ற பிறவிகளில் செய்திருந்ததால் அவருக்கு காடு மேடு அனைத்தையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள எளிதில் சாத்தியமாயிற்று. 


"பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. ஆனால்,"காதறுந்த ஊசியும் வாராது கடைகாண் வழிக்கே"என்று உண்மை உணர்ந்து உபதேசித்தார்  பட்டினத்தார். இத்தனைக்கும் அவர்  தன் இளமையிலிருந்தே பணத்திலே  அதிக நாட்டம் கொண்டு இரவு பகலாக உழைத்து பணமீட்டி, பணத்தால் அத்தனை வசதியும் அனுபவித்து, ஒரு காலகட்டத்தில் ஊழ்வினையின் நல்லருளால்  ஞானம் பெற்றவர்.. அவ்வருளும் அனைவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அதற்கும் எத்தனையோ பிறவிகளில் "அவனருளை"  அநேக சிரமங்களிடையே சேகரித்திருக்க வேண்டு்ம். 





இதை குறித்து பகிரும் போது இந்த அருமையான பாடலும் நினைவுக்கு வந்தது. அதையும் பகிர்ந்துள்ளேன்.

மேற்கூறிய இந்த பதினாறு வகையான செல்வங்கள் பெற இன்னும் எத்தனை பிறவியோ? ஆனால் இந்த  பதினாறு வகையான அர்த்தங்களை இந்தப் பிறவியில் படித்துணரலாம் எனத் தோன்றுகிறது. அதை உங்களோடு பகிர்ந்துள்ளேன். நீங்களும் இதை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. எனினும் என் பதிவையும், பதிவோடு இதையும் படிப்பீர்கள் என நம்புகிறேன். 


நன்றியுடன் உங்கள் சகோதரி... 

      -----------------------------------------------
பதினாறு வகையான அர்த்தங்கள். 

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சனைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவீர்கள்.. யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு..? 

9] ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.

10] நீங்கள் சிரித்துப் பாருங்கள்! உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பாருங்கள்; உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
*நம்பிக்கையையே* ஆகும்.

15] அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

Sunday, March 17, 2019

மயிலாக நான் மாற வேண்டும்.


சென்ற வருடம் திருநெல்வேலிக்கு  போகும் போது அகஸ்தியர் அருவிக்கும் சென்றிருந்தோம். வரும் வழியில், பல இயற்கை காட்சிகள், அருமையாக இருந்தது. ஓரிடத்தில் காரை மெதுவாக ஓட்டி வரும் போது ( ஓட்டி வந்தது அண்ணா பையன்தான்.) நாங்கள் வந்த காருக்கு அருகில் தைரியமாக ஒரு மயில் வந்து நலம் விசாரித்தது.(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) ஏதாவது சாப்பிட இருக்கிறதா?எனகேட்கும்  பாவத்தில், காரைச் சுற்றி வந்தது. கைவசம் கொண்டு போன நொறுக்குத்தீனிகள் பையை துழாவினோம். நாங்கள் இயற்கையை ரசித்த போதினில், கண்கள் இமை கொட்டாதிருந்த சமயம் பார்த்து, கையும், வாயும் மட்டும் நட்புறவாக பேசி வைத்த மாதிரி பையை காலி செய்திருந்ததை  கண்கள் அப்போதுதான் பார்த்து அதிர்ச்சியடைந்தது. "நல்லவேளை.!" ( அந்த மயிலுக்குத்தான்)  ஒரு அரை டஜன் முறுக்கு பாக்கெட் மட்டும் சற்று முறுக்கிக்கொண்டு  வாய், கைகள் நட்புறவில் சேராமல் "கா"விட்டு  ஓரத்தில்  ஒளிந்திருக்க கண்டு கண்களுடன் சேர்ந்து மனதும் நிம்மதியடைந்தது.

இவர்கள் ஒன்றும் தராமல் நம்மை வேடிக்கை பார்க்கும் ஜீவன்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்தில் எங்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒருமையில்" வந்த "அம்மயில்" நகரும் முன் நாங்கள் அந்த  முறுக்கை கார் ஜன்னல் கதவை திறந்து வெளியில்  போட சற்று அவநம்பிக்கையுடன் திரும்பிய மயில் அட,.! முறுக்கா...!  இதைக் கொடுக்கத்தான் இவர்களுக்கு இத்தனை முறுக்கா ? என்று இளப்பமாக ஒருதடவை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

அப்போது எடுத்த படங்கள்தான் இவை.


நலமா? என விசாரிக்க வந்த மயில்.


உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்குமாப்பா ...?


அட.! உங்களைத்தான் கேட்கிறேன்.. உங்கள் இதய கதவை... வேண்டாம்.. கார் ஜன்னல் கதவை திறக்க கூட மனமில்லையா உங்களுக்கு?


அட. .! போங்கப்பா.. நீங்களும் உங்க உபசாரமும்.. ஏதோ தேடு தேடென்று தேடுகிறீர்களே ஒழிய ஒன்றும் கை நீட்டி வெளியில் வர மாட்டேங்குது..


நானும் எவ்வளவு நேரந்தான் பொறுமையாயிருப்பது? சரிப்பா.. வரட்டா..! வேறே ஏதாவது வண்டி வந்தா அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்.. அடேடே.! கிளம்புற நேரத்திலே கார் ஜன்னல் கதவு லேசாக திறக்குதே.!


ஒரு மட்டும் ஒரு முறுக்கை ரொம்பவும் முறுக்கிக்காமே எப்படியோ போட்டுட்டாங்கப்பா.. சரி.. சாப்பிட்டு பார்க்கலாம்.


இதைக்கடிக்க கூட முடியலயே.! இதை எங்கேயிருந்து வாங்கிட்டு வந்தாங்களோ.! இதையா இந்த மனுசங்க இவ்வளவு நேரம் தின்னுகிட்டு வந்தாங்க... சுத்தமா ரசனையில்லாத மனுசங்கப்பா...


இது முறுக்கு தானா? வேறு ஏதாவது தந்து நம்மை கடத்தி, கிடத்தி காரிலேயே கொண்டு போயிடுவாங்களா.. ?


இந்தப் பக்கம் வேற நிறைய போட்டிருக்காங்களா? இதைப் பாக்கவேயில்லையே.. .!


இதுவாச்சும் நல்லாயிருக்குமா . ? கொஞ்சம் டவுட்டு வருகிறது. அதான் கேட்கிறேன்...


இல்லை.. அந்தப் பக்கம் ஒன்னு இருக்கே.. அதை சாப்பிடலாமா?


அட...! இங்கேயும் அதே வஸ்துதான் போடறீங்களா? இது எப்படியிருக்குமோ?


என்னவோ.. போங்க.! சுத்தி, சுத்தி வந்ததுக்கு ஒரே "கைசுத்தல்" முறுக்கா போட்டுட்டு கிளம்புறீங்க! இது எங்கிட்டே வரும் போது எத்தனை "கைசுத்தி" வந்திருக்கோ .! சரி.. சரி... நிதானமா சாப்பிட்டுகிறேன். போயிட்டு வாங்க.. ஆனா.. அடுத்த தடவை இந்த முறுக்கை மட்டும் கொண்டு வந்துராதீங்க...! என்ன இருந்தாலும் உணவை கொடுத்ததுக்கு நன்றி.. .! உங்களுக்கும் மட்டுமில்லை.. நம்மையெல்லாம் படைத்தவனுக்குந்தான்..!

இத்தனை மயில் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு போனஸாக இந்த வீடியோ..

எத்தனை அழகாக பறக்கிறது இந்த ண் யில்...



"மயிலாக நான் மாற வேண்டும்.  வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்." என அருமையாக பாடியுள்ள சீர்காழியின் கம்பீரமான வெங்கல குரலுடைய பாடல்  நினைவுக்கு வருகிறது.

இதோ.. போனஸுக்கு ஒரு போனஸாக இந்தப் பாடலும்..... இதையும் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன். 


இந்த வீடியோக்கு மட்டும்... கூகுளுக்கு  நன்றி....

என் பதிவையும், நான் எடுத்த மயிலாரின் படங்களையும். நான் பதித்த வீடியோவையும்,  கூகுளிடமிருந்த பெற்ற சீர்காழியின் பாடல் வீடியோவையும் ரசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

Friday, March 1, 2019

கடத்தலில் வந்த கலவன் சாதம்...

சகோதர,சகோதரிகள்
அனைவருக்கும் வணக்கம். 

வலையுலகில் நிறைய எழுத ஆசை. என் எழுத்தை (எழுத்தை என்பதை விட ஆசையை) இங்குதான் பதிவாக்கி சந்தோஷம் அடைய முடியும். என்னைப் போன்ற கத்துக்குட்டிக்கு ஆதரவாக இருக்கும் நல்லுள்ளங்களுடன் கூடிய பல பெரிய,, திறமையுள்ள பதிவர்கள் கோலோச்சி கொண்டிருக்கும் வலைத்தளத்தில் எழுதி அவர்களின் அன்பான கருத்துக்களையும், வாழ்த்துகளையும் பெறுவதை பெரும் பாக்கியமாக கருதி எழுதும் ஆசையை வளர்த்து வருகிறேன். அவ்வப்போது ஆசைகளை எழுத்தாக்கி பதிவிட்டும் வருகிறேன். என் வலைத்தளம் வந்து படித்து என் பதிவுக்கு மட்டுமல்லாது, கதை, கவிதை என்று நான் எழுதும் அனைத்திற்கும், ஊக்கமும், உற்சாகமும் தந்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்.

சமீப காலமாக பதிவுகள் எழுத பெரிய பெரிய தடைகள் விழுந்து விட்ட என் நிலையை  நானும் விளக்கியுள்ளேன். அப்படியும்  ஏதாவது எழுத வேண்டுமென மனமும் பொழுதும் ஒத்துழைத்த ஒரு நேரத்தில் ஒரு பக்தி பதிவாக இந்த வருடம் முதலில்  ஆரம்பிக்கலாமென, "மனதினுள் கடத்தல்" என ஒரு பதிவு எழுதினேன். அதற்கு கருத்துரை தந்தவர்களுக்கு மிக்க நன்றி.

வந்த கருத்துக்களும், அதற்கு  பதிலாக நான் தந்த கருத்துக்களுமாக  37ஐ தொட்டு கடந்து போய்க் கொண்டிருக்கையில், வேறு ஏதாவது எழுதலாம் என நான்  முயற்சித்து கொண்டிருந்த போது  கண்மூடி திறந்த ஒரு நிமிடத்தில் ( அந்த ஒரு விநாடி ஒரு மயக்கம் கலந்த உறக்கம்.. காரணம் அப்போது பேய்களும் உறங்கி விழும் அர்த்த ராத்திரி.. அப்போதுதான் எனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாமென்று  வழக்கமான கைபேசியில்,  பதிவொன்றை டைப் பண்ணிக் கொண்டிருந்ததில் எப்பேர்பட்ட உறக்கமும் மயக்கம் கலந்துதானே வரும்.. இதிலென்ன ஆச்சரியம்? .) என் "மனதினுள் கடத்தலை" என் விரல்கள் என் மூடித்திறந்த கண்ணெதிரிலேயே  சுலபமாக "கடத்திச்" சென்று விட்டன.

ஒரு வங்கியில் சிரமப்பட்டு சேமித்ததை ஒரு அவசர தேவைக்காக எடுக்கலாம் என செல்பவர்களுக்கு, எடுத்த பணத்தையும், கையோடு கொண்டு சென்ற கொஞ்ச பணத்தையும் சேர்ந்து ஒரு பையில் வைத்து கொண்டவாறு அந்த அவசர தேவையை சுபமாக முடிக்கலாம் என திரும்பும் போது, அதை மொத்தமாக சேர்த்து இழக்கும் போது  எவ்வளவு வருத்தம் வருமோ. .! அந்த வருத்தம் அன்று இரவு என்னையும் தொற்றிக் கொண்டது. ஏனென்றால்,, என் கையிருப்பை விட சேமித்ததை பொக்கிஷமாக கருதியவள் நான்.

இதில் கையோடு வைத்திருந்த பணம் நான் எழுதிய பதிவு. 

சேமித்ததால் வந்த பணம் அன்பான சகோதர,  சகோதரிகள் அனைவரின் கருத்துக்கள். 

இரண்டையும் கோட்டை விட்டவுடன் உறக்கமும், அதனுடன் வந்த மயக்கமும் ஒன்றாகவே கை கோர்த்துக் கொண்டு போயே  போச்சு. மறுநாள் காலை தெரிந்தவர்களிடம்  (என் குழந்தைகள்தான்) காணாமல் போனதை சொல்லி  பத்திரமாக மீட்டு வந்து விடலாம் என்ற நினைப்பில் படுத்தாலும், "கடத்தலை"   அங்கீகரிக்க இயலாமல் "மனதினுள் " பதிவின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு  திசைகளில், நர்த்தனமாடியபடி இருக்க, வந்த கருத்துக்களும் சுதி லயத்தோடு ஒட்டாமல் இசை பாடி  தப்புத்தாளங்கள் போட, தூக்க தேவதைக்கு நித்திரையை மறந்து ஒரே கொண்டாட்டந்தான்...!

அந்த கொண்டாட்டத்தில் ஈடுபடாமலிருக்க, எழுதியதை நினைவில் கொணர்ந்தது மீண்டும் எழுதினால் என்ன?  என்று தோன்றியது. படிக்கும் காலத்தில் எழுதியதை மனனம்  செய்ய  அப்போது ஒத்துப் போன மூளையில், இப்போது புரட்டிப் போட்டு சிந்தித்தாலும், எழுதிய வார்த்தைகள் வரி பிசகாமல் வருவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்ட பின், ஒரளவுக்கு வரிகள் வசப்பட ஆரம்பித்தன. அனைவரின் அன்பான கருத்துக்களையும், அவ்வாறே நான்  முயற்சிக்க,  வீட்டிலுள்ள அனைவரும் அவர்களது பெற்ற வரம் கலையும் நேரத்தில், எனக்கு ஒரு மட்டும் வந்தது.... உ.ற.க்.க.ம்... ஹா. ஹா ஹா. ஹா

பின் காலை "பாதுகாவலர்" துணை கொண்டு  "வலை வீசி" தேடியதில், "கடத்தியதுகள்" மூலைக்கொன்றாக கிடைத்தது . சேமித்ததையும் சேர்த்த பின்  வங்கிக் கணக்கில் போட்டு சேர்க்கிறேன். பாராதவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது வந்த பசி மயக்கத்திற்காக கோவைக்காய் சாதம்.. நான்கு நாட்களாக வெவ்வேறு விதத்தில் உபயோகித்த கோவைக்காய், (அவியல், காரக்கறி, கூட்டு, சாம்பார்) இன்னமும் மிகுதியாக இருந்து கொண்டேயிருந்தது. இன்று என்னை பயன்படுத்த விட்டால், நாளை கண்டிப்பாக ப(கி)ழமாகி விடுவேனுங்கோ..! என்று பயமுறுத்தியபடி மிகவும் கோவத்துடன்  காத்துக் கொண்டிருந்தது. நமக்கே கோவம் வரும் போது, கோவ(வை) க்காய்க்கு வராதா என்ன?

                                   நன்றாக


                                      அலம்பி


எடுத்த கோவக்கார காய்கள். 


வறுப்பதற்கு எடுத்த  ( இல்லை.. இல்லை... வறுத்த பின் எடுத்த என்று மறுத்துக் கூறும் நிலையில் நாங்கள்  இல்லை..  ஏனென்றால் ஏற்கனவே எங்களை வறுத்து எடுத்து விட்டார்களே..) ஒரு ஸ்பூன் க. ப, ஒரு ஸ்பூன் உ. ப, இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை  காரத்திற்கு அவரவர் விருப்பம் போல் மி. வத்தல்  நான் 5,6 எடுத்திருந்தேன். இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலைகள்.


  வறுத்த  பின்னும் அதே போஸில்                        சலிப்பில்லாமல் நாங்கள்தான்..


    பொடிதாக   அரிந்த  இரண்டு  அல்லது            மூன்று  பெரிய  வெங்காயம்..


கோவைக்காய்க்கு கோவம் என்று பாட்டு பாடி விட்டு கண்ணில் நீர் வர பெரிதாக அரிந்து வைத்து இருக்கும் எங்களை "பொடிதாக" என்று  உங்களுக்கு அறிமுக  படுத்துகிறார்கள். நாங்க எப்படி.?  எவ்வளவு கோவம் இருந்தாலும், எங்களைத்தொட்ட வர்களின்  கண்ணுல தண்ணியை வர வைத்து  பார்த்துருவோம்ல்லே.....


அலம்பி எடுத்த கோவைக்காய்களை இருப்பக்கமும் காம்பு நீக்கியபின், கொஞ்சம் பழுத்ததை அது கோவப்பட்டாலும்  பரவாயில்லையென்று ஒதுக்கி விட்டு, மற்ற காய்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டு சுற்றுக்கள் சுற்றி வைத்துக்கொள்ளவும்.


இதுதான் எங்களுக்கு கோவம்..! கவிஞர்கள் பெருமையாக "கொவ்வைப்பழம்" போலும் சிவந்த அதரங்கள் என பெண்களின் உதட்டழகிற்கு  எங்களை உதாரணம் காட்டி விட்டு,  காலப்போக்கில் பெயரையும் "கோவைக்காய்"  என மாற்றிவிட்டு, பழமாகிப் போனால நன்றாக இருக்காது என இப்படி ஒதுக்கி வைத்தால்..... எங்களுக்கு கோபம் வராமல் இருக்குமா? இயல்பாகவே பழம் எங்கள் பெயருடன் ஒட்டிக் கொண்டது. செடியிலிருக்கும் போதும் கிளிகளுக்கு, மற்ற பறவைகளுக்கு பயனாகிறோம். எங்களிடம் இருக்கும் மருத்துவ குணம் உங்களின் "இனிப்பு நோயை" கட்டுப்படுத்தும் திறனுடையது தெரியுமா?


ஒரு வாணலியில் கடுகு, உ. ப தாளித்துக் கொண்டு அரிந்து வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


அது நன்றாக வதங்கி வரும் சமயத்தில்,


துருவிய கோவைக்காயைப்போட்டு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.


வெந்த அதனுடன், வறுத்து வைத்ததை கரகரப்பாக பொடித்து அதனுடன் கலந்து


வாசம் வரும் வரை கலவைகளை திருப்பி விட்டு ஐந்து நிமிடங்களில் அனைத்தும் நன்கு கலந்ததும்,


ஏற்கனவே தயாராக ரெடியாகி  உதிரியாக ஆற வைத்து காத்திருக்கும் சாதத்தை  இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இதனுடன் கலந்து   விடவும்.


கோவைக்காய்  சாதம் தயார். மேல் அலங்காரத்துக்கு மு. ப வேண்டுமானால் (ஒத்துக் கொள்கிறவர்கள். போட்டுக் கொள்ளலாம். ஆனால் போட்டால் அது  மறுப்பேதுமின்றி ஒத்து கொள்ளும். ) பொடித்து வறுத்து போட்டுக்கொள்ளலாம்.


இதற்கு வழக்கம் போல் தயிரில், பச்சை மிளகாய் தேங்காய் அரைத்து விட்டு  கடுகு தாளித்து தொட்டுக்கொள்ளலாம். அதுவும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.


இப்ப நம்ப கோவைக்காய்க்கு  கோவம் தணிந்து சாதத்துடன் நட்புறவாகி விட்ட காரணத்தால் சமரசம் ஆகி இருக்கும்,. இரண்டாவதாக அதன் பயன்களை அவையே "அவை" முன்னால் சமர்ப்பிக்க வேறு வைத்து விட்டேனே.! 


இனி என்ன? தடையேதுமின்றி கோவைக்காய் சாதத்தை சாப்பிடலாம்.!  இல்லையேல், இதுவும் என் உறக்க மயக்கத்தில், என்றேனும், ஒருநாள் ஓடி விடும்.

நன்றி...அனைவருக்கும்.