இது இலக்கணத்துடன் இயைந்து வந்த மரபு கவிதை அல்ல.!!!! மாறாக மனதில் சிலகணத்தில் பிறந்து வந்த புதுக்கவிதை. பிடிப்பதில்லையென ஒதுக்(ங்)குவதை விட படித்தால் புரியும் இதன் பாதை. எனவே படிக்கும் உள்ளங்களுக்கு என் பணிவான.🙏.
தோல்வி கண்டு துவள வேண்டாம்...!
தோல்வியே வெற்றிக்கு
தோதான முதற்படியென
தோழமைகள் பரிந்துரைகள் தந்தபடி
தோளணைத்து கூறினாலும்,
தோல்வி கண்ட மனம்
வேதனைகள் பலவோடு
துவண்டுதான் போகிறது.
முன்னூறு நாட்கள், சுமந்தெடுந்து
முழு நிலவெனவே பெற்ற மகள்
போட்டியின் இறுதி நாட்களுக்குள்
போராடி வெல்ல வேண்டுமென்ற
என் ஆசையின் உன்மத்தம் கண்டு
தன் ஆ(மா)றாத அன்பை, ஒரு
சேயின் கடமையாக்கி தான்
சேர்த்த கைப்பணத்திலிருந்து
இரு முன்னூற்று பணம் எடுத்தீந்து
அவசர அஞ்சலில், அவசரமாக
வெளியிட்டும், அது வெளியீடுகளில்
வெளிவராது போன காரணத்தால்,
தோல்வி கண்ட மனம் வேதனையில்
துவண்டுதான் போயிற்று.
எழுத்துலகில் இதுவரை எழுச்சியுடன்
பெற்ற வெற்றிகளே போதுமென்று
பேசாமலிருக்கத் தெரியாத இந்த
பேதையவள் மனதில் மட்டுமின்றி
இரு விழிகளில் இருந்தும்,
பெருமழையொன்று பெருகிப்
பெய்ததைக் கண்டு சிறிதும் அந்த
"கலைமகளும்" கலங்கவில்லை.
அலைமகளும் அறியவில்லை.
மலைமகளும் உணரவில்லை.
நிலமகளும் நிச்சலனமின்றி எனை
நீண்ட பொழுதாகிய இரவுதோறும்
நித்திரையும் கொள்ள விடவில்லை.
இத்தனைக்கும் காரணம் நம்
இச்சையென்ற ஆசைப் பேய்தான்.
இனியேனும், இச்சைக் கொண்டு
அதனின் கோர பிடி(முகங்)களில்
அகப்படாது தப்பிக்க ஓர் வழியை
அருளி ரட்சித்திடு இறைவா..!🙏.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பின்வரும் இந்தக்கதை நான் எப்போதும் போலில்லாமல், வார்த்தைகளை அளவோடு அளந்து வைத்து எழுதிய கதை. எழுதிய அளவில் எந்தவித குற்றமும் இல்லை. ஆனால், என் துரதிர்ஷ்டம் காரணமாக அதிர்ஷ்டகாற்றும், தன் அளவை குறைத்து என் பக்கம் வீசாமல் போனது யார் செய்த குற்றம் என யோசித்ததில், என் மனம் கதையோடு மேலே உள்ள இந்த ஒரு கவிதையையும், சேர்த்து வடித்து தந்துள்ளது.
இனி என் மனதில் எழுந்த இந்த கவிதைக்கா(க)ன, (கவிதையை காண) காத்திருந்த கதை.
பந்து.
வீட்டின் நடுவில் இருந்த அந்தக்கூடம் கலகலப்பாக சந்தோஷமாக இருந்தது.
அண்ணா..! நான்தான் உன்னிடம் முதலில் உருட்டி விட்டேன். எனக்குத்தான் நீ மறுபடி போட வேண்டும்.."
"இல்லையில்லை...! வரிசையாகத்தான் வரும். ரமணி பாவம்..! அவனுக்கு ஒரு தடவை கூட பந்தை நாம் இன்னமும் தரவேயில்லை...! பார்..! அண்ணன் பாலுவின் அன்பில் விழியால் கசிந்தான் ரமணி.
"இப்படியெல்லாம் விளையாடினா இது தப்பாட்டம்.. " நண்பனுக்கு ஆதரவாய் விச்சு கூறினான்
"நாங்க அப்படித்தான் விளையாடுவோம். இல்லையா சுசி.." சித்தப்பா மகன் சுரேஷ் செல்லமாக கோபித்து கொண்டான்.
அங்கே ஒரு பெரிய பந்துவை உருட்டி விளையாடும் யுத்தமொன்று நடந்து கொண்டிருந்தது. அந்த கூடத்து அறையில் குழந்தைகளை வெய்யிலில், வெளியே செல்ல தடை போட்டு, வீட்டினுள்ளேயே விளையாட சொல்லி விட்டு, சமையலறை,மற்றும் கிணற்றுடன் அமைந்த பின்கட்டு புறக்கடையென வீட்டில் உள்ளவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் சுமூகமாக அரங்கேறி கொண்டிருந்தன.
பாட்டி, தாத்தாவுடன் அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி என கூட்டு குடும்பங்களாக சேர்ந்திருந்த வரை இந்த கூடம் பெற்ற சந்தோஷங்களை நான் மட்டுந்தான் அறிவேன். காலப்போக்கில் அவர்களை விட்டு விலகிய மனச் சோர்வை அந்த வீடு மட்டுமின்றி, அந்த கூடமும் நிறைய அடைந்ததென்னவோ உண்மையென அவர்கள் ஒவ்வொருவரின் இழப்பும் எனக்கு உணர்த்தியது.
இதற்கு நடுவில், தங்கை சுசி, நல்லபடியாக கல்யாணமாகி போனதோடு, அவள் கணவர், வீடு என்ற தனிப்பட்ட சொந்தத்தில் இந்த வீட்டை நாளாவட்டத்தில் கொஞ்சம் மறந்தே போனாள் எனவும் சொல்லலாம்.
தம்பி ரமணா, அவனும் அலுவலக வேலையாய் வேற்றூருக்கு பிரிந்து போனான். "அவன் குடும்பம் என் குடும்பத்துடன் மனமொத்து வர மறுக்கிறதென்பதை" வாரந்தோறும் ஒரு வருத்தமாக ஆரம்பத்திலெல்லாம் கடிதாசியில் கொட்டித் தீர்த்தான்.
என் மனைவி மங்களத்தை குற்றம் சொல்லவே முடியாது. எங்களுக்கு திருமணமானதிலிருந்து கூட்டுக்குடும்பம் ஏற்படுத்திய பக்குவத்தில், அனுசரித்து வாழப் பழகி போயிருந்தாள். ஆனால், எல்லோருக்கும் அதே திறமைகள், பக்குவமான பரந்த மனதுகளென அமைய வேண்டும் என்பதில்லையே..!
காலங்களின் விரைசல்களில். வாழ்வனைத்தும் கண்ணாமூச்சி விளையாட்டைப் போல ஒளிந்தும், மறைந்தும் போயின. அப்படி மறைந்து போனவைகளில் என் மனைவி மங்களமும் துரதிர்ஷ்டவசமாக இணைந்து போனாள். இத்தனை வயதிற்கு நானும், இந்த கூடமும் மட்டும் இப்படி நிலையாய் நிலைத்து நிற்போமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கள் ஒரே மகனும், கற்ற படிப்பு பெற்று தந்த தகுந்த உத்தியோகத்தில் வெளிநாட்டில் வாசம் செய்ய போனவன்தான்...! அத்தோடு நானும், அவன் மகனான என் பேரக் குழந்தையாடு கொஞ்சி குலாவி வாசம் செய்ய கொடுப்பினைகள் இல்லாதவனாகிப் போனேன். தனிமையில் தவிக்கும் என் நலம் விசாரிப்புக்காக வாங்கித் தந்த கைப்பேசியில் அவ்வப்போது அழைப்பான். "அது ஒப்புக்காக பேசுவதற்காக" என்றுதான் எனக்கு தோன்றும்.
என் தாத்தா கட்டிய வீட்டிற்கும், அவரின் அன்பினால் வளர்ந்து திரிந்த இந்த ஊருக்கும் என்னை விட்டு பிரிய மனமில்லை. அதுதான் தனியாளாக நின்ற போதும், பழைய வீட்டில் வாசம் செய்த நினைவுகளே என் நிரந்திர சுவாசமாயின.
இப்போது ஆளரவமின்றி சந்தடியில்லாத அந்த கூடமும் அதன் வெறுமையை பொறுமையாய் சகித்து கொண்டிருப்பதாய் எனக்குத் தோன்றியது.
கைப்பேசி அழைத்தது. வழக்கப்படி நலம் விசாரிக்க மகன்தான் அழைப்பான் என்ற எண்ணத்தில் சுவாரஸ்யமின்றி எடுத்தேன்.
"அப்பா.. எப்படியிருக்கிறீர்கள்.? இந்த தடவை உங்கள் தனிமையை போக்க நாங்களே அங்கு வருகிறோம்." என்றான் எடுத்த எடுப்பிலேயே....!
குரலில் வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் அதிகமாக தொனித்தது.
"சரி....! சரி..! எப்போது? என்றேன். என் குரலின் சுரத்தின்மையை உணர்ந்தவன் போல்," கூடிய விரைவில் அப்பா..! அத்தோடு நீங்களே எதிர்பாராத ஒன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரப்போவதொன்று நடக்கவும் போகிறது. காத்திருங்கள்...! வருகிறேன் அப்பா..! என்றவன் வேறேதும் பேசாது, தொடர்பை துண்டித்து விட்டான்.
அப்படியென்ன எனக்கு மகிழ்வு தரப்போகும் விஷயத்தை இவன் தரப் போகிறான்.. ? வேலை கிடைத்ததும், தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் பேச்சை மீறி,பணம், கௌரவமென வெளி நாட்டு வேலையை ஏற்று சென்ற போதே என் மனதையோ, மகிழ்ச்சியையோ பற்றி மதிக்காமல் சென்றவன்தானே..!
என் மகிழ்ச்சிகளின் வேர்களைதான் ஆழமுடன் நேசித்த உறவுகளான இவர்கள் வெட்டியெறிந்து விட்டுப் போய் ஆண்டுகள் பலவாகி விட்டனவே..! இனி வந்து எவ்வளவு பேசி சென்றாலும், அவை பசுமை கொண்டு துளிர்த்துத்தான் விடுமா என்ன..?
நாட்கள் நகர்ந்ததில், சொன்னபடி வந்தது அவன் மட்டுமல்ல..! என் தம்பி ரமணாவும், அவன் மனைவியும், அவர்களின் பத்து வயது பேரனும். ரமணாவை பார்த்ததும், பழைய நினைவுகள், உடைப்பெடுக்க ஆரம்பித்தன
" அப்பா..! இனி நாங்கள் இங்குதான், இந்த வீட்டில்தான், உங்களுடன் நிரந்தரமாக வாழப்போகிறோம். எங்களின் ஏற்பாட்டின்படி சித்தப்பா தங்கியிருந்த ஊருக்கு நேற்றே நாங்கள் வந்தடைந்தோம். . நேற்றெல்லாம், உங்களைப் பற்றித்தான் சித்தப்பா நிறைய பேசிக் கொண்டிருந்தார்.
என் தம்பி மணியும், அதான், நம் சித்தப்பாவின் பையன்.... தன் வேலையையும் இவ்வூருக்கு மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் ஒரு மாதத்தில் இங்கு வந்து விடுவான். அதுதான் அவன் பையனையும் இப்போதே எங்களுடனேயே அழைத்து வந்து விட்டோம். நானும் இங்கேயே என் படிப்புகேற்றபடி, ஒரு வேலையை தேடிக் கொள்ளப் போகிறேன். இங்கே நம் பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி இனி ஒன்றாக படித்து வளரட்டும் அப்பா..! இதோ...! பார்த்தீர்களா உங்கள் பேரன் மகேஷை...! "
அவன் பேச, பேச ஆச்சரியங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அழுத்தி இனம் புரியாத சிறு ஆனந்தத்தை என் மனதில் துளிர விடச் செய்ததென்னவோ உண்மைதான். .! எளிதில் கரைந்து விடக் கூடாதென்று இருந்த "மனமென்ற வைராக்கிய மலை" உளிகள் ஏதுமின்றி என்னுள் உடைய துவங்கின.
ரமணா அருகில் வந்து கண்களில் நீர் வடிய" இத்தனை வருடங்களாக உன்னுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாததற்கு என்னை மன்னித்து விடு அண்ணா" என்று கூறியபடி என்னை அணைத்துக் கொண்டான். உடன் பிறந்து, ஒன்றாக வளர்ந்த பாசம் வென்று கலங்கிய கண்களை மறைக்க, அவன் தழுவலில் சங்கமித்தேன்.
அவன் மனைவி தன் கைகளை கூப்பியபடி," என்னையும், மன்னித்து விடுங்கள் அண்ணா..! இது நாள் வரை உங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பை புரிந்து கொள்ளாத அரக்கியாக இருந்து விட்டேன். நீங்கள் இப்போது மன்னித்து எங்களை ஏற்றுக் கொண்டால்தான் நான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக நினைத்து மீதி நாட்களை கழிக்க முடியும்..மன்னிப்பீர்களா? " என குமுறிய போது, வழக்கமாகவே இரக்கப்பட்ட மனது கரைந்து அவளின் தவறுகளை மறக்கத் தூண்டியது.
இதுவரை என்னைப் பார்த்தறியாமல், இப்போது என்னையே பார்த்துக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனான மகேஷை, "அருகில் வா" வென கூறி, அவனை தழுவிய போது நான் மறுபடி புதிதாக பிறந்த ஒரு சந்தோஷத்தையும் அடைந்தேன்.
"மகேஷ் என் செல்வமே...! எப்படி இருக்கிறாயப்பா..? என் குரல் உடைத்துக் கொண்டு வெளியேறியது." தமிழில் நான் பேசினால் உனக்குப் புரியுமா..?" என்ற என் சந்தேகத்தை கேட்கும் முன், நல்ல தமிழில், "தாத்தா..! இனி என் பெயர் மகேஷ் இல்லை....! பாலு... இது உங்கள் பெயர்தானே தாத்தா..! தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்க வேண்டுமாம்.. இதுதானே நம் குடும்பத்தின் பழக்கம்..? என்றபடி என் காதில் தேனைப் பாய்ச்சினான்.
"நான் தமிழ் நல்லா பேசுவேன் தாத்தா..! பேசுறேனா ..? என அவன் லேசாக முறுவலித்து கண் சிமிட்டிய போது, அவனில் என் பழைய சிறு வயது பாலுவை கண்டேன்.
" அம்மாவிடம் கத்துக்கிட்டேன். எனக்கு உங்களுடன் இருக்கத்தான் ஆசை. அதான் அப்பாவை வறுப்புறுத்தி இங்கேயே வந்து விட்டோம். இனிமே இங்கேதான் நான் படிக்கப் போறேன். பிறகு பெரியவன் ஆனாலும், நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன் தாத்தா..!" தெளிவாக பேசி என்னை வாய் விட்டு அழ வைத்தான் மகேஷ். இல்லையில்லை... அந்த குட்டி பாலு....!
இளைய தலைமுறைகள் ஒரு அற்ப சுவை காண திசை மாறி பயணித்தாலும், அவர்களிடையே தேங்கியிருக்கும் மாறாதந்த பந்தபாசங்கள், கயிற்றால் தன்னைத்தானே பிணைத்துக் கொண்டு, பழைய பாரம்பரிய சுகங்களை பெற என் வீட்டின் வாசலை வந்தடைந்ததில், மனம் நிறைந்த நன்றியுடன் மருமகளை பார்த்தேன். அவள் முகத்தில் "என் மங்களத்தின்" அனுசரிக்கும் சாயல் தெரிந்தது.
சந்தோஷத்தில் மகன், பேரன்கள், தம்பி குடும்பமென வீடு பழைய கலகலப்பை பெற்ற போது பால்ய நண்பன் விச்சுவும், அவன் மகள், மருமகன், குழந்தைகள் என குடும்ப சகிதமாக, மீண்டும் அவ்வூருக்கே குடி வந்து என்னை முழுமையான ஆனந்தத்தில் ஆழ்த்தினான். ஆனால், என் மனதின் ஒரு ஓரம், மங்களத்தின் பிரிவை எண்ணி வருத்தப்பட்டது. "அவள் இருந்திருந்தால் இப்போது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்.." என்பதை நினைக்காமல் இருக்க இயலவில்லை.
" தாத்தா..! இதை வைத்துக் கொண்டு நாம் விளையாடலாமா.. ? என்றபடி ஒரு பெரிய பந்தை காலால் உருட்டியபடி வந்தான் மகேஷ்.
ஓ.. ....! என்றபடி நான் மகிழ்வானதை கண்டதும்," தாத்தா..! இந்த பந்து மாதிரிதானே நம் வாழ்க்கையும்....! இந்தக்கூடத்தில் உருட்டி உதைத்து விட்டால் எதிர் திசை நோக்கி ஓடுமே தவிர சுவரில் மோதி, இல்லை, நம்முடன் விளையாடும் மற்றொருவரின் உருட்டலுக்கு கட்டுப்பட்டு நம்மிடமே வந்து விடும் இல்லையா..? இப்போ நான் உங்களிடம் வந்து சேர்ந்த மாதிரி....! ஆனால், இப்பந்தை இப்படித்தான் ஆட வேண்டுமென்ற விதிமுறைகளை மாற்றினால், பந்தின் தன்மை தவறாக மாறி விடுமல்லையா தாத்தா... ?"
நான் நெக்குருகி போனேன்.
"வயதுக்கு மீறிய எத்தனை அறிவாற்றலடா உனக்கு..!" மனது பெருமிதத்தில் விம்மியது."
"உன்னைப் பேரனாக நான் இப்படி பார்க்க வேண்டித்தான், திடமான இந்த வீட்டையும், என்னையும், என் தாத்தா நல்ல சிரத்தையுடன் உருவாக்கி, என் மனமதையும் சிறப்பானதாக செதுக்கி வைத்திருக்கிறார் போலும்..! அதற்கேற்றபடி உடலுக்கு போதுமான வலுவையும் அந்த ஆண்டவன் தந்து விட்டான்.... எல்லாம் அந்த இறைவனின் கட்டளையப்பா...!" கண்கள் குளமாக குனிந்து அவன் கன்னத்தில் பாசமுடன் முத்தமிட்டபடி அவனை கொஞ்சி விட்டு நிமிர்ந்தேன் .
அப்போது வெளியில் காலாற சென்று விட்டு திரும்பி வந்த தம்பி ரமணா, விச்சு இருவரையும், அன்போடு அவர்களின் கைப்பிடித்து வரவேற்றேன். என் மகனும், தம்பி மகனும் உள்ளிருந்து வந்து அவர்களிடம் அன்புடன் பேசவாரம்பித்தனர். அன்பிற்கு அடைக்குந்தாழ் என்ற ஒன்று என்றுமில்லையென என் உள்ளம் உறுதியுடன் கூறியது.
சமையல் அறையிலிருந்து வந்த உணவின் நறுமணங்கள் எங்களின் பசியை தூண்டவே, "சாப்பிட வாருங்கள் அப்பா..!" என்ற மருமகள்களின் அன்புக்கு கட்டுப்பட்டு சமையல் அறைக்குள் சென்றோம்.
எங்கள் பேரன்கள், நண்பனின் பேரன் பேத்திகள் என அந்தக்கூடமும் முக மலர்வுடன் பழையபடி பந்தாட்டத்திற்கு தயாரானது. பல பல வருடங்களுக்குப் பிறகு அந்த கலகலப்பு அதனிடமும் தொற்றிக் கொண்டதை நான் மகிழ்வான மனதோடு மானசீகமாக உணர்ந்தேன்.
கதை நிறைவுற்றது.
இதை அன்றே எழுதி வைத்து விட்டேனே தவிர நம் சொந்தக்கதையையும், சோகப் புலம்பல்களையும் வெளியில் சொல்வானேன் என எதையும் வெளியிட விருப்பமின்றிதான் இருந்தேன். ஆனால், இவ்வார செவ்வாய் கதையில் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் "முன்கதை சுருக்கமான" எழுத்தை கண்டதும், நாமும் நாம் பெற்ற அனுபவத்தை வெளியிடலாமே எனத் தோன்றியது.
உடனே, சிறு தூவானத்திலும்/ மெலிதான சாரலிலும் கூட பெருமழையின் நறுமணத்தை நுகர்ந்து பார்க்கவும் சிறு ஆசையும் வந்தது. என்ன இருந்தாலும் மறுபடியும் இந்த உயிருள்ளவரை "ஆசைப்பேயின்" வசந்தான் சிக்குவோம் என்பதும் யாவரும் உலகறிந்த விஷயந்தானே..! அதன்படி சிக்கி விட்டேன். சிக்கலின் நூலறுபடாமல், சிதைந்து கனத்த மனதின் வலி மறைந்து போகும்படிக்கு கதை குறித்த நல்ல கருத்துக்களை வழக்கம் போல என் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். கவிதையோடு கதையையும் படித்து ரசிக்கும் என் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு என்றும் என் பணிவான நன்றிகள். 🙏.
No comments:
Post a Comment