Tuesday, June 29, 2021

தொடர் கதை...

வணக்கம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும். எனக்கு வாரத்துக்கு ஒன்றாகவாவது  புதிதாக ஏதேனும் பதிவுகள் எழுதும் ஆவல் அப்போதிலிருந்து  இப்போது வரை என்றுமே உள்ளது.  முன்பு அது ஒரளவு கைகூடி வந்தது. ஏனோ கொஞ்ச நாட்களாக அது தடைப்பட்டு போகிறது. (மன, உடல் பாதிப்புகள்தான் காரணம்) சிலவற்றை எழுதி பாதி, பாதியாக நிறுத்தி உள்ளேன். அதனை நல்லபடியாக முடிக்க இறைவன்தான் துணையாக வர வேண்டும். இப்போது பதிவுலகில் அனைவரையும் என்னால் முடிந்த வரை தினமும் அவர்களின் பதிவுகளை படித்து கருத்துக்கள் இட்டு என் எழுதும் ஆவலை இறைவன் நிறைவேற்றி வைக்கிறான். அதற்கு "அவனுக்கு" என் தாழ்மையான நன்றிகள். இன்றைய பதிவும் மறு பதிவானலும் பரவாயில்லையென  இப்படி என்றோ ஒருநாள் பதிவிட்டு உங்களை சந்திக்கும் ஆவலில் வர முயற்சித்திருக்கிறேன் .கதைகள் பற்றிய பதிவுகளை படித்ததும், நாமும் ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாமே என்ற எண்ணமும் காரணம். இப்பதிவுக்கு வந்து கருத்துக்கள் தந்து ஊக்குவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இந்தக்கதை நான் வலைப் பதிவில் கால் பதித்த போது  எழுதியது. அதை எப்போதும் போல் நீ.. ண்.. ட.. கதையாக எழுதியதில்  படிப்பதற்கு எவருக்கும் விருப்பம்  இருந்ததில்லை. அப்போது எனக்கு வலைத்தள நட்புகளும் குறுகிய வட்டம். ஆனாலும், அந்த சமயத்தில் என் வார்த்தைக்கு மதிப்பு தந்து நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி வந்து இக்கதை படித்து கருத்திட்ட ஒரே ஒரு சகோதரருக்கு என். 🙏. எப்போதும். அவரும் வந்து இப்போது இதை படிக்கலாம். அதற்கு அவருக்கு இப்போதும்..🙏. ஆனால், இப்போது அவரும் அதை வெளிக்காட்டாமல் படித்தால் "அது யார்" என்பது சஸ்பென்ஸாக இருக்கும். கதையின் இறுதிப் பகுதியில் நானே அவரைக் குறிப்பிடுகிறேன்.  

அன்று அவரின் ஆலோசனைபடி கதையை கூறாக்கி (கூராக்கி அல்ல..) அப்படியே தந்திருக்கிறேன்.  இப்போது படித்து கருத்திடும் சகோதர சகோதரிகளுக்கும் அன்பான என் நன்றிகள். 🙏. 

தோ ந்தக்தை.....

கதை பகுதி. 1.

பகல், வெயிலின் தகிப்புக்கு ஈடு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டு வாசலிலிருக்கும், பெரிய மரத்தடியிலிருந்த கயிற்று கட்டில் அந்த வீட்டின் சொந்தகாரரும், பெரியவருமான சதாசிவத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. 

"நானுந்தான். .....! பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் அவரை பார்க்காமலிருப்பது கண் இருந்தும் குருடனாய் இருப்பது மாதிரி தவித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளேனும் பார்க்காமல் இருக்கும் உறவா எங்களுடையது. 

பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா அவர் வீட்டின் கதவை தட்டி "மாமா, மாமா" என்று குரல் உசத்தி அழைத்து விட்டு பதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றாள்.

சதாசிவம் அந்த ஊருக்கு வேலை மாறுதல் காரணமாக வந்தவர், அந்த வேலை அவ்வூரிலேயே நிரந்தரமாக ஆனவுடன், இந்தவீட்டை கட்டிக்கொண்டு தன் மனைவியுடன் குடியேறினார். இயற்கையின்பால் அவர் கொண்ட பற்றின் காரணமாக, அவர் வீட்டின் முன்னும் பின்னும் செடிகொடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்தன. அன்பான நல்ல மனைவி, வீடு, நிறைந்த வேலை, என்று வாழ்க்கை வசதிகளை அவருக்கு தந்த இறைவன், கொடுக்க மறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அவர் அதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளாமல் தன் உறவுக்கார குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஊரில் பழகியவர்களும் உறவும் நச்சரித்த காரணத்தால், மிகவும் சிரமத்துடன் நான்கு குழந்தைகளுடன், வறுமையில் காலம் கழித்து வந்த அவருடைய ஒன்று விட்ட சகோதரி முறையுடைய அகிலாவிற்கு கடைசியாக பிறந்த ஆண்குழந்தையை, அவள் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். குழந்தையும் அவரிடமும், அவர் மனைவியிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவருடைய முழு கவனமும், குழந்தையுடன் இருக்க, அவர் இதுநாளும் வளர்த்து வந்த செடி கொடிகள் சரேலென்று காணமல் போயின. ஆனாலும் வீட்டு வாசலிருந்த மரம் மட்டும், "நீ என்னை கவனிக்காது விட்டாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்" , என்று பாசத்துடன் அவரை அரவணைத்து கொள்வது போல, அவர் வீட்டின் மேல் சாய்வது போன்ற தோற்றத்துடன் வளர ஆரம்பித்தது. குழந்தையும் மரமும் ஒரு சேர நன்கு வளர்ந்தன.

வருடங்கள் உருண்டோடி சதாசிவத்தின் பையனை வாலிபனாக்கியது. அவனை நல்ல முறையில் படிக்க வைத்து, அவனின் படிப்புகேற்ற ஒரு வேலையும் கிடைத்தவுடன், அவனுக்கு உரிய வயதில் ஒரு திருமணத்தையும் நடத்தி, சிலவருடங்களில் பேரனுடனும் கொஞ்சி மகிழ்ந்தார் சதாசிவம். 

கணவருடன் அவர் மனம் கோணமல் இதுநாள்வரை சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்த அவர் மனைவி தன் கணவரையும், வீட்டையும் மகன், மருமகளிடம் ஒப்படைத்து விட்டு திருப்தியுடன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாள். அன்பான மனைவியின் மறைவுக்குப்பின் வயதின் மூப்பும், தனிமையும் சேர்ந்து கொள்ள சதாசிவம், தன் மகனையும், வாசலில் இருக்கும் மரத்தையும் துணையாக கருதி வாழ்ந்து வந்தார்.

கட்டில் சப்தம் கேட்டு கலைந்தேன். சதாசிவம், "அப்பாடா, என்று முனகியவாறு வந்தமர்ந்தார். அவர் முகம் மனச்சோர்வை வெளிக்காட்டியது. அவர் உடல் நலமில்லாமலிருப்பதை முகம் கண்ணாடியாய் காட்டியது என்னை வருத்தியது. மனைவியின் மறைவுக்குப் பின் மனிதர் மிகவும் தளர்ந்துதான் போய் விட்டார், என்ன செய்வது,. ..? என்று நான் வருந்தி கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா இவரை பார்த்ததும் ஓடிவந்தாள். 

"மாமா, இப்ப உடம்பு எப்படியிருக்கு? காலையிலே நான் வந்து கதவை தட்டிப் பாத்தேன். நீங்க எந்திரிக்கலே, ஒரே கவலையாயிருந்திச்சி, இப்ப காய்ச்சல் குறைஞ்சிருக்கா? எப்படியிருக்கு மாமா", என்று வாஞ்சையுடன் விசாரித்தாள்.

"பரவாயில்லையம்மா, பாவம்; உனக்குத்தான் சிரமம். உன் வீட்டிலுள்ளவர்களை கவனிச்சிக்கிறது போறாது"னு, நடுநடுவே என்னை வேறே பார்த்துக்க வேண்டியதாயிடிச்சு, எல்லாம் என் நேரம்", என்று நொந்து கொண்டார்.

"இதுலே என்ன கஷ்டம் மாமா. .. , என் அப்பாவை நான் கவனிக்க மாட்டேனா, அதுமாதிரிதான் இதுவும்... இதுக்கெல்லாம் கவலைபடாதீங்க,.! " என்றவள்," உங்களுக்கு சாப்பிட இன்றாவது இட்லி எடுத்து வரட்டுமா?" என்றாள் அக்கறையுடன்.

"வேண்டாம்மா, கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிட்டுகிறேன், அப்புறமா, நேற்று மாதிரி வெறும் கஞ்சி மட்டும் போட்டு கொடு போதும். இட்லிபெல்லாம்  வேண்டாம்.... வாய்க்கு இன்னமும் ஒன்றும் பிடிக்கவில்லை... ." என்று அவளை தடுத்தார்.

" சரி மாமா, உங்க விருப்பம்...  நான் உங்க வீட்டை பெருக்கி சுத்தபடுத்துறேன்", என்றபடி அவரின் அனுமதிக்கு காத்திராமல் அவர் வீட்டினுள் சென்றாள் சுசீலா.

"பாவம், இந்த பெண்... மகனும் மருமகளும் தவிர்க்க முடியாத உறவு வீட்டின் திருமணத்திற்கு ஒரு வாரம் அவரை தனிமையில் விட்டு சென்ற பின் இவள்தான் பாசத்துடன் அவரை கவனித்து கொள்கிறாள். இதில் இரண்டு நாட்களாக சற்று உடல் உபாதை வேறு... " என்று சதாசிவம் மனம் கனிந்து யோசித்துக்கொண்டிருக்கையில், அடுத்த தெருவிலிருக்கும் அவருடைய நண்பர் பாலு சற்று வேகமாக, ஓடி வராத குறையாக மூச்சிறைக்க வந்தார்.

தொடர்ந்து வரும்.... 

29 comments:

  1. வருக.. வருக...
    தங்களது கைவண்ணத்தில் வலைத் தளம் மேலும் பெருமை கொள்ளட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      வாருங்கள்...தாங்கள் முதலில் வருகை தந்தமைக்கும் அன்பான கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களின் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இந்த வார்த்தைகள்தான் என் மனக்கலக்கங்களை போக்கி இயல்பு நிலைக்கு மாற உற்சாகமும் தருகிறது. மிகவும் நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. தங்களது தளத்திற்கு வந்து தங்களையே வரவேற்கின்றேன்... தவறாகக் கொள்ள வேண்டாம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதில் தவறென்ன இருக்கிறது. உங்கள் அனைவரின் அன்பான வரவேற்புகளை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வலைத்தளத்தின் மூலம் இப்படி உடன் பிறவா சகோதர, சகோதரிகளை தந்த அந்த ஆண்டவனுக்கு எப்போதும் என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கதை நன்றாக இருக்கிறது.வளர்ப்பு பிள்ளை ஊருக்கு போய் இருப்பதால்
    தனிமையில் இருக்கும் முதியவர் கதையா?
    பக்கத்து வீட்டு சுசீலா மனம் கவர்ந்தார். உதவி செய்யும் மனமான்மை இருக்கே!


    நண்பர் ஓடி வந்து என்ன சொல்ல போகிறார் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாக இருப்பதாக நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்வாக இருக்கிறது. ஆம்.. இது போல் உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருப்பவர்கள் வீட்டருகில் இருந்து விட்டால், நல்லதுதானே..! கதையை தொடர்கிறேன் என நீங்கள் ஆவலாக கூறியிருப்பதும் எனக்கு உற்சாகமளிக்கிறது. மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மருமகளின் தோழி வந்து இருக்கிறார் விடுமுறைக்கு 10 நாட்கள் இருப்பார், அதனால் எல்லோர் வலைத்தளங்களுக்கும் பதிவுகளுக்கு காலதாமதமாக வந்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      /மருமகளின் தோழி வந்து இருக்கிறார் விடுமுறைக்கு 10 நாட்கள் இருப்பார்/

      அப்படியா..? மிகவும் சந்தோஷமான விஷயம். உங்கள் மருமகளுக்கும், அவரது தோழிக்கும் இப்படி சேர்ந்து பேசி மகிழ்வது மன சந்தோஷத்தை அளித்திருக்கும். இல்லையா?

      /அதனால் எல்லோர் வலைத்தளங்களுக்கும் பதிவுகளுக்கு காலதாமதமாக வந்து கொண்டு இருக்கிறேன்./

      பரவாயில்லை.... நீங்களும் உங்களுக்கு சௌகரியபடும் போது வந்து பதிவுகளை படியுங்கள். காலதாமதத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ஓடி வந்த நண்பர் சொல்லப் போவது என்ன?...

    சற்றே பொறுத்திருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து. தந்த நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி. மிகுதியையும் படிக்க ஆவலுடன் காத்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. தனிமையில் இருக்கும் (இருந்த) இன்னொரு தாத்தா!  இங்கும் ஒரு பெண் குறுக்கிட்டிருக்கிறாள்!  என்ன நடக்கிறது (நடந்தது) என்று அறிய தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ... நேற்றைய செவ்வாய் கதை களத்தில் சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் எழுதிய கதையை குறிப்பிட்டிருக்கிறீர்களா? ஆமாம்.. அந்த கதையும் மிக சுவாரஸ்யமாக சென்றது. அதில் அவரின் (பெரியவர்) மனப் போராட்டங்களை சொல்வதாக கூறப்பட்டிருந்த கதையை எளிதான வாக்கியங்களில் இயல்பான நடையில் தொகுந்திருந்தார் சகோதரி கீதாரெங்கன்.

      இன்றைய கதையிலும் மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதை அறிய தாங்கள் தொடர்கிறேன் எனச் சொன்னது மகிழ்வாக உள்ளது. உங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. (வளர்ப்புப்) பிள்ளை திருமணமானதும் தந்தையை சரியாக கவனிக்கவில்லையோ என்று எண்ணம் ஓடினால் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் என்று தெரிந்து ஆறுதல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை ரசித்துப் படித்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் தொடர்ந்து வரும் முழுக்கதையையும் படித்து கருத்துக்கள் தந்தால், பெருமகிழ்ச்சியடைவேன். உங்கள் ஊக்கம் மிகுந்த கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இரண்டு பகுதிகளும் முடிந்த பிறகு படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இரண்டு பகுதிகளும் முடிந்த பிறகு படிக்கிறேன்./

      அடாடா...! இரண்டு பகுதி என நீங்கள் முடிவு செய்து விட்டீர்களே.. இது தெரிந்திருந்தால் மொத்த கதையையும் பெரியதாக இருந்தாலும் பரவாயில்லையென ஒரேடியாக வெளியிட்டிருப்பேனே. ஹா ஹா ஹா. நீண்ட கதையென நான் இப்போது பிரித்து வெளியிடுவது எத்தனைப் பகுதி வரப் போகிறதோ ? அட..ஈஸ்வரா.. சரி..சரி. பரவாயில்லை..நீங்கள் கதை முழுவதையும் படித்த பின் நல்லதொரு கருத்து தாருங்கள். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. நன்றாகவே கதை/கவிதை எல்லாம் எழுதுகிறீர்கள். ஆனால் உங்கள் உடல் உபாதை/மன உபாதைகள் சேர்ந்து உங்களை அழுத்துகின்றன. உடல் உபாதைகளுக்கு மருந்து உண்டு. மன உபாதையை நீங்களே போக்கிக் கொள்ளணும். எல்லாவற்றையும் சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கையில் ஏன் தாழ்வு மனப்பான்மை? உங்கள் எழுத்து/எண்ணங்கள் எல்லாமே நன்றாய் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் தன்னம்பிக்கை தரும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி. என்னிடம் தாழ்வு மனப்பான்மை என்பதை விட பிறரை (உறவின் வழிகள்) எப்படி குற்றங்கள் சொல்வது (அது குற்றமாகவே இருப்பினும்) என அவர்களுக்கு நிறைய விட்டு தந்துள்ளேன். அதைக் கண்டு அவர்களும் இவர்கள் நாம் எது செய்தாலும் தவறாகவே நினைக்க மாட்டார்கள் என்ற ரீதியில் பழகியதால், என்னுள் எழுந்த என் மெளனங்கள் நாளடைவில் தாழ்வு மனப்பான்மை லிஸ்டுடன் சேர்ந்து விட்டன. என் மன உபாதைகள் உறவின் இழப்புகள், அதனால், வந்த சிரமங்கள் என்பதை குறிப்பிட்டேன். என் எண்ணங்கள் நன்றாக உள்ளதென நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு புத்துணர்ச்சியை தருகின்றன. உங்களுக்கு மிக மிக நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கதையை சுவாரசியமாகக் கொண்டுபோயிருக்கிறீர்கள். தொடர்ந்து எப்படிப் போகப் போகிறது என்று தெரிந்து கொள்ளக் காத்திருக்கேன். இதை நீங்கள் எங்கள் ப்ளாகுக்கு அனுப்பி இருக்கலாமோ? விரைவில் எங்கள் ப்ளாகில் கே.வா.போ.க. செவ்வாயில் உங்கள் கதையை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து தந்த கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அடுத்த பகுதிக்கு காத்திருப்பதாக சொன்னதும் சந்தோஷத்தை தருகிறது.எ.பிக்கு அனுப்பவேண்டும்.அவ்வப்போது எழுதுவது முடிக்காமல் பாதியில் நிற்கிறது. கண்டிப்பாக செவ்வாய்க்கு எனக்கு தெரிந்த மாதிரி கதை எழுதி அனுப்புகிறேன். தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
      உங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. சுவாரஸ்யமாகவே செல்கிற்து தொடர்கதை. அடுத்த பகுதிக்கான காத்திருப்பில் நானும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      அடுத்த பகுதி கதையை படிக்க காத்திருப்பதை கண்டும் மிக்க சந்தோஷம் அடைந்தேன். உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் என் ஆக்கத்திற்கு வழி வகுக்கிறது. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. உதவி செய்யும் நல்ல மனம் வாழ்க...

    பதட்டத்துடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து தந்த கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி. ஆம்.. உதவி செய்யும் நல்ல மனங்கள் என்றும் சிறப்போடு வாழும்.

      நீங்களும் அடுத்த பகுதி கதைக் காண காத்திருப்பதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. எதிர்பார்ப்பை உண்டாக்கும் நடை...
    ஆவலோடு நானும்...

    ஐந்து வருடம் பின்னோக்கி செல்கிறேன்....🤺

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரரே

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    கதையை படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்களை தந்தமை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தாங்களும் தொடரும் கதை பகுதிகளை காண ஆவலோடு இருப்பதற்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  15. அன்பின் கமலாமா,
    நீங்கள் கதை ஆரம்பித்ததே தெரியாமல் போயீற்றே.:(
    பரவாயில்லை தொடர்கிறேன்.
    தனிமையில் நோயும் கொண்டால் முதுமையில்

    என்னதான் செய்ய முடியும்?
    மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்.
    உங்கள் அன்பு உள்ளம் போன்றே அன்பு கொண்ட சுசீலா பாத்திரம் மனதை நெகிழ்விக்கிறது.
    தொடர்கிறேன்.
    நல் எழுத்துக்கு நன்றி மா.
    என்றும் உங்களுக்கும் குடும்பத்துக்கும் நலமே விளைய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கதை ஆரம்பித்ததே தெரியாமல் போயீற்றே.:(
      பரவாயில்லை தொடர்கிறேன்./

      அதனாலென்ன.... சகோதரி.. ! எப்போது வேண்டுமானாலும் வந்து படிக்கலாம். அதேதான் நானும் நினைத்தேன். எப்போது வேண்டுமானலும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் நீங்கள் தொடர்ந்து வந்து படிக்கலாம் சகோதரி. ஆனால் நீங்கள் எப்படியும் வந்து விடுவீர்கள் என நினைத்துக் கொண்டேயிருந்தேன். அதன்படி வந்து கதையில் சேர்(ந்)த்தற்கு உங்களுக்கும், இறைவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. உங்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சியை தருகிறது. பிரார்த்தனைகளுக்கு நன்றிகள். நல்ல கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete