Sunday, September 29, 2019

கோஸ் பிட்லே...

இந்த சமையல் பதிவு  ஏற்கனவே "எங்கள் பிளாக்" கில் இடம் பெற்று எனக்கு பெருமையையும், மனத் திருப்தியையும் அதிகப்படியாக பெற்றுத் தந்தது. அப்போது அதற்கு (பதிவுக்கு) இடம் தந்த எங்கள் ப்ளாக் ஆசிரியர்  சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிக்க நன்றி. 

தற்சமயம்  இன்னமும் எதையும் சரிவர எழுதி முடிக்கப் படாமலிருந்த எனது  டிராப்ட் பகுதியைை ஆராய்ந்து கொண்டிருந்த போது இந்த  "கோஸ்" பிட்லே," உனது வலைத்தளத்திலும் ஒரு ஓரத்தில் நானும் இடம் பெறட்டுமா பாஸ் ?" என்று ஆசையுடன் கேட்கவும், மீண்டும் படித்து "பேஷ்.. பேஷ்" என அனைவரும்  "கோஸை" பாராட்டுவீர்கள் என்ற அசைக்க முடியாத  நம்பிக்கையில், "சரி"! என சம்மதித்து நானும் இடம் தந்து விட்டேன்.  "மீண்டுமா? என "கோஸை" ஏதும் சொல்லி  "ஏசாமல்" படிப்பதற்கும், பதிவதற்கும் (தங்களின் அன்பான கருத்துக்களை) என் மனமார்ந்த நன்றிகள். 

கோஸ் பிட்லே.... 

நறுக்கிய கோஸ்.... 


நல்ல கோஸ் வாங்கி பொடிதாக நறுக்கி வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள். ( நான் ஏன் நல்ல என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றால் நான் வீட்டிலிருந்த வாங்கி நான்கு நாட்கள் ஆகி விட்ட நிலையில் இருந்ததை அவசரத்திற்கு பயன்படுத்தினேன். நீங்கள் ப்ரெஸ்ஸாக வாங்கி கொள்ளவும்.)  

குளித்து முடித்து சமர்த்தாக
அமர்ந்திருக்கும்  கோஸ்....

  

நறுக்கியதை நன்றாக அலம்பி விட்டு ஒரு வாணலியில் கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு, தாளித்த பின் அலம்பிய கோஸைப் போட்டு கொஞ்சம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். 

தண்ணீரிலிருந்து நீச்சலடித்து தப்பிக்கத்தெரியாமல் மூழ்கியிருக்கும் பருப்புகள்....

 

ஒரு கப் துவரம்பருப்பு, பாதி கய் கடலைப் பருப்பு எடுத்துக் கொண்டு அலம்பி விட்டு கோஸ் நறுக்கும் நேரத்தில் ஊற வைத்துக் கொண்டால், செளகரியமாக இருக்கும். அவ்வாறு  ஊறிய பருப்பை குக்கரில் சாதத்துடன் வைத்து  வேக வைத்துக் கொண்டு விடவும் .

கலரில் நான் எப்படி? சும்மா தகதகவென மின்னுகிறேனா? தானே பெருமிதபட்டுக் கொள்ளும் புளிக்கரைசல்....

                                           
ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை  
எடுத்து ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.. கோஸ் நன்கு வெந்ததும் அதனுடன் இந்த கரைசலை சேர்க்க வேண்டும். 

நான் மட்டும் இங்கே, என்னுடன் சேரப் போகும் கூட்டணிகள் எங்கே? என அமரத்தலாய் கேட்கும் கோஸ்....


புளி கரைசலை வெந்த கோஸுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு போட்டு, ( முதலில கோஸ் வேகும் போது அதற்கு தகுந்த உப்பு மட்டுந்தான் போட்டோம்)  கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.

நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தாலும், தனிகட்சியா? "என்னவோ ஒன்னும் புரியலை போ" அலுத்துக் கொள்ளும் வெந்தயம் தக்காளி கறிவேப்பிலை...



ஒரு தக்காளியை சுத்தப்படுத்தி அதன் காம்பு பகுதியை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். (இந்த காம்பு பகுதியில் ஏராளமான பாக்டீரியா இருக்கிறது எனவே அதை நீக்கி விடுவது நல்லது. ) கறிவேப்பிலை மூன்று ஆர்க்குகள் அலம்பி வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் சற்று சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மூன்றையும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

தனியாக அரைபட்டாலும்  நாங்கதான் முதலாக்கும்.... 

   

புளிக் கரைசலுடன்  சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கோஸ் கலவையில் இந்த அரைத்த விழுதை சேர்க்கவும். 

வறுக்க ஆஜராகியும் வட்டமேஜை மாநாட்டில் கலந்து பேசிக் கொண்டிருக்கும் பொருட்கள்....

         

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு,  உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு  என தலா ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லிவிரை நாலு ஸ்பூன், வத்தல் பத்து ( இது காரத்தைப் பொறுத்து அவரவர் விருப்பம்) என்று எடுத்துக் கொண்டு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த பொருட்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அட, தட்டில் இடமில்லையென்றால், என்னை மறந்து விடுவீர்களா என்ன? நான் இல்லாமலா? என கோபமாய் எட்டிப்
பார்க்கும் தேங்காய்....



அந்த தேங்காய் மூடியில் பாதி துருவி,  அரைக்க வறுத்த மசாலா பொருட்களை ஆறுவதற்காக ஒரு தட்டில் கொட்டிய பின்  அதே வாணலியில் அதையும் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

நாங்கள் வாசமாக இருந்தாலும் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கூடிப் பேசி விவாதம் எழுப்பலாமென்றால், வட்ட மேஜையை காணவில்லையே? பெரும் சோகத்தில் விழுது....


புளி கலவையுடன் சேர்ந்து  கொதித்து  வெந்தயம் வாசம்  வந்ததும் வறுத்து வைத்திருக்கும் ஆறிய மசாலா  பொருட்களையும்,  தேங்காயையும் மிக்ஸியில் போட்டு ஒரளவு நைசாக அரைத்துக் கொண்டு  அந்த, விழுதையும் கலந்து கொதிக்க விடவும். 

கடைசியில் நானும் இதில் சேர்ந்தாச்சு. இப்ப திருப்தியா என்ற கடைந்த பருப்பு.....



பத்து நிமிடங்கள் கொதி வந்ததும்  வெந்த பருப்புகளையும் நன்கு மசித்து  அதனுடன்கலந்து கொதித்து சேர்ந்து வரும் போது 
  அடுப்பை அணைத்து விடவும்.  

ஆயிரம் இன்னல் பட்டு பெருங்காயத்துடன் உங்களுக்காக நான் தயார்...



கடைசியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு உ.. ப தாளித்துக் கொண்டு அதனுடன் பெருங்காயத்தை போட்டு பொரித்து சேர்த்தால் பிட்லே வாசனையாக தயாராகி இருக்கும். 


நாங்கதான் ஒன்னு சேர்ந்துட்டோமே இப்ப நீங்க சாப்பிட தயாரா? ? கோஸ் பிட்லே....

         
சாதத்தில் நெய் விட்டு இந்த கோஸ் பிட்லே கலந்து சாப்பிட  சுவையாக இருக்கும்.    தோசை சப்பாத்திக்கும்  தொட்டுக் கொள்ளலாம். 


28 comments:

  1. நன்றி, எங்களைக் குறிப்பிட்டமைக்கும், எங்களுக்கு அனுப்பி கௌரவப்படுத்தியமைக்கும்....    தொடர்ந்து அனுப்புங்க.....

    Good Morning.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்தமைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனியும் ரெசிபிகளை எழுதி அனுப்ப கண்டிப்பாக முயற்சிக்கிறேன். தங்கள் பதிவில் வெளியிடுவதற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பொருட்கள் பேசிய(?)வார்த்தைகள் ரசிக்க வைத்தன சகோ. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எ. பியில் வெளியிட்ட போது கண்டு ரசித்தது மட்டுமின்றி இங்கும் வந்து ரசித்து கருத்துக்கள் தந்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. தலைப்பு ஏதோ இராணுவதளவாடங்களின் பெயர் போல சற்றே மிரள வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /தலைப்பு ஏதோ இராணுவதளவாடங்களின் பெயர் போல சற்றே மிரள வைக்கிறது/

      ஹா. ஹா. ஹா. அந்த பயம் கோஸிடம்,இருக்கட்டும். (தலைப்பு வைத்த என்னிடம் அல்ல..!) அதுவும் வெடி குண்டுகளின் அளவுடன் இருப்பதால்,புனைப்பெயர் கிடைத்த மகிழ்வில் மிகவும் சந்தோஷிக்கிறதாம்:) ஹா.ஹா.ஹா.
      மீள் வருகை தந்து தலைப்பை ஆராய்ந்ததற்கு நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கோஸ் பிட்லையை எ. பியிலும் கண்டு ரசித்து விட்டு இங்கு என் பதிவிலும் வந்து ரசித்து ருசித்தமைக்கு மிகவும் பணிவான நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கோஸ், தக்காளி, பருப்பு வகைகள், தேங்காய் எல்லாம் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டது உங்கள் கற்பனை வளத்தைக் காட்டுகிறது. இது படிச்ச நினைவாயும் இருக்கு, இல்லை போலவும் இருக்கு! என்றாலும் கோஸிலும் பிட்லை பண்ணலாம் என்பதை அறிந்து கொண்டேன். அதிலும் தக்காளி, கருகப்பிலை, வெந்தயத்தைத் தனியாக வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும் என்பதையும் இப்போது தான் அறிந்தேன். பிட்லைக்கு வறுக்கும் சாமான்களும் நாங்க பாசிப்பருப்பு, துவரம்பருப்பு எல்லாம் சேர்ப்பதில்லை. மி.வத்தல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயம், தேங்காய், ஒரு டீஸ்பூன் அரிசி வறுத்து அரைத்துச் சேர்ப்போம். கொத்துமல்லி விதை சேர்த்தால் சாம்பார் மாதிரி ருசி வரும் என என் பிறந்த வீட்டில் சொல்லுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை எ. பியிலும் கண்டு ரசித்து விட்டு இங்கு என் பதிவிலும் வந்து ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. அங்கும் நீங்கள் நல்லதொரு கருத்துக்கள் தந்ததாக நினைவுதான்.

      நான் பொதுவாக பிட்லைக்கு மி. வ கொஞ்சம் கொத்தமல்லி விரை. வெந்தயம் சிறிதளவு, பா. பருப்ப தவிர்த்து மூன்றும் ஒவ்வொரு சின்ன ஸ்பூன் என்ற விகிதத்தில் எடுத்து வறுத்துக் கொண்டு தேங்காய் பூ வறுத்து அரைத்துச் சேர்ப்பேன். (கத்திரிக்காய், வெண்டைக்காய், சவ்சவ் வேறு எந்த காயாய் இருந்தாலும்,) இந்த கோஸில் கொஞ்சம் வித்தியாசம் சேர்த்ததில் நன்றாக வந்தது. தாங்கள் செய்யும் முறைகளையும் இங்கு விவரித்ததில் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

      நேற்று வந்து கருத்துக்கள் தந்த தங்களுக்கு தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். நேற்று மாலை கொஞ்சம் வெளியில் செல்லும் சூழ்நிலை. இன்று முழுவதும் பள்ளி விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை மீறி கைப்பேசியை கையில் எடுப்பதே சாத்தியமில்லாமல் போய் விட்டது:) தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. தலைப்பு மாற்றி விட்டீர்கள் போல! நாங்க பிட்லை என்றால் முதலில் பாகற்காய், அடுத்து கத்திரிக்காய். பின்னர் சேனைக்கிழங்கும், காராமணியும் போட்டு சம்மங்கி பிட்லை எனப் பண்ணுவோம். வேறே காய்களில் பிட்லை பண்ணியது இல்லை. காமாட்சி அம்மா வாழைத்தண்டில் போட்டிருந்தாங்க! அதுவும் செய்து பார்க்கணும்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      எந்தத் தலைப்பை மாற்றி விட்டேன் எனப் புரியவில்லை. பிட்லே என ஸ்டைலாக வைத்ததை பிட்லை என்பதாக கருத்தில் சொல்வதை பார்த்து சொல்கிறீர்களா?

      நான் கத்திரிக்காயுடன் காராமணி சேர்த்து பிட்லை பண்ணியிருக்கேன். நீங்கள் கூறுவது போல சேனை மட்டும் வைத்துச் செய்திருக்கிறேன். அத்தோடு காராமணியும் சேர்த்து சம்மங்கி பிட்லை (பெயர் நன்றாக உள்ளது.) செய்து பார்க்கிறேன்.

      காய்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது ஒரு வித சுவை கிடைக்கும். அது போல் பாகற்காயும் பிட்லை செய்துள்ளேன். அதற்கு மோர் குழம்பு பொருத்தமாக இருக்கும். வாழைத்தண்டில், பிடலையும் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. வெறும் வாழைத்தண்டில் அவியல் மாதிரி செய்தாலும் ருசிக்கும். வாழைக்காயில் பிட்லை நன்றாக இருக்கும்.

      நம் விருப்பபடி மாற்றி யோசித்து நிறைய செய்தாகி விட்டது. சமயத்தில் சிலது "நேயர் விருப்பமாக" அமைந்து மறுபடி செய்ய வைக்கும். சிலது "ஏண்டாப்பா செய்தோம்" என எண்ண வைக்கும். ஆனாலும் அதையும் இன்னமும் மாற்றி யோசித்து வேறொர் தினுசில் செய்து விடுவேன். இதனுடன்தானே நாட்கள் ஓடுகின்றன. தாங்கள் மறுபடி வந்து தந்த அருமையான கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. தலைப்பு விநாயகர் ஊர்வலம் எனப் பார்த்து ஏமாந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இரண்டு நாட்களாய்,கிடைக்கும் ஓய்வு நேரத்தில், டிராப்டில் எழுதியும் எழுதாமலும் இருக்கும் பழையனவற்றை புரட்டிப் பார்த்த போது கை விரல்களின் தவறுகளால் விநாயகர் ஊர்வலமாக புறப்பட்டு விட்டார். ஹா. ஹா. ஹா. வேறு ஒன்றுமில்லை. அது வெளியிடலாமா என்ற ஐயத்தில் சிறை வைக்கப்பட்டு வருடங்கள் பல ஆகி விட்டன. கொஞ்சம் திருத்தி விரைவில் பதிவில் வெளியிட வேண்டும்.தங்களின் ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கோஸ் பிட்லை சூப்பர். சொல்லிய விதம் சூப்பர்.
    படி படியாக சொல்லிய விதமும், படங்களும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கோஸ் பிட்லையை எ. பியில் ரசித்து படித்து கருத்துக்கள் தந்தோடு மட்டுமின்றி, இன்று என் பதிவுவிலும் வந்து ரசித்து அழகான கருத்துக்கள் தந்தமைக்கும், படங்கள் அழகாக இருக்கிறது என்ற பாராட்டியதற்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சி சகோதரி.

      நேற்று கருத்து தந்த தங்களுக்கு சற்று தாமதமாக கருத்து தந்திருக்கிறேன். மேலே சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் காரணத்தை தெரிவித்திருக்கிறேன். மன்னிக்கவும் சகோதரி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. வேறு ஏதோ தலைப்புத் தெரியுதே என உள்ளே வந்தால்.. உங்கள் கோஸ் சொல்கிறது.. அது கிடக்கட்டும் என்னைப்பார் என் அழகைப் பார் என:)).. ஏன் தலைப்பு மாறிப்போச்ச்ச்ச்?:)..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க.. வாங்க.. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /வேறு ஏதோ தலைப்புத் தெரியுதே என உள்ளே வந்தால்.. உங்கள் கோஸ் சொல்கிறது.. அது கிடக்கட்டும் என்னைப்பார் என் அழகைப் பார் என:)).. ஏன் தலைப்பு மாறிப்போச்ச்ச்ச்?:)../

      ஹா. ஹா.ஹா. ஹா.கோஸின் அழகை ரசிக்க வந்த தங்களுக்கு நன்றியோ நன்றி..

      தலைப்பை மாற்றி காண்பித்து உங்களை இங்கே வரவழைத்த பெருமை
      அந்த கோஸுக்குத்தான் என என்னிடம் கூறி அகமகிழ்கிறது:) ஆனால் அதற்கு காரணம் ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருள் என்பது, விநாயகருக்கும், என் கை விரல்களுக்கு மட்டுந்தான் தெரியும். ஹா.ஹா.ஹா. (மேலே கீசாக்காவுக்கு நான் அளித்த பதிலை பார்க்கவும்.)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. ஒரு சாதாரண கோஸ் க்கு இவ்ளோ மருவாதை கொடுத்து, ஊரிலுள்ள பருப்பு .. ஸ்பைஸஸ் எல்லாம் அரைத்துச் சேர்த்து பெரிமைப்படுத்திய ஒரே ஆள் கமலாக்காதேன்:))..

    எங்கள் வீட்டில் கோஸ் எனில், சூப்பில் போடுவேன், அல்லது அதிகம் 99 வீதமும் சுண்டல்தான்.. மற்றும்படி மைசூர்பருப்பு சேர்த்து பால் கறி... இப்படி ச்ச்ச்சோ சிம்பிள் தான் செய்வேன்...

    ஆனா கோஸ் க்கு இதனை நாங்கள் கோவா எனத்தான் சொல்வோம்.. கோஸ் என்பதெல்லாம் சரித்திரத்திலேயே இல்லை:)).. தேசிக்காய்தான் எப்பவும் சேர்ப்பதுண்டு.. நீங்க பளபளக்கும் புளிக்கரைசல் ஊத்திட்டீங்க.. பாவம் வெள்ளைக் கோஸ் கறுத்திடுமே:)) இது நியாயமோ?:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஒரு சாதாரண கோஸ் க்கு இவ்ளோ மருவாதை கொடுத்து, ஊரிலுள்ள பருப்பு /

      இந்த வார்த்தையை மட்டும் கோஸ் பார்க்கவில்லை.. என்னிடமும் என்ன ஏதுவென்று கேட்கவில்லை. பார்த்திருந்தால், ஒரு சதா"ரண" என்ற வார்த்தைக்கு மணம் ஏகப்பட்ட "ரணமாகி" என்னிடம் நியாயம் கேட்ட வந்திருக்கும்:)) ஹா.ஹா.ஹா.

      சூப்பில் அரைத்துச் சேர்ப்பீர்களா? இல்லை பொடிதாக நறுக்கியா? 99 சதவிகிதம் சுண்டல் என்றால் அந்த 1 சதவிகிதம் மைசூர் பருப்பு இணைந்த பால் கூட்டா? மைசூர் பருப்பு என்பது சிகப்பு துவரம்பருப்புதானே? ஆனால் எப்படி செய்தாலும் வேலை வேலைதானே !

      எத்தனை கேள்விகள் இன்று புதனில்லா திங்களில் பிறக்கிறது:))

      நீங்கள் கோவா என்று தான் சொல்வீர்கள் என்பதை அறிந்து கொண்டேன். தேசிக்காய் என்றால் மாங்காயா?

      / நீங்க பளபளக்கும் புளிக்கரைசல் ஊத்திட்டீங்க.. பாவம் வெள்ளைக் கோஸ் கறுத்திடுமே:)) இது நியாயமோ?:))/

      நியாமான கேள்வி..! ஆனாலும் கறுத்தாலும் கறுப்பும் ஒரு அழகல்லவோ! "கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.." மாதிரி..!

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. // தேசிக்காய் என்றால் மாங்காயா?//

      இதுக்கு மேலயும் நான் உசிரோடு இருப்பனோ.. நவராத்திரி விரதமெண்டாலும் பறவாயில்லை.. மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்.. நெல்லைத்தமிழன் மேடைக்கு வரவும்:)).

      குட்டியாக கட் பண்ணி சூப் க்குப் போடுவோம். மைசூரில் விளையும் பருப்பு.. அது துவரம் பருப்பு இனமல்ல.. அது எங்களினமாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
    3. இஃகி,இஃகி,இஃகி, கமலா! தேசிக்காய் என்றால் எலுமிச்சம்பழம். புளிக்குப் பதில் எலுமிச்ச்சைச் சாறு சேர்ப்போம் என்கிறார் சமையல் வித்தகி, அதிரடி,வெள்ளை மாளிகைப் புகழ் அதிரா! சிவப்பாக இருக்கும் மசூர் டாலைத் தான் மைசூர்ப்பருப்பு என்கிறார்.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தேசிக்காய் என்றால் எலுமிச்சை பழமா? ஐயோ! இது எனக்குத் தெரியாமல் மாங்காயா என கேட்டிருக்கிறேன். இரண்டும் ஒரே புளிப்புத்தான்..! என்ன இருந்தாலும் சமையல் வித்தகி புகழ் அதிராவின் சொல்லாடலுடன் போட்டி போட முடியுமா? ஹா.ஹா.ஹா. மசூர் பருப்பு கேள்விபட்டுள்ளேன். அதைத்தான் துவரம்பருப்பு சைசில் சிவப்பாக இருக்குமே அதுவா? என கேட்டிருக்கிறேன். அந்த பருப்பை இதுவரை வாங்கியதில்லை. பயன்படுத்தியதும் இல்லை. விபரங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் அதிரா சகோதரி

      /இதுக்கு மேலயும் நான் உசிரோடு இருப்பனோ.. நவராத்திரி விரதமெண்டாலும் பறவாயில்லை.. மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்.. நெல்லைத்தமிழன் மேடைக்கு வரவும்:))./

      ஹா.ஹா.ஹா. மாங்காயா எனக் கேட்டு தங்களை தேம்ஸ்க்கு இழுத்து வந்து விட்டேனா? ஆமாம்...! தெரியாமல்தான் கேட்கிறேன். விரதமிருக்கும் சமயத்தில் தேம்ஸ்க்கு போகக் கூடாதா என்ன?

      நான் எலுமிச்சை ரசம், எலுமிச்சை சாதம் பண்ணியுள்ளேன். ஏதாவது ஆயுர்வேத மருத்துவம் எடுக்கும் சமயம் பத்தியமாய் இருக்க புளியை தவிர்த்து,எலுமிச்சம் பழச்சாறு சொண்டு சாம்பாரும் செய்திருக்கிறேன். ஆனால் இந்த பேருடையது அது என்பது தெரியாமல் போச்சு... (அந்த பேரை சொல்லவே (தேசிக்காய்) தேச குற்றம் போல் பயமாக உள்ளது:))

      மைசூர் பருப்பு பற்றி விலாவாரியாக அறிந்து, புரிநது கொண்டேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. //நாங்கதான் ஒன்னு சேர்ந்துட்டோமே இப்ப நீங்க சாப்பிட தயாரா? ? கோஸ் பிட்லே....

    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒண்ணு சேரல்லே:)) கற்பூரம் மாதிரிக் கரைந்து காணாமல் போயிட்டுதே:) பாவம் கோஸ்.. கமலாக்கா கையில சிக்கி என்னா பாடுபட்டிருக்கு.

    இன்னொன்று கமல் அக்கா... எந்த மரக்கறியையும் நன்கு கழுவிப்போட்டு வெட்டுங்கோ, வெட்டியபின் அவிக்க வேண்டாம், மற்றும் கரையக் கரையவும் அவிக்கக்கூடாது:)) சே சே இதை எல்லாம் அதிரா ஜொள்ளிக்குடுக்க வேண்டி இருக்கே:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கற்பூரம் மாதிரிக் கரைந்து காணாமல் போயிட்டுதே:) பாவம் கோஸ்.. கமலாக்கா கையில சிக்கி என்னா பாடுபட்டிருக்கு./

      ஹா. ஹா. ஹா. பின்னே சும்மாவா? நம்மகிட்டே படாதபாடு பெறத்தான் இது வளர்ந்து வந்திருக்கோ? ஆனா... தன்னை தானே கரைத்து தியாகம் செய்யும் கற்பூரம் மாதிரி கரைந்தாலும், வாசமாகத்தான் இருந்தது. அந்த பெருமை இனி உங்களால் இந்த கோஸுக்கும் சேரும்.

      நான் எப்போதுமே காரட், பீன்ஸ், கீரை ஏன் எல்லா காய்கறிகளும் கழுவிய பிறகுதான் நறுக்குவேன். இந்த கோஸ், காலிபிளவர் மட்டும் நறுக்கிய பின் அலம்புவேன். பூச்சி,புழு இருக்குமோன்னு சிறிது பயம். நிறையபேர் காய்கறிகளை அதிகமாகவோ, இல்லை அப்படியே வேக வைக்காமல்தான் சாப்பிடுகிறார்கள். சத்துக்கள் வீணாகி விடும் என்ற கவலை வருவது நியாயம்தான். பூ கோஸை அரைவேக்காட்டில் எது செய்தாலும் மிருதுவாகி விடும். ஆனால் இந்த தண்டு கோஸை எவ்வளவு பொடிதாக நறுக்கினாலும்,கறுக் கறுக் என்று வாயில் கடிபட மறுக்கும். அதனால்தான் இந்த கரையல். தங்களுக்கு தெரியாததா? கோஸ் சுண்டலும் நன்றாக இருக்கும். அத்துடன் ஏதேனும் பருப்பு சேர்ப்பீர்களோ ? இல்லை தேங்காய்ப்பூ சேர்த்து செய்யும் பொரியலை சுண்டல் என சொல்கிறீர்களா? தங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் சேர்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. நீங்கள் தப்பு டப்பா பெயர் வச்சிருக்கும் பொரியல்தான் எங்கட சுண்டல்/வறை.. பொரியல் எனில் எண்ணெயில் பொரிச்சால் மட்டுமே பொரியல் என்போம்:)).. ஹையோ டமில் சொல்லிக் குடுத்தே மீயும் அந்தக் கோஸ் மாதிரிக் கரைஞ்சிடப்போறேன்னே... அதுசரி எதுக்கு இவ்ளோ கஸ்டப்பட்டு வரிக்கு வரி பை வன் கெட் வன் ஃபிறீ மாதிரி.. சகோதரி சகோதரி என நீட்டி முழக்குறனீங்க கமலாக்கா.. அந்த கோதரியை:)) வெட்டி விடலாமே:)).. நான் சொல்லி நீங்க கேட்கவோ போறீங்க.. ஆனாலும் அந்தக் ..கோதரி கொஞ்சம் அந்நியப்படுத்துகிறது என்பது 100 வீதம் உண்மை.

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      பொரியலின் பெயர் சுண்டல் என தெரிந்து கொண்டேன். (காய்கறிகள் பொரித்து, பொரித்து சுண்ட சுருங்கிய கறியாக ஆனதினால் சுண்டல் என பெயர் வந்ததுவோ? ஹா.ஹா.ஹா.) எண்ணெய்யில் பொரிப்பதை நாங்கள் வறுத்தல் எனச் சொல்வோம்.( சேனை வறுவல், வாழைக்காய் வறுவல்.)

      ஆனாலும் உங்கள் தமிழ் மிகவும் நன்றாக உள்ளது. நீங்களும் என்னோட கோஸ் மாதிரி கரைந்தாலும், அழகான ருசியான பிட்லை மாதிரி மணக்கிறீர்கள்:))

      /எதுக்கு இவ்ளோ கஸ்டப்பட்டு வரிக்கு வரி பை வன் கெட் வன் ஃபிறீ மாதிரி.. சகோதரி சகோதரி என நீட்டி முழக்குறனீங்க கமலாக்கா.. அந்த கோதரியை:)) வெட்டி விடலாமே:))./

      வெட்டலாம்தான்..! ஆனா பயமாக இருக்கு. முன்பின் அரிவாளை தூக்கி பழக்கமில்லையா ? அதான் அநியாயமாக செயல்பட பயமாக இருக்கு..! ஹா.ஹா.ஹா.

      சரி..சரி..நீங்கள் "அன்னியனாக" முறைப்பது, தெரிகிறது. அந்த அந்நியத்தை இனி வரும் நாட்களில் தவிர்க்கப் பார்க்கிறேன்.

      மறுபடி வருகை தந்து தந்த கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete