Saturday, November 5, 2022

துளசி அம்மன் திருக்கல்யாணம்



இன்று துளசி கல்யாணம். இன்று துளசி தேவியை தொழுது  பணிபவர்களுக்கு என்றும் மங்கலம் தரும் நாள். ஸ்ரீ மன்நாராயணரின் பூஜைக்கு அனேக மலர்களுடன் என்றுமே உகந்தது துளசி தளங்கள்தாம்.  அவரை பூஜிக்கும் போது ஒரு துளசி இலை அந்த பூஜைக்குரிய பொருட்களில்  இல்லையென்றாலும் பெருமாளின் பூஜா கைங்கரியங்கள் நிறைவை அடையாது. 

இன்று ஸ்ரீமன்நாராயணன் அன்னை மஹாலக்ஷ்மியின் தங்கையான அன்னை துளசி தேவியை திருமணம் செய்து கொண்டு அவரை தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள். துளசி தேவியின் தவம் பூர்த்தியடைந்த நாள்.பெருமாள்  கோவில்களில் மட்டுமின்றி நம் வீடுகளிலும் நாம் அன்னை துளசியுடன், நாராயணரையும் வழிபட்டு பலன்கள் யாவயையும் பெற வேண்டும். 

இது எல்லோரும் விபரமாக அறிந்ததுதான். அனைவரும் ஒவ்வொரு வருடமும் நியமங்களுடன் பூஜித்தும் வருவதுதான். இருப்பினும் என் பதிவிலும் இன்று அன்னையை பணிவுடன் வணங்கி போற்றும் அருளை அந்த நாராயணன் தந்தமைக்கு அவன் தாளிணையில் பல கோடி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். அவன் அருள் என்றும் நம் அனைவருக்கும் கிடைத்திட சதா சர்வகாலமும் அவனை பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. 

ஸ்ரீ துளசியம்மா ஸ்தோத்திரம். 

ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா

வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே

செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே

தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் 

பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே

பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே

அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே

அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே 

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே

அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே

வன மாலை என்னும் மருவே நமஸ்தே

வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே 

அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து

மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி

முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு

செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து 

பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து

புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு

என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க

மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள் 

மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்

தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன்

அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்

தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன் 

புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன்

கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்

க்ரஹஸ்தர் என்னை பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன் 

முமுஷுகள் என்னை பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன்

கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து

கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி

கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில்

வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்

நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே

அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார்

இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள்

அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால். 

🙏. ஓம்.. தத். ஸத். பிரம்மார்ப்பிதம்.. 🙏. 

அனைவரும் அன்னையின் அன்பான அருள் பெற்று நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக  வாழ்ந்திட அன்னையை இந்த ஸ்லோகம் பாடி நமஸ்கரித்து கொள்கிறேன். 🙏. 

16 comments:

  1. சிறப்பான தரிசனப்பதிவு.

    ஸ்ரீ துளசியம்மா ஸ்தோத்திரம் அறிந்தேன்.
    வாழ்க வையகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது உடனடி வருகைக்கும், ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்துத்தை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      துளசியம்மா ஸ்தோத்திரம் படித்தமை கண்டு மன மகிழ்சச்சியடைந்தேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நல்ல பதிவு. பெருமாள் படமும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. பெருமாள் மிகவும் அழகாக இருக்கிறார். பதிவும், பெருமாள் படமும் நன்றாக உள்ளதென ரசித்துச் சொன்னமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சிறப்பான தரிசனம்..

    ஸ்ரீ துளசியம்மா ஸ்தோத்திரம் அறிந்தேன்.

    ஸ்ரீ துளசி மாதேவி
    அனைவருக்கும் நல்லாசிகளை நல்கட்டும்..

    ஓம் ஸ்ரீ துளஸி மாதேவ்யை நமோ நம:

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் பதிவை ரசித்த அன்பான கருத்துக்கும், அன்னையை பணிந்து அவர் என்றும் நல்லாசிகள் தருவார் என்ற நம்பிக்கையான கருத்த்தைக் கண்டும் மனம் மகிழ்வடைந்தேன். கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். உலகில் அனைவருக்கும் என்றும் நல்லதே நடக்கட்டும். அவ்வாறே இறைவன் அருள் புரியட்டும். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. துளசி தேவி பற்றி அறிந்தேன்.  அன்னை அருள் புரியட்டும்.  நேற்று பாஸின் சித்தப்பா அலைபேசி துளசிதளங்களுக்கு (குறிப்ப்பிட்ட எண்ணிக்கை) ஆராதனை செய்யச் சொன்னார்.  செய்தார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      பதிவை ரசித்திருப்பதற்கு மிக்க மன மகிழ்வுடனான நன்றி. தங்கள் வீட்டிலும் தங்களது பாஸ் துளசி தேவிக்கு பூஜைகள் செய்திருப்பது அறிந்து மிகவும் சந்தோஷமடைந்தேன். துளசி தேவியின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. சின்ன வயசில் செய்த துளசி பூஜைகள் எல்லாம் நினைவில் வந்தன. கல்யாணம் ஆனப்புறமா மாமியார் துளசி பூஜை எல்லாம் செய்யக் கூடாது எனத் தடுத்துவிட்டார். அங்கே கிராமத்தில் இருந்தவரை மனதுக்குள்ளே துளசி ஸ்லோகத்தைச் சொல்லிக்கொள்வது ஒன்றே வழி. பின்னர் குடித்தனம் வைத்ததும் ஒரு பெயின்ட் டப்பாவில் நம்மவர் துளசியை வைச்சுக் கொடுத்தார் மாமியாருக்குத் தெரியாமல் அவசரம் அவசரமாக மஞ்சள், குங்குமம் வைத்து பூப்போட்டு வழிபட்டுப் பின்னர் சுற்றுச்சுவரின் மேலே வைக்கச் சொல்லிடுவேன். எப்படியோ பார்த்துட்டார். அக்கம்பக்கம் குடியிருந்த மராட்டிக்காரங்களை அழைத்துத் துளசியை எடுத்துப் போகச் சொல்லி விட்டார். ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனால் துளசியின் தயவில் எங்களுக்கு ராஜஸ்தான் மாற்றல் ஆக அங்கே அரசாங்கக்குடியிருப்பு என்றாலும்மாடத்துடன் கூடிய துளசிச் செடி இருந்தது. மாமியார் அங்கே வர முடியாது என்பதால் தினம் இருவேளை பூஜை செய்து விளக்கும் ஏற்றுவேன். மறுபடி தமிழ்நாடு வந்ததும் மறுபடி விட்டுப் போச்சு. பின்னர் மாமியாரே துளசிச்செடியை ஒரு தொட்டியில் வைத்து வழிபட ஆரம்பித்தார். அவங்க பார்க்காத நேரத்திலே நானும் வழிபட்டுப்பேன். பின்னர் என் கணவரே துளசி மாடம் கட்டியும் கொடுத்தார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஒரு துளசிச் செடி வைத்து பூஜை செய்ய இத்தனைத் தடைகளா என தங்களின் கருத்துக்களைப் படிக்கும் போது வியப்பாகவும், அதே சமயம் மிகவும் வருத்தமாகவும் இருந்தது. ஏன் துளசி பூஜை செய்ய இத்தனை தடைவிதித்தார் தங்கள் மாமியார் என்பது தெரியவில்லை.? பின்பு அவரே அந்த வழிபாட்டை செய்து கொள்ளவும் சம்மதித்தார் என்பது மகிழ்ச்சியே!! ஆனாலும் நமக்கு அதில் ஏதாவது பிரச்சனைகள் வருமோ என்ற எண்ணம் வந்த பிறகு அதில் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியாதுதான்.

      இப்போது தங்கள் வீட்டில் துளசி செடி வைத்து பூஜை கள் செய்வது மகிழ்ச்சியே.

      எங்கள் அம்மா வீட்டில் நான் பிறந்ததிலிருந்து விபரம் தெரிந்த பின் இந்த வழிபாடு பாட்டியும், அம்மாவும் செய்வார்கள். எனக்கும் சிறுவயதிலேயே இந்த துளசி ஸ்தோத்திரம் சொல்லித் தந்து நானும் துளசி மாடத்தைச் சுற்றி இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுவேன். வருடாவருடம் துளசி திருமணம் செய்வீர்கள்.

      என் திருமணத்திற்குப் பின் புகுந்த வீட்டில் (வாடகை வீடு) இதெல்லாம் சாத்தியபடுவதில்லை. தினமும் குளித்த பின் விளக்கேற்றி விட்டு இந்த துளசி ஸ்லோகம் மட்டும் சொல்வேன். இப்போது வரை பிறந்த வீட்டில் செய்தித் போல் விமர்ச்சையாக பூஜை செய்ய இயலவில்லை.

      இங்கு (பெங்களூர்) அனைவருமே இந்த நவம்பரில் வரும் துளசி கல்யாணத்தை நன்கு தீபாவளி போல வெடியெல்லாம் வெடித்து விமர்ச்சையாக கொண்டாடுகின்றனர். ஸ்ரீ ராகவேந்திரர் துளசி மாடத்தில் ஜீவ சமாதியடைந்ததால், இங்கு சிறப்பாக இந்த துளசி பூஜை செய்கின்றனர். அனைவருக்கும் இறைவன் நல்லதையே நடத்தித் தரட்டும். எனக்கும் வீட்டில் துளசி செடி வைத்திட ஆசை உள்ளது. தற்போது உள்ள பால்கனியில் வைத்தால் நன்றாக வளருமா என்ற ஐயம் வேறு உள்ளது. ஏனென்றால் மூடிய கண்ணாடி கதவுகளினால் துளசிச் செட்டி பட்டுவிடக் கூடாதில்லையா? அது வேறு மனதிற்கு கஸ்டத்தைத் தரும். செடி வைப்பதைக் குறித்து யோசிக்க வேண்டும்.

      தங்களின் நல்லதொரு கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. சிகிந்திராபாதில் இருந்தப்போக் கூட வீட்டுக்காரங்க துளசி மாடம் வைச்சிருந்தாங்க. தினமும் வழிபடுவேன்.போகிற இடத்தில் எல்லாம் எப்படியோ துளசி கிடைச்சாலும் சொந்த வீட்டில் வைக்கப் பல வருஷங்கள் காத்திருக்கும்படி ஆனது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் துளசி செடியும் தொடர்ந்து வந்துள்ளது என்பதை அறிந்தேன்.
      பூஜைகளும், ஸ்லோகம் செய்து தெய்வ வழிபாட்டில் வழிபடுவதும் அவரவர் விருப்பந்தானே...! என்னவோ இப்படி சில கட்டுப்பாடுகளை நானும் என் திருமண வாழ்க்கைக்குப் பிறகு சந்தித்திருக்கிறேன். உங்களுக்கும் எனக்கும் இப்படியான சில ஒற்றுமைகள் இருந்திருக்கின்றன.

      /போகிற இடத்தில் எல்லாம் எப்படியோ துளசி கிடைச்சாலும் சொந்த வீட்டில் வைக்கப் பல வருஷங்கள் காத்திருக்கும்படி ஆனது/

      எப்படியோ துளசி தேவி தங்கள் இல்லம் நாடி வந்தருளினாளே..! அந்த வரையில் ஷேமம். இறைவன் நல்லருளினால் இனி தங்கள் உபாதைகள் குறைந்து தங்கள் மகளும் உடல்நல பாதிப்புக்கள் ஏதுமின்றி நலமாக இருக்க துளசி அன்னையை வேண்டிக் கொள்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. ஸ்ரீ துளசியம்மா ஸ்தோத்திரம் சிறு வயதிலிருந்தே வீட்டில் எல்லோரும் சொல்வோம். அம்மா சொல்லி கொடுத்தார்கள்.
    பதிவும், பாடல் பகிர்வுக்கு நன்றி. தெரியாதவர்களுக்கு உதவும். பெருமாள் படம் மிக அருமை.
    துளசி கல்யாணம் இப்போது சிறப்பாக சில இடங்களில் நடந்து வருகிறது.

    உங்கள் பதிவை படிக்க முடியவில்லை. திருநெல்வேலி பயணம் .

    சின்னமாமியார் இறைவனடி சென்று விட்டார்கள் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைத்தான் காணவில்லையே என நினைத்திருந்தேன். வேறு ஏதாவது வேலைகளோ , இல்லை உறவினர்கள் வருகையோ என நினைத்தேன் ஆனால் மறுபடியும் ஒரு சுற்றத்தின் இழப்பு தங்களை பாதித்தது கண்டு வருத்தமடைந்தேன். அவர்களின் (தங்கள் சின்ன மாமியார்) ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு இவ்வுலகில் வந்த வேலை முடிந்ததும் இறைவன் அழைத்துக் கொண்டு விட்டான். வேறு என்ன சொல்வது?

      நீங்களும் துளசி ஸ்தோத்திரம் சின்ன வயதிலிருந்தே சொல்லி வருவது மகிழ்ச்சி. இது அந்த காலத்தில் அனைவருமே தங்கள் வீட்டில் கற்றுக் கொள்வதுதான்.. ஆம். இப்போது துளசி அம்மன் பூஜை அனைவருமே மேற்க் கொள்கிறார்கள். அனைவரையும் அம்மன் தன்னருளினால் காக்கட்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete