Wednesday, January 12, 2022

இட்லி புராணம்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.  

உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டாலும், நாம் உண்ணும் உணவுகள், நாட்டுக்கு நாடு, மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபட்டிருந்தாலும், நம்மை பொருத்த வரைக்கும் எது உடம்புக்கு கெடுதல் செய்யாதது எனப் பார்த்தால் அது இந்த இட்லிதான். நம் வீட்டில் மட்டுமல்ல.  அனைவரின் வீடுகளிலும், சின்ன குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், எளிதில் ஜீரணமாகும் உணவு. ஆனால்  இந்த உணவு நாகரீகம் தொட்டு இப்போது அனைவருக்கும் பிடிக்காத உணவாகப் போய் விட்டது. 


அந்த காலத்தில் பொதுவாக "இன்று உங்கள் வீட்டில் காலை என்ன உணவு"?  எனக் கேட்டால் இதன் பெயரைத்தான் சொல்வார்கள். பிறகு நாகரீகம் பரவ பரவ இட்லி தோசையானது. அதன் பின் சில வீடுகளில், "இட்லியா? பயங்கர போர்.. தோசை அல்லது, வேறு ஏதாவது சிற்றுண்டி செய்தால்தான் எங்கள் வீட்டில் பிடிக்கிறது. தினமும் இட்லியென்றால், அதாலேயே நான் அடி வாங்க வேண்டியதுதான்"  என அலுத்துக் கொள்ளுவார்கள். 



இந்தப் படம் மட்டும் பதிவுக்காக கூகுளில் எடுத்தது.  
நன்றி கூகுள். 

இட்லி பாத்திரத்தில் துணிகட்டி இட்லி வார்த்தால் அது எப்போதுமே நல்ல ருசியாக இருக்கும். அதுவும் கல்லுரலில் அரிசியையும் அதற்கேற்றவாறு  (அரிசி நாலுக்கு பருப்பு ஒன்று என்ற கணக்கில்)  உ. பருப்பையும் அரைத்தெடுத்து தேவையான உப்பு போட்டு கலந்து வைத்து, மறு நாள் காலை மாவு பொங்கி வந்ததும், விறகடுப்பில் அதற்கென்றிருக்கும் இட்லிி கொப்பரையில்/வாணலியில் துணி கட்டிய இட்லி தட்டுக்களில் வார்த்த  இட்லி  வாசனையாகவும், அவ்வளவு  மென்மையானதாகவும், இருக்கும் 

அத்தகைய இட்லி தட்டுகள் வார்க்குமிடத்தில் சிறு சிறு துவாரங்களுடன் இருக்கும். அந்த துவாரத்தில் துணியின் உதவியுடன் நீராவியில் வேகுவதால், இந்த இட்லி நோயாளிகளுக்கு கூட மருந்தாக இருந்து உதவும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கால்வாசி இந்த உணவுதான் அன்றைய காலத்தில் பரிந்துரைக்கப்படும். 

எங்கள் அம்மா காலத்தில் அவருடைய ஒரு விபரமறியாத உறவுச் சிறு பெண் ஒருவர்  தன் திருமணத்திற்கு  ( அந்த காலத்தில் பன்னிரண்டு, பதிமூன்று வயதிற்குள் திருமணமாகி விடுமே...!! ) பின் புகுந்த வீடு சென்றதும். அங்குள்ள நிர்பந்தத்திலும் , சமையலில் அவ்வளவாக  அனுபவமில்லாத காரணத்தாலும்,  இட்லி தட்டுக்களில் துணி கட்டாமல் இட்லி வார்த்து விட்டாராம். சிறிது நேரத்தில் இட்லி வெந்துள்ளதாவென கொப்பரையை திறந்து பார்த்த பின் அவருக்கு ஒரே அதிர்ச்சி. இட்லி தட்டுக்களில் ஊற்றிய மாவெல்லாம் காணாமல் போய், கூழாக வடிவெடுத்து இட்லி பாத்திரத்தில் கொதித்து கொண்டிருக்க ... பிறகு என்ன ....!! வழக்கப்படி அவரது தாய்க்கு அந்தப் பெண் மணமாகி சென்ற வீட்டில் அர்ச்சனைகள்... பாவம் அவர்....!! என எங்கள் அம்மா அச்சம்பவத்தை சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். 

அதன் பிறகு காலங்கள் வளர வளர, இந்த இட்லியை துணிகட்டி வார்ப்பது, பிறகு அதை சுத்தப்படுத்துவதுதான் இட்லி என்ற உணவை ரசிக்க வைக்கவில்லையோ என இட்லி வார்க்கும் தட்டில் புதுமைகள் வந்தன.  துவாரங்கள் இல்லாத தட்டுக்களில் சிறிது ந. எண்ணெய் தடவி அப்படியே அதில் மாவை ஊற்றி அடுக்கடுக்காக அடுக்கி ஒரே சமயத்தில் இருபது முப்பது இட்லிகளுக்கும் மேலாக வார்க்கும் தட்டுக்கள் விற்பனைக்கு வந்தது. அது மக்களை ஈர்க்கவே மறுபடி இட்லி அனைவருக்கும் பிடித்தமானதாக உலா வந்தது. 

அப்படியும் இந்த மாதிரி இட்லி தட்டுக்கள் வந்தும், என் குழந்தைகள் காலத்தில் ஒரே மாதிரி அளவுள்ள எவர்சில்வர் கிண்ணங்களிலோ , சின்ன டம்ளார்களிலோ எண்ணெய் தடவி விதவிதமான வடிவங்களில் அவர்களுக்கு இட்லி செய்து தந்திருக்கிறேன். அவர்களும் வழக்கத்துக்கு மாறாக இருக்கக் கண்டு அதை விரும்பி சாப்பிட்டுள்ளனர். 


இது எங்கள் வீட்டில் குழந்தைகளுக்காக வாங்கிய குட்டித் தட்டுகள்.
 
பிறகு நாளாவட்டத்தில்,அந்த இட்லிகளும்  பிற மேல்நாட்டு உணவுகளால், ஒதுக்கப்பட ஆரம்பிக்கவே, குழந்தைகளை கவரும் விதத்தில் சின்னச்சின்ன இட்லி தட்டுக்கள் என பார்க்கவே விதவிதமாக  அளவுகளில் அழகாக இட்லி தட்டுக்கள் வந்தன. வேறு வழியில்லாமல் அவர்களது குழந்தைகளுக்காக மீண்டும் இட்லிகள் தனது பயணத்தை தொடர்ந்தன.  சில உணவகங்களில் கூட இந்த இட்லிகள் பிரசித்தமாகியது.  ( நான் கூட சென்னையிலிருந்து சுற்றிச் சுற்றி இடம் பெயர்ந்து இங்கு வந்த பின் ஒரு தடவை மீண்டும் சென்னை சென்ற போது சாம்பாரில் மூழ்கி பவனி வந்த இந்த குட்டி இட்லிகளை விரும்பி ஒரு தடவை சாப்பிட்டுள்ளேன்.) ஆனாலும் இப்போது, மறுபடியும்  பல நாகரீகமான உணவுகள் மக்களை  ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டதால், குழந்தைகள் கூட எந்த வடிவத்தில் இட்லி என்றாலும் முகஞ்சுளிக்க ஆரம்பித்து விட்டனர்.

 ( இந்த இடத்தில் ஒன்று சொல்லப் பிரியப்படுகிறேன்.எங்கள் பிறந்த வீட்டில் தினமும் காலை ஆகாரம் இட்லிதான். சோம்பலில்லாமல் அம்மா, பாட்டி உடம்புக்கு நல்லதென இதை ஒரு கடமையாகவே செய்தார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை தோசை, அடை, உப்புமா வகைகள் என வந்தால் அதிசயந்தான். இப்படியே பிறந்ததிலிருந்து பத்தொன்பது வயது வரை தினமும் இட்லிகளை சாப்பிட்டிருப்பதால், நான் இன்றும் ஒரு இட்லி பிரியை.:))))  ) 


இது அந்த குட்டித் தட்டில் வார்த்து வேக வைக்க தயாரான இட்லிகள்

இதன் வடிவங்கள் எப்படி மாறினாலும் அதன்  சுவை ஒன்றுதானே. !!! 
இதற்கு அம்மியில் அரைத்த தேங்காய், பச்சை  மிளகாய் சட்னி, இல்லை, தக்காளி வெங்காய சட்னிகள், இல்லை கொத்தமல்லி சட்னி. இல்லை இஞ்சி துவையல் என அனைத்தும் பொருத்தமாக இட்லியுடன் இணைந்து அதை நன்றாக சுவைத்து சாப்பிடச் செய்யும்.  ( இந்த நாலுமே இருந்தாலும் தப்பில்லை என்போரும் உண்டு. அவர்கள் இந்த இட்லியை விருப்பமுடன் விரும்புபவர்கள்.) பிறகு சாம்பார்,.. அதுவும், சின்ன வெங்காயம் தக்காளி இவற்றுடன் மணக்கும் சாம்பார் வேண்டுமென்ற கோரிக்கைகள் பல வீடுகளில் உதயமாகி அதுவும் இட்லியுடன் கோலோச்சி வந்தது/வருகிறது.  ஆனால், இத்துடன் இட்லி மிளகாய் பொடி என்ற ஒன்று கண்டிப்பாக இதனுடன் இணைய வேண்டும். ஏனெனில் இது "இட்லி" என்ற அதன் முழுப்பெயரையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட பெருமையை உடையது. அதனால்  சிலருக்கு மற்றவைகளை சற்று வேண்டாமென ஒதுக்கினாலும் இதை (இ. மி. பொ) முதலிடத்தில் வைத்துக் கொள்ளப் பிடிக்கும்.  

"தப்பு..!  தப்பு!! இது தோசை மி. பொடி. அதன் பெயரை மாற்றி அந்த இட்லி அந்தப் பொடியை தன் பெயருடன் இணைத்து தனதாக்கி கொண்டு விட்டது" என்று தோசை "பொடி வைத்து" சொல்லலாம். ஏன்.. பேச்சோடு சண்டைக்கு, அதன் மேலும் கைகலப்புக்கு கூட வரலாம்... :)))) எது எப்படியோ...!! இந்தப் பொடியுடன் ந. எண்ணையை கலந்து இட்லியை அதில் புரட்டி ஊற வைத்து சாப்பிடுவதே  சாப்பாட்டின் ஒரு கலையென வாதிடுபவர்கள் கண்டிப்பாக உண்டு.
 

இது அன்றைய தினம் இந்த குட்டி இட்லிக்காக அவசரமாக தயார் செய்த இ.மி.பொ. 

முறையே ஒரு கரண்டி இரு கரண்டியென க. ப, உ. பவுடன் "கொஞ்சம் சீக்கிரம்" என படபடக்கும் கடுகுடனும் அவசரமாக ரெடியாகிறது. 


"நான் இல்லாமலா? இட்லி என்ற பெயர் எங்களுடன் இணைவது இருக்கட்டும்....!! அடுத்து நான் இல்லாமல் இதற்கு இ. மி. பொ என்ற முழுப்பெயரும் கிடைத்து விடுமா என்ன?" சற்றே ஆணவச் சி(வ)ரிப்புடன் கேட்கும் மிளகாய்கள். 


"எப்போதுமே முதலில் நான்தான்" என்ற அதே சி(வ)ரிப்புடன் மிக்ஸி என்ற ராட்டினத்தில் ஏறிய மிளகாய். கூடவே அது அழைத்ததும் பாரபட்சம் பார்க்காமல் வெள்ளை மனதுடன் வந்து உடனமர்ந்த உப்பு." 


"இந்த எள் இல்லாவிடில்  என் ருசியை அவ்வளவாக நான் தரமாட்டேன் என்று சொல்லி இ. மி. பொடி சுவை தர மறுத்து விடும்." எனவே அந்த அவசரத்தில் எள்ளை ஊற வைத்து களைந்து அதையும் சேர்த்து விடலாம் என்ற என் நினைப்புடன் அதை நிறைவேற்றியதும், வந்து அதிகாரமாக அமர்ந்திருக்கும் எள். 


எல்லாமுமாக சேர்ந்து தயாராகி  "இட்லிகள் எங்கே. .? " என அதை பார்க்கும் தவிப்பில் இருக்கும் இ. மி. பொடி. 


குட்டி குட்டி இட்லிகளுடன் அதன் துணையாகிய இ. மி. பொடியும் சேர்ந்த களிப்பில் போதுமான எண்ணெய்யும்  கலந்த மினுமினுப்புடன்  பெருமிதமாக நாம் அட்சதை தூவ காத்திருக்கும் காலை உணவு.. 

இனி என்ன..!!! உங்களுக்கும் இந்த இட்லி பிடித்திருந்தால் தாராளமாக எடுத்து சாப்பிடலாம். 

இவ்வருட முதலில் காலை ஆகாரத்திற்கேற்ற இட்லி பதிவை அலசி ஆரம்பித்திருக்கிறேன். பதிவை ரசித்தவர்களுக்கும், ந. எண்ணெய் சேர்ந்த  இட்லி மிளகாய் பொடியுடன் இட்லிகளை எடுத்து பிடித்தோ/பிடிக்காமலோ சாப்பிட்டவர்களுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். 🙏.

அனைவருக்கும் அட்வான்ஸ் போகிப்பண்டிகை, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். 

56 comments:

  1. இட்லி புராணம் சுவையாக...ஓரளவுக்கு மேல் கடைகளில் கலப்படம் செய்ய முடியாத உணவும் இட்லிதான் இல்லையா..

    ReplyDelete
    Replies
    1. அதுலதான் ஜவ்வரிசி, பழையசாதம் என்று கலப்படம் களைகட்டி பல வருஷங்களாகிறதே சார்

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான். கலப்படம் இல்லாத உணவு என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும், உணவகங்களில் இட்லியை விரும்பி சாப்பிடுகிறவர்கள் நிறைய பேர் உள்ளனரா என்பது தெரியவில்லை.

      இட்லி புராணம் நன்றாக உள்ளதென்ற கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      /அதுலதான் ஜவ்வரிசி, பழையசாதம் என்று கலப்படம் களைகட்டி பல வருஷங்களாகிறதே சார்/

      ஓ.. இது வேறா? எல்லாவற்றிலும் கலப்படந்தான். உணவகங்களில் தேங்காய் சட்னியில்தான் (கால்நடைகளின் தீவனம்) கலப்படம் என ஏற்கனவே அறிந்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இட்லி என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். அதிலும் மி.பொடி தடவின இட்லி ஆஹா...

    எனக்கு இட்லியை எடுக்கும்போதே, மி.பொடியுடன் ரெடியாக இருக்கும் தட்டை நீட்டிச் சாப்பிடத்தான் பிடிக்கும். துணிபோட்டு வார்க்கும் இட்லியில் சூடு அதிக நேரத்திற்கு இருக்கும். இட்லித்தட்டில் வார்க்கும் இட்லி உடனே சூடு குறைந்துவிடும்.

    பயணத்துக்கு மி.பொடி தடவின இட்லிபோலத் துணைவன் கிடையாது.

    நல்ல பதிவு. நேற்று என் மனைவி செய்த மி.பொடி சூப்பராக இருந்தது. இட்லி கொஞ்சம் சரியாக வரலை.

    தட்டில் இட்லிகள் மி.பொடி பார்க்கவே சூப்பராக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சென்ற பதிவு, ஸாரி சென்ற வருடத்திய இறுதி பதிவு இனிப்புடன் முடித்திருந்தேன். அதற்கு உங்களை காணவில்லையே என நினைக்கும் போது நீங்கள் இப்போதெல்லாம் இனிப்பை புறக்கணிப்பதாக தெரிந்தது. சரி..!இந்த காரமான இ.மி.பொ. பதிவுக்கு வருவீர்கள் என நம்பினேன். அதன்படி வந்து உடனடியாக வந்து பதிவை சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      ஆம்.. துணியில் வார்த்த இட்லிகள் கொஞ்ச நேரம் வரை சூடாகவே இருக்கும். பயணத்திற்கு இதுவும், புளியோதரையும் நல்ல சுவை குறையாத தகுந்த உணவு.

      நேற்று உங்கள் மனைவி செய்த இ.மி.பொ நன்றாக வந்திருப்பதற்கு வாழ்த்துகள்.

      இட்லியுடன், மி.பொடியும் கலந்த காலை உணவு நன்றாக இருப்பதாக சொன்ன பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மி.பொடி தயார் செய்யும் படங்களில் பெருங்காயத்தைக் காணோமே என்று நான் மட்டும்தான் கவனித்திருப்பேன் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா. நான்தான் சொன்னேன்..! இது எங்கள் வீட்டில் அன்று நேயர்கள் விருப்பத்திற்கு அவசரமாக அதுவும் கொஞ்சமாக தயாரித்த இ.மி. பொடி என்று. அதில் படங்கள் வேறு எடுத்து நேயர்களை கடுப்பேத்தி வேறு கொண்டிருந்தேன்.

      பெருங்காயப் பொடி பருப்புகளுடன் வறுபட்டு முதலிலேயே சேர்ந்திருப்பதை நானே சொல்ல தவறி விட்டேன். ஆனால் அது பெருங்காயப்பட்டதை நான் சொல்லாமல் விட்டதை கவனித்திருக்கும் இப்போது நீங்கள் சொல்லி வருத்தப்பட்டதைப் பார்த்து ஒரு விதத்தில் சந்தோஷமும் அடைந்திருக்கும்.:)) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. தொந்தரவு செய்யாது என்பதில் முதன்மை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தொந்தரவு செய்யாது என்பதில் முதன்மை.../

      ஆமாம். உண்மை.. எளிதில் ஜீரணமாகும் உணவு. நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. All time favourite உணவு என்றால் இட்லி தான் அதுவும் மிளகாய் பொடியோடு.... வருடத்தின் முதல் பதிவு இட்லியுடன் தொடங்கியிருக்கிறது... மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /All time favourite உணவு என்றால் இட்லி தான் அதுவும் மிளகாய் பொடியோடு.. /

      நன்றி. நன்றி உங்களுக்கும் இந்த உணவு பிடித்தமானது என்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

      இவ்வருடத்தின் முதல் பதிவுக்கு தாங்கள் வந்து நல்லதொரு கருத்தாக தந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இட்லியை விரும்பாதவர்கள் உண்டா ?
    படங்களோடு விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இட்லியை விரும்பாதவர்கள் உண்டா ?/

      ஆகா.. நீங்களும் என் தேர்வின் சார்பாக பதில் கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      படங்களோடு பதிவை ரசித்தமைக்கும், பதிவு நன்றாக உள்ளதென கூறியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கமலாக்கா எப்போதுமே என் ஃபேவரைட் இட்லி!! வயிற்றிற்கு ஒன்றும் செய்யாத பதார்த்தம். அதுவும் உடம்பு சரியில்லாத போதுகூட பரிந்துரைக்கப்படும் உணவு!!

    //இட்லி பாத்திரத்தில் துணிகட்டி இட்லி வார்த்தால் அது எப்போதுமே நல்ல ருசியாக இருக்கும். அதுவும் கல்லுரலில் அரிசியையும் அதற்கேற்றவாறு (அரிசி நாலுக்கு பருப்பு ஒன்று என்ற கணக்கில்) உ. பருப்பையும் அரைத்தெடுத்து தேவையான உப்பு போட்டு கலந்து வைத்து, மறு நாள் காலை மாவு பொங்கி வந்ததும், விறகடுப்பில் அதற்கென்றிருக்கும் இட்லிி கொப்பரையில்/வாணலியில் துணி கட்டிய இட்லி தட்டுக்களில் வார்த்த இட்லி வாசனையாகவும், அவ்வளவு மென்மையானதாகவும், இருக்கும் //

    இப்படி ஆசையைக் கிளப்பிட்டீங்களே. இப்போதும் நான் துணி இட்லி செய்வதுண்டு. இப்போது இருக்கும் வீட்டில் சிறிய உரல் அடுக்களையிலேயே தரையில் பதித்தது இருக்கு என்பதால், கரன்ட் போனால் அதில் அரைப்பதுண்டு. ஆனால் எப்போதும் செய்வது இல்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இட்லி பதிவை ரசித்து நீங்கள் தந்துள்ள கருத்துரைகள் கண்டு என் மன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான்தான் ஒவ்வொன்றுக்கும் தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும். உடன் பொங்கல் வேலைகளில் இரு தினங்கள் அவகாசமின்றி ஓடி விட்டது.

      /இப்போதும் நான் துணி இட்லி செய்வதுண்டு. இப்போது இருக்கும் வீட்டில் சிறிய உரல் அடுக்களையிலேயே தரையில் பதித்தது இருக்கு என்பதால், கரன்ட் போனால் அதில் அரைப்பதுண்டு. ஆனால் எப்போதும் செய்வது இல்லை./

      நல்லது.. துணி கட்டி அதில் செய்தால் சுவையாக இருக்கும். நானும் திருமங்கலம் வரை ஒரு சின்ன கல்லுரலை வைத்திருந்தேன். சென்னையில் வாங்கி அதையும் திருமங்கலத்திற்கு கொண்டு வந்தேன். இங்குதான் அதை எடுத்து வர வீட்டில் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. சங்கிலி அமைந்த பெரிய கிரைண்டரையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம். அதனுடன் அங்கு வாங்கிய டேபிள் கிரைண்டர் மட்டும் இங்கே கொண்டு வந்தோம். ஒவ்வொன்றும் ஒரு விதம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. வழக்கப்படி அவரது தாய்க்கு அந்தப் பெண் மணமாகி சென்ற வீட்டில் அர்ச்சனைகள்... பாவம் அவர்....!! என எங்கள் அம்மா அச்சம்பவத்தை சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். //

    பாவம் அப்பெண். குட்டிப் பெண். சொல்லிக் கொடுத்தால் ஆயிற்று எதற்குத் திட்ட வேண்டும். என்னவோ..இப்படியும் காலம் மனிதர்கள்

    பாட்டியின் நினைவு வந்தது கமலாக்கா அவர் வார்க்கும் இட்லி இப்படித்தான். நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்புறம் குக்கர் இட்லி ஆனது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்ன செய்வது? அந்த காலத்து மனிதர்கள் இப்படித்தான்..!! சில வீடுகளில் முகத்துக்கு நேராகவே வார்த்தைகளை வீட்டுப் பெரியவர்கள் சமயத்தில் சொல்லி விடுவார்கள்.

      /பாட்டியின் நினைவு வந்தது கமலாக்கா அவர் வார்க்கும் இட்லி இப்படித்தான். நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்புறம் குக்கர் இட்லி ஆனது./

      ஆமாம் . நம் பாட்டிகளுக்கு இருக்கும் பொறுமை அளவிட முடியாதது. எனக்கும் இந்த மாதிரி எப்போதும், எல்லா விஷயத்திற்கும் என் பாட்டியின் நினைவுகள் வந்து கொண்டேதான் இருக்கும். இப்போது எங்கள் வீட்டிலும், இந்த குக்கர் இட்லிதான்.

      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. இதற்கு அம்மியில் அரைத்த தேங்காய், பச்சை மிளகாய் சட்னி, இல்லை, தக்காளி வெங்காய சட்னிகள், இல்லை கொத்தமல்லி சட்னி. இல்லை இஞ்சி துவையல் என அனைத்தும் பொருத்தமாக இட்லியுடன் இணைந்து அதை நன்றாக சுவைத்து சாப்பிடச் செய்யும். //

    அம்மியில் அரைத்தது செம சுவையாக இருக்கும் கமலாக்கா..

    எங்கள் பிறந்த வீட்டிலும் இட்லிதான் அடிக்கடி. தோசைக்கு எண்ணை கட்டுப்படியாகாது என்பதால்...கூட்டுக்குடும்பம் என்பதால்..அப்படி

    குட்டி இட்லிகள் சாம்பாரில்//

    நம் வீட்டிலும் இது ரொம்பப் பிடித்த விஷயம் குட்டி இட்லி தட்டு இருக்கிறது. நீங்கள் சொல்லி இருப்பது போல என் மகனும் வளர்ந்து வந்தப்ப வித விதமான ஷேப் களில் இட்லி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் சகோதரி. அம்மியில் அரைக்கும் சட்னிகள், துவையல், சாம்பார் மசாலாக்கள், கூட்டு, மோர்க்குழம்புக்கு அரைப்பது என எதுவுமே சுவையுடன் இருக்கும். மிக்ஸியில் அது ஒரு மாதிரிதான். ஆனால் இப்போது அம்மியும் இல்லை அதில் அரைக்கவும் முடியவில்லையே..!!!!என்ன செய்வது? காரணம், சொகுசு வாழ்க்கைக்கு நம் உடம்பு பழகி விட்டது.

      ஆமாம்... சாம்பாரில் ஊறிய இட்லிகள் எப்போதுமே நன்றாக இருக்கும்.

      நீங்களும் உங்கள் மகனுக்கு விதவிதமான வடிவங்களில் இட்லி வார்த்து தந்துள்ளீர்கள் என்பதறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கு ஒரே ஷேப்பில் தினமும் தந்தால் போரடிக்கும் இல்லையா? தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. நேற்று இது ஒன்று மட்டும் பதிலளிக்க எப்படியோ விட்டுப் போச்சு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அது போல பொடி இட்லி, மசாலா இட்லி, சட்னி இட்லி, கறிவேப்பிலைப் பொடி இட்லி, வெஜிட்டபிள் இட்லி, தயிர் இட்லி என்று குட்டி இட்லி வைத்தோ, பெரிய இட்லியை துண்டுகளாக்கியோ செய்வதும் உண்டு. தட்டே இட்லியும்!! அது தனி டெக்சர்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அது போல பொடி இட்லி, மசாலா இட்லி, சட்னி இட்லி, கறிவேப்பிலைப் பொடி இட்லி, வெஜிட்டபிள் இட்லி, தயிர் இட்லி என்று குட்டி இட்லி வைத்தோ, பெரிய இட்லியை துண்டுகளாக்கியோ செய்வதும் உண்டு. தட்டே இட்லியும்!! அது தனி டெக்சர்./

      ஆமாம் . இந்த இட்லிகள் பல அவதாரங்களில் வாய்க்கு ருசியை தருவதுதான். நானும் இங்கு தட்டே இட்லி சாப்பிட்டிருக்கிறேன். எங்கள் அம்மா அப்போது பிறந்த வீட்டில் ஒரே ஒரு இட்லி தட்டில் ஒரே ஒரு இட்லி பெரிதாக வார்ப்பார்கள். அதுவும் இந்த தட்டே இட்லியை நினைவுபடுத்தும். அது ஒரு இட்லிதான் சாப்பிட முடியும்.என் அப்போதைய வயதில் அதில் பாதிதான் சாப்பிடுவேன். உங்கள் அனைத்து கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. இட்லி மிளகாய்ப் பொடி ஆஹா அந்த காம்பினேஷன் எங்கள் வீட்டில் ஆல் டைம் ஃபேவரிட்.

    இப்போது கூட மகன் அம்மா பார்சல் முழுசும் இட்லி மிளகாய்ப் பொடி அனுப்பும்மா சட்னு தீர்ந்து போய்விடுகிறது என்று சொல்லியிருந்தான்!!!

    பயணத்துக்கு ஏற்ற பதார்த்தம் இதுதான்!!! பொடி தடவிய இட்லி!!!

    ரசித்து வாசித்தேன் கமலாக்கா. உங்கள் இட்லியும் மிகளாய்ப்பொடியும் ஈர்க்கிறது!! சூப்பர் போங்க. வருடத் துவக்கம் அருமையான இட்லி!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வெறும் இட்லி பதிவா என எண்ணாமல் இத்தனைப் பின்னூட்டங்கள் அளித்து என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்து விட்டீர்கள்.(அதனால்தான் நேற்று உங்கள் பதிவில் அனைத்திலும் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் என்று குறிப்பிட்டேன்.)

      இட்லிக்கு துணையாக ஏராளமானவைகளை பயன்படுத்தி கொண்டாலும், இந்த மி. பொ இல்லையென்றால், அந்த இட்லியே முகங்சுளிக்க ஆரம்பித்து விடும்.:) அந்தளவிற்கு அவை இரண்டும் காலங்காலமாக பிரிக்கவியலாத ஒற்றுமை.

      உங்களுக்கும் இட்லி உடனுறை மி. பொ. பிடித்தமான உணவு என்பது மகிழ்ச்சியை தருகிறது.

      இந்தப் பதிவை ரசித்ததற்கும், உங்களது பாராட்டுகளுக்கும் என் அன்பான நன்றிகள் பல சகோதரி. உங்களது இதர கருத்துகளுக்கும் பிறகு பதில் தருகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. இட்லி புராணத்தை ரசித்தேன். இட்லி பிடிக்கும் உடலுக்கு மிக ஏற்றது. எனக்குத் தோசையும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்கள் பக்கங்களில் பொடி வைத்துச் சாப்பிடுவதில்லை.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இட்லி புராணத்தை ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      ஆம்.. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவு. எளிதில் ஜீரணமாவதும் கூட. தோசையும் அப்படித்தான்..! ஆனால் இரவு நேரம் சாப்பிட்டால் எனக்கு கொஞ்சம் செரிமான பிரச்சனை வரும். காலை உணவுக்கு எடுத்துக் கொண்டால் ஒன்றும் பண்ணாது. நீங்கள் இதற்கு மி. பொடி போன்றவைகளை சேர்த்துக் கொள்ளாமல், சட்னி, சாம்பாருடன் சாப்பிடுவீர்கள் என நினைக்கிறேன். அதுவும் நல்லதுதான்.. இந்த மி. பொடியும் அதிகம் எடுத்துக் கொண்டாலும் தொந்தரவு தரும். .! . எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே..! தங்களது அன்பான கருத்துரைகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. நானும் பாஸிடம் இட்லிப் பாத்திரத்தில் துணி கட்டி இட்லி வார்க்கச் சொல்வேன்.  பெரும்பாலும் அவர் அப்படிச் செய்வதில்லை.  இப்போதுதான் மறுபடி குக்கரை விட்டு விட்டு இட்லி குண்டானுக்கு வந்திருக்கிறார்.  துணி வைத்து வார்ப்பதற்கும், அப்படியே வார்ப்பதற்கும் ஏனிந்த வித்தியாசம் என்று விளக்க முடியுமா?!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இப்போது உடல் நிலை நலமா? கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இன்றைய பதிவில் சென்று நலம் விசாரித்து விட்டு இப்போதுதான் வருகிறேன். ஆனால் தாங்கள் உடல்நிலை சரியில்லாத போதும், அதைப் பொருட்படுத்தாது என் பதிவுக்கு வந்து நல்ல கருத்துகளை தந்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்வடைந்ததோடு நன்றியையும் கூறிக் கொள்கிறேன். (மீண்டும் உடல் நிலை குறித்து நினைவுபடுத்துவதாக நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்த வரை இப்படி கலகலப்பாக இருப்பதையே நல்லது என்பேன். வீண் பயங்கள், கவலைகள் அகன்று விடும் என்ற எண்ணம் என் உடல்நிலை என்னை படுத்தும் போது எனக்கும் வரும்.)

      இட்லி பதிவை ரசித்து நீங்கள் கருத்திட்டிருப்பது கண்டு எனக்கும் உற்சாகமாக உள்ளது. நன்றி. நன்றி.

      நானும் முன்பெல்லாம் துணிகட்டிதான் இட்லி வார்ப்பேன். அம்மா வீட்டில் ஆரம்பத்திலிருந்து அந்த இட்லிகளை சாப்பிட்டு ருசி கண்டு வந்ததில் அப்படியே செய்து வந்தேன். அதற்கென ஒரு வாணலியும், இட்லி தட்டும் பயன்படுத்தினேன். அதில் ஏழு இட்லிகள் மட்டுமே வார்க்க முடியும். அது வேகும் ஒவ்வொரு ஈடுக்கும் நேரம் எடுக்கும் போது சாப்பிடும் அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளதால், குக்கரில் அடுக்கு தட்டை பயன்படுத்த வேண்டியதாகப் போயிற்று. அதன்பின் இட்லி செய்யும் அமைப்புகளில் மாறுதல்கள் பல வந்தன.( முதலில் வீட்டில் தினமும் இட்லிதானா என்றவர்களை சமாளிக்கவே பலவிதமான உணவுகளை மாறி மாறி செய்ய வேண்டியதில், துணியில் வார்த்த இட்லிகள் நாளடைவில் காணாமல் போயின.)

      நல்ல காட்டன் துணியின் சிறு துளைகளில் வழி இட்லி மாவு வேகும் போது மென்மையானதாக அமைகிறது. அதுவே எந்த மெட்டலிலும் துணி இல்லாமல் நேரடியாக வேகும் போது அது ஒரு விதமாக அமைந்து விடுகிறது. இந்த அடுக்கு இட்லி தட்டுக்களிலும் துணிகட்டி வார்க்கலாம் என வந்தது. அனைவரும் அதையும் பின்பற்றினார்கள். அது சரியாக வந்ததா என்பது சந்தேகமே.. இப்போதும் ஹோட்டல்களில் மின்சார அடுப்பில் அப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ருசியில் மாறுபடுகிறது. பொதுவாக மின்சார சூடு இல்லாத கையில் கல்லுரலில், அம்மியில் அரைக்கும் இட்லி மாவு, சட்னி போன்றவைகள் ருசியாகத்தான் இருக்கின்றன. ஆனால் நாம்தான் விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு அடிமையாகி விட்டோமே... ! என்ன செய்வது?

      தங்கள் அன்பான அனைத்து கருத்துகளுக்கும் மிக்க நன்றி. அனைத்திற்கும் பிறகு பதில் தருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. அதே போல கல்லுரலில் ஆட்டினால் மாவு நன்றாய் இருக்கும் என்பது நம் எண்ணம், பிரமையா?  நிஜமா?  கிரைண்டரில் மாவு அரைத்தால் நன்றாய் ஏன் இருப்பதில்லை என்று நினைக்கிறோம்?  நாங்கள் கிரைண்டரில் ஐந்துக்கு ஒன்று என்ற ரேஷியோவில் வைக்கிறோமே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா எல்லாமே புதன் கேள்விகளாய் வந்து என்னை தாக்குகிறது..:) கல்லுரலில் அரைக்கும் போது ஐந்து ஒன்று என்ற கணக்கில் போட்டேன். இப்போது அரைப்பது கிரைண்டரில்தான்.. இதுவும் நல்ல தரமான அரிசி உளுந்து அமைந்து விட்டது என்றால், அதே அளவுதான். சில சமயம் உளுந்தோ, அரிசியோ ஏமாற்றி விடும். அந்த கணக்கில் போட்டால் இட்லி கொஞ்சம் மிருதுவாக இருக்காது. அத்துடன் ஒரு பெரிய ஸ்பூன் வெந்தயமும் ஊற வைத்து அரைத்துச் சேர்த்தால் ஒரளவு நன்றாக வரும். ஊளுந்தும் எப்போதும் நிறைய வாங்குவதில்லை. மாதம் இரண்டு மூன்று கிலோதான்.. அது காலியான பிறகுதான் வேறு உளுந்து வாங்குவோம்.அந்த உளுந்து அடுத்த தடவை மாறி விடும். இப்போது ஆன்லைனில் டாட்டா பிராண்ட் வாங்குகிறோம். இது நன்றாக உள்ளது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. குட்டித்தட்டில் வேக வைத்த இட்லிகள் என்று சொன்னாலும் க்ளோசப்பில் படம் எடுக்கப் பட்டிருப்பதால் நார்மல் இட்லிகள் போலவே காட்சியளிக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. அது ஒருவேளை கண்ணு போட்டுவிடக்கூடாது என்பதற்காக க.ஹ. மேடம் சொல்லியிருப்பாரோ? ஹா ஹா.

      எனக்குலாம் சூப்பர் இட்லி மி. பொடி இருந்தால், மிகச் சூடான இட்லிகள் 8 என்ன... பத்தும் சாப்பிடுவேன். ஹி ஹி

      Delete
    2. /அது ஒருவேளை கண்ணு போட்டுவிடக்கூடாது என்பதற்காக க.ஹ. மேடம் சொல்லியிருப்பாரோ? ஹா ஹா./

      ஹா.ஹா. அது உண்மையிலேயே குட்டி இட்லிகள். ஸ்பூனில் மாவு எடுத்து வார்த்தேன் என்றால் நம்பவா போகிறீர்கள்.? அந்த இட்லி பதினைந்துக்கு மேல் சாப்பிட்டாலும் அன்று வயிறு நிரம்பவில்லை. நார்மல் தட்டில் வார்த்திருந்தால்,அத்தோடு நல்ல பசியும் இருந்தால் இந்த இட்லி பிரியைக்கு ஏழு,எட்டுக்கு மேல் உள்ளே போகாது. (இப்போதுதான் எனக்கு உண்மையிலேயே கண்ணு போட்டு விடுவீர்களோ என சற்றே பயமாக உள்ளது.:))))) நன்றி.

      Delete
  16. போச்சுடா..    டுத்த கம்பேரிசன் வந்து விட்டது.  நானும் அம்மியில் அரைத்த சட்னிகள் சாப்பிட்டிருக்கிறேன்.  ஏன், நானே அரைத்துமிருக்கிறேன்.  அவை எந்த வகையில் மிக்சியில் அரைப்பதை விட உசத்தி என்று நிறுவவும்!  (15 மார்க்)

    ReplyDelete
    Replies
    1. அம்மில சூடு வராது. அதனால சட்னி ருசியாக இருக்கும். ஒரு மணி நேரம் ஆனாலும் சூப்பரா இருக்கும்.

      மிக்சில, சூடு உணவில் ஏறுவதால் ருசி குறையும்.
      மிக்சில சட்னிக்கு அரைத்துவிட்டு அப்படியே மிக்சியில் வைத்திருந்தால் அது மங்கலான நிறத்துக்கு மாறிடும். அம்மியில் அப்படி மாறாது (எங்க அம்மா அரைப்பதைப் பார்திருக்கிறேன்). ஆனால் இப்போ சொல்லிப் பிரயோசனமில்லை. மாட்டு வண்டி பயணம், பைக்கைவிட நல்லா இருக்கும் என்று சொல்வதைப் போல.

      Delete
    2. பதில் திருப்தியாக இல்லையே...!

      Delete
    3. ஆகா.. போச்சா 15 மார்க்...? (எனக்குச் சொன்னேன்.) ஏனெனில் இதே போன்ற பதிலை தர நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஹா. ஹா. முடிந்தால் நாளை வேறு பதிலோடு வர முயற்சிக்கிறேன்.!! நன்றி சகோதரரே.

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      அம்மியில் அம்மிக்குழவி கொண்டு அரைக்கும் போது இரு கற்களுடையே மெதுவாக சாமான்கள் அரைபடுவதால் வறுத்த/வறுக்காத மற்றும் தேங்காயின் இயல்பான அதன் ருசிகள் அப்படியே நமக்கு கிடைக்கின்றன அதே போல் கல்லுரலில், இட்லி தோசை, அடை போன்ற மாவானாலும்,சட்டென புளித்துப் போகாமல் மறுநாள்தான் புளிக்க ஆரம்பிக்கும். அந்த காலத்தில் கு.சா.பெட்டியெல்லாம் கிடையாதே... இயற்கையாகவே ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து அதற்குள் இந்த தயாரிப்பு உணவையெல்லாம் இறக்கி வைப்போம். மூன்று நாட்கள் ஆனாலும் சட்னிகள் கெடுவதில்லை. அதிலும் அப்போது மங்கு (அப்படி ஒன்று அப்போது இருந்தது) பாத்திரங்களில் வைத்து விட்டால் அந்த ருசியுடனே இருக்கும். இட்லி மி பொடியும் தேங்காய் மி பொடியும் உரலில்தான் ஒன்று சேர இடிப்போம். அவ்வளவு ருசியாக இருக்கும். பொதுவாக அந்தக் காலம் போய் விட்டது... அடுக்கு அடுக்கான வீடுகளில் இருந்து கொண்டு எங்கிருந்து இவைகளை இடிப்பது?

      கைமணம் என்ற ஒன்று வேறு உண்டு. சிலர் கை அதிக புளிப்பை சட்டென தந்து விடும்.அரைத்து வைத்த சட்னி சாம்பார் என சீக்கிரமாக கெட்டுப் போய் விடும். இதனால்தான் கு. சா பெட்டியையே கண்டு பிடித்தார்களோ என்னவோ?

      சகோதரர் நெல்லைத் தமிழர் சொல்வது போல் மின்சார சூடும் உணவு கெடுவதற்கு ஒரு காரணம். இப்போது சத்தில்லாத உணவுகளை விதவிதமான இயந்திர முறைகளில் செய்து சாப்பிட்டு ஏகப்பட்ட வியாதிகளை உடன் வைத்துள்ளோம். அவ்வளவுதான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. சட்னி சாம்பாருடன் மிளகாய்ப்பொடி இருக்க வேண்டும் என்கிற நிலை மாறி பெரும்பாலும் மிளகாய்ப்பொடி மட்டுமே இருப்பது எங்கள் வீட்டு வழக்கம்.  மதுரையில் சில ரோட்டோரக் கடைகளில் சிறு அடுப்பில் பெரிய கொண்டான் வைத்து இட்லிகளை அவித்து எடுப்பார்கள் சில ஆயாக்கள் -  குறிப்பாக கோரிப்பாளையத்தில்.  எத்தனை சட்னிகள் அதனுடன் சேர்த்துத் தருவார்கள் தெரியுமா?!  விலையும் மலிவு... 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சட்னி சாம்பாருடன் மிளகாய்ப்பொடி இருக்க வேண்டும் என்கிற நிலை மாறி பெரும்பாலும் மிளகாய்ப்பொடி மட்டுமே இருப்பது எங்கள் வீட்டு வழக்கம்./

      எங்கள் வீட்டிலும் சட்னிகள் செய்ய தாமதமாகி விட்டால் வெறும் மி. பொடி தான் கை கொடுக்கும் கையாக இருக்கும். அந்த நிலையில்தான் நான் இந்த இட்லி, மி. பொடியை இன்று அனைவருக்கும் விருந்தாக்கி இருக்கிறேன்.:)

      /குறிப்பாக கோரிப்பாளையத்தில். எத்தனை சட்னிகள் அதனுடன் சேர்த்துத் தருவார்கள் தெரியுமா?! விலையும் மலிவு... /

      ஆமாம்... விதவிதமான சட்னிகளுடன் இட்லிகள் அலங்காரமாக நடுவில் ராஜா மாதிரி வரும் போது பார்வைக்கு மட்டுமில்லாமல், உண்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். சுவையான தங்கள் நினைவுகளை மீட்டெடுத்து இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. என்னது..  இட்லி மிளகாய்ப்பொடியில் கடுகா?  நாங்கள் போடுவதேயில்லையே...  எள் சேர்த்தால் நன்றாய் இருக்கும்.  எங்கள் வீட்டில் எள் சேர்ப்பதில்லை.  சிலர் வெள்ளை எள் சேர்ப்பார்களோ..   திருநெல்வேலி பக்கம் மிளகாய்ப்பொடியில் கொஞ்சமாக புளியும், வெல்லமும் சேர்ப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் இட்லி மி. பொடியில் பருப்புகளுடன் ஒரு ஸ்பூன் கடுகும் சேர்ப்பேன். வாசனையாக இருக்கும். சிலர் கருப்பு எள்ளுக்கு பதில் வெள்ளை எள் சேர்ப்பார்கள். ஆனால் அந்த கருப்பு எள்தான் அதிக வாசனையை தரும் என்பது என் கருத்து. மேலும் இதில் அப்போது உரலில் இடிக்கும் போது கடைசியில், அந்த காரத்தை கட்டுப்படுத்துமென்று (மண்டை வெல்லமென்றால் ஒரு சின்ன துண்டு. )(அச்சு வெல்லமென்றால் ஒரு பீஸ்) கொஞ்சம் வெல்லம் சேர்போம். மிக்ஸியிலும் கடைசியில் பொடி செய்து போடுவேன். அன்று கொஞ்சமாக செய்ததினால் எதுவும் போடவில்லை. மேலும், தேங்காய் மி. பொடிக்குத்தான் புளி சேர்ப்போம். இப்போது எங்கள் வீட்டில் வெல்லம் சேர்த்தால் சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் சேர்க்காமல் செய்கிறேன். வேண்டுமென்பவர்கள் மி. பொடியுடன் ஜீனி கலந்து சாப்பிடுவார்கள்.:) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. கீதா அக்காவின் அழல் அமுதகத்திற்கு பதிலா இந்த இட்லி புராணம். அருமையான படங்களோடு இட்லி பற்றிய குறிப்புகள் சுவையாக உள்ளன. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் அயல நாட்டினரும் இட்லி மஹாதமியம் தெரிந்து கொள்வர். குஷ்பு இட்லி மறந்து விட்டீர்களே. 

    @ஸ்ரீராம். குக்கர் அடுக்கு இட்லி ரைஸ் கேக் எனப்படும். துணியில் ஊற்றி வேகவைக்கும் இட்லி தான் உண்மையான இட்லி.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் அழல் பதிவு அன்று எ.பியில் அமர்க்களமாக இருந்தது. சரளமாக எழுதும் நடையுடன் அவர் மலை.. நான் சாதாரண எளிய மடு...ஆனாலும், நீங்கள் இந்தப் பதிவை ரசித்து பதிவும், படங்களும் அருமையென தந்த கருத்துகள் என்னை ஊக்கம் கொள்ள வைக்கின்றன. நல்லதொரு கருத்தினை தந்தமைக்கு உங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

      /@ஸ்ரீராம். குக்கர் அடுக்கு இட்லி ரைஸ் கேக் எனப்படும். துணியில் ஊற்றி வேகவைக்கும் இட்லி தான் உண்மையான இட்லி./

      அப்படியா...! அறிந்து கொண்டேன். விபரத்திற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. இட்லி புராணம் அருமை..

    இட்லியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது.. போதாது..

    ஆனால் இப்போது குழாயடி வந்தபின்னர் -
    இட்லி இல்லாமல் இட்லி சுடுவது எப்படி என்று ஒரே அக்கப்போர்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      /ஆனால் இப்போது குழாயடி வந்தபின்னர் -
      இட்லி இல்லாமல் இட்லி சுடுவது எப்படி என்று ஒரே அக்கப்போர்!./

      ஹா ஹா. ஆமாம் கண்கட்டி வித்தைகள். மாவு இல்லாமல் இட்லி சுடுவது எப்படியென்ற விபரங்களை நானும் படித்து திகைத்திருக்கிறேன்:))

      அருமையான உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. இட்லியின் சிறப்பில் நீங்க சொல்ல மறந்தது,

    ஹோட்டல்ல மிஞ்சினா ஃப்ரைடு இட்லி அவதாரம்.

    வீட்டில், மி பொடி தடவி மறுநாள் உணவு. அல்லது இட்லி உப்புமா. வீணாகாத பண்டம் இட்லி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /வீட்டில், மி பொடி தடவி மறுநாள் உணவு. அல்லது இட்லி உப்புமா. வீணாகாத பண்டம் இட்லி/

      ஆமாம்.. ஆனால் மறக்கவில்லை... பதிவு இன்னமும் நீளமாக போகும்.. மற்றும் அதற்கேற்ற படங்கள் வேறு எடுக்கப்படவில்லை.. என்ற காரணங்களினால் விட்டு விட்டேன். ஆனால் தாங்கள் நினைவு கூர்ந்து வந்து சொன்னது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.மிக்க நன்றி சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  22. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      மீள் வருகையுடன் வந்து தந்த உங்கள் அன்பான பொங்கல் நலவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      உங்களுக்கும். உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். சற்று தாமதமாக சொல்கிறேன். மன்னிக்கவும்.மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  23. இட்லி பற்றி சொன்னது அருமை.
    ஊரிலிருந்து வந்த மகனுக்கு , பேரன், எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. தினம் இடலிதான். வேறு எதுவும் செய்யவில்லை. வித விதமாக செய்வது வயிற்றை மேலும் கெடுக்கும் என்பதால் இட்லிதான்.

    முன்பு மிளகாய் பொடி பிடிக்கும் எனக்கு இப்போது மிளகாய் பொடி ஒத்து கொள்ள மாட்டேன் என்கிறது. வித விதமாய் சட்னிகள் மட்டும் செய்தேன், சாம்பரும் செய்தேன். ஆனால் இட்லிதான்.

    காலையில் செய்த இட்லி மீதி இருந்தால் மகன் சிறு துண்டுகளாக செய்து வெங்காயம், குடைமிளகாய் போட்டு கடலை பருப்பு, மிளகாய் போட்டு தாளித்து விடுவான். ஊரில்.

    இட்லியை குளிர்சாதன் பெட்டியில் வைத்து எடுத்து உதிர்த்தால் சின்ன ரவை போல உதிரும் அதை இட்லி உப்புமா செய்தால் நன்றாக இருக்கும். மோர் மிளகாய் போட்டு தாளிப்பார்கள். நெல்லை பக்கம்.

    ஊருக்கு பயணத்திற்கு இட்லி மிளகாய் பொடி சிறந்த உணவு.

    உங்கள் மிளகாய் பொடி, இட்லி நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? உங்களை காணவில்லையே என எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.

      பொங்கல் பண்டிகையை தங்கள் மகன். மருமகள், பேரனுடன் நல்லபடியாக கொண்டாடினீர்களா?

      /ஊரிலிருந்து வந்த மகனுக்கு , பேரன், எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது./

      அடாடா..! இப்போது அனைவரும் நன்றாக குணமடைந்து விட்டீர்களா? குணமாக்கிய கடவுளுக்கு நன்றி. இங்கு ஊர் திரும்பியவுடன் உடல்நல குறைவு ஏற்பட்டால் அனைவருக்கும் மனது கஸ்டமாகத்தானே இருந்திருக்கும்.

      ஆமாம்.. இந்த சமயத்தில் இட்லிதான் சிறந்த உணவு. உடம்புக்கு எதுவும் செய்யாது. எளிதில் ஜீரணமாகும்.
      தாங்கள் சொன்னபடி மறுநாள் மீதமாகும் இட்லியை உதிர்த்து இப்படி விதவிதமாக உப்புமா செய்தால் அதுவும் சுவையாக வித்தியாசமாக இருக்கும். மேலே முந்திய கருத்தில் சகோதரர் நெல்லைத் தமிழரும் இதைத்தான் வந்து நினைவூட்டி கூறி சென்றுள்ளார். அவருக்கும் மனமார்ந்த நன்றி.

      /ஊருக்கு பயணத்திற்கு இட்லி மிளகாய் பொடி சிறந்த உணவு./

      ஆமாம்.. பயணத்தில் எங்காவது ஊருக்கு செல்லும் போதும், இந்த இட்லியும், புளிப்பில்லாத நிறைய பால் விட்ட தயிர் சாதமும் நன்றாக இருக்கும்.

      இட்லி பதிவும், மி. பொ. இட்லிகளும் நன்றாக இருப்பதாக கூறியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  24. //எல்லாமுமாக சேர்ந்து தயாராகி "இட்லிகள் எங்கே. .? " என அதை பார்க்கும் தவிப்பில் இருக்கும் இ. மி. பொடி. //


    சொன்ன விதம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உடல் நலம் கவனித்துக் கொள்ளுங்கள். பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்களை தந்தற்கும், மனம் நிறைய பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. தங்கள் அன்பான வருகை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  25. எல்லோரும் தீபாவளி அன்றுதான் இட்லி வார்ப்பார்கள் நீங்கள் பொங்கலுக்கு இட்லி வார்த்திருக்கிறீர்கள். வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தீபாவளியைப் போலவே, பொங்கலுக்கும் எங்கள் வீட்டில் இட்லி உண்டு. சுடச்சுட சர்க்கரைப் பொங்கலுடன், இட்லி சட்னியுடன், காலை உணவாக சாப்பிடுவோம். அப்படியே பழக்கமும் ஆகிவிட்டது. இது எப்போதோ வார்த்து பதிவுக்காக படம் எடுத்த குட்டி இட்லிகள். தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியை தந்தது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete