Friday, July 18, 2025

ஆசைகளின் கோர முகங்கள்.

இது இலக்கணத்துடன் இயைந்து வந்த மரபு கவிதை அல்ல.!!!! மாறாக மனதில் சிலகணத்தில் பிறந்து வந்த புதுக்கவிதை. பிடிப்பதில்லையென ஒதுக்(ங்)குவதை விட படித்தால் புரியும் இதன் பாதை. எனவே படிக்கும் உள்ளங்களுக்கு என் பணிவான.🙏. 

தோல்வி கண்டு துவள வேண்டாம்...! 

தோல்வியே வெற்றிக்கு

தோதான முதற்படியென

தோழமைகள்  பரிந்துரைகள் தந்தபடி

தோளணைத்து கூறினாலும், 

தோல்வி கண்ட மனம் 

வேதனைகள் பலவோடு

துவண்டுதான் போகிறது. 


முன்னூறு நாட்கள், சுமந்தெடுந்து 

முழு நிலவெனவே பெற்ற மகள்

போட்டியின் இறுதி நாட்களுக்குள்

போராடி வெல்ல வேண்டுமென்ற

என்  ஆசையின் உன்மத்தம் கண்டு 

தன் ஆ(மா)றாத அன்பை, ஒரு

சேயின் கடமையாக்கி தான் 

சேர்த்த கைப்பணத்திலிருந்து  

இரு முன்னூற்று பணம் எடுத்தீந்து 

அவசர அஞ்சலில், அவசரமாக 

வெளியிட்டும், அது வெளியீடுகளில் 

வெளிவராது போன காரணத்தால், 

தோல்வி கண்ட மனம் வேதனையில்

துவண்டுதான் போயிற்று. 


எழுத்துலகில் இதுவரை எழுச்சியுடன்

பெற்ற வெற்றிகளே போதுமென்று

பேசாமலிருக்கத் தெரியாத இந்த 

பேதையவள் மனதில் மட்டுமின்றி 

இரு விழிகளில் இருந்தும், 

பெருமழையொன்று  பெருகிப்

பெய்ததைக் கண்டு  சிறிதும் அந்த 

"கலைமகளும்" கலங்கவில்லை. 

அலைமகளும் அறியவில்லை.

மலைமகளும் உணரவில்லை. 

நிலமகளும் நிச்சலனமின்றி எனை

நீண்ட  பொழுதாகிய இரவுதோறும்

நித்திரையும் கொள்ள விடவில்லை.


இத்தனைக்கும் காரணம் நம்

இச்சையென்ற ஆசைப் பேய்தான். 

இனியேனும், இச்சைக் கொண்டு

அதனின் கோர பிடி(முகங்)களில்

அகப்படாது தப்பிக்க ஓர் வழியை

அருளி  ரட்சித்திடு இறைவா..!🙏. 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பின்வரும் இந்தக்கதை நான்  எப்போதும் போலில்லாமல், வார்த்தைகளை அளவோடு அளந்து வைத்து எழுதிய கதை. எழுதிய அளவில் எந்தவித குற்றமும் இல்லை. ஆனால், என் துரதிர்ஷ்டம் காரணமாக அதிர்ஷ்டகாற்றும், தன் அளவை குறைத்து என் பக்கம் வீசாமல் போனது யார் செய்த குற்றம் என யோசித்ததில், என் மனம் கதையோடு மேலே உள்ள இந்த ஒரு கவிதையையும், சேர்த்து வடித்து தந்துள்ளது. 

இனி என் மனதில் எழுந்த இந்த கவிதைக்கா(க)ன, (கவிதையை காண) காத்திருந்த கதை. 

                   பந்து

வீட்டின் நடுவில் இருந்த அந்தக்கூடம் கலகலப்பாக சந்தோஷமாக இருந்தது.  

அண்ணா..! நான்தான் உன்னிடம் முதலில் உருட்டி விட்டேன். எனக்குத்தான் நீ மறுபடி போட வேண்டும்.." 

"இல்லையில்லை...! வரிசையாகத்தான் வரும். ரமணி பாவம்..! அவனுக்கு ஒரு தடவை கூட பந்தை நாம் இன்னமும் தரவேயில்லை...! பார்..! அண்ணன் பாலுவின் அன்பில் விழியால் கசிந்தான் ரமணி.

"இப்படியெல்லாம் விளையாடினா இது தப்பாட்டம்.. " நண்பனுக்கு ஆதரவாய் விச்சு கூறினான்

"நாங்க அப்படித்தான் விளையாடுவோம். இல்லையா சுசி.." சித்தப்பா மகன் சுரேஷ் செல்லமாக கோபித்து கொண்டான்.   

அங்கே ஒரு பெரிய பந்துவை உருட்டி விளையாடும் யுத்தமொன்று நடந்து கொண்டிருந்தது. அந்த கூடத்து அறையில் குழந்தைகளை வெய்யிலில், வெளியே செல்ல தடை போட்டு, வீட்டினுள்ளேயே விளையாட சொல்லி விட்டு, சமையலறை,மற்றும் கிணற்றுடன் அமைந்த பின்கட்டு புறக்கடையென வீட்டில் உள்ளவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் சுமூகமாக அரங்கேறி கொண்டிருந்தன.

பாட்டி, தாத்தாவுடன் அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி என கூட்டு குடும்பங்களாக சேர்ந்திருந்த வரை இந்த கூடம் பெற்ற சந்தோஷங்களை நான் மட்டுந்தான் அறிவேன். காலப்போக்கில் அவர்களை விட்டு விலகிய மனச் சோர்வை அந்த வீடு மட்டுமின்றி, அந்த கூடமும் நிறைய அடைந்ததென்னவோ உண்மையென அவர்கள் ஒவ்வொருவரின் இழப்பும் எனக்கு உணர்த்தியது. 

இதற்கு நடுவில், தங்கை சுசி, நல்லபடியாக கல்யாணமாகி போனதோடு, அவள் கணவர், வீடு என்ற தனிப்பட்ட சொந்தத்தில் இந்த வீட்டை நாளாவட்டத்தில் கொஞ்சம் மறந்தே போனாள் எனவும் சொல்லலாம். 

தம்பி ரமணா, அவனும் அலுவலக வேலையாய் வேற்றூருக்கு பிரிந்து போனான். "அவன் குடும்பம் என் குடும்பத்துடன் மனமொத்து வர மறுக்கிறதென்பதை" வாரந்தோறும் ஒரு வருத்தமாக ஆரம்பத்திலெல்லாம் கடிதாசியில் கொட்டித் தீர்த்தான்.

என் மனைவி மங்களத்தை குற்றம் சொல்லவே முடியாது. எங்களுக்கு திருமணமானதிலிருந்து கூட்டுக்குடும்பம் ஏற்படுத்திய பக்குவத்தில், அனுசரித்து வாழப் பழகி போயிருந்தாள். ஆனால், எல்லோருக்கும் அதே திறமைகள், பக்குவமான பரந்த மனதுகளென அமைய வேண்டும் என்பதில்லையே..!

காலங்களின் விரைசல்களில். வாழ்வனைத்தும் கண்ணாமூச்சி விளையாட்டைப் போல ஒளிந்தும், மறைந்தும் போயின. அப்படி மறைந்து போனவைகளில் என் மனைவி மங்களமும் துரதிர்ஷ்டவசமாக இணைந்து போனாள். இத்தனை வயதிற்கு நானும், இந்த கூடமும் மட்டும் இப்படி நிலையாய் நிலைத்து நிற்போமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 

எங்கள் ஒரே மகனும், கற்ற படிப்பு பெற்று தந்த தகுந்த உத்தியோகத்தில் வெளிநாட்டில் வாசம் செய்ய போனவன்தான்...! அத்தோடு நானும், அவன் மகனான என் பேரக் குழந்தையாடு கொஞ்சி குலாவி வாசம் செய்ய கொடுப்பினைகள் இல்லாதவனாகிப் போனேன். தனிமையில் தவிக்கும் என் நலம் விசாரிப்புக்காக வாங்கித் தந்த கைப்பேசியில் அவ்வப்போது அழைப்பான். "அது ஒப்புக்காக பேசுவதற்காக" என்றுதான் எனக்கு தோன்றும்.  

என் தாத்தா கட்டிய வீட்டிற்கும், அவரின் அன்பினால் வளர்ந்து திரிந்த இந்த ஊருக்கும் என்னை விட்டு பிரிய மனமில்லை. அதுதான் தனியாளாக நின்ற போதும், பழைய வீட்டில் வாசம் செய்த நினைவுகளே என் நிரந்திர சுவாசமாயின. 

இப்போது ஆளரவமின்றி சந்தடியில்லாத அந்த கூடமும் அதன் வெறுமையை பொறுமையாய் சகித்து கொண்டிருப்பதாய் எனக்குத் தோன்றியது. 

கைப்பேசி அழைத்தது. வழக்கப்படி நலம் விசாரிக்க மகன்தான் அழைப்பான் என்ற எண்ணத்தில் சுவாரஸ்யமின்றி எடுத்தேன்.

"அப்பா.. எப்படியிருக்கிறீர்கள்.? இந்த தடவை உங்கள் தனிமையை போக்க நாங்களே அங்கு வருகிறோம்." என்றான் எடுத்த எடுப்பிலேயே....! 

குரலில் வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் அதிகமாக தொனித்தது.

"சரி....! சரி..! எப்போது? என்றேன். என் குரலின் சுரத்தின்மையை உணர்ந்தவன் போல்," கூடிய விரைவில் அப்பா..! அத்தோடு நீங்களே எதிர்பாராத ஒன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரப்போவதொன்று நடக்கவும் போகிறது. காத்திருங்கள்...! வருகிறேன் அப்பா..! என்றவன் வேறேதும் பேசாது, தொடர்பை துண்டித்து விட்டான். 

அப்படியென்ன எனக்கு மகிழ்வு தரப்போகும் விஷயத்தை இவன் தரப் போகிறான்.. ? வேலை கிடைத்ததும், தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் பேச்சை மீறி,பணம், கௌரவமென வெளி நாட்டு வேலையை ஏற்று சென்ற போதே என் மனதையோ, மகிழ்ச்சியையோ பற்றி மதிக்காமல் சென்றவன்தானே..! 

என் மகிழ்ச்சிகளின் வேர்களைதான் ஆழமுடன் நேசித்த உறவுகளான இவர்கள் வெட்டியெறிந்து விட்டுப் போய் ஆண்டுகள் பலவாகி விட்டனவே..! இனி வந்து எவ்வளவு பேசி சென்றாலும், அவை பசுமை கொண்டு துளிர்த்துத்தான் விடுமா என்ன..? 

நாட்கள் நகர்ந்ததில், சொன்னபடி வந்தது அவன் மட்டுமல்ல..! என் தம்பி ரமணாவும், அவன் மனைவியும், அவர்களின் பத்து வயது பேரனும். ரமணாவை பார்த்ததும், பழைய நினைவுகள், உடைப்பெடுக்க ஆரம்பித்தன

" அப்பா..! இனி நாங்கள் இங்குதான், இந்த வீட்டில்தான், உங்களுடன் நிரந்தரமாக வாழப்போகிறோம். எங்களின் ஏற்பாட்டின்படி சித்தப்பா தங்கியிருந்த ஊருக்கு நேற்றே நாங்கள் வந்தடைந்தோம். . நேற்றெல்லாம், உங்களைப் பற்றித்தான் சித்தப்பா நிறைய பேசிக் கொண்டிருந்தார். 

என் தம்பி மணியும், அதான், நம் சித்தப்பாவின் பையன்.... தன் வேலையையும் இவ்வூருக்கு மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் ஒரு மாதத்தில் இங்கு வந்து விடுவான். அதுதான் அவன் பையனையும் இப்போதே எங்களுடனேயே அழைத்து வந்து விட்டோம். நானும் இங்கேயே என் படிப்புகேற்றபடி, ஒரு வேலையை தேடிக் கொள்ளப் போகிறேன். இங்கே நம் பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி இனி ஒன்றாக படித்து வளரட்டும் அப்பா..! இதோ...! பார்த்தீர்களா உங்கள் பேரன் மகேஷை...! " 

அவன் பேச, பேச ஆச்சரியங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அழுத்தி இனம் புரியாத சிறு ஆனந்தத்தை என் மனதில் துளிர விடச் செய்ததென்னவோ உண்மைதான். .! எளிதில் கரைந்து விடக் கூடாதென்று இருந்த "மனமென்ற வைராக்கிய மலை" உளிகள் ஏதுமின்றி என்னுள் உடைய துவங்கின. 

ரமணா அருகில் வந்து கண்களில் நீர் வடிய" இத்தனை வருடங்களாக உன்னுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாததற்கு என்னை மன்னித்து விடு அண்ணா" என்று கூறியபடி என்னை அணைத்துக் கொண்டான். உடன் பிறந்து, ஒன்றாக வளர்ந்த பாசம் வென்று கலங்கிய கண்களை மறைக்க, அவன் தழுவலில் சங்கமித்தேன். 

அவன் மனைவி தன் கைகளை கூப்பியபடி," என்னையும், மன்னித்து விடுங்கள் அண்ணா..! இது நாள் வரை உங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பை புரிந்து கொள்ளாத அரக்கியாக இருந்து விட்டேன். நீங்கள் இப்போது மன்னித்து எங்களை ஏற்றுக் கொண்டால்தான் நான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக நினைத்து மீதி நாட்களை கழிக்க முடியும்..மன்னிப்பீர்களா? " என குமுறிய போது, வழக்கமாகவே இரக்கப்பட்ட மனது கரைந்து அவளின் தவறுகளை மறக்கத் தூண்டியது. 

இதுவரை என்னைப் பார்த்தறியாமல், இப்போது என்னையே பார்த்துக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனான மகேஷை, "அருகில் வா" வென கூறி, அவனை தழுவிய போது நான் மறுபடி புதிதாக பிறந்த ஒரு சந்தோஷத்தையும் அடைந்தேன்.

"மகேஷ் என் செல்வமே...! எப்படி இருக்கிறாயப்பா..? என் குரல் உடைத்துக் கொண்டு வெளியேறியது." தமிழில் நான் பேசினால் உனக்குப் புரியுமா..?" என்ற என் சந்தேகத்தை கேட்கும் முன், நல்ல தமிழில், "தாத்தா..! இனி என் பெயர் மகேஷ் இல்லை....! பாலு... இது உங்கள் பெயர்தானே தாத்தா..! தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்க வேண்டுமாம்.. இதுதானே நம் குடும்பத்தின் பழக்கம்..? என்றபடி என் காதில் தேனைப் பாய்ச்சினான். 

"நான் தமிழ் நல்லா பேசுவேன் தாத்தா..! பேசுறேனா ..? என அவன் லேசாக முறுவலித்து கண் சிமிட்டிய போது, அவனில் என் பழைய சிறு வயது பாலுவை கண்டேன். 

" அம்மாவிடம் கத்துக்கிட்டேன். எனக்கு உங்களுடன் இருக்கத்தான் ஆசை. அதான் அப்பாவை வறுப்புறுத்தி  இங்கேயே வந்து விட்டோம். இனிமே இங்கேதான் நான் படிக்கப் போறேன். பிறகு பெரியவன் ஆனாலும், நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன் தாத்தா..!" தெளிவாக பேசி என்னை வாய் விட்டு அழ வைத்தான் மகேஷ். இல்லையில்லை... அந்த குட்டி பாலு....!

இளைய தலைமுறைகள் ஒரு அற்ப சுவை காண திசை மாறி பயணித்தாலும், அவர்களிடையே தேங்கியிருக்கும் மாறாதந்த பந்தபாசங்கள், கயிற்றால் தன்னைத்தானே பிணைத்துக் கொண்டு, பழைய பாரம்பரிய சுகங்களை பெற என் வீட்டின் வாசலை வந்தடைந்ததில், மனம் நிறைந்த நன்றியுடன் மருமகளை பார்த்தேன். அவள் முகத்தில் "என் மங்களத்தின்" அனுசரிக்கும் சாயல் தெரிந்தது. 

சந்தோஷத்தில் மகன், பேரன்கள், தம்பி குடும்பமென வீடு பழைய கலகலப்பை பெற்ற போது பால்ய நண்பன் விச்சுவும், அவன் மகள், மருமகன், குழந்தைகள் என குடும்ப சகிதமாக, மீண்டும் அவ்வூருக்கே குடி வந்து என்னை முழுமையான ஆனந்தத்தில் ஆழ்த்தினான். ஆனால், என் மனதின் ஒரு ஓரம், மங்களத்தின் பிரிவை எண்ணி வருத்தப்பட்டது. "அவள் இருந்திருந்தால் இப்போது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்.." என்பதை நினைக்காமல் இருக்க இயலவில்லை. 

" தாத்தா..! இதை வைத்துக் கொண்டு நாம் விளையாடலாமா.. ? என்றபடி ஒரு பெரிய பந்தை காலால் உருட்டியபடி வந்தான் மகேஷ். 

ஓ.. ....! என்றபடி நான் மகிழ்வானதை கண்டதும்," தாத்தா..! இந்த பந்து மாதிரிதானே நம் வாழ்க்கையும்....! இந்தக்கூடத்தில் உருட்டி உதைத்து விட்டால் எதிர் திசை நோக்கி ஓடுமே தவிர சுவரில் மோதி, இல்லை, நம்முடன் விளையாடும் மற்றொருவரின் உருட்டலுக்கு கட்டுப்பட்டு நம்மிடமே வந்து விடும் இல்லையா..? இப்போ நான் உங்களிடம் வந்து சேர்ந்த மாதிரி....! ஆனால், இப்பந்தை இப்படித்தான் ஆட வேண்டுமென்ற விதிமுறைகளை மாற்றினால், பந்தின் தன்மை தவறாக மாறி விடுமல்லையா தாத்தா... ?" 

நான் நெக்குருகி போனேன்.

"வயதுக்கு மீறிய எத்தனை அறிவாற்றலடா உனக்கு..!" மனது பெருமிதத்தில் விம்மியது." 

"உன்னைப் பேரனாக நான் இப்படி பார்க்க வேண்டித்தான், திடமான இந்த வீட்டையும், என்னையும், என் தாத்தா நல்ல சிரத்தையுடன் உருவாக்கி, என் மனமதையும் சிறப்பானதாக செதுக்கி வைத்திருக்கிறார் போலும்..! அதற்கேற்றபடி உடலுக்கு போதுமான வலுவையும் அந்த ஆண்டவன் தந்து விட்டான்.... எல்லாம் அந்த இறைவனின் கட்டளையப்பா...!" கண்கள் குளமாக குனிந்து அவன் கன்னத்தில் பாசமுடன் முத்தமிட்டபடி அவனை கொஞ்சி விட்டு நிமிர்ந்தேன் . 

அப்போது வெளியில் காலாற சென்று விட்டு திரும்பி வந்த தம்பி ரமணா, விச்சு இருவரையும், அன்போடு அவர்களின் கைப்பிடித்து வரவேற்றேன். என் மகனும், தம்பி மகனும் உள்ளிருந்து வந்து அவர்களிடம் அன்புடன் பேசவாரம்பித்தனர். அன்பிற்கு அடைக்குந்தாழ் என்ற ஒன்று என்றுமில்லையென என் உள்ளம் உறுதியுடன் கூறியது. 

சமையல் அறையிலிருந்து வந்த உணவின் நறுமணங்கள் எங்களின் பசியை தூண்டவே, "சாப்பிட வாருங்கள் அப்பா..!" என்ற மருமகள்களின் அன்புக்கு கட்டுப்பட்டு சமையல் அறைக்குள் சென்றோம். 

எங்கள் பேரன்கள், நண்பனின் பேரன் பேத்திகள் என அந்தக்கூடமும் முக மலர்வுடன் பழையபடி பந்தாட்டத்திற்கு தயாரானது. பல பல வருடங்களுக்குப் பிறகு அந்த கலகலப்பு அதனிடமும் தொற்றிக் கொண்டதை நான் மகிழ்வான மனதோடு மானசீகமாக உணர்ந்தேன். 

கதை நிறைவுற்றது. 


இதை அன்றே எழுதி வைத்து விட்டேனே தவிர நம் சொந்தக்கதையையும், சோகப் புலம்பல்களையும் வெளியில் சொல்வானேன் என எதையும் வெளியிட விருப்பமின்றிதான் இருந்தேன். ஆனால், இவ்வார செவ்வாய் கதையில் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் "முன்கதை சுருக்கமான" எழுத்தை கண்டதும், நாமும் நாம் பெற்ற அனுபவத்தை வெளியிடலாமே எனத் தோன்றியது. 

உடனே, சிறு தூவானத்திலும்/ மெலிதான சாரலிலும் கூட பெருமழையின்  நறுமணத்தை நுகர்ந்து பார்க்கவும் சிறு ஆசையும் வந்தது. என்ன இருந்தாலும் மறுபடியும் இந்த  உயிருள்ளவரை "ஆசைப்பேயின்" வசந்தான் சிக்குவோம் என்பதும் யாவரும் உலகறிந்த விஷயந்தானே..! அதன்படி சிக்கி விட்டேன். சிக்கலின் நூலறுபடாமல், சிதைந்து கனத்த மனதின் வலி மறைந்து போகும்படிக்கு கதை குறித்த நல்ல கருத்துக்களை வழக்கம் போல என் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். கவிதையோடு கதையையும் படித்து ரசிக்கும் என் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு என்றும் என் பணிவான நன்றிகள். 🙏. 

34 comments:

  1. தோல்வியின் வேதனையைச் சொல்லும் கவிதை படிப்பதற்கு நன்று.  ஆனால் நடைமுறையில் ஒதுக்கி விட்டு அடுத்த முயற்சியைத் தொடரவேண்டும் என்பதே சரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      பதிவுக்கு தங்களின் உடனடியான அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உண்மைதான்.! வெற்றிப் பாதைக்கு முதல் படிதான் தோல்வி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால், தோல்விப்படியின் சறுக்கல்களிருந்து சமாளித்து அடுத்தப்படி நோக்கி நகர இறைவனின் துணை வேண்டும். அதற்கு "அவனும்" சற்று அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அவகாசத்தில்தான் தோழமைகளின் ஆறுதலான துணைகளோடு அடுத்தப்(படிகள்)படி நோக்கி நகர "அவனும்" ஆணையிடுவான். அதன்படி இன்றைய பதிவு.

      முன்பாக கவிதையை பாராட்டியதற்கும், தங்களின் அன்பான, ஆறுதலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ராஜேஷ்குமார் தனது  முதல் படைப்பு பிரசுரமாவதற்கு முன் எத்தனை கதைகள் திருப்பி அனுப்பப்பட்டன என்பதைச் சொல்லி இருப்பார். 

    அந்த வெற்றி மேடையில் ஏறுவதுதான் கொஞ்சம் கடினம்.  ஏறி புகழடைந்து விட்டால் லாண்டரிக் கணக்கு கூட பிரசுரமாகும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /வெற்றி மேடையில் ஏறுவதுதான் கொஞ்சம் கடினம். ஏறி புகழடைந்து விட்டால் லாண்டரிக் கணக்கு கூட பிரசுரமாகும்!/

      ஹா ஹா ஹா. அது என்னவோ உண்மைதான். பிரபலமடைய வேண்டிய நேரமமென்ற ஒன்று வந்தால்தானே உண்டு. அது எல்லோருக்கும் அமைவது இல்லையே..!

      எழுத்தாளர் ராஜேஷ்குமார் பற்றி சொல்லியிருப்பது குறித்து தெரிந்து கொண்டேன். அவர் எங்கே...! நான் எங்கே..! . மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இருப்பினும் உங்களின் ஊக்குவிப்புக்கு என் அன்பான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கதை படித்தேன். 

    என் உடனடி கருத்து இன்னும் கொஞ்சம் திருத்தி எழுதி முயற்சிக்கலாம்.  நல்ல கரு. 

    இப்போது பெரும்பாலானோரின் எண்ணம், நிலை. 

    இன்னொரு யோசனை, இதை தினமலர் வாரமலருக்கு அனுப்பி இருக்கலாம் நீங்கள்.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதையை பொறுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் ஆலோசனையை ஏற்கிறேன். கதையும், கருவும் நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      அந்த பத்திரிக்கைப் போட்டியை எபியில் பார்த்ததுந்தான் அதில் கலந்து கொள்ள ஆசையே வந்தது. குடும்ப இதழ் என்பதால் குடும்ப கதை எழுதலாமென்ற யோசனையும் வந்தது. வேறு எந்த பத்திரிக்கைகளுக்கும் அனுப்புகிற எண்ணங்களே வந்ததில்லையே. .! இனி நீங்கள் சொல்வது போல் என்றாவது முயற்சிக்கலாம். ("அட..! இன்னமும் ம் ஆசையைப் பாரேன்.. "என உள்மனது கூவுகிறது.) ஆறுதலான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. என்னுடைய முன்கதையில் கதை சிதைக்கப்பட்டதைச் சொல்லி இருந்தேன்.  உங்கள் விஷயத்தில் அவர்களுக்கு கிடைத்த கதை வெள்ளத்தில் காணாமல் போயிருந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /உங்கள் விஷயத்தில் அவர்களுக்கு கிடைத்த கதை வெள்ளத்தில் காணாமல் போயிருந்திருக்கிறது./

      ஆம். அப்போது மழை வெள்ளம் கூட சென்னையில் இல்லை. :இருந்தாலும், கதையும் வெள்ளத்தில் கப்பலாக போயிருக்கும் என நினைக்கலாம். :))) உங்களுக்கு நடந்தது வேறு. அது மிகவும் தவறான முறையில் நடைப்பெற்றுள்ளது. தலைப்பை மாற்றி, கதையை மாற்றி, அதுவும் உங்களிடம் கலந்து கொண்டு ஒரு வரி கூட கேட்காமல், மிக மோசம்.

      இது முடிவைப் பற்றி எந்த ஒரு தகவல்கூட தெரிவிக்காமல், கதைகள் வேறு எந்த பத்திரிக்கைக்கு போய் உள்ளதோ? அதனால்தான் என் பதிவிலாவது வந்த சந்தோஷம் கிடைக்கட்டும் என.. இப்படி....! ஏனென்றால், இத்தனை வார்த்தைகள் என்ற வட்டத்துக்குள் சுருக்கி, நிறைய மாற்றி, எழுத்துப் பிழை வராமல் இருக்க இரவு பகலாக பல முறை படித்து திருத்தி, பிறகு அனுப்பவே வேண்டாமென நினைத்த அந்த கடைசி இரண்டு நாட்களுக்குள் ஒர் திருப்பமாக ரூபாய் 600 ஐயும் கவர்ந்தபடி சென்றது ஒரளவு வென்று விடுமென நம்பிக்கை கொள்ள வைத்தது. இறுதியில் வேதனைகள். என்னவோ என் நேரம் சரியில்லை. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கதையில் உணர்வுகள் நன்கு வெளிப்பட்டிருக்கின்றன.  இதற்கெல்லாம் முன்னோடி வருஷம் 16 படம் என்று எனக்குத் தோன்றும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      கதையின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      /இதற்கெல்லாம் முன்னோடி வருஷம் 16 படம் என்று எனக்குத் தோன்றும்!/

      ஹா ஹா ஹா.வருஷம்‌ 16 படம் மட்டுமல்ல ..! 16 வருடங்களுக்கு முன்பு வந்த‌ படங்களும் காரணம்.தவசி மற்றும், வானத்தைப் போல படங்களை எப்படி ரசித்திருக்கிறோம். இப்போது எல்லாமே பழைய பஞ்சாங்கம் ஆகி விட்டது. புதிய வழிமுறைகளை மக்கள் விரும்பி நேசித்து அதில் ஒன்ற ஆரம்பித்து விட்டனர். உங்களது ஆறுதலான பல கருத்துக்கள் கண்டு மனம் தேற்றிக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கற்பனையில்தான் இத்தகைய சந்தோஷங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

    பறவை பறந்துவிட்டால், திரும்ப இந்தியா என்ற கூட்டிற்கு வருமா? அதிலும் சொந்தக் கிராமத்துக்கு? வாய்ப்பு கதைகளில்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதையை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்துள்ளீர்கள் மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

      நீங்கள் கூறுவது போல கற்பனையிலாவது இவ்வாறு நடக்க சாத்தியம் உள்ளதே..! அதைச் சொல்லுங்கள். இப்போது வெளிநாட்டு மோகம் என்பதை விட ஒரளவு வருமானத்திற்காக அதைதான் விரும்பி ஏற்கிறார்கள். இருப்பினும், சிலர் அன்பை நேசித்து, அதை உத்தேசித்து திரும்பி உறவுகளோடு வர வாய்ப்புக்கள் உள்ளதல்லவா? அதன்படி இக்கதையை வைத்துக் கொள்வோம். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. சில கணத்தில் பிறந்த புதுக்கவிதையை ரசித்தேன்.

    என்ன இன்றைய பதிவில் சந்தோஷம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்கள் கவிதையை படித்து ரசித்தமைக்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகள். எங்கே முதலில் கவிதையை பார்த்ததும் வராமல் போய் விடுவீர்கள் என எண்ணித்தான் முதலிலேயே ஒரு குறிப்பாக சில வரிகளையும் சேர்த்தேன்.

      /என்ன இன்றைய பதிவில் சந்தோஷம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது?/

      கவிதையை கண்டதும் காரணம் விளங்கியிருக்குமே..! வருத்தத்தில் எழுந்த அந்த கவிதை கொஞ்சம் சந்தோஷங்களை கடனாக பெற்றுக் கொண்டது. :)))

      உங்கள் அனைவரின் கருத்துக்களும் அதை கண்டிப்பாக மீட்டெடுத்து கொண்டு வந்து தந்து விடும். தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கவிதை சில கணத்தில் பிறந்த கவிதை அருமை.
    கதை மிக அருமையாக இருக்கிறது.
    தனிமையாக இருக்கும் தாத்தாவுக்கு பேரன் , மற்று தம்பி குடும்பம், நண்பர்கள் பக்க துணை கிடைத்து விட்டது.
    உங்கள் கதையில் மகனின் மனதில் ஏற்பட்ட மாற்றம் எல்லோர் மனதிலும் ஏற்பட்டு இப்படி சேர்ந்து வாழ வந்தால் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? கால் வலி தற்சமயம் குறைந்துள்ளதா? தங்கள் மகன் இங்குதான் தங்களுக்கு உதவியாக இருக்கிறாரா? அவர் இங்கிருக்கும் போதே நல்ல மருத்துவரிடம் சென்று கால்வலிக்கு மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் உங்கள் வலிகள் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

      தாங்கள் உங்களின் இந்த பிஸியான நேரத்திலும் என் பதிவுக்கு வந்து ஆறுதலான கருத்தினை கூறியமைக்கு மிகவும் மகிழ்வடைகிறேன்.

      கதை மிகநன்றாக உள்ளதென நீங்கள் கூறியதே எனக்கு பத்திரிக்கையில் வெளி வந்திருந்தால் வரக் கூடிய சந்தோஷத்தை விட இரட்டிப்பு மகிழ்வை தருகிறது. கதையை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்துள்ளீர்கள்.

      ஆம்.. இதுபோலவே பிரிந்திருக்கும் குடும்பங்கள் அன்போடு ஒன்று சேர்ந்தால் மகிழ்வு தான்..! காலங்கள் ஒருநாள் மாறும். அந்நிலை சிலர் வாழ்வில் வந்து சேரும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. நமக்கு என்ற ஒரு தளம் இருக்கும் போது உங்கள் கற்பனைகளை, கதைகளை இதில் பதிவு செய்யுங்கள்.
    மகிழ்ச்சியாக இருங்கள். பத்திரிக்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு எழுத வேண்டும்.
    கதையில் மாற்றம் செய்ய எங்களுக்கு உரிமை இருக்கு என்பார்கள். நீளம் கருத்தி வெட்டப்படும், திருத்தபடும் என்பார்கள். வருத்தபடாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள் நல்ல நேர்மறையான சிந்தனைகளுடன் கதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /நமக்கு என்ற ஒரு தளம் இருக்கும் போது உங்கள் கற்பனைகளை, கதைகளை இதில் பதிவு செய்யுங்கள்.
      மகிழ்ச்சியாக இருங்கள். பத்திரிக்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு எழுத வேண்டும்.
      கதையில் மாற்றம் செய்ய எங்களுக்கு உரிமை இருக்கு என்பார்கள். நீளம் கருத்தி வெட்டப்படும், திருத்தபடும் என்பார்கள். /

      நீங்கள் கூறுவது உண்மைதான்..! நமக்கென்று இந்த தளம், இதில் நம் நட்புகள் என ஒரே குடும்பமாக கற்பனை கதைகள், கவிதைகள், நம் அனுபவங்கள், சமையல் என வெளியிட்டு பகிர்ந்து அதை வரவேற்று, பாராட்டி சந்தோஷமாக வாழ்கிறோம். ஏதோ அச்சில் நம் எழுத்தைப் பார்க்க வேண்டுமென ஒரு ஆசை எழுந்தது. அதுவும் நம் எ. பியில்தான் அந்த போட்டி விபரங்களை கண்டதும், கதைகள் என எழுத ஆரம்பித்த அந்த 17 வயதின் கனவுகள் மீண்டும் தலைத் தூக்கியது. முயற்சிக்கலாமே என்ற நப்பாசை அதற்கு தூபமிட்டது.

      நீங்கள் "வருத்தப்படாதீர்கள்" என ஆறுதல் தந்ததை பார்த்ததும், படித்ததும் என் விழிகள் கலங்கி விட்டன. எல்லாமே நேரமென்ற ஒன்று கூடி வந்தால்தானே நடக்கும். இதில் எனக்கு மிகவும் நம்பிக்கை. இப்படி உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டது மனதிற்கு மகிழ்வாக உள்ளது. தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. எழுத்துலகில் - கமலாக்கா நானும் இதை அடிக்கடி நினைத்ததுண்டு. மனம் கொஞ்சமல்ல நிறையவே வருத்தமும் பட்டதுண்டு. ஆனால் உடனே எனக்குப் பல எழுத்தாளர்களின் பெயர்களும் நினைவுக்கு வந்துவிடும். லாசரா அவர்களின் முதல் கதைகள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனவாம். இதெல்லாம் ஒரு எழுத்தா என்ற ரீதியில் அவர் மிகவும் ஆழமாக எழுதக் கூடியவர். கொஞ்சம் புரியாக வகையில் அல்லது மீண்டும் வாசிக்க வைக்கும் அளவில் என்றும் கூடக் கொள்ளலாம்.

    அது போல இப்போது பிராபல்யமான எழுத்தாளர் ராஜேஷ்குமார்.

    எழுத்துலகில் எழுதி வெற்றி பெற்றுவிட்டால் அதன் பின் என்ன எழுதினாலும் ஆஹா ஓஹோ என்று பாராட்டப்படும் என்பதும் உண்மை. அதையும் பார்க்க முடியும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /எழுத்துலகில் எழுதி வெற்றி பெற்றுவிட்டால் அதன் பின் என்ன எழுதினாலும் ஆஹா ஓஹோ என்று பாராட்டப்படும் என்பதும் உண்மை. அதையும் பார்க்க முடியும்./

      ஆம் சகோதரி. நானும் இதைப் போன்று பல எழுத்தாளர்களின் ஆரம்ப நிலையைப் பற்றி படித்து கேள்வி பட்டுள்ளேன். அது போலவே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள் அததற்கு என்று ஒரு நேரம் காலம் அமைய வேண்டுமில்லையா? அதைத்தானே நாம் அதிர்ஷ்டம் என்கிறோம். எதற்குமே காத்திருப்பதில் தவறில்லை. மனந்தான் சற்று துவண்டு விடுகிறது. நாம் எதையும் கடக்கும் ஆற்றலும் பெற்றவர்கள் என்ற எண்ணமும் எனக்குண்டு. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  11. பந்துவை//

    அர்த்தம் மாறுபடுகிறதே!

    அக்கா குழந்தைகள் பந்தை உருட்டி விளையாடியதா? இல்லை பெரியவர்கள் சமையலறையில் "baபந்துவை' உருட்டினார்களா!!!!! ஹாஹாஹா

    கூடத்தில் குழந்தைகள் பந்து உருட்டினார்கள். பெரியவர்கள் உட்பக்கம் 'பந்துவின் தலையை' உருட்டினார்கள்!!!!! சும்மா இது எனக்குத் தோன்றிய வரி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

      /அக்கா குழந்தைகள் பந்தை உருட்டி விளையாடியதா? இல்லை பெரியவர்கள் சமையலறையில் "baபந்துவை' உருட்டினார்களா!!!!! ஹாஹாஹா/

      ஹா ஹா ஹா. ஆம். சுற்றம் என்பதற்கு baபந்து என்றொரு அர்த்தமும் உண்டே..! நானும் ரசித்தேன் தங்களின் வார்த்தை ஜாலத்தை. சற்றும் சேரும் போது இப்படி மற்றொருவரை குறித்து மற்றொருவர் பேசி மகிழ்வது,(உருட்டுவது) எங்குமே சகஜமாகதானே இருக்கும்.ஹா ஹா ஹா.

      தங்களின் கருத்துகளுக்கு நான் இதுவரை பதில் தராமல் இருந்ததற்கு மன்னிக்கவும். உங்களுக்கே தெரியும் தங்களின் கருத்துக்கள் வந்த நாளின் நிலவரங்கள். மன்னிக்கவும் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கமலாக்கா, இக்கதையை ஏதேனும் போட்டிக்கு அனுப்பினீங்களா? போட்டிக்கு என்றால் இதைக் கொஞ்சம் தட்டிக் கொட்டி அனுப்பியிருக்கலாமோ என்று தோன்றியது.

    கதைக்கரு அருமை. மகிழ்வான முடிவு.

    இப்படியான நேர்மறை முடிவு கொண்ட, தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ரூல்ஸுடன் நம்ம ராயசெல்லப்பா சார் கதைப்போட்டி அறிவிப்பார் இந்த வருடமும்.

    கமலாக்கா நீங்கள் அதற்குக் கண்டிப்பாக அனுப்பலாம். அவர் பெரும்பாலும் ஆகஸ்டில் அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.

    வந்ததும் சொல்கிறேன் அக்கா. ஸ்ரீராமும் சொல்வார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆம். போட்டிக்காகத்தான் குறிப்பிட்ட வார்த்தைகளில் வரவேண்டுமென்பதற்காக எதையும் விவரிக்காது நீட்டி அதிகமாக்கி எழுதாமல் சுருக்கி எழுதினேன்.

      ஆகஸ்டில் நம் பதிவர் செல்லப்பா சாரின் சிறுகதை போட்டி வந்ததும் சொல்லுங்கள். அதன்படி அதில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன். உங்களுக்கும், ஸ்ரீராம் சகோதரருக்கும் என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. அக்கா, கவிதையும் நல்லாருக்கு. கண்டிப்பாக உங்கள் எழுத்து நல்ல எழுத்தே. எனவே அதற்கும் கிடைக்கும் பாருங்கள் ஆதரவு!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      கவிதையையும் படித்துத் தந்த தங்களது ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி. ஏதோ எனக்கு தெரிந்த வகையில் உங்கள் அனைவரின் ஊக்கங்கள் தரும் மகிழ்வோடு எழுதுகிறேன்.மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கவிதை ஒரு சில கணங்களில் பிறந்ததான் காரணமும் தெரிந்தது. அக்கா பெரும்பாலும் ஒரு வருத்தம் வரும் போதுதான் நம் மனமும் பல கற்பனைகளில் மிதக்கும், எழுத வைக்கும் இல்லையா?

    அக்கா இதை எல்லாம் அதீத ஆசை என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் எல்லாருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான். ஆனால் அந்த ஆசை நிறைவேறாத போது அதைக் கடந்து வரத் தெரிந்தால் மட்டும் போது,

    இரண்டாவது - போட்டியில் பல கதைகள் இடம் பெற்றிருக்கும் இல்லையா? அதில் உங்கள் கதை நன்றாக இல்லை என்பதல்ல. அங்கு வந்திருக்கும் கதைகளில் 1/4 மார்க்கில் கூட நம் கதை பின் வாங்கலாம். அல்லது கதைகளுக்கான நடுவர்களின் எண்ணங்களும் மாறுபடலாம் இல்லையா? அதனால் நம் கதை தோற்றுப் போச்சு என்ற அர்த்தமும் இல்லை.

    ஒரு சில போட்டிகளில், முதல் கட்ட நடுவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டவை இரண்டாம் கட்ட நடுவர்களுக்குப் பிடித்திருக்கலாம். அல்லது முதல் கட்டத்தில் தேர்வானவை இரண்டாம் கட்டத்தில் நிராகரிக்கப்படலாம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /பெரும்பாலும் ஒரு வருத்தம் வரும் போதுதான் நம் மனமும் பல கற்பனைகளில் மிதக்கும், எழுத வைக்கும் இல்லையா?/

      உண்மைதான். சோகங்களும், மகிழ்வைப் போலவே கவிதையை எழுத தூண்டுவிக்கும் எனப்படித்திருக்கிறேன். அதன்படி இந்த கவிதையும் என் சிந்தனையில் புறப்பட்டது.

      /ஒரு சில போட்டிகளில், முதல் கட்ட நடுவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டவை இரண்டாம் கட்ட நடுவர்களுக்குப் பிடித்திருக்கலாம். அல்லது முதல் கட்டத்தில் தேர்வானவை இரண்டாம் கட்டத்தில் நிராகரிக்கப்படலாம்./

      உண்மைதான்.. நிறைய கதைகள் வரும் போதில், அதில் செலக்ட் செய்வதென்னவோ நடுவர்களுக்கு சிரமம்தான். நான் சாதாரண தபாலில் அனுப்பாமல், ரூபாய் எழுநூறு வரை செலவழித்து இறுதி நாளில் அனுப்பியதால் எனது கதையும் படித்து கொஞ்சமாவதுபரீசீலனை செய்யப்படும் என நம்பினேன்.

      தங்களது ஆறுதலான கருத்துக்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது. எனக்கு இதற்கெல்லாம் பதில் தர தாமதமாகி விட்டது. அதற்காக மன்னிக்கவும் சகோதரி.நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  15. இச்சை எனும் ஆசைப்பேய் பற்றிய கவிதையும், வைராக்கிய மலையாக இருந்த மனம் உளிகள் ஏதுமின்றி உடைத்தெறியப்பட்ட சம்பவத்தைச் சொல்லும் கதையும் மனதைத் தொட்டன. உண்மையிலேயே ஆசைதான் நம் ஒவ்வொருவரையும் முன்னோட்டு நடத்திக் கொண்டிருக்கிறது. நாம் ஆசை நமக்குச் சாதகமாக நிகழும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்பதைச் சொல்லி விளக்க முடியாத ஒன்று. என்றாலும் சில வருத்தங்களும் இப்படி வரலாம் தான்.
    அதைக் கடந்து நம் அடுத்த ஆசையை நோக்கி அது நிறைவேறுமா இல்லையா என்று நோக்காமல் நடர்ந்துவிடுவது நல்லதுதான்.

    கவிதையையும் கதையையும் ரசித்தோம். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /இச்சை எனும் ஆசைப்பேய் பற்றிய கவிதையும், வைராக்கிய மலையாக இருந்த மனம் உளிகள் ஏதுமின்றி உடைத்தெறியப்பட்ட சம்பவத்தைச் சொல்லும் கதையும் மனதைத் தொட்டன./

      பதிவை, அதிலும் எனக்குள்ள வருத்தத்தை பகிர்ந்ததை படித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. ஏதோ உங்களிடம் இப்படிச் சொன்னதால் என் மனதில் அழுத்திக் கிடந்த மன பாரமும் சற்று குறைந்தது. இனி அடுத்த சான்ஸிலாவது வெற்றியைத் தொட இந்த தோல்வி பக்கபலமாக இருந்து உதவட்டும். தங்களின் ஆறுதலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. பேத்திக்கு அடிபட்டது அறிந்து வருத்தம் ஏற்பட்டது.
    பேத்தி விரைவில் நலபெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
    சின்ன வயது என்பதால் விரைவில் எலும்பு சரியாகி விடும்.
    என் பேரனுக்கும் சிறு வயதில் சைக்கிள் ஓட்டி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஆகி இருக்கிறது.
    சின்ன குழந்தைகளுக்கு அடிபடுவது நமக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கை எங்கும் இடித்து கொள்ளாமல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது மீள் வருகைக்கும், அன்பான ஆறுதல் தரும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      தங்களது பிரார்த்தனைகள் விரைவில் என் பேத்தியின் கையை சரியாக்கி தந்து விடுமென நம்புகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. கவிதை அருமை!
    கதையும் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நிஜத்தில் சாத்தியமா? என்னும் கேள்வி எழாமல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தங்களது மனப்பூர்வமான பாராட்டுதலுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.

      கதையையும் படித்து நன்றாக உள்ளதென கூறியமைக்கும் மிக்க மகிழ்ச்சிஇப்போது இருக்கும் உலகச்சுழலில் அனைவர் வாழ்விலும் இவ்வாறு நடக்க முடியாதென்றும், இயல்பில் எங்காவது என்றாவது இப்படி நடக்க வாய்ப்புள்ளது என நினைப்போம் . .தங்கள் கருத்துக்கு இத்தனை நாட்கள் கழித்து தாமதமான பதில் தந்துள்ளதற்கு மன்னிக்கவும். கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete